பதுளை நகரில் நடைபெற்ற மிஹிது பெரஹராவின் போது, ஒரு யானை குழப்பமடைந்தமையால் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பதுளை நகரில் நேற்று (10.06) இரவு நடைபெற்ற பெரஹராவின் போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இருப்பினும், சம்பவத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. பதுளை கைலகொட மிஹிது பெரஹரா நேற்று இரவு பதுளை நகர வீதிகளில் 85 ஆவது முறையாக இடம்பெற்றது.
இந்த பெரஹரா ஆண்டுதோறும் பதுளை, சத்தர்மானந்த பிரிவேனா அமைப்பால் ஏற்பாடு செய்யப்படுகிறது. யானைகள், நடனங்கள் உள்ளிட்ட பல அம்சங்களுடன் நேற்று இரவு பெரஹரா நடைபெற்றது.
இருப்பினும், இந்த நேரத்தில், கலசத்தை சுமந்து செல்லும் யானை குழப்பமடைந்தமையால் பெரஹராவின் போது பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது.
எனினும் யானையை சிறிது நேரத்திற்குள் யானைப் பாகன் அமைதிப்படுத்திய பிறகு, பெரஹரா மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தின்(UK) வடக்கு யோர்க்சயரில் உள்ள ப்ரோட்டன் கிராமத்தில் வாழ்பவர்களில், இரண்டு இலங்கையர்கள் மட்டுமே வெள்ளையர் அல்லாதவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மக்கள் தொகை கணக்கெடுப்பின் உத்தியோகபூர்வ தகவல்களின்படி, வடக்கு யோர்க்சயரின் குறித்த கிராமத்தில் 1108 பேரில் பதிவு செய்யப்பட்டிருந்தனர்.
இதன்போதே வெள்ளையர்கள் அல்லாத இரண்டு இலங்கை ஆண்கள் அங்கு வசிப்பது கண்டறியப்பட்டதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
நண்பர்களான சேம் ருத்ரான் மற்றும் சாம்பசிவன் ஆகியோரே அவர்கள் இருவருமாகும். அவர்கள் குறித்த கிராமத்தில் முறையே விற்பனையகம் மற்றும் அஞ்சல்; அலுவலகத்தை நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் தாம் தாயகத்தை விட்டு வெளியேறிய பின்னர், உயிருக்கு ஆபத்து இல்லாத ஒரு கிராமத்தை உணர்வதாக குறித்த இரண்டு இலங்கையர்களும் தெரிவித்துள்ளனர்.
வாடகைக்குறைவு என்பதற்காகவே தாம் இந்த கிராமத்தில் குடியேறியதாகவும், உள்ளூர் மக்கள் தங்களை அன்பாக வரவேற்றதாகவும் குறித்த இரண்டு இலங்கையர்களும் தெரிவித்துள்ளனர்.
பாணந்துறை – மொரட்டுவ பகுதியில் ஏற்பட்ட இருந்த பாரிய தொடருந்து விபத்தை தடுத்த பொதுமகன் சமந்த பெர்னாண்டோ கௌரவிக்கப்பட்டுள்ளார். அத்துடன் தொடருந்தை மோதாமல் நிறுத்திய ஓட்டுநர் விதுர விதர்ஷனும் நேற்று முன்தினம் (09.06) கௌரவிக்கப்பட்டுள்ளார்.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க மற்றும் தொடருந்து பொது மேலாளர் தம்மிக்க ஜெயசுந்தர உட்பட பலர் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.
பாணந்துறை – மொரட்டுவ தொடருந்து நிலையங்களுக்கு இடையில் உடைந்த தண்டவாளத்தைக் கண்டு, சாகரிகா என்ற தொடருந்து குறித்த இடத்திற்கு வருவதற்கு முன்பே தொடருந்தை நிறுத்தி ஏற்படவிருந்த விபத்தை தடுத்த சமந்த பெர்னாண்டோ என்ற நபர் தடுத்திருந்தார்.
தண்டவாளம் உடைந்திருந்த நிலையில், அதனை கண்ட சமந்த பெர்னாண்டோ, தனது சிவப்பு நிற சண்டையை கழற்றி தொடருந்து ஓட்டுநருக்கு ஆபத்தை தெரியப்படுத்தியுள்ளார்.
இதன் காரணமாக பாதுகாப்பாக தொடருந்து நிறுத்தப்பட்டமையினால் பாரிய விபத்து தவிர்க்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
வவுனியாவில் பல்வேறு இடங்களில் வனவள திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது சட்டவிரோத முறையில் கடத்த முற்பட்ட முதிரை மரக்குற்றிகளினை மீட்கப்பட்டுள்ளதாக வனவளத்திணைக்களத்தினர் தெரிவித்தனர்.
குறித்த சம்பவம் பற்றி தெரியவருவதாவது, வனவளத்திணைக்களத்தினருக்கு கிடைத்த இரகசிய தகவலினையடுத்து மாவட்ட வனவள திணைக்கள அதிகாரி அஜித் ஜயசிங்கவின் நெறிப்படுத்தல் இன் கீழ் வட்ட வனவள அதிகாரி
உடார சஞ்சீவவின் தலைமையிலான வனவள உத்தியோகத்தர்கள் மற்றும் விசேட அதிரடிப் படையினர் இணைந்து ஓமந்தை மற்றும் கூமாங்குளம் பகுதியில் விசேட நடவடிக்கை ஒன்றினை மேற்கொண்டிருநதனர். இந்நடவடிக்கையின் போது 27 முதிரை குற்றிகள் மீட்கப்பட்டதுடன் இரு கப் ரக வாகனமும் மீட்கப்பட்டிருந்தது.
இதேவேளை வவுனியாவில் உள்ள மரக்காளையில் இருந்து அனுமதி பெறப்படாத 13 இலட்சம் பெறுமதியான தேக்கு மர பலகைகள் மீட்கப்பட்டதுடன்,
பறயநாலங்குளம் பகுதியில் காடழிப்பில் ஈடுபட்டவர்களிற்கு எதிரான நடவடிக்கை எடுக்கப்பட்டது டன், காடழிப்புக்கு பயன்படுத்திய டோசர் வாகனமும் கைப்பற்றப்பட்டது.
குறித்த சம்பவங்கள் தொடர்பாக நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இன்றையதினம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் ஏற்படவிருந்த மற்றுமொரு பாரிய தொடருந்து விபத்து பெண் ஒருவரினால் தடுக்கப்பட்டுள்ளது. கண்டிக்கும் பேராதனைக்கும் இடையிலான தொடருந்து பாதையில் இன்று காலை விபத்து ஏற்படவிருந்த நிலையில் அது தவிர்க்கப்பட்டுள்ளது.
கண்டி நீதிமன்றத்திற்கு அருகிலுள்ள தண்டவாளத்தில் பாரிய தாழிறக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. காலை 5.30 மணியளவில் வேலைக்கு சென்றுக் கொண்டிருந்த பெண் ஒருவர் இதனை அவதானித்து உடனடியாக தொடருந்து நிலைய அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளார்.
உடனடியாக செயற்பட்ட தொடருந்து நிலைய அதிகாரிகள் அந்த நேரத்தில் குறித்த தண்டவாளத்தின் ஊடாக வந்த தொடருந்தை நிறுத்தி பயணிகளை காப்பாற்றியுள்ளனர்.
இதன் காரணமாக கண்டிக்கும் பேராதனைக்கும் இடையிலான தொடருந்து சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
ஏற்கனவே பாணந்துறையில் இருந்து கொழும்பு நோக்கி தொடருந்து ஒன்று சென்று கொண்டிருந்த நிலையில், தண்டவாளத்தில் ஏற்பட்ட பாதிப்பை நபர் ஒருவர் தெரியப்படுத்தும் வகையில் சிவப்பு சட்டையுடன் ஓடியிருந்தார்.
இதன் காரணமாக ஏற்படவிருந்த பாரிய விபத்து தவிர்க்கப்பட்டதுடன், தொடருந்த நிலைய அதிகாரிகளால் அவர் பாராட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
10 இளைஞர்களை ஏமாற்றி திருமணம் செய்த பெண் சிக்கிய சம்பவம் கேரளாவில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளதாவது,
கேரளா, எர்ணாகுளம் மாவட்டத்தை சேர்ந்த வார்டு உறுப்பினர் ஒருவர், திருமண வரன் தேடி வந்துள்ளார். அதில் தனது மகள் ரேஷ்மாவுக்கு வரன் பார்த்து வருகிறோம் என்றும், அவளுக்கு உங்களை பிடித்துள்ளதாகவும் பென் ஒருவர் கூறியுள்ளார்.
பின் ரேஷ்மா அவரை மாலில் சந்தித்து பேசியுள்ளார். தொடர்ந்து இருவரும் செல்போனில் உறவை வளர்த்த நிலையில், திடீரென திருமணத்துக்கு தனது தாயார் மறுப்பு தெரிவிப்பதாக ரேஷ்மா கூறியுள்ளார்.
இதனால் எதிர்ப்பை மீறி பஞ்சாயத்து உறுப்பினர் ரேஷ்மாவை திருமணம் செய்ய எண்ணி மணப்பெண்ணை அலங்காரம் செய்து காரில் அழைத்துச் சென்றுள்ளார். அப்போது, ரேஷ்மா வைத்திருந்த பேக் அவரின் கையில் சிக்கியுள்ளது.
அதில் ரேஷ்மாவுக்கு 45 நாட்களுக்கு முன்பு வேறொரு ஆணுடன் திருமணம் நடைபெற்றதான் மேரேஜ் சர்டிபிகேட்டும் இருந்ததை கண்டு வார்டு உறுப்பினர் அதிர்ச்சியடைந்துள்ளார்.
உடனடியாக ரேக்ஷ்மா தொடர்பில் அவர் முறைப்பாடு வழங்கியதை அடுத்து திருமண மண்டபம் விரைந்த பொலிஸார் ரேஷ்மாவை கைது செய்துனர்.
அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் , ரேஷ்மாவுக்கு இரண்டு வயதில் குழந்தை ஒன்று உள்ளதும் மேட்ரிமோனியில் வரன் தேடும் இளைஞர்களை குறிவைத்து மோசடி செய்துள்ளமையும் அம்பலமாகியுள்ளது.
ரேக்ஷ்மா, திருமணம் முடிந்த கையுடன் மணமகளின் வீட்டில் உள்ள நகைகள் மற்றும் பணத்தை சுருட்டிக் கொண்டு தலைமறைவாவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.
இதுவரை ரேக்ஷ்மா 10 பேரை ஏமாற்றியுள்ளதும் , 7 பேருடன் முறையாக திருமணம் செய்து, அதற்கு உரிய சான்றிதழையும் வைத்துள்ளார்.
அதேவேளை அடுத்த மாதம் 12 ஆவதாக வோறொரு ஆணுடன் திருமணம் செய்ய திட்டமிருந்ததும் தெரியவந்தது. இந்நிலையில் திருமணம் செய்து ஆண்களை ஏமாற்றி பெண் பிடிபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
யாழ்ப்பாணம் , சுதுமலை அம்மன் கோவில் தேர்த்திருவிழாவின் போது மூன்று பக்தர்களின் சுமார் 06 பவுண் தங்க சங்கிலி அறுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஒன்றரை பவுண் சங்கிலிகள் இரண்டும் , மூன்று பவுண் சங்கிலி ஒன்றும் அறுக்கப்பட்டுள்ளதாக மூவர் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
தேர்த்திருவிழாவின் போது, பெருமளவான பக்தர்கள் ஆலயத்தில் கூடியிருந்த வேளை பக்தர்கள் மத்தியில் புகுந்த திருடர்கள் தம் கைவரிசையை காட்டியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் சங்கிலி அறுத்தவர்களை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் , பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நியூயோர்க் நகரில் யூதர்கள் மீது தாக்குதல் நடத்த சதி செய்ததான குற்றச்சாட்டில், பாகிஸ்தானிய நபர் ஒருவர் கனடாவிலிருந்து அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஷாஜீப் ஜாதூன் என்றும் அழைக்கப்படும் 20 வயதான முகமது ஷாஜீப் கான், செப்டெம்பர் மாதம் கனடாவில் கைது செய்யப்பட்டார்.
ஒரு குற்றவியல் முறைப்பாட்டின்படி, 2023ஆம் ஆண்டு இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலின் அக்டோபர் 7 ஆம் திகதி நினைவு நாளில், புரூக்ளினில் உள்ள ஒரு யூத மையத்தில் இஸ்லாமிய அரசுக்கு (IS) ஆதரவாக ஒரு வெகுஜன துப்பாக்கிச் சூடு நடத்த கான் நியூயார்க்கிற்குச் சென்று திட்டமிட்டிருந்தார்.
ஐ.எஸ்-க்கு ஆதரவாக, நமது யூத சமூகத்தைச் சேர்ந்த முடிந்தவரை பலரைக் கொல்ல தானியங்கி ஆயுதங்களைப் பயன்படுத்த அவர் திட்டமிட்டார்,” என்று அமெரிக்க வழக்கறிஞர் ஜே கிளேட்டன் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
சட்ட அதிகாரிகளாக இருந்த சதிகாரர்களுடனான உரையாடல்களில் கான் தனது திட்டங்களை வெளிப்படுத்தியதாகக் கூறப்படுகிறது என்று நீதித்துறை தெரிவித்துள்ளது.
அமெரிக்க – கனடா எல்லையிலிருந்து சுமார் 12 மைல் (19 கிலோமீட்டர்) தொலைவில் உள்ள ஓர்ம்ஸ்டவுன் நகராட்சியில் கனேடிய அதிகாரிகளால் அவர் தடுத்து வைக்கப்பட்டார்.
ஒரு வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புக்கு பொருள் ஆதரவு மற்றும் வளங்களை வழங்க முயற்சித்ததாகவும், பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட முயன்றதாகவும் கான் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு அதிகபட்சமாக ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி 16 வயதுடைய 4 மாணவிகளின் முகங்களை முறையற்ற புகைப்படங்களாக இணைத்து வட்ஸ்அப் குழுக்களில் பரப்பிய குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட 2 சந்தேக நபர்களையும் ஹொரணை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய பின்னர், அவர்களை விளக்கமறியலில் வைக்க நீதிபதி சந்தன கலன்சூரிய உத்தரவிட்டார்.
முறைப்பாட்டாளர்களான மாணவிகள் கற்கும் அதே பாடசாலையில் கல்வி கற்கும் மாணவன் மற்றும் ஹொரணை பகுதியில் உள்ள மற்றுமொரு பாடசாலையின் மாணவனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஹொரணையில் உள்ள பிரபலமான பாடசாலையின் மாணவி ஒருவர், தனது பெற்றோருடன் மொரகஹஹேன பொலிஸ் நிலையத்தில் இது தொடர்பில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.
தங்கள் மகளின் முகத்தின் புகைப்படத்தைப் பயன்படுத்தி AI தொழில்நுட்பத்தின் ஊடாக உருவாக்கப்பட்ட புகைப்படங்கள் வட்ஸ்அப் குழுவில் பரப்பப்படுவதாகவும், தனது மகள் கடுமையான மன அழுத்தத்தில் இருப்பதாகவும், வகுப்புகளுக்கு செல்ல தயங்குவதாகவும் பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
முறைப்பாடு பதிவு செய்யப்பட்ட ஒரு நாளுக்குள் அதே பாடசாலையை சேர்ந்த 3 மாணவர்களிடமிருந்து மேலும் 3 முறைப்பாடுகள் பொலிஸாருக்கு கிடைத்ததையடுத்து பொலிஸ் அதிகாரிகள் இந்த விடயத்தில் சிறப்பு கவனம் செலுத்தியுள்ளனர்.
மாணவர்களின் முகங்களின் தகாத புகைப்படங்களை உருவாக்க AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திய சந்தேக நபரை அடையாளம் கண்டு கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
உலக சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்தும் உயர்ந்து கொண்டே வருகின்றது. சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையானது அவுன்ஸ் ஒன்று இலங்கை ரூபாவின் படி தொடர்ந்தும் 10 இலட்சம் ரூபா என்ற மட்டத்தில் காணப்படுகின்றது.
கடந்த ஒன்பதாம் திகதி இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட தரவுகளின் அடிப்படையில், உலக சந்தையில் தங்கம் அவுன்ஸ் ஒன்றின் விலையானது 988,455.39 ரூபாவாக காணப்பட்டது.
இதேவேளை, உள்ளூர் சந்தைகளிலும் தங்கத்தின் விலையானது அதிகரித்த போக்கையே காட்டுகின்றது.
24 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலையானது கிட்டத்தட்ட 3 இலட்சம் ரூபாவை அண்மித்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. 2 இலட்சத்து 80ஆயிரம் ரூபாவிற்கும் அதிகமாக 24 கரட் தங்கத்தின் விலை பதிவாகியுள்ளது.
கடந்த 9ஆம் திகதி நிலவரப்பட்ட 2 இலட்சத்து 79ஆயிரம் ரூபாவாக 24 கரட் தங்கப் பவுனொன்றின் விலை பதிவாகியிருந்தது.
மேலும், 22 கரட் தங்கத்தின் விலையும் விரைவில் 3 இலட்சம் ரூபாவை அண்மிக்கலாம் என்ற நிலையில் உயர்ந்து செல்கின்றது. 2 இலட்சத்து 65ஆயிரம் ரூபாவிற்கும் அதிகமாக 22 கரட் தங்கத்தின் விலை பதிவாகியுள்ளது.
கடந்த 9ஆம் திகதி நிலவரப்படி, 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 2 இலட்சத்து 56ஆயிரம் ரூபாவாக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
எவ்வாறாயினும் ஆபரணத் தங்கத்தின் விலை இந்த விலைகளில் இருந்து சற்று மாற்றம் பெறலாம். குறிப்பாக ஆபரணத் தங்கத்தின் விலை அதிகரித்து காணப்படும் வாய்ப்பு உள்ளது.
எனவே தங்கநகை வாங்க காத்திருப்பவர்கள் சந்தை நிலவரங்களை ஆராய்ந்து நகை கொள்வனவில் ஈடுபடுவது சிறந்தது.
கேகாலையில் தனது தாயின் இரண்டாவது கணவரை அடித்துக் கொலை செய்த இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளனர். 24 வயதுடைய இளைஞன் ஒருவரே நேற்றையதினம் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கேகாலை – தெரணியகல, சப்புமல்கந்த தோட்டத்தில் இந்த துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சப்புமல்கந்த தோட்டத்தைச் சேர்ந்த 50 வயதுடைய ஒருவரே இவ்வாறு அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இளைஞனின் தாக்குதலுக்கு இலக்கான குறித்த நபர் கரவனெல்ல வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.
தனது தாயின் இரண்டாவது கணவரையே குறித்த இளைஞன் அடித்துக் கொன்றுள்ளதாகவும், குடும்பத் தகராறு இந்தக் கொலைக்கு காரணமாக இருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
கைது செய்யப்பட்ட இளைஞன் தெரணியகல பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், இன்றையதினம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை தெரணியகல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கொழும்பு, ஒருகொடவத்தை பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் 15 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து இன்று புதன்கிழமை (11.06) காலை இடம்பெற்றுள்ளது.
தனியார் பஸ் ஒன்று வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியின் பின்புறத்தில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தின் போது பஸ்ஸில் பயணித்த 15 பேர் காயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
காலி, வாதுவ பகுதியில் மேலதிக வகுப்பிலிருந்து மகளை அழைத்து வரச் சென்ற தந்தை ஒருவர் கார் மோதி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் வாதுவ மகாவிஹார பகுதியை சேர்ந்த 44 வயதுடைய சுது தேவகே லலித் துஷார என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இந்த நபர் பாணந்துறையிலிருந்து களுத்துறை நோக்கிச் சென்று கொண்டிருந்த போது, பின்னால் வந்த கார் அவர் மீது மோதி காலி வீதியில் உள்ள மின்கம்பத்தில் மோதியது.
காரில் மோதிய நபர் சுமார் 20 மீட்டர் தூரத்திற்கு தூக்கி வீசப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோயிலுக்கு அருகில் LGBTQ உரிமைகளை ஊக்குவிக்கும் ஒரு நடைபவனி தொடர்பில் யாழ்ப்பாண மாவட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தலைமை ஒருங்கிணைப்பாளர் கீதநாத் காசிலிங்கம் கடுமையான விமர்சனத்தைப் வெளியிட்டுள்ளார்.
இந்தச் செயல் தமிழ் கலாச்சாரம் மற்றும் மத விழுமியங்களுக்கு எதிரானது என்று அவர் கூறியுள்ளார்.
தனிநபர்கள் உரிமைகளைப் பெறலாம் என்றாலும், அவர்கள் தமிழ் சமூகத்தின் மரபுகள் மற்றும் நம்பிக்கைகளையும் குறிப்பாக புனித இடங்களில் மதிக்க வேண்டும் என்று அவர் ஒரு அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.
“யாழ்ப்பாண மக்களுக்கு மட்டுமல்ல, முழு நாட்டிற்கும், உலகளாவிய பக்தர்களுக்கும் புனிதமான இடமான யாழ்ப்பாணத்தில் உள்ள புனித நல்லூர் கந்தசுவாமி கோவிலுக்கு முன்னால், ஓரினச்சேர்க்கை உரிமைகளை ஊக்குவித்து, தங்கள் நம்பிக்கைகள் என்று அழைக்கப்படுவதை திணிக்கும் ஒரு குழுவைப் பார்ப்பது எவ்வளவு அதிர்ச்சியூட்டும் அவமானம்” என்று அவர் கூறியுள்ளார்.
இந்தப் போராட்டம் தமிழ் கலாச்சாரத்திற்கு எதிரானது என்றும், யாழ்ப்பாணத்தில் உள்ள மிகவும் புனிதமான இடத்திற்கு முன்னால் தங்கள் நம்பிக்கைகளை ஊக்குவிப்பதன் மூலம் இந்தக் கலாச்சாரத்தை அவர்கள் கேலி செய்வதைப் பார்ப்பது அதிர்ச்சியளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்தக் குழுக்கள் மறைக்கப்பட்ட நிகழ்ச்சி நிரல்களைக் கொண்டுள்ளன என்றும், தங்கள் மேற்கத்திய நம்பிக்கைகளை நம் குழந்தைகள் மீது திணிக்க விரும்பும் ரகசியக் குழுக்களால் ஊக்குவிக்கப்பட்டு நிதியளிக்கப்படுகின்றன என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மேற்கத்திய கலாச்சாரம் என்று அழைக்கப்படுபவர்கள் மத மற்றும் புனித தலங்களிலிருந்து விலகி இருக்க வேண்டும், மேலும் அவர்கள் தங்களுக்கான உரிமைகளைக் கேட்கும்போது சமூகங்களின் கலாச்சாரங்களை மதிக்க வேண்டும்,” என்று அவர் மேலும் கூறினார்.
திருகோணமலை – கந்தளாய் பிரதேசத்தைச் சேர்ந்த பிராந்திய ஊடகவியாளர் பிரியான் மலிங்க (வயது 34) மரணமடைந்ததற்கான பின்னணி குறித்து தற்போது சந்தேகங்கள் எழுந்துள்ளன.
இவர் லிலாரத்ன மாவத்தை பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார்.
கடந்த மே மாதம் 17 ஆம் திகதி இரத்தனபுரியில் உள்ள மனைவியின் வீட்டிலிருந்து கந்தளாய் நோக்கிச் சென்ற போது, ஹபரன கல்வங்குவ என்ற இடத்தில் அதிகாலை 1.40 மணியளவில் மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதாக ஹபரன பொலிசார் தெரிவித்தனர்.
இன்று வரை 23 நாட்கள் கடந்தும் சம்பந்தப்பட்ட விபத்துக்கான விசாரணையில் எந்தவிதமான முன்னேற்றமும் இல்லை என்று அவரது மனைவி கடும் வருத்தத்துடன் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “நான் பல இடங்களில் இருந்து காட்சிகள் பெற்று ஹபரன பொலிசாரிடம் வழங்கியிருந்தும் அவர்கள் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இது ஒரு அலட்சியமான அணுகுமுறையாகவே இருக்கிறது” என தெரிவித்தனர்.பிரியான் மலிங்க ஒரு கடமை உணர்வுள்ள ஊடகவியாளராக பல சமூக பிரச்சனைகளுக்கு குரலாக இருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அவரது மரணம் குறித்து முழுமையான மற்றும் நீதியான விசாரணை நடத்தப்பட வேண்டும் என அவரது மனைவி வேண்டுகோள் விடுத்துள்ளார்.