வவுனியாவில் நேற்று (05.06.2016) காலை தனியார் பேரூந்து நடத்துநர்கள் இருவர் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டதுடன் கைகலப்பிலும் ஈடுபட்டுள்ளனர்.
எனினும் அங்கிருந்தவர்களின் தலையீட்டால் சமரசம் செய்து வைக்கப்பட்டுள்ளது. இரவு 11 மணியளவில் குறித்த நடத்துனர், இளைஞர்கள் சிலருடன் வவுனியா முதலாம் குறுத்குத் தெருவில் தனியார் பேரூந்து தரிப்பிடத்தில் புதூர் கோவிலுக்குச் செல்வதற்கு பேரூந்துகள் நிறுத்தப்பட்டு ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்த சமயம் எதிர்பாராத விதமாக அவ்விடத்திற்கு வாள், கத்தி, மதுப் போத்தல்கள், தடி என்பனவற்றுடன் வந்து குறித்த வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்ட நடத்துனர் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
தாக்குதலைத் தடுக்க முற்பட்ட தனியார் பேரூந்து சாரதி ஜெயசீலன் (28) மீது மதுப்போத்தலால் தாக்குதல் மேற்கொண்டபோது தலையில் படுகாயமடைந்த நிலையில் அவர் வவுனியா பொது வைத்தியசாலையில் நேற்று இரவு அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தாக்குதல் நடாத்திய இளைஞர் குழுவில் ஆறுபேருக்கு மேல் இருந்ததாகத் தெரிவித்த தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத் தலைவர், தாக்குதல் நடத்த வந்த இளைஞர்கள் மதுபோதையில் இருந்துள்ளதாகவும் இன்று (06.06.2016) தாக்குதல் நடத்திய இருவரை பொலிசார் கைது செய்துள்ளதாகவும் மேலும் சிலரை பொலிசார் தேடி வருவதாகவும் தெரிவித்தார்.
நேற்று இரவு இளைஞர்கள் குழுவினரின் தாக்குதல் சில நிமிடங்கள் நீடித்ததாகவும் பின்னர் பொலிசார் சம்பவ இடத்திற்கு வருகைதந்து நிலைமைகளை கட்டுப்படுத்தியதாகவும் சம்பவத்தினை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
இத்தாக்குதல் சம்பவத்தில் நான்கு பேரூந்துகளும் சேதத்திற்குள்ளாகியமை குறிப்பிடத்தக்கது.
மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.









