வவுனியாவில் வர்த்தகர் ஒருவரை இனந்தெரியாதவர்கள் நேற்று இரவு கடத்திச் சென்றதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் இக்கடத்தல் சம்பவத்திற்கு எதிராக எதிர்வரும் வெள்ளிக்கிழமை (24.06.2016) வவுனியாவிலுள்ள வர்த்தக நிலையங்கள் அனைத்தையும் பூட்டி அமைதியான முறையில் கடை அடைப்பினை மேற்கொள்ளுமாறும்,
அன்றைய தினம் தினச்சந்தையில் காலை 9 மணிக்கு ஒன்றுகூடி வர்த்தகர்கள் வவுனியா மாவட்ட செயலகத்திற்கு போரணியாகச் சென்று வவுனியா மாவட்ட அரசாங்க அதிபரிடம் மகஜர் ஒன்றையும் கையளிக்கவுள்ளதாக இன்று இடம்பெற்ற வவுனியா மாவட்ட வர்த்தக சங்க மத்திய குழுக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட வர்த்தக சங்கத் தலைவர் திரு. ரி.கே. இராஜலிங்கம் தெரிவித்துள்ளார்.
இனந்தெரியாதவர்களினால் கடத்திச் செல்லப்பட்ட வர்த்தகர் வவுனியா வர்த்தக சங்கத்தில் பொதுச்சபை உறுப்பினராக செயற்பட்டவர் என்பதுடன் வவுனியா மாவட்டத்தில் பிரபல்யமான வர்த்தகர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
வெள்ளிக்கிழமை இடம்பெறவுள்ள கடை அடைப்பிற்கு சகல வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள் பூரண உத்துழைப்பினை வங்குவதுடன் அமைதியான முறையில் கடை அடைப்பினை மேற்கொள்ளுமாறும் உணவகங்கள், மருந்தகங்கள் உட்பட அனைத்து வர்த்தக நிலையங்களையும் பூட்டி தமது பூரண உத்துழைப்பினை வழங்குமாறும் வர்த்தகர் சங்கத் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.






