வவுனியா சிதம்பரபுரம் வைத்தியசாலையில் வைத்தியர் இன்றி முதியவர் உயிரிழப்பு!!

1090

Dead

வவுனியா சிதம்பரபுரம் பிரதேச வைத்தியசாலையில் நேற்று வியாழக்கிழமை அதிகாலை அனுமதிக்கப்பட்ட முதியவர் ஒருவர் அங்கு வைத்தியர் கடமையில் இல்லாமையினால் உயிரிழந்துள்ளதாக வவுனியா நகர திடீர் மரண விசாரணை அதிகாரி சிவநாதன் கிஷோர் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

வவுனியா சிதம்பரபுரம் கற்குளம் பகுதியில் வசித்து வந்த 64 வயதுடைய செல்லத்துரை சந்திரலிங்கம் என்பவர் செஞ்சுவலி காரணமாக சிதம்பரபரம் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எனினும் அவ் வைத்தியசாலையில் வைத்தியர் கடமையில் இல்லாமையினால் நோயாளியை அங்கு கடமையில் இருந்த தாதியர் ஒருவர் சிகிச்சை அளித்து கையொப்பம் இடப்படாத படிவம் ஒன்றினூடாக வவுனியா பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் நோயாளர் மரணமடைந்துள்ளதாக மரண விசாரணையில் நோயாளியின் மகன் சாட்சியமளிக்கையில் தெரிவித்ததாக திடீர் மரண விசாரணை அதிகாரி மேலும் தெரிவித்தார்.

இவ்வாறான சம்பவங்கள் சிதம்பரபுரம் பிரதேச வைத்தியசாலையில் முன்னரும் இடம்பெற்றுள்ளதாக அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.