வவுனியா மாவட்டத்திலுள்ள 42 கிராமசேவையாளர் பிரிவுகளிலுள்ள கர்ப்பிணித் தாய்மாருக்கான சத்துணவு வழங்கும் திட்டத்தை சமூக சேவைகள் அமைச்சு வவுனியா பிரதேச செயலகத்தினால் வழங்கப்பட்டுவருகின்றது.
கேள்வி அறிவித்தல் மூலம் தனியாருக்கு பொருட்களை வழங்கும் உரிமையினை பிரதேச செயலகம் வியாபார நிலையம் ஒன்றிற்கு வழங்கியிருந்தது.
எனினும் அந்த வியாபார நிலையம் பொருட்களை வழங்குவதில் குறைபாடுகள் நிலவிவருவதாகவும் சிலருக்கு பொருட்கள் வழங்குவதில்லை எனவும், பொருட்கள் முடிந்துவிட்டதாகவும் அடுத்தமுறை வந்து சத்துணவுப் பொருட்களைப் பெற்றுக்கொள்ளுமாறும் கர்ப்பிணித் தாய்மாரை அலையவைப்பதாகவும் கர்ப்பிணித்தாய்மார் தெரிவித்துள்ளனர்.
இக்குற்றசச்சாட்டு தொடர்பாக வவுனியா பிரதேச செயலாளர் கா.உதயராஜா அவர்களிடம் தெரிவித்ததையடுத்து குறித்த பொருட்கள் வழங்கும் வியாபார நிலையத்துடன் தொலைபேசியில் தொடர்பு கொண்ட பிரதேச செயலாளர் சத்துணவு பெற வரும் கர்ப்பிணித் தாய்மாருக்கான சத்துணவுப் பொருட்களை தாமதமின்றி வழங்குமாறும் பொருட்களைப் பெறவரும் அனைவருக்கும் வழங்கிவைக்குமாறும் தெரிவித்ததுடன் பிரதேச செயலகத்திலிருந்து உத்தியோகத்தரை அனுப்பி பார்வையிட்டு வருவதாகவும் கர்ப்பிணித் தாய்மார் தாமதமின்றி பொருட்களை பெறுவதற்கு பிரதேச செயலகத்தினால் நடவடிக்கை மேற்கொள்வதாகவும் மேலும் தெரிவித்தார்.








