எல் நினோ தாக்கத்தினால் இலங்கைக்கு ஏற்படவுள்ள கடுமையான பாதிப்பு!!

எல் நினோ நிலைமையின் தாக்கம் காரணமாக எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் எதிர்பாராத பாதிப்பு ஏற்படலாம் என சிரேஷ்ட பேராசிரியர் புத்தி மாரம்பே தெரிவித்துள்ளார். எதிர்பாராத விதமாக வறண்ட காலநிலை அதிகரிக்கக்கூடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

உலகளாவிய ரீதியில் அசாதாரண காலநிலை நிலைகளை உருவாக்கும் எல் நினோ நிகழ்வு இம்முறை கடுமையான ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் எனவும் பேராசிரியர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஒகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் கடந்த வருடங்களுடன் ஒப்பிடும்போது உயர் வெப்பநிலை எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த காலநிலை பயிர்ச் செய்கைக்கு கடுமையான பாதிப்புக்களை ஏற்படக்கூடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எல் நினோ நிலைமையால் பயிர்ச் செய்கைக்கு ஏற்படும் தாக்கங்களைக் குறைத்துக் கொள்வதற்கு விவசாய அதிகாரிகளின் ஆலோசனைகளுக்கு அமைவாக செயற்படுவது அவசியமாகும் எனவும் பேராசிரியர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

நீர்கொழும்பில் கோர விபத்தில் பலியான இளைஞர்கள் : மூன்று பேர் கைது!!

நீர்கொழும்பு – கட்டானா பகுதியில் தனியார் பல்கலைக்கழகம் அருகில் (30) திகதி அதிகாலை இடம்பெற்ற கோர விபத்து சம்பவம் தொடர்பில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதிகாலை 1.45 மணியளவில் அலுமினியம் ஏற்றிச்சென்ற கண்டெய்னர் லொறியும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருந்தனர்.

இந்த விபத்தில் நீர்கொழும்பு, தாகொன்ன வீதியைச் சேர்ந்த 18 வயதான சிரிவர்தன ஆராச்சிலாகே தலிஷ் நிம்நெத் சிரிவர்தன மற்றும் 19 வயதான விஜேசுந்தர அப்புஹாமிலாகே கவிந்து ஹஷான் சோமதிலக ஆகிய இளைஞர்கள் உயிரிழந்திருந்தனர்.

இந்த விபத்தைத் தொடர்ந்து ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், விபத்துக்கு காரணமானதாக கூறப்படும் கண்டெய்னர் லொறிக்கு தீ வைத்துள்ளனர்.

இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணை மற்றும் விபத்து நடந்த பகுதியின் சிசிடிவி காட்சிகள் உள்ளிட்ட தகவல்களின் அடிப்படையில், கொள்கலன் லொறிக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நீர்கொழும்பு மற்றும் கிம்புலபிட்டிய பகுதிகளைச் சேர்ந்த 20, 25 மற்றும் 26 வயதுடைய மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட மூன்று சந்தேகநபர்களும் இன்று (31) நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்படவுள்ளனர்.

இதனுடன் தொடர்புடைய அனைத்து சந்தேகநபர்களையும் கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதேவேளை, விபத்துடன் தொடர்புடைய கண்டெய்னர் லொறியின் சாரதியான பன்னில – தென்ன பகுதியை சேர்ந்தவரை கட்டான பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அதே பகுதியில் கைவிடப்பட்டிருந்த மற்றொரு மோட்டார் சைக்கிளும் கண்டெடுக்கப்பட்டு பொலிஸாரின் காவலில் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இலங்கையை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கும் டெங்கு : உயிரிழப்பு 62 ஆக உயர்வு!!

நாட்டில் பதிவான டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 62 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. அந்தப் பிரிவு வெளியிட்ட அறிக்கையின்படி,

இந்த ஆண்டு இதுவரை பதிவான டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 84,724 ஆக அதிகரித்துள்ளது. அதன்படி, ஜூலை மாதத்தில் நேற்று (30) நிலவரப்படி பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 29,350 ஆகப் பதிவாகியுள்ளது.

இந்த ஆண்டு இதுவரை கம்பஹா மாவட்டத்தில் இருந்து 17,971 நோயாளிகளும், கொழும்பு மாவட்டத்தில் இருந்து 16,814 நோயாளிகளும், கண்டி மாவட்டத்தில் இருந்து 5,873 நோயாளிகளும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேல் மாகாணத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 44,829 ஆக கண்டறியப்பட்டுள்ளது. தெற்கு மாகாணத்தில் 12,738 நோயாளிகளும், மத்திய மாகாணத்தில் 7,370 நோயாளிகளும் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு அறிவித்துள்ளது.

இலங்கை மக்களுக்கு அவசர எச்சரிக்கை : உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளதாக அறிவிப்பு!!

எல் நினோ நிலைமையுடன் நிலவும் வெப்பத்தின் மத்தியில் மதுபானம் மற்றும் இனிப்பு பானங்களை அருந்துவது மனித உடலுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது வெப்பத் தாக்கத்தை ஏற்படுத்தி மரணத்தை உருவாக்கலாம் எனவும் சுகாதார அமைச்சின் தொழில்சார் சுகாதாரப் பிரிவு எச்சரித்துள்ளது. இந்நாட்களில் மனித உடலால் உணரக்கூடிய அதிக வெப்பநிலை காணப்படுகின்றது.

மதுபானம் அருந்துவதனால் உடலில் நீரிழப்பு ஏற்பட்டு பல்வேறு சிக்கல்கள் தோன்றக்கூடும் என அந்தப் பிரிவின் சமூக வைத்திய நிபுணர் இனோகா சுரவீர தெரிவித்தார்.

வெப்பமான வானிலை எதிர்வரும் சில நாட்களில் மேலும் தீவிரமடையக்கூடும். உடல் நீரிழப்புக்கு உள்ளாகாமல் பாதுகாப்பதற்கு சுத்தமான நீர், இளநீர், தர்பூசணி போன்றவற்றை அதிகமாகப் பயன்படுத்துவது மிகவும் பொருத்தமானது.

எல் நினோ நிலைமையுடன் வளிமண்டலத்தின் வெப்பநிலை கடுமையாக அதிகரிக்கும். இதனால், சிறுவர்கள், குழந்தைகள், கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் காலை 11.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரையான காலப்பகுதியில் வெயிலில் நடமாடுவதைத் தவிர்க்க வேண்டும்.

மேலும் பாதுகாப்பான முறைகளைப் பின்பற்ற வேண்டும். விசேடமாக தொற்றா நோய்களைக் கொண்ட சிறுநீரக நோயாளர்கள், இதய நோயாளர்கள்,

பக்கவாத நோயாளர்கள் மற்றும் நீரிழிவு நோயாளர்கள் தமது மருந்து மாத்திரைகளை முறையாக பெற்றுக்கொண்டு சுகாதாரப் பாதுகாப்புடன் இருப்பது மிகவும் முக்கியமானது.

வெப்பத் தாக்கத்திற்கு உள்ளாவதால் மரணங்கள் கூட நிகழக்கூடும். இதனால் சுகாதார அமைச்சினால் வழங்கப்படும் ஆலோசனைகளுக்கு அமைய செயற்படுமாறும் சமூக வைத்திய நிபுணர் இனோகா சுரவீர மேலும் கேட்டுக்கொண்டார்.

கோர விபத்தில் இரண்டு இளைஞர்கள் பலி : மக்களின் கொந்தளிப்பால் வன்முறை!!

நீர்கொழும்பை அண்மித்த பகுதியில் இளைஞர்கள் இருவர் உயிரிழந்த நிலையில் வன்முறை ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்து தொடர்பில் அங்கிருந்த மக்கள் வன்முறையில் ஈடுபட்டதுடன்,

வாகனம் ஒன்று தீ வைக்கப்பட்டு எரிக்கப்பட்டுள்ளது. கட்டான பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில், சம்பவித்த கோர விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.

போட்டிப் போட்டுக்கொண்டு அதிக வேகத்தில் பயணித்த இரண்டு மோட்டார் சைக்கிள்கள் வாகனம் ஒன்றில் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.

நேற்று இரவு இடம்பெற்ற இந்த விபத்தில், மோட்டார் சைக்கிள்களைச் செலுத்திச் சென்ற இரண்டு இளைஞர்களும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

விபத்தை தொடர்ந்து ஆத்திரமடைந்த கிராமவாசிகள் வாகனத்திற்குத் தீ வைத்துள்ளனர். இதனையடுத்து கட்டான பொலிஸ் நிலைய அதிகாரிகளும் நீர்கொழும்பு மாநகரசபையின் தீயணைப்புப் பிரிவினரும் சம்பவ இடத்திற்கு வருகை தந்தனர்.

வாகனத்தின் தீயை கட்டுப்படுத்தியதுடன், வன்முறை கட்டுப்படுத்தவும் பொலிஸாரால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வவுனியா கனகராயன்குளத்தில் பதிவாளர் நாயகத் திணைக்களத்தின் ஆவணக் காப்பகம் திறப்பு!!

வடக்கு மாகாண மக்களின் நீண்டகாலக் காத்திருப்புக்குத் தீர்வாக, பதிவாளர் நாயகத் திணைக்களத்தின் வடக்கு மாகாண ஆவணக் காப்பகம் இன்று (30.07.2026) வவுனியா, கனகராயன்குளம் பிரதேசத்தில் அமைந்துள்ள மன்னகுளம் கிராம சேவையாளர் பிரிவில் வைபவ ரீதியாகத் திறந்து வைக்கப்பட்டது.

பொது நிர்வாகம், உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பேராசிரியர் A.H. சந்தன அபயரத்னவினால் இந்த புதிய ஆவணக் காப்பகம் உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பிரதி அமைச்சர் ரூவன் செனரத், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசாங்க அதிபர்கள் மற்றும் பதிவாளர் நாயகத் திணைக்களத்தின் உயர் அலுவலர்கள் உட்படப் பல முக்கியப் பிரமுகர்கள் கலந்து சிறப்பித்தனர்.

இதுவரை காலமும் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களது முக்கிய ஆவணங்களான பிறப்புச் சான்றிதழ்கள், இறப்புச் சான்றிதழ்கள், திருமணச் சான்றிதழ்கள் ஆகியவற்றின் மூலப் பிரதிகளைப் பெறுவதற்கும், திருத்தங்களை மேற்கொள்வதற்கும் கொழும்பு வரை நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர்.

தற்போது வவுனியாவில் திறந்து வைக்கப்பட்டுள்ள இந்த மாகாண ஆவணக் காப்பகத்தின் மூலம், வடக்கு மாகாண மக்கள் அனைவரும் கொழும்பு செல்ல வேண்டிய அவசியமின்றி, மிகக் குறைந்த நேரத்திலும் இலகுவாகவும் தமக்கான சான்றிதழ்கள் மற்றும் ஆவணச் சேவைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஓகஸ்ட் 12ம் திகதி முழு சூரிய கிரகணம் : உலக மக்களுக்கு NASA அரிய வாய்ப்பு!!

ஆகஸ்ட் 12-ஆம் திகதி பூமியின் குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டுமே தென்படவுள்ள அபூர்வ முழு சூரிய கிரகண நிகழ்வை, உலகெங்கிலும் உள்ள மக்கள் பார்க்கும் வகையில் நாசா (NASA) நேரலை செய்யவுள்ளது.

கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, ஸ்பெயின் மற்றும் போர்த்துக்கல் உள்ளிட்ட குறிப்பிட்ட சில நாடுகளில் மட்டுமே இந்த முழு சூரிய கிரகணத்தை நேரடியாகப் பார்வையிட முடியும்.

இந்த விண்வெளி நிகழ்வை நேரடியாகப் பார்க்க முடியாத உலகெங்கிலும் உள்ள மக்கள் கண்டுகளிப்பதற்காக, நாசா தனது அதிகாரப்பூர்வ சமூக ஊடகப் பக்கங்களில் இதனை நேரலை (Live Stream) செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.

யாழில் இளைஞனின் உயிரை பறித்த அளவுக்கு மீறிய மோசமான பழக்கம்!!

யாழ்ப்பாணத்தில் போதைக்கு அடிமையான இளைஞன் ஒருவர் மலசல கூடத்திற்குள் மயங்கி விழுந்த இளைஞன் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

குறித்த இளைஞன் நேற்றைய தினம் வீட்டில் உள்ள மலசல கூடத்திற்கு சென்ற நிலையில் , நீண்ட நேரமாகியும் வராத நிலையில் வீட்டார் சென்று பார்த்த போது மலசல கூடத்திற்குள் மயங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார்.

அதனை அடுத்து அவரை மீட்டு வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற வேளை அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் அறிக்கையிட்டனர்.

சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் , மரண விசாரணையின் போது குறித்த இளைஞன் சில காலமாக கடுமையான போதைப்பொருள் பழக்கத்திற்கு உள்ளாகியிருந்தமை தெரிய வந்துள்ளது.

அதேவேளை யாழ்ப்பாண இளையோரிடையே போதைப்பழக்கம் அதிகமாக வருவதாக சமூக ஆர்வலர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

கட்டிடம் விழுந்து இளைஞன் பரிதாபமாக உயிரிழப்பு!!

காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காத்தான்குடி நூராணிய்யா மையவாடி முதலாம் குறுக்கு வீதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் புதிய வீடொன்றில் இடம்பெற்ற கட்டுமானப் பணியின்போது தூண் இடிந்து விழுந்ததில் 28 வயதுடைய இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் மட்டக்களப்பு ஜெயந்திபுரம், யாட் வீதியைச் சேர்ந்த 28 வயதுடைய இளைஞர் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் பிரேதப் பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

கிளிநொச்சி மாணவி எடுத்த விபரீத முடிவு!!

கிளிநொச்சி ஐயனார்புரம் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையில் தரம்- 09 இல் கல்வி பயின்று வந்த மாணவி நேற்றுச் செவ்வாய்க்கிழமை (28. ) தவறான முடிவெடுத்துத் தனது உயிரை மாய்த்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாடசாலையில் கற்றல் அடைவுகளில் முதன்மை மாணவியாகத் திகழ்ந்ந்து வந்த குறித்த மாணவியின் திடீர் மரணம் பாடசாலைச் சமூகத்தையும், கிராம மக்களையும் துயரில் ஆழ்த்தியுள்ளது.

உயிரிழந்த மாணவி கடந்த சில காலமாகவே தீவிரமான உடல் உபாதையாலும், உள்-உறுப்புச் சார்ந்த நோய் பாதிப்பினாலும் அவதியுற்று வந்துள்ளதாக தெரிய வருகின்றது.

இதற்காக வைத்தியசாலையினால் அறுவைச் சிகிச்சைக்கான திகதியும் வழங்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந் நிலையில் மாணவி மன உளைச்சலால் இத்தகைய முடிவை எடுத்திருக்கலாம் என நெருக்கமானவர்கள் தெரிவிக்கின்றனர்

 

கனடாவில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர் திடீர் மரணம்!!

கனடாவில் , யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஊடகவியலாளர் ஆறுமுகம் சபேஸ்வரன் நேற்றிரவு உயிரிழந்துள்ளதுள்ளதாக கூறப்படும் நிலையில் ஊடகவியலாளரின் மறைவு தொடர்பாக யாழ். ஊடக மன்றத்தின் இரங்கல் அறிக்கை வெளியிட்டுள்ளது.

நீண்டகால ஊடக அனுபவம் கொண்டிருந்த அவர், யாழ்ப்பாண பல்கலைக்கழக ஊடக வழங்கல் பயிற்சி மையத்தில் விரிவுரையாளராகப் பணியாற்றி பல திறமையான ஊடகவியலாளர்களை உருவாக்கிய பெருமைக்குரியவராகக் குறிப்பிடப்பட்டுள்ளார்.

மேலும், பிரபல பத்திரிகையின் முன்னாள் செய்தி ஆசிரியராகப் பணியாற்றிய அவர், பல முக்கிய சமூகப் பிரச்சினைகள் மற்றும் பொதுமக்கள் நலன் சார்ந்த விடயங்களை வெளிக்கொணர்ந்து சமூகத்திற்கு சிறந்த பங்களிப்பை வழங்கியதாகவும் மன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

உலகசெய்தி தமிழ் ஊடகத்துறையில் நீண்டகாலம் அர்ப்பணிப்புடன் சேவையாற்றிய அவர், ஊடகவியலாளர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்ததோடு, அவர்களது உரிமைப் போராட்டங்களில் முன்னின்று செயற்பட்ட ஆளுமையாகவும் விளங்கியுள்ளார்.

அதேவேளை, தமிழ் மக்களின் உரிமைப் போராட்டங்கள் தொடர்பான செய்திகளை நடுநிலையுடன் வெளியிட்டு, உண்மைத் தகவல்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் முக்கிய பங்காற்றியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரது உடல் மறைந்தாலும், ஊடகத்துறைக்காக அவர் ஆற்றிய அர்ப்பணிப்பான சேவைகளும், அவர் பதித்த தடங்களும் தமிழ் ஊடக வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும் என யாழ்ப்பாண ஊடக மன்றம் தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளது.

 

இன்ஸ்டாகிராம் காதலனால் 24 வயது பெண் எரித்துக் கொலை!!

இளம்பெண்ணின் நடத்தையில் சந்தேகப்பட்டு நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்து தூங்கிக்கொண்டிருந்த அவரை எரித்துக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு பாரதி நகரில் வசித்து வந்தவர் வினோதினி(24). இவருக்கு திருமணமாகி 4 வயதில் ஒரு மகன் இருக்கிறான். கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் கடந்த இரண்டு வருடங்களாக அவரை பிரிந்து தனது பெற்றோரின் வீட்டில் அருகே மற்றொரு வீட்டில் வினோதினி மகனுடன் வசித்து வந்தார்.

இன்ஸ்டாகிராம் மூலம் ராமநாதபுரம் மாவட்டம் கமுதி சாயல்குடையை சேர்ந்த நவநீதி கிருஷ்ணன்(26) என்பவரோடு வினோதினிக்கு பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியுள்ளது.

கடந்த சில நாட்களாக நவநீத கிருஷ்ணனின் நடவடிக்கை பிடிக்காததால் வினோதினி அவரிடம் சரியாக பேசவில்லை. எனவே, வினோதினி தன்னை விட்டுவிட்டு வேறு யாருடனோ பழகி வருகிறார் என நவநீத கிருஷ்ணன் சந்தேகம் ஏற்பட்டது.

சம்பவத்தன்று நள்ளிரவு ஈரோட்டுக்கு வந்த நவநீத கிருஷ்ணன் வினோதினியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு ஆத்திரமடைந் வீட்டிலிருந்த மண்ணெண்ணெயை வினோதினியின் உடல் மீது ஊற்றி தீ வைத்திருக்கிறார்.

அப்போது நவநீதகிருஷ்ணன் கையிலும் தீக்காயம் ஏற்பட்டது. ஆனால் அங்கிருந்த அவர் தப்பி ஓடிவிட்டார். வினோதினியின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்து அவரின் பெற்றோர்கள் அவரை ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

ஈரோடு கூடுதல் மகளிர் நீதிபதி நீதிமன்ற நீதிபதி அன்புச்செல்வி முன்னிலையில் நவநீதகிருஷ்ணன் என்னை ஊற்றி கொலை செய்யப்பட்டார் என வாக்குமூலம் கொடுத்துவிட்டு வினோதினி இறந்துவிட்டார்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நவநீத கிருஷ்ணனை கைது செய்துள்ளனர். இன்னிலையில் கள்ளக்காதலால் பெண் தீவைத்து எரிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மின்கம்பத்தில் ஏறிய நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

குடும்பத் தகராறு ஒன்றின் காரணமாக உயர் அழுத்த மின்சாரக் கம்பமொன்றில் ஏறி எதிர்ப்பு நடவடிக்கையொன்றை மேற்கொண்ட நபருக்கு இரண்டு இலட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மாத்தறை , கம்புறுப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த நபரொருவருக்கே மாத்தறை நீதவான் நீதிமன்றத்தினால் குறித்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ​

கடந்த 21 ஆம் திகதி பிற்பகல் தனது குடும்பத் தகராறு ஒன்றைத் தீர்த்துக் கொள்வதற்காக குறித்த நபர் உயர் அழுத்த மின்சாரக் கம்பத்தில் ஏறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதனால் திஹகொட, கம்புறுபிட்டிய, அக்குரஸ்ஸ, முலட்டியன, தெஹியந்தறை, மாவரல, தெனியான உள்ளிட்ட பல பகுதிகளுக்கு இரண்டு மணித்தியாலங்களுக்கும் அதிகமான நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

​மின்கம்பத்தில் ஏறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நபரின் குடும்ப உறுப்பினர்களைப் பொலிஸார் வரவழைத்து சமரச முயற்சிகளை மேற்கொண்டதைத் தொடர்ந்து அவர் கீழே இறங்கினார்.

பின்னர் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டதுடன்,

நேற்றைய தினம் நீதிமன்றத்தில் இடம்பெற்ற விசாரணையின் போது மின்சார சபைக்கு ஏற்பட்ட நஷ்டம் 201,059.90 ரூபா எனப் பொலிஸாரால் அறிவிக்கப்பட்டுள்ளது. அதனையடுத்து குறித்த அபராதத் தொகையை மின்சார சபைக்குச் செலுத்துமாறு நீதிமன்றம் அவருக்கு உத்தரவிட்டுள்ளது.

நல்லத்தண்ணி மோகினி நீர்வீழ்ச்சி விபத்து – பாடசாலை மாணவி உயிரிழப்பு!!

கடந்த 22 ஆம் திகதி நல்லத்தண்ணி மோகினி நீர்வீழ்ச்சி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த நிலையில் கண்டி போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த 13 வயது பாடசாலை மாணவி சிகிச்சை பலனின்றி இன்று (30) உயிரிழந்துள்ளதாக நல்லத்தண்ணி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தில் கீழ் நல்லத்தண்ணி முர்ரே தோட்டத்தினை சேர்ந்த மஸ்கெலியா புனித ஜோசப் கல்லூரியில் 8ஆம் வகுப்பில் கல்வி பயின்ற மாணவி செல்வம் திஷ்னா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மாணவியின் சடலம் மீதான மரண விசாரணையின் பின்னர், உடற்கூற்றுப் பரிசோதனை செய்யப்பட்டு சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.

நல்லத்தண்ணியிலிருந்து மாஸ்கெலியா நோக்கிச் சென்றுகொண்டிருந்த முச்சக்கர வண்டி கடந்த 22ஆம் திகதி மோகினி எல்ல பகுதியில் பிரதான வீதியில் இருந்து விலகிச்சென்று விபத்துக்குள்ளாகியிருந்தது.

இந்த விபத்தில் முச்சக்கரவண்டியின் சாரதியும், பின் இருக்கையில் பயணித்த அவரது உறவினரும் விபத்து நடந்த இடத்திலேயே உயிரிழந்தனர்.

முச்சக்கரவண்டியில் பயணித்த இரண்டு பாடசாலை மாணவிகளும், ஒரு பாடசாலை மாணவனும் படுகாயமடைந்து, கண்டி போதனா வைத்தியசாலை, நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலை மற்றும் டிக்கோயா ஆதார வைத்தியசாலை ஆகியவற்றில் சிகிச்சை பெற்று வந்தனர்.

இந்நிலையில், டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பாடசாலை மாணவன் தற்போது வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளதாக நல்லத்தண்ணி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

GovPay மூலம் பணம் செலுத்தும் பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை!!

உத்தியோகபூர்வ GovPay அமைப்பை ஒத்த போலி இணையதளங்களை உருவாக்கி, பொதுமக்களை ஏமாற்றிப் பணமோசடி செய்யும் சம்பவங்கள் தொடர்பில் விழிப்புடன் இருக்குமாறு இலங்கை பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சாரதிகள் வீதிப் போக்குவரத்து விதிகளை மீறும்போது பொலிஸாரால் வழங்கப்படும் வீதி அபராதப் பத்திரங்களுக்கான தொகையை GovPay மூலம் செலுத்துவதற்கான வசதி செய்யப்பட்டுள்ளது.

இதை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு, போலி இணையதள முகவரிகளை உருவாக்கி மோசடி கும்பல்கள் பணத்தைக் கொள்ளையடித்து வருவது பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குறிப்பாகக் கடந்த சில நாட்களாக, ‘இலங்கை பொலிஸ்’ எனும் பெயரில் வேகக்கட்டுப்பாட்டை மீறியமை உள்ளிட்ட வீதிப் போக்குவரத்து விதிகளை மீறியதாகக் கூறி,

அபராதத்தைச் செலுத்துமாறு போலியான குறுஞ்செய்திகள் பொதுமக்களின் தொலைபேசிகளுக்கு அனுப்பப்பட்டு வருவதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன. இது தொடர்பாக பொலிஸாரின் அறிவிப்பில், இலங்கை பொலிஸார் வீதிப் போக்குவரத்து விதிமீறல்களின் போது,

சம்பந்தப்பட்ட நபருக்குச் சம்பவ இடத்திலேயே தவறைச் சுட்டிக்காட்டி அபராதப் பத்திரத்தை வழங்குவர் அல்லது நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்வர். அதுவே தற்போதைய நடைமுறையாகும்.

அதேபோன்று, கண்காணிப்பு கமராக்கள் மூலம் போக்குவரத்து விதிமீறல்கள் கண்டறியப்பட்டாலும் கூட, குறுஞ்செய்தி மூலம் வங்கி கணக்கு விபரங்களைக் கோரும் நடைமுறை பொலிஸாரிடம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இல்லை என்றும், எனவே பொதுமக்கள் இதுபோன்ற போலியான குறுஞ்செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

இவ்வாறான போலி இணைப்புக்களைப் பயன்படுத்திப் பணத்தை இழக்க வேண்டாம் என எச்சரித்துள்ள பொலிஸார், ஏற்கனவே இதுபோன்ற மோசடிகளால் பாதிக்கப்பட்டிருந்தால், உடனடியாக அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்குச் சென்று முறைப்பாடு செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

GovPay என்பது உங்களது அதிகாரப்பூர்வ வங்கி செயலிகள் அல்லது நிதித் தொழில்நுட்ப செயலிகள் மூலமாக மட்டுமே இயங்கும் ஒரு கட்டணச் சேவையாகும்.

குறுஞ்செய்தி அல்லது பிற உத்தியோகபூர்வமற்ற வழிகளில் வரும் எந்தவொரு கட்டண இணைப்புகளையும் பயன்படுத்த வேண்டாம் எனப் பொதுமக்களுக்கு கடுமையான அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

இளம் பெண் வைத்தியர் கொலை விவகாரம் : சந்தேகநபர்களுக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு!!

நுவரெலியாவில் உடற் சிகிச்சை நிபுணர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர்கள் நால்வரின் விளக்கமறியல் உத்தரவு எதிர்வரும் ஆகஸ்ட் 3 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பிரதான சந்தேகநபர், அவரது மனைவி மற்றும் குற்றத்திற்கு துணை புரிந்ததாக கூறப்படும் மேலும் இருவர் உள்ளிட்ட நால்வரின் விளக்கமறியலே இவ்வாறு நீடிக்கப்பட்டுள்ளது.

குறித்த நால்வரும் இன்று (30) நுவரெலியா நீதவான் நீதிமன்றில் சிறைச்சாலை அதிகாரிகளால் நுவரெலியா நீதவான் புஷ்பிகா ஜயதாச முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டதை தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நாரம்மல பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய ஜயசுந்தர முதியன்சேலாகே சம்பிக ஸ்ரீயான் ஜயசுந்தர, அவரது மனைவியான 35 வயதுடைய ரத்நாயக்க முதியன்சேலாகே நெத்மி அமாயா ரத்நாயக்க,

கொலைச் சம்பவத்திற்கு உதவியதாகக் கூறப்படும் குண்டசாலை பிரதேச சபையின் 49 வயதுடைய சாரதி ஜயசிங்க ஆராச்சிகே ரஜித சாலிய சமரசிங்க மற்றும் குண்டசாலை பொலிஸ் பயிற்சி கல்லூரியின் பொலிஸ் பரிசோதகர் அனில் ஆரியவங்ச ஆகியோர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இக்கொலை சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.