கண்டி – மாத்தளை வீதி, அம்பதென்னை பகுதியில் திங்கட்கிழமை (15) நண்பகல் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற வேன் ஒன்றும், தனியார் பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 8 மாணவர்கள் காயமடைந்துள்ளதாகக் கட்டுகஸ்தோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்து நடந்தபோது, பாடசாலை வேனில் சுமார் 20 மாணவர்கள் பயணம் செய்துள்ளனர். விபத்தில் காயமடைந்த மாணவர்கள் உடனடியாகக் கட்டுகஸ்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
காயமடைந்த மாணவர்களின் உடல்நிலை கவலைக்கிடமாக இல்லை எனவும் சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தெரியவந்துள்ளது.
சர்வதேச சந்தையில் எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள சரிவு, தற்போதைய எரிபொருள் விலைகளைப் பராமரிக்க சாதகமான சூழ்நிலையை உருவாக்கியுள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் நிர்வாக இயக்குநர் மயூர நெத்திகுமார தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
மொத்த ஒதுக்கீடு ரூ. 57 பில்லியன் தீரும் வரை எரிபொருள் மானியத் திட்டம் செயல்படுத்தப்படும். பலர் நம்புவது போல் மாத இறுதியில் இது தானாகவே நிறுத்தப்படாது. ஒதுக்கப்பட்ட பணத்தின் அளவுக்கு ஏற்ப மானியம் தொடர்ந்து நீடிக்கும்.
இந்த மானியம் தொடருமா இல்லையா என்பதை அரசாங்கம் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திற்கு அதிகாரபூர்வமாக தெரிவிக்க வேண்டும்.
சர்வதேச சந்தையில் எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள சரிவு, தற்போதைய எரிபொருள் விலைகளை பராமரிக்க சாதகமான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை நிலவரப்படி ஒரு பரல் டீசலின் விலை 125 அமெரிக்க டொலராகக் குறைந்துள்ளது.
இந்த உலக சந்தை விலை நீண்ட காலத்திற்கு நிலையாக இருந்தால், கூடுதல் அரசாங்க மானியங்களை அதிகம் நம்பாமலேயே தற்போதைய உள்ளூர் விலைகளை பராமரிக்க வாய்ப்புள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை வரை விலை டாலர் 125 வரை குறைந்துள்ளதால், தற்போதைய விலை வரம்புகளுக்குள் எரிபொருளை வழங்கும் திறன் எங்களுக்கு உள்ளது.
ஆனால் அது சராசரி மதிப்பாக இருக்க வேண்டும். அந்த விலை மட்டம் தொடர்ந்து நீடித்தால் மானியம் இல்லாமலும் தற்போதைய விலையிலேயே எரிபொருளை வழங்க முடியும். எனினும், குறுகிய கால சந்தை மாற்றங்களின் அடிப்படையில் விலை திருத்தங்களை செய்ய முடியாது.
நிலையான கொள்கை ரீதியான முடிவு எடுப்பதற்கு உலக சந்தையில் எண்ணெய் விலை சராசரி மதிப்பாக தொடர்ந்து இந்தக் குறைந்த மட்டத்தில் நிலைத்திருக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் இன்று(14.06.2026) வரலாற்றுச் சிறப்புமிக்க கலாசார நிகழ்வொன்று இடம்பெற்றள்ளது. 5,000-க்கும் மேற்பட்ட பரதநாட்டியக் கலைஞர்கள் ஒரே நேரத்தில் இணைந்து நடனமாடி, உலகின் மிகப்பெரிய பரதநாட்டியப் பயிற்சி (Bharatanatyam Dance Lesson) என்ற கின்னஸ் உலக சாதனையைப் படைத்துள்ளனர்.
இந்த நிகழ்வு இந்தியாவின் சங்கமம் குளோபல் அகாடமி (Sangamam Global Academy) மற்றும் இலங்கையின் சங்கமிழ் லியா (Samgamizh Liya) ஆகிய அமைப்புகளால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கொழும்பு காலி முகத்திடலில் நடைபெற்ற இந்தநிகழ்வில் இலங்கை, இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பரதநாட்டியக் கலைஞர்கள் பங்கேற்று இந்திய பாரம்பரிய நடனக் கலையையும் கலாசார மரபையும் கொண்டாடினர்.
பரதநாட்டியத்தின் தொன்மையான பாரம்பரியத்தை உலகிற்கு எடுத்துக்காட்டுவதோடு, நாடுகளுக்கிடையிலான கலாசார உறவுகளை வலுப்படுத்துவதே இந்நிகழ்வின் முக்கிய நோக்கமாக இருந்தது.
பாரம்பரிய ஆடைகளை அணிந்திருந்த கலைஞர்கள், குருமார்களின் வழிகாட்டுதலின் கீழ் ஒருங்கிணைந்த நடன அசைவுகளை நிகழ்த்தி உலக சாதனை முயற்சியில் பங்கேற்றனர்.
நிகழ்ச்சிக்குப் பின்னர் கின்னஸ் உலக சாதனை அமைப்பின் மதிப்பீட்டு நடவடிக்கைகள் நிறைவுசெய்யப்பட்டு, சாதனைக்கான சான்றிதழ் அதிகாரப்பூர்வமாக வழங்கப்பட்டது.
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, கலைஞர்கள் மற்றும் ஏற்பாட்டாளர்களின் சார்பில் கின்னஸ் உலக சாதனைச் சான்றிதழைப் பெற்றுக்கொண்டார்.
அங்கு உரையாற்றிய அவர், உலகளாவிய அங்கீகாரத்தைப் பெற்ற கலைஞர்கள் மற்றும் ஏற்பாட்டாளர்களுக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்ததுடன், இந்தியா மற்றும் இலங்கை மக்களுக்கிடையிலான உறவுகளை வலுப்படுத்துவதில் கலாசாரத்தின் முக்கிய பங்கையும் வலியுறுத்தினார்.
இந்த நிகழ்வில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் பிரதி அமைச்சர்களான சுந்தரலிங்கம் பிரதீப், மகிந்த ஜயசிங்க ஆகியோரும் கலந்துகொண்டனர்.
பெருமளவிலான மக்கள் திரண்டிருந்த இந்நிகழ்வு, பிராந்தியத்தின் பகிரப்பட்ட கலாசார மரபுகளைப் போற்றும் விழாக்கோலத்துடன் நடைபெற்றது.
வரி செலுத்துவோர் அடையாள இலக்கம் (TIN) பெற வேண்டியவர்களில் சுமார் 40 இலட்சம் பேர் இதுவரை அதனைப் பெற்றுக்கொள்ளவில்லை என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தற்போது வரை 13 மில்லியனுக்கும் அதிகமானோர் TIN இலக்கத்தைப் பெற்றுள்ளதாகவும், 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து குடிமக்களும் கட்டாயமாக TIN இலக்கம் பெற்றிருக்க வேண்டும்.
நாட்டில் சுமார் 17 மில்லியன் பேர் இந்த இலக்கத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டிய நிலை காணப்படுவதாகவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
மேலும், 2026ஆம் ஆண்டின் 11ஆம் இலக்க உள்நாட்டு இறைவரி (திருத்த) சட்டத்தின் கீழ் பல்வேறு சேவைகள் மற்றும் பரிவர்த்தனைகளுக்கு TIN இலக்கம் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, வங்கிக் கணக்குகள் ஆரம்பித்தல், மோட்டார் வாகனங்களைப் பதிவு செய்தல் மற்றும் புதுப்பித்தல், வணிகப் பதிவுகள் மேற்கொள்ளல், நிறுவனப் பங்குகளை மாற்றம் செய்தல் மற்றும் கடன் அட்டைகள் பெறுதல் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு TIN இலக்கம் அவசியமாக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நடைமுறையில் உள்ள சட்ட ஏற்பாடுகளின் படி TIN இலக்கம் இனி இரகசியத் தகவலாகக் கருதப்படாது என்றும் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வவுனியா பசார் வீதியில் உரிமைகோரப்படாத நிலையில் காணப்பட்ட மர்ம சூட்கேஸ் பொலிசாரால் அகற்றப்பட்டது.
குறித்த பகுதியில் அமைந்துள்ள வியாபார நிலையத்திற்கு முன்பாக உரிமைகோரப்படாமல் நீண்ட நேரமாக ஒரு சூட்கேஸ் காணப்பட்டது.
சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டருந்தது. சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் குறித்த சூட்கேசை திறந்து அதில் சோதனையினை முன்னெடுத்திருந்தனர்.
எனினும் குறித்த சூட்கேசில் ஆடைகளும்,மருத்துவ சான்றிதழ்களும் இருந்த நிலையில் பொலிசார் அதனை எடுத்துச்சென்றனர்.
பொது சொத்துக்களை முறைக்கேடாக கையாண்ட குற்றச்சாட்டில் வவுனியா நீதிமன்றில் கடமை புரியும் சிரேஸ்ட உத்தியோகத்தர் உட்பட மூவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
குற்றச்சம்பவம் தொடர்பான சந்தேகநபர் ஒருவரின் வழக்கின் கோவைகளை நீதிமன்றில் இருந்து சட்டவிரோதமான முறையில் கைமாற்றியது. அதற்கு உதவி புரிந்தமை போன்ற குற்றச்சாட்டுக்கள் அவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வவுனியா விசேட குற்றத்தடுப்பு பொலிசாரால் நீதிமன்ற உத்தியோகத்தர் விசாரணைக்கு அழைக்கப்பட்டு கைதுசெய்யப்பட்டிருந்தார்.
கைதுசெய்யப்பட்டவரிடம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிசார் அவரை நேற்றயதினம் நீதிமன்றில் முற்படுத்தியிருந்தனர். இதன்போது அவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டிருந்தார்
இதேவேளை குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இருவரும் நீதிமன்றால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மும்பையைச் சேர்ந்த பிரபல காமெடியன் பிரனீத் மோரேயின் நிகழ்ச்சியில், ஆண் சடலங்களின் ரகசிய உறுப்பு தொடர்பில் பெண் மருத்துவர் செஜால் பவார் தெரிவித்த கருத்து சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை மருத்துவர் செஜால் பவார், பிரனீத் மோரேயின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசுகையில், “மருத்துவ மாணவர்களின் கல்விக்காகப் பயன்படுத்தப்படும் ஆண் சடலங்களின் அந்தரங்க உறுப்புகளை ஒப்பிட்டு நானும் எனது தோழிகளும் கேலி பேசிக் கொள்வோம் என்று கூறினார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியதைத் தொடர்ந்து, மருத்துவத் துறையில் இருக்கும் ஒருவர், உடலைத் தானமாக வழங்கியவர்களின் சடலங்களை இவ்வளவு உணர்வற்ற முறையில் கேலி செய்யலாமா? எனப் பலரும் கேள்வி எழுப்பினர்.
மருத்துவக் கல்விக்காகத் தாமாக முன்வந்து உடலைத் தானம் செய்தவர்களுக்கு உரிய மரியாதை அளிக்கப்பட வேண்டும் என்றும்,
இத்தகைய கீழ்த்தரமான கருத்தைத் தெரிவித்த பெண் மருத்துவர் மீது நடவடிக்கை எடுத்து, அவரைப் பணியிலிருந்து நீக்க வேண்டும் என்றும் கடுமையான கண்டனங்கள் எழுந்தன.
இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில், டாக்டர் செஜால் பவார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மன்னிப்புக் கோரி ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது,
வைரலாகப் பரவி வரும் எனது பேச்சு குறித்து மக்கள் ஏன் அதிருப்தி அடைந்தார்கள் என்பதை நான் முழுமையாகப் புரிந்துகொள்கிறேன். உணர்வுப்பூர்வமான ஒரு விஷயம் குறித்து எனது கருத்துகள் தவறான முறையில் வெளிப்பட்டுவிட்டன.
யாரையும் அவமதிக்கும் நோக்கம் எனக்கு இருந்ததில்லை என்றாலும், நோக்கத்தை விட அதன் தாக்கமே முக்கியம் என்பதை நான் உணர்கிறேன்.
என் வார்த்தைகளை நியாயப்படுத்தவோ அல்லது விளக்கமளிக்கவோ நான் விரும்பவில்லை; இதற்கான முழுப் பொறுப்பையும் நான் ஏற்றுக்கொள்கிறேன். என் வார்த்தைகள் காயத்தை ஏற்படுத்தியிருப்பதை என்னால் உணர முடிகிறது.
வருத்தமடைந்த அல்லது காயப்பட்ட அனைவரிடமும் நான் உண்மையாகவே மன்னிப்பு கோருகிறேன். இது போன்ற சம்பவம் மீண்டும் ஒருபோதும் நடக்காது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
14 வயதுடைய தனது மகளைத் தொடர்ச்சியாகக் கடித்து, கொடூரமாகத் துன்புறுத்தித் தாக்கி வந்த குற்றச்சாட்டில், குறித்த சிறுமியின் தாய் கைது செய்யப்பட்டுள்ளார்.
தாக்குதலுக்கு உள்ளாகித் துன்புறுத்தப்பட்டதாகக் கூறப்படும் சிறுமி, ஹொரண மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னரே இந்தச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பாதிக்கப்பட சிறுமி தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன், அவரைப் பரிசோதித்து மருத்துவ அறிக்கையைப் பெற்றுக்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சிறுமியின் உடலில் காணப்பட்ட காயங்கள் மற்றும் அவர் வழங்கிய தகவல்களின் அடிப்படையில், இது குறித்து உரிய அதிகாரிகளுக்கு அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.
தாய் தனது மகளை நீண்ட காலமாகத் தொடர்ந்து தாக்கி வந்துள்ளதும், சிறுமியின் உடலில் கடித்த காயங்களை ஏற்படுத்திக் கொடூரமாக நடந்து கொண்டதும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்தத் துன்புறுத்தல்கள் காரணமாக, அச்சிறுமி கடுமையான மன உளைச்சலுக்கும், குழப்பமான மனநிலைக்கும் தள்ளப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன. மேலும் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடியின் உச்சகட்டமாக எதிர்வரும் செப்டம்பருக்குள் மாபெரும் உணவுப் பற்றாக்குறையொன்றை எதிர்கொள்ள நேரிடும் என்று ராஜித சேனாரத்ன எச்சரித்துள்ளார்.
நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடி குறித்து செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும்போது அவர் மேற்கண்ட விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
இலங்கையின் பொருளாதாரம் தற்போது மிகவும் அபாயகரமான நிலையில் உள்ளது . எதிர்வரும் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் நாட்டில் ஒரு மாபெரும் உணவு நெருக்கடி ஏற்படும் அபாயம் உள்ளது.
கடந்த காலத்தில் டொலரின் மதிப்பைக் கட்டுப்படுத்த அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகள் வெறும் தற்காலிகத் தீர்வுகளேயாகும்.
சந்தையில் அரசாங்கக் கையிருப்புகளை வெளியிடுவதன் மூலமும், வெளிநாட்டுத் தொழிலாளர்களின் பணத்தை அவசரமாக வரவழைப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பதன் மூலமும் அரசாங்கம் செயற்கையாக டொலரின் மதிப்பைக் குறைக்க முயன்றபோதிலும்,
வரும் ஜூலை மாதத்திற்குள் டொலரின் மதிப்பு மீண்டும் உயரும். அரசாங்கத்தின் திறமையின்மையால் ரூபாயின் மதிப்பு மேலும் குறையும், வாழ்க்கைச் செலவு கடுமையாக அதிகரிக்கும்.
சர்வதேச நாணய நிதியத்துடன் எட்டப்பட்ட ஒப்பந்தங்களின்படி ஒரு லீட்டர் எரிபொருளின் விலையை 700 ரூபாவாக உயர்த்துவதாக அரசாங்கம் உறுதியளித்துள்ளது.
அதன் காரணமாக எரிபொருள் விலை அதிகரிக்கும் போது ஏனைய பொருட்களின் விலையும் அதிகரிக்கும்.
அதன் ஊடாக நாடு மீண்டும் ஒரு பொருளாதார நெருக்கடிக்கும், உணவுப் பற்றாக்குறைக்கும் முகம்கொடுக்க நேரிடும் என்றும் ராஜித சேனாரத்ன எச்சரித்துள்ளார்.
அத்துடன் இவ்வாறான பின்னணியில், இந்த ஆண்டு மாகாண சபைத் தேர்தல்களை நடத்த அரசாங்கம் சற்றும் தயாராக இல்லை என்றும் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்தும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், தற்போதைய சூழ்நிலையில் தேர்தலை நடத்துவது என்பது அனைத்து மாகாண சபைகளையும் எதிர்க்கட்சிக்கு வெள்ளித் தட்டில் வைதது வழங்குவது போலாகும் என்பதால்,
தேர்தல்களை நடத்துவதைத் தவிர்க்கவே அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.
2026ஆம் ஆண்டு 11ஆம் இலக்க உள்நாட்டு இறைவரி (திருத்தப்பட்ட) சட்டத்தின் கீழ் பல புதிய திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.
இது 2026 ஜூன் 3ஆம் திகதி முதல் உத்தியோகபூர்வமாக நடைமுறைக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் வரி நிர்வாகத்தை வலுப்படுத்துவதற்கும் வரி செலுத்துவோரின் இணக்கத்தன்மையை மேம்படுத்துவதற்குமான திருத்தங்களே இவ்வாறு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
வங்கி கணக்குகளை ஆரம்பித்தல், மோட்டார் வாகனப் பதிவு மற்றும் புதுப்பித்தல், வணிகப் பதிவு, நிறுவனப் பங்குகளைப் பரிமாற்றுதல் மற்றும் கடன் அட்டைகளைப் பெற்றுக்கொள்ளுதல்
போன்ற பல்வேறு முக்கிய பரிவர்த்தனைகளுக்கு இனி வரி செலுத்துவோர் அடையாள எண் (TIN) சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
குறிப்பிட்ட சில மோட்டார் வாகனங்களை விற்பனை செய்வதன் மூலம் பெறப்படும் இலாபம், இனிமேல் வரி விதிக்கப்படக்கூடிய வருமானமாகக் கருதப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
தனிநபர்கள் மற்றும் கூட்டுப்பங்கான்மைகளுக்கான மூலதன இலாப வரி 15 சதவீதமாகவும்; அறக்கட்டளைகள், பரஸ்பர நிதியங்கள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களுக்கான வரி 30 சதவீதமாகவும் திருத்தப்பட்டுள்ளது.
மாதத்திற்கு 100,000 ரூபாவிற்கு மேற்பட்ட சேவைக் கொடுப்பனவுகளுக்கான 5 சதவீதம் தடுத்து வைக்கப்படும் வரியின் வரம்பு மேலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
இதன்படி தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள், சமூக ஊடக நிபுணர்கள், கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள், ஒளிப்பதிவாளர்கள், மொழிபெயர்ப்பாளர்கள் மற்றும் எழுத்தாளர்கள் ஆகியோரும் இனி இந்த வரி வரம்பிற்குள் உள்வாங்கப்பட்டுள்ளனர்.
வரி செலுத்துவோர் இனி மதிப்பீட்டு வரி அறிக்கைகளை சமர்ப்பிக்க வேண்டிய தேவை இல்லை.
அவற்றுக்குப் பதிலாக, காலாண்டு வரி தவணைக்கட்டணங்கள் அதற்கு முந்தைய ஆண்டின் வரிப் பொறுப்பின் அடிப்படையில் கணக்கிடப்படும். குறிப்பிட்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு,
ஆயுள் காப்புறுதி முதிர்வு, கொள்கை ஒப்படைப்பு அல்லது காப்புறுதிதாரரின் மரணத்தின் போது பெறப்படும் தொகைகளுக்கு வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை 2024/25 வரி ஆண்டு வரையிலான தாமதக் கொடுப்பனவுகள் மற்றும் குறைவான வரிச் செலுத்தல்களுக்கான வட்டித் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.
எனினும், நிலுவையிலுள்ள அசல் வரித்தொகை 2026 டிசம்பர் 2 ஆம் திகதிக்கு முன்னர் முழுமையாகச் செலுத்தப்பட வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
இலங்கை வாழ் மக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
உலகம் முழுவதும் வெப்பநிலையை அதிகரித்து, கடுமையான வானிலை நிலவக் காரணமாக அமையும் என எதிர்பார்க்கப்படும் எல் நினோ நிலை, தற்போது உருவாகத் தொடங்கியுள்ளது.
தென்மேற்கு பிராந்தியத்தில் மழைவீழ்ச்சி குறைவடைவதற்கும் இந்த எல் நினோ நிலைமை வழிவகுத்துள்ளதாக திணைக்களத்தின் முன்னறிவிப்புப் பிரிவின் இயக்குநரான மெரில் மெண்டிஸ் தெரிவித்துள்ளார்.
அத்துடன், தற்போது நிலவும் மழைக்காலநிலை எதிர்வரும் ஜுலை மாதத்திலிருந்து ஓரளவுக்குக் குறையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
எல் நினோ நிலைமை குறித்து வளிமண்டலவியல் திணைக்களத்தினால் இனிவரும் நாட்களில் வெளியிடப்படும் அறிவிப்புகள் குறித்து அவதானத்துடன் இருக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.
மேலும், இந்த நிலைமைக்கு முகங்கொடுப்பதற்காக நீரை மிகவும் சிக்கனமாகப் பயன்படுத்துமாறும் அவர் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கையின் காலநிலைக்கு ஏற்படும் தாக்கத்தைக் கருதினால், தென்மேற்கு பிராந்தியத்தில் மழைவீழ்ச்சி குறைவடைவதற்கு எல் நினோ நிலைமை காரணமாக அமையும்.
எவ்வாறாயினும், இந்த எல் நினோ நிலைமையுடன் ஜுலை, ஒகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் மழைவீழ்ச்சியில் ஓரளவு குறைவை நாம் எதிர்பார்க்கிறோம்.
ஏனெனில், தற்போது எல் நினோ நிலைமையின் வளர்ச்சி ஆரம்பமாகியுள்ளது. இதனால், வரவிருக்கும் காலநிலை அறிவிப்புகள் தொடர்பாக பொதுமக்கள் அவதானத்துடன் செயல்படுமாறு விசேடமாக நினைவூட்டுகிறேன்.
எதிர்வரும் காலநிலையின் கீழ் மழைவீழ்ச்சி குறைவடைவதுடன் வெப்பநிலையும் அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் வெப்பநிலையை அதிகரிக்கச் செய்வதற்கும், கடுமையான காலநிலை மாற்றங்களை ஏற்படுத்துவதற்கும் காரணமாக அமையும் ஒரு முக்கிய இயற்கை நிகழ்வான ‘எல்-நினோ’ (El-Nino) நிலை தற்போது அதிகாரப்பூர்வமாக ஆரம்பமாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மத்திய மற்றும் கிழக்கு பூமத்திய ரேகை பசிபிக் பெருங்கடல் பிராந்தியத்தில் கடல் மேற்பரப்பு வெப்பநிலை சாதாரண அளவை விட 0.5 டிகிரி செல்சியஸால் அதிகரித்துள்ளதாக அமெரிக்காவின் தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாக அமைப்பு (NOAA) அறிவித்துள்ளது.
இது எல்-நினோ நிலையாகக் கருதுவதற்குத் தேவையான வரம்பைத் தாண்டியுள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இம்முறை எல்-நினோ நிலை மிகவும் வலுவடைந்து, “கடுமையான எல்-நினோ” நிலையாக மாறுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இது வரலாற்றில் பதிவான மிகக் கடுமையான எல்-நினோ நிகழ்வுகளில் ஒன்றாக மாறக்கூடும் என்றும் விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.
மனித செயல்பாடுகளால் பல தசாப்தங்களாக ஏற்பட்டு வரும் புவி வெப்பமயமாதலுடன் இந்த நிலையும் இணைவதால், வரும் ஓராண்டு காலம் (பெரும்பாலும் 2027 ஆம் ஆண்டு) வரலாற்றில் அதிக வெப்பம் பதிவாகும் ஆண்டாக மாறக்கூடும் என நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
மேலும், இந்த நிலைமை காரணமாக உலகம் முழுவதும் காலநிலை வடிவங்களில் பெரிய மாற்றங்கள் ஏற்படலாம் என்றும் வறட்சி, அதிக மழைப்பொழிவு, வெள்ளப்பெருக்கு, வெப்ப அலைகள் மற்றும் விவசாய உற்பத்தியைப் பாதிக்கும் மோசமான சூழ்நிலைகள் அதிகரிக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பூமத்திய ரேகை பசிபிக் பிராந்தியத்திற்கு மேலேயுள்ள காற்று வடிவங்களிலும் தற்போது மாற்றங்கள் அவதானிக்கப்பட்டு வருவதாக NOAA அமைப்பு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.
கடல் வெப்பநிலை அதிகரிப்பதற்கு வளிமண்டலமும் எதிர்வினையாற்றி வருவதற்கான தெளிவான அறிகுறி இதுவெனக் கூறப்படுகிறது.
இதன் காரணமாக, வரும் மாதங்களில் உலகின் பல்வேறு பகுதிகளில் மோசமான காலநிலை நிகழ்வுகள் ஏற்படக்கூடும் என சர்வதேச வானிலை ஆய்வு நிறுவனங்கள் எச்சரித்துள்ளன.
நுவரெலியா ஹட்டன் போடைஸ் டயகம பிரதான வீதியில் கடுமையான பனிமூட்டத்துடனான வானிலை நிலவுவதால், வாகன சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் வாகனங்களைச் செலுத்துமாறு அக்கரப்பத்தனை பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
நேற்று இரவு கொழும்பில் இருந்து அக்கரப்பத்தனை நோக்கிப் பயணித்த கெப் ரக வாகனம் ஒன்று ஹட்டன் டயகம வீதியில் கட்டுப்பாட்டை இழந்து, நடுவீதியில் சுழன்று விபத்துக்குள்ளானது.
எனினும், குறித்த விபத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தற்போதைய மழை மற்றும் பனிமூட்டம் காரணமாக மத்திய மலைநாட்டுப் பகுதிகளில் பயணிக்கும் சாரதிகள், வேகக் கட்டுப்பாட்டுடன் முகப்பு விளக்குகளைப் பயன்படுத்திப் பாதுகாப்பாக வாகனங்களைச் செலுத்துமாறு பொலிஸார் மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்.
ஹைதரபாத்தில் மாம்பழம் சாப்பிட்ட 2 சகோதரிகள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளதாவது,
இந்தியாவின் கர்நாடக மாநிலம் பீதரைச் சேர்ந்தவர் வைஜிநாத், இவரது மனைவி இந்துமதி. இந்த தம்பதியினர், ஹைதரபாத்தில் தங்கி வேலைசெய்து வந்துள்ளனர்.
இந்த தம்பதியினருக்கு 4 மகள்கள். அவர்களது உறவினர் ரேணுகா என்பவர், மாம்பழங்கள் வாங்கி வந்த நிலையில், மாம்பழத்தை இந்துமதியும், அவரது 4 மகள்களும் சாப்பிட்டுள்ளனர்.
மாம்பழம் சாப்பிட்டவர்களுக்கு திடீரென வயிற்று வலி, வாந்திப்போக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து 5 பேரும் கச்சிகுடாவில் உள்ள ஒரு தனியார் வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.
வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த வைஜிநாத்தின் 3 ஆவது மகள் புவனேஸ்வரி (வயது 17) கடந்த 08 ஆம் திகதி உயிரிழந்தார். அதையடுத்து, கடந்த 09 ஆம் திகதி இளைய மகள் சந்தியா (10) உயிரிழந்தார். இந்துமதி மற்றும் மற்ற 2 மகள்களின் உடல்நிலை சீராக உள்ளது.
சிறுமிகளின் மரணம் குறித்து குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில், நாராயணகுடா பொலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாம்பழங்களைச் சாப்பிட்ட பிறகு, சகோதரிகள் உடல்நலம் குன்றி உயிரிழந்ததைத் தொடர்ந்து உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினரின் இல்லத்திற்குச் சென்று, அங்கிருந்த உணவுப் பொருட்களின் மாதிரிகளைச் சேகரித்து ஆய்வகத்திற்கு அனுப்பினர்.
பிரேதப் பரிசோதனை அறிக்கை மற்றும் பிற அறிக்கைகள் கிடைத்த பின்னரே சகோதரிகளின் மரணம் குறித்த தெளிவு கிடைக்கும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இலங்கையில் நேற்றைய தினம் வீழ்ச்சியை பதிவு செய்திருந்த தங்கத்தின் விலையில் இன்று (12.06.2026) அதிகரிப்பு பதிவாகியுள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
24 கரட் தங்க பவுணொன்று நேற்றைய தினம் 370,000 ரூபாயாக விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று (12) 10,000 ரூபாயால் அதிகரித்துள்ளது. அந்த வகையில் இன்றைய தினம் 24 கரட் தங்க பவுணொன்று 380,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல் நேற்று 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 340,400 ரூபாயாக விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று 9200 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு 349,600 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 47,500 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 43,700 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.