கலை இலக்கிய துறைசார் செயற்றிடங்களை முன்னெத்துவரும், தமிழ் மாமன்றம், புதிய முயற்சியாக ஆற்றலுக்கும் ஆளுமைக்குமான களம் எனும் தொனிப்பொருளில் முன்னெடுத்த ‘விளை நிலம்’ எனும் நிகழ்வின் முதலாவது களம் நேற்று (13.03.2016) வவுனியா பொதுசன நூலக கேட்போர் கூடத்தில் மாலை 3.00 மணிக்கு இடம்பெற்றது.
ஒரு நிமிட மௌன வணக்கத்துடன், ஆரம்பமான நிகழ்வில், தலைமையுரையினை தமிழ் மாமன்றத்தின் தலைவர், திரு.சி.கிருபானந்தகுமாரன் அவர்கள் நிகழ்த்தினார்.
ஆற்றலகளை வளர்தெடுப்பதோடு, சமூக நலன் தொடர்பான விடங்கள் தொடர்பாகவும் சிந்தனையினை ஏற்படுத்தும் நோக்குடனும் ஆரம்பிக்கப்பட இந் நிகழ்வின் முதலாவது நிகழ்வாக ‘போருக்கு பின்னரான தமிழரின் செல்நெறியில் பெரிதும் ஆதிக்கம் செலுத்தும் விடயப்பரப்பு எது’ என்ற ரீதியில் சுழலும் சொற் போர் இடம்பெற்றது.
சுழலும் சொற்போரிற்கு, தமிழ் மாமன்றத்தின் தலைவரும், கால்நடை வைத்தியருமான திரு.சி.கிருபானந்தகுமாரன் அவர்கள் நடுநிலை வகித்து சிறப்பித்தார்.
சுழலும் சொற்போரில், ‘பொருளாதார மீள் எழுச்சி’ என க.அனுஷா அவர்களும், ‘அதிகரித்துவரும் குற்றங்களும் சீர்கேடும்’ என சி.விதுர்சன் அவர்களும், ‘புலம்பெயர்ந்தவர்களின் சிந்தனை மாற்றம்’ என கு.சிரஞ்சீதன் அவர்களும், ‘தமிழ் அரசியல் தலைமைகளின் போக்கு’ என சி.துஷாரன் அவர்களும், ‘சுயநிர்ணயம் மீதான நம்பிக்கையீனம்’ என கி.கிஷாந் அவர்களும் தங்களுடைய வாதங்களை சிறப்பாக முன் வைத்தமை குறிப்பிடத்தக்கது.
இறுதியாக நடுவர் அவர்கள், ஒவ்வொரு தலைப்பு தொடர்பாகவும், ஆராய்ந்து, போருக்கு பின்னரான தமிழரின் செல்நெறியில் பெரிதும் ஆதிக்கம் செலுத்தும் விடயப்பரப்பு தமிழ் அரசியல் தலைமைகளின் போக்கு என தனது தீர்ப்பினை வழங்கினார்.
தொடர்ந்து, முதலாவது களத்தினுடைய இரண்டாவது அறுவடையாக, கவியரங்கம் நிகழ்ந்தது. ‘கால ஓட்டத்தில் கரையாத சுவடுகள்’ என்ற பொருள் கொண்டு அமைந்த கவியரங்கினை, தமிழ் மாமன்றத்தின் மேற்சபை உறுப்பினர், வைத்திய கலாநிதி திரு.செ.மதுரகன் அவர்கள் தலைமையேற்று வழி நடத்தினார்.
கவியரங்கில், ‘ஏழ்மையின் கல்வி’ என ஜெ.கோபிநாத் அவர்களும், ‘வீரர்தம் விழுப்புண்’ என த. மோகனரங்கன் அவர்களும், ‘இணையத்தில் எழுத்துக்கள்’ என ச.கஜன் அவர்களும், ‘கவிஞனின் வார்த்தைகள்’ என வே.முல்லைதீபன் அவர்களும் கவிபுனைந்து சபையை கவி மழையில் குளிர்வித்தனர்.
தொடர்ந்து, தமிழ் மாமன்ற இணைச்செயலாளர் செல்வி. ஜெசிதா ஆனந்தமூர்த்தி அவர்களின் நன்றியுரையுடன் விழா இனிதே நிறைவுற்றது.
தமிழ் மாமன்ற உறுப்பினர்கள், வவுனியாவை சேர்ந்த கலைஞர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், கலை இலக்கிய துறைசார் ஆர்வலர்கள் என பலதரப்பட்ட பலரும் அவையை நிறைந்திருத்தமை குறிப்பிடத்தக்கது.
குறிப்பிட்ட நேரத்திற்கு ஆரம்பிக்கப்பட்டு, சரியான முறையில் நிகழ்வுகள் நடத்தப்பட்டமை சிறப்பம்சமாகும்.
தொடச்சியாக விளை நிலம், பாடசாலை மாணவர்களையும், கலைஞர்களையும் உள்ளடக்கி, அடுத்த அடுத்த களங்களை காத்திரமான நிகழ்வுகளோடு அரங்கேற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.






