ஹட்டனில் உள்ள ஒரு தனியார் வங்கியில் இரண்டு ஏ.டி.எம் இயந்திரங்களை உடைக்க முயன்ற இளைஞரை கண்டுபிடிப்பதற்காக ஹட்டன் குற்றப் புலனாய்வுப் பொலிஸ் பிரிவு அதிகாரிகள் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று(04.05.2026) அதிகாலை இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
அதிகாலையில், வங்கி கிளைக்கு வந்த சந்தேக நபர், இரண்டு ஏ.டி.எம் இயந்திரங்களை உடைத்து பணத்தைத் திருட முயன்ற போது, அந்த முயற்சி தோல்வியடைந்த பிறகு சந்தேக நபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, வங்கி ஒழுங்குமுறை ஆணையம், சந்தேக நபர் இரண்டு ஏ.டி. எம் இயந்திரத்தை உடைக்க முயன்றது தொடர்பான பாதுகாப்பு கேமரா காட்சிகள் மற்றும் புகைப்படங்களைச் சமர்ப்பித்து, ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இதன்படி, சந்தேக நபர் தொடர்பாக ஏதேனும் தகவல் தெரிந்தால் பின்வரும் குற்றப்பிரிவு ஹட்டன் – 076 167 0258 என்ற தொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளுமாறு ஹட்டன் பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பாளர் நிஷாந்தா டி சில்வா கேட்டுக் கொண்டுள்ளார்.
2027 ஆம் ஆண்டு முதல் பாடசாலைத் தவணைகள் மற்றும் பொதுப் பரீட்சைகள் அனைத்தும் அவற்றின் வழக்கமான கால அட்டவணையின்படி நடைபெறும் என்று கல்வி அமைச்சின் செயலாளர் நலக கலுவேவ தெரிவித்துள்ளார் .
அதன்படி பாடசாலைத் தவணைகள் மற்றும் பொதுப் பரீட்சை கால அட்டவணையை, 2020 ஆம் ஆண்டிற்கு முந்தைய நிலைக்கு அடுத்த ஆண்டு (2027) முதல் முழுமையாகக் கொண்டுவர கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
பழைய அட்டவணைக்கு மாறுவதற்கான ஒரு நிலைமாற்றக் காலமாக நடப்பு 2026 ஆம் ஆண்டில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
2027 ஆம் ஆண்டு ஜனவரியில் புதிய கல்வியாண்டைத் தொடங்குவதற்கு ஏதுவாக, இந்த ஆண்டு (2026) எஞ்சியுள்ள இரண்டு பாடசாலை விடுமுறை காலங்களும் வழக்கத்தை விட நீண்ட நாட்களுக்கு வழங்கப்படும்.
2026 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைகள் எவ்வித மாற்றமும் இன்றி திட்டமிட்டபடி டிசம்பர் மாதம் நடைபெறும். இலங்கையின் கல்வி முறைமை கடந்த சில ஆண்டுகளாக கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
2020 முதல் பரவிய கொவிட் 19 மற்றும் அதன் பின் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி, எரிபொருள் தட்டுப்பாடு, போக்குவரத்து சிரமங்கள் போன்றவற்றால் பாடசாலைகள் அடிக்கடி மூடப்பட்டன.
சமீபத்தில் ஏற்பட்ட டிட்வா சூறாவளி உள்ளிட்ட மோசமான வானிலை பாதிப்புகளும் நாட்டின் பல பகுதிகளில் கல்வி நடவடிக்கைகளைத் தற்காலிகமாக முடக்கின.
இந்தச் சவால்களைக் கடந்து, கல்வி முறையைச் சீரமைப்பதன் மூலம் மாணவர்களின் கல்வி எதிர்காலத்தை மீண்டும் ஒரு நிலையான பாதைக்குக் கொண்டு வர முடியும் என கல்வி அமைச்சு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
மன்னார் மூர் வீதி பகுதியில் குடும்பத் தகராறு காரணமாக தனது கணவனை கொலை செய்து அவரது உடலை துண்டு துண்டுகளாக வெட்டி உறப்பையில் போட்டு மலசலகூட குழியில் போட்ட நிலையில் குறித்த சடலம் திங்கட்கிழமை (04.05) மன்னார் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில்,
மன்னார் மூர்வீதியில் வாடகை வீடு ஒன்றில் வசித்து வந்த கணவன் மனைவிக்கு இடையில் கடந்த சனிக்கிழமை இரவு ஏற்பட்ட தர்க்கம் காரணமாக மனைவி தனது கணவனை தாக்கி கொலை செய்துள்ளார்.
பின்னர் சடலத்தை ஞாயிற்றுக்கிழமை (3) துண்டு துண்டுகளாக வெட்டி உறப்பையில் போட்டு மலசல கூட குழியினுள் போட்டுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பாக மன்னார் பொலிஸ் நிலையத்தில் குறித்த பெண் சரணடைந்துள்ளார்.
உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த மன்னார் பொலிஸார் சடலத்தை பார்வையிட்டதோடு மன்னார் நீதவான் மற்றும் சட்ட வைத்திய அதிகாரி ஆகியோருக்கு தெரியப் படுத்தியதோடு கொலையை செய்த குறித்த பெண்ணையும் அழைத்து வந்தனர்.
பின்னர் நீதவான் மற்றும் சட்ட வைத்திய அதிகாரி ஆகியோர் வருகை தந்த நிலையில் சடலம் மலசலகூட குழியில் இருந்து எடுக்கப்பட்டது. உயிரிழந்தவர் மன்னார் வங்காலை பகுதியை சேர்ந்தவர் 36 வயதுடையவர் என தெரிய வருகிறது.
குடும்பத் தகராறு முற்றிய நிலையில் மனைவியால் கணவன் கொலை செய்யப்பட்டு சடலம் துண்டு துண்டாக வெட்டப்பட்டு உறப்பையில் போட்டு வீட்டின் மலசலகூட குழிக்குள் வீசப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சடலம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதோடு,கொலை செய்த அவரது மனைவி மன்னார் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட குறித்த பெண் கடந்த இரண்டு மாதங்களாக மன்னார் மூர்வீதியில் எவ்வித பதிவுகளும் இன்றி வசித்து வந்துள்ளது தெரிய வருகிறது.
இந்த நிலையில் குறித்த வீட்டில் உள்ள உடமைகள் அனைத்தும் குறித்த பெண்ணை உரிமை கோரிய அவரின் தந்தையிடம் ஒப்படைக்க பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தமிழக சட்டசபை தேர்தலில் யாரும் எதிர்பாராத வகையில் த.வெ.க. வெற்றி பெற்று, 59 ஆண்டு கால திராவிட கட்சிகளின் ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. முதல் தேர்தலிலேயே வெற்றி வாகை சூடி, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக உயர்ந்துள்ளது.
என்றாலும், தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் அளவுக்கு த.வெ.க.வுக்கு வெற்றி கிடைக்கவில்லை. அதாவது, மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் 118 தொகுதிகளில் வெற்றி பெற்றால்தான், ஒரு கட்சிக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கும்.
ஆனால், த.வெ.க. 108 தொகுதிகளில்தான் முன்னிலை வகிக்கிறது. த.வெ.க.வுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், அடுத்து என்ன நடக்கும் என்பதை தொடர்ந்து பார்ப்போம்.
த.வெ.க. தலைவர் விஜய், தான் போட்டியிட்ட பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருக்கிறார். இதில், ஒன்றை ராஜினாமா செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால், தொகுதிகளின் எண்ணிக்கையில் ஒன்று குறையும்.
அதேநேரத்தில், அக்கட்சியில் வெற்றி பெற்ற வேட்பாளர்களில் ஒருவர் சபாநாயகராக நியமிக்கப்பட வேண்டும்.
நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, சபாநாயகர் வாக்களிக்க முடியாது என்பதால், மேலும் ஒரு இடம் குறையும். அப்படி, பார்க்கும்போது, த.வெ.க.வுக்கு பெரும்பான்மையை நிரூபிக்க மேலும் 12 உறுப்பினர்களின் ஆதரவு தேவை.
தற்போதைய நிலையில், தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு 6 இடங்களும், இரு கம்யூனிஸ்டு கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகள் வீதம் 4 இடங்களும்,
தே.மு.தி.க.விற்கு 1 இடமும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கிற்கு 2 இடங்களும், விடுதலை சிறுத்தை கட்சிக்கு 2 இடங்களும் கிடைத்துள்ளன.
தி.மு.க., அ.தி.மு.க. இரு கூட்டணிகளிலும் உள்ள பிற கட்சிகளின் ஆதரவு கிடைத்தால், த.வெ.க.விற்கு கூடுதலாக 21 இடங்கள் கிடைக்கும்.
அதன்படி கணக்கிடும்போது 108+21 என்றளவில் 129 இடங்களை பெற முடியும். ஆனால், அவ்வளவு கட்சிகளின் ஆதரவும் த.வெ.க.வுக்கு தேவையில்லை. 12 உறுப்பினர்களின் ஆதரவே போதுமானது.
இந்த கணக்கு ஒருபுறம் இருக்க, மற்றொரு புறம் தமிழக கவர்னர் ஆர்.வி.அர்லேகர் நாளை சென்னை கிண்டியில் உள்ள மக்கள் மாளிகைக்கு வருகை தருகிறார்.
தமிழகத்தில் ஆட்சி அமைக்க த.வெ.க.வுக்கு 2 வாய்ப்புகளை அவர் வழங்குவார். ஒன்று, த.வெ.க. தலைவர் விஜய்யை அழைத்து, சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க கூறுவார்.
அல்லது, தனக்கு ஆதரவு தரும் கட்சிகளிடம் இருந்து கடிதங்களை பெற்று, அதை தன்னிடம் வழங்கும்படி சொல்வார்.
118 இடங்களுக்கு மேல் ஆதரவு கிடைத்தால், த.வெ.க.வுக்கு ஆட்சி அமைக்கும் உரிமையை ஆளுநர் வழங்குவார். அவ்வாறு ஆதரவு கிடைக்காமல் போனால், த.வெ.க.வுக்கு ஆட்சி அமைக்கும் உரிமை கிடைக்காமல் போகும்.
அதுபோன்ற நிலைமை ஏற்பட்டால், இரண்டாவதாக அதிக இடங்களை பெற்றுள்ள தி.மு.க.வை ஆட்சி அமைக்க கவர்னர் கோருவார்.
அவர்களாலும் ஆட்சி அமைக்க முடியாமல் போனால், அடுத்த 6 மாதங்கள் தமிழகத்தில் ஆளுநர் ஆட்சி நடைபெறும். அதன் பின்னர் சட்டசபை தேர்தல் 234 தொகுதிகளுக்கும் மீண்டும் நடைபெறும்.
இந்தியா ஒடிசா மாநிலம் குசலிங்கான் கிராமத்தில், தனது உரிமையாளர் உயிரிழந்த சோகத்தில் மாடு ஒன்று 15 நாட்களாக உணவு, தண்ணீர் அருந்தாமல் அழுதுகொண்டே இருக்கும் உருக்கமான சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
மாட்டை விற்பனை செய்ய முயன்றபோது, எதிர்பாராதவிதமாக மாடு தாக்கியதில் அதன் உரிமையாளர் படுகாயமடைந்து உயிரிழந்தார்.
இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, அந்த மாடு உணவு மற்றும் தண்ணீர் எதையும் உட்கொள்ளாமல், கண்ணீருடன் தனது உரிமையாளரின் நினைவாகவே அதே இடத்தில் சுற்றித் திரிவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் உரிமையாளரின் உயிரிழப்பால் அன்ன ஆகாரம் இன்றி வாடும் ஐந்தறிவு ஜீவனின் செயல் சமூகவலைத்தளத்தில் வைரலாகி வரு கின்றது
சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை இன்று (05.05.2026) வீழ்ச்சியை பதிவு செய்துள்ளதாக தெரியவருகிறது. அதன்படி, ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 4521.09 அமெரிக்க டொலராக விற்பனை செய்யப்படுகிறது.
இதேவேளை இலங்கையில் தங்கத்தின் விலை நேற்றுடன் ஒப்பிடுகையில் மேலும் குறைவடைந்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
நேற்று (04.05.2026) 24 கரட் தங்க பவுண் ஒன்று 392,000 ரூபாயாக விற்பனையாகியிருந்த நிலையில், இன்று 4000 ரூபாயால் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 388,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 357,000 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 48,500 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 44,625 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணம் கோப்பாயில் இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.
கோப்பாய் பிரதேச செயலகத்திற்கு நேற்று(04.05.2026) நள்ளிரவு மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த இரு இளைஞர்கள் வேக கட்டுப்பாட்டை இழந்து வீட்டின் மதிலுடன் மோதியதில் குறித்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கோப்பாய் பொலிஸார் விசாரணை
யாழ்ப்பாணத்திலிருந்து பருத்தித்துறை நோக்கிப் பயணித்தவேளை குறித்த விபத்து இடம் பெற்றுள்ளது.
இதன்போது கரவெட்டி வடக்கைச் சேர்ந்த சிவதாசன் துசிந்தன் (22), ஏழுமலை துசாந்தன் (24) ஆகிய இரண்டு இளைஞர்கள் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளனர்.
இருவரதும் சடலமும் பிரேத பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
விபத்து சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
புத்தளம் – மதவக்குளம் வீதியில், ஆனமடுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கம்மன்தலுவ பிரதேசத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார்.
நேற்றுமுன்தினம்(03.05.2026) மாலை அதிவேகமாகப் பயணித்த பல்ஸர் ரக மோட்டார் சைக்கிள் ஒன்று, வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி அருகில் இருந்த மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
விபத்தின் வீரியம் காரணமாக மோட்டார் சைக்கிள் மின்கம்பத்தின் நடுப்பகுதியில் சிக்கி பலத்த சேதமடைந்துள்ளது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
அவருடன் பயணித்த மற்றைய இளைஞர் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக புத்தளம் ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
அதிவேகமே இந்த விபத்துக்குப் பிரதான காரணம் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது என்று ஆனமடுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆனமடுவ பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
நாவலப்பிட்டி – கெடபுலாவில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச்சென்ற வான் ஒன்று வீதியை விட்டு விலகிச்சென்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (05.05.2026) காலை 7.00 மணியளவில் வீதியை விட்டு விலகி வான் விபத்துக்குள்ளாகியுள்ளது.
நாவலப்பிட்டி – கெட்டபுலாவிலிருந்து நாவலப்பிட்டி ஹரங்கல நோக்கி பாடசாலை மாணவர்களை ஏற்றிச்சென்ற வான் நாவலப்பிட்டி திஸ்பனே சந்தி பகுதியில் விபத்திற்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் காயமடைந்த 13 பேர் நாவலப்பிட்டி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அவர்களில், 11மாணவிகளும் இரண்டு மாணவர்களும் 7 முதல் 10 வயதுக்குட்பட்டவர்கள் என நாவலப்பிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வானின் சாரதியும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், நாவலப்பிட்டி பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
யாழில் கிணற்றில் தவறி விழுந்த யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று முன் தினம் (01.05.2026) பதிவாகியுள்ளது. ஊர்காவற்துறை – மெலிஞ்சிமுனை பகுதியைச் சேர்ந்த அனிஸ்ரன் மேரி அபிநயா (வயது 19) என்ற யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
யுவதி இளவாலை திருக்குடும்ப கன்னியர் மடத்தில் கடந்த மூன்று மாதங்களாக பணியாற்றி வந்த நிலையில் தவறி கிணற்றினுள் விழுந்துள்ளார்.
இதனையடுத்து அவர் மீட்கப்பட்டு தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போது அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
களுத்துறை தெற்கு கடற்கரையில் ஆசிரியர் ஒருவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த ஆசிரியர் இறந்த மறுநாள் கண்டெடுக்கப்பட்டதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்தவர பண்டாரகம, வீதியகொட, கனத்கொடவைச் சேர்ந்த நதீஷானி தரங்கிக அமரநாயக்க (42) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இவர் மொரகஹஹேன பகுதியில் உள்ள ஆரம்பப்பாடசாலை ஆசிரியராகப் பணிபுரிந்து வந்துள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது.
குறித்த ஆசிரியை ஒரு குழந்தையின் தாய் என்றும், அவரது கணவர் பிரபல பாடசாலையொன்றின் தலைமை நடன ஆசிரியர் என்பதும் தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கந்தளாய் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் செயல்பட்டு வரும் சில சிகை அலங்கார நிலையங்களில், பாடசாலை மாணவர்களுக்கு முறையற்ற விதத்தில் முடி வெட்டப்படுவதால், மாணவர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாகப் பெற்றோர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
அண்மைக் காலமாக கந்தளாய் நகர் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள சில சிகை அலங்கார நிலையங்களில், மாணவர்களின் விருப்பத்திற்கிணங்கவோ அல்லது சிகை அலங்கார நிபுணர்களின் தன்னிச்சையான முடிவின் பேரிலோ, பல்வேறு நவீன (Trending) பாணிகளில் முடி வெட்டப்படுகின்றது.
இவ்வாறு செய்யப்பட்ட சிகை அலங்காரங்கள் பாடசாலை ஒழுக்க விதிமுறைகளுக்கு முரணாக இருப்பதால், மாணவர்கள் பாடசாலைகளில் அதிபர்களாலும் ஆசிரியர்களாலும் கடும் எச்சரிக்கைக்கு உள்ளாகின்றனர்.
சில சந்தர்ப்பங்களில், மாணவர்கள் பாடசாலைக்குள் அனுமதிக்கப்படாமல் திருப்பி அனுப்பப்படும் நிலையும் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்படுகின்றன என்றும், அவர்கள் கல்வியை விட நாகரீகத்தில் அதிக ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளதாகவும் பெற்றோர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
மேலும், முறையற்ற வகையில் முடி வெட்டப்பட்ட மாணவர்களை மீண்டும் சிகை அலங்கார நிலையங்களுக்கு அழைத்துச் சென்று, பாடசாலை விதிமுறைகளுக்கு ஏற்ப திருத்த முயற்சிக்கும் போது, அதற்காக மறுபடியும் முழுமையான கட்டணம் வசூலிக்கப்படுவதாக பெற்றோர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
தற்போதைய பொருளாதார சூழலில், ஒரே சேவைக்காக இருமுறை செலவு செய்ய வேண்டிய நிலை, சாதாரண குடும்பங்களுக்கு பெரும் சுமையாக மாறியுள்ளது.
எனவே, சிகை அலங்கார நிலைய உரிமையாளர்கள், தங்களை நாடி வருபவர்கள் பாடசாலை மாணவர்கள் என்பதை உணர்ந்து, அவர்களுக்கு பொருத்தமான மற்றும் ஒழுக்க விதிமுறைகளுக்கு இணங்கும் முறையில் முடி வெட்டுவதை உறுதி செய்ய வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அத்துடன், இந்த விடயத்தில் பிரதேச செயலகம், பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தலையிட்டு, சிகை அலங்கார நிலையங்களுக்கு தெளிவான வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும் எனவும்,
மாணவர்களின் ஒழுக்கத்தையும் பெற்றோரின் பொருளாதாரத்தையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் பெற்றோர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
மொனராகலை, வெல்லவாய பகுதியில் நேற்று (03) காலை ஏற்பட்ட வீதி விபத்தில் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். அறநெறி பாடசாலை சென்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மஹஆரகம சிரிபுர பிரதேசத்தை சேர்ந்த, 9ஆம் தரத்தில் கல்வி பயின்ற சதிலி நிபுணிகா என்ற 14 மாணவியே உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.
வெஹெரயாய கங்காராம விகாரையில் அமைந்துள்ள அறநெறி பாடசாலைக்குத் தனது சகோதரனுடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போதே, எதிரே வந்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்துடன் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த மாணவியும் அவரது சகோதரரும் ஹந்தபானாகல பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மாணவி உயிரிழந்துள்ளார்.
பேருந்து சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மாணவியின் மரணம் தொடர்பான மரண பரிசோதனை மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் நடைபெறவுள்ளது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தென்னிலங்கையில் ஆத்திரத்தில் தனது வீட்டை விட்டு வெளியேறியதாக கூறப்படும் ஆசிரியையின் சடலம், ஒரு நாள் கழித்து களுத்துறை தெற்கு கடற்கரையில் கண்டுபிடிக்கப்பட்டது.
உயிரிழந்தவர் பண்டாரகம, வீதியகொடவை சேர்ந்த ஆசிரியையாக பணி புரியும் 42 வயதான நதீஷானி தரங்கிக அமரநாயக்க என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
ஒரு பிள்ளையின் தாயான அவரது கணவரும் ஒரு பாடசாலை நடன ஆசிரியராக பணி புரிகிறார் எனவும் தெரியவந்துள்ளது.
கடந்த 29ஆம் திகதியன்று, உயிரிழந்த ஆசிரியை தான் முன்பு கற்பித்த ஒரு பாடசாலையில் தனது தோழிக்காக திருமண நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தார்.
அந்த விழாவில் அவர் கலந்து கொண்டபோதிலும், அவரது பணி காரணமாக அவரது கணவரால் கலந்துகொள்ள முடியவில்லை.
இதன் காரணமாக இருவருக்கும் இடையே சில மனக்கசப்புகள் ஏற்பட்டதாகவும், இதற்கிடையில், 30ஆம் திகதியன்று, உயிரிழந்த ஆசிரியையின் கணவர், அவரது பாடசாலை சம்பந்தமாக கொழும்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் எனவும் தெரியவந்தது.
அந்த விழாவில் கலந்துகொள்ள வேண்டாம் என உயிரிழந்த ஆசிரியை பலமுறை அவரிடம் கூறியிருந்தார்.
அன்று தன் கணவருக்குப் பலமுறை தொலைபேசியில் பேசியிருந்த அந்த ஆசிரியை, வீட்டை விட்டு கோபமாக வெளியேறியுள்ளார்.
அவரைக் கண்ட அவரது மகனும் தாயும், போக வேண்டாம் என கூறி அவரைப் பின்தொடர்ந்தனர். ஆனால், தன் தாய் சென்ற வேகத்தில் பாட்டியுடன் அவரால் செல்ல முடியவில்லை.
மேலும், தாய் முச்சக்கர வண்டியில் சென்றுவிட்டதாக மகன் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் வீட்டிற்கு வந்த கணவர், தன் மனைவியின் தொடர்ச்சியான தொலைபேசி அழைப்புகள் மூலம், அவர் வீட்டை விட்டு வெளியேறி, சிறிது தூரம் நடந்து சென்று ஒரு முச்சக்கர வண்டியில் ஏறிச் சென்றுவிட்டதை அறிந்து கொண்டார்.
அவர் அன்று நள்ளிரவு சுமார் 12.40 மணியளவில் மொரகஹேன முறைப்பாடு செய்தார். இந்த நிலையில் முதலாம் திகதி களுத்துறை தெற்குக் கடற்கரையில் பெண்ணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.
கணவரும் தாயாரும் அழைக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் உயிரிந்தவர் காணாமல் போன பெண் என உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொழும்பின் புறநகர் பகுதியில் இன்று அதிகாலையில் ஏற்பட்ட கோர விபத்தில் இரு பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.
அத்துருகிரிய – கொட்டாவ வீதியில் பகுதியில் வேகமாக சென்ற மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்த நிலையில், அருகிலுள்ள மதில் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
அத்துருகிரிய நோக்கி சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டதாகக் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தனியார் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் பட்டம் பயிலும் 20 வயதுடைய மாணவனும் ஹோமாகம பகுதியில் உள்ள வாகனத் திருத்தகத்தில் பணிபுரிந்து வந்த இளைஞனுமே உயிரிழந்துள்ளனர்.
விபத்தில் படுகாயமடைந்த இருவரும், ஹோமாகம ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது ஏற்கனவே உயிரிழந்திருந்ததாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஹெட்டிபொல – படுவஸ்நுவர வீதியின் கொட்டன்பிட்டிய சந்தியில் இடம்பெற்ற விபத்தில் இளம் செவிலியர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்தானது நேற்றுமுன்தினம் (02.05.2026) இடம்பெற்றுள்ளது.
சிலாபம் பொது வைத்தியசாலையின் 12ஆம் இலக்க வார்டில் பணியாற்றிய இளம் செவிலியரே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.
நிகவெரட்டிய பணிமனைக்குச் சொந்தமான இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்து ஒன்று, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியில் சென்ற லொறி மற்றும் இரண்டு மோட்டார் சைக்கிள்களுடன் மோதியுள்ளது.
பின்னர் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் வீதியோரக் கடையொன்றுக்குள் பேருந்து புகுந்துள்ளது.
அந்த நேரத்தில், சிலாபம் பொது வைத்தியசாலையின் பணிக்குச் செல்வதற்காக அந்தக் கடையின் அருகில் பேருந்திற்காக காத்திருந்த ஹசித மலவிசிங்க என்பவர் இந்த விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
விபத்துத் தொடர்பாக பேருந்து சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் சாரதியின் கவனக்குறைவா அல்லது பேருந்தின் இயந்திரக் கோளாறா விபத்திற்கு காரணம் என்பது குறித்து ஹெட்டிபொல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.