யாழில் வீதியில் கிடந்த தங்க நகை : உரியவரிடம் ஒப்படைத்த நபருக்கு குவியும் பாராட்டுக்கள்!!

யாழில் வீதியில் விழுந்து கிடந்த தங்க ஆபரணத்தை எடுத்து சுன்னாகம் பொலிஸார் ஊடாக உரியவரிடம் சேர்த்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

நேற்றைய தினம் (28.04.2026) சுன்னாகம் வர்த்தக வங்கிக்கு முன்பாக தங்க ஆபரணமொன்று கீழே விழுந்து காணப்பட்டுள்ளது.

குறித்த தங்க ஆபரணத்தை கண்டெடுத்த குப்பிளான் பகுதியை சேர்ந்த செல்வராசா பார்த்தீபன் என்பவர் அதனை சுன்னாகம் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார்.

இதன்பின்னர் சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நிதர்சன் தலைமையிலான பொலிஸ் குழுவினர், குறித்த நகையின் உரிமையாளரான ஏழாலை பகுதியை சேர்ந்த முதியவரை கண்டுபிடித்துள்ளனர்.

இதனையடுத்து குறித்த முதியவரை அழைத்து நகையை கண்டெடுத்த பார்த்தீபன் ஊடாக முதியவரிடம் ஒப்படைத்துள்ளனர். இவ்வாறு நகையை நேர்மையாக உரியவரிடம் சேர்த்த இளைஞரை பலரும் பாராட்டி வருகின்றனர்.

இன்றிரவு 11 மணி வரை அவதானமாக இருக்கவும் : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

நாட்டின் பல மாகாணங்களில் பலத்த மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (29.04.2026) எச்சரிக்கையை விடுத்துள்ளது.

அதன்படி, எச்சரிக்கை அறிவிப்பு (29.04.2026) இன்றிரவு 11.30 மணி வரை செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, மேற்கு, சபரகமுவ, மத்திய, வடக்கு, வடமத்திய, தெற்கு, வடமேற்கு மாகாணங்கள் மற்றும் திருகோணமலை மாவட்டத்திற்குப் பொருந்தும்.

குறித்த பகுதிகளில் சில இடங்களில் பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழையுடன் பலத்த மின்னல் தாக்கங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. இடியுடன் கூடிய மழை பெய்யும் போது அப்பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.

எனவே மின்னலால் ஏற்படும் ஆபத்துகளைக் குறைக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 

தொலைபேசியில் தொல்லை கொடுத்தால் அபராதம்: பொலிசார் எச்சரிக்கை!!

பொதுமக்களுக்கு டிஜிட்டல் தளங்கள் மற்றும் தொலைபேசி அழைப்புகள் ஊடாக விடுக்கப்படும் அச்சுறுத்தல்களை கட்டுப்படுத்தும் நோக்கில், சட்ட நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

2024 ஆம் ஆண்டின் 39 ஆம் இலக்க தொலைத்தொடர்பு (திருத்தப்பட்ட) சட்டத்தின் 32 ஆம் பிரிவின் கீழ், இவ்வாறான குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு

எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்க முடியும் என கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவின் வழக்குச் செயல்பாட்டுப் பிரிவின் பொறுப்பதிகாரி, சட்டத்தரணி திலன் குமார சுட்டிக்காட்டியுள்ளார்.

நியாயமான காரணமின்றி, ஒருவரை மன உளைச்சலுக்கு உள்ளாக்கும் நோக்கில் மீண்டும் மீண்டும் தொலைபேசி அழைப்புகளை மேற்கொள்வது அல்லது குறுஞ்செய்திகளை (SMS) அனுப்புவது தண்டனைக்குரிய குற்றமாகும்.

ஒருவரது தொலைபேசி இலக்கத்தை அவரது அனுமதியின்றி சமூக வலைத்தளங்களிலோ அல்லது பொது வெளியிலோ பகிர்ந்து, அவர்களை அசௌகரியத்திற்கு உள்ளாக்குவதும் இச்சட்டத்தின் கீழ் குற்றமாகக் கருதப்படும்.

இக்குற்றச்சாட்டுகளின் கீழ் குற்றவாளியாகக் காணப்படும் ஒருவருக்கு,100,000ய ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படலாம். அதேசமயம் அபராதத்தைச் செலுத்தத் தவறினால் 6 மாதங்கள் வரை சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும்.

அத்துடன், குற்றத்திற்குப் பயன்படுத்தப்பட்ட தொலைபேசி இணைப்பைத் துண்டிப்பதற்கான அதிகாரமும் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

தொலைபேசி அழைப்புகள் அல்லது செய்திகள் ஊடாக இவ்வாறான தொல்லைகளுக்கு உள்ளாகும் நபர்கள், அது தொடர்பான ஆதாரங்களுடன் அருகில் உள்ள காவல்துறை நிலையத்திலோ அல்லது குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திலோ (CID) முறைப்பாடு செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தனிப்பட்ட தகவல்களைத் தவறாகப் பயன்படுத்துவதிலிருந்து பொதுமக்களைப் பாதுகாப்பதற்கான மிக முக்கியமான சட்டப் பாதுகாப்பாக இது அமையும் எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

ஒரே ஒரு கையெழுத்து : கோடி கோடியாகச் சொத்துக்களை இழந்த பிரபல நடிகையின் கண்ணீர்க் கதை!!

தமிழ், தெலுங்கு, கன்னடம் எனத் தென்னிந்திய மொழிகளில் 100-க்கும் மேற்பட்ட படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துப் புகழ்பெற்றவர் நடிகை சுதா. குறிப்பாகத் தமிழில் ‘7ஜி ரெயின்போ காலனி’, ‘வேதாளம்’, ’24’ போன்ற படங்களில் இவரது நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது.

திரையில் எப்போதும் பாசமுள்ள அம்மாவாகத் தோன்றும் இவரது நிஜ வாழ்க்கையில் சொல்லொணாத் துயரங்கள் மறைந்துள்ளன என்பதைச் சமீபத்திய பேட்டி ஒன்றில் அவர் உடைந்து போய் பகிர்ந்துள்ளார்.

தனது கடின உழைப்பால் சேர்த்த மொத்தப் பணத்தையும் முதலீடு செய்து, டெல்லியில் ஒரு பிரம்மாண்டமான ஹோட்டலைத் தொடங்கினார் சுதா. ஆனால், வியாபார ரீதியாக அவர் போட்ட ஒரே ஒரு தவறான கையெழுத்து, அவரது வாழ்நாள் சேமிப்பு அனைத்தையும் பறித்துச் சென்றுள்ளது.

இதனால் ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான சொத்துக்களை அவர் ஒரே அடியில் இழந்துள்ளார்.

பண இழப்பு ஒருபுறம் இருக்க, குடும்ப ரீதியாகவும் அவர் பெரும் சோதனைகளைச் சந்தித்துள்ளார். சொத்து விவகாரத்தால் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக அவரது மகன் வெளிநாட்டிற்குச் சென்றுவிட்டார்.

கணவரும் அவரை விட்டுப் பிரிந்து சென்றுவிட்ட நிலையில், தற்போது எவ்விதத் துணையும் இன்றி அவர் தனியாக வசித்து வருகிறார். “ஒரே ஒரு கையெழுத்தால் என் தலையெழுத்தே மாறிவிட்டது” என்று அவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரையில் இன்றும் பிஸியாக நடித்துக் கொண்டிருந்தாலும், தனிப்பட்ட வாழ்க்கையில் அவர் சந்தித்துள்ள இந்தப் பொருளாதாரச் சரிவு மற்றும் குடும்பப் பிரிவினை சினிமா வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வெளிச்சத்தில் இருக்கும் நட்சத்திரங்களின் வாழ்க்கைக்குப் பின்னால் இருக்கும் இருண்ட பக்கங்களை இந்தச் சம்பவம் மீண்டும் ஒருமுறை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.

 

ஹட்டனில் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து!!

புதிய இணைப்பு : ஹட்டன் – டிக்கோயா வீதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. படுகாயமடைந்தவர்களில் பலர் கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

முதலாம் இணைப்பு : ஹட்டன் – டிக்கோயா பிரதான வீதியில் பட்டல்கல பகுதியில் தனியார் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த விபத்தானது இன்று (29.4.2026) பிற்பகல் 3:00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. டயகமவில் இருந்து போடைஸ் வழியாக ஹட்டன் நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி சுமார் 25 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 20 பேர் வரையில் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பேருந்து, எதிரே வந்த மற்றொரு பேருந்துக்கு இடமளிக்க முற்பட்ட போதே வீதியை விட்டு விலகி பள்ளத்தில் சரிந்து விபத்துக்குள்ளானது.

விபத்து இடம்பெற்ற போது பேருந்தில் சுமார் 35 பயணிகள் இருந்துள்ளதுடன் இதில் பாடசாலை மாணவர்கள் உட்பட 20 பேர் காயமடைந்து டிக்கோயா அடிப்படை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காயமடைந்தவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக டிக்கோயா மருத்துவமனையின் மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்களில் குறித்த பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனரும் அடங்குவர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

இந்திய கடற்றொழிலாளர்களிடம் இருந்து தப்பி வந்த யாழ். இளைஞர்கள்!!

யாழ்ப்பாணம் – பலாலி, வடக்கு அன்றனிபுரம் பகுதியிலிருந்து கடற்றொழிலுக்கு சென்ற கடற்றொழிலாளர்கள் மூவர் இந்திய கடற்றொழிலாளர்களால் தாக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

பலாலி கடலிலிருந்து 15 கடல் மைல் தொலைவில் கடற்றொழிலில் ஈடுப்பட்டிருந்த போது எல்லை தாண்டி கடற்றொழிலில் ஈடுப்பட்டிருந்த இந்திய கடற்றொழிலாளர்கள் ஐவர் இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

அத்துடன், இலங்கை கடற்றொழிலாளர்களின் படகும் சேதப்படுத்தப்பட்டுள்ளது. இதன்போது, பெற்றோல் குண்டு வீசப்பட்டதாகவும், வாளினால் இளைஞர்கள் மூவர் தாக்கப்பட்டதாகவும் இலங்கை கடற்றொழிலாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

தாக்குதலுக்குள்ளான கடற்றொழிலாளர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 17,18,27 வயதுடையவர்கள் என தெரியவந்துள்ளதுடன், 27 வயது குடும்பஸ்த்தர் கடத்திச் செல்லப்பட்டு தாக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கபட்டு வருகின்றன.

கோழிக்குழம்பு கேட்ட கணவனை அரிவாளால் வெட்டிக் கொன்ற மனைவி!!

இந்தியாவின் தெலங்கானா மாநிலத்தில், கோழிக்குழம்பு வேண்டும் என கேட்டு அடம்பிடித்த கணவனை அரிவாளால் தாக்கிக் கொன்றுள்ளார் ஒரு பெண்.

தெலங்கானா மாநிலத்திலுள்ள கமரேட்டி என்னுமிடத்தில் வாழ்ந்துவந்த கோதண்டம் சிவாஜி (28) என்பவர், தன் மனைவியான லக்‌ஷ்மி தனக்கு கோழிக்குழம்பு செய்துகொடுக்கவில்லை என்று கூறி அவரிடம் சண்டைபோட்டுள்ளார்.

சிறிது நேரத்தில் வாக்குவாதம் முற்ற, அக்கம்பக்கத்திலுள்ளவர்கள் வந்து சண்டையை நிறுத்த முயன்றுள்ளார்கள். இருந்தாலும் சண்டை வலுக்க, லக்‌ஷ்மி பக்கத்திலிருந்த அரிவாளை எடுத்து கணவனின் கழுத்தில் அடித்துள்ளார்.

கீழே விழுந்த சிவாஜியின் தலையில் பலமாக அடிபட, ஏராளமான இரத்தம் வெளியேறியதால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் அவர். தகவலறிந்து வந்த பொலிசார் லக்‌ஷ்மியை கைது செய்துள்ளார்கள்.

ஒரு கோழிக்குழம்பால் உருவான சண்டை கொலையில் முடிய, தம்பதியருக்கு இரண்டு மகள்கள் இருக்கும் நிலையில், தந்தையையும் இழந்து தாயையும் பிரிந்து எதிர்காலம் தெரியாமல் வாழும் நிலை பிள்ளைகளுக்கு உருவாகியுள்ளது.

இன்று நள்ளிரவு முதல் கோதுமை மாவின் விலை அதிகரிப்பு!!

இன்று (29) முதல் கோதுமை மாவின் விலையை அதிகரிப்பதற்கு ப்ரீமா நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, ப்ரீமா நிறுவனத்தின் கோதுமை மா ஒரு கிலோகிராமின் விலையை 5 ரூபாவினால் அதிகரிப்பதற்கு அந்நிறுவனம் தீர்மானித்துள்ளது.

போக்குவரத்துச் செலவுகள் அதிகரித்துள்ளமையே இந்த விலை உயர்விற்கான காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விலை அதிகரிப்பிற்கு அமைய, இதற்கு முன்னர் 220 ரூபாவாகக் காணப்பட்ட ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் புதிய விலை 225 ரூபா என்பது குறிப்பிடத்தக்கது.

 

சமூகவலைத்தளத்தில் பிரபலமான பெண்ணுக்கு கணவனால் நேர்ந்த துயரம்!!

சென்னையில் குடும்ப சண்டை காரணமாக இன்ஸ்டாகிராம் பிரபலமான இளம் பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நங்கநல்லூரை சேர்ந்த நாகலட்சுமி என்பவர் கடந்த சில வருடங்களாகவே இன்ஸ்டாகிராமில் புடவைகளை எளிதாக கட்டும் வகையில் ரெடிமேடாக மாற்றி தரும் தொழில் செய்து வந்தார்.

அது தொடர்பான வீடியோக்களை தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் அவர் பதிவிட்டு வந்தார். இந்நிலையில்தான் குடும்ப சண்டை காரணமாக நாகலட்சுமியை அவரின் கணவர் அரிவாளால் வெட்டிக் கொலை செய்து விட்டு அவரின் கணவர் சுப்பிரமணியனும் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.

தகவல் அறிந்த ஆதம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து இருவரது உடலையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் சமூகவலைத்தள பிரபலமான பெண் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

 

வவுனியா மாநகரசபை நிதி முறைகேடு : கொடுப்பனவுகளை நிறுத்த ஆளுநர் அதிரடி உத்தரவு!!

வவுனியா மாநகர சபையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பாரிய நிதி முறைகேடுகள் மற்றும் நிர்வாகச் சீர்கேடுகள் தொடர்பில், வட மாகாண ஆளுநர் கௌரவ நா.வேதநாயகன் அவர்கள் அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார்.

ஓய்வுபெற்ற நீதிபதியின் விசாரணை அறிக்கையின் அடிப்படையில், சர்ச்சைக்குரிய திட்டங்களுக்கான கொடுப்பனவுகளை உடனடியாக நிறுத்துமாறு அவர் பணித்துள்ளார்.

மாநகர சபையின் அதிகார துஷ்பிரயோகம் மற்றும் கழிவுநீர் வடிகால் தூர்வாருதலில் இடம்பெற்ற முறைகேடுகள் குறித்து ஆராய, ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி கந்தையா அரியநாயகம் தலைமையில் தனிநபர் விசாரணை ஆணைக்குழு நியமிக்கப்பட்டிருந்தது. இந்த ஆணைக்குழு சமர்ப்பித்த அறிக்கையில்சுட்டிக்காட்டப்பட்டுள்ள முக்கிய முறைகேடுகள் வருமாறு:


திருநாவற்குளம் முறைகேடு : திருநாவற்குளம் கழிவுநீர் வாய்க்கால் தூர்வாரும் பணிகளில் சட்ட விதிகளும், சபை தீர்மானங்களும் முழுமையாக மீறப்பட்டுள்ளன. இதற்காக சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் நம்பகத்தன்மையற்றவை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால், இப்பணிகளுக்கான எந்தவொரு கொடுப்பனவையும் வழங்க வேண்டாம் என ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.

காணிப் பகிர்வு விதிமீறல் : வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் உள்ள மாநகர சபைக்குச் சொந்தமான காணி, உரிய அமைச்சின் அனுமதி அல்லது முறையான டெண்டர் நடைமுறைகள் இன்றி வியாபாரிகளுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. இது ஒரு கடுமையான விதிமீறல் என விசாரணை அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

மக்களின் வரிப்பணத்தைப் பாதுகாக்கும் நோக்கில், வட மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஊடாக வவுனியா மாநகர சபை ஆணையாளருக்குப் பின்வரும் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன:

1. சட்டவிரோதமாக வழங்கப்பட்ட காணித்துண்டுகள் தொடர்பான நடைமுறைகளை உடனடியாக மறுபரிசீலனை செய்தல்.

2. ஒப்பந்தங்கள் இன்றி காணி பெற்ற வியாபாரிகளிடமிருந்து அறவிடப்படும் சட்டவிரோத வரிகளை உடனடியாக நிறுத்துதல்

3. பாதிக்கப்பட்ட வியாபாரிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் சட்டப்பூர்வமான மாற்று இடங்களை வழங்குதல்.

4. எதிர்காலத்தில் அனைத்து ஒப்பந்தங்களும் உரிய அதிகாரிகளின் ஒப்புதலுடன் சட்டரீதியாக முன்னெடுக்கப்படுவதை உறுதி செய்தல்.

ஆளுநரின் இந்த உத்தரவுகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக வட மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் எஸ்.சுதர்சன் அவர்கள், வவுனியா மாநகர சபை ஆணையாளருக்கு இன்று (28.04.2026) எழுத்துமூல பணிப்புரையை விடுத்துள்ளார்.

மேற்குறிப்பிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, அது குறித்த முழுமையான அறிக்கையை இரண்டு வார காலத்திற்குள் சமர்ப்பிக்க வேண்டும் என மாநகர சபை ஆணையாளருக்குக் கடும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தகவல் : வடக்கு மாகாண ஆளுநர் ஊடகப் பிரிவு.

வவுனியா தோணிக்கலில் புகையிரதம் மோதி முதியவர் உயிரிழப்பு!!

வவுனியா, தோணிக்கல் ஆலமரம் பகுதிக்கு அருகிலுள்ள ரயில்வே கடவையில் இன்று(28.04.2026) இடம்பெற்ற கோர விபத்தில் முதியவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இன்று மாலை தோணிக்கல் ரயில்வே கடவையை முதியவர் ஒருவர் கடக்க முயன்றபோது, அந்த வழியாக வந்த ரயிலுடன் மோதி இந்த விபத்து சம்பவித்துள்ளது. விபத்தின் தீவிரத்தினால் குறித்த முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், உயிரிழந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வவுனியா பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

வவுனியா விபுலானந்தா பாடசாலையில் உலக மலேரியா தின விழிப்புணர்வு!!

ஆரோக்கியமான சமூகத்தை நோக்கிய எமது பயணம் எனும் தொனிப்பொருளில் உலக மலேரியா தினத்தை முன்னிட்டு வவுனியா விபுலானந்தா பாடசாலை மாணவர்களுக்கான விசேட விழிப்புணர்வுப் போட்டி மற்றும் பரிசளிப்பு விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது.

மலேரியா தடை இயக்க பணிமனையினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் எதிர்கால சந்ததியினரை மலேரியா போன்ற நோயற்றவர்களாகவும் விழிப்புணர்வு மிக்கவர்களாகவும் வளர்த்தெடுக்கும் நோக்கில் பல்வேறு போட்டிகள் முன்னெடுக்கப்பட்டன. இப்போட்டித் தொடரில் மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் கலந்துகொண்டு தமது திறமைகளை வெளிப்படுத்தினர்.

மலேரியா மீண்டும் பரவாமல் தடுப்பது குறித்த தெளிவை இளைய தலைமுறையினரிடம் ஏற்படுத்துவதே இப்போட்டிகளின் முக்கிய நோக்கமாகும்.

வெற்றி பெற்ற மற்றும் பங்குபற்றிய மாணவர்களை ஊக்குவிப்பதற்காக, பிராந்திய வைத்திய அதிகாரி நிசாந்தினி, வெளிக்கள உத்தியோகஸ்தர் சரண்ராஜ் மற்றும் சுகாதாரப் பரிசோதகர் வாகீசன் ஆகியோரின் வேண்டுகோளுக்கிணங்க, பொதுமகனொருவர் பெறுமதியான பரிசுகளை வழங்கிப் பங்களிப்புச் செய்திருந்தார்.

இந்நிகழ்வில் கௌரவ விருந்தினர்களாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பாஸ்கரன், பிராந்திய வைத்திய அதிகாரி நிசாந்தினி, பாடசாலைப் பிரதி முதல்வர், வவுனியா செட்டிகுளம் பிரதேச சபையின் உப தவிசாளர் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்குப் பரிசில்களை வழங்கி கௌரவித்தனர்.

அனோபிலிஸ் நுளம்புகள் மூலம் பரவும் மலேரியா குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என இதன்போது வலியுறுத்தப்பட்டது.

காய்ச்சல், குளிர், தலைவலி போன்ற அறிகுறிகள் தென்படின் உடனடியாகச் சிகிச்சை பெறுமாறும், வீட்டுச் சூழலில் நீர் தேங்காமல் பாதுகாப்பதன் மூலமும், கிணறுகளைச் சுத்தமாக வைத்திருப்பதன் மூலமும் மலேரியா அற்ற சமூகத்தை உருவாக்க முடியும் என அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.

 

வவுனியா வடக்கு பிரதேச சபையின் புதிய செயலாளராக கார்த்திகன் பதவியேற்பு!!

வவுனியா வடக்கு பிரதேச சபையின் புதிய செயலாளராக தேவராசா கார்த்திகன் உத்தியோகபூர்வமாகக் கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார்.

இப்பிரதேசத்தின் நிர்வாகக் கட்டமைப்பு மற்றும் மக்கள் நலன்சார்ந்த திட்டங்களை முன்னெடுப்பதில் புதிய செயலாளர் முக்கிய பங்காற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

வவுனியா வடக்கு பிரதேசத்தின் கல்வி, உட்கட்டமைப்பு மற்றும் பொதுமக்களுக்கான சேவைகளை வினைத்திறனுடன் முன்னெடுப்பதற்கு அனைத்துத் தரப்பினரினதும் ஒத்துழைப்பை அவர் எதிர்பார்ப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

புதிதாகப் பொறுப்பேற்றுள்ள செயலாளருக்கு தவிசாளர், சபை உறுப்பினர்கள், பிரதேசசபை உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

வவுனியா இறம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலயம் வலைப்பந்தாட்டப் போட்டியில் மாகாண மட்டத்திற்குத் தெரிவு!!

வவுனியா வலயக் கல்வி அலுவலகத்தினால் நடாத்தப்பட்ட பாடசாலைகளுக்கு இடையிலான வலய மட்ட வலைப்பந்தாட்டப் போட்டிகள் நேற்று (27.04.2026) திங்கட்கிழமை மிகவும் விறுவிறுப்பாக இடம்பெற்றன.

இதில் 16 வயதுப் பிரிவினருக்கான போட்டியில் வவுனியா இறம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலய மாணவிகள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றிவாகை சூடியுள்ளனர்.

நேற்று நடைபெற்ற விறுவிறுப்பான போட்டிகளின் இறுதியில், வவுனியா இறம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலய அணி மூன்றாம் இடத்தைப் பெற்றுள்ளனர். நுட்பமான ஆட்டத்திறன் மற்றும் சிறந்த குழுப்பணியின் மூலம் இந்த வெற்றியை மாணவிகள் வசப்படுத்தினர்.

வலய மட்டத்தில் மூன்றாம் இடத்தைப் பெற்றதன் மூலம், இறம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலய அணி அடுத்ததாக நடைபெறவுள்ள மாகாண மட்ட வலைப்பந்தாட்டப் போட்டிகளில் பங்குபற்றுவதற்கான தகுதியைப் பெற்றுள்ளது.

இந்த வெற்றியை ஈட்டிய மாணவிகளுக்கும், அவர்களுக்குப் பயிற்சியளித்த ஆசிரியர்கள் மற்றும் உறுதுணையாக இருந்த பாடசாலை நிர்வாகத்தினருக்கும் பலரும் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

மாகாண மட்டப் போட்டிகளிலும் இம்மாணவிகள் சிறந்த சாதனைகளை நிலைநாட்ட வேண்டும் என்பதே அனைவரினதும் எதிர்பார்ப்பாகும்.

வவுனியா பூந்தோட்டம் மகா வித்தியாலயம் வலய மட்ட வலைப்பந்துப் போட்டியில் வரலாற்றுச் சாதனை!

வலய மட்ட வலைப்பந்துப் போட்டிகளில் வவுனியா பூந்தோட்டம் மகா வித்தியாலய மாணவிகள் மூன்று வெவ்வேறு வயதுப் பிரிவுகளில் அபார திறமையை வெளிப்படுத்தி, மாகாண மட்டப் போட்டிகளுக்குத் தெரிவாகி பாடசாலை வரலாற்றில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளனர்.

இப்போட்டியில் பூந்தோட்டம் மகா வித்தியாலய அணிகள் பின்வரும் இடங்களைக் கைப்பற்றி சாதனை படைத்தன.

16 வயதுப் பிரிவினர் விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று முதலாம் இடத்தைப் பெற்றுக்கொண்டனர். மேலும் 20 வயதுப் பிரிவினர் மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி இரண்டாம் இடத்தைப் பெற்றுக்கொண்டனர்.

அத்துடன் 18 வயதுப் பிரிவினர் கடும் போராட்டத்திற்கு மத்தியில் மூன்றாம் இடத்தைப் பெற்றுக்கொண்டனர்.

இந்த மூன்று வயதுப் பிரிவுகளிலும் வெற்றி பெற்ற அணிகள் அனைத்தும், அடுத்த கட்டமாக நடைபெறவுள்ள மாகாண மட்டப் போட்டிகளில் கலந்துகொள்வதற்காகத் தகுதி பெற்றுள்ளன. ஒரே வருடத்தில் மூன்று அணிகளும் மாகாண மட்டத்திற்குத் தெரிவாகியிருப்பது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வரலாற்றுச் சாதனைக்குக் காரணமான அணியின் வீராங்கனைகளை வழிநடத்திய உடற்கல்வி ஆசிரியர் ஜெ.சுதாத்தரன் அவர்களும், மாணவிகளுக்குத் துல்லியமான பயிற்சிகளை வழங்கிய பயிற்றுநர் எஸ்.கலைவானி அவர்களும் சமூக மட்டத்தில் பெரும் பாராட்டுக்களைப் பெற்று வருகின்றனர்.

பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் எனப் பலரும் வீராங்கனைகளுக்கும், பயிற்சிப் பயிற்றுநர்களுக்கும் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

மாகாண மட்டத்தில் இம்மாணவிகள் மேலும் பல வெற்றிகளைக் குவித்து வவுனியா மண்ணிற்குப் பெருமை சேர்க்க வேண்டும் என்பதே அனைவரினதும் எதிர்பார்ப்பாகும்.

சகோதரி உயிரிழந்தமைக்கு ஆதாரம் கேட்ட வங்கி அதிகாரிகள் : சடலத்தை தோண்டி எடுத்து வந்த சகோதரன்!!

இறந்துபோன தனது சகோதரியின் வங்கி கணக்கில் இருந்த பணத்தை எடுக்க சென்ற சகோரனிடம் , வங்கி அதிகாரிகள் இறப்புக்கு சான்று கேட்டதால், பெண்ணின் புதைத்த உடலை தோட்டி எடுத்து அதனுடன் , சகோதரன் வங்கிக்கு சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் இந்தியாவின் ஒடிசாவில் அரங்கேறியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. சம்பவம் தொடர்பில் இந்திய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளதாவது,

இந்தியா ஒடிசா மாநிலத்தின் கியோஞ்சார் மாவட்டத்தில் இறந்த தனது சகோதரியின் பெயரில் உள்ள வங்கி கணக்கிலிருந்து பணத்தைத் தருமாறு ஒரு பழங்குடி அண்ணன் வங்கிக்கு சென்றுள்ளார்.

எனினும் சகோதரியின் இறப்புக்கு சான்றில்லாமல் பணம் தரமுடியாது என்று வங்கி தரப்பில் உறுதியாகக் கூறப்பட்டதால் வேறு வழியின்றி புதைக்கப்பட்ட தமது சகோதரியை தோண்டி எடுத்து எலும்புக் கூட்டோடு வங்கிக்கு வந்த பழங்குடி மனிதரை பார்த்து அதிகாரிகள் ஆடிப்போயுள்ளனர்.

படானா வட்டாரத்தில் உள்ள மலிபோசி கிளை ஒடிசா கிராமீன் வங்கியில் இந்த சம்பவம் நடைபெற்றது. இதையடுத்து போலீசும், நிர்வாக அதிகாரிகளும் உடனடியாகத் தலையிட்டனர்.

50 வயதான ஜீது முண்டா என்ற நபர், 2026 ஜனவரி 26ஆம் தேதி இறந்த தனது அக்கா கல்ரா முண்டாவின் வங்கி கணக்கில் இருந்த ₹20,000 பணத்தைப் பெற முயன்று வந்துள்ளார்.

வங்கி அதிகாரிகள் கணக்கு வைத்திருப்பவரை நேரில் கொண்டு வர வேண்டும் என்று கூறியபோது அவர் இறந்துவிட்டார் என்று பலமுறை சொன்னேன்.

அவர்கள் கேட்கவில்லை. அதனால் கோபத்தில் கல்லறையை தோண்டி எலும்புக்கூட்டை எடுத்துக் கொண்டு வந்தேன்,” என்று ஜீது முண்டா கூறினார்.

சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். அதன் பின்னர் அதிகாரிகள் முன்னிலையில் அந்த எலும்புக்கூடு மீண்டும் அடக்கம் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.