இந்தியாவைச் சேர்ந்த ஒருவர் இரு மாடுகளுக்கு ஆடம்பர திருமண வைபவத்தை நடத்தியுள்ளார். குஜராத் மாநிலத்தின் பவ்நகரில் கடந்த வியாழக்கிழமை இத்திருமண வைபவம் நடைபெற்றது. அஹமதாபாத் நகரைச் சேர்ந்த வர்த்தகரான விஜய் பர்சனா என்பவரே இந்த ஆடம்பர திருமணத்தை நடத்தினார்.
உடற்பயிற்சி நிலையங்கள் (ஜிம்) பலவற்றை நடத்திவரும் விஜய் பர்சனா, அறக்கட்டளையொன்றையும் நடத்தி வருகிறார். இவருக்குச் சொந்தமான பண்ணையொன்றில் உயர்ரகத்தை சேர்ந்த இரு பசுக்கள் உள்ளன. ராதா, பூனம் என இப்பசுக்களுக்கு அவர் பெயரிட்டுள்ளார். இப்பசுக்களுக்கு இரண்டரை வருட வயதானவுடன் அவற்றை காளையொன்றுடன் ஜோடி சேர்த்துவைக்க விஜய் பர்சனா விரும்பினார்.
இதற்காக “அர்ஜூன்” எனும் காளை தெரிவுசெய்யப்பட்டது. இந்த நிகழ்வை ஆடம்பர திருமண வைபவமாக அவர் நடத்தினார். இசை நிகழ்சசிகள், ஊர்வலங்கள் சகிதம் இவ்வைபவம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான கிராமவாசிகள் இந்த “திருமண வைபவத்தை” காண்பதற்கு திரண்டிருந்தனர். இது குறித்து விஜய் பர்சனா (44) கருத்துத் தெரிவிக்கையில், “பசுக்கள் தான் எம்மை முன்னேற்ற முடியும்.
நான் ஃபிட்னஸ் துறையில் இருப்பவன் என்ற வகையில், எமது ஆரோக்கியத்துக்கு பசுப்பால் தயாரிப்புகள் ஏற்படுத்தும் சிறந்த விளைவுகளுக்கு நான் சாட்சியாக உள்ளேன். ஒவ்வொரு வீட்டிலும் பசுவொன்று வளர்க்கப்பட வேண்டும் என நான் விரும்புகிறேன். இந்த செய்தியை பரப்புவதற்காக பூனத்தின் திருமணத்தை ஒரு பொது நிகழ்வாக நான் கொண்டாடினேன் எனத் தெரிவித்துள்ளார்.