வவுனியா ஈரப்பெரியகுளம் பகுதியில் மாதிரிக் கிராமத்திற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று(02.06) காலை 10 மணியளவில் கைத்தொழில் வணிகத்துறை அமைச்சர் ரிஷாட் பதியூதீன், வடமாகாண சபை உறுப்பினர் ஜெயதிலக அவர்களினால் உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
வீடமைப்பு அதிகார சபையின் அமைச்சர் சஜித் பிரேமதாசாவின் செமட்ட செவன திட்டத்தின் அனைவருக்கும் நிழல் மாதிரிக் கிராமத்திற்கான 50 வீட்டிற்கான திட்டத்தில் முதற்கட்டமாக 25வீட்டிற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இடம்பெற்றது.
இடம்பெயர்ந்து வீடுகள், காணிகள் அற்ற குடும்பங்களைத் தெரிவு செய்து அவர்களுக்கு இரண்டு இலட்சம் ரூபா மானிய அடிப்படையிலும் மூன்று இலட்சம் ரூபா கடனடிப்படையிலும் இத்திட்டம் இடம்பெற்று வருகின்றது.
இதனுடன் இணைந்து குடாக்கச்சக்கொடி பகுதியிலும் இன்று 25 வீடுகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இடம்பெற்றது.
இந்நிகழ்வில் வன்னி மாவட்ட ஜக்கிய தேசியக்கட்சியின் அமைப்பாளர் பி.ஏ.கருணதாசா, வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் எம்.பி.ரோகண புஸ்பகுமார, வன்னி மாவட்ட ஜக்கிய தேசியக்கட்சியின் ஊடக இணைப்பாளர் சிவலிங்கம் மற்றும் வீடமைப்பு அதிகார சபையின் அதிகாரிகள், அப்பகுதி கிராம உத்தியோகத்தர்கள், பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.











