ஜெர்மனியில் இருந்து இலங்கை வந்த இளம் பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

மிஹிந்தலை விகாரைக்கு வந்த ஜெர்மன் பெண்ணை பாலியல் சீண்டல் செய்ய முயன்ற தொல்பொருள் ஊழியர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை குறித்த இளம் பெண் நாட்டிற்கு வந்திருந்த நிலையில் இன்று வரலாற்று சிறப்புமிக்க மிஹிந்தலை ராஜமஹா விகாரைக்குச் சென்று ஸ்தூபியைப் பார்வையிட்டுள்ளார்.

முதற்கட்ட பொலிஸ் விசாரணையில் சந்தேக நபர் அவரை பாலியல் ரீதியாக சீண்ட முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அந்த நேரத்தில், மிஹிந்தலை விகாரைக்கு வந்த குழு, இளம் பெண்ணின் அலறல் சத்தத்தை கேட்டு காட்டு பகுதி நோக்கி ஓடியுள்ளனர்.

அந்த நேரத்தில், சந்தேக நபர் தான் அணிந்திருந்த ஆடையால் இளம் பெண்ணின் கழுத்தை நெரித்து கொலை செய்ய முயன்றுள்ளார். எனினும் குழுவினர் அந்த இளம் பெண்ணை காப்பாற்றியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் உடனடியாக மிஹிந்தலை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டு, சந்தேக நபர் கைது செய்யப்பட்டார். பாதிக்கப்பட்ட வெளிநாட்டுப் பெண்ணை அனுராதபுரம் மருத்துவ பரிசோதகர் பரிசோதனை உட்படுத்தியுள்ளார்.

மிஹிந்தலை புனித தலத்தில் பொலிஸ் பாதுகாப்பு இல்லாததால் இதுபோன்ற சம்பவங்கள் பதிவாகி வருவதாக மிஹிந்தலை ராஜமகா விஹாரையின் விகாராதிபதி தெரிவித்துள்ளார்.

காதலிக்க மறுத்த இளம்பெண் மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துக் கொலை!!

புதுச்சேரி உப்பளம் நேதாஜி நகரில் வசித்து வந்தவர் ரவி. இவரது மகள் ஷர்மிளா (28), அண்ணா சாலையில் உள்ள ஒரு துணிக்கடையில் பணிபுரிந்து வந்தார். இவருக்கும் இந்திரா நகரில் வசித்து வருபவர் 36 வயது டிரைவர் ஜோசப்.

இவர்கள் இருவருக்கும் கடந்த 5 ஆண்டுகளாகப் பழக்கம் இருந்துள்ளது.ஏற்கனவே விவாகரத்து பெற்ற ஜோசப்பின் நடவடிக்கைகள் பிடிக்காததால், ஷர்மிளா அவருடனான காதலைத் துண்டித்துக் கொண்டார்.

இதனால் ஆத்திரம் அடைந்த ஜோசப், ஷர்மிளாவுக்குத் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இது குறித்து போலீஸார் ஏற்கனவே ஜோசப்பை அழைத்து எச்சரிக்கை கொடுத்து அனுப்பியுள்ளனர்.

கடந்த 13-ம் தேதி இரவு, ஷர்மிளா வேலை முடிந்து உழவர் சந்தை வழியாக வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் அவரைப் பின்தொடர்ந்த ஜோசப், மீண்டும் தன்னைத் திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தியுள்ளார்.

ஷர்மிளா அதற்கு உடன்படாததால், ஆத்திரமடைந்த ஜோசப் தன்னிடம் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெய்யை ஷர்மிளா மீது ஊற்றித் தீ வைத்துள்ளார்.

உடல் முழுவதும் தீப்பற்றிய நிலையில் ஷர்மிளா அலறியபடி ஓடியதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், தீயை அணைத்து அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். இச்சம்பவத்தில் ஜோசப்புக்கும் லேசான தீக்காயம் ஏற்பட்டது.

சுமார் 80 சதவீதத்திற்கும் மேலான தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த ஷர்மிளா, நேற்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து, இந்த வழக்கை ஒதியஞ்சாலை போலீஸார் கொலை வழக்காக மாற்றினர்.

காவல்துறையிடம் கைதான ஜோசப் அளித்த வாக்குமூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது:”ஷர்மிளா என்னைத் தவிர்க்கத் தொடங்கினார். அவர் வேறு ஒருவருடன் பழகுவதைக் கண்டித்தேன்.

ஆனால் அவர் அதைக் கேட்கவில்லை. என்னை முற்றிலுமாகப் புறக்கணித்ததால் ஏற்பட்ட ஆத்திரத்தில், அவர் மீது மண்ணெண்ணெய் ஊற்றித் தீ வைத்தேன்” எனத் தெரிவித்துள்ளார்.

பெண்களுக்கு எதிரான இத்தகைய வன்முறைகள் புதுச்சேரியில் அதிகரிப்பதாகக் கூறி சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

 

காஸ் சிலிண்டர் வெடித்து 2 பச்சிளம் குழந்தைகள் பரிதாபமாக பலி!!

செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் அருகே நாவலூரில் இன்று அதிகாலை நிகழ்ந்த சிலிண்டர் வெடிப்பு விபத்தில், வீடு இடிந்து விழுந்து இரண்டு சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த விபத்தில் மேலும் 7 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.நாவலூர் சாமுண்டீஸ்வரி நகர் 2-வது தெருவில் சங்கர் என்பவருக்குச் சொந்தமான காம்பவுண்டில் 3 வாடகை வீடுகள் உள்ளன. இதில் சஞ்சீவ்குமார்-சோனியா தம்பதியினர் தங்களது குழந்தைகளுடன் வசித்து வந்தனர்.

இன்று காலை சோனியா டீ போடுவதற்காகக் கேஸ் அடுப்பை பற்ற வைத்துள்ளார்.ஏற்கனவே சிலிண்டரில் காஸ் கசிவு ஏற்பட்டிருந்ததால், தீப்பொறி பட்டவுடன் சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்தது.சிலிண்டர் வெடித்த அதிர்வில் அந்த வரிசையில் இருந்த மூன்று வாடகை வீடுகளும் சுக்குநூறாக உடைந்து சரிந்தன.

இடிபாடுகளுக்குள் சிக்கி சஞ்சீவ்குமாரின் 4 வயது மகள் கிருத்திகா மற்றும் ஒன்றரை வயது மகன் தீரன் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியாகினர்.இந்த அதிர்வில் அருகில் இருந்த வேலன், பாஸ்கர் ஆகியோரது வீடுகளும் பலத்த சேதமடைந்தன.

சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்து தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் அளித்தனர். சிறுசேரி தீயணைப்பு நிலையத்தினர் விரைந்து வந்து இடிபாடுகளில் சிக்கிக் கிடந்தவர்களை மீட்டனர்.

படுகாயமடைந்த சஞ்சீவ்குமார், சோனியா, ஆடிட்டர் முருகன் மற்றும் பக்கத்து வீட்டில் வசித்த வைரமுத்து குடும்பத்தினர் என மொத்தம் 7 பேர் மீட்கப்பட்டனர்.

அவர்கள் அனைவரும் உடனடியாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவ இடத்திற்குத் தாழம்பூர் காவல் ஆய்வாளர் டில்லிபாபு தலைமையிலான போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

முதற்கட்ட விசாரணையில், காஸ் கசிவுதான் விபத்திற்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது. இரண்டு பிஞ்சுக் குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடன் தொல்லையால் பரிதாபமாக உயிரிழந்த இளைஞர் : பொலிஸார் தீவிர விசாரணை!!

கடன் தொல்லை காரணமாக இளைஞர் ஒருவர் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். இந்த சம்பவம் நேற்ற(16.03.2026) இடம்பெற்றள்ளது.

பட்டிணசபை வீதி, சங்கானை என்ற முகவரியைச் சேர்ந்த தியாகராஜா கிந்துஜன் (வயது 22) என்ற இளைஞரே இவ்வாறு உயிர் மாய்த்துள்ளார்.

வீட்டில் யாரும் இல்லாதபோது குறித்த இளைஞர் தூக்கில் தொங்கி உயிர்மாய்த்து கொண்டுள்ளார். அதன் பின்னர் அவரது சடலம் மீட்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் தலைமையில் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில், உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

கணவனை மிரட்ட நாடகமாடிய இளம்பெண் பரிதாபமாக உயிரிழப்பு!!

தம்பதியருக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், குடிபோதையில் வரும் கணவனைத் திருத்துவதற்காக தற்கொலை செய்துக் கொள்ளப்போவதாக மிரட்டி நாடகமாடிய மனைவி,

புடவை எதிர்பாராமல் கழுத்தை இறுக்கியதில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் ஆந்திராவை அதிர செய்திருக்கிறது. ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் ராஜம்பேட்டை மண்டலத்தில் போயினபள்ளி கிராமத்தில் வசித்து வந்தவர் ஸ்ரீராம் ஸ்ரீனிவாஸ்.

இவர் ரயில்வே இயந்திர ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி கிருஷ்ணவேணியுடன் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு பின்னர் சமாதானமாகி விடுவது வழக்கமாகி விட்டது.

இந்நிலையில் தம்பதியருக்கு இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதன்போது கணவரை மிரட்டும் நோக்கில் கிருஷ்ணவேணி கட்டிலின் மீது நாற்காலியை வைத்து

அதன்மேல் ஏறி நின்று புடவையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்வதாக கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் அதைத் தடுக்காமல் ஸ்ரீராம் ஸ்ரீனிவாஸ் செல்போனில் வீடியோ எடுத்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

இதற்கிடையில் நாற்காலியில் இருந்து கீழே இறங்க முயன்ற கிருஷ்ணவேணியின் கழுத்தில் புடவை இறுக்கமாக சிக்கியதால் அவர் துடிதுடித்து உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

தகவலறிந்து வந்த காவல்துறையினர் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து கணவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

84 இடங்களில் கத்திக்குத்து : தங்கையைக் கொடூரமாக கொன்ற இளைஞன்!!

இத்தனைக் கொடூரமாக ஒருத்தன் கொலைச் செய்ய முடியுமா என்று நாடு முழுவதுமே பதைபதைக்க செய்தது அந்த செய்தி.

உத்தரப் பிரதேச மாநிலம் மொரதாபாத் பகுதியில் , தனது காதலுக்கு இடையூறாக இருந்த சகோதரியை 84 இடங்களில் கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்திருக்கிறான் இளைஞர் ஒருவன்.

உத்தரபிரதேச ம் ஆநிலம், மொரதாபாத் பகுதியில் காப்பீட்டு நிறுவனம் ஒன்றில் உதவி மேலாளராக பணிபுரிந்து வருகிறார் நீலிமா. இவரின் பிள்ளைகளான இரட்டையர்கள் ஹர்திக் மற்றும் ஹிமான்சிகா இருவரும் பொறியாளர்களாக வேலை செய்து வந்தனர்.

இந்நிலையில் சமீப காலமாக ஹர்திக் தனது வேலையில் கவனம் செலுத்தாமல், வீட்டிலும் சகஜமாக இல்லாமல் எப்போதுமே சமூக வலைதளங்களில் அதிக நேரம் செலவழித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த பழக்கத்தை தாயார் நீலிமாவும், சகோதரி ஹிமான்சிகாவும் அடிக்கடி கண்டித்து வந்துள்ளனர். மேலும் ஹர்திக் வேறு மதத்தைச் சேர்ந்த பெண்ணை காதலித்து வந்ததாகவும், அவரையே திருமணம் செய்ய விரும்பியதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த மார்ச் 6ம் தேதி தனது தாயின் அலுவலகத்திற்கு சென்ற ஹர்திக், வீட்டில், தாய்க்கு ஒரு சர்ப்ரைஸ் வைத்திருப்பதாக கூறி வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.

வீட்டிற்கு சென்றபோது ஹிமான்சிகா ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்ததை பார்த்து நீலிமா அதிர்ச்சியடைந்து அலறினார்.

ஹர்திக்கிடம், செல்போன் பயன்படுத்துவதை நிறுத்தும்படி தொடர்ந்து கண்டித்ததால் ஏற்பட்ட தகராறில் தங்கையை கொலை செய்ததாக ஹர்திக் வாக்குமூலம் அளித்திருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

ஹர்திக்கைக் கண்டித்த தாயாரையும் தாக்கியதை அடுத்து அவர் பின்னர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். பிரேத பரிசோதனை அறிக்கையில் ஹிமான்சிகாவின் உடலில் 84 வெட்டுக் காயங்கள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்வெட்டைத் தவிர்க்க முடியாது : வலுசக்தி அமைச்சர் பகிரங்க ஒப்புதல்!!

அரசு எவ்வளவு முயற்சிகளை மேற்கொண்ட போதிலும், எதிர்காலத்தில் மின்வெட்டு நடைமுறைப்படுத்துவதை தவிர்க்க முடியாமல் போகலாம் என வலுசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி தெரிவித்துள்ளார்.

இன்று(17.03.2026) நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

மத்திய கிழக்கு மோதல்கள் வெடித்த போதே மின்வெட்டு ஏற்பட்டிருக்க வேண்டும். ஆனால், அரசு எரிசக்தித் துறையைச் சரியாக முகாமைத்துவம் செய்ததாலேயே இதுவரை மின்வெட்டு இன்றி மின்சாரத்தை வழங்க முடிந்தது.

மின்வெட்டைத் தவிர்க்க அரசு தனது உச்சக்கட்ட முயற்சிகளை எடுத்து வருகின்றது, இருப்பினும் ஒரு கட்டத்தில் மின்சார விநியோகத்தைத் தடை செய்ய வேண்டிய நிலைமை உருவாகலாம்.

தற்போதைய இக்கட்டான சூழலை அதிகாரிகள் மிக நெருக்கமாகக் கண்காணித்து வருகின்றனர் என்றும், முடிந்தவரை நீண்ட காலத்துக்குத் தடையின்றி மின்சாரத்தை வழங்குவதற்கான மாற்று நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்றும் அமைச்சர் இதன்போது சபையில் உறுதியளித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் சபையில் முன்வைத்த தரவுகள் மற்றும் எச்சரிக்கைகளைத் தொடர்ந்து அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பாடசாலைகளுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்த கல்வி அமைச்சு!!

நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடியைக் கருத்திற்கொண்டு, எரிசக்தியைச் சிக்கனமாகப் பயன்படுத்துவதற்காக பாடசாலைகளின் தினசரி நிர்வாக மற்றும் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளில் கல்வி அமைச்சு சில மாற்றங்களை மேற்கொண்டு அறிவுறுத்தல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவவின் கையொப்பத்துடன் இது தொடர்பான முக்கிய அறிவுறுத்தல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

அதன்படி. பாடசாலை மாணவர்களின் பங்கேற்புடன் ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்த கல்விச் சுற்றுலாக்கள் மற்றும் எதிர்காலத்தில் திட்டமிடப்படவுள்ள அனைத்துச் சுற்றுலாக்களும் மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், பாடசாலைகளில் நடத்தப்படும் விழாக்கள் அல்லது நிகழ்ச்சிகளின் போது எரிபொருள் பாவனையைக் கட்டுப்படுத்துமாறு அதிபர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக, அதிகளவில் எரிபொருள் செலவாகும் வாகனப் பேரணிகள் (Vehicle Parades) போன்றவற்றை நடத்துவது தற்காலிகமாகத் தடை செய்யப்பட்டுள்ளது.

அதேநேரம், பாடத்திட்டங்களை முடிப்பதற்கான காலம் குறைவாக இருப்பதால், பாடசாலை நேரத்தை விழாக்கள் அல்லது வெளி நிறுவனங்களின் நிகழ்ச்சிகளுக்காகப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறும் அதில் கோரப்பட்டுள்ளது.

 

புதன்கிழமைகளில் மட்டுப்படுத்தப்படும் புகையிரத சேவைகள்!!

புதன்கிழமைகளில் ரயில் சேவையும் மட்டுப்படுத்தப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில்கொண்டு புதன்கிழமையை பொது விடுமுறையாக அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட பின்னரே இவ் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதேவேளை நாடாளுமன்ற அமர்வுகள் நாளை இடம்பெற மாட்டாது என அறிவிக்கபப்ட்டுள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியை சமாளிக்க பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

இலங்கையில் மின்வெட்டு தொடர்பில் அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு!!

நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடியை முன்னிட்டு இதுவரை மின்வெட்டுக்கான வாய்ப்புகள் இல்லை. எதிர்காலத்தில் மின்வெட்டு செய்யப்பட வாய்ப்புள்ளதாக எரிசக்தி அமைச்சர் குமார ஜெயகோடி தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் காலங்களில் மின்சாரத்தைத் துண்டிக்கும் நிலை ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியிலும் இதுவரையில் மின்வெட்டு எதுவும் அமல்படுத்தப்படவில்லை என்றாலும் எதிர்காலத்தில் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று நிலையியல் கட்டளை 27/2 இன் கீழ் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

தற்போது ஒரு மணிநேரம் கூட மின்வெட்டு செய்யாமல் நாம் நிலைமையை நிர்வகித்து வருகிறோம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஆனால், மின்சாரத்தைத் துண்டிக்க வேண்டிய ஒரு காலம் வரவும் வாய்ப்புள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

இலங்கையில் அறிவிக்கப்பட்டுள்ள விசேட அரச விடுமுறை தினங்களில் நடைமுறைக்கு வரும் தடை!!

இலங்கையில் விசேட அரச விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ள புதன்கிழமைகளில் மேலதிக வகுப்புக்களை நடத்துவது தடை செய்யப்பட்டுள்ளதாக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.

இலங்கையில் நிலவும் தற்போதைய எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் போக்குவரத்துச் சிக்கல்களைக் கருத்திற்கொண்டு, மார்ச் 18, 2026 முதல் நடைமுறைக்கு வரும் வகையில் வாரத்தின் ஒவ்வொரு புதன்கிழமையும் விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விசேட விடுமுறையானது அரச அலுவலகங்கள், பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் நீதிமன்றங்கள் உள்ளிட்ட அனைத்து அரச நிறுவனங்களுக்கும் பொருந்தும் என அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்திருந்தார்.

அதன்படி அனைத்து அரச பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. நீதிமன்ற சேவைகளும் இந்த விடுமுறை காலப்பகுதியில் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேவையற்ற பயணங்கள் மற்றும் எரிபொருள் விரயத்தைக் குறைக்கும் நோக்கில், அனைத்து அரச நிகழ்வுகளும் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளன.

அரசாங்கம் முன்னெடுத்துள்ள இந்த வேலைத்திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில், தனியார் நிறுவனங்களும் இதேபோன்ற விடுமுறை அல்லது வேலை நேர ஒழுங்கமைப்புகளை பின்பற்றுவது குறித்து பரிசீலிக்குமாறு ஆணையாளர் நாயகம் கேட்டுக்கொண்டுள்ளார்.

சுகாதாரத் துறை (வைத்தியசாலைகள்) துறைமுகங்கள் நீர் வழங்கல் சேவை சுங்கத் துறை போன்ற துறைகளுக்கு இந்த விசேட விடுமுறை அறிவிப்பானது பின்வரும் அத்தியாவசிய சேவைகளுக்குப் பொருந்தாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையிலேயே மேலதிக வகுப்புகள் தொடர்பான குறித்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.

அரசினால் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து தனியார் பாடசாலைகளுக்கும் விடுமுறை!!

அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து தனியார் பாடசாலைகளுக்கும் புதன்கிழமை விடுமுறை அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது சிறப்பு அரசாங்க விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளதாக கல்வி பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதே நேரத்தில், புதன்கிழமைகளில் கல்வி வகுப்புகளை நடத்துவது தடை செய்யப்பட்டுள்ளதாக அத்தியாவசிய சேவைகள் ஆணையர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி குறிப்பிட்டுள்ளார்.

நீதித்துறை சேவைகள், பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட அரசு அலுவலகங்களுக்கு ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை விடுமுறை எனவும் அத்தியாவசிய சேவைகள் ஆணையர் நாயகம் நேற்று குறிப்பிட்டுள்ளார்.

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியை சமாளிக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எரிபொருள் ஒதுக்கீட்டில் மாற்றம் : மக்களுக்கு வந்துள்ள புதிய அறிவிப்பு!!

தற்போது பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள வாராந்த எரிபொருள் ஒதுக்கீடு எதிர்வரும் சனிக்கிழமை நள்ளிரவுடன் நிறைவடைவதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே.ராஜகருணா தெரிவித்துள்ளார்.

அத்துடன், அது ஞாயிற்றுக்கிழமை மீண்டும் புதுப்பிக்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், கியூ.ஆர். குறியீடு முறைமையை அறிமுகப்படுத்தியதன் மூலம் நாட்டின் எரிபொருள் நுகர்வை 20 வீதத்தினால் குறைக்க அரசாங்கம் எதிர்பார்க்கிறது.

இலங்கையில் தற்போது ஒரு நாளைக்கு சராசரியாக 4,800 மெட்ரிக் தொன் டீசல் மற்றும் 4,045 மெட்ரிக் தொன் பெட்ரோல் நுகரப்படுகிறது.

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நிலவும் நீண்ட வரிசைகளை உடனடியாகக் கட்டுப்படுத்தும் நோக்கிலேயே இந்த கியூ.ஆர். முறைமை அவசரமாக நடைமுறைப்படுத்தப்பட்டது.

மார்ச் மாதத்தில் கிடைக்கவுள்ள மற்றும் தற்போது கையிருப்பிலுள்ள எரிபொருளின் அடிப்படையில், எதிர்வரும் ஏப்ரல் மாதத்தின் கடைசி வாரம் வரை போதுமான எரிபொருள் உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

முதலாம் இணைப்பு

நாட்டில் கியூ.ஆர். முறைமையின் கீழ் வழங்கப்படும் எரிபொருள் அளவு, பல்வேறு தொழில்சார் தேவைகளைக் கருத்தில் கொண்டு விரைவில் திருத்தப்படும் என சுகாதார பிரதி அமைச்சர் வைத்தியர் ஹன்சக விஜேமுனி தெரிவித்துள்ளார்.

தற்போது வழங்கப்பட்டுள்ள எரிபொருள் ஒதுக்கீடு ஒரு ஆரம்ப கட்டமே எனவும் அவர் கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், சில துறையினரின் தேவைகள் ஆராயப்பட்டு புதிய சுற்றுநிரூபம் வெளியிடப்படும்.

மருத்துவர்கள் மற்றும் சுகாதார சேவை ஊழியர்கள், விவசாயத் துறையில் ஈடுபடுபவர்கள், வாடகை வாகனங்கள் மற்றும் அபிவிருத்திப் பணிகளில் ஈடுபடும் வாகனங்கள் என்பன இதன்போது கவனத்தில் கொள்ளப்படும்.

உடனடியாக நடைமுறைப்படுத்தப்பட்ட இந்த ஒதுக்கீட்டு முறை குறித்து அச்சமடைய வேண்டாம். அடுத்த சில நாட்களில் இதற்கான திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வவுனியா மேல் நீதிமன்றத்தால் 15 வயது சிறுமியை வல்லுறவு செய்த குற்றவாளிக்கு 15 வருட கடூழிய சிறை!!

வவுனியா, ஒமந்தை பகுதியைச் சேர்ந்த 15 வயதுக்குட்பட்ட சிறுமியை பாலியல் வல்லுறவு புரிந்த தாயின் சகோதரரான குற்றவாளிக்கு 15 ஆண்டுகள் கடூழிய சிறை தண்டனை வழங்கி வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி அ.ஆனந்தராஜா தீர்ப்பளித்துள்ளார்.

கடந்த 2013 ஆம் ஆண்டு வவுனியா, ஓமந்தை, பகுதியைச் சேர்ந்த 15 வயதுக்கு உட்பட்ட சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்ததாக அதே இடத்தைச் சேர்ந்த சிறுமியின் தாயின் சசோகதரான 47 வயது சந்தேக நபரை பொலிசார் கைது செய்து பி அறிக்கை மூலம் வவுனியா நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தி வழக்கு தொடரப்பட்டது.

தொடர்ந்து சந்தேக நபருக்கு எதிராக சட்டமா அதிபர் திணைக்களத்தால் குற்றப் பகிர்வுப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு வவுனியா மேல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

குறித்த வழக்கு அரச சட்டவாதி ஸ்ரீ.சிவஸ்கந்தஸ்ரீ அவர்களால் நெறிப்படுத்தப்பட்ட நிலையில், குறித்த வழக்கின் சந்தேக நபரான வவுனியா ஓமந்தை பகுதியில் வசித்து வந்த 47வயது நபர் இரு குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொண்டார்.

குறித்த வழக்கு கடந்த வெள்ளிக்கிழமை தீர்ப்புக்காக திகதிடப்பட்டிருந்த நிலையில் எதிரியின் குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை அடிப்படையாகக் கொண்டு குறித்த தீர்ப்பினை வவுனியா மேல் நீதிமன்றம் வழங்கியது.

இலங்கையில் எரிபொருள் நெருக்கடி : டீசல் பற்றாக்குறை தொடர்பில் வெளியான தகவல்!!

நாட்டில் உள்ள அனைத்து தனியார் எரிபொருள் விநியோக நிறுவனங்களும் டீசல் விநியோகத்தை கட்டுப்படுத்தியுள்ளதாக பெட்ரோலிய பொது ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் இன்று (14) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அதன் பொதுச்செயலாளர் பந்துல சமன் குமார இதனை தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பில் எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் குமார ராஜபக்ஷவும் இதன்போது தனது கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

இருப்பினும், இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் நிர்வாக இயக்குநர் மயூர நெத்திகுமாரகே, அடுத்த மாத இறுதி வரை நிறுவனத்திடம் டீசல் இருப்பு இருப்பதாக கூறியுள்ளார்.

டீசல் ஆர்டர்களை கட்டுப்படுத்தும் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் தொடர்பாக சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், இலங்கையின் எரிசக்தி பாதுகாப்பை உறுதிசெய்து, எரிபொருளை தொடர்ந்து வழங்குவதாக லங்கா ஐஓசி நிறுவனம் உறுதியளித்துள்ளது.

அதன்படி, நாட்டில் தொடர்ச்சியான எரிபொருள் விநியோகத்தை பராமரிக்க லங்கா ஐஓசி மற்றும் அரசாங்கம் தங்களால் முடிந்த அனைத்தையும் செய்து வருவதாக நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கே. ரகு தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

உலக யோகா சாம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை சிறுமிகளின் சாதனை!!

இந்தியாவின் பெங்களூரில் நடைபெற்ற சர்வதேச யோகா கூட்டமைப்பின் (International Union Yoga Federation) உலக யோகா சாம்பியன்ஷிப் போட்டியில், இலங்கை அணி மிகச்சிறந்த திறமையை வெளிப்படுத்தி ஒட்டுமொத்தப் போட்டியில் இரண்டாம் இடத்தை (Runner-up) வென்றுள்ளது.​

இலங்கை யோகா கூட்டமைப்பின் சார்பில் பங்கேற்ற வீரர்கள், சர்வதேச தரத்திலான போட்டிகளில் பல தங்க பதக்கங்களை வென்று அசத்தினர்.

இறுதிப் புள்ளிப் பட்டியலின் அடிப்படையில், இலங்கை அணி இரண்டாம் இடத்திற்கான வெற்றிக் கேடயத்தைக் கைப்பற்றி நாட்டுக்குப் பெருமை சேர்த்துள்ளது.

இந்த போட்டியில் திருகோணமலையை சேர்ந்த பிராங்க் சந்தோஷி (வயது 7) என்ற சிறுமி தங்கப்பதக்கம் வென்று தனது பாடசாலைக்கும் ஊருக்கும் பெருமை சேர்த்துள்ளார்.​

இந்த வெற்றியானது இலங்கையில் யோகா கலையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் என விளையாட்டு ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.