வங்காள விரிகுடாவின் தென்கிழக்காக உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் கிழக்கு மாகாணத்தில் பல பகுதிகளில் இன்று (08.01.2026) தொடக்கம் எதிர்வரும் 10ம் திகதிவரை அதிகளவிலான மழையுடன் பலத்த காற்று வீசும் சாத்தியம் உள்ளதால் மின்தடை ஏற்படக்கூடிய வாய்ப்பு ஏற்படும் என மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ் அறிவித்துள்ளார்.
இதனை கருத்தில் கொண்டு தயார் நிலையில் இருக்குமாறு மக்களிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். சீரற்ற காலநிலை தொடர்பாக அரசாங்க அதிபர் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
வளிமண்டல திணைக்கள எதிர்வுகூறலின் பிரகாரம் வங்காள விரிகுடாவின் தென்கிழக்காக உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் இன்று தொடக்கம் எதிர்வரும் 10ம் திகதி வரையில் 100 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகுவதுடன்,
60 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசும் என வளிமண்டல திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. எனவே இதன் காரணமாக இடைக்கிடையே மின்சார தடை ஏற்பட வாய்ப்புகள் காணப்படுகிறது.
பொதுமக்கள் இதனை கருத்தில் கொண்டு தங்களது தயார்படுத்தல் மற்றும் ஒருங்கிணைப்பு நடவடிக்கையை விரைவாக முன்னெடுக்குமாறு கேட்டுக்கொள்வதோடு வானிலை அறிக்கை தொடர்பில் அவதானமாக இருக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நாட்டில் சில பகுதிகளில் வெள்ளம் ஏற்படும் அபாயம் இருப்பதால் அப்பகுதி மக்கள், தயாராக இருக்குமாறு நீர்ப்பாசனத் துறை முன்கூட்டிய எச்சரிக்கை விடுத்துள்ளது.
நேற்று (07.01.2026) இரவு 11 மணிக்கு வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அம்பாறை, மட்டக்களப்பு, பொலன்னறுவை, அனுராதபுரம், திருகோணமலை, வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள ஆற்றுப் படுகைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் இருப்பதாகக் கூறப்படுகிறது.
வானிலை ஆய்வு மையம் வழங்கிய முன்னறிவிப்புகளின்படி, ஊவா, கிழக்கு, மத்திய, வடமத்திய மற்றும் வடக்கு மாகாணங்களில் உள்ள ஆற்றுப் படுகைகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதால், இந்த நிலைமை ஏற்பட வாய்ப்புள்ளதாக நீர்ப்பாசனத் துறை குறிப்பிட்டுள்ளது.
இதன் விளைவாக, சம்பந்தப்பட்ட மாவட்டங்களில் தாழ்வான பகுதிகளிலும் ஆறுகளுக்கு அருகிலும் வசிக்கும் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு நீர்ப்பாசனத் துறையும் அறிவித்துள்ளது.
புதிய இணைப்பு : இலங்கையின் தென்கிழக்கே வங்காள விரிகுடாவில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், பிற்பகல் 2 மணி நிலவரப்படி பொத்துவிலிலிருந்து தென்கிழக்கே 250 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருப்பதாக அறிவித்துள்ளது.
இது தென்மேற்கு வங்காள விரிகுடாவில் மேற்கு நோக்கி நகர்ந்து பின்னர் வடமேற்கு நோக்கி நகர்ந்து நாளை (09) மாலை 5.30 மணி முதல் இரவு 11.30 மணி வரை இலங்கை கடற்கரையை ஹம்பாந்தோட்டை மற்றும் கல்முனை இடையே கடக்கும் வாய்ப்பு அதிகம் என முன்னர் தெரிவிக்கப்பட்டது.
தற்போது, காங்கேசன்துறை முதல் திருகோணமலை வரையிலும், பொத்துவில் முதல் ஹம்பாந்தோட்டை வரையிலும் உள்ள கடற்கரையோரக் கடல் பகுதிகளில் கடல் அலைகள் சுமார் 2.5 – 3.5 மீட்டர் வரை எழும்பும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகின்றது.
மேலும், இடியுடன் கூடிய மழை பெய்யும் போது, அந்தக் கடல் பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும், பின்னர் குறித்த கடல் பகுதிகள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பாக மாறும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் இணைப்பு
நாளை (09) பிற்பகல் ஹம்பாந்தோட்டை மற்றும் கல்முனை பகுதிகளிலிருந்து காற்றழுத்தத் தாழ்வு நிலை நாட்டை நோக்கி உள்நுழையக்கூடும் என வானிலை ஆய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் ஜெனரல் அதுல கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
பாதகமான வானிலை குறித்த சிறப்பு ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
தற்போது நாட்டின் கிழக்கு கடற்கரையில் பொத்துவில் பகுதியிலிருந்து தென்கிழக்கே சுமார் 350 கிலோமீட்டர் தொலைவில் காற்றழுத்தத் தாழ்வு நிலை அமைந்துள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை மாலை 5:30 மணி முதல் 11:30 மணி வரை ஹம்பாந்தோட்டைக்கும் கல்முனைக்கும் இடையில் நாட்டிற்குள் நுழைய வாய்ப்புள்ளதாக கருணாநாயக்க தெரிவித்தார்.
முதலாம் இணைப்பு
இலங்கைக்கு தென்கிழக்கே வங்காள விரிகுடா கடல் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று (08) காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுத்துள்ளது.
இது தற்போது பொத்துவிலிலிருந்து தென்கிழக்கே 300 கிலோமீட்டர் தொலைவில் நிலைகொண்டுள்ளதாக வானிலை ஆய்வுத் திணைக்களத்தின் முன்னறிவிப்புப் பிரிவின் பணிப்பாளர் மெரில் மெண்டிஸ் தெரிவித்தார்.
மேலும், இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், அடுத்த சில மணி நேரத்தில் கிழக்கு கடற்கரையை அடையும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இடைவிடாத மழை
இதன் தாக்கம் காரணமாக, நாட்டின் பல பகுதிகள் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் இடைவிடாத மழை பெய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், நாடு முழுவதும் மணிக்கு 50-60 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும், கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் 100 மில்லி மீட்டருக்கும் அதிகமான மழை பெய்யக்கூடும் என்றும் மெரில் மெண்டிஸ் கூறினார்.
மேலும், மறு அறிவிப்பு வரும் வரை தீவைச் சுற்றியுள்ள கடல் பகுதிகளில் கப்பல் போக்குவரத்து மற்றும் கடற்றொழில் நடவடிக்கைகளைத் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
இலங்கையில் புகையிலை மற்றும் சிகரெட் பயன்பாட்டால் ஆண்டுதோறும் சுமார் 22000 பேர் உயிரிழப்பதாக மது மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் தெரிவித்துள்ளது.
நாட்டில் ஏற்படும் மொத்த மரணங்களில் 83% தொற்றாத நோய்களால் ஏற்படுகின்றன என்றும், அவற்றிற்கு முக்கிய காரணிகளில் ஒன்றாக புகையிலை பயன்பாடு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இலங்கையில் சுமார் 15 இலட்சம் பெரியவர்கள் புகைப்பழக்கத்திற்கு அடிமையாக உள்ளனர்.
இந்த நிலையில், உலகளவில் ஒவ்வொரு ஆறு விநாடிகளுக்கும் ஒரு புகையிலை தொடர்பான மரணம் பதிவாகிறது என தேசிய புகையிலை மற்றும் மதுபான அதிகார சபையின் தலைவர் ஆனந்த ரத்நாயக்க தெரிவித்தார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துரைத்த அவர், 2021ஆம் ஆண்டிற்கு பின்னர் சிகரெட்டுகளுக்கான வரி குறைக்கப்பட்டுள்ளதாகவும், இது புகையிலை கட்டுப்பாட்டு முயற்சிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள தாழமுக்கமானது நாட்டிற்குள் நுழையும் சாத்தியம் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வளிமண்டலவியல் திணைக்களம் வழங்கும் அறிவுறுத்தல்கள் மற்றும் எச்சரிக்கைகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு மக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
டிட்வா புயல் நாட்டை தாக்கிய போது பெரும்பாலான பகுதிகளில் அறிவுறுத்தல்களை பின்பற்றி விரைவான முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் எடுக்கப்படத நிலையிலேயே பெருமளவான பாதிப்புகள் பதிவாகியிருந்தன.
இவ்வாறான சூழலில் வளிமண்டலவியல் திணைக்களத்தால் வழங்கப்படும் அறிவுறுத்தல்களை பின்பற்றி தொடர்ச்சியாக விழிப்புடன் செயற்படுமாறு எச்சரிக்கப்பட்டுள்ளது.
தாழமுக்க தொகுதியானது தென்மேற்கு வங்காள விரிகுடா ஊடாக மேற்கு திசையாகவும் வடமேற்கு திசையாகவும் நகர்ந்து, நாளை (09) மாலை 5.30 மணிக்கும் இரவு 11.30 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில்,
ஹம்பாந்தோட்டை மற்றும் கல்முனை ஆகிய பிரதேசங்களுக்கு இடையில் இலங்கையின் கரையை ஊடறுத்துச் செல்லும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக தரை மற்றும் கடல் பிரதேசங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் சில இடங்களில் 150 மி.மீ க்கும் அதிகமான மிகப் பலத்த மழை பெய்யக்கூடும்.
முல்லைத்தீவு, வவுனியா, கிளிநொச்சி, பொலன்னறுவை மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் 100 முதல் 150 மி.மீ வரையான பலத்த மழை பெய்யக்கூடும்.
யாழ்ப்பாணம், மன்னார் மாவட்டங்களிலும், ஊவா மாகாணத்தின் மொனராகலை, பதுளை மாவட்டங்களிலும், மத்திய மாகாணத்தின் நுவரெலியா, மாத்தளை மாவட்டங்களிலும் 100 மி.மீ க்கும் அதிகமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று (08) காலை 10.30 மணிக்கு வெளியிடப்பட்டுள்ள இந்த எச்சரிக்கை அறிவிப்பானது, அடுத்த 24 மணித்தியாலங்களுக்குச் செல்லுபடியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள தாழமுக்கமானது நாளை (09.01.2026) பிற்பகல் வேளையில் ஹம்பாந்தோட்டை மற்றும் கல்முனை ஆகிய பிரதேசங்களுக்கு இடைப்பட்ட பகுதியினூடாக நாட்டிற்குள் நுழையக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அதுல கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
சீரற்ற வானிலை நிலைமை தொடர்பில் தெளிவுபடுத்தும் விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தத் தாழமுக்கமானது தற்போது நாட்டின் கிழக்குக் கரையோரப் பகுதியான பொத்துவிலுக்குத் தென்கிழக்கே சுமார் 350 கிலோ மீற்றர் தொலைவில் நிலை கொண்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய மழையுடன்கூடிய காலநிலை காரணமாக, நீர்ப்பாசன திணைக்களத்திற்கு உட்பட்ட 26 பிரதான நீர்த்தேக்கங்கள் மற்றும் 24 மத்திய அளவிலான நீர்த்தேக்கங்கள் வான் பாயும் நிலையை அடைந்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, தற்போது கலாவெவ, கண்டலம வெவ, மாதுரு ஓயா, ராஜாங்கனய ஆகிய நீர்த்தேக்கங்களும் இதில் அடங்குவதாக அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன், விக்டோரியா, ரந்தெணிகல, மொரகஹகந்த, கலு கங்க ஆகியவையும் தற்போது வான் பாயும் மட்டத்தில் உள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
தாழமுக்கம் கரையை நெருங்கி வருவதால், மறு அறிவித்தல் வரும் வரை கடற்றொழில் மற்றும் கடல்சார் நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறும் மீனவ மற்றும் கடற்படை சமூகத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை இலங்கைக்குத் தென்கிழக்காக வங்காள விரிகுடா கடற்பரப்பில் நிலைகொண்டுள்ள தாழமுக்கம் காரணமாக, நாட்டில் மிக அதிக செறிவு கொண்ட கனமழை பெய்யும் பட்சத்தில், நீர்நிலைகளின் நீர்மட்டம் மிக வேகமாக உயரக்கூடும் என நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக ஆறுகள் மற்றும் குளங்களை அண்மித்த பகுதிகளில் வாழும் மக்கள் திடீர் வெள்ளப்பெருக்கு குறித்து மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பொலநறுவையில் வீடொன்றில் பெற்றோருக்கு இடையே நடந்த சண்டையின் போது, 12 வயது மகள் படுகாயமடைந்துள்ளார். ஹிங்குராக்கொடயில் மனைவியை கத்தியால் தாக்க கணவன் முயற்சித்த போது அது மகளின் தலையில் குத்தியதாக தெரியவந்துள்ளது.
இதனால் மகள் படுகாயமடைந்து பொலன்னறுவை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் கடந்த 5 ஆம் திகதி மாலை 6 மணியளவில் இடம்பெற்றதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். நான்கு பிள்ளைகளின் தந்தை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் பாரிய படலப் பட்டத்தை தொடுவையாக இணைத்து பறக்க விட முற்றப்பட்ட போது பட்டம் ஏற்றும் வடத்துடன் இளைஞன் ஒருவர் வான் நோக்கி இழுத்துச் செல்லப்பட்டுள்ளார்.
இவ்வாறு வடத்தில் தொங்கிய நிலையில் பறந்து பலரையும் பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது. தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு பட்டங்கள் ஏற்றி கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.
சிறுவர்கள், இளைஞர்கள் என குழுக்கள் குழுக்களாக பாரிய அளவிலான பட்டங்களை கட்டி பறக்க விட்டு வருகின்றனர்.
யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை பகுதியில் மிகச் சிறப்பாக விதம் விதமாக விசித்திரமான பட்டங்களை கட்டி ஏற்றி தனக்கென மிக சிறந்த இடத்தை தக்க வைத்துள்ளது.
நேற்றும் வல்வெட்டித்துறை றெயின்போ (Rainbow) விளையாட்டு மைதானத்தில் இளைஞர்கள் கூடி பாரிய பட்டங்களை பறக்க விட்டுக் கொண்டிருந்தனர்.
இதன்போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. பின்னர் சக நண்பர்களால் பாதுகாப்பாக குறித்த நபர் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டுள்ளார்.
தங்க விலையானது நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று (08.01.2026) 3000 ரூபாயால் குறைந்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
இலங்கை தங்க சந்தையில் கடந்த திங்கட்கிழமை முதல் தங்கத்தின் விலையில் தொடர்ச்சியான வீழ்ச்சி பதிவாகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 359000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 329,500 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 44,875 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 41,188 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
2025 வருட இறுதிப்பகுதி முதல் இலங்கையில் தங்கத்தின் விலையில் தொடர் அதிகரிப்பு பதிவாகியிருந்தது. இவ்வாறான சூழலில் அண்மைய சில நாட்களாக தலைகீழ் மாற்றம் பதிவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
புத்தளம், கருவலகஸ்வெவ, தப்போவ இரும்பு பாலத்தில் இடம்பெற்ற விபத்தில் நான்கு பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து நேற்று (07.01.2025) இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சொகுசு பஸ் ஒன்று வேனுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் நால்வர் காயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
குருநாகல், கல்கமுவை பிரதேசத்தில் இடம்பெற்ற கோர விபத்தில் 11 வயது சிறுவன் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். இந்தத் துயரச் சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.
மேற்படி சிறுவன் சைக்கிளில் வீதியைக் கடக்க முயன்றபோது அதிவேகமாக வந்த கார் அவர் மீது மோதியுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த சிறுவன் உடனே கல்கமுவை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்தாலும் அவர் உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்து விசாரணையை முன்னெடுத்த பொலிஸார், காரின் சாரதியான 27 வயது இளைஞரைக் கைது செய்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இமாச்சலப் பிரதேசத்தின் குலு பள்ளத்தாக்கில் உள்ள மலாணா கிராமம், அதன் கடுமையான கலாச்சார கட்டுப்பாடுகளால் மீண்டும் இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.
துஷிகா அகர்வால் என்ற பெண் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது. அந்த வீடியோவில், கடையில் பொருள் வாங்கும்போது பணத்தை நேரடியாக கொடுக்காமல் தரையில் வைப்பது காணப்படுகிறது.
வெளியாட்கள் தொட்டால் ‘தீட்டு’ ஏற்படும் என்ற நம்பிக்கை இங்கு நிலவுகிறது. அதனால் வெளியாட்கள் கிராம மக்களை, வீடுகளை, சுவர்களை, கோவில்களை தொட அனுமதி இல்லை. பணம் மற்றும் பொருட்கள் கைமாறும்போதும் நேரடியாக வழங்கப்படாது. அனைத்தும் தரையிலேயே வைக்கப்படும்.
மலாணா கிராமத்திற்கு தனி நிர்வாகமும், பழங்கால சட்டங்களும் உள்ளன. இந்திய அரசியலமைப்பை விட, ஜம்லு தேவதாவின் கட்டளைகளே இங்கு முக்கியம்.
அலெக்சாண்டரின் படைவீரர்களின் வாரிசுகள் தாங்கள் என நம்பும் இந்த மக்கள், தங்களை தனிமைப்படுத்திக் கொள்கிறார்கள். இது பிற்போக்குத்தனமா, கலாச்சார பாதுகாப்பா என்ற விவாதம் இணையத்தில் தீவிரமாக நடக்கிறது.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் வசித்து வந்த 32 வயது இந்தியப் பெண் நிகிதா கோடீஷலா, தனது முன்னாள் அறை நண்பரால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சில நாட்களாக மாயமான நிலையில் இருந்த நிகிதாவின் உடல்,
அவர் தங்கியிருந்த வீட்டின் அருகே நிறுத்தப்பட்டிருந்த காரின் டிக்கிக்குள் இருந்து மீட்கப்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பாக அர்ஜுன் சர்மா என்ற 32 வயது நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நிகிதா தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தைச் சேர்ந்தவர்.
நிகிதா மற்றும் அர்ஜுன் சர்மா இருவரும் முன்பு ஒரே அறையில் தங்கியிருந்ததாகவும், அந்த காலத்தில் அர்ஜுன் நிகிதாவிடமிருந்து சுமார் 50 ஆயிரம் அமெரிக்க டாலர்களைக் கடனாக பெற்றிருந்ததாகவும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
அந்தப் பணத்தை திருப்பிக் கேட்டு நிகிதா தொடர்ந்து வற்புறுத்தியதால் இருவருக்கும் இடையே கடும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த ஆத்திரமே கொலைக்கு காரணமாக இருக்கலாம் என்று நிகிதாவின் தந்தை சந்தேகம் வெளியிட்டுள்ளார்.
கொலை செய்த பிறகு, அர்ஜுன் சர்மா தற்கொலை செய்துகொள்ளப் போவதாக நிகிதாவின் குடும்பத்தினருக்கு குறுஞ்செய்தி அனுப்பியதாகவும் கூறப்படுகிறது. அந்த தகவலைப் பெற்ற குடும்பத்தினர் உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்தனர்.
தற்போது நிகிதாவின் உடல் அமெரிக்காவில் உள்ள நிலையில், அதை இந்தியாவுக்கு கொண்டு வர மத்திய அரசு மற்றும் வெளியுறவுத் துறை உதவ வேண்டும் என்று குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தட்சிண கன்னடா (கர்நாடகா) மாவட்டம், கொடியால கிராமத்தைச் சேர்ந்த மதுஸ்ரீ (34) மற்றும் அவரது 3 வயது மகள் தன்வி ஆகிய இருவரின் சடலங்கள்,
அருகில் உள்ள ஏரியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இது கொலையா? தற்கொலையா? என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தனது கணவர் ஹரீஷ் மற்றும் குழந்தையுடன் மதுஸ்ரீ என்கிற இளம்பெண் வசித்து வந்தார். சம்பவத்தன்று இரவு வழக்கம் போல் உறங்கச் சென்றவர்கள், மறுநாள் காலையில் காணவில்லை.
தாயையும், மகளையும் காணவில்லை என்று உறவினர்கள் அக்கம்பக்கம் இவர்கள் இருவரையும் தேடிப் பார்த்தபோது, வீட்டின் அருகே உள்ள ஏரியில் இருவரும் சடலமாக மிதந்தது தெரியவந்தது.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் இருவரது உடல்களையும் மீட்டபோது அங்கிருந்தவர்கள் கண்கலங்கினர்.
மதுஸ்ரீ தனது 3 வயது மகள் தன்வியை, ஒரு துணியால் தன்னோடு உடலில் சேர்த்து இறுக்கிக் கட்டிக் கொண்டு ஏரியில் குதித்துள்ளார். சடலங்கள் மீட்கப்பட்டபோது, அந்தச் சிறுமி தனது தாயை அணைத்த நிலையிலேயே உயிரிழந்திருந்தது கண்கலங்க செய்தது.
குடும்பத் தகராறு அல்லது மன உளைச்சல் காரணமாக மதுஸ்ரீ இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்று முதற்கட்டமாகச் சந்தேகிக்கப்படுகிறது. அதே சமயம் மதுஸ்ரீயின் தாய் ரத்னாவதி,
தனது மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகப் புகார் அளித்துள்ளார். இதனால் இது தற்கொலையா அல்லது வேறு ஏதேனும் சதி நடந்ததா என்பது குறித்துப் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
இருவரது உடல்களையும் கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அதன் முடிவுகள் வந்த பிறகே மரணத்திற்கான உண்மைத் தெரிவரும் எனப் பெல்லாரே போலீசார் தெரிவித்துள்ளனர்.
மிகச் சிறிய உடல் எடையுடன் (150–200 கிராம்) இருக்கும் அமூர் பால்கன் பறவைகள் விஞ்ஞானிகளையும் பறவையியல் ஆர்வலர்களையும் ஆச்சரியப்படுத்தும் சாதனையை நிகழ்த்தியுள்ளன.
இந்தியாவில் செயற்கைக்கோள் கருவி பொருத்தப்பட்ட மூன்று பால்கன் பறவைகள், வெறும் 5 நாட்களில் 5,000 கி.மீ. தூரம் பறந்து ஆப்பிரிக்காவை அடைந்துள்ளன.
இவை இந்திய நிலப்பரப்பை கடந்தவுடன், அரேபியக் கடல் மற்றும் இந்தியப் பெருங்கடல் மீது இடைவிடாமல் பறந்துள்ளன.
மழைக்கால காற்றோட்டங்கள் மற்றும் வலுவான கடல் காற்று வழித்தடங்கள் அவற்றின் சக்தியைச் சேமித்து, இயற்கையான ‘கிளைடர்’ போல பறக்க உதவின.
பால்கன் பறவைகள் நீரில் தரையிறங்க முடியாததால், காற்றின் நேரத்தை சரியாகப் பயன்படுத்துவது அவற்றின் உயிர் காக்கும் யுக்தியாகும்.
சில பறவைகள் unihemispheric sleep எனப்படும் முறையில், மூளையின் ஒரு பகுதியை ஓய்வில் வைத்துக்கொண்டு மற்ற பகுதியைச் செயல்படுத்தி, பறக்கும் போதே தூங்கும் திறன் கொண்டிருக்கலாம் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர். ஆனால் இது இன்னும் ஆராய்ச்சியில் உறுதி செய்யப்படவில்லை.
இந்த பயணம், ஆசியாவின் இனப்பெருக்கப் பகுதிகளையும் ஆப்பிரிக்காவின் குளிர்கால தங்குமிடங்களையும் இணைக்கும் அற்புதமான சூழலியல் பாலமாக விளங்குகிறது.
உலகின் நீண்ட தூரப் பயணிகள் பட்டியலில், அமூர் பால்கன் பறவைகள் தங்கள் இடத்தை உறுதியாகப் பிடித்துள்ளன.
ஐரோப்பாவின் பல பகுதிகளில் நிலவி வரும் கடும் குளிர், பனிப்பொழிவு மற்றும் உறைபனி காரணமாக இதுவரை குறைந்தது ஆறு பேர் உயிரிழந்துள்ளனர்.
கடும் வானிலை சூழல் காரணமாக வீதி, தொடருந்து மற்றும் விமானப் போக்குவரத்துகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
பிரான்ஸின் தென்மேற்கு பகுதியான லாண்டஸ் பகுதியில், ஏற்பட்ட வீதி விபத்துகளில் மூன்று பேர் உயிரிழந்ததுடன், 15 பேர் காயமடைந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதேபோல், பாரிஸ் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிகழ்ந்த விபத்துகளில் மேலும் இருவர் உயிரிழந்தனர். பாரிஸ் நகரின் கூரைகள் மற்றும் வரலாற்றுச் சின்னங்கள் முழுவதும் பனியால் மூடப்பட்ட நிலையில் காணப்பட்டன.
கனமழை மற்றும் பனிப்பொழிவு காரணமாக, பிரான்ஸின் வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் உள்ள ஆறு விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டன.
போஸ்னியா மற்றும் ஹெர்செகோவினா நாட்டின் தலைநகர் சரயேவோவில், பனியால் மூடப்பட்ட மரத்தின் கிளை தலை மீது விழுந்ததில் ஒரு பெண் உயிரிழந்தார்.
நகரம் முழுவதும் பனிப்பொழிவு பரவலாக காணப்படுகிறது. நெதர்லாந்தில், ஆம்ஸ்டர்டாமின் ஸ்கிப்போல் விமான நிலையத்தில் நூற்றுக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
ஓடுபாதைகளை சுத்தம் செய்வதும், விமானங்களில் உறைபனியை அகற்றும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டன.
இதனிடையே, தகவல் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நாட்டின் உள்நாட்டு தொடருந்து சேவைகள் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் நிறுத்தப்பட்டதால், பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.
இதன் விளைவாக, ஆம்ஸ்டர்டாமிலிருந்து பாரிஸுக்கான யுரோஸ்டார் ரயில் சேவைகள் ரத்து செய்யப்படவோ அல்லது தாமதமாகவோ இயக்கப்பட்டன.
ஜெர்மனியின் தெற்கு மற்றும் கிழக்கு பகுதிகளில், வெப்பநிலை மறை பத்து பாகை செல்சியற்கு கீழ் சரிந்துள்ளது. இங்கிலாந்தில், இரவு நேரத்தில் வெப்பநிலை மறை 12.5 பாகை செல்சியஸ் வரை குறைந்தது.
இதனால் தொடருந்து, சாலை, விமானப் போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டதுடன், வடக்கு பகுதிகளில் நூற்றுக்கணக்கான பள்ளிகள் மூடப்பட்டன.
தென்னிந்திய சினிமாவில் முக்கிய நடிகையாக வலம்வருபவர் நடிகை தமன்னா நிமிடத்துக்கு ஒரு கோடி ரூபாய் சம்பளம் பெற்றுள்ளதாகத் தகவல் வெளியாகி நெட்டிசன்களை வாய் பிளக்க வைத்துள்ளது.
தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடிகை தமன்னா ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.
2005 ஆம் ஆண்டு அறிமுகமான அவர் கடந்த 25 வருடங்களாக சினிமாவில் நடித்து வருகிறார். கடந்த ஆண்டு ஒரேயொரு படத்தில் தான் தமன்னா முன்னணி வேடத்தில் நடித்திருந்தார்.
ஆனாலும் வருடம் முழுக்க ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறார். அதற்குக் காரணம், படங்களில் ஒரு பாடலுக்கு சிறப்புத் தோற்றத்தில் ஆடினாலும் தமன்னா ரசிகர்கள் மனதில் இடம்பிடித்து வருகிறார்.
இதனால் ஒரு பாடலுக்கு நடனம் ஆடுவதற்காக மட்டுமே அதிக சம்பளம் வாங்கும் நட்சத்திரம் என்ற பெயரைப் பெற்றுள்ள தமன்னா தற்போது ஒரு நிமிடத்துக்கு ஒரு கோடி ரூபாய் சம்பளம் பெற்றுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
அண்மையில் கோவாவின் பாகா கடற்கரையில் உள்ள பிரபலமான லாஸ் ஓலாஸ் கடற்கரை கிளப்பில் புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெற்றது. இதில் தமன்னா, நடிகை சோனம் பஜ்வாவுடன் இணைந்து நடனமாடினார்.
இந்த 6 நிமிடம் மட்டுமே நடனம் ஆடியதாகவும், இதற்காக தமன்னாவுக்கு 6 கோடி ரூபாய் வரை சம்பளம் வழங்கப்பட்டிருக்கிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்த வகையில் ஒரு நிமிடத்துக்கு ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கி எந்த நடிகையும் செய்யாத சாதனையைப் புத்தாண்டு தினத்தில் படைத்திருக்கிறார் தமன்னா.