வவுனியா செட்டிகுளம் வீதிகளில் திரிந்த கால்நடைகள் பிடிப்பு : உரிமையாளர்களுக்கு பிரதேச சபை அவசர அறிவிப்பு!!

வவுனியா செட்டிகுளம் பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட பிரதான வீதிகளில் போக்குவரத்திற்கு இடையூறாகவும், விபத்துக்களை ஏற்படுத்தும் வகையிலும் திரிந்த கட்டாக்காலி கால்நடைகள் நேற்று (ஏப்ரல் 29) பிரதேச சபையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ளன.

கங்கன்குளம், செட்டிகுளம் மற்றும் முகத்தான்குளம் ஆகிய வீதிகளில் சுற்றித்திரிந்த கால்நடைகளே இவ்வாறு பிடிக்கப்பட்டு, தற்போது வெங்கலசெட்டிகுளம் பிரதேச சபை வளாகத்தில் கட்டி வைக்கப்பட்டுள்ளன.

குறித்த கால்நடைகளின் உரிமையாளர்கள், அவற்றுக்கான உரிய ஆவணங்களைச் சமர்ப்பித்து, தண்டப்பணங்களைச் செலுத்தித் தமது கால்நடைகளை மீளப் பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிடிகாசு ஒரு மாட்டிற்கு ரூ.1,500, தண்டப்பணம் (பிடிக்கப்பட்ட இடத்தில் செலுத்தினால்)ரூ. 1,500, ஏற்றியிறக்கல் கட்டணம் (அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்ட பின்) ரூ. 500, தினசரி பராமரிப்புச் செலவு ஒரு மாட்டிற்கு ரூ. 300 (ஒரு நாளைக்கு) ஆகும்.

உரிமையாளர்கள் எதிர்வரும் பத்து நாட்களுக்குள் உரிய தண்டப்பணத்தைச் செலுத்தி கால்நடைகளை பொறுப்பேற்கத் தவறினால், 1987ஆம் ஆண்டின் 15ஆம் இலக்க பிரதேச சபைகள் சட்டத்தின் கீழ் குறித்த கால்நடைகள் அரசுடைமையாக்கப்பட்டு, பகிரங்க ஏலத்தில் விற்பனை செய்யப்படும் என சபை தவிசாளர் மற்றும் உப தவிசாளர் ஆகியோர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இலங்கையில் முடிவிற்கு வரும் வங்கியொன்றின் நடவடிக்கைகள் : இன்றுடன் நிரந்தரமாக மூடப்படும் வங்கிக் கிளைகள்!!

இலங்கையில் தனது சில்லறை வங்கிச் செயல்பாடுகள் இன்று (30.04.2026) ​​முடிவுக்கு வரும் என HSBC வங்கி அறிவித்துள்ளது. அச்செயல்பாடுகள் நேஷன்ஸ் டிரஸ்ட் வங்கிக்கு (NTB) அதிகாரப்பூர்வமாக மாற்றப்படும் என்றும் குறித்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் உள்ள HSBC வங்கியின் சில்லறை வங்கிச் செயல்பாடுகளைக் கையகப்படுத்துவதற்கான ஒப்புதலை நேஷன்ஸ் டிரஸ்ட் வங்கி, டிசம்பர் 2025இல் இலங்கை மத்திய வங்கியிடமிருந்து பெற்றது. இதற்கான கட்டாய விற்பனை மற்றும் கொள்முதல் ஒப்பந்தம் (BSA) செப்டம்பர் 2025இல் இரு தரப்பினருக்கும் இடையே கையெழுத்தானது.

இந்த நிலையில் மே 1, 2026 முதல், முதன்மை வாடிக்கையாளர்கள், கடன் அட்டைகள் மற்றும் தனிநபர் கடன்கள் உட்பட 200,000க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர் தளம் நேஷன்ஸ் டிரஸ்ட் வங்கியின் கீழ் வரும் என தெரியவருகிறது.

அதன்படி HSBC கிளைகள், ஏடிஎம்கள் மற்றும் விரைவு வங்கி மையங்கள் இன்று (30) பிற்பகல் 3:00 மணிக்கு நிரந்தரமாக மூடப்பட உள்ளன.

இணைய வங்கிச் சேவைகள், அலைபேசிச் செயலிகள் மற்றும் அட்டைப் பரிவர்த்தனைகள் இன்று மாலை 7 மணி வரை மட்டுமே செயல்படும், அதன் பிறகு அவை முடக்கப்படும் என தெரியவருகிறது.

இந்தக் கையகப்படுத்தல், நேஷன்ஸ் டிரஸ்ட் வங்கிக்கு ஒரு பெரிய வாடிக்கையாளர் தளத்துடன் தனது வணிக வலையமைப்பை விரிவுபடுத்தவும், பெருநிறுவன இலக்குகளை அடையவும் ஒரு சிறந்த வாய்ப்பை வழங்கும் என்று கூறப்படுகிறது.

பல மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!!

நாட்டின் 11 மாவட்டங்களுக்குப் பலத்த மின்னல் தாக்கம் ஏற்படும் அபாயம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்த அறிக்கையானது இன்று (30) இரவு 11.30 மணி வரை செல்லுபடியாகும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, சப்ரகமுவ, மத்திய, வடமத்திய மாகாணங்களிலும் வவுனியா, முல்லைத்தீவு, குருநாகல் மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

அதேபோல் சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமத்திய மாகாணங்களின் சில இடங்களிலும் திருகோணமலை மாவட்டத்தின் சில இடங்களிலும் 50 மி.மீ க்கும் அதிகளவான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.

தென் மாகாணத்திலும் களுத்துறை மாவட்டத்தின் சில இடங்களிலும் காலை வேளையில் மழை பெய்யக்கூடும்.

அத்துடன் மத்திய, சப்ரகமுவ, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் அதிகாலை வேளையில் மூடுபனி நிலை காணப்படக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் தங்கத்தின் விலையில் சடுதியான மாற்றம் : நகை வாங்குவோருக்கு சாதகமான செய்தி!!

இலங்கையில் தங்கத்தின் விலையில் இன்று (30.04.2026) வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

24 கரட் தங்கம் பவுண் ஒன்றின் விலை நேற்றைய தினம் 392,000 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், இன்று அதன் விலையில் 2,000 ரூபாய் குறைவடைந்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அந்த வகையில் 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 390,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 358,800 ரூபாயாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொழும்பில் பல வீடுகளை உடைத்து கொள்ளை : வசமாக சிக்கிய திருடன்!!

கொழும்பில் பல வீடுகளை உடைத்து கொள்ளையிட்டவர் 16 லட்சம் ரூபாயை வங்கிக் கணக்கில் வைப்பிலிட்ட நபரை கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

சந்தேகநபர் கைது செய்யப்பட்ட போது அவரிடமிருந்து கொள்ளையிட்ட தங்க நகைகளை 5 அடகு பற்றுச்சீட்டுகள், 6 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் என்பனவும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

நபர் ஒருவர், பெருமளவில் போதைப்பொருளைக் கொள்வனவு செய்வதாகவும் அவரது வங்கிக் கணக்கில் பெருந்தொகையான பணம் இருப்பதாகவும் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினருக்கு இரகசியத் தகவல் கிடைத்தது.

கிடைத்த தகவலின் அடிப்படையில் ஒருகொடவத்தை பகுதியில் வைத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட நபரைச் சோதனையிட்ட போது, அவரிடமிருந்து ஹங்வெல்ல கிராண்ட்பாஸ் மற்றும் கடுவலை பகுதிகளில் உள்ள தனியார் அடகு மையங்களில் அடகு வைக்கப்பட்ட 7 பவுணுக்கும் அதிகமான தங்க நகைகளுக்கான 5 அடகு பற்றுச்சீட்டுகள் கண்டெடுக்கப்பட்டன.

மேலதிக விசாரணைகளின் போது, கொஸ்கம பகுதியில் ஏழு வீடுகளை உடைத்துத் திருடிய நகைகளே இவை என்பது கண்டறியப்பட்டது. களவாடிய நகைகளை அடகு வைத்து சுமார் 18 லட்சம் ரூபாய்க்கும் அதிகமான பணத்தைப் சந்தேகநபர் பெற்றுள்ளார்.

அதில் 16 லட்சம் ரூபாயை வங்கியில் வைப்பிலிட்டுள்ளதுடன் , ஏனைய பணத்தைப் போதைப்பொருள் பாவனைக்காகச் செலவிட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

இன்று முதல் நாடுமுழுவதும் கடும் வெப்பநிலை எச்சரிக்கை!!

நாட்டின் பல பகுதிகளில் இன்று (30.04.2026) முதல் வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்தில் இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வடமத்திய, கிழக்கு, சபரகமுவ மாகாணங்கள் மற்றும் குருநாகல், மொனராகல, வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களில் வெப்பமான வானிலை நிலவும்.

13 மாவட்டங்களில் சில இடங்களில், மனித உடலில் உணரப்படும் வெப்பமான நிலை நிலவக்கூடும். ஆகையால், இதனால், நீண்ட நேரம் வெயிலில் இருப்பதால் சோர்வு ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

ஒரு தலைக் காதலால் கொடூரம் : தாயும் மகளும் குத்திக் கொலை!!

தன்னை காதலிக்க மறுத்த பெண்ணின் மீது கொண்ட ஆத்திரத்தில், அந்தப் பெண்ணையும் அவரது தாயையும் வாலிபர் ஒருவர் சரமாரியாகக் குத்திக் கொலை செய்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வாலிபர் நீண்ட நாட்களாக அந்த இளம்பெண்ணை ஒருதலையாகக் காதலித்து வந்த நிலையில், தனது காதலை ஏற்கும்படி தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார்.

ஆனால் அந்தப் பெண் அவரது காதலைத் திட்டவட்டமாக மறுத்து வந்ததால், ஆத்திரமடைந்த வாலிபர் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார்.

சம்பவத்தன்று அந்தப் பெண்ணின் வீட்டிற்குள் புகுந்த வாலிபர், அங்கு ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது மறைத்து வைத்திருந்த கத்தியால் அந்தப் பெண்ணை குத்தத் தொடங்கியுள்ளார்.

மகளைக் காப்பாற்ற ஓடி வந்த தாயையும் அந்த வாலிபர் இரக்கமின்றி சரமாரியாகக் குத்தியதால், இருவரும் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தனர். அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வருவதற்குள், அந்த வாலிபர் அங்கிருந்து தப்பிச் சென்று மறைந்துள்ளார்.

தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

தப்பியோடிய அந்த வாலிபரைத் தேட தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்ட நிலையில், சில மணி நேரங்களிலேயே அவர் பிடிபட்டார்.

ஒருதலைக் காதலால் ஒரு குடும்பத்தையே சிதைத்த இந்த கொடூரச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

 

திருமண ஊர்வலத்தில் சோகம் : நடனமாடிய மணப்பெண் மயங்கி விழுந்து உயிரிழப்பு!!

திருமணக் கொண்டாட்டங்கள் களைகட்டியிருந்த வேளையில், மணப்பெண் திடீரென உயிரிழந்த சம்பவம் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மணமகன் வீட்டார் ஏற்பாடு செய்திருந்த ஊர்வலத்தின் போது, உற்றார் உறவினர்களுடன் சேர்ந்து அந்த மணப்பெண் மகிழ்ச்சியுடன் நடனமாடி வந்துள்ளார்.

அப்போது எதிர்பாராத விதமாக அவருக்குத் திடீர் மயக்கம் ஏற்பட்டு தரையில் சரிந்து விழுந்ததைக் கண்டு அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயினர்.

உடனடியாக அவரை மீட்ட குடும்பத்தினர் அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அந்த மணப்பெண் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

மிக உற்சாகமாகத் தொடங்கிய திருமண விழா, சில நிமிடங்களிலேயே ஈடு செய்ய முடியாத ஒரு பேரிழப்பாக மாறியதை அந்தப் பகுதி மக்களால் நம்பவே முடியவில்லை.

மாரடைப்பு காரணமாக இந்த உயிரிழப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மணக்கோலத்தில் இருந்த பெண்ணின் இந்தத் துயரமான முடிவு, மணமகன் மற்றும் இரு வீட்டார் குடும்பத்தினரையும் மீளாத் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

திருமண வாழ்வைத் தொடங்க வேண்டிய ஒரு இளம்பெண், தனது திருமண நா அன்றே உயிரிழந்தது அந்த கிராமத்தையே சோகத்தில் மூழ்கடித்துள்ளது. சமூக வலைதளங்களில் இந்தச் சம்பவம் குறித்த தகவல்கள் வெளியாகி பலரையும் நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது.

வவுனியாவில் மே தினத்தில் ஊழியர்களுக்கு விடுமுறை அளித்து கௌரவிப்போம் : வவுனியா வர்த்தகர் சங்கம் அழைப்பு!!

எதிர்வரும் மே மாதம் 1ஆம் திகதி சர்வதேச உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு, வவுனியாவில் உள்ள வர்த்தக நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு விடுமுறை வழங்கி அவர்களைக் கௌரவிக்குமாறு வவுனியா வர்த்தகர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக வவுனியா வர்த்தகர் சங்கம் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

“தமது உடலினை இயந்திரமாக்கி, உழைப்பினை உரமாக்கி, வவுனியா மண்ணின் பொருளாதாரத்தை இயங்க வைக்கும் உன்னத தோழர்களான உழைப்பாளிகளின் தினமே மே 1 ஆகும். இந்தச் சிறப்பான நாளில் எமது வர்த்தக நிலையங்களில் அர்ப்பணிப்புடன் பணியாற்றும் அனைத்துத் தோழர்களுக்கும், தோழிகளுக்கும் எமது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

உழைப்பாளிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதில் வவுனியா வர்த்தகர் சங்கம் எப்போதும் முன்னின்று செயற்படுகின்றது. அந்த வகையில், இந்த உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு உங்கள் வர்த்தக ஸ்தாபனங்களில் பணிபுரிகின்ற ஊழியர்களுக்கு உரிய ஓய்வினை வழங்கி, அந்நாளில் அவர்களை மகிழ்ச்சிப்படுத்துமாறு அனைத்து வர்த்தகர்களையும் அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.”இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வர்த்தகர் சங்கத்தின் இந்த முன்னெடுப்பானது வவுனியா பகுதி உழைப்பாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

 

வவுனியா மாவட்ட விவசாயக் குழுக் கூட்டம் : சிறுபோக சாகுபடி மற்றும் நீர் மேலாண்மை குறித்து விரிவான ஆராய்வு!!

வவுனியா மாவட்டத்தின் விவசாய நடவடிக்கைகளின் தற்போதைய முன்னேற்றம் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்த முக்கிய மீளாய்வுக் கூட்டம், மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது.

மாவட்ட செயலாளர் பி.ஏ.சரத்சந்திர தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மேலதிக மாவட்ட செயலாளர் என்.கமலதாசன், பிரதேச செயலாளர்கள் மற்றும் விவசாயத் துறை சார்ந்த பல்வேறு திணைக்களங்களின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் மாவட்டத்தின் விவசாய நிலவரம் குறித்து விரிவாக ஆராயப்பட்டதுடன், பின்வரும் விடயங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.

தற்போதைய சிறுபோக பருவத்திற்கான நெற்பயிர்ச் செய்கையின் முன்னேற்றங்கள் மற்றும் விவசாயிகள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்துக் கலந்துரையாடப்பட்டது.

பயிர்ச்செய்கைக்குத் தேவையான நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துதல் மற்றும் உர விநியோகத்தை வினைத்திறனாக முன்னெடுப்பது தொடர்பாக அதிகாரிகளுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

நெல் தவிர்ந்த ஏனைய மேட்டுநிலப் பயிர்கள் மற்றும் சிறுதானியச் செய்கைகளை ஊக்குவிப்பது தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்டது.

மாவட்டத்தின் விவசாய உற்பத்தியை மேம்படுத்தவும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தவும் துறை சார்ந்த நிறுவனங்கள் ஒருங்கிணைந்து செயற்பட வேண்டும் என இதன்போது வலியுறுத்தப்பட்டது.

வவுனியா தோணிக்கல் பகுதியில் கிணற்றிலிருந்து ஆணின் சடலம் மீட்பு!!

வவுனியா, தோணிக்கல் பகுதியில் கிணறு ஒன்றிலிருந்து முதியவர் ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது. தோணிக்கல், சேக்கிழார் வீதியைச் சேர்ந்த 64 வயதுடைய கணபதிப்பிள்ளை தவக்குமார் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

குறித்த நபர் இன்று காலை நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வராத நிலையில், உறவினர்கள் அவரைத் தேடியுள்ளனர். இதன்போது, வீட்டின் அருகிலுள்ள கிணற்றிலிருந்து அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

மரணத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், மேலதிக விசாரணைகளின் பின்னர் சடலம் பிரேத பரிசோதனைக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சூரியபகவான் கிரக மாற்றதால் வாழ்வில் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள்!!

ஜோதிட சாஸ்திரத்தில் சூரியபகவான் கிரகங்களின் அதிபதியாக கருதப்படுகிறார். சூரியன் ஒருவரின் ஜாதகத்தில் சரியான இடத்தில் அமர்ந்தால் அவர்கள் வாழ்க்கையில் சகல நன்மைகளையும் அடைவார்கள்.

இந்த கிரக மாற்றத்தால் அவர்கள் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் தொழில் வாழ்க்கை இரண்டிலுமே சிறப்பான பலன்களை அனுபவிக்கலாம்.

சூரியன் தன்னம்பிக்கை, அடையாளம் மற்றும் ஆற்றலின் அதிபதியாக இருப்பதால் இந்த கிரக மாற்றத்தால் குறிப்பிட்ட ராசிக்காரர்கள் அவர்கள் வாழ்க்கையில் அடுத்தகட்டத்தை நோக்கி நகரலாம். அவர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இது ஒரு சாதகமான காலகட்டமாகும், குறிப்பாக நிதி சார்ந்த விஷயங்களில் இது மிகவும் சிறப்பான காலகட்டமாக இருக்கும்.

புதிய முதலீடுகள் செய்வதற்கோ அல்லது வீடு, வாகனம் போன்ற பெரிய அளவிலான சொத்துக்களை வாங்குவதற்கோ இது ஒரு உகந்த நேரமாகும்.

சூரியன் ஆசீர்வாதத்தால் அவர்கள் வேலையில் சிறந்து விளங்க முடியும். இதுவரை தடைப்பட்டிருந்த வேலைகள் இப்போது சுமூகமாக முடிவடையும்.

சிம்மம்

சிம்ம ராசியின் அதிபதியாக சூரியன் இருப்பதால் அவர்கள் இந்த கிரக மாற்றத்தால் நேரடிப் பலன்களை அனுபவிக்கப்போகிறார்கள்.

இந்த காலகட்டத்தில் அவர்கள் மிகுந்த தன்னம்பிக்கையுடன் உணர்வதுடன், சமூகத்தில் பிறரின் கவனத்தையும் ஈர்க்கக்கூடும். அவர்களின் நீண்ட கால ஆசைகள் இப்போது நிறைவேறப்போகிறது.

இந்த ராசிக்காரர்கள் புதிய வழிகளில் பணத்தை முதலீடு செய்ய முடியும். அவர்களின் அனைத்து முயற்சிகளிலும் அதிர்ஷ்டம் துணை நிற்கும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு நிலுவையிலுள்ள பல வேலைகள் இப்போது முடிவுக்கு வரலாம். மே 11-ஆம் தேதிக்குள் அவர்களின் தடைபட்ட முக்கியமான காரியம் ஒன்று நிறைவேறக்கூடும்.

இந்த காலகட்டத்தில் அவர்கள் தங்கள் வணிகத்திலும், வேலையிலும் முன்னேற்றத்தை அடைய முடியும்.

மேலும், வணிகர்கள் ஒரு பெரிய திட்டம் அல்லது வாடிக்கையாளரால் பயனடைய முடியும். கலைஞர்கள் மற்றும் படைப்புத் துறைகளில் ஈடுபட்டுள்ள நபர்களுக்கு இந்த காலம் மிகவும் சாதகமான மாற்றங்களை அளிக்கும்

இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை!!

இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதாவது, இலங்கை சந்தையில் கிடைக்கும் பல தோல் கிரீம்கள் மற்றும் லோஷன்களில் ஆபத்தான அளவில் கன உலோகங்கள் இருப்பது ஆய்வக சோதனைகளில் தெரியவந்ததை அடுத்து, நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

சோதனை செய்யப்பட்ட தயாரிப்புகள் கனரக உலோகங்களுக்கான அங்கீகரிக்கப்பட்ட பாதுகாப்பு வரம்புகளை மீறி, நுகர்வோருக்கு கடுமையான உடல்நல அபாயங்களை ஏற்படுத்தின.

பாதிக்கப்பட்ட தயாரிப்புகளின் பட்டியல் மற்றும் அவற்றின் பெயர்கள், அனுமதிக்கப்பட்ட உலோக செறிவுகளைக் கோடிட்டுக் காட்டும் வர்த்தமானியின் நகலுடன், அதிகார சபை வெளியிட்டுள்ளது.

அதன்படி 49 தயாரிப்புகளின் தோல் கிரீம்கள் மற்றும் லோஷன்களின் பட்டியலை அதிகார சபை வெளியிட்டுள்ளது.

அங்கீகரிக்கப்பட்ட பாதுகாப்பு வரம்புகளை மீறும் கிரீம்கள் மற்றும் லோஷன்களை வாங்கவோ அல்லது பயன்படுத்தவோ கூடாது என்று நுகர்வோர் கடுமையாக அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இந்த தயாரிப்புகளை விற்பனை செய்யும் விற்பனையாளர்கள் மீது ஏற்கனவே சட்ட நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மேலும் கடுமையான அமுலாக்கம் பின்பற்றப்படும் என்று நுகர்வோர் விவகார அதிகார சபை மேலும் அறிவித்துள்ளது.

தங்கத்தின் விலையில் தலைகீழ் மாற்றம் : இலங்கையில் இன்றய நிலவரம்!!

உலக புவிசார் அரசியல் பதற்றங்கள் மற்றும் பொருளாதார காரணிகளால் தங்கத்தின் விலைகள் உலக சந்தையிலும், இலங்கையிலும் ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகின்றன.

அந்த வகையில், உலக சந்தையில் இன்று ( 29) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை: ~$4,594 – $4,744 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.

மேலும் ஆய்வாளர்கள் $5,000–$5,400 அமெரிக்க டொலர் வரை தொடர்ச்சியான உயர்வினை சந்திக்கும் சாத்தியக்கூறுகளை எதிர்பார்க்கின்றனர்.

இதற்கமைய, இலங்கையிலும் இன்று “22 கரட்” தங்கப் பவுண் ஒன்றின் விலை 354,000 ரூபாவாக காணப்பட்டுள்ளது. இதேவேளை, “24 கரட்” தங்கப் பவுண் ஒன்றின் விலை 386,150 ரூபாவாக பதிவாகியுள்ளன.

பணம் தர மறுத்த தாயின் கால்களை உடைத்த மகனின் கொடூர செயல்!!

கேகாலையில் போதைப்பொருள் பாவனைக்கு பணம் தர மறுத்ததால், மகன் தன் தாயின் இரு கால்களிலும் தடியால் அடித்து எலும்புகளை முறித்துள்ளார்.

கடந்த 26ஆம் திகதி இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தேவலகமவை சேர்ந்த 46 வயதான பெண் கேகாலை பொது மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகிறார்.

அப்பெண்ணுக்கு 20 வயதான மகன் உள்ளார் எனவும் போதைப்பொருளுக்கு கடுமையாக அடிமையாகியுள்ளார் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

அந்த இளைஞன், நண்பர்களுடன் போதைப்பொருள் நுகர்வதற்காக தன் தாயிடம் பணம் கேட்டு வந்துள்ளார். மகனின் அச்சுறுத்தல் காரணமாக சில சமயங்களில் தாய் பணம் கொடுத்து வந்துள்ளார்.

சம்பவ தினத்தன்று குறித்த இளைஞன் மீண்டும் தன் தாயிடம் 5,000 ரூபாய் கேட்டதாகவும், தன்னிடம் பணம் இல்லை என அவரிடம் கூறியதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதனால் கோபமடைந்த மகன் தன் கைகளில் கிடைத்த பொருட்களால் தாயைத் தாக்கியதாகவும், இறுதியாக தடியொன்றினால் தாயின் இரு கால்களிலும் அடித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண் முச்சக்கர வண்டி மூலம் கேகாலை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது இரு கால்களிலும் எலும்பு முறிவு ஏற்பட்டிருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். சந்தேக நபரான மகனை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கொழும்பிலிருந்து சென்ற பேருந்தின் சாரதிக்கு ஏற்பட்ட திடீர் உடல்நலக்குறைவு : காப்பாற்றப்பட்ட பல உயிர்கள்!!

கொழும்பு – மொரட்டுவவிலிருந்து பாணந்துறை நோக்கிச்சென்று கொண்டிருந்த பேருந்தொன்று வீதியிலிருந்து விலகி வீடொன்றின் மீது மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.

சாரதிக்கு ஏற்பட்ட திடீர் உடல்நலக்குறைவு காரணமாக வீதியிலிருந்து விலகி, அருகிலிருந்த வீட்டின் மீது மோதியுள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த விபத்தில் பேருந்தில் இருந்த யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும், ஆனால் வீதியில் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது பேருந்து மோதியதில் இரண்டு பேர் காயமடைந்துள்ளனர்.

இதனையடுத்து காயமடைந்தவர்கள் பாணந்துறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என்று வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவம் குறித்து மொரட்டுவ பொலிஸ் போக்குவரத்துப்பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.