வவுனியா நகரிலிருந்து 4 கிலோமீற்றர் தொலைவில் காணப்படும் நெளுக்குளம் குளத்தில் குப்பைகள் கொட்டப்படுவதனால் துர்நாற்றம் வீசுவதாக பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
அத்துடன் நெளுக்குளம் குளத்திற்கு அருகில் இரு மதுபானசாலைகள் அமைந்துள்ளமையால் மதுப்பிரியர்கள் குளக்கட்டுக் கரையிலிருந்து மதுபானத்தினை அருந்திவிட்டு குளத்தினுள் போத்தல்களைப் போடுவதாகவும், அவ்விடத்தில் நடமாடும் விற்பனை நிலையங்களை நடாத்தும் வியாபாரிகள் கழிவுகள் மற்றும் குப்பைகளை குளத்தினுள் கொட்டுவதாகவும் பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.
இவ்விடயம் தொடர்பாக பொதுமகன் ஒருவர் கருத்து தெரிவிக்கையில்,
இக் குளத்தில் குப்பைகள் மற்றும் மீன் கழிவுகள் கொட்டப்படுவதனால் குளத்தின் அழகு சீர்கெடுவதோடு தூர்நாற்றமும் வீசுகின்றது. உரிய அதிகாரிகள் இவ் விடயம் தொடர்பாக கவனம் செலுத்த வேண்டும் எனத் தெரிவித்தார்.
வவுனியா நெளுக்குளம் குளம் தற்போது குப்பைகள் மற்றும் மதுபான போத்தல்களின் இருப்பிடமாக காட்சியளிக்கின்றது.
எம்மைச் சுற்றியுள்ள பிரதேசங்களையும், நீராதாரங்களான குளங்களையும் பாதுகாப்பது எம் ஒவ்வொருவருடைய கடமையாகும். எமது கடமையைச் செய்ய மறந்து அதிகாரிகளையும் மற்றவர்களையும் குறைகூறுவது அர்த்தமற்றது.
சிந்திப்போம் செயற்படுவோம்.. எமது வளங்களை நாமே பாதுக்காப்போம்.






