நாட்டை சூழும் கனமழை : மின்னல், பலத்த காற்றுக்கு எச்சரிக்கை!!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

அதேநேரம் தென் மாகாணத்தின் சில இடங்களில் காலை வேளையிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேல், சப்ரகமுவ, மத்திய, தென், ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களிலும், குருநாகல் மாவட்டத்திலும் சில பகுதிகளில் 75 மில்லிமீற்றருக்கு அதிகமான பலத்த மழை பதிவாகக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், அநுராதபுரம், குருநாகல் மற்றும் பதுளை மாவட்டங்களிலும் அதிகாலை நேரங்களில் மூடுபனி நிலை காணப்படலாம்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைத் தவிர்க்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

லிட்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!!

நாட்டில் மே மாதம் முழுவதும் தடையற்ற எரிவாயு விநியோகத்தை பராமரிக்கத் தேவையான கையிருப்பு, மாலைத்தீவின் மிதக்கும் சேமிப்புக்கிடங்கில் சேமிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.

எனவே மே மாதம் எந்தவித இடையூறும் இன்றி தொடர்ச்சியான விநியோகத்தை மேற்கொள்ள உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளது.

20,000 மெட்ரிக் டொன்கள் எரிவாயுவினை ஏற்றிக்கொண்டு கப்பலொன்று ஏற்கனவே தென் அமெரிக்காவிலிருந்து புறப்பட்டுள்ளதாகவும், மே மாதத்தின் முதல் வாரத்தில் நாட்டை வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை, எதிர்வரும் வாரங்களில் வரவிருக்கும் கப்பல்கள் தொடர்பான முறையான திட்டமிடலும் நடைபெற்று வருவதாகவும் நிறுவனம் உறுதியளித்துள்ளது.

20,000 மெட்ரிக் டொன்கள் எரிவாயு கப்பல் ஏப்ரல் 25 அன்று வந்து சேரும் வகையிலும் திட்டமிடப்பட்டிருந்தது.

இதற்கமைய ஏப்ரல் மாதத்திற்கு ஆர்டர் செய்யப்பட்ட 38,000 மெட்ரிக் டொன்களில், 7,000 மெட்ரிக் டொன் கொண்ட முதல் எரிவாயு தொகுதி மார்ச் மாத இறுதியில் நாட்டிற்கு வந்து சேர்ந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளது.

ஓடும் புகையிரதத்தில் ஏற முயன்ற இளம் தாய் பலி : செய்வதறியாது கதறி அழுத பச்சிளம் குழந்தைகள்!!

ஜார்கண்ட் மாநிலம் கோடெர்மா ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் ஏற முயன்ற 24 வயது இளம் தாய், நிலைதடுமாறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ரயிலில் ஏற முயன்றபோது கால் வழுக்கி விழுந்ததில் அவருக்குக் கடுமையான காயம் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து காப்பாற்ற முயன்றபோதிலும், அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

ஒரு சில வினாடிகளில் நடந்த இந்த விபத்து அந்தப் பகுதியில் இருந்த பயணிகளைப் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்தத் துயரச் சம்பவத்தை விடவும், அந்தப் பெண்ணின் இரண்டு பச்சிளம் குழந்தைகள் நடைமேடையில் தாயைத் தேடி அழுதுகொண்டிருந்த காட்சி அங்கிருந்தவர்களின் நெஞ்சைப் பிழிவதாக இருந்தது.

தங்களுக்கு என்ன நேர்ந்தது என்றே தெரியாத அந்தப் பிஞ்சுகள், நடைமேடையில் தனியாகத் தவித்ததைக் கண்டு சக பயணிகள் ஓடி வந்து அவர்களை அரவணைத்தனர்.

பின்னர் அந்த இரண்டு குழந்தைகளும் ரயில்வே அதிகாரிகளிடம் பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டனர். தாயை இழந்த அந்தக் குழந்தைகளின் எதிர்காலம் குறித்துப் பலரும் கவலை தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்து ரயில் நிலையங்களில் நிலவும் பாதுகாப்பு குறைபாடுகள் குறித்த கேள்விகளை மீண்டும் எழுப்பியுள்ளது.

அவசர காலங்களில் அல்லது கூட்டம் அதிகமாக இருக்கும் நேரங்களில் பயணிகள் ஓடும் ரயிலில் ஏறுவதைத் தவிர்க்க வேண்டும் என்று ரயில்வே துறை தொடர்ந்து எச்சரித்து வருகிறது.

இருப்பினும், இதுபோன்ற உயிரிழப்புகளைத் தடுக்க ரயில்வே பாதுகாப்புப் படை (RPF) மற்றும் நிலைய ஊழியர்கள் கண்காணிப்பை மேலும் தீவிரப்படுத்த வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஒரு சிறு கவனக்குறைவு ஒரு குடும்பத்தையே சிதைத்துவிடும் என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு கசப்பான பாடமாக அமைந்துள்ளது.

விடுமுறை நாளில் சோகம் : விபத்தில் நண்பர்கள் இருவர் உயிரிழப்பு!!

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே, வாக்களிக்கச் சொந்த ஊர் வந்த இளைஞர்கள் சென்ற பைக் விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்ரீவைகுண்டம் நளராஜபுரத்தைச் சேர்ந்த முத்துப்பாண்டி (21), இசக்கிராஜா (20) மற்றும் சிவகாரனேஷ் (19) ஆகிய மூன்று நண்பர்களும் கடந்த 23-ஆம் தேதி சட்டமன்றத் தேர்தலில் வாக்களிக்க ஊருக்கு வந்துள்ளனர்.

வாக்களித்துவிட்டு, நேற்று முன்தினம் மாலை குலசேகரன்பட்டினம் கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு ஒரே பைக்கில் ஊர் திரும்பியுள்ளனர். பைக்கை முத்துப்பாண்டி ஓட்டியுள்ளார்.

ஆழ்வார்திருநகரி அருகே வெள்ளமடம் அரசாங்க நகர் பகுதியில் வந்தபோது, பைக் எதிர்பாராத விதமாக நிலைதடுமாறி சாலையோர மைல்கல்லில் பயங்கரமாக மோதியது.

மோதிய வேகத்தில் தூக்கி வீசப்பட்டதில் முத்துப்பாண்டி மற்றும் இசக்கிராஜா ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

பலத்த காயமடைந்த சென்னையில் வேலை பார்த்து வரும் சிவகாரனேஷ், தற்போது நெல்லை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஒரே பகுதியைச் சேர்ந்த நண்பர்கள், தேர்தல் கடமையை ஆற்ற ஊருக்கு வந்து விபத்தில் சிக்கி உயிரிழந்தது நளராஜபுரம் கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

 

காதல் ஜோடி எடுத்த விபரீத முடிவு!!

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் மாலா பகுதியில் உள்ள வாடகை வீடு ஒன்றில், இளம் காதல் ஜோடி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளனர்.

மாலாவைச் சேர்ந்த மில்னா (24) என்ற பெண்ணுக்கும், ஸ்ரீஜித் (30) என்ற இளைஞருக்கும் இடையே நீண்ட நாட்களாகக் காதல் இருந்து வந்துள்ளது. மில்னாவிற்கு அவரது குடும்பத்தினர் சமீபத்தில் வேறொரு இடத்தில திருமண நிச்சயதார்த்தம் செய்துள்ளனர்.

இதனால் அதிருப்தியடைந்த மில்னா, கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென வீட்டில் இருந்து காணாமல் போனார். இது குறித்து அவரது உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர்.

போலீசாரின் தேடுதல் வேட்டை நடந்து வந்த நிலையில், இன்று மாலாவில் உள்ள ஒரு வாடகை வீட்டில் மில்னா மற்றும் ஸ்ரீஜித் ஆகிய இருவரும் ஒரே கயிற்றில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் மீட்கப்பட்டனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் உயிரிழந்த ஸ்ரீஜித் குறித்துப் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன:

ஸ்ரீஜித்திற்கு ஏற்கனவே இரண்டு முறை திருமணமாகியுள்ளது. ஸ்ரீஜித்தின் இரண்டாவது மனைவி, குடும்பப் தகராறு காரணமாக ஏற்கனவே தற்கொலைக்கு முயன்று, தற்போது மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இரண்டாவது மனைவி மருத்துவமனையில் இருக்கும் போதே, ஸ்ரீஜித் தனது காதலி மில்னாவுடன் தலைமறைவாகி இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இருவரின் உடல்களையும் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

காதலியின் திருமண ஏற்பாடுகளால் ஏற்பட்ட பயம் அல்லது ஸ்ரீஜித்தின் முந்தைய திருமண வாழ்க்கையில் இருந்த சிக்கல்கள் தற்கொலைக்குக் காரணமாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.

 

சைபர் தாக்குதல் அபாய பட்டியலில் இலங்கை : எச்சரிக்கை விடுக்கும் நிபுணர்!!

மத்திய கிழக்கு மோதல்களுக்கு இணையாக இணையதளங்கள் மீதான சைபர் தாக்குதல்கள் அதிகரிக்கும் போக்கு காணப்படுவதாகவும் இவ்வாறான சைபர் தாக்குதல்களுக்கு உள்ளாகும் அதிக அபாயம் கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கையும் உள்ளதாக நாட்டின் சிரேஷ்ட தகவல் தொழில்நுட்ப நிபுணர் ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கையின் சிரேஷ்ட தகவல் தொழில்நுட்ப நிபுணரான ஹர்ஷ விஜயவர்தன இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில், உலகில் இணைய அச்சுறுத்தல்கள் நிலவும் நாடுகளின் பட்டியலில் இலங்கை 20-வது இடத்தில் உள்ளது.

கடந்த 5 ஆண்டுகளில் சுமார் 91 இலட்சம் இணையத்தளங்களுக்கு சைபர் தாக்குதல் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பொதுவாக உலகில் குழப்பமான காலப்பகுதிகளில் இவ்வாறான சைபர் தாக்குதல்கள் அதிகரிக்கும் போக்கு காணப்படுகிறது.

கடந்த கொவிட் பெருந்தொற்று காலத்திலும் ரஷ்யா – உக்ரைன் போரின் உச்சக்கட்டத்திலும் இது அவதானிக்கப்பட்டது.

தற்போது நிலவும் மத்திய கிழக்கு போர்ச் சூழலிலும் அத்தகைய போக்கு தென்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இந்த சைபர் தாக்குதல்களில் பல்வேறு குழுக்கள் ஈடுபடுகின்றன.

சில சமயங்களில் அரசியல் தேவைகளுக்காகவும் இன்னும் சில வேளைகளில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களாகவும் இவை இணையத்தில் பெருமளவில் இடம்பெறுகின்றன.

கடந்த காலங்களில் இலங்கையின் முக்கிய அரச இணையதளங்கள் சிலவற்றுக்கும் ஒரு வர்த்தக வங்கி, காப்பீட்டு நிறுவனம் மற்றும் முன்னணி ஆடைத் தொழிற்சாலை என்பவற்றுக்கும் இவ்வாறான பாதிப்புகள் ஏற்பட்டன.

அண்மையில் நிதியமைச்சில் 2.5 மில்லியன் ரூபாய் அந்நியச் செலாவணி மோசடி செய்யப்பட்டதைப் போன்றதொரு சம்பவம் இதற்கு முன்னர் இடம்பெற்றதில்லை என்று அவர் தெரிவித்தார்.

இலங்கையிலுள்ள பல நிறுவனங்கள் மிக அதிக விலை கொடுத்து தரவு பாதுகாப்பு முறைமைகளைப் (Data Protection Systems) பெற்றுக் கொண்ட போதிலும் அவற்றைச் சரியான முறையில் செயற்படுத்தி அபாயங்களைக் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை என்பது பல சந்தர்ப்பங்களில் அவதானிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

இலங்கை நிபுணர்கள் இந்த அச்சுறுத்தல்களை உடனடியாக அடையாளம் காண வேண்டும் என்றும் இந்த சைபர் அபாயங்களைக் குறைப்பதற்கு வலுவான வேலைத்திட்டமொன்றைத் தொடர்ச்சியாக முன்னெடுப்பது அத்தியாவசியமானது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குழந்தையை அடித்துக் கொலை செய்த தாயின் இரகசிய கணவன்!!

கம்பஹா, தெல்கொட பகுதியில் தாயின் திருமணத்திற்கு புறம்பான உறவால் வந்த கணவரால் குழந்தை ஒன்று கொலை செய்யப்பட்டதாக மீகஹாவத்த பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 23ஆம் திகதி காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. தெல்கொட, சியம்பலபெவத்த பகுதியைச் சேர்ந்த இரண்டு வயது குழந்தையே உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

மல்வன, உல்ஹிதிவல பகுதியைச் சேர்ந்த 49 வயது நபர் ஒருவர் இந்தக் கொலைச் சந்தேகத்தின் பேரில் பொலிஸார்களால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், அவர் அந்தப் பெண்ணுடன் திருமணத்திற்கு புறம்பான உறவில் இருந்ததாகவும் பொலிஸார் கூறுகின்றனர்.

விசாரணையின் போது, ​​குழந்தையின் தாய் வீட்டிலிருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் உள்ள கிணற்றுக்கு முகம் கழுவச் சென்றிருந்த போது, ​​குழந்தையின் அழுகையை தன்னால் தாங்க முடியவில்லை எனவும் அதனால் தாக்கியதாகவும் குழந்தை சுயநினைவை இழந்ததாகவும் சந்தேக நபர் கூறினார்.

தாய் முகம் கழுவ வீட்டிற்குத் திரும்பியபோது, ​​குழந்தை கீழே விழுந்து சுயநினைவை இழந்த நிலையில் காணப்பட்டுள்ளது.

இருவரும் சேர்ந்து குழந்தையை பியகம மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட போதே சிறுவன் உயிரிழந்து விட்டதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பின்னர், மருத்துவமனை அதிகாரிகள் இதுகுறித்து மீகஹவத்தை பொலிஸாருக்குத் தகவல் தெரிவித்தனர்.

மஹாரா பதில் நீதிபதி ஜி. கே. சமிந்த பத்திரானா 23ஆம் திகதி பிற்பகல் சம்பவ இடத்தைப் பார்வையிட்டு, பிரேதப் பரிசோதனைக்காக உடலை ராகம பொது மருத்துவமனையின் தலைமை மருத்துவப் பரிசோதகரிடம் ஒப்படைக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

போதைப்பொருள் குற்றத்திற்காக சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட இக்குழந்தையின் தந்தை, குழந்தை கொலை செய்யப்பட்ட மறுநாள் இதுபற்றி எதுவும் அறியாமல் வீட்டிற்கு வந்ததாகவும், சம்பவம் குறித்து அறிந்து குழந்தையின் உடலைப் பார்க்க ராகம மருத்துவமனைக்கு வந்ததாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

மல்வனவில் உள்ள உலஹிதிவல பகுதியைச் சேர்ந்த சந்தேக நபர் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு மே 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

 

ஜீப் வாகனம் மின் கம்பத்தில் மோதி விபத்து!!

இலங்கை மின்சார சபை காரியாலயத்தின் பாதுகாப்பு சுவரை உடைத்து ஜீப் வாகனம் ஒன்று மோதிய விபத்தில், அப்பகுதியில் பல மணிநேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக கந்தளாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்து இன்று(27.4.2026) அதிகாலை 4.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் ஜீப் வண்டியின் சாரதியும் அவருடன் இருந்த உதவியாளரும் உயிர் தப்பியுள்ளதுடன், எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை.

மணிக்கூட்டுக்கோபுரப் பகுதியிலிருந்து கித்துலுத்து நோக்கிப் பயணித்த பொரொலோ (Prado) ரக ஜீப் வாகனம், சாரதியின் நித்திரை கலக்கத்தால் வேகக் கட்டுப்பாட்டை இழந்து, மின்சார சபையின் சுற்றுமதிலை உடைத்துக்கொண்டு, அங்கிருந்த மின் கம்பத்தில் மோதியதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த விபத்தினால் இலங்கை மின்சார சபைக்கு சுமார் 2 இலட்சம் ரூபாவிற்கு மேற்பட்ட நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்தையடுத்து, கந்தளாய் நகரின் பல பகுதிகளில் பல மணிநேரம் மின்சாரம் தடைப்பட்டிருந்தது.

பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த மின்சார சபை பணியாளர்கள் மின்விநியோகத்தை சீரமைக்கும் பணிகளில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

இலங்கையில் மீண்டும் உச்சம் தொடும் தங்கத்தின் விலை!!

உலகச் சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, இலங்கையிலும் தங்கத்தின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. இன்று (27) உலகச் சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,725 டொலர்கள் வரை அதிகரித்துள்ளது.

இந்நிலையில் கடந்த வௌ்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில் இன்று (27) நாட்டில் தங்கத்தின் விலை சுமார் 2,000 ரூபாவினால் அதிகரித்துள்ளது.

கொழும்பு செட்டியார் தெருவின் இன்று காலை நிலவரப்படி, 22 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 365,200 ரூபாவாக அதிகரித்துள்ளது.

அதேநேரம் 24 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை, இன்று 397,000 ரூபாய் வரை அதிகரித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிளிநொச்சி மாணவியின் விபரீத முடிவால் துயரத்தில் உறவுகள்!!

கிளிநொச்சி ஜெயபுரம் பகுதியில் அமைந்துள்ள ஜெயபுரம் மகாவித்தியாலயத்தில் கல்வி கற்றுவரும் தரம் 11 மாணவி உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

மாணவியின் திடீர் மரணம், குடும்பத்தினரும், நண்பர்களும், ஆசிரியர்களையும் ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

குறித்த மாணவி விபரீத முடிவால் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது. மாணவியின் மரணம் பிரதேசத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

சகோதரனுக்காக உயிரை விட்ட பொலிஸ் அதிகாரி : புத்தாண்டு நிகழ்வில் கொடூரம்!!

வலஸ்முல்ல, போவல பகுதியில் நடைபெற்ற சித்திரை புத்தாண்டு விழாவின் இறுதியில் ஏற்பட்ட மோதலில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மாளிகாவத்தை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த, வலஸ்முல்ல பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

புத்தாண்டு விழா நடைபெற்ற இடத்தை சுத்தம் செய்துகொண்டிருந்த தனது சகோதரனை ஒரு குழுவினர் தாக்குவதாகக் கிடைத்த தகவலையடுத்து, அவர் தனது காரில் அந்த இடத்திற்குச் சென்றுள்ளார்.

அங்கு தனது சகோதரனைக் காப்பாற்ற முயன்றபோது, எதிர்த்தரப்பைச் சேர்ந்த ஒருவரால் மேற்கொள்ளப்பட்ட கூர்மையான ஆயுதத் தாக்குதலில் அவர் படுகாயமடைந்துள்ளார்.

இதனையடுத்து அவர் வலஸ்முல்ல ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மாத்தறை வைத்தியசாலைக்கும், அதன் பிறகு கராபிட்டிய போதனா வைத்தியசாலைக்கும் மாற்றப்பட்டார்.

இதன்படி, அங்குள்ள தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று (24) அவர் உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பாக வலஸ்முல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

அமெரிக்காவில் இலங்கை பெண்ணுக்கு திருமணமான ஒரு வருடத்தில் நேர்ந்த அவலம்!!

அமெரிக்காவில் சிலி பகுதியில் இடம்பெற்ற விபத்தொன்றில் இலங்கையை சேர்ந்த இளம் 29 வயது இளம் குடும்ப பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த திங்கட்கிழமை (20) மாலை 6.45 மணியளவில் ஸ்கொட்ஸ்வில் (Scottsville) வீதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

லொறி ஒன்று, முன்னால் சென்ற வாகனத்தை முந்த முற்பட்ட போது, குறித்த இலங்கை பெண் ஓட்டி சென்ற வாகனத்தின் மீது நேருக்கு நேர் மோதியுள்ளயுள்ளது.

இந்த விபத்தில் இளம் பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் அவருடன் காரில் பயணித்த மற்றுமொருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகயுள்ளது.

கடந்தாண்டு திருமணமாகி கணவனுடன் அமெரிக்கா சென்ற நிலையில் இந்த துயர சம்பவம் ஏற்பட்டுள்ளது.

குறித்த பெண்ணின் பூதவுடலை மீண்டும் இலங்கைக்கு கொண்டு வந்து இறுதிச் சடங்குகளைச் செய்வதற்காக, ரோசெஸ்டர் இலங்கை அமெரிக்க சங்கத்தினால் GoFundMe நிதியுதவித் திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது

ஊஞ்சல் ஆடிய பள்ளி மாணவி பரிதாபமாக பலி!!

கர்நாடக மாநிலம் ஷிவமொக்கா அருகே உள்ள ஒரு கிராமத்தில், கோடை விடுமுறையை மகிழ்ச்சியாகக் கழிக்க வந்த சிறுமி ஒருவரின் உயிர் ஊஞ்சல் விளையாட்டில் பிரிந்திருப்பது அந்தப் பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஷிவமொக்கா பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுமி ஒருவர், பள்ளி விடுமுறை என்பதால் தனது சித்தி வீட்டிற்கு வந்து தங்கியிருந்தார்.

நேற்று முன்தினம் (ஏப்ரல் 23) வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், அந்தச் சிறுமி சேலை அல்லது கயிற்றால் ஊஞ்சல் கட்டி விளையாடிக் கொண்டிருந்ததாகத் தெரிகிறது.

அப்போது எதிர்பாராத விதமாக ஊஞ்சல் கயிறு சிறுமியின் கழுத்தைச் சுற்றிக் கொண்டது. இதில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு அந்தச் சிறுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

சிறிது நேரம் கழித்து வந்து பார்த்த உறவினர்கள், சிறுமி மயங்கிய நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

ஆனால், சிறுமி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், இது விபத்தா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோடை விடுமுறையில் குழந்தைகள் வீடுகளில் விளையாடும்போது, குறிப்பாக ஊஞ்சல் மற்றும் உயரமான இடங்களில் விளையாடும்போது பெரியவர்கள் உடன் இருக்க வேண்டும் எனவும், பாதுகாப்பற்ற முறையில் ஊஞ்சல் கட்டுவதைத் தவிர்க்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

கோயில் விழாவில் நடனமாடியபடியே மயங்கி விழுந்து உயிரிழந்த பரதநாட்டியக் கலைஞர்!!

கலைக்காகவே வாழ்ந்த ஒரு கலைஞரின் உயிர், அவர் நேசித்த மேடையிலேயே பிரிந்த நெகிழ்ச்சியான மற்றும் துயரமான சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது.

கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்தவர் ஷைனி (52). புகழ்பெற்ற பரதநாட்டிய கலைஞரான இவர், கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி இரவு அங்குள்ள சிரைக்கல் பகவதி அம்மன் கோயில் திருவிழா நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

விழாவின் முக்கிய அங்கமாக நடந்த பரதநாட்டிய நிகழ்ச்சியில் ஷைனி மிகுந்த ஆர்வத்துடன் நடனமாடிக்கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக திடீரென மேடையிலேயே மயங்கி விழுந்தார்.

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த விழாக்குழுவினர் மற்றும் பொதுமக்கள், அவரை உடனடியாக மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட தீவிர சிகிச்சைப் பலனின்றி ஷைனி பரிதாபமாக உயிரிழந்தார்.

கலைப்பயணத்தின் உச்சத்தில் இருந்தபோதே மேடையிலேயே ஒரு கலைஞரின் உயிர் பிரிந்தது அந்தப் பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

“அவர் ஆடிக்கொண்டிருந்த போதே தெய்வம் அவரை அழைத்துக்கொண்டது” என சக கலைஞர்கள் கண்ணீர் மல்கத் தெரிவித்துள்ளனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. இது குறித்துக் கோழிக்கோடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பழிக்குப் பழி : மகள் கொலைக்கு காரணமானவரை வெட்டிச் சாய்த்த தந்தை!!

தஞ்சாவூரில் கடந்த நவம்பர் மாதம் காவியா என்ற ஆசிரியை அவர் காதலித்த அஜித்குமார் என்பவரால் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த அஜித்குமார்,

சமீபத்தில் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். அவர் வெளியே வந்த தகவலையறிந்த காவியாவின் தந்தை மற்றும் அவரது உறவினர்கள் கடும் ஆத்திரமடைந்து அவரை பழிவாங்க சமயம் பார்த்து காத்திருந்தனர்.

இந்நிலையில் ஜாமீனில் வந்த அஜித்குமாரை வழிமறித்த காவியாவின் தந்தை உள்ளிட்ட கும்பல், மறைத்து வைத்திருந்த அரிவாள்களால் அவரை சரமாரியாக வெட்டிச் சாய்த்தனர்.

இந்த பயங்கர தாக்குதலில் ரத்த வெள்ளத்தில் சரிந்த அஜித்குமார் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.

மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் நடந்த இந்த கொலைச் சம்பவம் தஞ்சை மாவட்ட மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த கொலைச் சம்பவம் தொடர்பாக காவியாவின் தந்தை உள்ளிட்ட 4 பேர் அம்மாபேட்டை காவல் நிலையத்தில் தற்போது சரணடைந்துள்ளனர். பழிக்குப் பழி வாங்கும் நோக்கில் இந்த கொலை அரங்கேற்றப்பட்டதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகளைக் கொன்றவனை சட்டத்தின் முன் நிறுத்துவதை விட நேரடி தண்டனை வழங்க தந்தை முடிவெடுத்தது அந்த பகுதியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஜிம்முக்குப் போவதாக கூறிய மனைவியை அடித்தே கொன்ற கணவன்!!

உத்தரப் பிரதேச மாநிலம் மொராதாபாத்தில், தினமும் உடற்பயிற்சிக் கூடத்திற்கு (Gym) செல்வது தொடர்பாக ஏற்பட்ட தகராறில், கணவன் தனது மனைவியை இரும்புக் கம்பியால் அடித்துக் கொலை செய்துள்ள கொடூர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மொராதாபாத் மாவட்டத்தின் கட்கர் பகுதியைச் சேர்ந்தவர் ஷோபித் குப்தா. இவரது மனைவி பூனம் குப்தா (35). பூனம் குப்தா தனது உடல் ஆரோக்கியத்தைப் பராமரிப்பதில் ஆர்வம் காட்டி வந்துள்ளார்.

இதற்காக அவர் தினமும் காலையில் ஜிம்மிற்குச் சென்று உடற்பயிற்சி செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

ஆனால், மனைவி ஜிம்மிற்குச் செல்வது கணவர் ஷோபித்திற்கு நீண்ட நாட்களாகப் பிடிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இது தொடர்பாக அவர்களுக்குள் அடிக்கடி வாக்குவாதங்கள் ஏற்பட்டு வந்துள்ளன.

கடந்த புதன்கிழமை காலை, பூனம் குப்தா வழக்கம் போல ஜிம்மிற்குச் சென்றுவிட்டு வீட்டிற்குத் திரும்பியுள்ளார்.

அப்போது ஷோபித் மீண்டும் அவரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரத்தைக் கட்டுப்படுத்த முடியாத ஷோபித், அங்கிருந்த இரும்புக் கம்பியை எடுத்து பூனத்தின் தலையில் பலமாகத் தாக்கினார்.

இந்தத் தாக்குதலில் பூனத்தின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் பீறிட்டது. மருத்துவ உதவி கிடைப்பதற்கு முன்னரே அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

சம்பவம் குறித்துத் தகவல் அறிந்து விரைந்து வந்த கட்கர் பகுதி போலீசார், பூனத்தின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மனைவியைக் கொலை செய்த கணவர் ஷோபித்தை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆரோக்கியத்தின் மீது அக்கறை கொண்ட ஒரு பெண், கணவனின் சந்தேகத்தாலும் ஆத்திரத்தாலும் உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.