வவுனியா மன்னார் வீதியில் அமைந்துள்ள விசேட தேவைக்குட்பட்டோரை பராமரிக்கும் நிறுவனமான வரோட் அமைப்பினரின் ஏற்பாட்டில் கிளாரட் சிறுவர் எழுச்சித்திட்ட சிறார்களின் ஒன்று கூடல் நிகழ்வு கிளாரட் அமைப்பின் நிறைவேற்று இயக்குனர் அருட்தந்தை அல்பேட் ஜோசப் அருள்ராஜா அவர்களின் தலைமையில் நேற்று (30.05.2016) நடைபெற்றது.
நிகழ்வில் சிறப்பு விருந்தினராக வவுனியா சிறுவர் நன்நடத்தைகள் பிரிவு அதிகாரி ஜே.கென்னடி கலந்துகொண்டிருந்தார்.
முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா ஆகிய மூன்று மாவட்டங்களை சேர்ந்த கிளாரட் அமைப்பின் ஒன்பது சிறுவர் முன்பள்ளி பாடசாலைகளின் மாணவர்களின் ஒன்றுகூடல் நிகழ்வு ஆறு வருடங்களின் பின் வவுனியாவில் நடைபெற்றது.
மன்னார் வீதியில் இருந்து வரோட் நிறுவனத்தின் வளாகம் வரை ஊர்வலமாக பாண்ட் வாத்தியங்களை வாசித்தபடி, விநோத உடைகளில் முன்பள்ளிச் சிறார்கள் அணிவகுத்து வந்தனர்.
ஊர்வலத்தில் நல்ல சக்தி, தீய சக்தி என இரண்டு உருவபொம்மைகள் எடுத்து வரப்பட்டு சிறுவர்களினால் ‘தீமைகள் அளிக்கப்பட வேண்டும் எனும் தொனிப்பொருளில்’ தீய சக்தி உருவ பொம்மை தீயிட்டு கொழுத்தப்பட்டது.
மங்கள விளக்கேற்றலை சிறுவர்கள் ஏற்றி வைக்க நிகழ்வுகள் ஆரம்பமாகியது. இறைவழிபாட்டைத் தொடர்ந்து விசேட தேவைக்குட்பட்ட கலைச்செல்வன் குழுவினரால் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது.
நிகழ்வில் விருந்தினர்களை சிறுவர்கள் மும்மொழிகளிலும் வரவேற்றனர். முன்பள்ளி ஆசிரியர்கள் ஆசிரியர் கீதத்தினை இசைத்தனர். நிகழ்வின் இறுதியில் ‘சான்றோன்’ என்னும் நூல் வெளியிட்டு வைக்கப்பட்டது.
சிறுவர்களின் வரவேற்பு நடனம் மற்றும் கலை நிகழ்வுகளை தொடர்ந்து உரை நிகழ்த்திய அருட்தந்தை அல்பேட் யோசப் அருள்ராஜா,
2009 யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் முகாம்களில் உள்ள குழந்தைகளுக்காக கிளாரட் சிறுவர் அமைப்பு ஊருவாக்கப்பட்டதாக குறிப்பிட்ட அவர் அகதி முகாம்களுக்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டிருந்த காலப்பகுதியில் சிறுவர்களுக்கு கல்வி போதிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது என சுட்டிக்காட்டினார். எமது முக்கியமான நோக்கமாக இருந்தது மாற்று வலு உள்ளோருக்கான உதவிகள் மேற்கொள்வதே எனத் தெரிவித்தார்.

















