பிரித்தானியாவில் 230000 பவுண்டுகள் மோசடி செய்த இலங்கையருக்கு நேர்ந்த கதி!!

இலங்கையைச் சேர்ந்த சமூக ஊடக இன்ஃப்ளூவென்சர் ஒருவர், பிரித்தானியா பற்றிய தவறான தகவல்களைப் பதிவேற்றும் முகப்புத்தக பக்கங்களை நடத்தி 230,000 பவுண்டுகள் வரை சம்பாதித்ததாக தெரிய வந்துள்ளது.

குறித்த நபரின் முகப்புத்தக பக்கங்களில் புலம்பெயர்ந்தோருக்கு எதிராகவும், இஸ்லாமிய வெறுப்பு சார்ந்த கருத்துக்களும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

இலங்கையைச் சேர்ந்த குறித்த நபர் மற்றும் அவரது மாணவர்கள் இணைந்து நூற்றுக்கும் மேற்பட்ட முகப்புத்தக பக்கங்களை நடத்தி வருகின்றனர்.

அதில் தொழிலாளர் கட்சியை இஸ்லாமிய மக்கள் கைப்பற்றி, நடத்தி வருவதாகவும், லண்டனில் ஆணைய குடியிருப்புகள் அனைத்தும் இஸ்லாமியர்களுக்கு மட்டுமே ஒதுக்கப்படுவதாகவும் தகவல் பகிரப்படுகிறது.

முகப்புத்தக பக்கங்களை உருவாக்குவதும், அதில் எவ்வாறு சம்பாதிப்பது என்பது தொடர்பில் பயிற்சி அளிக்கும் மையம் ஒன்றைக் குறித்த நபர் நடத்தி வருகிறார்.

பெரும்பாலும் வயதானவர்களை இலக்கு வைக்கவும், அவர்களே புலம்பெயர் மக்களை விரும்புவதில்லை என்றும் தமது மாணாக்கர்களுக்கு அவர் வலியுறுத்துகிறார்.

தமது முகப்புத்தக பக்கங்களில் தென்படும் விளம்பரங்கள் ஊடாக குறித்த நபரும், அவரது மாணவர்களும் பணம் சம்பாதிக்கின்றனர்.

மேலும் இவர்கள், 1.6 மில்லியன் பயனர்களைக் கொண்ட 128 முகப்புத்தக பக்கங்கள் மற்றும் குழுக்களை நடத்தி வருவதாக புலனாய்வு இதழியல் பணியகத்தின் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அத்துடன், முகப்புத்தக உள்ளிட்ட சமூக ஊடகத்தில் எவ்வாறு சம்பாதிப்பது தொடர்பில் தாம் ஒரு நிபுணர் என குறிப்பிடும் குறித்த நபர், உலகம் முழுவதும் 2,500க்கும் மேற்பட்ட மாணவர்களுக்குப் பயிற்சி அளித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த மார்ச் மாதம் அவரின் ஒரு முகப்புத்தக பக்கத்தில், லண்டன் மேயர் சர் சாதிக் கான் முஸ்லிம்களுக்கு மட்டுமே கிடைக்கும் வகையில் 40,000 கவுன்சில் வீடுகளைக் கட்டுவதாக உறுதியளித்துள்ளார் என பதிவு செய்திருந்தார்.

அதுமட்டுமின்றி, அந்த ஒரு முகப்புத்தக பக்கத்திலிருந்து மட்டும் மாதம் 1000 பவுண்டுகளுக்கு மேல் சம்பாதிப்பதாகக் குறித்த நபர் தெரிவித்துள்ளதுடன்,

புலம்பெயர் விவகாரம் உள்ளிட்ட அரசியல் முக்கியத்துவம் உள்ள கருத்துக்களை அதிகமாகப் பதிவேற்றம் செய்ய வேண்டும் என தமது மாணவர்களுக்கு அவர் காணொளி ஒன்றில் அறிவுறுத்துகிறார்.

மேலும், இலங்கையர்கள் மட்டுமல்ல, இந்தியர்களும் பிரித்தானியாவில் குடியிருப்பதை அங்குள்ள மக்கள் விரும்புவதில்லை எனக் காணொளி ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் ஸ்டார்மர் பதவி விலகுகிறார் என்ற பொய்த்தகவலை முதல் முறையாகக் குறித்த நபர் தமது முகப்புத்தக பக்கம் ஒன்றில் வெளியிட்டிருந்தார்.

ஆனால், புலனாய்வு இதழியல் பணியகம் அவரை நேரடியாகத் தொடர்பு கொண்டு விளக்கம் கேட்ட நிலையில், “இது தவறான புரிதல் என்றும், வன்முறையைப் பரப்புவதை நாங்கள் ஊக்குவிப்பதில்லை என்றும் தெரிவித்துள்ளதுடன், 128 பேஸ்புக் பக்கங்களைத் தாம் நிர்வகிக்கவில்லை” எனவும் பதிலளித்துள்ளார்.

வெளிநாடொன்றில் பல மில்லியன் ரூபாவை அதிர்ஷ்டமாக பெற்ற இலங்கை இளைஞன்!!

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வசிக்கும் இலங்கையர் ஒருவர் அந்நாட்டில் நடந்த லொத்தர் குலுக்கல்லில் ஒரு லட்சம் திர்ஹம்களை வென்றுள்ளார். ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வசிக்கும் இலங்கையை சேர்ந்த வெளிநாட்டு ஊழியர் ஒருவர், முதலில் 100 திர்ஹாம் வெற்றி பெற்றிருந்தார். தற்போது பெரிய தொகையான 100,000 திர்ஹாம் வெற்றி பெற்றுள்ளார்.

அடுத்தகட்டமாக 100 மில்லியன் திர்ஹாம் பரிசை நோக்கி தனது கனவுகளைத் துணிச்சலுடன் வளர்க்கும் நடவடிக்கையில் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

29 வயதான யாசித பிரசன்ன என்ற இளைஞர், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசாங்கத்தால் ஒழுங்குபடுத்தப்பட்ட லொத்தசீட்டுக் குலுக்கலில், வெற்றியாளராக பரிசை பெற்றுள்ளார்.

நான் ஒரு நாள் இன்ஸ்டாகிராமில் ஒரு விளம்பரத்தைப் பார்த்து, பின்னர் UAE லொத்தரில் பதிவு செய்தேன் என இலங்கை இளைஞன் குறிப்பிட்டுள்ளார்.

நான் நேரடி குலுக்கலைப் பார்க்கவில்லை. எனக்கு ஒரு மின்னஞ்சல் வந்தது, அதை நான் அழுத்தினேன். அதில் நான் 100,000 திர்ஹம்களை வென்றதாக குறிப்பிடப்பட்டிருந்தது. நான் மிகவும் உற்சாகம் அடைந்தேன்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அம்மா மற்றும் அப்பாவோடு இலங்கை செல்லத் திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். நான் ஒரு தொழிலில் முதலீடு செய்யவும் திட்டமிட்டுள்ளேன்.

அடுத்த முறை, இன்னும் மிக்பெரிய பரிசை வெற்றி பெற எதிர்பார்த்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

100,000 திர்ஹம் என்பது இலங்கையின் தற்போதைய நாணய பெறுமதியின்படி சுமார் 83 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!!

இலங்கையில் நேற்று 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 327,000 ரூபாயாக விற்பனையாகி வந்தது.

இந் நிலையில், இன்று (19) 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 2000 ரூபாயால் அதிகரித்துள்ளதாக, இலங்கை நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி,

24 கரட் தங்கம் பவுண் ஒன்று 329,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 302,700 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 41,125 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 37,838 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

கடும் மின்னல் தாக்கம் குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை!!

ஊவா, தென், சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் நுவரெலியா மாவட்டத்திலும் கடும் மின்னல் தாக்கத்துடன் இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த எச்சரிக்கையானது இன்று புதன்கிழமை (19) பிற்பகல் 11.30 மணி முதல் அமுலில் இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் பலத்த காற்றும் வீசக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மின்னல் தாக்கத்தினால் ஏற்படும் விபத்துக்களை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

இலங்கையில் கூகுள் பே சேவையை வழங்கும் கொமர்ஷல் வங்கி!!

கொமர்ஷல் வங்கி டிஜிட்டல் கொடுப்பனவுகளில் பிரபலமான கூகுள் மற்றும் விசா ஆகியவற்றுடன் இணைந்து, நாட்டில் முதன்முதலாகத் தனது வடிக்கையாளர்களுக்கு கூகுள் பே சேவையைச் சாத்தியமாக்கியுள்ளது.

கொமர்ஷல் வங்கி கூகுள் பே சேவையைச் செயல்படுத்திய இலங்கையின் ஒரே வங்கி என்ற பெருமையைப் பெற்றுள்ளது. இந்த உலகத் தரத்திலான மொபைல் கட்டணத் தீர்வு மூலம் தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு முன்னோடி நன்மையினை (first-mover advantage) வழங்கியுள்ளது.

கூகுள் மற்றும் விசா கூட்டாண்மை, விசாவின் நம்பகமான உலகளாவிய கட்டண வலையமைப்பு, மேம்பட்ட டோக்கனீசேஷன் (Tokenization) தொழில்நுட்பம், கூகுளின் பாதுகாப்பான மற்றும் எளிமையான இடைமுகம் ஆகியவற்றை கொமர்ஷல் வங்கியின் வலுவான டிஜிட்டல் வங்கிச் சூழலுடன் தடையின்றி ஒருங்கிணைக்கிறது.

கொமர்ஷல் வங்கியின் விசா டெபிட் மற்றும் கிரெடிட் கார்ட் வைத்திருப்பவர்கள், தற்போது தங்கள் அட்டைகளை கூகுள் வாலட்டில் (Google Wallet) இலகுவாகச் சேர்க்கலாம்.

ஒருமுறை கடவுச்சொல் (OTP) அல்லது அழைப்பு மையம் மூலம் சரிபார்த்து, தங்கள் அண்ரோய்ட் ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்தி பாதுகாப்பான, தொடர்பு இல்லாத (contactless) கட்டணங்களைச் செலுத்த முடியும்.

எங்கு வேண்டுமானாலும் கட்டணம்: விசா கார்ட் ஏற்றுக்கொள்ளப்படும் உள்ளூர் மற்றும் சர்வதேச ரீதியில் உள்ள NFC-வசதி கொண்ட (NFC-enabled) எந்தவொரு contactless-enabled Point-of-Sale (POS) கருவியிலும் ஸ்மார்ட்போனைத் தட்டுவதன் மூலம் பணம் செலுத்தலாம்.

அட்டை தேவையில்லை: அட்டை வைத்திருப்பவர்கள் இனி தங்கள் உடல் அட்டைகள் (physical cards) அல்லது பணத்தை எடுத்துச் செல்லத் தேவையில்லை.

NFC-வசதி கொண்ட தங்கள் Android ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்தித் தொட்டுப் பணம் செலுத்தலாம், இது பாதுகாப்பான மற்றும் எளிதான கட்டண அனுபவத்தை வழங்குகிறது.

கொமர்ஷல் வங்கி இந்த டோக்கனீசேஷன் சேவைக்காக மூன்றாம் தரப்பு சேவை வழங்குநரான IDEMIA உடன் மூலோபாய ரீதியாக இணைந்துள்ளதுடன், விசாவின் டோக்கன் சேவையை (Visa’s Token Service – VTS) பயன்படுத்துகிறது.

இந்தத் தொழில்நுட்பம், உண்மையான 16 இலக்க அட்டை எண்ணுக்குப் பதிலாக ஒரு தனித்துவமான டிஜிட்டல் டோக்கனைப் பயன்படுத்துகிறது.

இதன் மூலம், பயனரின் முக்கியமான தரவுகள் வணிகர்களுடன் பகிரப்படாமல் அல்லது சாதனத்தில் சேமிக்கப்படாமல் இருப்பது உறுதி செய்யப்படுகிறது.

இந்தக் கட்டணச் சேவையை அறிமுகப்படுத்த, வங்கியின் கார்ட் சுவிட்ச் விற்பனையாளரான Euronet இன் கட்டண உள்கட்டமைப்பை கொமர்ஷல் வங்கி பயன்படுத்தியுள்ளது. இது நம்பகமான மற்றும் பாதுகாப்பான பரிவர்த்தனை செயலாக்கத்தை உறுதி செய்கிறது.

கொமர்ஷல் வங்கியின் இந்த நடவடிக்கை, இலங்கையின் டிஜிட்டல் கட்டணச் சந்தையில் ஒரு மைல்கல்லாகக் கருதப்படுகிறது.

கார் மோதி உழவு இயந்திரத்தில் பயணித்த இருவர் பலி!!

மஹியங்கனை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளனர்.

திம்புலாகல – மஹியங்கனை பிரதான வீதிக்கு, குறுக்கு வீதி ஒன்றிலிருந்து சிறியரக உழவு இயந்திரம் திடீரென ஏறியமையால் , பிரதான வீதியில் இருந்து வந்த கார் , அதனுடன் மோதி விபத்துக்குள்ளானது.

விபத்தின் போது உழவு இயந்திரத்தில் பயணித்த இருவர் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளனர் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

 

வீதி விபத்தில் ஒருவர் படுகாயம்!!

நானுஓயா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில் நானுஓயா பங்கலாவத்த பகுதியில் வேன் – மோட்டார் சைக்கிள் மோதி விபத்திற்குள்ளாகியது. இந்த விபத்து இன்று புதன்கிழமை (19) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

தலவாக்கலை பகுதியிலிருந்து நுவரெலியா நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும் நுவரெலியாவிலிருந்து நானுஓயா நோக்கி பயணித்த வேனும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்திச்சென்ற நபர் படுகாயமடைந்த நிலையில் 1990 அவசர நோயாளர் காவு வண்டியில் ஆரம்ப சிகிச்சை வழங்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்,

இதனையடுத்து வேனின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். விபத்து தொடர்பாக நானுஓயா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

அரச வேலைக்கு காத்திருப்போருக்கு முக்கிய தகவல்!!

அரச சேவை, மாகாண அரச சேவை மற்றும் கூட்டுத்தாபனங்கள் மற்றும் சட்டரீதியான சபைகளுக்கு சுமார் 70,000 பேரை ஆட்சேர்ப்பு செய்வதற்கான அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது.

பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சந்தன அபேரத்ன இதனை தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று (19.11.2025) நடைபெற்ற பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் 2026 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டு மசோதா மீதான குழு அமர்வுகளின் விவாதத்தின் போது அவர் இதனைத் குறிப்பிட்டுள்ளார்.

அரச ஊழியர்களில் பட்டதாரிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்ய அதிக எண்ணிக்கையிலான வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதற்கமைய,12,309 பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கான ஒப்புதல் பெறப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

அரச சேவைக்குத் தேவையான ஆட்சேர்ப்பு மற்றும் அதன் தொடர்ச்சிக்கான பரிந்துரைகளை சமர்ப்பிப்பதற்கான இடைக்கால நடவடிக்கையாக பிரதமரின் செயலாளர் தலைமையில் அரச சேவை ஆட்சேர்ப்பு மறு ஆய்வுக் குழு நிறுவப்பட்டுள்ளது.

அந்த குழு அளிக்கும் பரிந்துரைகளை அமைச்சரவை பரிசீலித்து தேவையான ஆட்சேர்ப்புகளுக்கு அனுமதி வழங்கும் என்றும் சந்தன அபேரத்ன மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

காதலிக்க மறுத்த பள்ளி மாணவியை கொலை செய்த இளைஞன்!!

ராமேஸ்வரத்தில் காதலிக்க மறுத்த 12ஆம் வகுப்பு மாணவியை இளைஞர் ஒருவர் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அடுத்த சேராங்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் மாரியப்பன்.

இவருக்கு இரண்டு மகள்கள் உள்ள நிலையில் மூத்த மகள் ஷாலினி ராமேஸ்வரம் பெண்கள் அரசு மேல்நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்த முனியராஜ்(21) என்ற இளைஞர் மாணவி ஷாலினியை காதலிக்குமாறு கடந்த சில நாட்களாக வற்புறுத்தி வந்துள்ளார்.

இதுகுறித்து, அம்மாணவி தந்தையிடம் கூறிய நிலையில் முனியராஜன் வீட்டிற்கு சென்ற மாரியப்பன் இளைஞரை கண்டித்துள்ளார்.

ஆனால், மாணவி காதலிக்க மறுத்ததால் ஆத்திரம் அடைந்த இளைஞர் முனியராஜ் பள்ளி சென்ற மாணவியை கத்தியால் குத்தியதில் அம்மாணவி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் மாணவியின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனையில் அனுப்பி வைத்தனர்.

மேலும் மாணவியை கத்தியால் குத்திய இளைஞர் முனியராஜை கைது செய்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீதியைக் கடக்கும்போது இந்தியப் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!!

அவுஸ்திரேலியாவில், சாலையைக் கடக்கும்போது கார் மோதி பலியானார் இந்தியப் பெண்ணொருவர். கூடுதல் சோகம் என்னவென்றால், அவர் எட்டு மாத கர்ப்பிணி!

கடந்த வெள்ளிக்கிழமை, அதாவது, நவம்பர் மாதம் 14ஆம் திகதி இரவு, அவுஸ்திரேலியாவில் வாழும் சமன்விதா தரேஷ்வர் (33), சிட்னியிலுள்ள Hornsby என்னுமிடத்தில் சாலையைக் கடக்க முயன்றுள்ளார்.

எட்டு மாத கர்ப்பிணியான சமன்விதா சாலையைக் கடக்க முயல்வதைக் கண்ட கியா கார்னிவல் கார் ஒன்றின் சாரதி, அவர் சாலையைக் கடப்பதற்கு வசதியாக தனது காரின் வேகத்தைக் குறைத்துள்ளார்.

துரதிர்ஷ்டவசமாக, அவரது காருக்குப் பின்னால் ஒரு பி எம் டபிள்யூ கார் வேகமாக வந்துகொண்டிருந்திருக்கிறது. வேகமாக வந்துகொண்டிருந்த அந்த பி எம் டபிள்யூ கார் இந்த கியா கார் மீது மோத, கியா கார் சமன்விதா மீது மோதியுள்ளது.

படுகாயமடைந்த சமன்விதாவை அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றும், அவரையோ, அவரது கர்ப்பத்திலிருந்த குழந்தையையோ மருத்துவர்களால் காப்பாற்றமுடியாமல் போயுள்ளது.

அந்த பி எம் டபிள்யூ காரை, 19 வயதாகும் ஆரோன் (Aaron Papazoglu) என்னும் இளைஞர் ஓட்டிவந்த நிலையில், அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சமன்விதா, இந்தியாவின் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் என கூறப்படுகிறது. அவரும் அவரது கணவரான வினீத்தும் அவுஸ்திரேலியாவில் வீடு ஒன்றைக் கட்டுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நிலையில், இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

காதலிக்க மறுத்த மாணவியைக் குத்திக் கொன்ற கொடூரம்!!

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தைச் சேர்ந்த 12ம் வகுப்பு மாணவி ஷாலினி (17) இன்று காலை வழக்கம் போல பள்ளிக்கு சென்றுக் கொண்டிருந்த போது, அதே பகுதியில் வசிக்கும் முனிராஜ் என்பவர், பள்ளி மாணவியை தொடர்ந்து பின் சென்று, காதலிக்க வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.

பல நாட்களாக மாணவியைப் பின் சென்று காதலிக்க வலியுறுத்தி வந்த முனிராஜின் காதலை மாணவி ஷாலினி ஏற்காத நிலையில், இன்று காலை முனிராஜ் குடி போதையில் மாணவியை மறைத்து வைத்திருந்த கத்தியால் கழுத்தில் குத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கத்திகுத்துப் பட்டதில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்த மாணவியை, அருகிலிருந்தோர் ராமேசுவரம் அரசு மருத்துவமனையில் சேர்த்து முயற்சித்தனர். ஆனால் மருத்துவர்கள் பரிசோதனை செய்த போது மாணவி ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது தொடர்பான சம்பவத்தை அறிந்த காவல் துறையினர் விரைந்து சென்று, முனிராஜை கைது செய்து, மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொழும்பில் தாயை கொடூரமாக கொலை செய்த மகன் : விசாரணையில் அம்பலமான உண்மை!!

கொழும்பின் புறுநகர் பகுதியான கல்கிஸ்ஸ பகுதியில் தனது தாயை கொடூரமாக தாக்கி கொலை செய்த மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இரத்மலானை ஸ்ரீ ஞானேந்திரா வீதியைச் சேர்ந்த 67 வயது தாய் வயலட் வீரரத்ன என்ற தாயார் 7 நாட்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்ற பின்னர் உயிரிழந்துள்ளார்.

வர்த்தகரான 49 வயது மகன், தனது தாயை மிகவும் வலி மிகுந்த முறையில் கொலை செய்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வேலைக்கு செல்ல தயாராக இருந்து மகன், தனது தாயுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, தனது தாயின் கழுத்தில் தாக்கியதால், அவர் தரையில் விழுந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

பின்னர் சந்தேக நபர் வீட்டை விட்டு வெளியேறிய போது, தனது தாயார் அடிக்கடி மயக்கம் அடைவதால் அவரை குறித்து ஆராய்ந்து பார்க்குமாறு அயலவர்களிடம் கூறிவிட்டு சென்றுள்ளார்.

அதற்கமைய, அயலவர்கள் காலையில் வீட்டிற்குச் சென்று அவரைப் பரிசோதித்த போது, ​​அவர் தரையில் கிடப்பதைக் கண்டு, களுபோவில போதனா மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்ப ஏற்பாடு செய்தனர்.

இது குறித்து மகனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மாலையில் மகன் தனது அண்டை வீட்டாருடன் தாயை பார்க்க மருத்துவமனைக்குச் சென்ற போதிலும் அவர் மருத்துவமனைக்குள் சென்று பார்க்கவில்லை.

அவரது தாயார் 7 நாட்கள் மருத்துவமனையில் இருந்த போதிலும், அவர் மருத்துவமனைக்குள் சென்று பார்க்கவில்லை என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

மகனின் கூற்றுகளை அப்பகுதி மக்கள் நம்பிய நிலையில், பிரேத பரிசோதனையில் கழுத்து மற்றும் உள் உறுப்புகளில் ஏற்பட்ட காயங்களால் மரணம் நிகழ்ந்ததால், மரணத்திற்கான காரணம் சந்தேகத்திற்கிடமான மரணம் என்று தீர்மானிக்கப்பட்டது.

பின்னர் மகனே தாயாரை கொலை செய்தமை தெரிய வந்த நிலையில் நேற்றையதினம் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாடசாலை மாணவர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல் : எடுக்கப்பட்டுள்ள முக்கிய தீர்மானம்!!

பாடசாலை மாணவர்களின் காலணிகளை வாங்குவதற்காக கல்வி அமைச்சினால் வழங்கப்படும் வவுச்சர்கள் மூலம் உள்நாட்டு உற்பத்தியாளர்களின் உற்பத்திகளை வாங்குவதற்கான வாய்ப்பை வழங்குவதில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

இந்த திட்டத்தின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர், பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி ஆகியோரின் தலைமையில் கலந்துரையாடல் நடைபெற்றது.

கல்வி அமைச்சும் கைத்தொழில் மேம்பாட்டு அமைச்சகமும் இணைந்து புதிய திட்டமாக தொடங்கப்பட உள்ள இந்த திட்டம், 250க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகள்,

251-500 மாணவர்களைக் கொண்ட தோட்ட பாடசாலைகள், சிறப்புத் தேவைகளைக் கொண்ட குழந்தைகளைக் கொண்ட பாடசாலைகள் மற்றும் பிரிவேனா பாடசாலைகள் மற்றும் மாணவர்களின் சாதாரண மற்றும் துறவிய மாணவர் சமூகத்திற்கு இந்த வாய்ப்பை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த திட்டத்திற்கு வியாபார நிலையங்கள் மற்றும் ஆடை நிறுவனம் மேலும் கைத்தொழில் மேம்பாட்டு அமைச்சில் பதிவுசெய்யப்பட்ட உள்ளூர் உற்பத்தியாளர்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

உற்பத்தியாளர்கள் ஒரு வருட உத்தரவாதத்தின் கீழ் தரமான காலணிகளை வழங்க ஒப்புக்கொண்டுள்ளனர்.

மேலும் பாடசாலைகளுக்கு நேரடி விற்பனை செய்வதன் மூலம் மாணவர்கள் சரியான அளவிலான காலணிகளைத் தேர்வுசெய்ய முடியும் என்று அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தெரிவித்தார்.

இந்த திட்டத்தின் கீழ் மேற்கு மற்றும் தெற்கு மாகாணங்களில் உள்ள பாடசாலைகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

மேலும் சாத்தியக்கூறு ஆய்வுக்குப் பிறகு இந்த திட்டத்தை மற்ற மாகாணங்களிலும் செயல்படுத்துவது பொருத்தமானதாக இருக்கும் என்று பிரதமர் கூறினார்.

தென்னிலங்கையில் தம்பதி சுட்டுக்கொலை : விசாரணையில் வெளிவந்த தகவல்!!

தங்காலை, உணாகூருவ பகுதியில் திருமணமான தம்பதியினர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

சுட்டுக் கொல்லப்பட்ட இருவரும் வெளிநாட்டில் வசிக்கும் சக்தி வாய்ந்த போதைப்பொருள் கடத்தல்காரரான உணாகூருவே ஷாந்த என்பவரின் நெருங்கிய உறவினர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மீட்டியாகொட – கிரலகஹவெல பகுதியில் பெண் சுட்டுக் கொல்லப்பட்ட 24 மணி நேரத்திற்குள் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. தங்காலை, உணாகூருவ பகுதியில் உள்ள ஒரு கடையில் நேற்று மதியம் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த கடையை இருவரும் நடத்தி வந்தனர், மேலும் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பி சென்றுள்ளார். துப்பாக்கிச் சூடு தாக்குதலில் உயிரிழந்த தம்பதியினர் 68 மற்றும் 58 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இருவரும் உணாகூருவே ஷாந்தவின் மாமா மற்றும் அத்தை என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிச் சூடு நடந்த இடத்திலிருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் கைவிடப்பட்ட நிலையில், துப்பாக்கிச் சூடு நடத்தியவர் வந்த மோட்டார் சைக்கிள் கண்டுபிடிக்கப்பட்டது.

சீனிமோதர மற்றும் தங்காலையில் மூன்று லொறிகளில் இருந்து பாதுகாப்புப் படையினரால் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் சாந்தாவிற்கு சொந்தமானது என்பதும் தெரியவந்தது.

மேலும் இது தொடர்பான தகராறின் அடிப்படையில் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். எனினும் துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

உனகுருவே சாந்தாவுக்கும் கரந்தெனியே சுத்தாவுக்கும் இடையான முறுகலின் அடிப்படையில் இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

செவ்வந்தி தொடர்பில் பரபரப்புத் தகவலை வெளியிட்டுள்ள அரசாங்கம்!!

கொலைச்சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தி தொடர்பில் பல தகவல்கள் கிடைத்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

பல அரசியல்வாதிகளுக்கும் செவ்வந்திக்கும் தொடர்பு உள்ளமை விசாரணை மூலம் கண்டறியப்பட்டுள்ளது. இது குறித்து விரிவான விசாரணைகள் இடம்பெற்று வருவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் இந்தத் தகவலை வெளியிட்டார்.

அத்துடன் பாதாள குழுக்களுக்கு எதிரான நடவடிக்கை, போதை பொருள் ஒழிப்பு நடவடிக்கையும் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

நாட்டை அச்சுறுத்தும் பாதாள உலகக்குழுவினருக்கு எதிராக பொலிஸார் நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், சில தரப்பினருக்கு அது பாதிப்பை ஏற்படுத்துகிறது.

இதன்காரணமாக பொலிஸாருக்கு எதிராக பல்வேறு விமர்சனங்களை அவர்களை முன்வைக்கின்றனர்.

தலைமறைவாகி உள்ள பாதாள குழு உறுப்பினர்களுக்கு சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுவரையில் 80 பேருக்கு இவ்வாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அவர்களை நாட்டுக்கு இழுத்து வருவதற்கான அனைத்து இராஜதந்திர முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பயணிகளால் கைவிடப்பட்ட பொதிகளில் சிக்கிய மர்மம்!!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பயணிகளால் விட்டுச் செல்லப்பட்ட பொதிகளில் இருந்து போதை பொருள் தொகை ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது.

சுங்க அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்ட பொதிகள் மற்றும் பயணிகளால் கைவிடப்பட்ட உடமைகள் அடங்கிய கிடங்கில் குஷ் போதைப்பொருள் ஒரு தொகுதி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நேற்று சுங்க அதிகாரிகள் குழுவால் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் மதிப்பு 113,670,000 ரூபாவுக்கும் அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

இந்த சூட்கேஸ் மார்ச் 17 ஆம் திகதி காலை 09.45 மணிக்கு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் UL-405 இல் தாய்லாந்தின் பாங்காக்கில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த ஒரு பயணியால் எடுத்துச் செல்லப்பட்டு, விமான நிலைய வருகை முனையத்தில் விடப்பட்டது.

பின்னர், கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள சுங்க அதிகாரிகள் சூட்கேஸை விமான நிலையத்தில் கைவிடப்பட்ட பொதிகள் சேமிப்பு பகுதியில் வைத்து, பின்னர் கொழும்பு துறைமுகத்தில் பறிமுதல் செய்யப்பட்ட மற்றும் கைவிடப்பட்ட பொதிகள் கொண்ட அறைக்கு மாற்றியுள்ளனர்.

9 மாதங்களாக யாரும் சூட்கேஸைப் பெற முன்வராததால், சுங்க அதிகாரிகள் அதைத் திறந்து ஆய்வு செய்ய நடவடிக்கை மேற்கொண்டனர். அப்போது, ​​பொலிதீன் பொதிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 11 கிலோகிராம் 367 கிராம் குஷ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டது.

மேலதிக விசாரணைக்காக கொழும்பு பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளிடம் போதைப்பொருள் கையிருப்பை ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.