இலங்கை ரூபாவின் மதிப்பில் ஏற்பட்டுள்ள மாற்றம்!!

அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாயின் மதிப்பு சுமார் 8 சதவீதம் சரிந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இவ்வாண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் ஜூன் 9 வரையிலான காலகட்டத்தில் இந்த சரிவு பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் 2025ஆம் ஆண்டில், ரூபாயின் மதிப்பு டொலருக்கு எதிராக 5.6% சரிந்தது, மேலும் இந்த ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் மட்டும் 0.2% என்ற சிறிய அதிகரிப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய பொருளாதார நிலைமை குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குத் தெரிவிப்பதற்காக, இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் தலைமையில் நடைபெற்ற ஒரு சிறப்பு நிகழ்ச்சியின் போது இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்போது மத்திய வங்கியின் ஆளுநர் மேலும் தெரிவிக்கையில், எரிபொருள் மற்றும் வாகனங்கள் உள்ளிட்ட பொருட்களின் இறக்குமதிக்கான அதிக செலவு,

அத்துடன் சுற்றுலாத்துறை உள்ளிட்ட துறைகளிலிருந்து நாட்டிற்குள் வரும் அந்நியச் செலாவணி வரத்து குறைதல் ஆகியவை ரூபாயின் மதிப்பு சரிவிற்கான முக்கிய காரணங்கள்.

இதற்கிடையில், ரூபாயின் மதிப்பு மேலும் குறையும் என்ற எதிர்பார்ப்பில் ஏற்றுமதியாளர்கள் தங்களது டொலர் வருமானத்தை ரூபாவாக மாற்றுவதை தாமதப்படுத்தியுள்ளனர்.

அரசாங்க பத்திரங்கள் மற்றும் கொழும்புப் பங்குச் சந்தை வழியாக நாட்டிலிருந்து வெளிநாட்டு முதலீடுகள் வெளியேறியதும் ரூபாயின் மதிப்பு சரிவதற்குக் காரணம்.

இந்த காலகட்டத்தில் இலங்கை ரூபாயின் மதிப்பு 8 சதவீதம் சரிந்த அதேவேளையில், மற்ற பிராந்திய நாடுகளின் நாணயங்களும் டொலருக்கு எதிராக மதிப்பிழந்துள்ளன என சுட்டிக்காட்டியுள்ளார்.

டிக்டொக் செயலி ஊடாக போக்குவரத்துப் பொலிசாருக்கு இடையூறு : இருவர் கைது!!

டிக்டொக் செயலி ஊடாக கடமையில் உள்ள போக்குவரத்துப் பொலிஸாரை கேலி செய்து காணொளி பதிவிட்ட இரு சாகச மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அம்பாறை – சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதிகளில் கடந்த வெள்ளிக்கிழமை(05) முதல் திங்கட்கிழமை(08) வரையான காலப்பகுதியில் திடீர் போக்குவரத்து விசேட பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன.

இதன்போது பல்வேறு போக்குவரத்து விதிமீறல்களுக்காக பத்து மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

குறித்த நடவடிக்கையின் போது தலைக்கவசம் அணியாமல் வாகனம் செலுத்தியமை, சாரதி அனுமதி பத்திரம் இல்லாமல் வாகனம் ஓட்டுதல், கவனக்குறைவாக வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட குற்றங்களுக்காக 10 மோட்டார் சைக்கிள்கள் மீட்கப்பட்டதுடன் அவற்றை செலுத்தியவர்களும் சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டனர்.

இது தவிர டிக்டொக் செயலி ஊடாக கடமையில் உள்ள போக்குவரத்துப் பொலிஸாரை கேலி செய்து காணொளி பதிவிட்டவர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் இருவர் கைதாகினர்.

மேலும் இச்சோதனை நடவடிக்கையின் போது சாரதி அனுமதி பத்திரம், வருமான வரிச் சான்றிதழ், காப்பீட்டுச் சான்றிதழ்,

தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டுதல் மற்றும் கவனக்குறைவாக வாகனம் ஓட்டுதல் ஆகிய குற்றங்களுக்காக நடவடிக்கைகள் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டன.

மேலும் இந்த சந்தேக நபர்களில் ஒருவருக்கு நீதிமன்றத்தால் ரூ.38000 அபராதம் விதிக்கப்பட்டமை சுட்டிககாட்டத்தக்கது.

ஏனைய சந்தேக நபர்கள் மீது எதிர்வரும் நாட்களில் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குவைத் பொலிசாரின் அதிரடி நடவடிக்கை : சிக்கிய 3 இலங்கையர்கள்!!

போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கை தொடர்பாக, மூன்று இலங்கையர்கள் உட்பட ஏழு பேரை குவைத் பாதுகாப்புப் படைகள் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குவைத் பாதுகாப்பு அதிகாரிகள் நடத்திய சிறப்புச் சோதனையின்போது இந்தக் கைதுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

வெளிநாட்டு ஊடக அறிக்கைகளின்படி, அந்தக் குழுவில் மூன்று இலங்கையர்கள், இரண்டு குவைத் குடிமக்கள், ஒரு இந்தியர் மற்றும் மேலும் இரண்டு வெளிநாட்டினர் அடங்குவர்.

இந்த நடவடிக்கையின்போது ஹஷிஷ், ஹெரோயின் மற்றும் போதை மாத்திரைகள் உள்ளிட்ட பல்வேறு போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

போதைப்பொருள் எடை அளவிடும் மற்றும் பொதி செய்யப் பயன்படுத்தப்படும் உபகரணங்களும் சம்பவ இடத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளன.

சந்தேக நபர்களும், கைப்பற்றப்பட்ட பொருட்களும் மேலதிக விசாரணைக்காக குவைத்தின் குற்றவியல் பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

 

மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவனை கைது செய்யும் போது மரணம்!!

குருணாகல், பிங்கிரிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட படிவெல பகுதியில் கணவனால் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு மனைவி கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.

குடும்பத் தகராறு முற்றியதில், அவர் இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் 61 வயதுடைய பெண் என தெரியவந்துள்ளது.

நேற்று காலை இந்தத் தம்பதியினருக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதாலேயே கொலை நடந்துள்ளதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கொலையைச் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள 59 வயதான கணவனை பிங்கிரிய பொலிஸார் கைது செய்தனர்.

எனினும், கைது செய்யப்படும் போது சந்தேக நபருக்கு ஏற்பட்ட திடீர் உடல்நலக்குறைவு காரணமாக பிங்கிரிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவரும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் குறித்து பிங்கிரிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஒரே நாளில் பாரியளவு குறைந்த தங்கத்தின் விலை!!

இலங்கையில் 22 கரட் தங்க பவுணொன்றின் விலை இன்றைய தினம் (11.06.2026) 340,400 ரூபா பதிவாகியுள்ளது. அதன்படி இன்றைய தினம் 24 கரட் தங்க பவுணொன்றின் விலையானது 8000 ரூபாயால் குறைந்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

கொழும்பு செட்டியார்தெரு தகவல்களின் படி 24 கரட் தங்க பவுண் ஒன்றின் விலை 370,000 ரூபாவாக காணப்படுகிறது. அதேவேளை, 22 கரட் தங்கம் ஒரு பவுண் 340,400 ரூபாயாக விற்பனையாகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் 24 கரட் தங்கம் ஒரு கிராம் 46,250 ரூபாயாகவும், 22 கரட் தங்கம் ஒரு கிராம் 42,550 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுவதாக நகையக வியாபாரிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

 

இந்த அறிகுறிகள் தென்படுபவர்கள் தாமதிக்க வேண்டாம் : விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை!!

இரண்டாம் இணைப்பு

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய தொற்றுநோய் தடுப்பு நிறுவனத்தின் சிரேஷ்ட விசேட வைத்திய நிபுணர் டாக்டர் ஆனந்த விஜேவிக்ரம எச்சரித்துள்ளார்.

இது நாட்டின் சுகாதாரக் கட்டமைப்பிற்கு ஏற்படும் அழுத்தம் குறித்து சுகாதார அதிகாரிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போதைய இதே நிலை நீடித்தால், வரவிருக்கும் வாரங்களில் மருத்துவமனைகள் தாங்க முடியாத சுமையை எதிர்கொள்ள நேரிடும் என்றும் எச்சரித்துள்ளார்.

முதலாம் இணைப்பு : நாடு முழுவதும் டெங்கு நோய் பரவல் வேகமாக அதிகரித்து வருவதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதுவரை 19 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும், அதேசமயம் கடந்த ஆண்டு (2025) 29 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, கேகாலை, இரத்தினபுர, புத்தளம், கல்முனை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்கள் டெங்கு அபாய மாவட்டங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

தெளிவான நீர் உள்ள சூழலில் டெங்கு நுளம்புகள் இனப்பெருக்கம் செய்யும் அபாயம் உள்ளதகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் காலை மற்றும் மாலை நேரங்களில் நுளம்பு கடியை தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், அதிக காய்ச்சல், தலைவலி, தசை மற்றும் மூட்டு வலி, குமட்டல் மற்றும் வாந்தி, தோலில் சிவப்புப் புள்ளிகள் மற்றும் இரத்தப்போக்கு போன்ற அறிகுறிகள் உள்ளவர்கள் உடனடியாக மருத்துவமனையிலோ அல்லது மருத்துவரிடமோ சிகிச்சை பெற வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

அதேநேரம், காய்ச்சலை கட்டுப்படுத்த பரசிட்டமோலை மாத்திரம் எடுத்துக்கொள்ளுமாறும், ஏனைய மருந்துகளைப் பயன்படுத்த வேண்டாம் என்றும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆடி அமாவாசையை அரச விடுமுறையாக்க அரசாங்கம் பரிசீலனை!!

இந்துக்களின் புனித தினமான ஆடி அமாவாசையை அரச விடுமுறை தினமாக பிரகடனப்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்படும் என்றும் அந்த விடயம் சமய விவகாரங்கள் தொடர்பான விசேட குழுவில் பரிசீலிக்கப்பட்டு முடிவுகள் விரைவில் அறிவிக்கப்படும் என புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் ஹினிதும சுனில் செனவி தெரிவித்துள்ளார்.

இந்துக்களின் புனித தினமான ஆடி அமாவாசையை அரச பொதுவிடுமுறை நாளாகப் பிரகடனப்படுத்துமாறு வன்னி மாவட்ட உறுப்பினர் துரைராசா ரவிகரன் நாடாளுமன்றக் குழு அறையில் நடைபெற்ற புத்தசாசன,

சமய மற்றும் கலாசார அலுவல்கள் தொடர்பான அமைச்சின் ஆலோசனைக் குழுக் கூட்டத்தின்போது முன்வைத்த கோரிக்கைக்கே அமைச்சார் இவ்வாறு பதிலளித்துள்ளார்.

கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேலும் தெரிவிக்கையில், ஆடி அமாவாசை என்பது இந்துக்களின் புனித நாளாகும்.

இந்நாளில் இந்துக்கள் தமது முன்னோர்களுக்காக, குறிப்பாக இறந்த தந்தையர்களுக்காக விரதமிருந்து திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்து தமது பிதிர்க்கடன்களை நிறைவேற்றி ஆசி பெறுகின்றனர்.

அந்த வகையில் நாட்டில் ஆங்கிலேயர்களின் ஆட்சிக்காலத்தில் இந்துக்களின் புனித நாளான ஆடி அமாவாசை தினத்திற்குப் பொதுவிடுமுறை வழங்கப்பட்டிருந்தது. அதற்கான ஆதாரங்களும் என்னிடம் உள்ளன.

எனினும், இந்த நாட்டில் ஆங்கிலேயரின் ஆட்சிக்காலம் முடிவிற்கு வந்த பின்னர் இந்த புனித தினத்திற்கு பொது விடுமுறை வழங்கப்படுவதில்லை.

மாதம் தோறும் பௌர்ணமிக்கு விடுமுறை வழங்கும் அரசு, வருடத்தில் ஒரு நாள் வருகின்ற ஆடி அமாவாசைக்கு பொது விடுமுறை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்துக்கள் தமது புனித நாளில் இடர்பாடுகளின்றி, நிம்மதியாக வழிபாடுகளை மேற்கொள்வதற்காக இதனைப் பொது விடுமுறை நாளாக அரசு பிரகடனப்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.

இலங்கையர்கள் பெற்றுள்ள தங்கக் கடன்கள் தொடர்பில் வெளியான தகவல்!!

இந்த ஆண்டின் (2026) முதல் காலாண்டின் இறுதியில், நிதி நிறுவனங்களால் வழங்கப்பட்ட கடன்களின் அளவு 52.4 சதவீதம் அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

வாகனங்கள் மற்றும் தங்க அடகு பத்திரங்களுக்கு வழங்கப்பட்ட கடன்களே இதற்கு முக்கிய காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டின் (2025) முதல் காலாண்டின் இறுதியில், நிதி நிறுவனங்களினால் வழங்கப்பட்ட கடன்களின் வளர்ச்சி 26.9 சதவீதமாக இருந்துள்ளது.

அதன்படி, 2026-ஆம் ஆண்டின் முதல் காலாண்டின் இறுதியில், வாகனங்களுக்கு வழங்கப்பட்ட கடன்களின் அளவு 52.8 சதவீதம் அதிகரித்துள்ளது.

அதேநேரம், தங்க பத்திரங்களுக்கு வழங்கப்பட்ட கடன்களின் அளவும் 69.2 சதவீதம் என்ற வலுவான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், இறக்குமதி வரிகள் அதிகரிப்பு மற்றும் அந்நிய செலாவணி விகிதத்தின் சரிவு காரணமாக வாகனங்களின் விலை உயர்வு,

அத்துடன் இறுக்கமான பணவியல் கொள்கை மற்றும் பேரிடர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஆகியவை நிதி நிறுவனங்களின் எதிர்கால கடன் விரிவாக்கப்போக்கில் சிறிய மந்தநிலைக்கு வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

இலங்கையில் ஏற்படவுள்ள : அபாயம் கடல் நீரை பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்படலாமென எச்சரிக்கை!!

இலங்கையில் கடுமையான வறட்சி ஏற்படும் பட்சத்தில் குடிநீருக்காக கடல் நீரை பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்படலாம் என அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் மேலதிக செயலாளர் கே.ஜி.பி.தர்மதிலக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், இம்முறை எதிர்பார்க்கப்படும் எல் நினோ நிலைமை முன்னெப்போதும் இல்லாத வகையில் மிகக் கடுமையாக இருக்கக்கூடும். இதன் தாக்கம் காரணமாக நாடு முழுவதிலும் உள்ள பிரதான நீர்நிலைகள் வற்றிப்போகும் அபாயம் உள்ளது

தற்போதைய சூழ்நிலையை எதிர்கொள்வதற்கு முன்கூட்டியே தயாராக வேண்டியுள்ளது. அவசர காலங்களில் குடிநீர் விநியோகத்திற்காக தேசிய அனர்த்த முகாமைத்துவ சேவை மையத்திடம் உள்ள நீர் விநியோக வாகனங்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது.

அத்துடன், நாங்கள் இதற்கு முன் இப்படியொரு எல் நினோ நிலைமையைக் கேள்விப்பட்டதில்லை. இதற்காக நாம் பெருமளவில் தயாராக வேண்டியிருக்கும்.

பொதுவாக, மழைக்காலத்தில் தேசிய அனர்த்த முகாமைத்துவ சேவை மையத்தின் மூலம் ஒரு மாதத்திற்கு நாடு முழுவதற்கும் எம்மால் நீர் விநியோகம் செய்ய முடியும்.

ஆனால், இந்த எல் நினோ நிலைமை ஏற்பட்டால், பெருமளவில் நீரை விநியோகிப்பதற்கு தற்போதுள்ள நீர் விநியோக வாகனங்கள் போதுமானதாக இருக்காது.

நீர்நிலைகள் முற்றாக வற்றிப்போகக்கூடும் என்பதால், நீரைப் பெற்றுக் கொள்வதற்குக் கூட ஆதாரங்கள் இல்லாமல் போகலாம். அத்தகைய சூழ்நிலையில், கடல் நீரைச் சுத்திகரித்து விநியோகிப்பது குறித்தும் நாம் பரிசீலிக்க வேண்டியிருக்கும் என தெரிவித்துள்ளார்.

உலக அரங்கில் இலங்கைக்கு கிடைத்த பெருமை : புகழ்பெற்ற இந்திய வீரர் நீரஜ் சோப்ராவை பின்தள்ளிய வீரர்!!

ஆண்கள் ஈட்டி எறிதல் உலக தரவரிசைப் பட்டியலை உலக தடகள சம்மேளனம் வெளியிட்டுள்ளது. இலங்கையின் முன்னணி வீரர் ருமேஷ் தரங்க உலக அளவில் 3ஆவது இடத்திற்கு முன்னேறி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.

புதிய தரவரிசைப் பட்டியலின்படி, ருமேஷ் தரங்க 1,324 புள்ளிகளைப் பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார்.

இதில், ஜெர்மனியின் ஜூலியன் வெபர் 1,360 புள்ளிகளுடன் முதலிடத்திலும், கிரெனடாவின் எண்டர்சன் பீட்டர்ஸ் 1,326 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும் உள்ளனர்.

குறிப்பாக, இரண்டாம் இடத்தில் உள்ள எண்டர்சன் பீட்டர்ஸுக்கும் ருமேஷ் தரங்கவிற்கும் இடையில் வெறும் 2 புள்ளிகள் மட்டுமே வித்தியாசமாக இருப்பது கவனிக்கத்தக்க விடயமாகும்.

மேலும், இரண்டு ஒலிம்பிக் தங்கப் பதக்கங்களை வென்ற உலகப் புகழ்பெற்ற இந்திய வீரர் நீரஜ் சோப்ரா 5ஆவது இடத்திலும், பாகிஸ்தானின் அர்ஷாத் நதீம் 10ஆவது இடத்திலும் காணப்படுகின்றனர்.

அண்மையில் இத்தாலியின் தலைநகரான ரோமில் நடைபெற்ற வைர லீக் தடகளத் தொடரில் ருமேஷ் தரங்க 92.62 மீற்றர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து புதிய இலங்கை சாதனையையும், புதிய போட்டி சாதனையையும் படைத்திருந்தார்.

அந்த அபார செயல்பாட்டின் பலனாக தற்போது உலக தரவரிசையில் முதல் மூன்று இடங்களுக்குள் நுழைந்துள்ள ருமேஷ் தரங்க, சர்வதேச தடகள அரங்கில் இலங்கைக்கு மேலும் பெருமை சேர்த்துள்ளார்.

 

அடுத்துவரும் 24 மணிநேரத்திற்கு விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை : மக்களே அவதானம்!!

காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக கற்பிட்டி வரையான கடற்பரப்புகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களத்தினால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவித்தல் நாளை காலை 10.30 மணி வரையிலான அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு அமுலில் இருக்கும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதற்கமைய, காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக கற்பிட்டி வரையான கடற்கரைக்கு அப்பாலுள்ள கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60 – 70 கிலோமீட்டர் வரை அதிகரிக்கக்கூடும் என்பதுடன், குறித்த கடற்பரப்புகள் அவ்வப்போது மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும்.

தன்னிடம் அதிகளவான நகை இருப்பதாக சமூக ஊடகங்களில் பெருமையடித்துக்கொண்ட பெண்ணுக்கு நேர்ந்த துயரம்!!

தன்னிடம் எக்கச்சக்கமான நகை இருப்பதாக சமூக ஊடகங்களில் பெருமையடித்துக்கொண்டார் பெண்ணொருவர். விளைவு? கொள்ளையர்கள் வந்து அவ்வளவு நகைகளையும் கொள்ளையடித்துச் சென்றுவிட்டார்கள்!

அந்தரங்க வாழ்க்கை முதல், அன்றாடக செயல்கள் வரை, சமூக ஊடகங்களில் பகிர்ந்துகொள்வது என்பது, இன்று, வெளிநாட்டு பிரபலங்கள் மட்டுமல்ல, நம் ஊர்களிலும் பலருக்கும் வழக்கமாகிவிட்டது.

ஆனால், அதனால் ஆபத்து உருவாகலாம் என்பதை யோசிக்கும் நிலையில் பலரும் இல்லை. எனக்கு இத்தனை பின்தொடர்வோர் இருக்கிறார்கள், எனது வீடியோக்களை இத்தனை பேர் பார்வையிட்டுள்ளார்கள் என்பதைச் சொல்வதில் பலருக்கும் ஒரு பெருமை!

அப்படித்தான் இந்தியாவின் மத்தியப்பிரதேசத்திலுள்ள ஒரு பெண்ணும் செய்துவந்தார். அவரது பெயர், ரச்னா குர்ஜார். ரச்னாவை சமூக ஊடகம் ஒன்றில் ஒரு லட்சம் பேர் பின்தொடர்கிறார்கள்.

சமீபத்தில் ரச்னா தனது வீடு மற்றும் வீட்டில் வைத்துள்ள நகைகள், பணம் முதலானவற்றை வீடியோ ஒன்றில் காட்டியிருந்தார்.

இந்நிலையில், சனிக்கிழமை நள்ளிரவு 2.00 மணியளவில் முகமூடி அணிந்த சிலர், ரச்னாவின் வீட்டிலிருந்த சிசிடிவி கமெராக்களை குச்சி ஒன்றின் உதவியால் திருப்பி வைத்துவிட்டு, வீட்டுக்குள் நுழைந்துள்ளார்கள்.

ரச்னா குடும்பம் தூங்கிக்கொண்டிருந்த அறையை வெளிப்பக்கமாக தாழ்ப்பாள் போட்டுவிட்டு, வீட்டிலிருந்த சுமார் 8 லட்சம் முதல் 10 லட்ச ரூபாய் மதிப்புடைய நகைகள், பணம், விலைமதிப்புள்ள பொருட்கள் அனைத்தையும் வாரிச் சென்றுவிட்டார்கள்.

பிரிட்ஜிலிருந்த ஒரு பாக்கெட் பாலைக் கூட கொள்ளையர்கள் விட்டுவைக்கவில்லையாம். அதிகாலை 4.00 மணியளவில் கண் விழித்த குடும்ப உறுப்பினர் ஒருவர், தங்கள் அறை வெளிப்பக்கமாக தாழ்ப்பாள் போடப்பட்டிருப்பதை அறிந்து உறவினர்களை அழைக்க, அவர்கள் வந்து கதவைத் திறந்துவிட்டுள்ளார்கள்.

அப்போதுதான் தங்கள் வீட்டிலிருந்த நகை, பணம் அனைத்தும் கொள்ளை போன விடயமே அவர்களுக்குத் தெரியவந்துள்ளது.

ரச்னா தன் வீடு எப்படி உள்ளது, வாசல் எங்கே, பணம் நகைகள் எவ்வளவு உள்ளது என எல்லாவற்றையும் தெளிவாக வீடியோக்களில் விளக்க, அதையே பயன்படுத்தி வீட்டுக்குள் நுழைந்த கொள்ளையர்கள் பணம், நகை அனைத்தையும் கொள்ளையடித்துச் சென்றுவிட்டார்கள்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள பொலிசார், கொள்ளையர்களைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுவருகிறார்கள்.

பிளாஸ்டிக் பயன்படுத்தும் பொது மக்களுக்கு அவசர எச்சரிக்கை!!

உணவு தயாரிப்பின் போதும், உட்கொள்ளும் போதும் தர நிர்ணயம் இல்லாத பிளாஸ்டிக் உபகரணங்களை பயன்படுத்துவதால் மாரடைப்பு,

புற்றுநோய் மற்றும் ஹோர்மோன் சமநிலையின்மை உள்ளிட்ட பல சுகாதாரப் பிரச்சினைகள் ஏற்படும் அபாயம் உள்ளது என சுகாதார அமைச்சின் சுற்றுச்சூழல், தொழில்சார் மற்றும் உணவுப் பாதுகாப்புப் பணிப்பாளர் வைத்தியர் சாந்தனி விதான எச்சரித்துள்ளார்.

அத்துடன் நீண்ட காலமாக பிளாஸ்டிக் உபகரணங்களைப் பயன்படுத்துவதன் மூலம் இவ்வாறான நோய் தாக்கங்கள் ஏற்படுகின்றன என குறிப்பிட்டுள்ளார்.

சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், காலை வேளையில் தேநீர் தயாரிக்கும் போது, கொதிக்கும் சுடுநீரை தேயிலையுடன் சேர்த்து பிளாஸ்டிக் பாத்திரங்களில் போடுகிறோம் அல்லவா.

பிளாஸ்டிக் போத்தல்கள், சாப்பாட்டுப் பெட்டிகள் போன்றவற்றில் முறையான தர நிர்ணயம் இருப்பதில்லை.

அதேபோல், வெளியில் செல்லும் போது வீட்டிலிருந்து தண்ணீர் போத்தலைக் கொண்டு செல்லாமல் கடையிலிருந்து தண்ணீர் போத்தல்களை வாங்குகிறோம்.

இவை அனைத்திலும் நமக்குக் கண்ணுக்குத் தெரியாத நுண் துகள்கள் செயல்படுகின்றன. இவற்றைத்தான் நாம் ‘மைக்ரோ பிளாஸ்டிக்’ என கூறுகிறோம்.

அத்துடன், பிபிஏ (BPA) போன்ற வேறு சில நச்சு இரசாயனங்களும் பிளாஸ்டிக்கில் அடங்கியுள்ளன.

சில நேரங்களில் குழம்பு வகைகளை பொலித்தீன் உறைகளில் கொண்டு வருகிறோம். சாப்பாட்டுப் பொதிகளில் பொலித்தீனில் கட்டப்பட்ட உணவே இருக்கிறது. இவை அனைத்தின் மூலமும் பெருமளவிலான நச்சுக்கள் உடலுக்குள் நுழைகின்றன.

இந்த நச்சுக்கள் நீண்டகாலமாக உடலில் சேரும் போது, அவை நமது இரத்த நாளங்கள் ஊடாகப் பயணித்து மூளை, சிறுநீரகம், கல்லீரல் போன்ற உறுப்புகளில் படிந்துவிடுகின்றன.

இவ்வாறு நீண்டகாலம் படிந்திருக்கும் போது அந்த உறுப்புகள் செயலிழக்கக்கூடும். மேலும், இரத்த நாளங்களில் அடைப்பு ஏற்பட்டு மாரடைப்பு போன்ற நோய்களும் உண்டாகலாம்.

பிபிஏ போன்ற இரசாயனப் பொருட்களால் ஹோர்மோன் குறைபாட்டு நோய்கள் மற்றும் மலட்டுத்தன்மை போன்ற அசாதாரண நிலைகள் ஏற்படலாம்.

பலவிதமான தொற்றா நோய்கள் மற்றும் நீண்டகால அழற்சித் தன்மைகள் கூட உருவாகலாம். இறுதியாக, இவை பல்வேறு வகையான புற்றுநோய்களாக வளர்ச்சியடையக்கூடும்.

எனவே, நாம் உணவைத் தயாரிக்கும் போது சுகாதாரப் பாதுகாப்பான உபகரணங்களை பயன்படுத்தினால் மட்டுமே உணவுப் பாதுகாப்பு என்பது அர்த்தமுள்ளதாக இருக்கும்.

சமையலின் போது மண்பாண்டங்கள், உலோகம், கண்ணாடி மற்றும் செராமிக் பாத்திரங்களை நாம் பயன்படுத்த முடியும் என தெரிவித்துள்ளார்.

மரண அறிவித்தல் : அமரர் திருமதி சசிகலா வென்சியஸ்!!

வவுனியா குடியிருப்பை பிறப்பிடமாகவும் குருமன்காட்டை நிரந்தர வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி.சசிகலா வெனிசியஸ் அவர்கள் 09.06.2026 செவ்வாய்க்கிழமையன்று அமரத்துவம் அடைந்தார்.

அன்னார் காலம் சென்றவர்களாகிய தனபாலசிங்கம் வெற்றிநாயகி (சோதி) அவர்களின் சிரேஷ்ட புதல்வியும், காலம்சென்ற அந்தோனிப்பிள்ளை இராஜேஸ்வரி அவர்களின் பாசமிகு மருமகளும், திரு.வெனிசியஸ் (இளைப்பாறிய உதவி நிதியாளர், வவுனியா பல்கலைக்கழகம்) அவர்களின் அன்புமிகு மனைவியும்,

கனிஸ்ரன் (இலங்கை சட்டக்கல்லூரி இறுதி ஆண்டு, EDI) மற்றும் டிலான் (பொறியியல் பீடம், மொறட்டுவ பல்கலைக்கழகம்) அவர்களின் பாசமிகு தாயாரும், சசிரேகாவின் (வவுனியா இந்துக்கல்லூரி நடன ஆசிரியர்) அருமை அக்காவும்,

கெவின் (ORHAN), ஆன்செரோமி (வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி), சரோன் (வவுனியா மத்திய மகா வித்தியாலயம்) ஆகியோரின் அன்புமிகு பெரிய தாயாரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் இன்று வியாழக்கிழமை (11.06.2026) அன்று பிற்பகல் 2.00 மணியளவில் அன்னாரின் குருமன்காடு வாசஸ்தலத்திலிருந்து நல்லடக்கத்திற்காக எடுத்துச் செல்லப்பட்டு இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு இறம்பைக்குளம் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக் கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
மகன் 0768912251

No 49/12 A, 1 ஆம் ஒழுங்கை,
கோவில் வீதி,
குருமன்காடு,
வவுனியா

வவுனியாவைச் சேர்ந்த பெண் ஓமனில் உயிரிழப்பு : உடல் நாடு திரும்பியது : மரணத்தில் சந்தேகம் என உறவினர்கள் ஆதங்கம்!!

குடும்பச் சுமை காரணமாக ஓமான் நாட்டிற்குப் பணிப்பெண்ணாகச் சென்ற வவுனியா, ஓமந்தை பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயொருவர் ஓமானில் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

உயிரிழந்தவர் வவுனியா ஓமந்தை பகுதியைச் சேர்ந்த சிந்துஜா என கூறப்படுகின்றது. வெளினாடு சென்ற பின்னரும் கணவர் மற்ரும் பிள்ளைகளுடன் தொடர்ந்து தொலைபேசியில் சந்தோசமாகவே உரையாடி வந்துள்ளார்.

அதன் பின்பு , கடந்த மாதம் 19ஆம் திகதிக்கு பின்னர் அவரிடமிருந்து குடும்பத்தினருக்கு எந்தவிதமான தொலைபேசி அழைப்புக்களும் வரவில்லை.

இதனால் பதற்றமடைந்த கணவர், சிந்துஜாவின் தொலைபேசிக்கு பலமுறை அழைப்பினை ஏற்படுத்திய போதிலும் அவரிடமிருந்து எந்தப் பதிலும் கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

தொடர்புகள் துண்டிக்கப்பட்டு சில நாட்கள் கழித்து, குறித்த பெண் மரணமடைந்துவிட்டதாக அதிர்ச்சிச் செய்தி குடும்பத்தினருக்குக் கிடைத்துள்ளது. அவர் தவறான முடிவு எடுத்து இறந்துள்ளதாக வவுனியா ஓமந்தையில் உள்ள அவரது குடும்பத்திற்குத் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

எனினும், அவரது மரணத்திற்கான பின்னணி மற்றும் உண்மையான காரணம் குறித்து இதுவரை தெளிவான விபரங்கள் வெளியாகவில்லை.

இந் நிலையில் உயிரிழந்து சுமார் ஒரு மாத காலத்தின் பின்னர், அவரது உடல் இன்று கொழும்பிலுள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டது.

விமான நிலையத்தில் அவரது உடல் கணவரிடம் ஒப்படைக்கப்பட்டதையடுத்து, மேலதிக சட்ட மருத்துவப் பரிசோதனைகளுக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

குடும்ப வறுமையை போக்க வெளிவாடு சென்ற பெண் , சடலமாக திரும்பியுள்ளமை குடும்பத்தினரையும் உறவினர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஷிகெல்லா தொற்று பாதிப்பால் 4 வயதுச் சிறுமி பரிதாபமாக பலி!!

கேரள மாநிலத்தில் அசுத்தமான உணவு மற்றும் தண்ணீர் மூலம் வேகமாகப் பரவக்கூடிய ஷிகெல்லா பாக்டீரியா குடல் தொற்று நோய் பரவி வருகிறது. இந்த நோயால் பாதிக்கப்படுபவர்களுக்குக் கடுமையான காய்ச்சல்,

வயிற்று வலி, வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற தீவிர அறிகுறிகள் ஏற்படுகின்றன. இதனால் அங்குள்ள பொதுமக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர்.

கோழிக்கோடு மாவட்டம் தளக்களத்தூர் பகுதியைச் சேர்ந்த 4 வயது சிறுமி நிலா, கடந்த 2-ஆம் தேதி வாந்தி மற்றும் காய்ச்சல் போன்ற கடுமையான அறிகுறிகளுடன் கோழிக்கோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாள்.

அங்கு சிறுமியின் உடல்நிலை மோசமடைந்ததைத் தொடர்ந்து அவளது இரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன.

அந்த ஆய்வக முடிவில் சிறுமிக்கு ஷிகெல்லா நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி சிறுமி நிலா பரிதாபமாக உயிரிழந்தாள்.

இதுகுறித்து கேரள மாநில சுகாதாரத்துறை அமைச்சர் கே.முரளிதரன் கூறும்பொழுது, கோழிக்கோட்டில் இந்த நோய்த் தொற்றால் சிறுமி ஒருத்தி உயிரிழந்துள்ளதாகத் தெரிவித்தார்.

மேலும் வயநாடு மாவட்டத்தில் உள்ள 2 பள்ளிகளைச் சேர்ந்த 164 மாணவ-மாணவிகளுக்கு இந்த நோய்க்கான தீவிர அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளன.

அவர்களின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வகப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், மருத்துவ அறிக்கை வந்த பின்னரே முழு விவரமும் தெரியவரும் என விளக்கமளித்தார்.