டெல்லி பல்கலைக்கழகத்தின் சிவாஜி கல்லூரியில் உதவி பேராசிரியையாக பணிபுரிந்து வந்தவர் தேபோஸ்மிதா பால். இவர் கிழக்கு டெல்லியின் வசுந்தரா என்கிளேவ் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக வசித்து வந்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர் தனது வீட்டில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த டெல்லி போலீசார், கொலையாளிகளைப் பிடிக்க தீவிர விசாரணையில் இறங்கினர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், மேற்கு வங்காள மாநிலம் பர்த்வான் பகுதியில் உள்ள தேபோஸ்மிதா பாலின் பூர்வீக சொத்து தொடர்பாக நீண்ட நாட்களாக தகராறு இருந்தது தெரியவந்தது.
அந்த வீட்டில் வாடகைக்கு குடியிருந்து வந்த ராம்பிரசாத் தாஸ் மற்றும் அவரது மனைவி பானஸ்ரீ தாஸ் ஆகியோரை காலி செய்யுமாறு பேராசிரியை இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த தங்களது வாடகைதாரர் தம்பதி, பேராசிரியையைக் கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர்.
இதற்காக மேற்கு வங்காளத்தில் இருந்து சுமார் 1400 கிலோமீட்டர் தூரம் பயணித்து டெல்லிக்கு வந்த தம்பதி, சந்தேகத்தைத் தவிர்க்க தங்களது சிறு வயது மகனையும் உடன் அழைத்து வந்துள்ளனர்.
குடியிருப்பின் கண்காணிப்பு கேமரா காட்சிகளின் உதவியுடன் கொலையாளிகளை அடையாளம் கண்ட போலீசார், அவர்கள் மீண்டும் சொந்த ஊருக்குத் தப்பிச் சென்றதை அறிந்தனர்.
உடனடியாக அங்கு விரைந்த தனிப்படை போலீசார், தலைமறைவாக இருந்த தம்பதியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் காரணமாக வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது.
இன்று (10) காலை 10.30 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை, நாளை (11) காலை 10.30 மணி வரை 24 மணி நேரத்திற்கு நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக கற்பிட்டி வரையான கடற்பரப்புகளுக்குப் பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் நிலைமைகள் குறித்த சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக கற்பிட்டி வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது
அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 60 – 70 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடுவதுடன், அக்கடற்பரப்புகள் அவ்வப்போது மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும்.
எனவே, மறுஅறிவித்தல் வரும் வரை இந்த கடற்பரப்புகளுக்குப் பயணம் செய்ய வேண்டாம் என கடற்படை மற்றும் மீனவ சமூகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திருகோணமலையிலிருந்து முல்லைத்தீவு ஊடாக காங்கேசன்துறை வரையிலும், கற்பிட்டியிலிருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில்
வரையிலுமான கடற்கரைக்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 50 – 60 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும்.
அத்துடன், மன்னாரிலிருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலான கடற்கரைக்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் கடல் அலைகளின் உயரம் 2 – 2.5 மீற்றர் வரை உயரக்கூடிய சாத்தியக்கூறுகள் நிலவுகின்றன.
எனவே பொதுமக்கள் வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிக்கைகளை தொடர்ந்து பின்பற்றுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வனாத்தவில்லு பகுதியில் துப்பாக்கியால் சுடப்பட்டு நபர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 8 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று முன்தினம் அதிகாலை 1.30 மணியளவில் வனாத்தவில்லு கரதிவு பகுதியில் உள்ள முந்திரி தோட்டம் ஒன்றில் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூட்டில் அத்துகோரலகே பிரதீப் சுசாந்த என்ற 38 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.
சிலாபம் பெருந்தோட்ட நிறுவனத்திற்கு சொந்தமான, கரதிவு பகுதியில் அமைந்துள்ள முந்திரி தோட்டம் அறுவடைக்காக நபர் ஒருவரால் குத்தகைக்கு எடுக்கப்பட்டுள்ளது.
அந்த முந்திரி தோட்டத்தை பாதுகாப்பதற்காக குத்தகைதாரரால் பாதுகாவலர்கள் நியமிக்கப்பட்டிருந்த நிலையில்,
இன்று அதிகாலை தோட்டத்தில் இரகசியமாக நுழைந்து முந்திரி பறிக்க முயன்ற நபர் ஒருவர் மீது பாதுகாவலர் ஒருவர் துப்பாக்கிச் பிரயோகம் மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் சிகிச்சைக்காக புத்தளம் தள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து வனாத்தவில்லு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.
உயிரிழந்த நபர் பசியின் காரணமாக முந்திரி பழங்களை பறிக்கச் சென்ற வேளையில் இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பாக துப்பாக்கியைப் பயன்படுத்தியவர் உட்பட இதுவரை 8 சந்தேகநபர்களை வணாத்தவில்லு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சம்பவ இடத்துக்குத் தடயவியல் பொலிஸார் வரவழைக்கப்பட்டு விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர்களைப் புத்தளம் நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான மேலதிக நடவடிக்கைகளை வணாத்தவில்லு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
பொலநறுவையில் கையடக்க தொலைபேசி காரணமாக ஏற்பட்ட தகராறு காரணமாக, மனைவி மீது கணவன் தாக்குதல் நடத்தியுள்ளார்.
தம்பால பகுதியில் கணவன் அயல் வீட்டிலிருந்து திருடி வந்த கையடக்க தொலைபேசியை, மனைவி மீண்டும் ஒப்படைக்க சென்றமையால் ஏற்பட்ட தகராறு முற்றியதில், கணவன் தனது மனைவியின் இரண்டு கைகளையும் கத்தியால் வெட்டியுள்ளார்.
இந்த சம்பவம் நேற்று முன்தினம் இரவு இடம்பெற்றுள்ளது. பலத்த காயமடைந்த 35 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாய் பொலநறுவை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக புலஸ்திபுர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் விசாரணைகளுக்கமைய, சந்தேக நபரான கணவன் அயல் வீட்டிலிருந்து கையடக்க தொலைபேசி ஒன்றை திருடி, அதனை விற்பனை செய்ய முயற்சித்துள்ளார்.
இதனை அறிந்த மனைவி, அந்த தொலைபேசியை மீண்டும் உரிய வீட்டிலேயே ஒப்படைத்துள்ளார்.
இதனால் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதையடுத்து, கோபமடைந்த கணவன் மனைவியின் இரு கைகளையும் கத்தியால் வெட்டியுள்ளார்.
தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட கத்தி பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. 35 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்
மஹியங்கனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணித் தாயும் அவரின் பிறந்த பெண் சிசுவும் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
ஹசலக, மினிப்பே பகுதியை சேர்ந்த 42 வயதுடைய எச். எம். ஸ்வர்ணமலா என்ற இரண்டு பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர் ஆடைத் தொழிற்சாலை ஊழியராகப் பணிபுரிந்துள்ளார்.
மூன்றாவது பிரசவத்திற்காக கடந்த 25 ஆம் திகதி மஹியங்கனை ஆதார வைத்தியசாலையில் அவர், அனுமதிக்கப்பட்டார். 26 ஆம் திகதி முற்பகல் 11.00 மணியளவில் பெண் குழந்தையொன்றைப் பிரசவித்துள்ளார்.
சிசேரியன் மூலம் குழந்தை பிரசவிக்கப்பட்ட பின்னர், தாயின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாகியுள்ளது. உடனடியாக அவர் பதுளை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
அங்குள்ள தீவிர சிகிச்சைப் பிரிவில் 11 நாட்கள் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த 06 ஆம் திகதி அதிகாலை 5.45 மணியளவில் அவர் உயிரிழந்துள்ளார்.
மஹியங்கனை ஆதார வைத்தியசாலையின் அலட்சியப் போக்கினாலேயே இந்த 2 மரணங்களும் சம்பவித்துள்ளதாக உயிரிழந்த பெண்ணின் கணவரான சுமித் பண்டார உள்ளிட்ட உறவினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
உயிரிழந்த பெண்ணின் வயிற்றில் இருந்த குழந்தை வழமைக்கு மாறாக அதிக வளர்ச்சியடைந்திருந்ததால் அவருக்கு ஆரம்பத்தில் சிகிச்சையளித்த மருத்துவர்கள் சிசேரியன் அறுவை சிகிச்சை மூலமே பிரசவத்தை மேற்கொள்ள வேண்டும் எனத் தீர்மானித்திருந்தனர்.
அவ்வாறிருந்தும், அவர் பிரசவத்திற்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது, அங்குள்ள மருத்துவர்கள் சாதாரண பிரசவமாக அதனை மேற்கொள்ள முயற்சித்துள்ளனர்.
சாதாரண பிரசவ முயற்சி தோல்வியடைந்ததையடுத்து, இறுதித் தருணத்திலேயே சிசேரியன் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
இதன் காரணமாகவே குழந்தை உயிரிழந்ததாகவும், வைத்தியர்களின் அலட்சியத்தாலேயே இந்த இரண்டு மரணங்களும் நிகழ்ந்துள்ளதாகவும் உறவினர்கள் கடுமையாகக் குற்றம் சுமத்தியுள்ளனர்.
கடுகண்ணாவ பகுதியில், தனது வீட்டை விட்டுச் சென்ற இளம் குடும்பப் பெண்ணொருவரைக் கண்டுபிடிக்க பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். 20 வயதுடைய தருஷி அமாயா என்ற இளம் குடும்பப் பெண்ணொருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.
கடந்த மார்ச் மாதம் 11ஆம் திகதியன்று, வீட்டில் யாருக்கும் தெரிவிக்காமல் குறித்தப் பெண் வீட்டைவிட்டுச் சென்றதாக கடுகண்ணாவ பொலிஸ் நிலையத்தில் அவரது கணவரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
அவரைப் பற்றி ஏதேனும் தகவல் தெரிந்தால், பின்வரும் தொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.
தமிழ் சினிமாவின் போக்கையே மாற்றிய மாபெரும் மூத்த இயக்குநரான ‘இயக்குனர் இமயம்’ பாரதிராஜா (84) அவர்கள், உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனது இல்லத்தில் இன்று காலமானார்.
தேனி மாவட்டம் அல்லிநகரத்தில் சின்னசாமி என்ற இயற்பெயருடன் பிறந்த இவர், ‘16 வயதினிலே’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். ‘என் இனிய தமிழ் மக்களே’ என்ற அவரது காந்தக் குரலும், அவர் அறிமுகப்படுத்திய எண்ணற்ற கலைஞர்களும் தமிழ் சினிமாவின் பொற்காலமாக என்றும் இருக்கும்.
தமிழ் சினிமாவை கிராமத்து மண்வாசனைக்கு அழைத்துச் சென்ற ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா, தனது 50 ஆண்டுகால கலைப்பயணத்தில் எண்ணற்ற சாதனைகளையும் விருதுகளையும் குவித்துள்ளார்.
1977-ல் ’16 வயதினிலே’ படத்தின் மூலம் அறிமுகமான அவர், இன்று மறைந்தாலும், அவர் படைத்த காவியங்கள் என்றும் நிலைத்திருக்கும்.
பாரதிராஜா பெற்ற முக்கிய விருதுகள்
தேசிய திரைப்பட விருதுகள் (6 முறை)
சீதாகோக சிலகா (1981) – சிறந்த தெலுங்குத் திரைப்படம்.
முதல் மரியாதை (1985) – சிறந்த தமிழ்த் திரைப்படம்.
வேதம் புதிது (1987) – சமூகப் பிரச்சினைகளை மையமாகக் கொண்ட சிறந்த திரைப்படம்.
கருத்தம்மா (1994) – குடும்ப நலனை வலியுறுத்தும் சிறந்த திரைப்படம்.
அந்திமந்தாரை (1995) – சிறந்த தமிழ்த் திரைப்படம்.
கடல் பூக்கள் (2000) – சிறந்த திரைக்கதை.
பிலிம்பேர் விருதுகள் (4 முறை)
சிகப்பு ரோஜாக்கள் (1978) – சிறந்த இயக்குநர்.
வேதம் புதிது (1987) – சிறந்த இயக்குநர் மற்றும் சிறந்த திரைப்படம்.
வாழ்நாள் சாதனையாளர் விருது (2013) –
திரைத்துறைக்கு அவர் ஆற்றிய ஒட்டுமொத்த பங்களிப்பிற்காக. தமிழக அரசு மாநில திரைப்பட விருதுகள் (6 முறை)
16 வயதினிலே (1977) – சிறந்த இயக்குநர்.
அலைகள் ஓய்வதில்லை (1981) – சிறந்த இயக்குநர்.
முதல் மரியாதை (1985) – சிறந்த திரைப்படம்.
கிழக்குச் சீமையிலே (1993) – சிறந்த திரைப்படம்.
கருத்தம்மா (1994) – சிறந்த திரைப்படம்.
அந்தீமந்தாரை (1995) – சிறப்பு விருது
அரசின் உயரிய கௌரவங்கள் பத்மஸ்ரீ (2004)
இந்தியத் திரைத்துறைக்கு அவர் ஆற்றிய அரும்பணிக்காக இந்திய அரசு இவருக்கு நாட்டின் நான்காவது உயரிய குடிமகன் விருதான ‘பத்மஸ்ரீ’ வழங்கி கௌரவித்தது.
கௌரவ டாக்டர் பட்டம் (2005); சத்யபாமா பல்கலைக்கழகம் இவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது. இதர விருதுகள் நந்தி விருது (1981) ‘சீதாகோக சிலகா’ படத்திற்காக ஆந்திர அரசின் சிறந்த இயக்குநருக்கான நந்தி விருதைப் பெற்றார்.
விஜய் விருதுகள் (2013) : பாண்டிய நாடு’ படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகருக்கான விருதைப் பெற்றார்.
பாரதிராஜா வெறும் இயக்குநர் மட்டுமல்ல, அவர் ஒரு சகாப்தம். கிராமத்து எதார்த்தங்களை திரையில் வடிப்பதில் அவருக்கு நிகர் அவரே.
50 ஆண்டுகால பயணத்தில் அவர் பெற்ற இந்த விருதுகள், அவரது உழைப்பிற்கும் திறமைக்கும் சான்றாக விளங்குகின்றன
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ இளைஞனின் உயிரைக் காப்பாற்றியுள்ள சம்பவம் பொதுமக்களிடையே பெரும் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.
இந்தியா உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்தின் சர்தானா பகுதியை சேர்ந்த 25 வயது இளைஞர் ஒருவர் கடந்த ஜூன் 7 ஆம் திகதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை பதிவிட்டிருந்தார்.
அந்த வீடியோவில் அவர் ஒரு வெள்ளை நிற திரவத்தைக் குடிப்பது போன்ற காட்சியும், அந்தப் பதிவின் கீழே “Be happy in your life” என்ற வரிகளையும் அவர் பகிர்ந்திருந்தார்.
ஒரு பயனர் தனது சமூக ஊடகப் பக்கத்தில் தற்கொலை செய்துகொள்ளும் வகையிலான வார்த்தைகளையோ, வீடியோக்களையோ பதிவிட்டால் அதனை மெட்டாவின் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உடனடியாக கண்டறியும்.
இந்த வீடியோ பதிவிடப்பட்ட சில நிமிடங்களிலேயே மெட்டா நிறுவனம் உத்தரப் பிரதேச மாநில பொலிஸ் தலைமையகத்தில் உள்ள சமூக வலைதள பிரிவுக்கு எச்சரிக்கை அனுப்பியது.
மெட்டா கொடுத்த மொபைல் எண் மற்றும் ஐபி முகவரி ஆகியவற்றைக் கொண்டு, அந்த இளைஞர் இருக்கும் இடத்தை அடுத்த சில நிமிடங்களில் துல்லியமாகக் கண்டறிந்து காவல் தலைமையகத்தினர் மீரட் மாவட்ட போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
அங்குச் சென்று பார்த்தபோது, அந்த இளைஞர் விஷத்தன்மை கொண்ட திரவத்தை குடித்துவிட்டு உயிருக்குப் போராடும் நிலையில் மயங்கிக் கிடந்ததுடன் ருகில் அந்த திரவ பாட்டிலும் கிடந்தது.
இதனையடுத்து உடனடியாக இளைஞனை மீட்ட பொலிஸார் அருகில் உள்ள வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சைக்குப் பின், தற்போது அவரது உடல்நிலை தேறி, ஆபத்தான கட்டத்தை தாண்டியுள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
முதற்கட்ட விசாரணையில், அந்த இளைஞர் காதல் தோல்வியால் கடந்த சில வாரங்களாகவே தீவிர மன அழுத்தத்தில் இருந்ததும் அதனால் தற்கொலை முடிவெடுத்ததும் தெரியவந்துள்ளது. இன்னிலையில் சமூக வலைப்பதிவால் இளைஞன் காப்பாற்றப்பட்ட சம்பவம் நெட்டிசன்களிடையே பேசுபொருளாகியுள்ளது.
தங்கத்தின் விலையில் இன்றைய தினம் (10.06.2026) வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்க தகவலின்படி 24 கரட் தங்கம் ஒரு பவுண் ஒன்றின் விலை 5000 ரூபாயால் குறைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
அதன்படி, தற்போதைய சந்தை நிலவரத்தின் அடிப்படையில் 24 கரட் தங்கம் ஒரு பவுண் 378,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. அதேநேரம், 22 கரட் தங்க பவுணொன்று 347800 ரூபாவாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் 24 கரட் தங்கத்தின் ஒரு கிராம் 47,250 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராம் 43,475 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுவதாக நகையக வியாபாரிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
எல் நினோ நிகழ்வால் இலங்கையின் வானிலையில் பாரிய மாற்றம் பதிவாகும் சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி அடுத்த மாதம் முதல் எல் நினோ நிகழ்வால் நாட்டின் வானிலை பாதிக்கப்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், எல் நினோ நிகழ்வு தென்மேற்குப் பருவமழை வானிலையில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.
பசிபிக் பெருங்கடலில் ஏற்கனவே எல் நினோ நிலை உருவாகியுள்ளது. அதன் தாக்கம் பல்வேறு நிலைகளில் சுமார் 11 மாதங்களுக்கு நீடிக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை நாட்டின் வானிலையில் எல் நினோ விளைவால் ஏற்படக்கூடிய தாக்கங்களைச் சமாளிக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வுக் கலந்துரையாடல் இன்றைய தினம் (10.06.2026) நடைபெற உள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களத்தினால் நடைபெறவுள்ள இந்த கலந்துரையாடலில் நீர்ப்பாசனத் திணைக்களம், மகாவலி அதிகாரசபை, பேரிடர் மேலாண்மை மையம், விவசாயத் திணைக்களம்,
விவசாய அபிவிருத்தித் திணைக்களம், நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை என முக்கிய அமைப்புகள் உட்பட 20 பிரதான துறைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் பங்கேற்கவுள்ளனர்.
வவுனியா புற்குளம் ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் மஹோற்சவத்தை முன்னிட்டு, ஆலயத்திற்கு வருகை தரும் பக்தர்களின் போக்குவரத்து வசதியினை மேம்படுத்தும் நோக்கில் ஆலய வீதி அவசரமாக செப்பனிடப்பட்டு மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டுள்ளது.
ஆலயத்தின் வருடாந்த பொங்கல் உற்சவத்தை முன்னிட்டு, பக்தர்களின் வருகை மிக அதிகமாக இருக்கும் என்பதைக் கருத்திற்கொண்டு, ஆலய நிர்வாகத்தினர் வீதியை புனரமைத்து தருமாறு விடுத்த வேண்டுகோளுக்கிணங்க இவ்வீதி அபிவிருத்திப் பணி முன்னெடுக்கப்பட்டது.
2026ம் ஆண்டுக்கான பாதீட்டு நிதியின் (Budget Fund) கீழ் இவ்வீதியைச் செப்பனிடுவதற்கான முழுமையான நிதியொதுக்கீட்டை கனகராயன்குளம் வடக்கு வட்டார உறுப்பினர் கனகராசா பிரதீபன் வழங்கியிருந்தமையுடன் இதற்கான முழுமையான களப்பணிகளையும், அவசர ஏற்பாடுகளையும் வவுனியா வடக்கு உபதவிசாளர் விநாயமூர்த்தி சஞ்சுதன் முன்னின்று ஒழுங்குபடுத்தியிருந்தார்.
மேலும் இந்த அபிவிருத்திப் பணியை மிகக் குறுகிய காலத்திற்குள் சட்டபூர்வமாகவும் துரிதமாகவும் நடைமுறைப்படுத்துவதற்கு வவுனியா வடக்கு பிரதேச சபைச் செயலாளர் திரு.தேவராசா கார்த்திகன் முழுமையான நிர்வாக ஒத்துழைப்பினை வழங்கியிருந்தார் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
நீண்ட நாட்களாக புனரமைக்கப்படாமல் இருந்த புற்குளம் ஆலய வீதி, பொங்கல் உற்சவத்திற்குச் சரியாக செப்பனிடப்பட்டதன் மூலம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் எவ்வித சிரமமுமின்றி தங்களது வழிபாடுகளை மேற்கொள்ள இலகுவாக அமைந்துள்ளது
சமய உணர்வோடும் மக்கள் நலன்சார்ந்தும் உடனடியாகச் செயலாற்றிய மக்கள் பிரதிநிதிகளுக்கும், பிரதேச சபைச் செயலாளருக்கும் ஆலய நிர்வாகத்தினரும் அப்பகுதி மக்களும் தங்களது நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொண்டுள்ளனர்.
இந்தியா ‘ஏ’ அணி, மற்றும் இலங்கை ‘ஏ’ அணிகளுக்கு இடையே இடம்பெறும் சர்வதேச ஒருநாள் தொடரின் இன்றைய போட்டியில் இரு தமிழ் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அண்மைக்காலமாக உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்ற தமிழ் பேசுகின்ற வீரர்களான வேகப்பந்து வீச்சாளரான மொஹமட் சிராஸ் மற்றும் சுழல்பந்து வீச்சாளரான விஜயகாந்த் வியாஸ்காந்த் ஆகிய இருவரும் முதன்முறையாக இடம்பிடித்துள்ளனர்.
2026 முத்தரப்புத் தொடரில் இந்தியா ‘ஏ’ அணி, இலங்கை ‘ஏ’ மற்றும் ஆப்கானிஸ்தான் ‘ஏ’ அணிகள் பங்குபற்றுகின்றன. இந்த போட்டிகள் ஜூன் 9 முதல் ஜூன் 21 வரை இலங்கையில் நடைபெற உள்ளது.
இதன்படி இன்றைய (09.06) ஆட்டத்தில் இலங்கை மற்றும் இந்திய அணிகள் பலபரீட்சை நடத்தின. லீக் சுற்றுக்குப் பிறகு முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறும்
இதன்படி இன்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இந்தியா ‘ஏ’ முதலில் துடுப்படுத்தாட்டத்தை தெரிவுசெய்தது.
இந்த போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, மொஹமட் சிராஸின் பந்துவீச்சில் 14 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
2026–2027 போட்டிப் பருவகாலத்திற்காக இலங்கை தேசிய கிரிக்கெட் வீரர்கள் 46 பேரை தேசிய விளையாட்டு வீரர் ஒப்பந்தங்களுக்காக (National Player Contracts) தேர்ந்தெடுத்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.
இதில் முதல் தடவையாக அண்மைக்காலமாக உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்ற தமிழ் பேசுகின்ற வீரர்களான வேகப்பந்து வீச்சாளரான மொஹமட் சிராஸ் மற்றும் சுழல்பந்து வீச்சாளரான விஜயகாந்த் வியாஸ்காந்த் ஆகிய இருவரும் முதன்முறையாக இடம்பிடித்துள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
இலங்கை கிரிக்கெட் நிறுவனம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், இந்த ஒப்பந்தக் காலப்பகுதியானது 2026 ஏப்ரல் முதலாம் திகதி முதல் 2027 மார்ச் 31 ஆம் திகதி வரை செல்லுபடியாகும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
வீரர்களின் திறமை, நிலையான ஆட்டம், உடற்தகுதி, எதிர்கால ஆற்றல் மற்றும் தேசிய அணிகளின் மூலோபாயத் தேவைகளைக் கருத்திற் கொண்டு, அவர்கள் A1, A2, B1, B2, C, மற்றும் மத்திய ஒப்பந்தங்கள் (Central Contracts) ஆகிய பிரிவுகளின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.
‘இந்த ஒப்பந்தங்களை வழங்குவதன் நோக்கம், தெரிவு செய்யப்பட்டுள்ள கிரிக்கெட் வீரர்களுக்கு விளையாட்டின் உச்சக்கட்ட மட்டத்தில் தங்களது திறமைகளை வெளிப்படுத்துவதற்குத் தேவையான ஆதரவு, கட்டமைப்பு மற்றும் வளங்களை வழங்குவதாகும்.
அத்துடன் இதன் மூலம் நாட்டின் கிரிக்கெட் விளையாட்டின் நீண்டகால வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்வதும் எதிர்பார்க்கப்படுகிறது’ என இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த முறை தேசிய வீரர் ஒப்பந்தங்களில் வியாஸ்காந்த், சிராஸைத் தவிர்த்து கமில் மிஷார, லசித் குரூஸ்புள்ளே, இசித விஜேசுந்தர, வனுஜ சஹன்,
திலும் சுதீர மற்றும் தரிந்து ரத்நாயக்க ஆகிய வீரர்கள் புதிதாக உள்வாங்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.
ஒப்பந்தங்களைப் பெற்றுக்கொண்ட அனைத்து வீரர்களுக்கும் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ள இலங்கை கிரிக்கெட் நிறுவனம், முதன்முறையாக தேசிய ஒப்பந்தப் பட்டியலுக்குள் நுழைந்துள்ள வீரர்களை அன்போடு வரவேற்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.
இந்த ஒப்பந்தங்களை வழங்குவதன் மூலம் திறமைகளை அங்கீகரிப்பது, வளர்ந்து வரும் திறமையாளர்களை ஊக்கப்படுத்துவது மற்றும் சர்வதேச மட்டத்தில் எந்தவொரு போட்டி வடிவத்திலும்
இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தக்கூடிய பலமிக்கதொரு வீரர்களின் கட்டமைப்பைப் பேணுவதற்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் கொண்டுள்ள தொடர்ச்சியான அர்ப்பணிப்பு வெளிப்படுவதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரவிருக்கும் சர்வதேச போட்டிப் பருவகாலத்தில் நாட்டிற்கு வெற்றிகளைப் பெற்றுக்கொடுப்பதற்காக, வீரர்கள் தங்களது தொழில்முறைத் தரம், ஒழுக்கம் மற்றும் சிறப்பாற்றலை மிக உயர்ந்த மட்டத்தில் பேணுவார்கள் என இலங்கை கிரிக்கெட் நிறுவனம் எதிர்பார்க்கிறது.
46 வீரர்கள்
ஒப்பந்தம் பெற்றுக்கொண்ட 46 வீரர்களின் விபரம் பின்வருமாறு,
கனடா செல்ல ஆசைப்பட்டு எத்தியோப்பியாவில் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலால் பணயக் கைதியாக வைக்கப்பட்டிருந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த மூன்று நபர்கள் மீட்கப்பட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கை மற்றும் எத்தியோப்பிய அதிகாரிகள் இணைந்து நடத்திய நடவடிக்கையைத் தொடர்ந்து மூன்று இலங்கை நாட்டினரும் விடுவிக்கப்பட்டதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
அவர்களை இலங்கைக்கு மீண்டும் அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் தற்போது நடைபெற்று வருகின்றன. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த அந்த மூன்று நபர்களும், சட்டவிரோதமாக கனடாவை அடைய முயன்றபோது எத்தியோப்பியா வழியாகப் பயணம் செய்ததாகக் கூறப்படுகிறது.
எத்தியோப்பியாவில் உள்ள குற்றக் கும்பல் தங்களைக் கைதிகளாகப் பிடித்து வைத்திருப்பதாகவும், விடுதலைக்காகப் பிணைத்தொகை கோருவதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் உறவினர்களிடம் தெரிவித்தனர்.
இதற்கிடையில், இந்தச் சட்டவிரோதப் பயண நடவடிக்கைக்கு உதவியதாகக் கூறப்படும் சந்தேக நபர் அண்மையில் கைது செய்யப்பட்டார்.
இவர்களின் மீட்பு தொடர்பில் Fidel Post கூறியுள்ளதாவது, பாதிக்கப்பட்டவர்கள் கடத்தப்படுவதற்கு முன்னதாக வேலை வாய்ப்புகளுக்காக எத்தியோப்பியாவுக்கு வருகை தந்துள்ளனர்.
மூன்று நபர்கள் காணாமல் போனது குறித்து இலங்கைத் தூதரகம், எத்தியோப்பிய பொலிஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து 2026 மே 26 அன்று விசாரணை ஆரம்பிக்கப்பட்டது.
பாதிக்கப்பட்டவர்கள், மூன்று நாட்களுக்கு முன்பு மே 23 அன்றுதான் நாட்டிற்கு வந்திருந்தனர்.
இந்தத் தகவலைத் தொடர்ந்து, காணாமல் போன வெளிநாட்டுப் பிரஜைகளைக் கண்டுபிடிப்பதற்காக சட்ட அமுலாக்க முகமைகள் உடனடியாகத் தேடுதல் வேட்டையைத் தொடங்கின.
மேம்பட்ட டிஜிட்டல் கண்காணிப்பு மற்றும் உளவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, பாதிக்கப்பட்டவர்கள் கோட் 2 உரிமத் தகடு கொண்ட சுசுகி வாகனத்தில் விமான நிலையத்திலிருந்து நேரடியாக அழைத்துச் செல்லப்பட்டதை காவல்துறை புலனாய்வாளர்கள் கண்டுபிடித்தனர்.
நகரப் பாதுகாப்புப் படையினரிடம் உடனடியாகக் பிடிபடாமல் இருப்பதற்காக, சந்தேக நபர்கள் பாதிக்கப்பட்டவர்களைத் தலைநகரிலிருந்து ஒரு தொலைதூர இடத்திற்குக் கொண்டு சென்றனர்.
ஓரோமியா பிராந்தியத்தில் அமைந்துள்ள ஷஷெமெனே நகரில், ஒரு குடியிருப்பு வீட்டிற்குள் பூட்டப்பட்டிருந்த பாதிக்கப்பட்டவர்களை ஒரு ஒருங்கிணைந்த சோதனை வெற்றிகரமாகக் கண்டுபிடித்தது.
பாதுகாப்புப் படையினர், பணயக்கைதிகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாமல், சம்பவ இடத்திலேயே ஆறு சந்தேக நபர்களைக் கைது செய்தனர்.
கடத்தல்காரர்கள் அவர்களை விடுவிப்பதற்காக ஒவ்வொரு நபருக்கும் தலா $30,000 (மொத்தம் $90,000) கோரியதாகக் கூறப்படுகிறது.
இந்த நடவடிக்கையின் வெற்றியை உறுதிசெய்த கூட்டுப் படைகளுக்கு அடிஸ் அபாபா காவல்துறை ஆணையம் தனது பாராட்டுகளைத் தெரிவித்தது.
தேசிய உளவு மற்றும் பாதுகாப்பு சேவை (NISS), கூட்டாட்சி காவல்துறை, தகவல் வலையமைப்பு பாதுகாப்பு நிர்வாகம் (INSA) மற்றும் ஓரோமியா பிராந்திய காவல்துறை ஆகியவற்றின் கூட்டு முயற்சியின் மூலம் இந்த மீட்புப் பணி வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
இலங்கையில் தாய் ஒருவர் மகனுக்கு எதிராக நடத்தி வந்த 30 வருட கால சட்டப் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது. மிரிஹான பிரதீசத்தில் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
வங்கிக் கடன் ஒன்றைப் பெற்றுக்கொள்வதற்காக மாத்திரம் மகனின் பெயருக்கு மாற்றப்பட்ட குடியிருப்புச் சொத்து ஒன்றின் உண்மையான உரிமையாளர் தாய் என மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மிரிஹான பகுதியில் உள்ள தனது வீட்டை, 1987ஆம் ஆண்டு வங்கிக் கடன் வசதியைப் பெற்றுக்கொள்வதற்காக மாத்திரம் தனது மகனின் பெயருக்கு இந்தத் தாய் மாற்றியிருந்தார்.
எனினும், கடனை அடைத்த பின்னர் அதனைத் தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற நிபந்தனையுடனேயே சொத்து மாற்றப்பட்டது என்றும், அதன் முழுமையான உரிமையை மகனுக்கு வழங்கும் நோக்கம் தனக்கு இருக்கவில்லை என்றும் தாய் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், தான் அதனை 125,000 ரூபாவிற்கு விலைக்கு வாங்கியதாக மகன் வாதிட்டிருந்தார். இது தொடர்பான சட்டப் போராட்டம் 1997ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட நிலையில், கல்கிஸ்சை மாவட்ட நீதிமன்றம் மற்றும் மேல் நீதிமன்றம் என்பன தாய்க்கு சாதகமாக தீர்ப்பளித்தன.
இதனை எதிர்த்து மகன் தரப்பால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
தலைமை நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன, நீதியரசர்களான ஜனக் டி சில்வா மற்றும் அர்ஜுன ஒபயசேகர ஆகிய மூவர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் ஆயம், கீழ் நீதிமன்றங்களின் தீர்ப்புகளை ஏகமனதாக உறுதிசெய்து மகனின் மேல்முறையீட்டை தள்ளுபடி செய்தது.
நம்பிக்கைப் பொறுப்பு கட்டளைச் சட்டத்தின் 83ஆம் பிரிவின் கீழ், ஒரு சொத்து மாற்றப்படும் போதுள்ள சூழ்நிலைகளைக் கருதி, அதன் உண்மையான உரிமை யாருக்குரியது என்பதை நீதிமன்றம் தீர்மானிக்க முடியும் என சுட்டிக்காட்டிய நீதியரசர்கள்,
தாய் பெரும் சிரமத்திற்கு மத்தியில் வாங்கிய ஒரேயொரு குடியிருப்பு இதுவென்பதாலும், பெறப்பட்ட கடன் வீட்டை விரிவுபடுத்தவே பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதாலும் இதன் உண்மையான உரிமையாளர் தாயே எனத் தீர்ப்பளித்தனர்.
இதன் மூலம் தனது மகனுக்கு எதிராக தாய் நடத்தி வந்த 30 வருட கால சட்டப் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளதுடன் நீதிமன்ற தீர்ப்பால் அந்த தாயாரும் மகிழ்ச்சி அடைந்துள்ளார்.
நாட்டின் பல பகுதிகளில் உள்ள வீடுகளை உடைத்து, 20 மில்லியன் ரூபாவுக்கும் அதிக மதிப்புள்ள ரொக்கப் பணம் மற்றும் தங்க நகைகளைக் கொள்ளையடித்த பிரதான சூத்திரதாரிகள் மூவரை கண்டி தலைமையகப் பொலிஸார் கைது செய்துள்ளனர். பொலிஸ் ஊடகப்பிரிவு இன்று இதனை தெரிவித்துள்ளது.
கண்டி தலைமையகப் பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட முற்றுகையின் போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர் ஒருவரிடமிருந்து ‘ஐஸ்’ போதைப்பொருளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணைகளின் போது, இக்கும்பலில் உள்ள இருவர் இராணுவத்தின் சிறப்புப் படைப்பிரிவான கொமாண்டோ படையில் பணியாற்றிய முன்னாள் வீரர்கள் என்பது கண்டறியப்பட்டுள்ளது.
இவர்கள் மூவரும் இணைந்தே நாடளாவிய ரீதியில் இந்த பாரிய கொள்ளைச் சம்பவங்களை அரங்கேற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள கொள்ளைக் கும்பலின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவர் ஹங்குராங்கெத்த பகுதியைச் சேர்ந்த முன்னாள் இராணுவ கமாண்டோ வீரர் எனவும்,
மற்றையவர் பேராதனை, முருத்தலாவ பகுதியைச் சேர்ந்த முன்னாள் இராணுவ கொமாண்டோ வீரர் எனவும் பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.
இந்தக் குழுவினர் கெக்கிராவை, கினிகத்தேனை, பேராதனை, திறப்பனை மற்றும் அநுராதபுரம் போன்ற பல பகுதிகளில் இருந்து மாத்திரம் 10 மில்லியன் ரூபாவுக்கும் அதிக மதிப்புள்ள தங்க நகைகளைக் கொள்ளையடித்துள்ளனர்.
அவ்வாறு திருடப்பட்ட நகைகள் பல்வேறு இடங்களில் விற்பனை செய்யப்பட்டுள்ள நிலையில், அவற்றில் சிலவற்றை விசேட பொலிஸ் குழுவினர் மீட்டுள்ளனர்.
பேராதனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒரு வீட்டுக்குள் புகுந்த இக்கும்பல், அங்கிருந்து 2.8 மில்லியன் ரூபா ரொக்கப் பணத்தையும், 10 மில்லியன் ரூபாவுக்கும் அதிக மதிப்புள்ள தங்க நகைகளையும் கொள்ளையடித்துள்ளனர்.
கினிகத்தேனை பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து 4.8 மில்லியன் ரூபா மதிப்புள்ள தங்க நகைகளும், மற்றொரு வீட்டில் இருந்து பல பெறுமதியான பொருட்களும் திருடப்பட்டுள்ளன.
திறப்பனை பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து 3.2 மில்லியன் ரூபா ரொக்கப் பணம் திருடப்பட்டுள்ளது. கெக்கிராவ பகுதியில் உள்ள ஒரு வீட்டில் புகுந்து தங்க நகைகளைக் கொள்ளையடித்த இந்தக் கும்பல்,
அதே பகுதியில் உள்ள மற்றொரு வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்துள்ளது. அங்கு வசித்தவர்களின் கை, கால்களைக் கட்டி, வாயைப் பொத்தி கொடூரமான முறையில் அச்சுறுத்தி,
அங்கிருந்த சொகுசு கார் மற்றும் பல பொருள்களைக் கொள்ளையடித்துத் தப்பியோடியுள்ளனர்.
மீட்கப்பட்ட தங்க நகைகள் மற்றும் ஏனைய பொருள்கள், கொள்ளைச் சம்பவங்கள் பதிவாகியிருந்த அந்தந்தப் பகுதி பொலிஸ் நிலையங்களில் சட்ட நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் மூவரையும் கண்டி நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்குக் கண்டி தலைமையகப் பொலிஸார் மேல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மகளை காதலனுடன் இணைந்து தவறான நடத்தைக்கு உட்படுத்திய தாய் மற்றும் குறித்த காதலன் இருவரையும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
குறித்த சம்பவம் அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நற்பிட்டிமுனை பகுதியில் 2026.03.24 அன்று இடம்பெற்றுள்ளது.
3 மாத காலமாக தலைமைறைவாகி இருந்த சந்தேக நபர் மற்றும் சிறுமியின் தாய் ஆகியோர் கைது செய்யப்பட்டு கல்முனை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் முன்னிலைபடுத்தப்பட்ட போது 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.
50 வயது சந்தேக நபர் சமூக வலைத்தளங்கள் ஊடாக (IMO /WHATSAPP ) ஊடாக திருமணமான பெண் ஒருவருடன் தொடர்பினை மேற்கொண்டுள்ளார். அப்பெண் தம்புள்ளை கலேவலை பகுதியைச் சேர்ந்தவராவார். அப்பெண்ணிற்கு 2 பிள்ளைகள் இருக்கின்றனர்.
இந்நிலையில், அப்பெண் சமூக வலைத்தளம் ஊடாக தொடர்பு கொண்டு தனது 14 வயது மகளை தன்னுடன் அழைத்துக்கொண்டு அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நற்பிட்டிமுனை பகுதிக்கு சென்றுள்ளார்.
அங்கு சந்தேக நபரான 50 வயது சந்தேக நபரை சந்தித்துள்ளார். இதன்போது குறித்த தாயும் பிள்ளையும் தங்குவதற்காக வாடகைக்கு வீடு ஒன்று கிராம சேவகரின் உதவி ஊடாக பெறப்பட்டு அங்கு தங்கி இருந்துள்ளனர்.
இதன்போது, தாயுடன் தகாத உறவில் ஈடுபட்ட சந்தேகநபர் அப்பெண்ணின் மகளை பாலியல் ரீதியான துர்நடத்தைக்கு உட்டுபத்தியுள்ள நிலையில் அதற்கு அந்த தாய் உதவி புரிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.