எதிர்வரும் முதலாம் திகதி முதல் ரயில்களில் பயணச்சீட்டின்றி பயணிப்பவர்களிடம் அறவிடப்படும் அபராதம் 3000 ரூபாவாக உயர்த்தப்படவுள்ளது.
அத்துடன் பயணச்சீட்டு பெறாமல் பயணிக்கும் நபரிடமிருந்து ரயில் பயணம் ஆரம்பித்த நிலையத்திலிருந்து பயணமுடிவிடம் வரை, அந்த நபர் பயணித்த வகுப்புக்கு அமைவாக அபராத தொகைக்கு மேலதிகமாக இரட்டிப்பு கட்டணமும் அறவிடப்படும் என ரயில்வே திணைக்களம் கூறியுள்ளது.
பயணச்சீட்டின்றி ரயில்களில் பயணிப்பது அதிகரித்துள்ளமை, பயணச்சீட்டுக்குரிய வகுப்பில் பயணிக்காமை, பயண முடிவிடத்திற்கும் அப்பால் பயணிப்பது, சிறிய கட்டணத்துடன் நீண்டதூரம் பயணித்தல் உட்பட பயணச்சீட்டு தொடர்பிலான ஏனைய மோசடிகளுக்காக ரயில்வே திணைக்களத்திற்கு பெருந்தொகை இழப்பு ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனவே இந்த இழப்பை ஈடுசெய்வதற்காகவும், ஒழுங்கான முறையில் ரயில் பயணங்களை மேற்கொள்ளும் பயணிகளுக்கு ஏற்படும் அசௌகரியங்களை தவிர்ப்பதற்காகவும் அபராத தொகையை 3000 ரூபாவாக அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.






