வவுனியாவில் கல்வி கூட்டுறவுச் சங்கத்தின் புதிய கிளை திறப்பு : வன்னி மாவட்ட ஆசிரியர்கள் மகிழ்ச்சி!!

வன்னி மாவட்ட கல்விசார் உத்தியோகத்தர்களின் நீண்டநாள் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் வகையில், கல்வி கூட்டுறவுச் சங்கத்தின் (EDCS) புதிய கிளை அலுவலகம் வவுனியாவில் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

வவுனியா நகரின் 2ஆம் குறுக்குத் தெருவில், வைரவர் கோவிலுக்கு அருகில் அமைந்துள்ள இந்நிலையத்தை, வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சங்கத்தின் உயர்மட்ட உத்தியோகத்தர்கள் இணைந்து நாடா வெட்டி திறந்து வைத்தனர்.

இதுவரை காலம் வவுனியா, மன்னார் மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த ஆசிரியர்களும் கல்விசார் உத்தியோகத்தர்களும், தமது கூட்டுறவுச் சங்கம் சார்ந்த சேவைகளைப் பெறுவதற்காகக் கிளிநொச்சி மாவட்டத்திற்கே செல்ல வேண்டிய நிலை காணப்பட்டது. இதனால் அவர்களுக்கு பண விரயமும் நேர விரயமும் ஏற்பட்டு வந்தது.

தற்போது வவுனியாவில் இக்கிளை ஆரம்பிக்கப்பட்டுள்ளதன் மூலம் வவுனியா, மன்னார், முல்லைத்தீவு ஆகிய மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த கல்விசார் ஊழியர்கள் பயன்பெறுவர்.

கடன் விண்ணப்பங்கள், சேமிப்புகள் மற்றும் ஏனைய நிதிச் சேவைகளைத் தமது சொந்த மாவட்டத்திலேயே விரைவாகவும் இலகுவாகவும் பெற்றுக் கொள்ள முடியும்.

இப்புதிய கிளை அலுவலகத்தின் வருகையானது வன்னி மாவட்ட கல்விச் சமூகத்திற்கு பெரும் வரப்பிரசாதமாகவும், அவர்களின் அன்றாடச் சிரமங்களைக் குறைக்கும் முக்கிய சேவை மையமாகவும் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

7 மாத குழந்தையின் கண்முன்னே இளம் தாய் எடுத்த விபரீத முடிவு!!

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா அருகே கணவனின் கள்ளத்தொடர்பு விவகாரத்தால் மனமுடைந்த இளம் தாய் ஒருவர் தனது 7 மாதக் குழந்தையின் கண் முன்னே தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

சிக்மகளூருவைச் சேர்ந்த சானிகா கவுடா என்பவருக்கும் பெங்களூருவில் ஓட்டுநராகப் பணிபுரியும் சரண் கவுடா என்பவருக்கும் கடந்த 1 ஆண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

கணவருக்கு வேறொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருப்பது தெரியவந்ததால், தம்பதியினரிடையே அடிக்கடி கடுமையான குடும்பத் தகராறு மற்றும் சச்சரவுகள் ஏற்பட்டு வந்துள்ளன.

இதன் காரணமாகக் கர்ப்பமாக இருந்த சானிகா பெற்றோர் வீட்டிற்குச் சென்ற நிலையில், குழந்தை பிறந்த பிறகும் கணவர் வீட்டிற்குத் திரும்பாமல் அங்கேயே வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் கணவர் சரண் கவுடா அந்தப் பெண்ணுடன் பேசிய உரையாடல் ஆடியோவை சானிகாவின் கைபேசிக்கு அனுப்பி வைத்துள்ளார்.

அந்த ஆடியோவைக் கேட்டு பேரதிர்ச்சியும் வேதனையும் அடைந்த சானிகா, கணவரை உடனடியாக வீடியோ காலில் அழைத்து கதறி அழுது காரசாரமாக வாக்குவாதம் செய்துள்ளார்.

வாக்குவாதம் முற்றிய நிலையில், வீடியோ கால் இயங்கிக் கொண்டிருக்கும் போதே, 7 மாதக் குழந்தை தூங்கிக் கொண்டிருந்த அறையில் மின்விசிறியில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

7 மாதக் குழந்தையைத் தவிக்கவிட்டுத் தாய் எடுத்த இந்த விபரீத முடிவால் அப்பகுதியே பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளது.இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்த சானிகாவின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

தந்தையின் புகாரின் பேரில் பரப்பன அக்ரஹாரா காவல் துறையினர் தற்கொலைக்குத் தூண்டுதல் மற்றும் வரதட்சணை கொடுமை ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

தற்போது தலைமறைவாக உள்ள கணவர் சரண் கவுடாவைப் பிடிக்கக் காவல் துறையினர் தனிப்படை அமைத்து தீவிரமாக வலைவீசித் தேடி வருகின்றனர்.

இலங்கையில் இன்று மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!!

இலங்கையில் தங்கத்தின் விலை இன்று (27) மீண்டும் அதிகரித்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி, நேற்று முன்தினம் (25) 24 கரட் தங்கம் ஒரு பவுண் 375,000 ரூபாயாக விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று அதன் விலை 2,000 ரூபாயால் அதிகரித்து 377,000 ரூபாயாகப் பதிவாகியுள்ளது.

அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 377,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 346,800 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 47,125 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 43,350 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

உலகச் சந்தையில் தங்க விலையில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப, உள்நாட்டு தங்க விலையிலும் ஏற்ற, இறக்கங்கள் பதிவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கைத்தொலைபேசியால் பரிதாபமாக பறிபோன மாணவியின் உயிர்!!

சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே உள்ள நடுவலூர் கிராமத்தைச் சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவி ஒருவர், அளவுக்கதிகமான மாத்திரைகளைச் சாப்பிட்டு தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்த மாணவி, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், சுமார் 30க்கும் மேற்பட்ட மாத்திரைகளை ஒரே நேரத்தில் உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

அதிகளவிலான மாத்திரைகளைச் சாப்பிட்டதால் மாணவிக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டு வீட்டின் உள்ளேயே மயங்கி விழுந்து கிடந்துள்ளார்.

இந்நிலையில், வீட்டிற்கு வந்த குடும்பத்தினர் மாணவி மயங்கிய நிலையிலிருந்ததைக் கண்டு அலறியடித்துக் கூச்சலிட்டு அக்கம் பக்கத்தினரின் உதவியை நாடினர்.

மயக்கமடைந்த மாணவியை மீட்டுச் சிகிச்சைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட மாணவிக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தபோதிலும்,

சிகிச்சை பலனின்றி மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். மாணவியின் மரணம் குறித்துக் காவல் துறையினருக்கு உடனடியாகத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கெங்கவல்லி காவல் துறையினர் மாணவியின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மாணவி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணங்கள் குறித்துக் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீசாரின் விசாரணையில், செல்போன் பார்த்தை பெற்றோர் கண்டித்ததால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக 10ம் வகுப்பு பயிலும் மாணவி 30 மாத்திரைகளை உட்கொண்டு உயிரை மாய்த்துக் கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

 

கனடாவில் இந்திய இளம்பெண் காதலனால் உயிரிழந்த சோகம்!!

கனடாவில் வசித்து வந்த பஞ்சாபைச் சேர்ந்த இளம்பெண்ணை அவரது காதலன் கழுத்தை நெரித்துக் கொலை செய்த சம்பவம் இந்திய வம்சாவளியினரிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த தமந்தீப் கவுர் (23) என்ற இளம்பெண் கனடாவின் எட்மொண்டன் நகரில் வசித்து வந்தார். டெல்லியைச் சேர்ந்த ரிதேஷ் குமார் (22) என்பவருடன் அவருக்குக் காதல் தொடர்பு இருந்துள்ளது.

கடந்த ஜூலை 9-ம் தேதி இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில், ரிதேஷ் குமார் காதலி தமந்தீப் கவுரின் கழுத்தை நெரித்துக் கடுமையாகத் தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட தமந்தீப் கவுர், உடனடியாக அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சை பலனின்றி கடந்த ஜூலை 12-ம் தேதி பரிதாபமாக உயிரிழந்தார். இளம்பெண் உயிரிழந்ததைத் தொடர்ந்து, இச்சம்பவத்தைக் கொலை வழக்காகக் கனடா காவல்துறையினர் மாற்றினர்.

இளம்பெண்ணைக் கொடூரமாகத் தாக்கிப் படுகொலை செய்ததாகக் காதலன் ரிதேஷ் குமார் மீது வழக்குப்பதிவு செய்த கனடா போலிஸார், அவரை உடனடியாகக் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட ரிதேஷ் குமார் மீது கொலைக் குற்றம் சுமத்தப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

வெளிநாட்டில் கல்வி மற்றும் வேலைக்காகச் சென்ற இந்திய இளம்பெண், காதலனாலேயே கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட இச்சம்பவம் பஞ்சாப் மற்றும் டெல்லியில் உள்ள அவர்களது குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குளிக்கச் சென்ற மாணவர்கள் இருவர் நீரில் மூழ்கி பலியான சோகம்!!

சென்னை எண்ணூர் கடல் பகுதியில் விடுமுறை நாளைக் கழிப்பதற்காகக் கல்லூரி மாணவர்கள் சிலர் உற்சாகத்துடன் சென்றுள்ளனர்.

அங்குள்ள கடலில் இறங்கிக் ஜாலியாகக் குளித்துக் கொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக வந்த ராட்சத அலையில் மாணவர்கள் சிக்கிக் கொண்டனர்.

இதில் கல்லூரி மாணவி கிருத்திகா மற்றும் மாணவர் ஆகாஷ் ஆகிய இருவரும் சீறிப் பாய்ந்த கடலலையில் இழுத்துச் செல்லப்பட்டு நீரினடியில் மாயமாகினர்.

உடன் வந்தவர்கள் அலறியடித்துக் கூச்சலிட்டதை அடுத்து, அக்கம் பக்கத்தினர் மற்றும் கடலோரக் காவல் படையினர் விரைந்து வந்து தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

கடலில் மாயமானவர்களைத் தீவிரமாகத் தேடி வந்த நிலையில், நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பின் மாணவர் ஆகாஷ் சடலமாக மீட்கப்பட்டார்.

மீட்கப்பட்ட அவரது உடலைக் கைப்பற்றிய காவல் துறையினர், பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு உடனடியாக அனுப்பி வைத்தனர்.

அதே வேளையில் கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்ட மாணவி கிருத்திகாவின் உடலைக் கண்டறியும் பணிகள் முழுவீச்சில் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

மீட்புக் குழுவினர் படகுகள் மற்றும் முழ்குவீரர்களைப் பயன்படுத்தி எண்ணூர் கடல் பகுதி முழுவதும் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

கடற்கரையில் ஜாலியாகக் குளிக்கச் சென்ற இடத்தில் கல்லூரி மாணவர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தகவலறிந்து வந்த மாணவர்களின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் கதறி அழுத காட்சி அங்கிருந்த அனைவரையும் நெகிழ வைத்தது. ஆபத்தான கடல் பகுதிகளில் இறங்கிக் குளிப்பதைத் தவிர்க்க வேண்டும் எனக் காவல் துறையினர் பொதுமக்களுக்கு மீண்டும் அறிவுறுத்தியுள்ளனர்.

தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்த பாடசாலை மாணவி : சந்தேகம் வெளியிடும் பெற்றோர்!!

பொகவந்தலாவை திரேசியா தமிழ் வித்தியாலயத்தில் தரம் 10 இல் கல்வி பயிலும் மாணவி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று (27.07.2026) பதிவாகியுள்ளது.

இது குறித்து தெரிய வருகையில், பொகவந்தலாவை – மோரா பிரதேசத்தைச் சேர்ந்த 15 வயது மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த மாணவி கடந்த 24ஆம் திகதி வீட்டில் இருந்த இரத்த அழுத்தத்திற்கு தேவையான மருந்துகளை அளவுக்கு அதிகமாக உட்கொண்டுள்ளார்.

இந்நிலையில், பாடசாலையில் வைத்து மாணவி மயக்கமடைந்த நிலையில் பொகவந்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மாவட்ட வைத்தியசாலையாக இருந்தும் சிகிச்சைக்கு போதிய வசதிகள் இல்லாத நிலையில் காணப்படும் அந்த வைத்தியசாலையில் இருந்து கிளங்கன் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இந்நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இது குறித்து பொகவந்தலாவை பொலிஸாரை தொடர்பு கொண்டு கேட்டபோது, இது குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக எமது ஊடகத்திற்கு அறிவித்தனர்.

எனினும், மாணவியின் இந்த மரணத்தில் சந்தேகம் நிலவுவதாக குடும்பத்தினர் குற்றம் சுமத்தி வருகின்றனர்.

மனைவியின் பட்டமளிப்பு நிகழ்விற்காக சென்ற கணவன் : சகோதரன் பலி!!

மகியங்கனை பிரதேசத்தில் மனைவியின் பட்டமளிப்பு நிகழ்வில் கலந்து கொள்வதற்காக மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த கணவர் உட்பட இருவர் விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

மகியங்கனை – பதியதலாவ வீதியில் தம்பான 54ஆம் மைல்கல் பிரதேசத்தில் கடந்த 24ஆம் திகதி முற்பகல் 10 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த ஓட்டுநருக்கு ஏற்பட்ட நித்திரை காரணமாக, மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகிச் சென்று அருகில் இருந்த மின்கம்பத்தில் மோதியுள்ளது.

விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநரும் பின்னால் பயணம் செய்த இளைஞரும் உயிரிழந்துள்ளதாக மகியங்கனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளின் ஓட்டுநரான 31 வயதுடைய திருமணமான ஒரு பிள்ளையின் தந்தையும், அவரது மனைவியின் தம்பியான 23 வயதுடைய இளைஞனுமே உயிரிழந்துள்ளனர்.

இரண்டு மரணங்கள் தொடர்பிலான மரண விசாரணைகள், மகியங்கனை நகர திடீர் மரண விசாரணை அதிகாரி முன்னிலையில் மகியங்கனை ஆதார வைத்தியசாலையில் நடத்தப்பட்டன.

உயிரிழந்தவரின் மனைவி ஒலுவில் பல்கலைக்கழகத்தின் பட்டதாரியாவார். பல்கலைக்கழகத்தில் கடந்த 25ஆம் திகதி நடைபெற்ற பட்டமளிப்பு நிகழ்வில் கலந்து கொள்வதற்காக குறித்த இருவரும் சென்ற நிலையில் விபத்து இடம்பெற்றுள்ளது.

தென்னிலங்கையில் விமான பணிப்பெண்ணாக முயற்சித்த பெண் திடீர் மரணம்!!

பாணந்துறை – ஹிரன பகுதியைச் சேர்ந்த இளம் யுவதி ஒருவர் சுவாச கோளாறு காரணமாக உயிரிழந்துள்ளார். விமானப் பணிப்பெண்ணாக வரவேண்டும் என்ற பெரிய கனவோடு இருந்த 20 வயதுடைய, ஒடித்யா முதுமாலி விஜேசேகர என்ற யுவதியே இவ்வாறு உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார்.

தனியார் பல்கலைக்கழகம் ஒன்றில் கல்வி கற்று வந்த ஒடித்யா சுவாச கோளாறு காரணமாக, கடந்த 21ஆம் திகதி மரணத்தைத் தழுவிக் கொண்டுள்ளார்.

இளம் அழகியான ஒடித்யா, சிறு வயதில் இருந்தே சுவாசக் கோளாறினால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்ததாகவும், எனினும் அவருடைய வாழ்க்கை இவ்வளவு வேகமாக நிறைவுக்கு வரும் என தாங்கள் நினைக்கவில்லை என்றும் அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கு முன்னரும் பல முறை ஒடித்யாவுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டபோதும், சிகிச்சைகளின் பின்னர் அவர் குணமடைந்தாகவும் உறவினர்கள் தெரிவித்துள்ளார்.

எனினும், கடந்த 21ஆம் திகதி ஏற்பட்ட மூச்சுத் திணறலுக்குப் பிறகு, மரணத்திடம் இருந்து தப்பிப் பிழைத்து வர அவருக்கு இயலாமல் போனதாகவும் உறவினர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

திடீரென அவருக்கு ஏற்பட்ட மூச்சுத் திணறல் காரணமாக, பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஒடித்யா, அடுத்த அரை மணி நேரத்திற்குள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

அவருடைய தந்தை விஜேசேகர ஒரு தொழிலதிபர் எனவும், 16 மற்றும் 13 வயதுகளையுடைய இரு சகோதரிகள் ஒடித்யாவுக்கு உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

விமானப் பணிப்பெண்ணாக வருவதே ஒடித்யாவின் கனவு எனவும், மிக விரைவில் இந்த உலக வாழ்க்கைக்கு ஒடித்யா விடை கொடுத்ததை தம்மால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை எனவும் உறவினர்கள் கண்ணீரோடு தெரிவித்துள்னர்.

குழந்தைகளுக்கு 24 மணிநேரத்திற்கு மேல் காய்ச்சல் நீடித்தால் வழங்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை!!

குழந்தைகளுக்கு 24 மணி நேரத்திற்கு மேலாக காய்ச்சல் நீடித்தால், அவர்களை உடனடியாக வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுகாதாரத் துறையினர் அவசர எச்சரிக்கையொன்றை வழங்கியுள்ளனர்.

இது தொடர்பில் கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் பணிப்பாளர் விசேட வைத்தியர் பிரதீப் ரத்னசேகர விடுத்துள்ள அறிவிப்பில்,

பெற்றோர் தமது குழந்தைகளை வைத்தியசாலைக்கு அழைத்து செல்லும்போது அவர்களின் மருத்துவக் குறிப்புகள் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் தவறாமல் கொண்டு செல்ல வேண்டும்.

வீட்டு வைத்தியம் செய்வதால் குழந்தைக்கு சிகிச்சை அளிப்பதற்கான முக்கியமான நேரம் வீணாகிறது. உடனடியாக சரியான மருத்துவ ஆலோசனையைப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் தற்போது டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சுமார் 50 குழந்தைகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அவர்களில் நான்கில் ஒரு பகுதியினர் தீவிரமான நிலையில் உள்ளனர். இந்த நிலைமை மேலும் அதிகரித்தால், வைத்தியசாலையில் நெருக்கடி தீவிரமடைய சாத்தியமுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற கோரம் : தூக்கி வீசப்பட்ட சிறுவன் பலி : தவிக்கும் பெற்றோர்!!

கொழும்பு, இராஜகிரிய பகுதியில் பெற்றோருடன் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த மூன்று வயது சிறுவன் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

பெற்றோருடன் சென்று கொண்டிருந்த வேளையில் மோட்டார் சைக்கிளிலிருந்து தூக்கி வீசப்பட்டு எதிரே வந்த கார் ஒன்றில் மோதியதால் ஏற்பட்ட விபத்தில் சிறுவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 25ஆம் திகதி அதிகாலை சம்பவித்த விபத்தில் நிசித்து ஹுமெத் என்ற சிறுவனே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளார். உறவினர் வீடொன்றுக்கு சென்றுவிட்டு மீண்டும் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போதே விபத்து சம்பவித்துள்ளது.

வீதியில் மோட்டார் சைக்கிளின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் போனதால் அது வீட்டின் இடது பக்கமாகக் கவிழ்ந்துள்ளது. இதன்போது சாரதியான தந்தையும் பின் ஆசனத்தில் இருந்த தாயும் வீட்டின் இடது பக்கத்தில் விழுந்துள்ளனர்.

இந்நிலையில், சாரதி ஆசனத்திற்கு முன்னால் பயணம் செய்த சிறுவன் தூக்கி வீசப்பட்டு, எதிரே வந்த காரின் முன்பக்க வலது சக்கரத்தடியில் சிக்கியுள்ளார்.

விபத்தில் பலத்த காயமடைந்த சிறுவன் உடனடியாக ஐ.டி.எச். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சில நிமிடங்களுக்குள் அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தின் காரணமாக சிறுவனின் பெற்றோருக்கு எந்தவிதமான காயங்களும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கவனக்குறைவாக வாகனத்தைச் செலுத்திய காரின் சாரதியான கொட்டிகாவத்தை, மகா புத்துமுவ பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதுடைய நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நாட்டை உலுக்கிய கொள்ளைக் கும்பல் : PickMe சாரதி கொலை வழக்கில் திருப்பம்!!

நாட்டின் பல்வேறு பகுதிகளில் துப்பாக்கி மற்றும் பிற ஆயுதங்களைப் பயன்படுத்தி பொதுமக்களை அச்சுறுத்தி பல கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் முன்னாள் இராணுவ அதிகாரி ஒருவரையும், அவரது மகனையும் ஹோமகம பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபர், பனாகொட இராணுவ முகாமின் விளையாட்டுப் பிரிவின் பொறுப்பாளராக முன்னர் பணியாற்றிய முன்னாள் இராணுவ அதிகாரி என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஆரம்பகட்ட விசாரணைகளின் அடிப்படையில், அவர் தனது மகனுடன் இணைந்து பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டிருந்ததாகவும் தெரியவந்துள்ளது.

கடந்த 16ஆம் திகதி அதிகாலை ஹோமகம, கலகஹேன பகுதியில் உள்ள கால்வாயொன்றில் இருந்து வாடகை மோட்டார் சைக்கிள் சேவையில் (PickMe) ஈடுபட்டிருந்த சாரதி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது.

பின்னர் மேற்கொள்ளப்பட்ட பிரேதப் பரிசோதனையில், அவரது கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தமை உறுதிப்படுத்தப்பட்டது.

கொலை செய்யப்பட்ட சாரதியின் மோட்டார் சைக்கிள், தங்க நெக்லஸ், கையடக்கத் தொலைபேசி மற்றும் பணப்பை ஆகியனவும் கொள்ளையிடப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் கிடைத்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, உயிரிழந்த PickMe சாரதி மற்றொருவரை தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு சென்றிருந்தது கண்டறியப்பட்டது.

இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளில், அந்த நபரே சாரதியைக் கொலை செய்திருந்ததாகவும், பின்னர் அவர் மற்றும் அவரது தந்தை இணைந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டிருந்ததாகவும் தெரியவந்துள்ளது.

விசாரணைகளின்படி, கொலை இடம்பெற்ற மறுநாளே, சந்தேகநபர்கள் உயிரிழந்த சாரதியின் மோட்டார் சைக்கிளைப் பயன்படுத்தி மொரகஹஹேன பகுதியில் பெண்ணொருவரை கூர்மையான ஆயுதங்களால் அச்சுறுத்தி அவரது தங்க நெக்லஸை கொள்ளையிட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், ஹோமகம, அவிசாவளை, கிரியுல்ல மற்றும் தெஹியோவிட்ட பகுதிகளில் இடம்பெற்ற நான்கு தனித்தனி ஆயுதக் கொள்ளைச் சம்பவங்களுடனும் கைது செய்யப்பட்ட முன்னாள் இராணுவ அதிகாரிக்கு தொடர்பு இருப்பதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், ஹோமகம, பிட்டிபன பகுதியில் உள்ள வீடொன்றில் சந்தேகநபர் தங்கியிருப்பதாக கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பில், முன்னாள் இராணுவ அதிகாரியும் அவரது மகனும் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட வெடிகுண்டொன்றும், 500 மில்லிகிராம் ஹெரோயினும் கைப்பற்றப்பட்டுள்ளன.

அத்துடன், குற்றச்செயல்களுக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பல்சர் ரக மோட்டார் சைக்கிளும், இரத்தக்கறை படிந்திருந்த மோட்டார் சைக்கிள் தலைக்கவசமொன்றும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹோமகம பொலிஸார் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட தந்தை மற்றும் மகனை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

வீதி விபத்தில் ஸ்தலத்தில் பரிதாபமாக பறிபோன உயிர்!!

கொலன்னாவை வீதியில் கொத்தட்டுவ பகுதியை அண்மித்த பகுதியில் இன்று (27) திங்கட்கிழமை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் ஸ்தலத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முச்சக்கர வண்டி ஒன்று எதிரே வந்த பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் முச்சக்கர வண்டி சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

முச்சக்கர வண்டியின் பின்புற ஆசனத்தில் பயணித்த இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து முச்சக்கர வண்டி சாரதியின் அலட்சியத்தால் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தனியார் பல்கலைக்கழக மாணவி திடீர் உயிரிழப்பு : கலைந்துபோன கனவு!!

பாணந்துறை – ஹிரன பகுதியைச் சேர்ந்த, தனியார் பல்கலைக்கழகம் ஒன்றில் கல்விகற்று வந்த, விமானப் பணிப்பெண்ணாக வரவேண்டும் என்ற பெரிய கனவோடு இருந்த 20 வயதுடைய, ஒடித்யா முதுமாலி விஜேசேகர என்ற யுவதி சுவாச கோளாறு காரணமாக உயிரிழந்துள்ளார்.

ஒடித்யா முதுமாலி விஜேசேகர , சிறு வயதில் இருந்தே சுவாசக் கோளாறினால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்ததாகவும், எனினும் அவருடைய வாழ்க்கை இவ்வளவு வேகமாக நிறைவுக்கு வரும் என தாங்கள் நினைக்கவில்லை என்றும் அவரது உறவினர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

கடந்த 21ஆம் திகதி ஏற்பட்ட மூச்சுத் திணறலுக்குப் பிறகு, மரணத்திடம் இருந்து தப்பிப் பிழைத்து வர அவருக்கு இயலாமல் போனதாகவும் உறவினர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

சிறுமியின் நுரையீரலில் 7 ஆண்டுகளாக சிக்கியிருந்த பேனா மூடி : மருத்துவர்கள் அதிர்ச்சி!!

மும்பையில் ஒரு சிறுமியின் நுரையீரலில் 7 ஆண்டுகளாக சிக்கியிருந்த பேனா மூடியை மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் இந்திய ஊடகங்க்கள் குறிப்பிட்டுள்ளதாவது, மும்பையைச் சேர்ந்த சிறுமி மைஷா (வயது 10). அந்த சிறுமி தனது 3 வயதில் விளையாடிக் கொண்டிருந்த போது தற்செயலாக ஒரு பிளாஸ்டிக் பேனா மூடியை விழுங்கியுள்ளார்.

அதன் பிறகு சிறுமிக்கு தொடர் இருமல், காய்ச்சல் மற்றும் கடுமையான மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதையடுத்து பல வைத்தியசாலைக்கு சென்றும், பிளாஸ்டிக் பொருள் என்பதால் சாதாரண எக்ஸ்-ரே பரிசோதனையில் அது சரியாகத் தெரியவில்லை.

இதனையடுத்து மருத்துவர்கள் சிறுமிக்கு காசநோய் மற்றும் ஆஸ்துமா இருப்பதாகக் கூறி, கடந்த 7 ஆண்டுகளாக அதற்கான மருந்துகளையும், இன்ஹேலர்களையும் வழங்கி வந்துள்ளனர்.

சிறுமியின் உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்ததை அடுத்து, அவர் மும்பையில் உள்ள எஸ்.ஆர்.சி.சி குழந்தைகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்குள்ள குழந்தை நல மருத்துவ நிபுணர்கள் சிறுமிக்கு அதிநவீன சிடி ஸ்கேன் மற்றும் பிரான்கோஸ்கோபி பரிசோதனைகளை மேற்கொண்டனர். அப்போது, சிறுமியின் இடது பகுதி மூச்சுக்குழாயின் ஆழத்தில் பேனா மூடி சிக்கியிருப்பது கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

நீண்ட வருடங்களாக பேனா மூடி நுரையீரலில் இருந்ததால், சிறுமியின் இடது நுரையீரலின் கீழ் பகுதி முற்றிலும் சீழ் பிடித்து, சுருங்கி, கடுமையாகச் சேதமடைந்திருந்தது.

இதையடுத்து, வைத்திய குழுவினர் சிக்கலான அறுவை சிகிச்சையை மேற்கொண்டு, அந்த பேனா மூடியையும், அதோடு சேர்த்து முற்றிலும் சேதமடைந்த நுரையீரலின் ஒரு பகுதியையும் வெற்றிகரமாக அகற்றினர்.

தற்போது சிறுமி மைஷா ஆபத்தான கட்டத்தைத் தாண்டி, குணமடைந்து நலமுடன் இருப்பதாக வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந் நிலையில் சிறு குழந்தைகளுக்குத் தொடர் இருமல் அல்லது மூச்சுத் திணறல் இருந்தால், பெற்றோர் அலட்சியமாக இருக்கக் கூடாது என்றும், உடனடியாக முறையான பரிசோதனைகளைச் செய்ய வேண்டும் என்றும் வைத்தியர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

இந்த பகுதி கடற்கரை செல்வோர் அவதானம் : ஜெலிமீன்களால் பலர் காயம்!!

பாணந்துறை கடற்கரையில் ஜெல்லி மீன்கள் நடமாட்டம் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஜெல்லிமீன்கள் உடலில் பட்டதன் காரணமாக, கடலில் குளித்துக் கொண்டிருந்த பத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக பாணந்துறை கடற்கரை உயிர் காக்கும் பிரிவு தெரிவித்துள்ளது.

ஜெல்லிமீன்களால் காயமடைந்தவர்களில் 4 சிறுவர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்றையதினம் (26) பிற்பகல் பாணந்துரை கடற்கரைக்கு வருகை தந்த மக்கள் கடலில் குளித்துக் கொண்டிருந்த போது, உடலில் ஜெல்லிமீன்கள் பட்டதால் இவ்வாறு காயமடைந்துள்ளனர்.

நேற்றுப் பிற்பகல் வேளையில் மட்டும் சிறிய அளவிலான 300-க்கும் மேற்பட்ட ஜெல்லிமீன்கள் மீன்கள் பாணந்துரை கடற்கரைப் பகுதிக்கு ஒதுங்கியுள்ளதாக உயிர்காப்பக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

ஜெல்லிமீன்கள் உடலில் பட்டவர்களில் சிலர் சிகிச்சைகாகப் பாணந்துரை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்ததுடன், முதலுதவி பெற்றுக் கொண்டதன் பின்னர் அவர்கள் வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளதாக வைத்தியசாலைப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

நிலைமை மேலும் தீவிரமடைவதைத் தவிர்ப்பதற்காகச் செயற்பட்ட பொலிஸ் உயிர்காப்பகப் பிரிவு, கடலில் குளித்துக் கொண்டிருந்த அனைவரையும் உடனடியாகக் கடற்கரைப் பகுதியிலிருந்து வெளியேற்ற நடவடிக்கை எடுத்துள்ளது.

எனவே கடற்கரைக்கு வருகை தரும் மக்கள் இக்காலப்பகுதியில் கடலில் இறங்கும் போது அதிகக் கவனத்துடன் செயற்படுமாறு பாதுகாப்புப் பிரிவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.