கேகாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்டி – கொழும்பு பிரதான வீதியில் 85வது மைல்கல் தூணுக்கு அருகில், நேற்று வெள்ளிக்கிழமை (9) இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கண்டியிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற லொறி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து, வீதியில் நிறுத்தப்பட்டிருந்த சைக்கிளுடனும் அதே திசையில் பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றுடனும் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
மேலும் குறித்த பஸ் அதன் முன்னால் பயணித்த தனியார் பஸ் ஒன்றுடனும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதன்போது, லொறியின் சாரதி மற்றும் இரண்டு பயணிகள், இரண்டு பஸ்களிலும் பயணித்த 05 பயணிகள் காயமடைந்து கேகாலை வைத்தியசாலையிலும், மேலும் இரண்டு பயணிகள் மாவனெல்லை வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டனர்.
இதன்போது, லொறியில் பயணித்த ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் உயிரிழந்தவர் காத்தான்குடி பகுதியைச் சேர்ந்த 22 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.
சடலம் கேகாலை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், கேகாலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மிஹிந்தலை பகுதியில் உள்ள A9 வீதியில் இன்று (10) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஐந்து பேர் படுகாயமடைந்துள்ளனர்.
வைத்தியசாலையில் அனுமதி
தம்புள்ளை மைதானத்தில் கிரிக்கெட் போட்டியைக் காண வந்து, வானில் வீடு திரும்பிக் கொண்டிருந்த இளைஞர்கள் குழுவொன்று இந்த விபத்தில் சிக்கியுள்ளது.
குறித்த விபத்தில் காயமடைந்தவர்கள் மிஹிந்தலை மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
வவுனியா, விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த 16 வயதுக்குட்பட்ட சிறுமியை பாலியல் வல்லுறவு புரிந்த குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை வழங்கி வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.
கடந்த 2020 ஆம் ஆண்டு யூன் மாதம் 18 ஆம் திகதி வவுனியா, விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த 16 வயதுக்கு உட்பட்ட சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்புணர்வு செய்ததாக அதே இடத்தைச் சேர்ந்த 33 வயது சந்தேக நபரை பொலிசார் கைது செய்தனர்.
2023 டிசம்பர் 22 ஆம் திகதி, பாலியல் வன்புணர்வு
பின்னர் சந்தேகநபரை பி அறிக்கை மூலம் வவுனியா நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தி வழக்கு தொடரப்பட்டது.
தொடர்ந்து 2023 டிசம்பர் 22 ஆம் திகதி, பாலியல் வன்புணர்வு புரிந்ததாக சந்தேக நபருக்கு எதிராக சட்டமா அதிபர் திணைககளத்தால் குற்றப் பகிர்வுப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு வவுனியா மேல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இதனையடுத்து சந்தேக நபரான வவுனியா விநாயகபுரம் பகுதியில் வசித்து வந்த 33 வயது நபர் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் வழக்கு விசாரணையின் போது உறுதி செய்யப்பட்டது.
குறித்த வழக்கு தீர்ப்புக்காக நேற்றைய தினம் (09) திகதிடப்பட்டிருந்த நிலையில் வழக்கு விசாரணைகளை அடிப்படையாகக் கொண்டு தீர்ப்பினை வவுனியா மேல் நீதிமன்றம் வழங்கியது.
இதன்போது, வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி எம்.எம்.எம்.மிஹால் திறந்த நீதிமன்றில் தீர்ப்பினை வாசித்துக் காட்டினார்.
குறித்த குற்றவாளிக்கு 10 வருட கடூழிய சிறைத் தண்டனை வழங்கியதுடன், 10 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் செலுத்துமாறும், தவறின் 2 மாதகால சாதாரண சிறைத் தண்டனையும்,
பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இரண்டு இலட்சம் ரூபாய் செலுத்த வேண்டும் எனவும் தவறின், ஒரு வருட சிறை தண்டனையும் வழங்கி நீதிம்ன்றம் தீர்ப்பளித்துள்ளது.
நுவரெலியா, கிரகரி வாவியில் விபத்திற்குள்ளான நீர் விமானம் (sea plane) பல்வேறு சிரமத்திற்கு மத்தியில் இரண்டாவது நாளான வெள்ளிக்கிழமை (09.01.2026) மாலை 6 மணியளவில் மீட்டெடுக்கப்பட்டது.
இலங்கை விமாப்படைக்குச் சொந்தமான அதி உயர் தொழில்நுட்பம் கூடிய பாரந்தூக்கி வாகனங்கள் மூலம் கரைக்கு இழுத்துச் தூக்கி எடுக்கப்பட்டது. எனினும் மீட்பு பணியின் போதும் விபத்து ஏற்பட்ட சந்தர்ப்பத்திலும் குறித்த விமானம் கடுமையாக சேதம் ஏற்பட்டுள்ளது.
சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் அதிகாரிகள் மேற்கொண்ட பரிசோதனையின் பின்னர் நுவரெலியா பொலிஸ் உயிர்காப்பாளர்கள், விமானப்படை அதிகாரிகள்,
இராணுவ அதிகாரிகள் மற்றும் கிரகரி வாவி படகு சவாரி வீரர்கள் ஆகியோர் இணைந்து வாவியில் விபத்திற்குள்ளான விமானத்தை பல்வேறு சிரமத்திற்கு மத்தியில் மீட்டனர்.
நுவரெலியாவில் தற்போது நிலவி வரும் பனி மற்றும் மோசமான வானிலை காரணமாகவும் , கிரகரி வாவியில் சேறும் சகதியும் தேங்கி உள்ளதால் மீட்பு பணியை மேற்கொள்வதில் சற்று தாமதம் ஏற்பட்டிருந்தது.
விமானம் விபத்திற்குள்ளானதற்கான உரிய காரணம் இதுவரை தெரிய வரவில்லை இதுபற்றி விசாரணை செய்வதற்கு தனிப்பட்ட குழு ஒன்று நியமனம் செய்யப்பட்டுள்ளது. நுவரெலியா,
கிரகரி வாவியில் நீர் விமானம் (sea plane) ஒன்று புதன்கிழமை (07) ஆம் பிற்பகல் 12.30 மணியளவில் தரையிறங்கும் போது விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் அதிலிருந்த 2 விமானிகள் காயமடைந்து நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இலங்கைக்கு தென்கிழக்கே வங்காள விரிகுடாவில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று (09) காலை 10.00 மணியளவில் பொத்துவிலிலிருந்து கிழக்கே சுமார் 160 கிலோமீட்டர் தொலைவில் நிலைகொண்டுள்ளதாக வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது.
இது வடமேற்கு நோக்கி நகர்ந்து நாளை (10) மாலை யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலை இடையே இலங்கை கடற்கரையை கடக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
அதன்படி, அடுத்த மூன்று நாட்களுக்கு வடக்கு, வடமத்திய, கிழக்கு, சபரகமுவ, மேற்கு, ஊவா, வடமேற்கு மற்றும் மத்திய மாகாணங்களில் மணிக்கு 50-60 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்றும், மணிக்கு 70 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்றும் வீசும் என்றும் தெரிவித்துள்ளது.
இரண்டாம் இணைப்பு
இலங்கைக்கு தென்கிழக்கே வங்காள விரிகுடா கடல் பகுதியில் உருவான ஆழமான காற்றழுத்த தாழ்வு நிலை, இன்று (9) காலை 6 மணி நிலவரப்படி மட்டக்களப்பிலிருந்து கிழக்கே சுமார் 170 கிலோமீட்டர் தொலைவில் நிலைகொண்டுள்ளதாக வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது.
அதன்படி, இது வடமேற்கு நோக்கி நகர்ந்து மாலையில் பொத்துவிலுக்கும் திருகோணமலைக்கும் இடையில் இலங்கை கடற்கரையை கடக்க அதிக வாய்ப்புள்ளது.
இதன் தாக்கம் காரணமாக வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் மழை மற்றும் காற்று நிலைமைகள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
முதலாம் இணைப்பு
இலங்கைக்கு தென்கிழக்கே வங்காள விரிகுடா கடல் பகுதியில் உருவான ஆழமான காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று (09) அதிகாலை 4 மணி நிலவரப்படி, மட்டக்களப்பிலிருந்து தென்கிழக்கே சுமார் 200 கிலோமீட்டர் தொலைவில் நிலைகொண்டுள்ளதாக வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது.
இன்று (09) அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்ட வானிலை முன்னறிவிப்பு அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இது தொடர்ந்து வளர்ச்சியடைந்து வடமேற்கு நோக்கி நகர்ந்து இன்று மாலை பொத்துவில் மற்றும் திருகோணமலைக்கு இடையில் இலங்கை கடற்கரையை கடக்க வாய்ப்புள்ளதாக அந்தத் துறை தெரிவித்துள்ளது.
இலங்கை கடற்கரையில் நுழையும்
தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் உள்ள ஆழமான காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று (09) மாலை 5.30 மணி முதல் இரவு 11.30 மணி வரை ஹம்பாந்தோட்டை மற்றும் கல்முனை இடையே இலங்கை கடற்கரையில் நுழையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த தாக்கம் ஞாயிற்றுக்கிழமை (11) வரை நீடிக்கும்.இந்த வானிலை தாக்கம் நேற்று (08) காலை 5.30 மணிக்கு ஆழமான காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுத்து பொத்துவிலிலிருந்து தென்கிழக்கே 420 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டிருந்தது.
நேற்று காலை சுமார் 10.00 மணியளவில், பொத்துவிலிலிருந்து தென்கிழக்கே சுமார் 300 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருந்தது.
மேலும், இதன் தாக்கம் காரணமாக, மறு அறிவித்தல் வரும் வரை ஆழமான மற்றும் ஆழமற்ற கடல் பகுதிகளில் மீன்பிடி மற்றும் கடல்வழிப்பணிகளை மேற்கொள்ளக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடல் பகுதிகளில் காற்று வீசக்கூடும்
கடல் பகுதிகளில் சில நேரங்களில் மணிக்கு 70-80 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும்.கடலில் அலைகள் 02-03 மீட்டர் வரை உயரக்கூடும்.
எனவே, தற்போது கடல் பகுதிகளில் மீன்பிடி மற்றும் கடல்வழிப் பணிகளில் ஈடுபட்டுள்ளவர்கள் பாதுகாப்பான இடங்களுக்குத் திரும்புமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
வானிலை ஆய்வுத் துறை வெளியிட்டுள்ள சிவப்பு எச்சரிக்கையின்படி, கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். சில இடங்களில் 150 மி.மீட்டருக்கும் அதிகமான கனமழை பெய்யக்கூடும்.
கொழும்பு உட்பட பல மாவட்டங்களில் காற்றின் வேகம் மணிக்கு 50-60 கி.மீ. வரை அதிகரிக்கக்கூடும். முல்லைத்தீவு, வவுனியா, கிளிநொச்சி, பொலன்னறுவை மற்றும் திருகோணமலையில் சில இடங்களில் 100 முதல் 150 மி.மீ வரை கனமழை பெய்யக்கூடும்.
யாழ்ப்பாணம், மன்னார், ஊவா மாகாணத்தின் மொனராகலை மற்றும் பதுளை மாவட்டங்கள் மற்றும் மத்திய மாகாணத்தின் நுவரெலியா மற்றும் மாத்தளை மாவட்டங்களில் சில இடங்களில் 100 மி.மீட்டருக்கும் அதிகமான கனமழை பெய்யக்கூடும்.
இதன் தாக்கத்தால், குடிசைகள் மற்றும் தற்காலிக கட்டமைப்புகளுக்கு சேதம், கூரை ஓடுகள் இடிந்து விழுதல், மின்சாரம் மற்றும் தொலைபேசி இணைப்புகளுக்கு சேதம், மரக்கிளைகள் உடைந்து சாலைகளுக்கு அருகில் உள்ள பெரிய மரங்கள் வேரோடு சாய்தல், நெல் வயல்கள்,
வாழை மற்றும் பப்பாளி பயிர்களுக்கு சேதம், திடீர் வெள்ளம் மற்றும் கடலோர தாழ்வான பகுதிகளில் கடல் நீர் மூழ்குதல் போன்ற சம்பவங்கள் நிகழக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.
வாகன சாரதிகள் எச்சரிக்கை
எனவே இதன் தாக்கத்தை தவிர்க்க, கடற்கரைக்கு அருகில் உள்ள தற்காலிக குடியிருப்பாளர்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல வேண்டும் மலைப்பகுதிகளில் (குறிப்பாக நிலச்சரிவு ஏற்படக்கூடிய பகுதிகளில்) மற்றும் ஆறுகளின் ஓரங்களில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் இது தொடர்பாக விழிப்புடன் இருக்க வேண்டும்.
மலைப்பகுதிகளில் சாலைகளைப் பயன்படுத்தும் வாகன சாரதிகள் இது குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
மேலும், இடியுடன் கூடிய மழை பெய்யும் போது கம்பி இணைப்பு தொலைபேசிகள் மற்றும் மின் சாதனங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திணைக்களம் மேலும் கூறுகிறது.
நீர்ப்பாசனத் துறைக்கு சொந்தமான 73 முக்கிய நீர்த்தேக்கங்களில் 29 நீர்த்தேக்கங்கள் நேற்று (08) திறக்கப்பட்டன.
வானிலை ஆய்வுத்துறை வழங்கிய முன்னறிவிப்புகளின்படி, ஊவா, கிழக்கு, மத்திய, வடமத்திய மற்றும் வடக்கு மாகாணங்களில் உள்ள ஆற்றுப் படுகைகளில் அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளது,
மேலும் அம்பாறை, மட்டக்களப்பு, பொலன்னறுவை, அனுராதபுரம், திருகோணமலை, வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களில் உள்ள ஆற்றுப் படுகைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் அதிகமாக உள்ளது.
மேலும், அந்த மாவட்டங்களில் தாழ்வான பகுதிகளிலும் ஆறுகளுக்கு அருகிலும் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
வங்காள விரிகுடாவில் மட்டக்களப்புக்கு கிழக்காக காணப்படும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், யாழ்ப்பாணத்தை அண்மிக்கும் வாய்ப்புள்ளது என யாழ். பல்கலைகழகத்தின் புவியியல் துறை பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா குறிப்பிட்டுள்ளார்.
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் நகர்வுப் பாதை தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், ” 09.01.2026 வெள்ளிக்கிழமை காலை 9.00 மணி நிலவரப்படி,
வங்காள விரிகுடாவில் மட்டக்களப்புக்கு கிழக்காக காணப்படும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கிழக்கு மாகாணக் கரையோரமாக வடக்கு, வட மேற்கு திசையில் நகர்ந்து யாழ்ப்பாணத்திற்கு அண்மிக்கும் வாய்ப்புள்ளது.
இது யாழ்ப்பாணத்தினை அண்மிக்கும் போது வலுக்குறைந்து தாழ்வு நிலையாகவே கரையைக் கடக்கும் வாய்ப்புள்ளது.
ஆகவே, மலையக மக்கள் அச்சப்பட தேவையில்லை. ஆனால் மத்திய, ஊவா மாகாணங்களில் சில இடங்களில் எதிர்வரும் 11.01.2026 வரை கன மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது” என வலியுறுத்தியுள்ளார்.
அதேநேரம், “(09.01.2026) வெள்ளிக்கிழமை காலை 8.30 மணி வங்காள விரிகுடாவில் உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து தற்போது மட்டக்களப்புக்கு கிழக்காக 116 கிலோமீற்றர் தொலைவில் மையம் கொண்டுள்ளது.
அதன் வெளிவலய முகில்கள் கிழக்கு மாகாணத்தின் கரையோரப் பகுதிகளை தொட ஆரம்பித்துள்ளன. கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் கனமழை பதிவாக தொடங்கியுள்ளது. காற்றும் வேகமாக வீசத் தொடங்கியுள்ளது.
ஆகவே, அடுத்த வரும் 48 மணித்தியாலங்கள் கிழக்கு மாகாணத்திற்கும், 72 மணித்தியாலங்கள் வடக்கு மாகாணத்திற்கும் முக்கியமானவை.
எனவே கனமழை, வேகமான காற்று வீசுகை தொடர்பில் தயவு செய்து மக்கள் மிக அவதானமாக இருப்பது அவசியம்” என குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு – மத்தேகொட கிரிகம்பமுனுவ பகுதியில் உள்ள கைப்பை தயாரிக்கும் தொழிற்சாலையில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இன்று (9) அதிகாலை 1 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டதாக மத்தேகொட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கோடிக்கணக்கான சொத்துக்கள் சேதம்
இதன்போது தீயை அணைக்க கோட்டை மற்றும் ஹொரணையை சேர்ந்த நான்கு தீயணைப்பு வாகனங்கள் மற்றும் 17 அதிகாரிகள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
இந்த அனர்த்தத்தின் போது தீயை அணைக்கச் சென்ற உரிமையாளர் தீக்காயங்களுடன் ஹோமாகம அடிப்படை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த தீ விபத்தில் தொழிற்சாலையில் இருந்த 26 இயந்திரங்கள் மற்றும் உற்பத்தி மூலப்பொருட்கள், கோடிக்கணக்கானசொத்துக்கள் தீயில் எரிந்து நாசமானதாகவும் கூறப்படுகிறது.
இலங்கையின் டிஜிட்டல் தளத்தில் அதிநவீன ஆராய்ச்சி முயற்சிகளில் ஒன்றான 6Gயின் முன்னுரிமை திட்டம் (sixth-generation) network அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பின்லாந்தின் ஒலு Oulu பல்கலைக்கழகம் மற்றும் சென்னை இந்திய தொழில்நுட்ப நிறுவனம் Indian Institute of Technology (IIT) ஆகியவற்றின் பிரதிநிதிகள் (07ஆம் திகதி ) நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் டிஜிட்டல் பொருளாதார பிரதியமைச்சர் எரங்க வீரரத்ன ஆகியோருடன் கலந்துரையாடினர்.
சர்வதேச கல்வி ஒத்துழைப்பை மேம்படுத்துதல் மற்றும் புதுமைகளை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இலங்கையில் தொழில்நுட்ப ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தை நிறுவுதல் உள்ளிட்ட பல திட்டங்கள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
மேலும், இலங்கையின் டிஜிட்டல் ஆராய்ச்சி சுற்றுச்சூழல் அமைப்பை வலுப்படுத்துவதற்கும், நாட்டை அடுத்த தலைமுறை தொழில்நுட்பங்களுக்கான பிராந்திய மையமாக நிலைநிறுத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டது.
Oulu பல்கலைக்கழகத்தின் 6G முன்னுரிமை திட்டம் மற்றும் சென்னை ndian Institute of Technology (IIT) இன் புதுமை அமைப்பு உள்ளிட்ட அதிநவீன ஆராய்ச்சி முயற்சிகள் குறித்தும் விளக்கமளிக்கப்பட்டன.
புதிய கண்டுபிடிப்புகள் மேம்படுத்துதல், உலகளாவிய கூட்டாண்மைகளை வளர்ப்பது மற்றும் இலங்கையின் டிஜிட்டல் பொருளாதார மறுமளர்ச்சிக்கு ஆதரிப்பது ஆகியவற்றின் முதல் படிமுறையின் அடுத்த கட்ட நகர்வுகளின் ஆரம்பமாக அமையவுள்ளது.
பேருவளை, மக்கோன, அக்காரமலே பகுதியில் கிணற்றில் விழுந்து மூன்று வயது சிறுவன் உயிரிழந்துள்ளதாக பயாகல பொலிஸார் தெரிவித்தனர்.
குழந்தை வீட்டில் விளையாடிக் கொண்டிருந்ததாகவும், மாலை 5:00 மணி முதல் குழந்தையை காணாததால் உறவினர்கள் சுற்றியுள்ள வீடுகளில் தேடி பயாகல பொலிஸில் முறைபாடு அளித்துள்ளனர்.
அதன்படி, விசாரணைகளைத் தொடங்கிய பின்னர் பொலிஸார் வீட்டிற்கு வந்தபோது, வீட்டின் பின்னால் உள்ள பாதுகாப்பற்ற கிணற்றில் குழந்தையின் உடல் மிதப்பதைக் கண்டுபிடித்துள்ளனர்.
களுத்துறை குற்றப் புலனாய்வு ஆய்வக அதிகாரிகள், பயாகல பொலிஸார் மற்றும் பேருவளை திடீர் மரண விசாரணை அதிகாரி உள்ளிட்ட குழு சம்பவ இடத்தில் ஆரம்ப விசாரணைகளை மேற்கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ். மாவட்டத்தில் கணிசமான மழைவீழ்ச்சி கிடைக்கும் பட்சத்தில் சகல பிரதேச செயலாளர்களும் அரச உத்தியோகத்தர்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
என மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்தார். யாழ்.மாவட்ட செயலகத்தில் கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில், வங்களா விரிகுடாவின் தென்கிழக்கு பகுதியில் ஏற்பட்ட தாழமுக்கம் காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் சீரற்ற காலநிலை தொடர்ச்சியாக காணப்படுகிறது.
யாழ் மாவட்டத்திற்குரிய தீவக கடல் போக்குவரத்துகளும் இன்றிலிருந்து மறு அறிவித்தல் வரை நிறுத்தப்பட்டுள்ளது. மீனவர்களை கடற்றொழிலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிக்கையின் பிரகாரம் யாழ் மாவட்டத்திற்கு ஒன்பதாம் பத்தாம் திகதிகளில் கூடுதலான மழை வீழ்ச்சி அதாவது, 100 மில்லி மீற்றர் அளவில் கிடைப்பதற்கான அறிகுறி காணப்படுகிறது.
யாழ். மாவட்ட அரச அதிபரின் தலைமையில் கீழ் அனைவரையும் உள்ளடக்கி அனர்த்த முகாமைத்துவம் தொடர்பான கூட்டம் ஒன்று நடத்தப்பட்டது.
இதன்போது அரச அதிபரினால் சகல பிரதேச செயலர்களுக்கும் தேவையான அறிவுறுத்தல் வழங்கப்பட்டதுடன் குறிப்பாக சகல கிராமமட்ட அலுவலர்களுக்கும் பிரதேச செயலாளர்களுக்கும் அனர்த்த நிலைமைகள் தொடர்பான அறிவித்தல்கள் வழங்கப்பட்டது.
வளிமண்டலவியல் திணைக்களத்தினால் பகிரப்படும் தகவல்கள் உடனடியாகவே எமது பங்குதாரர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. சகல கிராமமட்ட உத்தியோகத்தர்களும் இது சம்பந்தமாக அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருப்பதால் மக்கள் தேவையற்ற விதத்தில் பீதியடைய தேவையில்லை – என்றார்.
ஆப்பிளை விட கொய்யாப்பழத்தில் தான் நார்ச்சத்தும், வைட்டமின் சி சத்துக்களும் அதிகமாக உள்ளன. அதுவும் ஒரு கொய்யாப்பழமானது 4 ஆரஞ்சு மற்றும் 10 எலுமிச்சைக்கு இணையான சத்துக்களைக் கொண்டுள்ள இந்த பழத்தை தினமும் ஒன்று உட்கொண்டு வந்தால், உடலில் ஒரு பெரிய மாற்றத்தைக் காணலாம்.
கொலஸ்ட்ரால் குறையும்
கொய்யாப்பழத்தில் கரையக்கூடிய நார்ச்சத்து அதிகமாக உள்ளது. இது கெட்ட கொலஸ்ட்ரால் அளவுகளைக் குறைத்து, இதய நோயின் அபாயத்தைக் குறைக்கும். மேலும் இதில் பொட்டாசியம் அதிகம் உள்ளது. இது சோடியத்தின் அளவை சமநிலையில் பராமரித்து, இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும்.
மலச்சிக்கல் நீங்கும்
கொய்யாப்பழத்தில் கரையாத நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது மலத்தை இளகச் செய்து, மலச்சிக்கலில் இருந்து எளிதில் விடுவிக்கும் தற்போது நிறைய பேர் மலச்சிக்கல் பிரச்சனையால் அவதிப்படுகிறார்கள். இந்த மலச்சிக்கல் பிரச்சனைக்கு எளிய தீர்வை தேடிக் கொண்டிருந்தால், கொய்யாப்பழத்தை சாப்பிடுங்கள்.
எடை குறையும்
கொய்யாப்பழம் வயிறு நிரம்பிய உணர்வை அளித்து, கண்ட உணவுகளின் மீதான நாட்டத்தைக் குறைக்கும் மற்றும் உடல் எடையைக் குறைக்க பெரிதும் உதவி புரியும் ஆகவே நீங்கள் உடல் எடையைக் குறைக்க முயற்சித்துக் கொண்டிருந்தால், உங்கள் தினசரி உணவில் கொய்யாப்பழத்தை சேர்த்து வாருங்கள்.
சர்க்கரை நோய்க்கு நல்லது
கொய்யாப்பழத்தில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகமாக உள்ளன. ப்ரீ டயாபெட்டிக் உள்ளவர்கள் இதை உட்கொண்டால், அது குளுக்கோஸ் அளவைக் கட்டுப்படுத்தும் எனவே சர்க்கரை நோயாளிகளுக்கு கொய்யாப்பழம் மிகவும் நல்லது.
முல்லைத்தீவு – சிலாவத்தையைச் சேர்ந்த சிறுமி டினோஜாவின் மரணம் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா நாடாளுமன்றத்தில் சுகாதார அமைச்சரிடம் பல கேள்விகளை எழுப்பியிருந்தார்.
நாடாளுமன்றத்தில் வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தில் இன்று (09.01.2026) உரையாற்றும் போதே இதனை குறிப்பிட்டிருந்தார்.
சுகாதார அமைச்சரிடம் கேட்ட கேள்விகள்,
1.சிறுமி குகநேசன் டினோஜா மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட திகதி மற்றும் நேரம்?
2.வெளிநோயாளர் பிரிவில் பார்வையிட்ட வைத்தியரின் பெயர்,குழந்தைகள் வாட்டுக்கு மாற்றப்பட்ட நேரம்?
3.மேற்படி வைத்தியசாலையில் குழந்தைகள் வைத்திய நிபுணர் கடமையாற்றுகிறாரா?அவரின் பெயர்?
4.அவ்வாறு இல்லை என்றால் சிரேஷ்ட வைத்திய அதிகாரியின் பெயர், அன்று அவர் கடமையில் இருந்தாரா?
5.இந்த வைத்தியசாலை எந்த பிரிவுக்குள் அடங்குகிறது.பொறுப்பதிகாரியின் பெயர்?
சம்பவம் நடந்த அன்று அத்தியட்சகர் வைத்தியசாலையில் இருக்கவில்லை.கொழும்பில் இருந்துள்ளார். அச்சந்தர்ப்பத்தில் குழந்தைக்கு வழங்கப்பட்ட சிகிச்சை மற்றும் மருந்துகள் அச்சந்தர்ப்பத்தில் இருந்த வைத்தியரால் ஆராயப்பட்டதா போன்ற கேள்விகளை கேட்டிருந்தார்.
இதற்கு பதிலளித்துள்ள அமைச்சர், முதல் மேற்கொண்ட பரிசோதனையின் அறிக்கை அமைச்சுக்கு கிடைக்கப் பெற்றுள்ளது.அதை கொண்டு மேலதிக பரிசோதனைகள் நடைபெறுகின்றன.
வைத்தியசாலை ஊழியர்களால் மேற்கொண்ட தவறால் ஏற்பட்ட மரணம் என்ற அடிப்படையில் விசாரணைகள் நடைபெறுவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
பாலத்தை கடக்க முயன்ற வேன் ஒன்று எதிராக வந்த பேருந்தில் மோதி விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.
புத்தளம் – அனுராதபுரம் வீதியில் தற்காலிகமாக அமைக்கப்பட்ட பாலத்திற்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
கல்லாறு பகுதியில் பாலம் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன நிலையில் இதற்காக போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த ஒடுங்கிய பாலத்திலேயே விபத்து நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்பில் நிலைகொண்டுள்ள ஆழமான தாழமுக்கம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
இன்று (08) காலை 10.30 மணிக்கு வெளியிடப்பட்டுள்ள இந்த எச்சரிக்கை அறிவிப்பானது, அடுத்த 24 மணித்தியாலங்களுக்குச் செல்லுபடியாகும் என திணைக்கள குறிப்பிடுள்ளது.
இத் தொகுதியானது தென்மேற்கு வங்காள விரிகுடா ஊடாக மேற்கு திசையாகவும் வடமேற்கு திசையாகவும் நகர்ந்து, நாளை (09) மாலை 5.30 மணிக்கும் இரவு 11.30 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில்,
ஹம்பாந்தோட்டை மற்றும் கல்முனை ஆகிய பிரதேசங்களுக்கு இடையில் இலங்கையின் கரையை ஊடறுத்துச் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாகத் தரை மற்றும் கடல் பிரதேசங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் சில இடங்களில் 150 மி.மீ க்கும் அதிகமான மிகப் பலத்த மழை பெய்யக்கூடும்.
முல்லைத்தீவு, வவுனியா, கிளிநொச்சி, பொலன்னறுவை மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் 100 முதல் 150 மி.மீ வரையான பலத்த மழை பெய்யக்கூடும்.
யாழ்ப்பாணம், மன்னார் மாவட்டங்களிலும், ஊவா மாகாணத்தின் மொனராகலை, பதுளை மாவட்டங்களிலும், மத்திய மாகாணத்தின் நுவரெலியா, மாத்தளை மாவட்டங்களிலும் 100 மி.மீ க்கும் அதிகமான மழை பெய்யக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.