வவுனியாவில் கிணறு வெட்டிய குழிக்குள் விழுந்த மாணவன் பரிதாபமாக உயிரிழப்பு!!

919

 
வவுனியா கள்ளிக்குளம் பகுதியில் கிணறு வெட்டிய குழிக்குள் விழுந்த தரம் ஒன்று மாணவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்..

வவுனியா கள்ளிக்குளம் பகுதியில் மீள்குடியேற்றம் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் நிறுவனம் ஒன்றினால் மலசல கூடம், கிணறு என்பன கட்டிக் கொடுக்கப்பட்டு வருகின்றது.

அந்த நிலையில் பொதுக் கிணறு ஒன்று வெட்டப்பட்டு 8 அடி தோண்டப்பட்ட நிலையில் அண்மையில் ஏற்பட்ட மழை காரணமாக பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது. கிணறு தோண்டப்பட்ட குழியில் மழை வெள்ளம் சென்று நிறம்பியுள்ளது.

அருகில் வசித்து வந்த இராமச்சந்திரன் டினோஜன் (6 வயது) வவுனியா கருங்காலிக்குளம் அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலையில் தரம் ஒன்றில் கல்வி கற்று வந்த பாடசாலை மாணவன் நேற்று (29.05.2016) மாலை 4 மணியளவில் குறித்த குழிக்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்த சமயம் தவறுதலாக விழுந்துள்ளார்.

5 மணியானதும் தாயார் மகனைக் காணவில்லை என்று தேடியபோதும் சிறுவனைக் காணவில்லை. சந்தேகம் ஏற்பட்டதையடுத்து இளைஞர் ஒருவர் குறித்த கிணற்றுக் குழியில் குதித்து தேடுதலை மேற்கொண்டபோது கற்பாறைக்குள் சிறுவன் சிக்கியுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து சிறுவனை குழியிலிருந்து மீட்டு உடனடியாக வவுனியா பொது வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றபோது பரிசோதனை மேற்கொண்ட வைத்தியர்கள் சிறுவன் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

குறித்த சிறுவன் வீட்டில் நான்காவதும் கடைசியுமான சிறுவன் என்பதும், தந்தை யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்து பணிபுரிந்து வருவதாகவும் தெரியவருகின்றது.

மரண விசாரணையினை மேற்கொண்ட நகர திடீர்மரண விசாரணை அதிகாரி சிவநாதன் கிஷோர் மரண விசாரணையின் பின்னர் சடலத்தை உறவினரிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

மேலதிக விசாரணையினை வவுனியா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

DSC04235 DSC04236 DSC04237 DSC04241 DSC04242