இங்கிலாந்து – அவுஸ்திரேலியா அணிகள் இடையிலான ஆஷஸ் போட்டி தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டி சமநிலையில் முடிந்தது.
இங்கிலாந்து-அவுஸ்திரேலியா கிரிக்கெட் அணிகள் இடையிலான ஆஷஸ் தொடரின் 3-வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் நடந்தது.
அவுஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 7 விக்கெட்டுக்கு 527 ஓட்டங்களை குவித்து ஆட்டத்தை நிறுத்திக் கொண்டது. பின்னர் ஆடிய இங்கிலாந்து அணி 4-வது நாளில் முதல் இன்னிங்சில் 368 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.
பின்னர் 159 ஓட்டங்கள் முன்னிலையுடன் அவுஸ்திரேலியா இரண்டாவது இன்னிங்சை விளையாடியது. வேகமான ஓட்டங்கள் சேர்ப்பில் ஈடுபட்ட அவுஸ்திரேலியா விக்கெட்டுகளை விரைவில் இழந்தது.
போதிய வெளிச்சமின்மையால் 36-வது ஓவரில் ஆட்டம் நிறுத்தப்பட்ட போது, அந்த அணி 7 விக்கெட்டுக்கு 172 ஓட்டங்களை எடுத்திருந்தது. அதைத் தொடர்ந்து மழையும் பெய்ததால் நான்காவது நாள் ஆட்டம் அத்துடன் முடித்துக் கொள்ளப்பட்டது. இதன் காரணமாக 32 ஓவர்கள் இழப்பு ஏற்பட்டன.
அவுஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்சை (172/7) எடுத்து ஆட்டத்தை நிறுத்திக் கொண்டது.
நேற்று 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடந்தது.
332 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்சை ஆடியது. மழை காரணமாக ஆட்டம் தாமதமாக தொடங்கியது.
மதிய உணவு இடைவேளையின் போது இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்சில் 3 விக்கெட் இழப்புக்கு 35 ரன் எடுத்து இருந்தது. மதிய உணவு இடைவேளை முடிந்து ஆட்டம் தொடங்கிய முதல் ஓவரிலேயே மழை குறுக்கிட்டது. அப்போது அணியின் ஸ்கோர் 20.3 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 37 ஓட்டமாக இருந்தது. ஜோரூட் 13 ஓட்டங்களுடனும், இயன் பெல் 4 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.
மழை தொடர்ந்து கொட்டியதால் நடுவர்கள் ஆட்டத்தை அத்துடன் கைவிடுவதாக அறிவித்தனர்.
இதனால் இந்த டெஸ்ட் சமநிலையில் முடிந்தது. இதனால் ஆஷஸ் தொடரை கைப்பற்ற வேண்டும் என்ற அவுஸ்திரேலியாவின் கனவு கலைந்தது. எஞ்சிய இரண்டு ஆட்டங்களில் ஒன்றில் வென்றாலே இங்கிலாந்து தொடரை கைப்பற்றி விடும்.
ஆஷஸ் போட்டி தொடரின் 4-வது டெஸ்ட் போட்டி ஷெஸ்டர் லி ஸ்டிரிட்டில் வருகிற 9-ந் தேதி தொடங்குகிறது.