எனக்கு பாடசாலை செல்ல பயமாக இருக்கிறது : வவுனியாவில் பாதிக்கப்பட்ட சிறுமி கதறல்!!

648

sexual-abuse

வவுனியா நெடுங்கேணி ஒலுமடுவில் கடந்த 27.05.2016 அன்று பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளான சிறுமி வவுனியா வைத்தியசாலையிலிருந்து சிகிச்சையின் பின் வீடு திரும்பியுள்ள போதிலும் தொடர்ந்து பாடசாலைக்கு செல்ல மறுத்து வருவதுடன் எனக்கு பாடசாலை செல்ல பயமாக இருக்கிறது, அவ்வாறு நான் பாடசாலைக்கு செல்ல வேண்டுமாயின் எனது பாடசாலையின் முன் உள்ள தேநீர் கடையை அங்கிருந்து அகற்றுங்கள் என தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து கருத்து வெளியிட்ட அவ்வூர் மக்கள்,

2009 ஆண்டு நடைபெற்ற இறுதி யுத்தத்தின் பின் நெடுங்கேணி பிரதேசத்தில் நடைபெற்ற இரண்டாவது துஸ்பிரயோக சம்பவமாக இது பதியப்பட்டுள்ளது. யுத்தத்தின் காரணமாக மோசமாக பாதிப்பிற்குள்ளான எமது ஊரில் அதிகாரிகளுடன் கதைப்பதற்கே எமது மக்கள் பயப்படுகிறார்கள்.

இதன் காரணமாக ஒலுமடு கிராம மக்கள் வாய் மூடி மௌனிகளாக இருப்பதாகவும் அச்சத்துடன் தெரிவிக்கும் மக்கள் சிறுமி துஸ்பிரயோகம் செய்யப்பட்டதாக கருதப்படும் தேநீர்க்கடையானது தொடர்ந்தும் சட்டத்துக்கு புறம்பான லேகியம் போன்ற பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

துஸ்பிரயோகம் மேற்கொண்டவராக சந்தேகிக்கப்படும் சந்தேக நபரை எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் முன்நிலைப்படுத்த திட்டங்கள் இருந்ததாகவும் தெரிவித்தனர்.

ஒருசில அதிகாரிகளின் நேர்மையற்ற நடவடிக்கை காரணமாக நல்ல அதிகாரிகளையும் சந்தேகத்தோடு பார்க்க வேண்டிய நிலை காணப்படுவதாக தெரிவிக்கும் மக்கள் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதோடு எங்கள் பெண் பிள்ளைகள் நிம்மதியாக பாடசாலை செல்ல வேண்டுமானால் பாடசாலையின் முன் அமைந்துள்ள தேநீர்க்கடை மூடப்பட வேண்டும் எனவும் சுட்டிக்காட்டினர்.