பிரித்தானியாவில் இருந்து நாடுகடத்தப்படவுள்ள இலங்கைக் குடும்பம் : ஏற்பட்டுள்ள திடீர் திருப்பம்!!

ஐக்கிய ராச்சியத்தில் தொழில் ரீதியாகவும் தன்னார்வ அடிப்படையிலும் பெரிய அளவிலான சமூக சேவையில் ஈடுபட்டுள்ள ஒரு இலங்கை குடும்பத்தை நாடு கடத்துவதற்கான அந்நாட்டு உள்துறை அமைச்சின் முடிவு, பிரித்தானிய நாடாளுமன்றத்தில் கடும் எதிர்ப்பைச் சந்தித்துள்ளது.

பிரித்தானிய மக்கள் பிரதிநிதிகள் சபை (House of Commons) ஹவுஸ் ஆஃப் காமன்ஸில் பேசிய லிபரல் ஜனநாயகக் கட்சியின் எம்.பி. விக்டோரியா கொலின்ஸ்,

குறித்த இலங்கை குடும்பம் எதிர்கொள்ளும் நெருக்கடியிலிருந்து அவர்களை மீட்க பிரித்தானிய அரசாங்கம் உடனடியாகத் தலையிட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

உள்ளூர் சமூகத்திற்கு மிகவும் மதிப்புமிக்க சேவையை ஆற்றிவரும் இவர்களை நாடு கடத்துவது முற்றிலும் அநியாயமானது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

நாடு கடத்தலை எதிர்கொள்ளும் அந்தக் குடும்பத்தினர் ரசிக சமரசிங்க, அவரது மனைவி சமிலா தில்ருக்ஷி (45), மற்றும் அவர்களது மூன்று சிறு குழந்தைகள் ஆவர். இவர்கள் அனைத்து சட்ட நடைமுறைகளையும் பின்பற்றி கடந்த நான்கு ஆண்டுகளாக பிரித்தானியாவில் வசித்து வருகின்றனர்.

ரசிக ஒரு பராமரிப்புப் பணியாளராகவும், சமிலா நோர்த்சர்ச் பகுதியில் சிறப்புத் தேவைகள் கொண்ட குழந்தைகளுக்கு ஆதரவளிக்கும் ஒரு துணை ஆசிரியராகவும், உள்ளூர் தேவாலயத்தில் ஒரு தன்னார்வலராகவும் பணியாற்றி வருகின்றனர்.

புதிய விசா விதிமுறைகளின் கீழ் சட்டப்பூர்வமாக வசித்து வந்த தாயும் மூன்று குழந்தைகளும், 14 நாட்களுக்குள் இங்கிலாந்தை விட்டு வெளியேறுமாறு உள்துறை அமைச்சினால் திடீரென உத்தரவிடப்பட்டுள்ளனர்.

தந்தை மட்டுமே தங்குவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளதால், அவர்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.

அதிகாரிகளின் இந்த முடிவு அப்பகுதியில் வசிக்கும் பிரித்தானிய மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதுடன், அவர்கள் ஏற்கனவே அந்த இலங்கை குடும்பத்திற்கு தங்கள் ஆதரவைத் தெரிவித்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் கொலின்ஸ் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இந்தத் தம்பதியினர் உள்ளூர் மக்களால் முன்களப் பணியாளர்களாகவும், சமூகத்தின் வலுவான தூண்களாகவும் மதிக்கப்படுகிறார்கள். மேலும்,அவர்களின் கருணையும் அர்ப்பணிப்பும் ஒட்டுமொத்த சமூகத்தாலும் பாராட்டப்படுகிறது.

குழந்தைகளை அவர்களின் தந்தையரிடமிருந்து பிரிப்பது, அவர்கள் மீது கடுமையான உளவியல் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால், மனிதாபிமான அடிப்படையில் இந்த முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு அந்தக் குடும்பம் பிரித்தானிய அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்துள்ளது.

இந்தப் பிரச்சினைக்கு உடனடி நடவடிக்கையும் சாதகமான தீர்வையும் கோரி, குடிவரவுத்துறை அமைச்சருக்கு அதிகாரப்பூர்வமாக கடிதம் எழுதியுள்ளதாக விக்டோரியா கொலின்ஸ் கூறியுள்ளார்.

இதேபோன்ற சிரமங்களை எதிர்கொள்ளும் மற்ற குடும்பங்களுக்கும் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.

அவரைத் தொடர்ந்து உரையாற்றிய பிரிட்டிஷ் பாராளுமன்றத்தின் பிரதி சபாநாயகர் கரோலின் நோக்ஸ், நாடாளுமன்ற உறுப்பினரின் கவலைகளைத் தாம் புரிந்துகொண்டதாகவும், ஆனால் இது சபாநாயகர் அலுவலகத்தின் மூலம் நேரடியாகத் தீர்க்கக்கூடிய ஒரு பிரச்சினை அல்ல என்றும் கூறினார்.

அதன்படி, இந்த இலங்கை குடும்பத்திற்காகத் தொடர்ந்து குரல் கொடுக்க எடுக்கக்கூடிய மாற்று நாடாளுமன்ற நடவடிக்கைகளை ஆராய்வதற்காக, அவை அலுவலகத்துடன் (Table Office) இணைந்து செயல்படுமாறு பிரதி சபாநாயகர் விக்டோரிய கொலின்ஸ் எம்.பி.க்கு அறிவுறுத்தியுள்ளார்.

இலங்கையில் மீண்டும் உச்சத்தை தொடும் தங்கத்தின் விலை : இன்று பதிவாகியுள்ள நிலவரம்!!

இலங்கையில் இன்றைய தினமும் (16.06.2026) தங்கத்தின் விலையில் அதிகரிப்பு பதிவாகியுள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அந்த வகையில் இன்றைய தினம் 24 கரட் தங்க பவுண் ஒன்று 2000 ரூபாயால் அதிகரித்துள்ளது. அதன்படி 24 கரட் தங்க பவுண் ஒன்று 394,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.

அத்துடன் 22 கரட் தங்க பவுண் ஒன்று 4000 ரூபாயால் அதிகரித்து 362,500 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 49,250 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 45,313 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன் நான்கு இலட்சம் ரூபாவை தொட்டிருந்த 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது அண்மைய சில நாட்களாக வீழ்ச்சிப் போக்கினை காட்டியிருந்தது.

இவ்வாறான சூழலில் தற்போது மீண்டும் உயர்வு போக்குடன் நான்கு இலட்சம் ரூபாவை மிகவும் நெருங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து முச்சக்கரவண்டி விபத்து!!

அதிவேகமாக பயணித்த முச்சக்கர வண்டி ஒன்று ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் வட்டவளை, கரோலினா பகுதியில் சுமார் 100 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

நேற்று (15) மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் முச்சக்கரவண்டி பிரதான வீதியை விட்டு விலகி செங்குத்தான சரிவு ஒன்றில் சுமார் 100 அடி பள்ளத்தில் வீழ்ந்துள்ளது.

பொலிஸார் விசாரணை

கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து தலவாக்கலை நோக்கிச்சென்றுகொண்டிருந்த போதே, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து முச்சக்கரவண்டி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்து இடம் பெற்றபோது, வெளிநாட்டிலிருந்து வருகை தந்த நபர் ஒருவரும் முச்சக்கர வண்டியில் பயணித்துள்ளார்.

இந்த விபத்தினால் முச்சக்கரவண்டிக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதுடன், காயமடைந்த சாரதி உடனடியாக வட்டவளை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் குறித்து வட்டவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

கொழும்பில் இருந்து சென்ற பேருந்தில் ஏற்பட்ட அனர்த்தம் : 40 உயிர்களை காப்பாற்றிய சாரதி!!

கொழும்பில் இருந்து பதுளை நோக்கி பயணித்த பேருந்து ஒன்று பாரிய விபத்தில் இருந்து தப்பியுள்ளதாக தெரியவந்துள்ளது. தியத்தலாவ மற்றும் ஹப்புத்தளைக்கு இடைப்பட்ட வீதியில் நேற்று அதிகாலை 4.00 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

திடீரென பேருந்தின் பிரேக் செயலிழந்ததால் ஏற்படவிருந்த பாரிய விபத்து, பேருந்து ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் தவிர்க்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பிரேக் செயலிழந்ததை உணர்ந்த ஓட்டுநர் பேருந்தை வீதியின் வலது பக்கமாக மேல் நோக்கிய பாதையில் திருப்பி விபத்தைத் தடுக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.

இவ்வாறு செய்ததன் மூலம் பேருந்தில் இருந்த 40 பயணிகளின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது. எனினும் அந்த இடத்தில் இருந்த பௌத்த விகாரைக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.

ஆனால், புத்தர் சிலைக்கு எந்தவொரு சேதமும் ஏற்படவில்லை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

உயிரை மாய்த்துக்கொண்ட இளம் சீரியல் நடிகை : வைரலாகும் கடைசிப் பதிவு!!

இளம் சீரியல் நடிகை சஞ்சிதா உயிரை மாய்த்துள்ள நிலையில் அவர் இறப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னர் போட்ட பதிவு வைரலாகி வருகிறது.

கும்கும் பாக்யா, தில்வாலி துல்ஹா லே ஜாயேகி உள்ளிட்ட இந்தி டிவி சீரியல்களில் நடித்து பிரபலமானவர் சஞ்சிதா உகலே(sanchita ugale).

நேற்று இரவு 7 மணி முதல் 7.30 மணிக்குள், மகாராஷ்டிராவின் நாலசோபாரா கிழக்கில் உள்ள தனது வீட்டில் தனது படுக்கையறைக்குள் தன்னைத் தானே பூட்டிக்கொண்டு, ஒரு சேலையைப் பயன்படுத்தி மின்விசிறியில் தூக்கிட்டுத் உயிரை மைத்துக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

குடும்ப உறுப்பினர்களும் அண்டை வீட்டாரும், உடனடியாக அவரை வசாய்-விரார் நகராட்சி மருத்துவமனைக்கு அவசரமாகக் கொண்டு சென்றனர். ஆனால், மருத்துவமனைக்கு வரும்போதே அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.

அவரது தந்தை மச்சிந்திர உகலே அளித்த புகாரின் அடிப்படையில், அச்சோல் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

பயணம், உடற்பயிற்சி மற்றும் யோகாவிலும் ஆர்வம் உள்ள சஞ்சிதா, அது தொடர்பான பல்வேறு பதிவுகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

சஞ்சிதா உகலேவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை 1.43 லட்சம் பேர் பின்தொடர்கின்றனர்.

அவர் இறப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, 1979 ஆம் ஆண்டு வெளியான ‘சர்கம்’ திரைப்படத்தின் ‘டஃப்லி வாலே டஃப்லி பஜா’ பாடலுக்கு உதட்டசைக்கும் ஒரு வீடியோவைப் பதிவிட்டிருந்தார்.

இவ்வளவு மகிழ்ச்சியாக உள்ள ஒருவர், எப்படி சில மணி நேரங்களில் உயிரை மாய்துகொண்டுள்ளார் என ரசிகர்கள் அந்த பதிவில் கமெண்ட் செய்து வருகின்றனர்.

அவருடன் நடித்த படக்குழுவினர் சஞ்சிதாவின் இறப்பிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

 

23 வயதில் 19 அரசுப்பணி தேர்வுகளில் வெற்றி : சென்னையில் பணிபுரியும் பெண்ணின் சாதனை!!

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கானோர், அரசுவேலைக்கான போட்டித்தேர்வுகளை எழுதி வருகின்றனர். பல லட்சங்களை செலவழித்து, பயிற்சி மையத்திற்கு சென்று படித்தாலும், ஆண்டுக்கு 0.5%பேர்களே அதில் தேர்ச்சி பெறுகின்றனர்.

ஆனால், இளம்பெண் ஒருவர் தனது 23 வயதிற்குள்ளாகவே 19 அரசுபணிக்கான தேர்வுகளில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.

சட்டீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரைச் சேர்ந்த சாரு பாண்டே(charu pandey), SSC, SBI, RRB போன்ற 19 அரசுப்பணி தேர்வுகளில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.

அவர் எந்த ஒரு பயிற்சி மையத்திற்கும் செல்லாமல், வீட்டில் இருந்தபடியே படித்து தேர்ச்சி பெற்றுள்ளார்.

இதற்காக வரும் சுதந்திர தினத்தில் ஜனாதிபதியால் தங்க மெடல் வழங்கி கௌரவிக்கப்பட்ட உள்ளார்.

சாரு பாண்டே மே 2025 முதல் இந்தியத் தலைமை கணக்குத் தணிக்கையாளரின் (CAG) சென்னை அலுவலகத்தில் உதவித் தணிக்கை அதிகாரியாக (AAO) பணியாற்றி வருகிறார்.

ஹேமசந்த் யாதவ் பல்கலைக்கழகத்தில் கணிதத்தில் இளங்கலை அறிவியல் பட்டம் பெற்றுள்ள இவர், தனது இளங்கலைப் பட்டப்படிப்பைத் தொடரும்போதே, போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகத் தொடங்கியுள்ளார்.

ஆரம்பத்தில் பல்வேறு பின்னடைவுகளை சந்தித்தாலும், தனக்கு கிடைத்த அனுபவங்களின் மூலம் பாடங்கற்றுக்கொண்டு தன்னை மேம்படுத்திக்கொண்டுள்ளார்.

இது குறித்து பேசிய சாரு பாண்டே, “நான் ஆசிரியர் பணியைத் தேர்ந்தெடுத்து ஒரு ஆசிரியராகவோ அல்லது பேராசிரியராகவோ ஆக வேண்டும் என்று என் பெற்றோர் விரும்பினார்கள்.

ஆனால் நான் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் பாதையைத் தேர்ந்தெடுத்தேன். என் குடும்பத்தினரும் எனது முடிவுக்கு முழு ஆதரவு அளித்தனர்.

பள்ளியில், நான் கணிதத்தில் நன்றாக இருந்தாலும், மற்ற பாடங்களில் ஒரு சராசரி மாணவியாகவே இருந்தேன். இருப்பினும், வெற்றி என்பது திறமையால் மட்டும் வருவதில்லை, தொடர்ச்சியான கடின உழைப்பாலும் ஒழுக்கத்தாலும் வருகிறது என்று நம்புகிறேன்.

ஒரு தேர்வை எழுதிய பிறகு, அதைப் பற்றி அதிகமாகச் சிந்திப்பதற்குப் பதிலாக, அடுத்த இலக்கில் கவனம் செலுத்துவேன். முதல் தகுதிப் பட்டியலில் என் பெயர் இடம்பெறவில்லை என்றால், நிச்சயமாக இரண்டாவது பட்டியலில் இடம்பெறும்.

எந்தளவிற்கு நேரம் ஒதுக்கி படிக்கிறோமோ அதே அளவிற்கு ஓய்வும் அவசியம். நான் 10 நிமிடங்கள் முதல் அரை மணி நேரம் வரை நடைப்பயிற்சிக்குச் செல்வேன், அல்லது என் குடும்பத்துடன் 5 முதல் 10 நாட்கள் பயணம் செல்வேன்.

வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் முனைவர் பட்டம் (PhD) பெறவும், யு.பி.எஸ்.சி (UPSC) தேர்வுக்குத் தயாராகுவேன்” என தெரிவித்துள்ளார்.

5 ஆண்டு கால விவாகரத்து வழக்கு : ஆவணங்களை கிழித்து வீசி நீதிமன்றத்தில் ஒன்றுசேர்ந்த தம்பதி!!

ஐந்து ஆண்டு கால விவாகரத்து வழக்கு ஆவணங்களை நீதி​மன்ற வளாகத்​தில் கிழித்​தெறிந்த மனை​வி, தனது கணவருடன் ஒன்று சேர்ந்​த சம்பவம் வனெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பில் இந்திய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளதாவது, டெல்​லியை சேர்ந்​தவர் ஷிகா. இவர் தனி​யார் பள்​ளி​யில் ஆசிரியையாகப் பணி​யாற்றி வரு​கிறார். கடந்த 2020-ம் ஆண்​டில் ஷிகா​வுக்​கும் சாப்ட்​வேர் இன்​ஜினீயர் சவுரபுக்​கும் திரு​மணம் நடை​பெற்​றது.

திருமணம் சில மாதங்​களி​லேயே இரு​வருக்​கும் இடையே கருத்து வேறு​பாடு​கள் எழுந்​தன. கணவர் வீட்டை விட்டு வெளி​யேறிய ஷிகா, தனது தாய் வீட்​டில் தனி​யாக வசித்து வந்​தார். கணவர் சவுரபிடம் இருந்து விவாகரத்து கோரி டெல்லி குடும்ப நல நீதி​மன்​றத்​தில் அவர் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு சுமார் 5 ஆண்​டு​களாக நீதிமன்றத்தில் நடை​பெற்று வந்​தது. இந்த நிலையில் சில வாரங்​களுக்கு முன்பு ஷிகா​வின் தந்​தைக்கு திடீரென மாரடைப்பு ஏற்​பட்​டது. நிதிச்​சுமை காரண​மாக அவர் அரசு மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்​டார்.

இந்த தகவல் சவுரபுக்கு தெரிய​வந்​தது. உடனடி​யாக மருத்​து​வ​மனைக்கு சென்ற அவர், குரு​கி​ராமில் உள்ள தனி​யார் மருத்​து​வ​மனை​யில் மாம​னாரை சேர்த்​தார். மருத்​துவ சிகிச்​சைக்​கான முழுச்​செல​வையும் அவரே ஏற்​றுக் கொண்​டார்.

இதன்​காரண​மாக இரு குடும்​பங்​களுக்கு இடையே இருந்த கசப்​புணர்வு மறைந்​தது. ஷிகா​வின் மனநிலை​யிலும் மிகப்​பெரிய மாற்​றம் ஏற்​பட்​டது. சில நாட்​களுக்கு முன்பு டெல்​லி​யில் உள்ள குடும்ப நல நீதி​மன்​றத்​தில் விவாகரத்து வழக்கு மீண்​டும் விசா​ரணைக்கு வந்​தது.

இதில் ஆஜராக சவுரபும் ஷிகா​வும் நீதி​மன்​றத்​துக்கு சென்​றனர். அப்​போது நீதி​மன்ற வளாகத்​தில் கணவரை பார்த்த ஷிகா, ஓடோடிச் சென்று கட்​டியணைத்து கதறி அழு​ததுடன் தனது கையில் வைத்​திருந்த விவாகரத்து வழக்கு ஆவணங்​களை கிழித்​தெறிந்து வீசி​னார்.

விவாகரத்து வழக்கை வாபஸ் பெறு​வ​தாக இரு​வரும் நீதிப​தி​யிடம் முறை​யிட்​ட நிலையில் நீதிபதி மகிழ்ச்​சி​யுடன் ஏற்றுக் கொண்​டார். நீதி​மன்ற வளாகத்​தில் சவுரபும் ஷிகா​வும்​ உணர்​ச்​சிப்​பெருக்​கில்​ கதறி அழுத வீடியோ சமூக வலைதளங்களில்​ வைரலாக பரவி வருகிறது.

செவ்வாய் பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா?

ஜோதிடத்தில் கிரகங்களின் தளபதியாக கருதப்படுபவர் செவ்வாய் தற்போது செவ்வாய் தனது சொந்த ராசியான மேஷ ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் இவர் ஜூன் 21 ஆம் திகதி ரிஷப ராசிக்குள் நுழையவுள்ளார்.

இந்த ரிஷப ராசியின் அதிபதி சுக்கிரன். இந்த சுக்கிரனின் ராசிக்கு செவ்வாய் செல்வதால் அதன் தாக்கம் 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். இப்போது செவ்வாய் பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

ரிஷபம்

ரிஷப ராசியின் முதல் வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் தங்கள் வேலையில் நல்ல மாற்றங்களைக் காண்பார்கள். புதிய நட்புகள் கிடைக்கும்.

அந்த நட்புகளால் எதிர்காலத்தில் நல்ல நிதி ஆதாயங்களும், முன்னேற்றத்தையும் காணக்கூடும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடனான உறவு வலுவடையும்.

கடகம்

கடக ராசியின் 11 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு இப்பெயர்ச்சியானது ஒரு திருப்புமுனையாக இருக்கும். நீண்ட கால கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்.

பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும் வாய்ப்புள்ளது. தொழிலதிபர்களுக்கு நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். இதன் மூலம் வங்கியில் இருப்பு அதிகரிக்கும்.

சிம்மம்

சிம்ம ராசியின் 10 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கும். நீண்ட காலமாக முடிக்க முடியாமல் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும்.

பணியிடத்தில் உங்களின் கடின உழைப்பு பாராட்டப்படும். புதிய வருமான வழிகள் உருவாகும். நிதி நிலை உயரும். இருப்பினும் செலவைக் கட்டுப்படுத்த பட்ஜெட் போட்டு செலவு செய்வது நல்லது.

தனுசு

தனுசு ராசியின் 6 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களின் குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவு கிடைக்கும். நீண்ட காலமாக சந்தித்து வந்த பண கஷ்டங்கள் கொஞ்சம் கொஞ்சமாக குறையும்.

மேலும் சிக்கியிருந்த பணம் திடீரென்று கைக்கு வந்து சேரும். பணிபுரிபவர்களுக்கு புதிய பொறுப்புக்கள் கிடைக்கலாம். அதோடு, சம்பள உயர்வும் கிடைக்கும் வாய்ப்புள்ளது.

மீனம்

மீன ராசியின் 3 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களின் ஆற்றல் அதிகரிக்கும். பணியிடத்தில் இலக்குகளை அடைந்து வெற்றி பெறுவீர்கள்.

ஆனால் இக்காலத்தில் அவசரப்பட்டு எந்த ஒரு முடிவையும் எடுக்க வேண்டாம். பொறுமையை கையாண்டால், சூழ்நிலைகள் சாதகமாக மாறும். இக்காலத்தில் புதிய முதலீடுகளை செய்தால், நல்ல லாபத்தைப் பெறலாம்.

 

சாதி மறுத்து திருமணம் : காவல் நிலையத்திலேயே மகளை கொன்ற தந்தை!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்ட 19 வயது இளம்பெண் ஒருவர், பாதுகாப்பு கேட்டு வந்த காவல் நிலையத்திற்குள்ளேயே அவரது பெற்ற தந்தையால் கத்தியால் குத்திக் படுகொலை செய்யப்பட்ட நடுக்கத்தை ஏற்படுத்தும் சம்பவம் அரங்கேறியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் பண்டா மாவட்டத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவர், தனது குடும்பத்தாரின் எதிர்ப்பையும் மீறி மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரைக் காதலித்துச் சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டார்.

இதனால் ஆத்திரமடைந்த பெண்ணின் வீட்டார், புதுமணத் தம்பதியருக்குத் தொடர்ந்து அச்சுறுத்தல் கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில், பண்டா மாவட்டத்தில் உள்ள படோசா காவல் நிலையத்திற்கு இருதரப்பினரும் வரவழைக்கப்பட்டனர்.

காவல் நிலைய வளாகத்திற்குள் இரு குடும்பத்தினரையும் முன்னிறுத்திக் காவல்துறையினர் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தினர்.

காவல் துறையினர் நடத்திய இந்த பேச்சுவார்த்தையின் போது, அந்த இளம்பெண் தனது பெற்றோருடன் செல்ல மறுத்து, தான் காதலித்துத் திருமணம் செய்து கொண்ட கணவருடன் மட்டுமே வாழ்வேன் என்பதில் மிகவும் உறுதியாக இருந்துள்ளார்.

மகளின் இந்தத் தீர்க்கமான முடிவைக் கேட்டு ஆத்திரத்தின் எல்லைக்கே சென்ற அவரது தந்தை, காவல் துறையினர் கண் இமைக்கும் நேரத்திற்குள் தான் மறைத்து வைத்திருந்த கூர்மையான கத்தியை எடுத்து, சொந்த மகள் என்றும் பாராமல் அவரது உடலில் கொடூரமாகக் குத்தியுள்ளார்.

காவல் நிலையத்திற்குள்ளேயே ரத்த வெள்ளத்தில் சரிந்த அந்தப் பெண்ணை அங்கிருந்த போலீசார் மீட்டு, சிகிச்சைக்காக உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அங்குச் சிகிச்சை பலனின்றி அந்த இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

காவல் நிலையப் பாதுகாப்பு வளையத்திற்குள்ளேயே நிகழ்ந்த இந்த ஆணவக் கொலைச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார் அளித்த புகாரின் அடிப்படையில், கொலையாளி தந்தையைப் படோசா போலீசார் உடனடியாக அதிரடியாகக் கைது செய்தனர்.

மேலும், இச்சம்பவத்தின் போது காவல் நிலையத்தில் பாதுகாப்புக் குறைபாடுகள் இருந்தது குறித்து உயர் அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தந்தையைத் தடுக்க முயன்று கிணற்றில் தவறி விழுந்த மாணவி உயிரிழப்பு!!

போதையில் தற்கொலை செய்துக் கொள்ளப் போவதாக மிரட்டிய தந்தையைக் காப்பாற்ற ஓடிச் சென்ற ப்ளஸ் 2 மாணவி, கால் இடறி கிணற்றில் விழுந்து உயிரிழந்த சம்பவம் திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே சேயூர் கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

திருப்பூர், அவிநாசி அடுத்த சேயூர் பகுதியைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (45). இவரது இளைய மகள் ரித்திகா (17). அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் ரித்திகா பிளஸ்-2 படித்து வந்துள்ளார்.

இந்நிலையில், ரவிச்சந்திரன் நேற்று முன் தினம் இரவு வழக்கம் போல் மது அருந்திவிட்டு, போதை தலைக்கேறிய நிலையில் வீட்டிற்குத் திரும்பியுள்ளார்.

கணவரின் இந்தத் தொடர் குடிப்பழக்கத்தால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்த அவரது மனைவி, ரவிச்சந்திரனை வாசலிலேயே வைத்து கண்டித்துள்ளார்.

இதனால் கணவன், மனைவி இருவருக்கும் இடையே நள்ளிரவில் வாய்த்தகராறு வெடித்தது. போதையின் உச்சத்துக்கே சென்ற ரவிச்சந்திரன், “நான் தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன்” என்று ஆத்திரத்தில் கத்தியபடி, தங்களது வீட்டின் அருகே இருந்த 100 அடி ஆழமுள்ள வறண்ட கிணற்றை நோக்கிப் பாய்ந்து ஓடியுள்ளார்.

கண் இமைக்கும் நேரத்திற்குள் தந்தை கிணற்றில் குதிக்க ஓடுவதைக் கண்டு அலறியடித்த இளைய மகள் ரித்திகா, பாசப் போராட்டத்தில் தந்தையின் உயிரைக் காப்பாற்ற அவரைப் பின்னாடியே துரத்திக் கொண்டு ஓடிப் போய்த் தடுக்க முயன்றுள்ளார்.

நள்ளிரவு நேரம் என்பதாலும், போதிய வெளிச்சமின்றி இருள் சூழ்ந்திருந்த நிலையில் தந்தையைப் பிடித்து இழுக்கும் முயற்சியில் நிலைதடுமாறிய மாணவி ரித்திகா, எதிர்பாராத விதமாகக் கால் இடறி 100 அடி ஆழ வறண்ட கிணற்றுக்குள் தலைகீழாகப் பாய்ந்து விழுந்தார்.

வறண்ட பாறைகள் நிறைந்த 100 அடி ஆழக் கிணற்றுக்குள் விழுந்த தாக்கத்தில், மாணவி ரித்திகாவுக்குத் தலையிலும், உடலின் ரத்தக் காயங்கள் ஏற்பட்டு, சம்பவ இடத்திலேயே துடிதுடித்துப் பரிதாபமாக உயிரிழந்தார்.

பெற்ற மகளே கண்முன்னே கிணற்றில் விழுந்து பலியானதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோரின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், உடனடியாக சேயூர் போலீசாருக்கும் தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், கிணற்றுக்குள் இறங்கி மாணவியின் உடலை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இத்துயரச் சம்பவம் குறித்து அவிநாசி மற்றும் சேயூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மதுபோதையால் ஏற்பட்ட குடும்பச் சண்டையில், தந்தையைக் காப்பாற்றப் போய் 17 வயது பிளஸ்-2 மாணவி வறண்ட கிணற்றில் விழுந்து பலியான சம்பவம் அவிநாசி வட்டார மக்களிடையே துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருமணத்திற்கு மறுத்ததால் கொடூரம் : காதலியை கொலை செய்த காதலன்!!

கர்நாடக மாநிலம் பெங்களூரு பெல்லந்தூர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் ஒட்டுமொத்த மனிதநேயத்தையும் உலுக்கும் வகையிலான கொடூரக் கொலைச் சம்பவம் ஒன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

அங்குள்ள ஒரு குடியிருப்பில் டார்ஜிலிங் பகுதியைச் சேர்ந்த பூர்வா லேஷ்பா (24) என்பவரும், சிக்கிம் மாநிலத்தைச் சேர்ந்த கங்கியா சூபா (22) என்ற இளம்பெண்ணும் கடந்த ஒரு மாதமாகத் திருமணம் செய்யாமலேயே ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர்.

இவர்கள் இருவரும் கடந்த ஓராண்டுக்கு முன்பு சிக்கிமில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்தபோது காதலிக்கத் தொடங்கியுள்ளனர்.

இந்த நிலையில் பெங்களூருவில் பூர்வா லேஷ்பா ஒரு ஓட்டலிலும், கங்கியா சூபா பெண்களுக்கான சலூன் கடையிலும் வேலை பார்த்து வந்துள்ளனர். சம்பவத்தன்று நள்ளிரவில் ஒரு விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு அதிகாலையில் கங்கியா சூபா வீட்டுக்குத் திரும்பியுள்ளார்.

அப்போது அவர் வேறு ஒரு வாலிபருடன் பழகி வந்தது குறித்து பூர்வா லேஷ்பாவுக்குத் தெரியவந்ததால், இருவருக்கும் இடையே வீட்டில் பயங்கரமான வாய்த்தகராறும் அனல் பறக்கும் வாக்குவாதமும் ஏற்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து தன்னை உடனடியாகத் திருமணம் செய்து கொள்ளும்படி கங்கியா சூபாவை பூர்வா லேஷ்பா கட்டாயப்படுத்தியபோது, திருமணம் வேண்டாம் என அந்த இளம்பெண் மறுத்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த பூர்வா லேஷ்பா சமையல் அறையில் இருந்த கத்தியை எடுத்து வந்து தனது காதலியின் கழுத்தை மிகக் கொடூரமாக அறுத்துக் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.

இதுகுறித்துத் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஒயிட்பீல்டு காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி, தலைமறைவாக இருந்த காதலன் பூர்வா லேஷ்பாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

வைபவ் சூர்யவன்ஷியுடன் வாக்குவாதம் : இலங்கை வீரரின் சமூகவலைத்தள பக்கம் முடக்கம்!!

இந்தியா ‘ஏ’ அணி வீரர் வைபவ் சூர்யவன்ஷியுடன் களத்தில் ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து, இளம் வீரரான இலங்கை ‘ஏ’ கிரிக்கெட் வீரர் விஷன் ஹலம்பேஜ்வின் இன்ஸ்டாகிராம் கணக்கு முடக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இணையத்தள கேலிகளுக்கு இலக்காக மாறியதால், அவரது இன்ஸ்டாகிராம் கணக்கு முடக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நேற்றையதினம்(15) தம்புள்ளையில் நடைபெற்ற முத்தரப்புத் தொடரில், இந்தியா ‘ஏ’ அணிக்கு எதிரான இலங்கை ‘ஏ’ அணி வெற்றிப்பெற்றது. பரபரப்பான சூப்பர் ஓவர் வெற்றிக்குப் பிறகு, இலங்கை வீரர் விஷன் ஹலம்பேஜ் பரவலான கவனத்தை ஈர்த்தார்.

ஹலம்பேஜ்க்கும் வைபவ் சூர்யவன்ஷிக்கும் இடையே நடந்த காரசாரமான வாக்குவாதத்தின் காணொளிகள் சமூக ஊடகங்களில் பரவலாகப் பரவின.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, குறிப்பாக இந்தியாவைச் சேர்ந்த ஏராளமான சமூக ஊடகப் பயனர்கள், ஹலம்பேஜின் இன்ஸ்டாகிராம் கணக்கில் வசவுக் கருத்துக்களைப் பதிவிட்டனர்.

மேலும், அந்த வீரரின் குடும்ப உறுப்பினர்களும் இணையத்தில் துன்புறுத்தலுக்கு ஆளானதாகப் பல பயனர்கள் குறிப்பிட்டுள்ளனர். சர்வதேச கிரிக்கெட்டில் இதுபோன்ற இணைய கேலிகள் அதிகரித்து வருகின்றன.

பிரபல இந்திய கிரிக்கெட் வீரர்கள் சம்பந்தப்பட்ட சம்பவங்களுக்குப் பிறகு, எதிரணி வீரர்கள் சமூக ஊடகங்களில் அடிக்கடி இது போன்ற சம்பவங்களை எதிர்கொள்கின்றனர்.

அதனை தொடர்ந்து இன்றையதினம்(16), ஹாலம்பேஜின் இன்ஸ்டாகிராம் கணக்கை அணுக முடியவில்லை. ஏராளமான முறைபாடுகள் மற்றும் அறிக்கைகள் வந்ததைத் தொடர்ந்து அந்தக் கணக்கு முடக்கப்பட்டதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இருப்பினும், கணக்கு செயலிழந்ததற்கான காரணத்தை இன்ஸ்டாகிராமோ அல்லது அந்த வீரரோ அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.

களத்தில் ஏற்படும் மோதல்களைத் தொடர்ந்து, இளம் விளையாட்டு வீரர்கள் இணையவழித் துன்புறுத்தல்களுக்கு இலக்காகின்றனர் என்பதை மீண்டும் இந்த சம்பவம் எடுத்துகாட்டியுள்ளது.

வவுனியாவில் தாதியர் கல்லூரி நிர்வாகிகள் 5 பேர் கைது!!

வவுனியாவில் உள்ள தனியார் தாதியர் கல்லூரி ஒன்றில், மாணவர்களிடம் லட்சக்கணக்கில் பணம் பெற்றுக்கொண்டு மோசடி செய்த குற்றச்சாட்டின் கீழ், அந்நிறுவனத்தின் நிர்வாகிகள் ஐந்து பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வவுனியா, வைரவபுளியங்குளம் 7ஆம் ஒழுங்கையில் அமைந்துள்ள தனியார் தாதியர் கல்லூரி ஒன்றில், தாதியர் கற்கைநெறியை பயில்வதற்காக பெருமளவிலான மாணவர்கள் இணைந்துள்ளனர்.
இதன்போது, ஒவ்வொரு மாணவரிடமிருந்தும் தலா ஒரு இலட்சத்திற்கும் அதிகமான ரூபாய் பணம் தவணை முறையில் அறவிடப்பட்டுள்ளது.

கற்கைநெறியை ஆரம்பிக்கும் போது, இதன் முடிவில் அரச அங்கீகாரமுடைய TVEC (தொழிற்கல்வி ஆணைக்குழு)சான்றிதழ் வழங்கப்படும் என கல்லூரி நிர்வாகத்தினரால் மாணவர்களுக்கு உறுதியளிக்கப்பட்டுள்ளது.

எனினும், மாணவர்கள் தங்களது கற்கைநெறியை வெற்றிகரமாக முடித்து நீண்ட நாட்களாகியும், வாக்குறுதியளிக்கப்பட்ட அரச அங்கீகாரமுள்ள சான்றிதழ்கள் அவர்களுக்கு வழங்கப்படவில்லை எனத் தெரிகிறது. இதனால் ஏமாற்றமடைந்த மாணவர்களுக்கும் கல்லூரி நிர்வாகத்திற்கும் இடையே இன்று (15.06.2026) கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு, அப்பகுதியில் பெரும் குழப்பநிலை நிலவியது.

நிலைமை கட்டுப்பாட்டை மீறிச் சென்றதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர். அதனைத் தொடர்ந்து, மாணவர்களை ஏமாற்றி பண மோசடி செய்த குற்றச்சாட்டின் கீழ் அங்கிருந்த கல்லூரி நிர்வாகிகள் ஐந்து பேரை பொலிஸார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டுள்ள ஐந்து நிர்வாகிகளும் நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இரண்டே நாட்களில் 10 ஆயிரம் வரை உயர்ந்த தங்கத்தின் விலை!!

இலங்கையில் இன்றைய தினம் (15.06.2026) தங்கத்தின் விலை அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. இந்த நிலையில் அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கத்தின் தகவல்களின் படி, 24 கரட் தங்கம் ஒரு பவுண் 392,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அத்துடன், 22 கரட் தங்க பவுண் ஒன்று 360,600 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது. இதன்படி, 24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 48,070 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 44,070 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

இலங்கையில் கடந்த இரண்டு தினங்களை விட இன்று 6000 ரூபா அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் வட மாகாணத்தில் முதன்முறையாக ‘சிசு செரிய’ பேரூந்து சேவை ஆரம்பம்!!

வவுனியாவில் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் உயர்கல்வி கற்கும் மாணவர்களின் பாதுகாப்பான போக்குவரத்தை உறுதிப்படுத்தும் நோக்கில், தேசிய ரீதியில் புகழ்பெற்ற ‘சிசு செரிய’ (Sisu Seriya) பஸ் சேவை வட மாகாணத்தில் முதன்முறையாக இன்று (15.06.2026) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க தலைமையில், வவுனியா பயணிகள் போக்குவரத்து முனையத்தில் இந்த அங்குரார்ப்பண நிகழ்வு நடைபெற்றது.

கடந்த 2005ஆம் ஆண்டு ‘சிசு செரிய’ பேரூந்து சேவை இலங்கையில் ஆரம்பிக்கப்பட்ட போதிலும், இதுவரை வட மாகாணத்தைச் சேர்ந்த வவுனியா, மன்னார், முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களின் மாணவ, மாணவிகளுக்கு இச்சேவை கிடைக்கப் பெற்றிருக்கவில்லை.

இதுவரை இம்மாணவர்கள் இலங்கை போக்குவரத்துச் சபையின் (SLTB) சாதாரண பேரூந்துகள் ஊடாக, பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தியே தமது பயணங்களை மேற்கொண்டு வந்தனர்.

தற்போது கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு, போக்குவரத்து அமைச்சுடன் இணைந்து மேற்கொண்டுள்ள விசேட ஏற்பாட்டின்படி, முதற்கட்டமாக வட மாகாணத்திற்குள் 20 ‘சிசு செரிய’ பேருந்துகளை இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன் தொடக்கமாக, வவுனியா மாவட்ட பாடசாலை மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பயன்பாட்டிற்காக இரண்டு புதிய ‘சிசு செரிய’ பேரூந்துகள் இன்று மாணவர்களிடம் கையளிக்கப்பட்டன.

இச்சேவையைப் பயன்படுத்தும் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களிடமிருந்து சாதாரண போக்குவரத்துப் கட்டணத்தில் பாதி (அரைக்கட்டணம்) மாத்திரமே அறவிடப்படும் என்பதுடன், எஞ்சிய பாதியைக் கட்டணத்தை அரசாங்கமே ஏற்றுக்கொள்ளும்.

நிகழ்வில் உரையாற்றிய பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க, நாடளாவிய ரீதியில் அனைத்துப் பகுதிகளிலும் பாடசாலை மாணவர்களின் போக்குவரத்து வசதிக்காக 200-க்கும் மேற்பட்ட புதிய பேரூந்துகளை ‘சிசு செரிய’ சேவையில் இணைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். இத்திட்டத்திற்காக அரசாங்கத்தினால் ஒரு பில்லியன் ரூபாவிற்கு அண்மித்த தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் வன்னி மாவட்ட தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எஸ்.திலகநாதன், எம்.ஜெகதீஸ்வரன், வட மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர் எஸ்.விமலேஸ்வரன் உள்ளிட்ட அதிகாரிகள், திணைக்களத் தலைவர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

 

வவுனியாவில் தாதியர் கல்லூரியில் குழப்ப நிலை : சான்றிதழ் வழங்காமல் இழுத்தடிப்பதாக மாணவர்கள் குற்றச்சாட்டு!!

வவுனியா வைரவபுளியங்குளத்தில் அமைந்துள்ள தனியார் தாதியர் கல்லூரியில் இன்று (15.06.2026) குழப்பநிலை ஒன்று ஏற்ப்பட்டமையால் பொலிசார் வரவழைக்கப்பட்டனர். சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

குறித்த தனியார் தாதியர் கல்லூரியில் தாதிய கற்கைநெறிகளை பயில்வதற்காக மாணவர்களிடம் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதற்காக ஒவ்வொரு மாணவர்களிடம் இருந்தும் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான பணம் பகுதி பகுதியாக அறவிடப்பட்டதாக மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.

பதிவுகள் மேற்கொள்ளும் போது கற்கை நெறி முடிவில் அங்கிகாரமுள்ள சான்றிதழான TVEC வழங்கப்படும் என கல்லூரி நிர்வாகிகளால் மாணவர்களுக்கு கூறப்பட்டுள்ளது.

எனினும் கற்கை நெறிமுடிவடைந்து நீண்ட நாட்களாகியும் அந்த சான்றிதழ் வழங்கப்படவில்லை என மாணவர்கள் ஆதங்கம் வெளியிட்டுள்ளனர்.

இதனையடுத்து கல்லூரியின் நிர்வாகிகளுக்கும் மாணவர்களுக்கும் இடையில் இன்று குறித்த வளாகத்தில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

இதன்போது உடனடியாக எமக்கு சான்றிதழ் வழங்கப்படவேண்டும் இல்லாவிடில் நாம் செலுத்திய பணத்தை திரும்ப செலுத்துமாறு மாணவர்கள் தரப்பில் கோரப்பட்டுள்ளது. அதற்கு பொறுப்பான பதிலை கல்லூரி நிர்வாகிகள் வழங்கவில்லை. இதனால் அங்கு குழப்பநிலை ஏற்ப்பட்டது.

இதனையடுத்து மாணவர்களால் பொலிசாருக்கு முறைப்பாடு வழங்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற வவுனியா பொலிசார் கல்லூரிநிர்வாகிகள் எனக்கூறப்படும் ஐவரை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச்சென்றனர். மேலதிக விசாரணைக்களுக்காக பாதிக்கப்பட்ட மாணவர்களும் பொலிஸ் நிலையத்திற்கு சென்றிருந்தனர்.

இது தொடர்பான விசாரணைகளை வவுனியா பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.