மன்னார் மதவாச்சி வீதியில் சிறுநாவற்குளம் சந்தியில் கைதிகளை ஏற்றிச் செல்லும் பொலிஸ் வாகனம் விபத்துக்குள்ளாகி 8 கைதிகள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காயமடைந்தவர்களில் 5 பேர் வவுனியா வைத்தியசாலையிலும், 3 பேர் மன்னார் வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மன்னாரில் இருந்து சிறைக்கைதிகளை ஏற்றிக்கொண்டு வவுனியா சிறைச்சாலைக்கு சென்ற சிறைச்சாலைக்கு சொந்தமான பேரூந்தே விபத்திற்குள்ளாகியுள்ளது.
மன்னாரில் இருந்து கைதிகளை ஏற்றிக்கொண்டு இன்று(15.05) மாலை வவுனியா சிறைச்சாலை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த குறித்த பேரூந்து மன்னார்-மதவாச்சி பிரதான வீதி சிறுநாவற்குளம் சந்தியில் கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்கு உள்ளாகியது.
தொடர்ச்சியாக பெய்து வரும் அடைமழையின் காரணமாக குறித்த விபத்து ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அப்பகுதியில் கூடி நின்ற மக்களுடன் கலந்துரையாடியதோடு, விபத்து குறித்து உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றார்.