தமிழ்நாடு திருவையாறு ஐயா கல்வி நிலையம், வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் மற்றும் வவுனியா தேசிய கல்வியியல் கல்லூரி ஆகியவற்றின் அனுசரணையோடு 14 வது அனைத்துலக தமிழ் உரைநடை ஆய்வு மாநாட்டுக் கருத்தரங்கு நேற்று (22.05.2016) ஞாயிற்றுகிழமை காலை ஒன்பது(9.00) மணியிலிருந்து வவுனியா பூந்தோட்டத்தில் அமைந்துள்ள தேசிய கல்வியியல் கல்லூரியில் அனைத்துலக உரைநடைத் தமிழ் மாநாட்டின் இலங்கைக்கான இயக்குனர் பேராசிரியர் முனைவர் கனகசபாபதி நாகேஸ்வரன் தலைமையில் மாலை 7.00 மணிவரை இடம்பெற்றது.
காலையில் தமிழ்நாட்டிட்லிருந்து வருகைதந்த பேராசிரியர்கள் மற்றும் தஞ்சாவூர் கரந்தை தமிழ்ச் சங்கத்தின் உறுப்பினர்கள் ஆகியோர் மங்களவாத்தியம் முழங்க வவுனியா தேசிய கல்வியியல் கல்லூரி மண்டபத்துக்கு அழைத்துவரப்பட்டனர்.
நேற்றைய அதிதிகளின் மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமாகி வரவேற்புரையை தமிழ்மணி அகளங்கன் நிகழ்த்தினார். தொடர்ந்து திருவையாறு தமிழ் ஐயா கல்விக் கழகத்தின் தலைவர் முனைவர் மு.கலைவேந்தன் அவர்கள் மாநாட்டின் நோக்கம் பற்றிய விளக்கவுரையை பகிர்ந்து கொண்டு நேற்றைய நிகழ்வுகளுக்கு தலைமை தாங்கினார்.
தொடர்ந்து இலங்கைக்கான இந்திய துணைத் தூதுவர் எ.நடராஜன் அவர்களின் சிறப்புரை இடம்பெற்றது. தொடர்ந்து இலங்கையில் எழுதப்பட்ட பேராசிரியர் கனகசபாபதி நாகேஸ்வரனின் அறிவொளிமாலை மற்றும் பன்மொழி புலவர் சரவணமுத்து செல்லத்துரையின் நினை மான்மியம் ஆகிய நூல்கள் வெளியீடு செய்யப்பட்டு பேரசிரியர் சண்முகலிங்கம் மற்றும் கவிஞர் சோ.பத்மநாதன் ஆகியோரால் அறிமுக உரைகள் நிகழ்த்தப்பட்டன.
தொடர்ந்து தமிழுக்கும் சமயத்துக்கும் தொண்டாற்றிய சான்றோரை வாழ்த்தி விருதும் பாராட்டு பத்திரங்கள் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது.
தொடர்ந்து கவிஞர் நாக.க.துரையரசு தலைமையில் மக்களுடன் பெரும் செல்வாக்குடன் திகழ்வது உரைத் தமிழே என முனைவர் இரா.திராவிட இராணியும் மக்களிடம் பேருண் செல்வாக்குடன் திகழ்வது இசைத் தமிழே என முனைவர்.தங்க மலர்கொடி அவர்களும் வாதிட்ட விவாத அரங்கம் இடம்பெற்றது.
தொடர்ந்து பிற்பகல் நிகழ்வுகள் மதிய உணவைத் தொடர்ந்து இரண்டு மணியளவில் கருத்தரங்கம் ஆரம்பமாகி தனில் நாடிலிருந்து முனைவர் பட்டத்துக்காக ஆய்வுகளை மேற்கொண்டுவரும் மாணவ மாணவியர் மற்றும் பேராசிரியர்கள் தங்களதுதமிழ் மொழி உரைநடை மொழிபெயர்ப்பு தொடர்பான ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்தனர்.
தொடர்ந்து நேற்றைய நிகழ்வின் முதன்மை விருந்தினரான யாழ் மாவட்ட உயர் நீதிமன்ற நீதியரசர் உயர்திரு மாணிக்கவாசகர் இளஞ்செழியன் அவர்கள் தமிழ்நாடிலிருந்து வருகைதந்த அனைத்துலக தமிழ் உரைநடை மாநாட்டில் தெரிவு செய்யப்பட்ட அறிஞர் பெருமக்களுக்கு பொன்னாடை போர்த்தி விருது வழங்கி வரலாற்றுச் சிறப்புமிக்க உரையொன்றை பதினான்காவது அனைத்துலக தமிழ் உரைநடை மாநாட்டில் பதிவு செய்திருந்தார்.
தொடர்ந்து அகிலாண்டேஸ்வரி அருளகத்தில் அண்மையில் பரத நாட்டிய அரங்கேற்றம் செய்யப்பட்ட மாணவிகளில் நடன நிகழ்வுடன் இறுதியில் தேவாரதிருமுறை ஓதலுடன் நிறைவு பெற்றது.
-வவுனியா நெற் நிகழ்வுகளுடன் கஜன்-


















