உயிரிழப்புக்கள் 41 ஆக அதிகரிப்பு : களனி கங்கை பிரதேசத்தில் இருப்பவர்கள் வௌியேற உத்தரவு!!

748

1

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களினால் நாடு முழுவதும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 41 ஆக அதிகரித்துள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி கூறினார்.

அத்துடன் பல்வேறு மாவட்டங்களிலும் 302,997 பேர் இடம்பெயர்ந்து தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும், 610 தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

புலத்கொஹுபிட்டிய மற்றும் அரநாயக்க உள்ளிட்ட பிரதேசங்களில் இடம்பெற்ற மண்சரிவில் சிக்கி காணாமல் போனவர்களை தேடும் பணிகள் தொடர்ந்து இடம்பெறுவதாக அவர் மேலும் கூறினார்.

அத்துடன் களனி கங்கையின் நீர் அதிகரித்துக் கொண்டிருப்பதால் அப்பிரதேச மக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி வெளியேறுமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

சீரற்ற காலநிலை அதேநிலையில் இன்னும் தொடர்வதால் பாதுகாப்பு நடைமுறைகளை கையாளுமாறும், அவசர நிலமைகளின் போது 0117,2670002 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறும் இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி கூறினார்.

2