
வவுனியாவில் நேற்று முன்தினம் 17 வயது யுவதி ஒருவர் தற்கொலைக்கு முயற்சித்து சிறுவர் நன்னடத்தை திணைக்களம், மற்றும் வவுனியா பிரதேச செயலக சிறுவர் பெண்கள் பிரிவினரால் காப்பாற்றப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்..
வவுனியா பிரதேச செயலகத்திற்குட்பட்ட பிரிவில் தாய் வெளிநாட்டில் தொழில் புரிந்து வருகின்ற நிலையில் தந்தை வேறு ஒரு திருமணம் செய்து கொண்டதையடுத்து அவர்களின் 17 வயதுடைய மகள் மற்றும் மூன்று ஆண் சகோதரர்கள் பல நாட்களாக தனிமையில் வசித்து வந்துள்ளனர்.
எனினும் கஸ்டத்தினை தாங்கிக் கொள்ள முடியாமல் 17 வயது யுவதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள முயற்சித்துள்ளார். சகோதரியின் தற்கொலை முயற்சியினை அறிந்த சகோதரர்கள் அயலவரின் உதவியை நாடியுள்ளனர். தற்கொலைக்கு முயற்சித்தவரை அக் கிராமத்தவர்கள் வவுனியா பிரதேச செயலகத்தின் சிறுவர் பெண்கள் பிரிவினரிடம் ஒப்படைத்துள்ளனர்.
அவ்விடத்திற்குச் சென்ற பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் சிறுவர்களின் நலனை கருத்திற்கொண்டு தாய் வெளிநாட்டில் பணிபுரிவதையும், தந்தையின் நிலைமையினையும் அறிந்து அச் சிறுவர்களின் பாதுகாப்பினை கவனத்திற்கொண்டு சிறுவர் நன்னடத்தை திணைக்களத்தின் ஊடாக வவுனியாவில் இயங்கிவரும் சிறுவர் காப்பகத்தில் 17வயது யுவதி உட்பட மூன்று ஆண் சிறுவர்களையும் அவர்களுக்குத் தேவையானவற்றை அதிகாரிகளின் உதவியுடன் பெற்றுக் கொடுத்து சிறுவர் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
வவுனியா மாவட்டத்தில் பல தாய்மார் வெளிநாடு சென்று தொழில் புரிவதால் அவர்களின் கணவன், பிள்ளைகள் நலனில் குறையேற்பட்டு பல அசம்பாவிதங்கள் இடம்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.





