வவுனியா புதுக்குளம் மகாவித்தியாலயத்தின் 100 வது ஆண்டை முன்னிட்டு (1916 – 2016) பழைய மாணவர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மருத்துவ பரிசோதனையும், குருதி நன்கொடை நிகழ்வும் இன்று (30.05.2016) 9.00 மணிக்கு பாடசாலையில் ஆரம்பமானது.
இந்நிகழ்வில் அதிதிகளாக வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் சி.சிவமோகன் மற்றும் வடமாகாண சபை சுகாதார அமைச்சர் டாக்டர் சத்தியலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அங்கு கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் சி.சிவமோகன், தொற்றா நோய்களால் மனிதர்களில் ஏற்படும் இறப்பு வீதம் தொற்று நோய்களினால் ஏற்படும் மரணங்களைவிட அதிகமானது. குறிப்பாக இருதய அடைப்பினால் ஏற்படும் இறப்புக்கள் மூன்றில் ஒரு பங்கு இடத்தைப்பிடிக்கின்றது.
எனவே இது சம்மந்தமான விளிப்புணர்வு நடவடிக்கைகளில் எமது வைத்தியர்கள் ஈடுபடுவது மிகவும் பாராட்டுக்குரியது. புதுக்குளம் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் மற்றும் பழைய மாணவர்களின் இந்த முயற்சிகள் தொடர எனது ஆசிகள் எனக் கூறினார்.
இந்நிகழ்வில் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள், அரச உத்தியோகத்தர்கள், அரச வைத்தியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
1916 ஆம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்ட இந்தபாடசாலை ஆரம்பத்தில் புதுக்குளம் குளத்திற்கு அருகாமையில் இயங்கிவந்த நிலையில் 1960 களில் புதுக்குளம் சாஸ்திரிகூழாங்குளம் சந்திக்கு இடமாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஒன்று ஏ தரத்திலான இந்தப்பாடசாலை வவுனியா வடக்கு கல்விவலயத்தின் முதன்மையான பாடசாலை என்பது குறிப்பிடத்தக்கது.

















