வவுனியா வைத்தியசாலையில் தாதியரின் கடமைகளுக்கு இடையூறு : நான்கு இளைஞர்கள் கைது!!

457

vavuniya_hospital

வவுனியா வைத்தியசாலை விடுதியில் தாதிய உத்தியோகத்தரின் கடமைகளுக்கு இடையூறு ஏற்படுத்திய நான்கு இளைஞர்களை நேற்று(19.05.2016) இரவு பொலிசார் கைது செய்துள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்..

வவுனியா வைத்தியசாலையில் விபத்துப் பிரிவில் தாதிய உத்தியோகத்தர்களாக கடமைபுரியும் இருவருக்கு வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்றுவரும் நோயாளரை பார்வையிட வந்த இளைஞர்கள் சிலர் நோயாளரை வைத்தியர் பார்வையிடும் நேரத்தில் விடுதிக்குள் அத்துமீறி பிரவேசித்துள்ளனர்.

அவர்களை வெளியேறுமாறு தாதிய உத்தியோகத்தர்கள் தெரிவித்துள்ளார். எனினும் குறித்த இளைஞர்கள் தாதிய உத்தியோகத்தருடன் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டதுடன் தகாத வார்த்தைகளை பிரயோகித்து ஏசியுள்ளார்.

அந்த நேரத்தில் நோயாளரை பார்வையிட்டுக் கொண்டிருந்த வைத்தியர் வைத்தியசாலை பொலிசாரிடம் இளைஞர்கள் விடுதிக்குள் இடையூறு ஏற்படுத்துவதாக முறையிட்டுள்ளார். இதை அறிந்த இளைஞர்கள் வைத்தியசாலையிலிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

எனினும் தாதிய உத்தியோகத்தரை தாகாத வார்த்தைகள் கூறி ஏசியதையடுத்து வைத்தியரால் வைத்தியசாலை பொலிசாரிடம் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டதுடன் குறித்த நான்கு இளைஞர்களை கைது செய்து அவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படாவிட்டால் வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுப்போவதாகவும் தாதிய உத்தியோகத்தர்கள் தெரிவித்துள்ளனர்.

நேற்று இரவு குறித்த நான்கு இளைஞர்களையும் பொலிசார் கைது செய்துள்ளதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

வைத்தியசாலையில் வைத்தியர்கள், தாதிய உத்தியோகத்தர்களின் செயற்பாடுகளுக்கும் அவர்களின் கடமைகளை செய்யவிடாமல் இடையூறு ஏற்படுத்தியுள்ள இளைஞர்களுக்கு தக்க தண்டனை பெற்றுக் கொடுக்கவேண்டும் என்றும் இனிமேலும் இப்படியான செயற்பாடுகள் இடம்பெறாமல் இருக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.