வவுனியா ஏ9 வீதியில் கோர விபத்து : இரண்டு யாழ். இளைஞர்கள் பரிதாபமாக பலி!!

வவுனியா, கனகராயன்குளம் பகுதியில் ஏ9 பிரதான வீதியில் இடம்பெற்ற கோர விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.

தம்புள்ளையிலிருந்து பருத்தித்துறை நோக்கி மரக்கறிகளை ஏற்றிச் சென்ற சிறிய ரக பாரவூர்தி (Lorry) ஒன்று, புற்குளச்சந்திக்கும் பெரியகுளத்திற்கும் இடைப்பட்ட கனகராயன்குளம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது விபத்துக்குள்ளானது.

ஓட்டுநரின் வேகக் கட்டுப்பாட்டை இழந்த பாரவூர்தி, வீதியை விட்டு விலகி அருகிலிருந்த மரத்தில் பலமாக மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.

விபத்தில் பாரவூர்தியில் பயணித்த 25 வயதுடைய இரண்டு இளைஞர்களும் படுகாயமடைந்தனர். உடனடியாக மீட்டெடுக்கப்பட்ட இருவரும் தீவிர சிகிச்சைக்காக மாங்குளம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். எனினும், அங்கு அளிக்கப்பட்ட தீவிர சிகிச்சை பலனின்றி இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

உயிரிழந்த இருவரும் யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறை பகுதியைச் சேர்ந்தவர்கள் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. 2004 மற்றும் 2005 ஆம் ஆண்டுகளில் பிறந்த இந்த இளைஞர்கள், தங்களது குடும்பத்தின் வாழ்வாதாரத்திற்காக உழைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தபோதே இந்தச் சோகமான சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்.

இளவயதிலேயே குடும்பத்திற்காக உழைக்கச் சென்று உயிரைவிட்ட இச்சம்பவம், அவர்களின் குடும்பத்தினருக்கும் அப்பகுதி மக்களுக்கும் மீளாத துயரத்தையும் பெரும் இழப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் தொடர்பில் கனகராயன்குளம் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

வவுனியாவில் தனியார் மருத்துவமனை ஒன்றுக்கு 5 இலட்சம் ரூபாய் அபராதம்!!

வவுனியாவில் செயற்பட்டு வரும் தனியார் மருத்துவமனை ஒன்றுக்கு, அரசால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிகமாக இரத்தப் பரிசோதனைக்கான கட்டணம் அறவிட்டமை தொடர்பில் ரூ. 5 இலட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தகவல்களின் படி, Full Blood Count (FBC) இரத்தப் பரிசோதனைக்கான அதிகபட்ச கட்டணம் ரூ. 400 என நிர்ணயிக்கப்பட்டிருந்த போதிலும், குறித்த மருத்துவமனை ரூ. 550 அறவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பாக நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை (CAA) அதிகாரிகள் கடந்த ஜூலை 14ஆம் திகதி மேற்கொண்ட விசாரணையின் போது உறுதிப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த வவுனியா நீதவான் நீதிமன்றம், ஜூலை 28ஆம் திகதி ரூ. 5 இலட்சம் அபராதம் விதிக்கும் உத்தரவை பிறப்பித்தது.

அரசால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணங்களை மீறி மருத்துவமனைகள் அல்லது மருத்துவ ஆய்வகங்கள் கட்டணம் அறவிடுவதாக சந்தேகம் ஏற்பட்டால், பொதுமக்கள் அலுவலக நேரங்களில் 1977 என்ற தொலைபேசி இலக்கத்தின் மூலம் நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபைக்கு புகார் அளிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வவுனியா தாண்டிக்குளத்தில் விபத்து : ஒருவர் உயிரிழப்பு : மோதிய வாகனம் தப்பியோட்டம்!!

வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் இன்று (29.07.2026) காலை இடம்பெற்ற விபத்தில் 64 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கனகராயன்குளத்தைச் சேர்ந்த சிவராசா உதயகுமாரன் (64) என்பவர் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்தபோது, எதிர்திசையில் வந்த கப் (Cab) ரக வாகனம் மோதியதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

விபத்திற்குப் பின்னர் குறித்த கப் வாகனத்தின் சாரதி சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த சிவராசா உதயகுமாரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். தப்பிச் சென்ற வாகனத்தையும் அதன் சாரதியையும் கண்டறியும் நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவில் அரச உத்தியோகத்தர்களின் நேர்மை நடை விழிப்புணர்வுப் பேரணி!!

அரசுத் துறைகளில் நேர்மை, வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வை வலுப்படுத்தும் நோக்கில், “Clean Sri Lanka” தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் “நேர்மை வாரம்” கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

இதன் இரண்டாம் நாள் முக்கிய நிகழ்வாக, வவுனியாவில் “நேர்மை நடை (Integrity Walk)” எனும் விழிப்புணர்வுப் பேரணி இன்று (28.07.2026) காலை மிகச் சிறப்பாக நடைபெற்றது.

வவுனியா மாவட்டச் செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இப் பேரணி, இன்று காலை 8.30 மணியளவில் வவுனியா மாவட்டச் செயலக வளாகத்தில் இருந்து எழுச்சியுடன் ஆரம்பமானது.

“நான் ஊழல் செய்யாதவன்… எனது சேவை தூய்மையானது!” எனும் தொனிப்பொருளிலும், பொதுமக்களுக்குச் சிறந்த சேவையை வழங்குவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியும் பதாகைகளை ஏந்தியவாறு அதிகாரிகள் பேரணியாகச் சென்றனர்.

அரச சேவையில் ஊழலற்ற நேர்மைக் கலாசாரத்தை கட்டியெழுப்பும் நோக்கோடு நடைபெற்ற இந்த பேரணியில் பல தரப்பினரும் திரளாகவும் உற்சாகத்துடனும் கலந்துகொண்டனர்.

குறிப்பாக வவுனியா மாவட்டச் செயலகம், வவுனியா பிரதேச செயலகம் மற்றும் வவுனியா தெற்கு பிரதேச செயலகங்களின் அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள் , இலங்கை பொலிஸ், இலங்கை இராணுவம் மற்றும் மதுவரி திணைக்கள அதிகாரிகள், தேசிய இளைஞர் சேவை மன்ற உறுப்பினர்கள் மற்றும் Clean Sri Lanka திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

பொதுச் சேவையில் நேர்மைத் தன்மையை பேணுவதுடன், அரச நிறுவனங்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையே வெளிப்படைத்தன்மையையும் நம்பிக்கையையும் கட்டியெழுப்ப வேண்டியதன் அவசியத்தை உணர்த்தும் ஒரு வலுவான விழிப்புணர்வு நிகழ்வாக இது அமைந்தது.

அரச உத்தியோகத்தர்கள் தங்களது கடமையின் நேர்மையை பறைசாற்றும் வகையில் பங்கெடுத்த இந்நிகழ்வு, வவுனியா பகுதியில் பெரும் வரவேற்பையும் கவனத்தையும் பெற்றுள்ளது.

மருத்துவமனை மாடியில் இருந்து விழுந்த பெண் உயிரிழப்பு : நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் சோகம்!!

கன்னியாகுமரி அருகே தனியார் மருத்துவமனையின் மாடியில் இருந்து கீழே விழுந்து 22 வயது இளம் செவிலியர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் வெட்டுவெந்நி பகுதியில் இயங்கி வரும் தனியார் கண் மருத்துவமனையில் இச்சம்பவம் நேரிட்டுள்ளது.

ஆற்றூர் பகுதியைச் சேர்ந்த ஜஸ்டின் ராஜ் என்பவரின் மகள் ஆஷிகா (22) என்ற பெண், இந்த மருத்துவமனையில் செவிலியராகப் பணியாற்றி வந்தார். இந்நிலையில், அவர் மருத்துவமனையின் மாடியிலிருந்து திடீரென கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

உயிரிழந்த ஆஷிகாவிற்கு அண்மையில் தான் திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. வரும் ஜனவரி 4-ம் தேதி திருமணம் நடைபெறவிருந்த சூழலில் இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இ

ச்சம்பவம் குறித்துத் தகவலறிந்து வந்த காவல்துறையினர், செவிலியர் ஆஷிகாவின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது விபத்தா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது குறித்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

அவுஸ்திரேலியாவில் இலங்கைத் தமிழ் இளைஞனுக்கு சிறைத்தண்டனை!!

அவுஸ்திரேலியாவில் – பிரிஸ்பேன் ரயிலில் அறிமுகமில்லாத ஒருவரின் தலையில் கண்ணாடிப் போத்தலால் தாக்கிய இலங்கையருக்கு 3 மாதங்களுக்கும் குறைவான சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குழந்தை பருவத்தில் அவுஸ்திரேலியாவுக்குக் குடியேற அனுமதிக்கப்பட்ட 22 வயதுடைய சரணீஸ் சிவகுமார் மற்றும் பேட்லி மொஹினி என்பவர் கடந்த ஏப்ரல் 25 ஆம் திகதி Cleveland வழித்தடப் ரயிலில் வைத்து தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த சம்பவம் அங்குள்ள சிசிடிவி கமராக்களில் பதிவாகியிருந்தது. இந்தத் தாக்குதலில் ஈடுபட்டமைக்காக மொஹினிக்கு 10 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.

அத்துடன், குழப்பம் விளைவித்த குற்றத்தை ஒப்புக்கொண்ட சிவகுமார் நேற்று தடுப்பு காவலில் இருந்தவாறே கிளிவ்லாண்ட் நீதிமன்றத்தில் வீடியோ ஊடாக முன்னிலைப்படுத்தப்பட்டார்.

தனியாகப் பயணம் செய்த பாதிக்கப்பட்ட நபரை சிவகுமாரும் மொஹினியும் நெருங்கிப் பேசியுள்ளனர். அந்தச் சந்திப்பு விரைவில் வன்முறையாக மாறியதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இளைஞர்கள் இருவரும் அந்த நபரின் தலை மற்றும் முகத்தில் பலமுறை குத்தியுள்ளனர். மூடப்படும் ரயிலின் கதவுகள் ஊடாக அவரை வெளியே இழுத்துச் சென்று அவர் இறங்குவதைத் தடுத்து, பின்னர் மற்றொரு பெட்டிக்கு சென்றுள்ளனர்.

எனினும் அவர்கள் விரைவில் திரும்பி வந்து அந்த நபரின் பையை பறிக்க முயன்றுள்ளனர். அப்போது சிவகுமார் அந்த நபரின் தலையில் கண்ணாடி போத்தலால் தாக்கியதில் அவர் இரத்தம் சிந்தத் தொடங்கியுள்ளனர்.

இந்தத் தாக்குதலால் கடும் அதிர்ச்சிக்குள்ளான பாதிக்கப்பட்ட நபர், அதன் பின்னர் குயின்ஸ்லாந்திலிருந்து வெளியேறிவிட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. தான் தற்காப்புக்காகவே செயற்பட்டதாக சிவகுமார் நீதிமன்றத்தில் வாதிட்ட போதிலும், நீதிபதி டெபோரா வஸ்தா அவரது வாதத்தை நிராகரித்தார்.

வேகக்கட்டுப்பாட்டை இழந்த முச்சக்கரவண்டி : ஒருவர் உயிரிழப்பு – நால்வர் படுகாயம்!!

திருகோவில் பொலிஸ் பிரிவிலுள்ள விநாயகபுரம் பகுதி வீதி வளைவில் முச்சக்கர வண்டி ஒன்று வேகக் கட்டுப்பாட்டை மீறி வீதியை விட்டு விலகி விபத்திறகு உள்ளானதில் ஒருவர் உயிரிழந்ததுடன் சிறுவர் உட்பட நான்கு பேர் படுகாயமடைந்துள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்று(27.07.2026) இடம்பெற்றுள்ளதாகவும் சாரதியை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்தில் மட்டக்களப்பு வவுணதீவு ச் சேர்ந்த 47 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சாரதி மற்றும் இரு சிறுவர் உட்பட 4 பேர் படுகாயமடைந்த நிலையில் திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் உயிரிழந்தவரின் சடலம் திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை திருக்கோவில் போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

குழந்தை பிறந்தால் தந்தையருக்கும் சம்பளத்துடன் கூடிய விடுமுறை!!

அமெரிக்காவின் மின்னிசோட்டா மாநிலத்தில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ‘சம்பளத்துடன் கூடிய குடும்ப விடுப்புத் திட்டம்’ பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இதுவரை சுமார் 75,000 பேர் இத்திட்டத்தின் கீழ் பயன் பெற ஒப்புதல் பெற்றுள்ள நிலையில், இந்நடவடிக்கை பணிபுரியும் குடும்பங்களுக்கும், குறிப்பாகப் புதிய தந்தையர்களுக்கும் பெரும் நன்மையை அளிப்பதாக ‘பொருளாதார மற்றும் கொள்கை ஆராய்ச்சி மையம்’ (CEPR) தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் தேசிய அளவில் ஒருங்கிணைந்த விடுப்புச் சட்டம் இல்லாத சூழலில், கலிஃபோர்னியாவைத் தொடர்ந்து மின்னிசோட்டா உட்பட 15 மாநிலங்கள் இத்தகைய திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றன.

இத்திட்டத்தின் மூலம் புதிய தந்தையர் தங்கள் குழந்தைகளுடன் தொடக்கக் காலத்தில் நேரத்தைச் செலவிட முடிகிறது. இது குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கும், மனநல ஆரோக்கியத்திற்கும் மிகவும் பயனுள்ளதாக அமைகிறது.

மின்னிசோட்டாவில் இத்திட்டத்திற்கு விண்ணப்பித்தவர்களில் 36% பேர் ஆண்கள் என்பதும், பாதிக்கும் மேற்பட்டோர் ஆண்டுக்கு 78,000 டொலருக்கும் குறைவாகச் சம்பாதிப்பவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இக்கொள்கை வேலைத்தளங்களில் ஊழியர்களின் உற்பத்தித்திறனையும் மனஉறுதியையும் அதிகரிப்பதோடு, பாலினச் சமத்துவத்தையும் ஊக்குவிக்கிறது. அமெரிக்க மக்களில் 76% பேர் இத்தகைய விடுப்புத் திட்டங்களுக்குத் தங்கள் ஆதரவைத் தெரிவித்துள்ளனர்.

ஓடும் மோட்டார் சைக்கிளில் வீதியில் பல மீற்றர்கள் தூரம் இழுத்துச் செல்லப்பட்ட பெண் : அதிர்ச்சி சம்பவம்!!

இந்தியாவின் பீகார் மாநிலம், நாலந்தா மாவட்டத்தின் ராஜ்கிர் பகுதியில், ஓடும் மோட்டார் சைக்கிளில் இருந்து பெண்ணொருவர் வீதியில் பல மீற்றர்கள் தூரம் இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம் தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சம்பவம் ராஜ்கிரில் உள்ள கிலா மைதானம் மற்றும் வேணுவன் பகுதிக்கு அருகில் இடம்பெற்றுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

மோட்டார் சைக்கிள் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், பெண் ஒருவர் வாகனத்தின் கைப்பிடி அல்லது அதன் பின்பகுதியைப் பற்றிக்கொண்டு வீதியில் இழுத்துச் செல்லப்படுவது பதிவாகியுள்ளது. ஒரு கட்டத்தில் மோட்டார் சைக்கிளின் கட்டுப்பாட்டை இழந்த சாரதி, பெண்ணுடன் சேர்ந்து வீதியில் கீழே விழுந்துள்ளார்.

இதனை அடுத்து, அங்கு திரண்ட பொதுமக்களில் ஒருவர் ஆத்திரமடைந்து மோட்டார் சைக்கிளை செலுத்திய நபரை தாக்க முயன்ற நிலையில் , அங்கிருந்தவர்கள் தலையிட்டு நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

இந் நிலையில் , பெண்ணின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் அபாயகரமாக மோட்டார் சைக்கிளை இயக்கிய நபருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஊடகங்களில் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

முச்சக்கரவண்டியுடன் பேருந்து மோதி விபத்து : சாரதி பலி : இரு பயணிகள் படுகாயம்!!

கொழும்பு – கொலன்னாவை வீதியில் கொத்தட்டுவ பகுதியை அண்மித்த பகுதியில் இன்று (27.07.2026) இடம்பெற்ற விபத்தில் முச்சக்கரவண்டி சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். முச்சக்கரவண்டி எதிரே வந்த பேருந்துடன் மோதியதன் காரணமாகவே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முச்சக்கரவண்டி சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன், முச்சக்கரவண்டியின் பின்புற ஆசனத்தில் பயணித்த இருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முச்சக்கரவண்டி சாரதியின் அலட்சியமான செயற்பாடே இந்த விபத்துக்குக் காரணம் என ஆரம்பக்கட்ட பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மரக்கிளை முறிந்து விழுந்ததில் பெண் பரிதாபமாக பலி!!

கரந்தெனிய பிரதேசத்திலுள்ள பழங்கால விகாரை வளாகத்திலிருந்த மரக்கிளை முறிந்து விழுந்ததில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மரக்கிளை முறிந்து விழுந்ததில் காயமடைந்த பெண் பலபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக கரந்தெனிய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் கரந்தெனிய பிரதேசத்தைச் சேர்ந்த 65 வயதுடைய பெண் ஆவார். இவர் நேற்று குறித்த விகாரை வளாகத்திற்கு வந்த சந்தர்ப்பத்திலேயே மரத்திலிருந்து முறிந்து விழுந்த கிளைக்கு அடியில் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த கிளை முறிந்து விழுந்ததன் காரணமாக அருகில் நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்றிற்கும் சேதம் ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக கரந்தெனிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தாயும் இளவயது மகளும் அதிரடியாக கைது!!

அளுத்கம – தர்கா நகர பிரதேசத்தில் தாயொருவரும் அவரது மகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். வீடொன்றில் பதுங்கியிருந்த போதே களுத்துறை மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவின் அதிகாரிகளால் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நிதி மோசடிகள் மற்றும் திருட்டுச் சம்பவங்கள் தொடர்பில் பல நீதிமன்றங்களால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மாகலந்தாவை பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதுடைய தாயும், அவரது 15 வயதுடைய மூத்த மகளுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வவுனியாவில் கத்தியை காட்டி முதியவரிடம் பணம் பறிக்க முற்ப்பட்ட மர்மநபர் : பொலிசார் விசாரணை!!

வவுனியா பூந்தோட்டம் பகுதியில் வீடொன்றுக்குள் நுளைந்த மர்மநபர் அங்கிருந்த முதியவரை தாக்கி பணம் பறிக்க முற்பட்ட சம்வம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், நேற்று (27.07.2026) காலை குறித்த முதியவரின் மனைவி வெளியில் சென்றுள்ளார்.

இதனையடுத்து துவிச்சக்கரவண்டி ஒன்றில் சென்ற மர்மநபர் கத்தியுடன் வீட்டிற்குள் நுழைந்து அங்கிருந்த முதியவரை மிரட்டி ஒரு இலட்சம் ரூபாய் பணத்தை தருமாறு அச்சுறுத்தியுள்ளார்.

முதியவர் பணத்தை கொடுக்காதநிலையில் அவர் மீது தாக்குதலை மேற்கொண்டுவிட்டு தப்பிச்சென்றுள்ளார்.

சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் மர்மநபர் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

 

வவுனியாவில் 5 மாதக் குழந்தையின் உயிரைப் பறித்த ஊஞ்சல் : தாய் காயம்!!

வவுனியா கனகராயன்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குளவிசுட்டான் கிராமத்தில் இடம்பெற்ற துயரச் சம்பவத்தில், ஊஞ்சல் தடி முறிந்து விழுந்ததில் 5 மாதக் குழந்தை ஒன்று சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, குறித்த கிராமத்தில் உள்ள வீட்டில் கட்டப்பட்டிருந்த ஊஞ்சலின் தடி எதிர்பாராத விதமாக முறிந்து சரிந்து விழுந்துள்ளது. அப்போது தாயுடன் இருந்த 5 மாதக் குழந்தை மீது தடி விழுந்ததில் குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளது.

மேலும், இந்த விபத்தில் குழந்தையின் தாயாரின் காலிலும் தடி விழுந்ததால் அவர் காயமடைந்துள்ளார். உடனடியாக மீட்கப்பட்ட அவர் மேலதிக சிகிச்சைக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்த குழந்தையின் சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த துயரச் சம்பவம் தொடர்பாக கனகராயன்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையினரால் நேர்மையான அரச சேவைக்கான சத்தியப்பிரமாணம்!!

நேர்மையான அரச சேவைக்கான ”நேர்மைக் கலாசாரம் – கிளீன் ஸ்ரீலங்கா” தேசிய செயற்பாட்டை நடைமுறைப்படுத்தல் எனும் நிகழ்வானது இன்றைய தினம் (27.07.2026) காலை 9 மணியளவில் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை அலுவலகத்தில் செயலாளர் தெர்ஜனா சுகுமார் தலைமையில் நடைபெற்றது.

குறித்த நிகழ்வில் நேர்மையான அரச சேவைக்கான ”நேர்மைக் கலாசாரம் – கிளீன் ஸ்ரீலங்கா” தேசிய செயற்பாடு தொடர்பான சத்தியப்பிரமாணம் உத்தியோகஸ்தர்களினால் மேற்கொள்ளப்பட்டது.

அதனைத் தொடர்ந்து ”நேர்மைக் கலாசாரம் – கிளீன் ஸ்ரீலங்கா” தொடர்பாக செயலாளரால் சிறப்புரை ஆற்றப்பட்டது.

வவுனியாவில் ‘மறுமலர்ச்சிக்கான வழி’ திட்டம் : உக்குளாங்குளம் திருச்செந்தூரன் மில் வீதி புனரமைப்புப் பணிகள் ஆரம்பம்!!

மறுமலர்ச்சிக்கான வழி தேசிய திட்டத்தின் கீழ், வவுனியா உக்குளாங்குளம் பகுதியில் அமைந்துள்ள திருச்செந்தூரன் மில் வீதியை புனரமைக்கும் பணிகள் இன்று (27.07.2026) ஆரம்பித்து வைக்கப்பட்டன.

கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், வீதிப் புனரமைப்புக்கான பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

நீண்டகாலமாக மிகவும் மோசமடைந்த நிலையில் காணப்பட்ட இவ்வீதியை புனரமைக்குமாறு பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்கவிடம் மேற்கொண்ட வேண்டுகோளுக்கமையவே இந்நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதற்காக ஒதுக்கப்பட்டுள்ள தொகை 53.2 மில்லியன் ரூபாய்களாகும் என்பதுடன், மூன்று மாத காலப்பகுதிக்குள் பணிகளை நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

இவ்வீதி புனரமைக்கப்படுவதன் மூலம் உக்குளாங்குளம் மற்றும் கூமாங்குளம் உள்ளிட்ட பல கிராமங்களுக்கான போக்குவரத்து வசதிகள் மிகவும் இலகுவடையும் என்பதுடன் அப்பகுதியைச் சேர்ந்த 400 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் நேரடியாகப் பயனடைவர்.

இந்நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஜெகதீஸ்வரன், எஸ்.திலகநாதன், வவுனியா பிரதேச செயலாளர் எம்.பிரதாபன், வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் பிரதிநிதிகள், அரச அதிகாரிகள் மற்றும் பிரதேசவாசிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.