பலாங்கொடை, ரஜவக்க மகா வித்தியாலயத்தில் மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் ஒரு மாணவன் உயிரிழந்துள்ளார். குறித்த பகுதியில் இன்று (12) வீசிய காற்றின் காரணமாக இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
மரம் முறிந்து விழுந்ததில் கிட்டத்தட்ட 17 மாணவர்கள் பலாங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
யாழ் நகரில் அமைந்துள்ள பிரபல பெண்கள் பாடசாலைக்கு அருகில் யாசகம் பெறும் பெண் ஒருவர் மாதம் லட்சக்கணக்கில் பணம் சேமிப்பதாக ஆச்சர்ய தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த பெண் கையில் கட்டுடன் பாடசாலைக்கு அருகில் தினமுது நின்று யாசகம் பெறுவதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் அரசாங்க உத்தியோகஸ்தர்களே மாத இறுதியில் அல்லாடும் நிலைக்கு செல்லும் நிலையில் குறித்த பெண் யாசகம் பெற்று சேர்க்கும் மாதவருமானம் பெரும் தொகை பணம் கிடைப்பதாக கூறப்படுகின்றது.
அதேவேளை வடக்கில் வெளி மாவட்டங்களில் இருந்து வந்து யாசகம் பெறுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கூறப்படுகின்றது.
அதோடு யாழ் நகர் பகுதிகளில் மட்டுமல்லாது நல்லூர் கந்தன் பெரு விழா காலத்தில் சில பெண்கள் யாசகம் பெற தமது குழந்தைகளையும் அழைத்து வருவதாகவும், இதனால் ஆலயத்திற்கு செல்லும் பக்தர்கள் அசௌகரியங்களுக்கு உள்ளாவதாகவும் கூறப்படுகின்றது.
இந்நிலையில் வடக்கில் யாசகம் பெறுவோரை தடை செய்ய விரைவில் நடவடிக்கை எடுக்க உள்ளதாக வடமாகாண ஆளுநர் வேதநாயகன் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாடு முழுவதும் பரவி வரும் கொவிட் திரிபினால் பாதிக்கப்பட்டு இதுவரை இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட வடமேல் மருத்துவ பீடத்தின் தலைமை மருத்துவப் பேராசிரியர் துஷாந்த மெதகெதர இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
இலங்கை தொற்று நோயியல் பிரிவு தகவலின்படி, சுவாச நோயாளிகளில் 9% முதல் 13% வரை தற்போது புதிய கொவிட் திரிபினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த கொவிட் தொற்று மிகக் குறைந்த தீவிரத்தன்மை கொண்டது.
இதனால் ஏற்படும் தாக்கம் மிகக் குறைவு. ஆனால் 65 வயதுக்கு மேற்பட்ட நோயாளிகளுக்கும் பலவீனமான நோயெதிர்ப்பு சக்தி கொண்டவர்களுக்கும் இது தீவிரமாக இருக்கலாம்.
இவ்வாறானவர்கள் இது தொடர்பில் அவதானமாக இருக்கு வேண்டும். இலங்கையில் இரண்டு மரணங்கள் நிகழ்ந்துள்ளன. இருவருக்கும் நோய்கள் இருந்தன.
அதைத் தவிர, தற்போது எங்களுக்கு எந்த ஆபத்தான நிலைமைகளும் இல்லை, எனவே தேவையற்ற அச்சம் தேவையில்லை. ஆனால் குறிப்பிட்ட தரப்பினர் இது குறித்து விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம் என்றும் அவர் கூறினார்.
இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலம் புனேவின் பிம்ப்ரி பிரேம்லோக் பூங்கா அருகே இருக்கும் ஒரு குல்மோகர் மரத்திலிருந்து கடந்த ஜூன் 6-ம் தேதி திடீரென தண்ணீர் ஊற்று போல் வெளியேறத் தொடங்கியது.
இந்த மரம், மே-பூ மரம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்நிலையில் மரத்திலிருந்து வருவது “புனித நீர்” கருதிய மக்கள் அதனை வழிபட இந்தச் செய்தி காட்டுத்தீ போல் பரவ, ஏராளமான மக்கள் அங்கு குவியத் தொடங்கினர்.
அவர்கள் மரத்திற்கு மஞ்சள், குங்குமம் வைத்து மாலை அணிவித்து வழிபட்டனர். சிலர் இந்தத் தண்ணீருக்கு நோய்களைக் குணப்படுத்தும் சக்தி இருப்பதாக நம்பி, அதைத் தீர்த்தம் போல் பருகியதாகவும் கூறப்படுகின்றது.
அது தொடர்பான வீடியோக்கள் வைரலாகப் பரவிய நிலையில் இது பிம்ப்ரி மாநகராட்சி அதிகாரிகளின் கவனத்திற்கு சென்றது. உடனடியாக விசாரணை நடத்திய அதிகாரிகள், மரத்திலிருந்து தண்ணீர் கசிந்ததற்கான உண்மையான காரணத்தைக் கண்டறிந்தனர்.
அதாவது நிலத்தடி நீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பு காரணமாகவே தண்ணீர் கசிந்துள்ளதாகவும், அந்தக் குழாய் உடைப்பு ஏற்பட்ட இடத்தின் அருகே மரம் இருந்ததால், மரத்தின் தண்டு வழியாக தண்ணீர் வெளியேறுவது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் அதிகாரிகள் விளக்கமளித்தனர்.
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவி ஒருவர் விபரீத முடிவால் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது. உயிரிழந்த மாணவி தேசிய மக்கள் சக்தியின் முழுநேர உறுப்பினர் என கூறப்படுகின்றது.
அதோடு கடந்த உள்ளூராட்சிசபை தேர்தலில் தேசிய மக்கள் சக்தி(NPP) சார்பாக போட்டியிட்ட யுவதியே தனது உயிரை மாய்த்துள்ளார். யாழ்ப்பாணம் , தெல்லிப்பழை பகுதியை சேர்ந்த 29 வயதுடைய பெண்ணே இவ்வாறு தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார்.
இவர் தனிப்பட்ட பிரச்சனைகள் காரணமாக கடந்த சில நாட்களாக கடும் மன அழுத்தத்தில் காணப்பட்டதாகவும் இந்நிலையில் நேற்று (11) தனது வீட்டில் உயிரை மாய்த்துள்ளதாகவும் மரண விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
களுத்துறை, மத்துகம பகுதியில் நேற்று இரவு இருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் படுகாயமடைந்து, களுத்துறை, நாகொட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒருவர் உயிரிழந்துள்ளதாக மதுகம பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் 23 வயதுடையவர் எனவும் காயமடைந்தவர் 51 வயதுடைய தந்தை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மது விருந்தில் காயமடைந்த தந்தையின் சகோதரர்களில் ஒருவருடன் நபர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இரு தரப்பினரும் அந்த இடத்தை விட்டு வெளியேறி, பின்னர் வேறு பகுதியில் மற்றொரு வாக்குவாதத்தைத் தொடங்கியுள்ளனர். உயிரிழந்த இளைஞனும் காயமடைந்த நபரும் வாக்குவாதத்தில் தலையிட்டுள்ளனர்.
வாக்குவாதத்தை தொடங்கிய மற்றொரு நபர் கூர்மையான ஆயுதத்தால் தந்தை மற்றும் மகனை தாக்கி காயப்படுத்தியுள்ளார்.
மேலும் விசாரணையின் போது, காயமடைந்தவர்களை களுத்துறை, நாகொட மருத்துவமனையில் அப்பகுதி மக்கள் அனுமதித்தபோது ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
சம்பவத்தின் பின்னர் சந்தேக நபர் தப்பிச் சென்றுள்ளார். உடல் களுத்துறை நாகொட மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் சந்தேக நபரை கைது செய்ய மதுகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சிலாபம் – அம்பகண்டவில பகுதியில், கணவன் ஒருவர் தனது மனைவியை தீ வைத்துக் கொளுத்திய சம்பவம் இடம்பெற்றுள்ளது. கடுமையான காயங்களுக்கு உள்ளான மனைவி சிலாபம் வைத்தியசாலையில் சில நாட்கள் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் நேற்றையதினம்(11) உயிரிழந்துள்ளார்.
தனது மனைவிக்கு வேறு ஒரு ஆணுடன் தொடர்பிருப்பதாக சந்தேகம் கொண்ட கணவர் இவ்வாறு மனைவியை தீ வைத்துக் கொளுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.
39 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு தீ வைத்துக் கொளுத்தப்பட்டதால் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும், குறித்த கணவர் நேற்றையதினம் இரவு கைது செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சிலாபம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தோனேசியாவில் இருந்து இலங்கை வந்த விமானத்தை கடத்துவதாக தொலைபேசியில் பொய்யான தகவல் வழங்கிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபரை வெள்ளவத்தை பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 42 வயதுடையவர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
அரசாங்க விரோத முறைப்பாடாக இதனை பொலிஸார் பதிவு செய்துள்ளனர். வெள்ளவத்தை 33வது வீதியில் உள்ள ஒரு விடுதியில் தங்கியிருந்த சந்தேக நபரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
2009க்கு முன்பு வழங்கப்பட்டு, புதுப்பிக்கப்படாத அனைத்து சாரதி அனுமதிப்பத்திரங்களையும் இரத்து செய்வது குறித்து அரசாங்கம் பரிசீலனை செய்துள்ளது.
இதற்கான பொலிஸ் பரிந்துரைகளையும் கோரிக்கைகளையும் பொலிஸ் திணைக்களத்திடம் அரசாங்கம் சமர்ப்பித்துள்ளது.
அதன்படி, இந்த விடயத்திற்கு மோட்டார் போக்குவரத்து ஆணையாளரே முழுப் பொறுப்பையும் ஏற்றுக்கொள்வதால், விரைவில் அந்தத் திணைக்களம் இது தொடர்பில் ஒரு தீர்மானத்தை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.
நாட்டில் 10 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் மோட்டார் போக்குவரத்துத் துறையிடமிருந்து ஓட்டுநர் உரிமங்களைப் பெற்றுள்ளனர். மேலும் இவர்களில் நான்கு மில்லியனுக்கும் அதிகமானோர் 2009இற்கு முன்னர் பெறப்பட்ட ஓட்டுநர் உரிமங்களைக் கொண்டுள்ளனர்.
இவற்றில், இரண்டு மில்லியனுக்கும் அதிகமானவை கனரக வாகன ஓட்டுநர் உரிமங்கள். அவற்றைப் புதுப்பிப்பது கட்டாயமில்லை. அதன்படி, 2009 ஆம் ஆண்டுக்கு முன்பு பெறப்பட்ட சாரதி அனுமதிப்பத்திரங்களை இரத்து செய்யவும் புதிய சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அநுராதபுரம் – இபலோகம பொலிஸ் பிரிவின் ஹிரிபிட்டியாகம சந்திக்கு அருகில் வேன் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் ஒருவர் சம்பவயிடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் ஆறு பேர் காயமடைந்துள்ளதாக இபலோகம பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து நேற்று புதன்கிழமை (11) அதிகாலை 3.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. காயமடைந்தவர்கள் கெக்கிராவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அநுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கெக்கிராவை ,அளுத்தென்னாவ,காகம பகுதியை வசிப்பிடமாக கொண்ட 48 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரே உயிரிழந்துள்ளார். காயமடைந்தவர்களில் நான்கு பெண்களும் இரண்டு ஆண்களும் அடங்குகின்றனர்.
காயமடைந்த அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை இபலோகம பொலிஸ் நிலைய போக்குவரத்து பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி உபபொலிஸ் பரிசோதகர் சுபரத்ன தலைமையிலான பொலிஸ் குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இந்தியாவின் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் விமான நிலையம் அருகே விமானம் ஒன்று 242 பயணிகளுடன் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளாகியுள்ளது.
அகமதாபாத் – மேகனி நகரில் விமானம் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விமான விபத்தை தொடர்ந்து விமான நிலையம் அருகே கரும்புகை வெளியேறி வரும் நிலையில் விமானத்தில் இருந்தவர்கள் நிலை குறித்து அச்சம் ஏற்பட்டுள்ளது.
விபத்துக்குள்ளான விமானம் எயார் இந்தியா நிறுவனத்தை சேர்ந்தது என முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.
7 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. விபத்தின் போது விமானத்தில் 242 பயணிகள் சென்றுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
2025 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் மின்சாரக் கட்டணத்தை ஒட்டுமொத்தமாக 15 வீதத்தால் அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்த மின் கட்டண திருத்தம் இன்று நள்ளிரவு(12) முதல் நடைமுறைக்கு வருவதாக அந்த ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
கொழும்பில் இன்று (11) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் கே.பி.எல். சந்திரலால் இதனைத் தெரிவித்தார்.
2025ஆம் ஆண்டின் இரண்டாம் பாதிக்கான மின்சாரக் கட்டண திருத்தம் இந்த வார இறுதிக்கு முன்னர் அறிவிக்கப்படும் என இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் தொடர்பாடல் பிரிவின் பணிப்பாளர் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.
அந்தவகையில் இலங்கை மின்சார சபை (CEB) 2025ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டுக்கான மின்சார கட்டணங்களை 18.3 வீதத்தால் அதிகரிக்குமாறு முன்மொழியப்பட்டிருந்தது.
எனினும், தற்போது 15% அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பதுளை நகரில் நடைபெற்ற மிஹிது பெரஹராவின் போது, ஒரு யானை குழப்பமடைந்தமையால் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பதுளை நகரில் நேற்று (10.06) இரவு நடைபெற்ற பெரஹராவின் போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இருப்பினும், சம்பவத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. பதுளை கைலகொட மிஹிது பெரஹரா நேற்று இரவு பதுளை நகர வீதிகளில் 85 ஆவது முறையாக இடம்பெற்றது.
இந்த பெரஹரா ஆண்டுதோறும் பதுளை, சத்தர்மானந்த பிரிவேனா அமைப்பால் ஏற்பாடு செய்யப்படுகிறது. யானைகள், நடனங்கள் உள்ளிட்ட பல அம்சங்களுடன் நேற்று இரவு பெரஹரா நடைபெற்றது.
இருப்பினும், இந்த நேரத்தில், கலசத்தை சுமந்து செல்லும் யானை குழப்பமடைந்தமையால் பெரஹராவின் போது பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது.
எனினும் யானையை சிறிது நேரத்திற்குள் யானைப் பாகன் அமைதிப்படுத்திய பிறகு, பெரஹரா மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தின்(UK) வடக்கு யோர்க்சயரில் உள்ள ப்ரோட்டன் கிராமத்தில் வாழ்பவர்களில், இரண்டு இலங்கையர்கள் மட்டுமே வெள்ளையர் அல்லாதவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மக்கள் தொகை கணக்கெடுப்பின் உத்தியோகபூர்வ தகவல்களின்படி, வடக்கு யோர்க்சயரின் குறித்த கிராமத்தில் 1108 பேரில் பதிவு செய்யப்பட்டிருந்தனர்.
இதன்போதே வெள்ளையர்கள் அல்லாத இரண்டு இலங்கை ஆண்கள் அங்கு வசிப்பது கண்டறியப்பட்டதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
நண்பர்களான சேம் ருத்ரான் மற்றும் சாம்பசிவன் ஆகியோரே அவர்கள் இருவருமாகும். அவர்கள் குறித்த கிராமத்தில் முறையே விற்பனையகம் மற்றும் அஞ்சல்; அலுவலகத்தை நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் தாம் தாயகத்தை விட்டு வெளியேறிய பின்னர், உயிருக்கு ஆபத்து இல்லாத ஒரு கிராமத்தை உணர்வதாக குறித்த இரண்டு இலங்கையர்களும் தெரிவித்துள்ளனர்.
வாடகைக்குறைவு என்பதற்காகவே தாம் இந்த கிராமத்தில் குடியேறியதாகவும், உள்ளூர் மக்கள் தங்களை அன்பாக வரவேற்றதாகவும் குறித்த இரண்டு இலங்கையர்களும் தெரிவித்துள்ளனர்.
பாணந்துறை – மொரட்டுவ பகுதியில் ஏற்பட்ட இருந்த பாரிய தொடருந்து விபத்தை தடுத்த பொதுமகன் சமந்த பெர்னாண்டோ கௌரவிக்கப்பட்டுள்ளார். அத்துடன் தொடருந்தை மோதாமல் நிறுத்திய ஓட்டுநர் விதுர விதர்ஷனும் நேற்று முன்தினம் (09.06) கௌரவிக்கப்பட்டுள்ளார்.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க மற்றும் தொடருந்து பொது மேலாளர் தம்மிக்க ஜெயசுந்தர உட்பட பலர் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.
பாணந்துறை – மொரட்டுவ தொடருந்து நிலையங்களுக்கு இடையில் உடைந்த தண்டவாளத்தைக் கண்டு, சாகரிகா என்ற தொடருந்து குறித்த இடத்திற்கு வருவதற்கு முன்பே தொடருந்தை நிறுத்தி ஏற்படவிருந்த விபத்தை தடுத்த சமந்த பெர்னாண்டோ என்ற நபர் தடுத்திருந்தார்.
தண்டவாளம் உடைந்திருந்த நிலையில், அதனை கண்ட சமந்த பெர்னாண்டோ, தனது சிவப்பு நிற சண்டையை கழற்றி தொடருந்து ஓட்டுநருக்கு ஆபத்தை தெரியப்படுத்தியுள்ளார்.
இதன் காரணமாக பாதுகாப்பாக தொடருந்து நிறுத்தப்பட்டமையினால் பாரிய விபத்து தவிர்க்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
வவுனியாவில் பல்வேறு இடங்களில் வனவள திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது சட்டவிரோத முறையில் கடத்த முற்பட்ட முதிரை மரக்குற்றிகளினை மீட்கப்பட்டுள்ளதாக வனவளத்திணைக்களத்தினர் தெரிவித்தனர்.
குறித்த சம்பவம் பற்றி தெரியவருவதாவது, வனவளத்திணைக்களத்தினருக்கு கிடைத்த இரகசிய தகவலினையடுத்து மாவட்ட வனவள திணைக்கள அதிகாரி அஜித் ஜயசிங்கவின் நெறிப்படுத்தல் இன் கீழ் வட்ட வனவள அதிகாரி
உடார சஞ்சீவவின் தலைமையிலான வனவள உத்தியோகத்தர்கள் மற்றும் விசேட அதிரடிப் படையினர் இணைந்து ஓமந்தை மற்றும் கூமாங்குளம் பகுதியில் விசேட நடவடிக்கை ஒன்றினை மேற்கொண்டிருநதனர். இந்நடவடிக்கையின் போது 27 முதிரை குற்றிகள் மீட்கப்பட்டதுடன் இரு கப் ரக வாகனமும் மீட்கப்பட்டிருந்தது.
இதேவேளை வவுனியாவில் உள்ள மரக்காளையில் இருந்து அனுமதி பெறப்படாத 13 இலட்சம் பெறுமதியான தேக்கு மர பலகைகள் மீட்கப்பட்டதுடன்,
பறயநாலங்குளம் பகுதியில் காடழிப்பில் ஈடுபட்டவர்களிற்கு எதிரான நடவடிக்கை எடுக்கப்பட்டது டன், காடழிப்புக்கு பயன்படுத்திய டோசர் வாகனமும் கைப்பற்றப்பட்டது.
குறித்த சம்பவங்கள் தொடர்பாக நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இன்றையதினம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.