யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியில் 40 வயதான சட்டத்தரணி உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த சட்டத்தரணில் அ இரட்டைக் குழந்தைகளின் தந்தை என கூறப்படுகின்றது.
நேற்று செவ்வாய்க்கிழமை தனது பணி முடித்து மாலை 5 மணியளவில் வீடு திரும்பிய போது நெஞ்சுக்குள் ஒரு மாதிரியாக இருப்பதாக மனைவியிடம் கூறியுள்ளார்.
அதன் பின்னர் இரவு 7 மணியளவில் உடல்நலம் குறைவினால் உடனடியாக நெல்லியடி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் இளம் சட்டத்தரணியின் மரணம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் தெலுங்கானாவில் மாநிலத்தில் மனிதாபிமானத்தை அதிரவைத்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. திருமணத்திற்கு மறுத்த இளம்பெண்ணுக்கு, எச்.ஐ.வி தொற்றால் பாதிக்கப்பட்ட தனது ரத்தத்தை வலுக்கட்டாயமாக ஊசி மூலம் செலுத்திய இளைஞர் ஒருவர் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹைதராபாத் அருகிலுள்ள போச்சாரம் பகுதியில் வசிக்கும் 24 வயதான இளம்பெண்ணுக்கும், அவரது உறவினரான இளைஞருக்கும் திருமணம் செய்து வைக்க இரு குடும்பங்களும் முன்பு முடிவு செய்திருந்தன.
ஆனால், திருமணத்திற்கு முன்னதாக மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில், அந்த இளைஞருக்கு HIV தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் பெண்ணின் குடும்பம் திருமணத்தை ரத்து செய்தது.
இதனால் ஆத்திரமடைந்த இளைஞர், கடந்த மார்ச் 11ஆம் திகதி, பெண் வீட்டில் தனியாக இருந்தபோது அத்துமீறி நுழைந்து மீண்டும் திருமணத்திற்கு சம்மதம் கோரியுள்ளார்.
பெண் மறுத்ததையடுத்து, முன்கூட்டியே தயாரித்து வைத்திருந்த தனது தொற்றுடைய ரத்தத்தை ஊசி மூலம் வலுக்கட்டாயமாக செலுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தச் சம்பவத்தால் அச்சமடைந்த பெண் ஆரம்பத்தில் யாரிடமும் இதை தெரிவிக்கவில்லை. பின்னர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து மருத்துவமனைக்கு சென்றபோது உண்மை வெளிச்சத்துக்கு வந்தது.
பெண்ணின் தந்தை அளித்த புகாரின் பேரில், போச்சாரம் காவல்துறையினர் குறித்த இளைஞரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.
மருத்துவர்களின் முதற்கட்ட பரிசோதனையில், அந்த இளம்பெண்ணுக்கு தற்போது HIV தொற்று இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், உறுதி செய்ய அடுத்த சில மாதங்கள் தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் இருக்க வேண்டியுள்ளது.
எதிர்பார்க்கப்படும் வறட்சி அல்லது நிலக்கரி இறக்குமதி தாமதங்கள் காரணமாக, நாட்டின் மின்சார விநியோகத்துக்கு இதுவரை எவ்விதப் பாதிப்பும் ஏற்படவில்லை என்று வலுசக்தி பிரதி அமைச்சர் அர்கம் இல்யாஸ் தெரிவித்துள்ளார்.
மின் உற்பத்தித் திறன் குறையக்கூடும் என நிலவும் அச்சங்களுக்குப் பதிலளிக்கும் வகையிலேயே அவர் இந்த விளக்கத்தை அளித்துள்ளார்.
நாடு கடும் வறட்சியை எதிர்கொள்ளவிருப்பதாகவும், இது நீர்மின் உற்பத்தியைப் பெருமளவு பாதிக்கும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அதுல கருணநாயக்க விடுத்திருந்த எச்சரிக்கை குறித்து ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட பிரதி அமைச்சர், “எரிசக்தி ஆதாரங்களைத் திறமையாக விநியோகிப்பதற்கான அனைத்து உரிய நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.
நிலக்கரி ஏற்றிய கப்பல்கள் தற்போது இலங்கையை நோக்கி வந்து கொண்டிருக்கின்றன. ஒரு சில கப்பல்கள் தாமதங்களை அறிவித்துள்ள போதிலும், அது மின் விநியோகத்தைப் பாதிக்கும் நிலையை ஏற்படுத்தவில்லை.
எதிர்பார்க்கப்படும் மழைப் பற்றாக்குறை அல்லது இறக்குமதித் தாமதங்களால் மின் தட்டுப்பாடு ஏற்படும் என இதுவரை கண்டறியப்படவில்லை.
எரிசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றது.” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மின்வெட்டு குறித்த செய்திகள் பரவி வரும் சூழலில், பிரதி அமைச்சரின் இந்த அறிவிப்பு முக்கியத்துவம் பெறுகின்றது.
வடமாகாண பாடசாலைகளில் கிறிஸ்தவ சபை ஒன்றின் பைபிளை நிறுவனம் ஒன்று மாணவர்களுக்கு அன்பளிப்பு செய்வதற்கு வட மாகாண மேலதிக மாகாண கல்வி பணிப்பாளர் அனுமதி வழங்கிய சம்பவத்திற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
வடமாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் தமது கிறிஸ்தவ சபையின் பைபிள் நூலினை வழங்குவதற்கு நிறுவனம் ஒன்று வட மாகாண மேலதிக மாகாண கல்வி பணிப்பாளரிடம் அனுமதி கோரிய நிலையில், பாடசாலைகளில் மாணவர்களுக்கு நூலினை அன்பளிப்பு செய்வதற்கு அனுமதி வழங்கி இருந்தார்.
குறித்த அனுமதி கடிதம் சமூக ஊடகங்களில் வெளியான நிலையில், அதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
பாடசாலை மாணவர்கள் மத்தியில் பாடசாலைக்குள் மத மாற்றம் செய்யும் நோக்குடன் கிறிஸ்தவ சபை ஒன்றின் பைபிள் வழங்கப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்து பலரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில்,
தற்போது குறித்த கிறிஸ்தவ சபையை சேர்ந்த மாணவர்களுக்கு மாத்திரம் வழங்குமாறு கடிதம் மூலம் பைபிளை வழங்க முற்பட்டவர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
குறித்த அறிவுறுத்தல் பாடசாலை மட்டங்களில் எவ்வாறு பின் பற்றப்படும், கிறிஸ்தவ சபையை சேர்ந்தவர்களுக்கு எனில், அதனை அவர்களின் சபைகள் ஊடாகவே வழங்க நடவடிக்கை எடுக்காது எதற்காக பாடசாலைகளில் வைத்து வழங்க வேண்டும்?
பாடசாலைகள் ஊடாக வழங்கப்பட காரணம் மாணவர்களை மதமாற்றம் செய்யும் நோக்கு என்பதனை வலுவாக சந்தேகிக்க கூடிய ஏது நிலைகள் காணப்படுவதனால் பாடசாலைகளில் பைபிளை வழங்குவதனை உடனடியாக நிறுத்த வேண்டும் என கோரி வருகின்றனர்.
இந்நிலையில் வடமாகாண பாடசாலை மாணவர்கள் மத்தியில் கிறிஸ்தவ சபையின் பைபிள் வழங்கப்படுவதனை வடமாகாண ஆளுநர் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் அத்தனையும் மீறி பைபிள் மாணவர்கள் மத்தியில் வழங்கப்பட்டால்,
அவ்வாறு வழங்கப்படும் பைபிளை தீயிட்டு கொளுத்துவோம் என சிவசேனை அமைப்பினை சேர்ந்த சிறிந்தீரன் மற்றும் மாதவன் ஆகியோர் யாழில்.
நேற்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பில் எச்சரிக்கை விடுத்திருந்தனர். அவ்வாறான நிலையில் தற்போது யாழ் , நகர் பகுதி மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் பைபிள் வழங்கப்படுவதற்கு எதிராக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறு முடிவுகள் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்கு முன்பு வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பெறுபேறுகளை வெளியிடுவதற்கு தேவையான செயல்முறைகள் தற்போது நிறைவடையும் தருவாயில் உள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே உறுதிப்படுத்தியுள்ளார்.
இதேவேளை, க.பொ.த சாதாரண தர வினாத்தாள் தொடர்பான மதிப்பீட்டுப் பணிகள் ஏற்கனவே தொடங்கிவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, ஏப்ரல் மாதத்தின் பிற்பகுதியில் சாதாரண தரப் பரீட்சைக்கான செயல்முறைப் பரீட்சைகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செயல்முறைத் தேர்வுகள் முடிந்தவுடன் சாதாரண தரப் பரீட்சைக்கான பெறுபேறுகளையும் விரைவில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
தற்போதைய எரிபொருள் மற்றும் மின்சார நெருக்கடியானது ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசால் உருவாக்கப்பட்டது அல்ல என்பதை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள் என்று சபை முதல்வரும், அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார். அவர் மேலும் உரையாற்றுகையில், ஜனாதிபதி தலைமையிலான அரசு நாட்டின் நிர்வாகத்தைச் சரியான முறையில் முன்னெடுத்து வருகின்றது என்ற நம்பிக்கை மக்களிடம் உள்ளது.
சமூக ஊடகங்களில் பரப்பப்படும் வதந்திகளை நம்பும் ஒரு சிறிய குழுவினரைத் தவிர, ஏனைய சாதாரண பொதுமக்கள் நாட்டின் உண்மையான நிலையை உணர்ந்துள்ளனர்.
ஊடகங்கள் கருத்துச் சேகரிக்கச் செல்லும்போது, உண்மையை மறைப்பவர்களை மக்கள் புறக்கணிப்பதிலிருந்தே இதனைப் புரிந்துகொள்ளலாம். நாட்டில் நிலவும் நெருக்கடி நிலை ஒரு விசேட சூழலாகும்.
குறைந்தபட்சம் எரிபொருளைச் சேமித்து வைப்பதற்கான போதிய வசதிகள் கூட கடந்த காலங்களில் நாட்டில் முறையாக உருவாக்கப்படவில்லை என்பதை ஜனாதிபதி புள்ளிவிவரங்களுடன் சபையில் விளக்கியுள்ளார்.
முன்னைய ஆட்சியாளர்களின் இவ்வாறான பலவீனங்களே இன்றைய நிலைக்குக் காரணமாகும். தற்போது நிலவும் நெருக்கடியை மக்கள் மீதான அழுத்தங்களைக் குறைக்கும் வகையில் அரசு பொறுப்புடன் நிர்வகிக்கும்.
பொதுமக்கள் தேவையற்ற பதற்றத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம். தற்போது கியூ.ஆர். குறியீடு மூலம் எரிபொருள் விநியோகிக்கப்பட்டு வருகின்றது.
எனவே, எரிபொருளைப் பதுக்கி வைக்காமல், அரசின் முறையான வழிமுறைகளைப் பின்பற்றி அதனைப் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.” – என்றார்.
எதிர்காலத்தில் இவ்வாறான சிக்கல்களைத் தவிர்க்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு முன்னெடுத்து வருகின்றது என்றும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க இதன்போது உறுதியளித்தார்.
நாளை (19) முதல், வாகனப் பதிவு எண்களின் கடைசி இலக்கத்தின்படி, ஒற்றை-இரட்டை எண் அடிப்படையில் எரிபொருள் வழங்கப்படும் என்று இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
அதன்படி, ஒற்றை மற்றும் இரட்டை எண்களின் அடிப்படையில் சுழற்சி முறையில் வாகனங்களுக்கான எரிபொருள் விற்பனை மேற்கொள்ளப்படும் என்று இலங்கை பெட்ரோலியம் கூட்டுத்தாபனத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த முறையின் கீழ், பூஜ்ஜியம் மற்றும் இரட்டை எண்களைக் கொண்ட வாகனப் பதிவுத் தகடுகள், இரட்டை எண்கள் கொண்ட திகதிகளில் எரிபொருள் வாங்க அனுமதிக்கப்படும்.
அதாவது, வாகன உரிமத் தகட்டின் கடைசி இலக்கம் 0, 2, 4, 6 மற்றும் 8 ஆக இருந்தால் இரட்டை எண்ணில் வரும் திகதிகளில் வழங்கப்படும்.
அதேநேரம், வாகன உரிமத் தகட்டின் கடைசி இலக்கம் ஒற்றை எண் கொண்ட வாகனங்கள், ஒற்றை எண்கள் கொண்ட திகதிகளில் எரிபொருள் வாங்க அனுமதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது, 1, 3, 5, 7 மற்றும் 9 ஆக இருந்தால் ஒற்றை எண்ணில் வரும் திகதிகளில் எரிபொருள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், எரிபொருள் நிலைய உரிமையாளர்கள் சங்கம், இன்று (19) முதல், கியூஆர் குறியீட்டைக் (QR code) காண்பித்தால் மட்டுமே எரிபொருள் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.
கியூஆர் குறியீடு இல்லாமல் எரிபொருள் வழங்க முன்னர் வழங்கப்பட்ட சலுகைகள் இனி செல்லாது என்று தலைவர் குமார் ராஜபக்ச கூறியுள்ளார். அவசர காலங்களில்கூட, குறியீடு இல்லாமல் எரிபொருள் வழங்கப்படாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
கியூஆர் குறியீட்டில் சிக்கல்கள் இருந்தால், எரிபொருள் நிலையத்திற்கு வருவதற்கு முன்பு 1919 என்ற எண்ணை அழைத்து அவற்றைச் சரிசெய்துகொள்ளுங்கள்.
முன்னர் கியூஆர் குறியீடு இல்லாமல் எரிபொருள் வழங்கி சில சலுகைகளை வழங்கினோம், ஆனால் இனிமேல் கியூஆர் அமைப்பு மூலமாக மட்டுமே எரிபொருள் வழங்கப்படும்,” என்று அவர் கூறியுள்ளார்.
அரசாங்க சேவைகள் நீண்டகாலத் தடங்கலின்றி முன்னெடுக்கப்படுவதை உறுதி செய்யும் நோக்கிலேயே புதன்கிழமை விசேட விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெளிவுபடுத்தியுள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைத் தெரிவித்தார்.மேலும் தெரிவிக்கையில்,
மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள மோதல் சூழலால் உருவாகியுள்ள எரிபொருள் விநியோகப் பிரச்சினையைக் கருத்திற்கொண்டு, அரச துறைக்குப் புதன்கிழமை விடுமுறை வழங்க எடுக்கப்பட்ட தீர்மானம் குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு இவ்வாறு பதிலளித்துள்ளார்.
சாதாரணமாக வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய தினங்களில் தொடர்ச்சியாக விடுமுறை வரும்போது, அலுவலகப் பணிகள் பல நாட்களுக்குப் பாதிக்கப்படுகின்றன.
இது பொதுமக்களுக்கான சேவைகளை வழங்கும் அரசாங்கப் பொறிமுறையில் பெரும் தேக்கநிலையை உருவாக்குகின்றது.
வாரத்தின் நடுப்பகுதியான புதன்கிழமைக்கு விடுமுறையை மாற்றுவதன் மூலம், நீண்டகாலத் தடங்கல் இன்றி அரசாங்க நடவடிக்கைகளைத் திட்டமிட்டு முன்னெடுக்க முடியும்.
இந்த தீர்மானத்தின் ஊடாக அரசாங்க அலுவலகங்களை முற்றாக மூடாமல், பொதுச் சேவைகளைப் பராமரிப்பதற்கும் வார முழுவதும் அத்தியாவசியப் பணிகள் இயங்குவதை உறுதி செய்யவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
எரிபொருள் சிக்கனத்தை கடைப்பிடிக்கும் அதேவேளை, நாட்டின் நிர்வாகக் கட்டமைப்பு முடங்காமல் இருப்பதை உறுதி செய்வதே இந்தத் தீர்மானத்தின் அடிப்படை நோக்கம்.” – என்றும் விளக்கமளித்துள்ளார்.
சந்தையில் தற்போது போதுமான எரிவாயு இருப்பு இருப்பதாகவும், நிரப்பும் செயல்முறை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
அதன்படி, ஒவ்வொரு மூன்று நாட்களுக்கு ஒருமுறை எரிவாயு ஏற்றிய கப்பல் வந்தடைவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் சன்ன குணவர்தன தெரிவித்துள்ளார்.
நாட்டுக்கு தேவையான எரிவாயு கையிருப்பு எதிர்வரும் ஏப்ரல் மாதம் இறுதி வரையில் உள்ளதாகவும்,மேலதிக எரிவாயு இருப்புக்கள் மாலைத்தீவிலுள்ள சேமிப்பு நிலையங்களில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளார்.
எரிவாயுவை ஏற்றிய கப்பல் அமெரிக்காவிலிருந்து விரைவில் மாலைத்தீவை வந்தடையும் எனவும், மேலும் 33,000 மெட்ரிக் தொன் எரிவாயுவைக் கொண்ட மற்றொரு கப்பல் ஏப்ரல் 20ஆம் திகதி வந்தடையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசியத் தேவையைப் பூர்த்தி செய்வதற்கும், எந்தவித இடையூறுமின்றி விநியோகத்தைத் தொடர்வதற்கும் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக சன்ன குணவர்தன பொதுமக்களுக்கு உறுதியளித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற விபத்தில் அண்ணன் மற்றும் சகோதரி உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. குறித்த யுவதிக்கு திருமணமாகி இரு மாதங்கள் ஆகின்ற நிலையில் , இந்த துயரம் நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகின்றது.
குறித்த விபத்தில் யாழ் மணியந்தோட்டம் பகுதியை சேர்ந்த 24 வயதான இளைஞனும் அவரது சகோதரியான 19 வயதான யுவதியுமே உயிரிழந்துள்ளனர்.
அண்ணன் மற்றும் தங்கை இருவரும் மோட்டார் சைக்கிளில் பயணித்த போது, பவுசர் மோதி விபத்து ஏற்பட்டு இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்து தொடர்பாக யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
அதேவேளை நாடளாவிய ரீதியில் விபத்தினால் உயிரிப்போர் எண்ணைக்கை அதிகரித்துள்ளதாக அண்மையில் இலங்கை பொலிஸ் திணக்களம் தெரிவித்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
எரிபொருள் தட்டுப்பாடால் மஹியங்கனை பகுதியில் அரங்கேறிய வினோதமான சம்பவம் ஒன்று சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகின்றது.
பெட்ரோல் நிலையங்களை சல்லடை போட்டுத் தேடிய இரு நண்பர்களுக்கு, இறுதியில் ஒரு ஸ்கூட்டருக்கு மட்டுமே பெட்ரோல் கிடைத்துள்ளது. மற்றைய ஸ்கூட்டர் பாதியிலேயே விட்டுச் செல்ல மனமில்லாத அந்த இளைஞர்கள் ஒரு அதிரடி முடிவை எடுத்தனர்.
ஒரு ஸ்கூட்டரை ஓட்டிச் செல்ல, மற்றைய ஸ்கூட்டரை இருவருக்கும் இடையில் லாவகமாகச் ஏற்றிச் செல்லும் காட்சி காண்போரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில் “ஒரு வண்டிக்குத்தான் பெட்ரோல் கிடைச்சது, அதான் மத்த வண்டியையும் இதுலேயே ஏத்திக்கிட்டு அடுத்த ஷெட்டுக்குத் தேடிப் போறோம்” என அந்த இளைஞர்கள் வீடியோவில் கூலாகத் தெரிவித்துள்ளனர்.
மஹியங்கனையில் பெரும்பாலான எரிபொருள் நிலையங்கள் மூடப்பட்டுள்ள நிலையில், வாகன ஓட்டிகள் படும் அவஸ்தையையும், அவர்களின் சமயோசித புத்தியையும் ஒருசேரக் காட்டும் இந்த வீடியோ தற்போது இணையத்தில் ‘டிரெண்டிங்’ ஆகி வருகின்றது.
சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியை சந்தித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி தங்க விலை 1.2 சதவீதம் சரிந்து 5019 டொலராக பதிவாகியுள்ளது.
கடந்த மார்ச் 13 உடன் நிறைவடைந்த வாரத்தில் தங்கத்தின் விலை சுமார் 3 சதவீதம் சரிவைக் கண்டுள்ளது. அமெரிக்க டொலரின் மதிப்பு உயர்ந்துள்ளதால், முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீதான முதலீடுகளைக் குறைத்துள்ளனர்.
இதேவேளை இலங்கையில் இன்றைய தினம் (17.03.2026) தங்க விலையில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை என அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
அந்தவகையில் கொழும்பு செட்டியார் தெரு நிலவரப்படி 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 408,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. மேலும் 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 375,300 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் பல பாகங்களில் நிலவும் அதிக வெப்பத்துடனான காலநிலை குறித்து பொதுமக்கள் மிகவும் அவதானத்துடன் இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்றைய தினம் நாட்டின் பல பகுதிகளில் மனித உடலில் உணரப்படும் வெப்பச் சுட்டெண், ‘அவதானம் செலுத்த வேண்டிய’ மட்டத்தில் காணப்படும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
மேல், சப்ரகமுவ, தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும், மொனராகலை, மன்னார், அனுராதபுரம் மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளிலும் வெப்பத்தின் தாக்கம் இன்று அதிகமாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது:
வெப்பத்தின் தாக்கத்திலிருந்து தற்காத்துக்கொள்ளப் பின்வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சுகாதார மற்றும் வானிலை நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
நீர் அருந்துதல் : தாகம் எடுக்காவிட்டாலும் அடிக்கடி அதிகளவு நீரை அருந்த வேண்டும்.
வேலை நேரக்கட்டுப்பாடு : வயல் வெளிகள் மற்றும் திறந்தவெளி கட்டுமானத் தளங்களில் நீண்ட நேரம் வேலை செய்வதைத் தவிர்க்க வேண்டும்.
பாதுகாப்பு : வயோதிபர்கள், நோயாளர்கள் மற்றும் சிறுவர்கள் தேவையற்ற முறையில் வெயிலில் செல்வதைத் தவிர்ப்பது அவசியமாகும்.
நிழல் தேடுதல் : வெளியில் செல்லும்போது குடை அல்லது தொப்பிகளைப் பயன்படுத்துவதுடன், முடிந்தவரை நிழலான இடங்களில் தங்குவது பாதுகாப்பானது.
தற்போதைய காலநிலையைத் தொடர்ந்து அவதானித்து வரும் வளிமண்டலவியல் திணைக்களம், இது குறித்த மேலதிக அறிவிப்புகளை அவ்வப்போது வெளியிடும் எனத் தெரிவித்துள்ளது.
பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வரும் எரிபொருள் ஒதுக்கீடு அடுத்த சனிக்கிழமை இரவுடன் முடிவடைந்து, ஞாயிற்றுக்கிழமை புதுப்பிக்கப்படும் என இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத் தலைவர் டி. ஜெ. ராஜகருண தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், கியூஆர் குறியீட்டு முறையை அறிமுகப்படுத்துவதன் மூலம் நாட்டின் எண்ணெய் நுகர்வு 20% குறையும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் தினசரி டீசல் நுகர்வு 4,800 மெட்ரிக் டொன்களாகவும், பெட்ரோல் நுகர்வு 4,045 மெட்ரிக் டொன்களாகவும் உள்ளதாகவும் மேலும் தெரிவித்துள்ளார்.
எரிபொருள் வரிசைகளை அகற்றும் நோக்கத்தில் கியூஆர் குறியீட்டு முறை நாட்டில் திடீரென அறிமுகப்படுத்தப்பட்டதாகவும், அடுத்த மாதத்திற்குள் உறுதிசெய்யப்பட்ட எண்ணெய் இருப்பு போதுமானதாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
முதலாம் இணைப்பு : மத்திய கிழக்கு போர் சூழல் காரணமாக மக்கள் தேவையற்ற முறையில் பீதியடைந்து எரிபொருளைப் பதுக்கி வைத்ததன் விளைவாக திடீரென ‘QR ‘ (தேசிய எரிபொருள் அனுமதிச் சீட்டு) முறையை மீண்டும் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டதாக பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி. ஜே. ஏ. எஸ். டி ராஜகருண தெரிவித்துள்ளார்.
நாட்டின் நிலவும் எரிபொருள் கையிருப்பு தொடர்பில் ஊடக சந்திப்பில், விளக்கமளிக்கும் போதே இதனை தெரிவித்துள்ளார்.மேலும் தெரிவிக்கையில்,
கடந்த சில நாட்களில் எரிபொருள் நுகர்வு சுமார் 20 சதவீதம் திடீரென அதிகரித்தது. இதுவே கியூஆர் (QR) முறையைத் திடீரென அறிமுகப்படுத்தக் காரணம்.
57,000 மெட்ரிக் டொன் டீசலும் 47,000 மெட்ரிக் டொன் பெட்ரோலும் விடுவிக்கப்பட்டன. ஒன்பது நாட்களில், இந்த எரிபொருளின் அளவு இரண்டு கப்பல் சுமைக்குச் சமமாக இருந்தது,” என்று விளக்கமளித்துள்ளார்.
தற்போதைய உலகளாவிய அரசியல் சூழலை எதிர்கொண்டு, நாட்டில் ஏற்படக்கூடிய எரிபொருள் வரிசைகளைக் கட்டுப்படுத்தவும்,
முறையற்ற எரிபொருள் பதுக்கலைத் தடுக்கவும், இதுபோன்ற காரணங்களுக்காகவே ‘கியூஆர்முறையை மீண்டும் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டதாகவும் கூறியுள்ளார்.
எனவே பொதுமக்கள் தேவையற்ற அச்சத்திற்கு உள்ளாக வேண்டாம். சாதாரண நுகர்வோர் மற்றும் எரிபொருள் கடத்தல்காரர்களின் செயல்பாடுகள் கவனிக்கப்பட்டதால்,
வரிசைகளைக் கட்டுப்படுத்தவும் எரிபொருளைச் சேமிக்கவும் 14ஆம் திகதி நள்ளிரவு முதல் கியூஆர் (QR) முறையைச் செயல்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
15ஆம் திகதி காலையில் கியூஆர் அமைப்பு மற்றும் இணையதளத்தில் மேற்கொள்ளப்பட்ட மேம்படுத்தல்கள் காரணமாக சிறிய தொழில்நுட்பச் சிக்கல்கள் இருந்தபோதிலும், அனைத்தும் சரிசெய்யப்பட்டு, அமைப்பு மீண்டும் சீரமைக்கப்பட்டுள்ளது.
உலகின் பல நாடுகளில் எரிபொருள் விலை அதிகரித்து, வரிசைகள் உருவாகியுள்ளன. எனவே இலங்கையில் நிலைமையைச் சமாளிக்க பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம்.
மேலும், தேவையற்ற பயணங்களைக் குறைத்து, தங்களுக்கு தேவையான அளவு எரிபொருளை மட்டும் பெறுவதன் மூலம் இந்த நெருக்கடியைச் சமாளிக்க மக்கள் உதவ வேண்டும் என்றும் அவர் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
புதிய இணைப்பு : எரிபொருள் QR அமைப்பில் நிலவிய தொழில்நுட்ப சிக்கல்கள் தீர்க்கப்பட்டு 5.1 மில்லியனுக்கும் அதிகமான வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன அறிவித்துள்ளார்.
இந்த அமைப்பின் 95% தொழில்நுட்பச் சிக்கல்கள் தீர்க்கப்பட்டு, பயனர்களுக்குத் தடையற்ற அணுகல் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.
இன்று காலை 9 மணிக்கிடையிலான நிலவரப்படி, இதற்கு முன்னர் பதிவு செய்யப்படாத 439,997 வாகனங்கள் இந்த அமைப்பில் இணைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
தற்போது சுமார் 5,094,566 பயனர்கள் இந்த கியூஆர் குறியீட்டு அமைப்பைப் பயன்படுத்தி வருகின்றனர் எனவும், இவை எரிபொருள் பயன்பாட்டில் ஒரு சீரான அதிகரிப்பை பிரதிபலிக்கின்றதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
முதலாம் இணைப்பு : நாடு முழுவதும் மீண்டும் செயற்படுத்தப்பட்டுள்ள எரிபொருள் QR அமைப்பில் பதிவு செய்வதில் ஏற்பட்ட சிக்கல்கள்கள் தற்போது தீர்க்கப்பட்டுள்ளதாக டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்துள்ளார்.
வாகன உரிமை பரிமாற்றங்கள் மற்றும் தொலைபேசி எண்கள் உள்ளிட்டவற்றில் சிக்கல்கள் ஏற்பட்டிருந்தன. இந்த நிலையில், குறித்த சிக்கல் நிலை தொடர்பில் தற்போது தீர்வு காணப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட வாகனங்களை, அமைப்பில் இருந்து அகற்றுவது தொடர்பான கட்டமைப்பும் திருத்தப்பட்டு, செம்மைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, வாகனங்களின் முந்தைய உரிமையாளர்கள் தங்கள் கணக்குகளிலிருந்து அந்த வாகனங்களை இலகுவாக அகற்ற முடியும்.
முந்தைய உரிமையாளரின் கணக்கிலிருந்து ஒரு வாகனம் அகற்றப்பட்டவுடன், புதிய உரிமையாளரால் சிக்கல்கள் இல்லாமல் அதைப் பதிவு செய்ய முடியும்.
கூடுதலாக, எரிபொருள் நிலைய ஊழியர்கள் மற்றும் உரிமையாளர்களுக்கான QR குறியீடு அமைப்பு குறித்த பயிற்சி திட்டங்கள் தற்போது சுமூகமான செயல்பாடுகளை உறுதி செய்வதற்காக நடந்து வருகின்றன.
எரிபொருள் பற்றாக்குறை குறித்து தேவையற்ற பீதியை பரப்பவோ அல்லது அமைப்பு குறித்து தவறான தகவல்களை உருவாக்கவோ வேண்டாம் என்று பிரதி அமைச்சர் வீரரத்ன பொதுமக்களை வலியுறுத்தியுள்ளார்.
அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இந்த QR திட்டத்தின் பயன்பாட்டை திறம்பட முன்னெடுப்பதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் நிலைமை காரணமாக அத்தியாவசியப் பொருட்களுக்கான விலைகளில் மாற்றங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று (16) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே இதனைக் குறிப்பிட்டார். கருத்துத் தெரிவிக்கையில், இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு, வெங்காயம், பருப்பு, சீனி போன்ற அத்தியாவசியப் பொருட்களுக்கான விலைகளில் மாற்றங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில், 80 சதவீதமான உருளைக்கிழங்கு, 80 சதவீதமான வெங்காயம், 100 சதவீதமான பருப்பு, 90 சதவீதமான சீனி போன்ற அத்தியாவசியப் பொருட்கள் வெளிநாடுகளிலிருந்தே இறக்குமதி செய்யப்படுவதாக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் நிலைமைக்கு மத்தியில் எரிபொருள் விநியோகம், எரிவாயு விநியோகம் மாத்திரமல்லாமல் அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களையும் வெளியிலிருந்து இறக்குமதி செய்கிறோம்.
குறிப்பாக உருளைக்கிழங்கு, சீனி, பருப்பு போன்ற அத்தியாவசியப் பொருட்களையும் இறக்குமதியே செய்கிறோம்.
போதுமானளவு அரிசி இருப்பில் இருக்கிறது. 03, 04 மாதங்களுக்கு தேவையான அரிசியை விட அதிக அரிசி உற்பத்தி எமது நாட்டில் தற்போதும் உற்பத்தி செய்யப்படுகிறது.
80 சதவீதமான உருளைக்கிழங்கு , 80 சதவீதமான வெங்காயம், 100 சதவீதமான பருப்பு, 90 சதவீதம் சீனி போன்றன வெளிநாடுகளிலிருந்தே இறக்குமதி செய்யப்படுகின்றன.
நெத்திலி போன்ற உலர் மீன்களுக்கும் நேரடித் தாக்கம் ஏற்பட்டது. இந்தியா, சீனா போன்ற நாடுகளிலிருந்தும் பெருந்தொகைப் பொருட்கள் பெற்றுக் கொள்ளப்படுகின்றன.
எனவே, விநியோக வழிகளில் இருக்கும் நிலைமை சகல நாடுகளுக்கும் தாக்கத்தை செலுத்தியுள்ளது. கப்பல் கட்டணங்கள் அதிகரித்துள்ளன. காப்புறுதிக் கட்டணங்கள் அதிகரித்துள்ளன. அதனால், விலை மாற்றங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன
. நாளாந்தம் இது தொடர்பில் கலந்தாலோசித்து நுகர்வோருக்கு அத்தியாவசியப் பொருட்களை பெற்றுக்கொடுப்பதற்கான வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்கும் முகாமைத்துவ செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான முயற்சிகளை முன்னெடுத்து வருகிறோம்.
இவ்வாறான முகாமைத்துவப் பணிகளை முன்னெடுத்தாலும் நாளாந்தம் இடம்பெறும் மாற்றங்கள் பாதிப்பை ஏற்படுத்த முடியும். எரிபொருள் கப்பல்கள் காலதாமதமானால் பாதிப்பு ஏற்படக் கூடும்.
இருந்தபோதும் ஏப்ரல் மாதம் வரை கிடைக்க வேண்டிய 04 கப்பல்கள் எரிபொருள் விநியோகத்துக்கான உறுதிப்பாட்டை அளித்துள்ளன என்றும் தெரிவித்துள்ளார்.