கிளிநொச்சி – முழங்காவில் ஆரம்ப பாடசாலை அதிபர் , ஆசிரியர்கள் மீது அவதூறு பரப்பி வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்களின் பெற்றோர்கள் பாடசாலையின் நுழைவாயிலை மூடி இன்று (01) கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
முழங்காவில் ஆரம்ப பாடசாலையில் கடமையாற்றும் அதிபர் , ஆசிரியர்கள் மீது சமூக வலைத்தளம் ஊடாக அவதூறு பரப்பி வருவதன் காரணமாக பாடசாலை மாணவர்களின் பெற்றோர்கள் முழங்காவில் பொலிஸ் நிலையம் மற்றும் கல்வி திணைக்களம் ஆகியவற்றில் முறைப்பாடளித்துள்ளனர்.
எனினும் முறைப்பாடளித்தும் இதுவரை எந்தவித தீர்வுகளும் வழங்கப்படாத நிலையில் பாடசாலை மாணவர்களின் பெற்றோர்கள் இன்று குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
இந்த கவனயீர்ப்பு போராட்டம் காரணமாக பாடசாலையில் கற்றல் செயற்பாடுகள் முழுமையாக ஸ்தம்பிதம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இத்தாலியின் ட்ரெண்டினோ நகரத்தில் உள்ள கிராமங்களில் குடியேறுபவர்களுக்கு வீடு மற்றும் பணம் வழங்க இத்தாலி அரசாங்கம் தீர்மானித்துள்ளது .
இந்த நகரத்தின் 33 கிராமங்களில் குடியேறுபவர்களுக்கு சொந்தமாக வீடு மற்றும் இந்திய மதிப்பில் 92 இலட்சம் ரூபாய் பணத்தை வழங்க முடிவு செய்துள்ளது.
அதேவேளை வெளிநாட்டவரும் இந்த வாய்ப்பை பெறலாம் என இத்தாலி அரசு தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எனினும் அரசாங்கம் கொடுக்கும் வீட்டில் 10 ஆண்டுகள் வாழ வேண்டும் எனவும் இல்லையெனில் கொடுத்த பணத்தை திரும்ப அரசாங்கத்திற்கே வழங்க வேண்டும் எனவும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
இத்தாலியின் ட்ரெண்டினோ கிராமத்தை விட்டு மக்கள் வெளியேறி நகர் புறங்களில் தற்போது குடியேறி வருவதால் இம்முயற்சி மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கம்பஹா – கந்தானையில் உள்ள புனித செபஸ்டியார் திருத்தலத்தில் வைக்கப்பட்டிருந்த புதுமையான செபஸ்டியாரின் சிலை ஒன்று திருடப்பட்டுள்ளது. இந்த சிலை இன்று (01) அதிகாலை 2.15 மணி முதல் 3.00 மணிக்கு இடையில் திருடப்பட்டுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
சிவப்பு நிற தொப்பி மற்றும் கறுப்பு நிற ஆடை அணிந்து முகத்தை மூடிக் கொண்டு வந்த நபரொருவர் சிலையைத் திருடிச் செல்லும் காட்சி புனித செபஸ்டியார் திருத்தலத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிரிவி கமராவில் பதிவாகியுள்ளது.
சந்தேகநபர் திருத்தலத்தின் ஆண்கள் முன்பள்ளி பகுதியூடாக நுழைந்து அதே வழியாக திரும்பிச் சென்றுள்ளார்.
இந்நிலையில் கந்தானை புனித செபஸ்டியார் திருத்தலத்தின் பங்குத்தந்தை, பங்கு மக்கள் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து காணாமல் போன புதுமையான சிலையைக் கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
இலங்கையிலுள்ள உயரமான கட்டடங்கள் நிலநடுக்கத்தை தாங்கும் சக்தி கொண்டது என நில அதிர்வு நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, இந்த கட்டடங்கள் அதி நவீனத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திக் கட்டப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகத்தின் அதிகாரி ஒருவர் கூறுகையில், இலங்கை அனுபவித்த அதிகபட்ச நிலநடுக்கம் சுமார் 3.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கங்கள் ஆகும். இது எந்த தாக்கத்தையும் சேதத்தையும் ஏற்படுத்தாது.
இருப்பினும், தற்போது கட்டப்பட்டு வரும் மற்றும் சமீபத்திய காலங்களில் கட்டப்பட்ட அனைத்து நவீன வானளாவிய கட்டடங்களும் மிதமான அளவிலான நிலநடுக்கத்தைத் தாங்கும் வகையில் கட்டமைப்பு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திக் கட்டப்பட்டுள்ளன.
சர்வதேச கட்டுமானத் தரம் கொண்ட நிலநடுக்க எதிர்ப்பு தொழில்நுட்பம் இப்போது இலங்கையிலும் பின்பற்றப்படுகிறது.
மேலும் நகரத்தைத் தாக்கும் பாரிய நிலநடுக்கத்தில் கூட, கொழும்பு வானளாவிய கட்டிடங்கள் தாங்கும் சக்தி கொண்டவையான உள்ளன என்று நில அதிர்வு நிபுணர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, என்றோ ஒருநாள் இலங்கையிலும் மிகப்பெரிய அளவிலான நிலநடுக்கம் ஏற்படலாம் என யாழ். பல்கலைக்கழக புவியியல்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.
2025ஆம் ஆண்டு தொடர்பில் பாபா வங்கா மேற்கொண்டுள்ள கணிப்புக்களில் மியன்மார் நிலநடுக்கம் பற்றியும் கணிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பல்கேரியாவைச் சேர்ந்த மறைந்த பாபா வங்கா, தனது வாழ்நாளில் கணித்த பல விடயங்கள் நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது. அந்தவகையில், 2025ஆம் ஆண்டில் நடைபெற உள்ள நிகழ்வுகள் குறித்தும் அவர் கணித்திருக்கிறார்.
அவற்றில் ஒன்றான மியன்மார் மற்றும் தாய்லாந்து நிலநடுக்கம் தற்போது நிகழ்ந்து விட்டதாக கூறப்படுகிறது. இந்த அனர்த்தம் பேரழிவை ஏற்படுத்தியுள்ள நிலையில் தொடர்ந்து நிலநடுக்க எச்சரிக்கைகளும் விடுக்கப்பட்டு வருகின்றன.
அதேவேளை, இந்த ஆண்டின் இறுதி வரை பேரழிவை ஏற்படுத்தும் நிலநடுக்கங்களும், இயற்கை சீற்றங்களும் உண்டாகும் என பாபா வங்கா கணித்துள்ளார்.
அதற்கமைய, அமெரிக்க மேற்கில் நிலநடுக்கங்கள் மனித சமுதாயத்தில் பேரழிவு தரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் கணிப்பில் இருந்துள்ளது.
அத்துடன், அவரது கணிப்புகளில், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் உலகின் பல்வேறு அம்சங்களில் முக்கியமான பொறுப்புகளை வகிப்பார், உக்ரைன் போரில் அவர் முன்னிலை வகிப்பார் என்றும், ஐரோப்பிய நாடுகள் பின்தங்கும் என்றும் குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
மேலும், வேற்றுக் கிரகவாசிகளின் தாக்குதல் ஏற்படக்கூடும் என்றும், உலகம் முழுவதும் போரால் பாதிக்கப்படும் என்றும் பாபா வங்கா கணித்திருக்கிறார்.
அதேவேளை, அடுத்து வரும் 3000 ஆண்டுகளில் நடப்பவை தொடர்பில் அவர், கணித்துள்ள விடயங்களும் வெளியாகியுள்ளன.
அதற்கமைய, 2028ஆம் ஆண்டு புதிய கண்டு மின்சக்தி கண்டுபிடிக்கப்படும், பசி ஒழியும் மற்றும் வீனஸ் செல்வான் மனிதன் என அந்த கணிப்புக்கள் தெரிவிக்கின்றன.
2043 ஆம் ஆண்டு ஐரோப்பாவில் இஸ்லாமிய பெரும்பான்மை ஏற்படும், 2046இல் மனித மாற்று உறுப்புக்களில் ஆய்வகங்களில் சிந்தட்டிக்கில் உருவாகும் என கூறப்பட்டுள்ளது.
2066இல் சுற்றுச்சூழலை மறுகட்டமைக்கும் ஆயுதத்தை அமெரிக்கா உருவாக்கும் மற்றும் 76களில் சமூகத்தில் சாதி முறை ஒழியும் என கணிக்கப்பட்டுள்ளது.
க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை எதிர்வரும் சித்திரைப் புத்தாண்டுக்கு முன்னதாக வெளியிடுவதற்குப் பரீட்சைகள் திணைக்களம் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த ஆண்டு நவம்பர் 25 ஆம் திகதி ஆரம்பமான உயர்தரப் பரீட்சைகள் டிசம்பர் 20 ஆம் திகதி முடிவடைய இருந்த நிலையில் சீரற்ற வானிலை காரணமாக பிற்போடப்பட்டு டிசம்பர் 31 ஆம் திகதி வரை பரீட்சைகள் நடைபெற்றன.
இந்த உயர்தரப் பரீட்சைக்கு மொத்தமாக 3 இலட்சத்து 33 ஆயிரத்து 183 பரீட்சார்த்திகள் தோற்றினார்கள்.
இதில் பாடசாலை மாணவர்கள் 2 இலட்சத்து 53 ஆயிரத்து 380 பேரும், தனிப்பட்ட பரீட்சார்த்திகள் 79 ஆயிரத்து 795 பேரும் பரீட்சைக்கு முகங்கொடுத்தார்கள்.
எனவே, வருகின்ற ஏப்ரல் மாதத்துக்குள் உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளை வெளியிடுவதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்று பரீட்சைகள் திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தற்போது நிலவும் வெப்பமான வானிலை குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாட்டின் மேல், வடக்கு, வடமத்திய, சப்ரகமுவ, தென், வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளிலும் வெப்பநிலையானது எச்சரிக்கை மட்டத்தில் நிலவக்கூடும்.
அதற்கமைய, குறித்த பகுதிகளில் 39 பாகை செல்சியஸ் முதல் 45 பாகை செல்சியஸ் வரை வெப்ப நிலை பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனால், வெளிப்புறங்களில் வேலை செய்பவர்கள் லேசான ஆடைகளை அணியுமாறும், நிழலான பகுதிகளில் ஓய்வெடுத்தல் மற்றும் போதியளவு நீரை அருந்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அதிக வெப்பத்தால் ஏற்படக்கூடிய சுகாதார பிரச்சினைகள் குறித்தும் அவதானம் செலுத்துமாறும், சரியான சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கொழும்பில் உள்ள தாமரை கோபுரத்திலிருந்து பாராசூட்டில் குதித்த அமெரிக்க பிரஜை ஒருவர் மருதானை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
சந்தேக நபரான வெளிநாட்டவரிடம் நடத்திய விசாரணையில், தாமரை கோபுரத்திலிருந்து பாராசூட் ஜம்பிங் போட்டிக்காக வந்ததாகக் கூறியுள்ளார்.
இருப்பினும், பாராசூட் ஜம்பிங் போட்டிக்காக அனுமதி ரத்து செய்யப்பட்டதாகவும், அது குறித்து தனக்குத் தெரியாது என்றும் அவர் கூறியுள்ளார்.
தாமரை கோபுரத்திலிருந்து குதித்து பாதுகாப்பாக தரையிறங்கிய பின்னர் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகத்திற்குரிய வெளிநாட்டவர், பாராசூட்டின் உதவியுடன் உயரமான இடங்களிலிருந்து குதிப்பது தனது பொழுதுபோக்காக இருப்பதாகவும் பொலிஸாரிடம் கூறியுள்ளார்.
இந்திய தலைநகர் டெல்லியின் நியூ உஸ்மான்பூர் பகுதியில் உள்ள பூங்காவில் இளைஞர் ஒருவர் நேற்று (30) மாலை கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலறிந்து விரைந்து வந்த பொலிஸார் குறித்த இளைஞரை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்தனர். ஆனால், இளைஞரை பரிசோதித்த வைத்தியர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்துள்ளனர்.
இது தொடர்பாக கொலை வழக்குப்பதிவு செய்த பொலிஸார் சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் விசாரணை தொடங்கினர். விசாரணையில் கொல்லப்பட்ட இளைஞர் 500 ரூபா பணத்திற்காக கொல்லப்பட்டது தெரியவந்துள்ளது.
இளைஞரிடமிருந்து 500 ரூபா பணத்தை திருட இரு சிறுவர்கள் உட்பட 3 பேர் முயற்சித்துள்ளனர். அப்போது ஏற்பட்ட மோதலில் இளைஞரை 3 பேரும் கத்தியால் குத்திக்கொன்றுள்ளனர். இதையடுத்து கொலை செய்த சிறுவர்கள் உட்பட 3 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
புதிய இணைப்பு : நாயாறு கடலில் உயிரிழந்த யுவதியின் சடலத்தை உடற்கூற்று பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்க முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் உத்தரவிட்டுள்ளார்.
முல்லைத்தீவு நாயாறு கடற்கரையில் கண்டெடுக்கப்பட்ட யுவதியின் சடலத்தை முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் நேரில் சென்று இன்று (31.03.2025) மாலை பார்வையிட்டிருந்தார்.
அதனையடுத்து சடலத்தை முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்து சென்று சடலத்தை உடற்கூற்று பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்க உத்தரவிட்டிருந்தார்.
முதல் இணைப்பு : முல்லைத்தீவு நாயாற்று கடற்பகுதியில் குளிக்க சென்ற பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
உடையார்கட்டு பகுதியில் தையல் கற்கும் யுவதிகளும்,தையல் பயிற்சியாளர்களுமாக 15 பெண்கள் இன்றையதினம் (31.03.2025) கப்ரக வாகனத்தில் நாயாற்று கடற்பகுதிக்கு வந்துள்ளனர்.
குறித்த பெண்கள் நாயாற்றுகடலில் குளித்து கொண்டிருந்த போது திடீரென மூன்று பெண்கள் நீரில் அடித்து செல்லப்பட்டுள்ளனர்.
சடலமாக மீட்பு
நீரில் அடித்துச்செல்லப்பட்ட மூவரில் 47, 21 வயதுடையஇரு பெண்கள் மீட்கப்பட்டு மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 20 வயதுடைய மற்றைய யுவதியொருவரை தேடும் பணியில் கடற்படையினர் ஈடுபட்டிருந்தனர்.
இந்த நிலையில் குறித்த யுவதி சடலமாக மீட்கபட்டுள்ளார். இவ்வாறு சடலமாக மீட்கபட்டவர் இருட்டுமடு உடையார்கட்டு பகுதியை சேர்ந்த சிவகுமார் வினுஷிகா என தெரியவந்துள்ளது. வாகனத்தையும்,
குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய நபர்களையும் கொக்குளாய் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அனுராதபுரத்தில் வெளிநாட்டு தம்பதியினர் பயணித்த காருடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கவரக்குளம் A13 வீதியில் இன்று ஏற்பட்ட விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உயிரிழந்ததாக அனுராதபுரம் தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் அனுராதபுரத்தில் வசிக்கும் 31 வயதுடைய தொழிலாளி என தெரியவந்துள்ளது.
அனுராதபுரத்திலிருந்து கவரக்குளத்தை நோக்கிச் சென்ற கார் ஒன்றும், கவரக்குளத்திலிருந்து அனுராதபுரம் நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளும் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
கடவத்தையை சேர்ந்த 59 வயதுடைய மோட்டார் வாகன சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று முதல் அடுத்துவரும் சில தினங்களுக்கு பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதேவேளை நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
புத்தளம் தொடக்கம் கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை, மட்டக்களப்பு ஊடாக திருகோணமலை வரையான கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
மத்திய , சப்ரகமுவ , மேல், தென் மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் குருநாகல் மற்றும் பொலனறுவை மாவட்டங்களின் சில இடங்களிலும் 100 மில்லிமீற்றர் வரையிலான பலத்த மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 20 – 30 கிலோமீற்றர் வேகத்தில் தென்கிழக்குத் திசையில் இருந்து அல்லது மாறுபட்ட திசைகளில் இருந்து காற்று வீசும்.
நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்கள் மிதமான அலையுடன் காணப்படும். ஆனால் இடியுடன் கூடிய மழை பெய்கின்ற சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு ராகம பகுதியில் பணம் மற்றும் தங்கப் பொருட்களுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேல் மாகாணம் – வடக்கு குற்றப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் குழு நடத்திய சோதனையின் போது இந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடமிருந்து 13 கிராம் 500 மில்லிகிராம் ஹெரோயின் மற்றும் ஹெரோயின் விற்பனை மூலம் பெற்றதாக சந்தேகிக்கப்படும் 1.1 மில்லியன் ரூபாய் பணம், 4 மில்லியன் மதிப்புள்ள தங்கம், 2 மின்னணு தராசுகள் மற்றும் ஒரு கையடக்க தொலைபேசி ஆகியவற்றை பொலிஸார் மீட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட பெண் களனி பிரதேசத்தை சேர்ந்த 24 வயதுடையவர் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. சம்பவம் தொடர்பாக மேல் மாகாணம் – வடக்கு குற்றப்பிரிவு அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அரச சேவையில் 30,000 இளைஞர் யுவதிகளை இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும். விண்ணப்பியுங்கள், நாங்கள் உங்களுக்கு வேலை வாங்கித் தருகிறோம் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டு புத்தள நகரில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,”அரச வேலைகளுக்கு இப்போது நிறைய செய்தித்தாள்களில் விளம்பரங்கள் பிரசுரிக்கப்பட்டுள்ளன. விண்ணப்பியுங்கள், நாங்கள் உங்களுக்கு வேலை வாங்கித் தருகிறோம்.
நாங்கள் 30,000 புதிய, திறமையான இளைஞர்களை வேலைக்கு அமர்த்துகிறோம். பணம் இப்போது ஒதுக்கப்பட்டுள்ளது.
அரச சேவையில் சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளது, ஓய்வூதியதாரர்களுக்கான கொடுப்பனவு உயர்த்தப்பட்டுள்ளது. அஸ்வெசும கொடுப்பனவு தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது.
இவை எதுவுமே கிடைக்காமல் 8 இலட்சம் பேர் இருக்கிறார்கள். அவர்களுக்காக 5000 ரூபா பெறுமதியான உணவுப் பொதியை சதொச ஊடாக 2500 ரூபாவுக்கு வழங்குகிறோம்.
மேலும் அஸ்வெசும பெறாத ஒரு குழு உள்ளது. அவர்களுக்கு தகுதி இருந்தும் அவை கிடைப்பதில்லை. நாங்கள் விண்ணப்பங்களை கோரியுள்ளோம்.
இப்போது, ஜூன் மாதத்தில் தேர்வு செய்யும் சபை ஊடாக தேர்ந்தெடுக்கப்பட்ட 400,000 குடும்பங்களுக்கு புதிதாக அஸ்வெசும கொடுப்பனவை வசதியை வழங்க நடவடிக்கை மேற்கொள்வோம்.” என கூறியுள்ளார்.
வவுனியா நெளுக்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நெளுக்குளம் – நேரியகுளம் பிரதான வீதியிலுள்ள தம்பனை புளியங்குளம் குளக்கரைக்கு அண்மித்த பகுதியில் இன்று (01.04) காலை உருகுலைந்த சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.
நெளுக்குளம் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற நெளுக்குளம் பொலிஸார் சடலத்தினை பார்வையிட்டனர்.
சடலத்திற்கு அருகேயுள்ள வயல் வெளியில் சேட் ஒன்றும் காணப்படுவதுடன் குறித்த சடலம் ஐந்து தொடக்கம் பத்து நாட்களுக்கு மேற்பட்டதாக இருக்கலாம் என்பதுடன் சடலம் உருகுலைந்த நிலையில் காணப்படுதினால் ஆணா பெண்ணா என்பதில் கடின நிலமை ஏற்பட்டுள்ளமையுடன் பொலிஸார் மேலதிக விசாரணகளை முன்னெடுத்துள்ளமையுடன் தடவியல் பொலிஸாரும் விசாரணைகளை தொடர்கின்றனர்.
சடலத்தினை அடையாளம் காண்பதற்காகவும் பிரேத பரிசோதனைகளுக்காகவும் சடலம் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.