எரிவாயு விநியோகத்தில் நிலவும் இந்த முறைகேடுகளைத் தவிர்க்க உடனடியாக QR குறியீட்டு முறையை அறிமுகப்படுத்த வேண்டும் என அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,
சர்வதேச ரீதியிலான போர்ச் சூழல் எமக்கு இன்னும் நேரடியாகப் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. நம்மிடம் உள்ள கையிருப்புகளைக் காட்டி முறையில் விலையை உயர்த்தும்போது, அது நுகர்வோரை நேரடியாகப் பாதிக்கின்றது.
நள்ளிரவில் விலையை உயர்த்துவதால், மறுநாள் காலை சந்தையில் உள்ள மருந்துகள் முதல் அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் எகிறுகின்றன.
அரசாங்கம் ஒன்றைச் செய்யும்போது, தனியார் துறையினரும் தன்னிச்சையாக விலைகளை உயர்த்தி இலாபம் ஈட்டுகின்றனர்.
எரிவாயு விநியோகத்தில் நிலவும் முறைகேடுகளைத் தவிர்க்க உடனடியாக QR குறியீட்டு முறையை அறிமுகப்படுத்த வேண்டும். இதன் மூலம் எரிவாயு நிறுவனங்களிடம் நுகர்வோர் தொடர்பான முறையான தரவுத்தளம் இருக்கும்.
சிலர் தவிக்கும் நிலையில், பலர் சிலிண்டர்களைச் பதுக்கி வைப்பது தடுக்கப்பட வேண்டும். பாடசாலை சிற்றுண்டிச்சாலைகளில் பிள்ளைகளுக்கு உணவு சமைக்கக் கூட இன்று எரிவாயு இல்லை.
சந்தைக்கு விடப்படும் ஒரு இலட்சம் சிலிண்டர்கள் 98 சதவீதமாவது உண்மையான நுகர்வோரைச் சென்றடைகிறதா என்பதை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும். அவ்வாறு இல்லையெனில் இது ஒரு பாரிய சமூக அநீதியாகும். இலாபம் ஈட்டுவதற்காக நுகர்வோரை வாட்டும் இந்தச் செயல்களைத் தடுப்பது அவசியமாகும்.
அரச வங்கியொன்றில் 2024ஆம் ஆண்டு இரு மோதிரங்களை அடகு வைத்த நபர் அதை மீட்பதற்கு இவ்வருடம் சென்றபோது வேறு மோதிரங்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். அட்டன் – டிக்கோயா நகரசபைக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள வங்கி ஒன்றில் இச்சமபவம் இடம்பெற்றுள்ளது.
மோதிரங்கள் வேறு நபரிடம் மாறிச் சென்றுள்ளதை அறிந்துகொண்ட வங்கி அதிகாரிகள் அவற்றைப் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகளில் இறங்கியிருப்பதாகத் தெரியவந்துள்ளது. சம்பவம் குறித்து தெரியவருவதாவது,
டிக்கோயா பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் 2024 ஜனவரி 30ஆம் திகதி தனதும் தனது மனைவியினதும் மோதிரங்களை அரச வங்கியொன்றில் அடகுவைத்து பணம் பெற்றுள்ளார். பின்பு ஒரு வருடம் கழித்து அதற்கான வட்டித்தொகையை கடந்த வருடம் பெப்ரவரி மாதம் செலுத்தியுள்ளார்.
தனது இரு மோதிரங்களையும் மீட்பதற்காக இவ்வருடம் பெப்ரவரி மாதம் 26ஆம் திகதி மேற்படி வங்கிக்கு சென்றுள்ளார். மொத்த கொடுப்பனவை செலுத்திய பின்னர் வங்கி அடகு நகை பெட்டகத்திலிருந்து மோதிரங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
மோதிரங்களை அவதானித்தவர் அதிர்ச்சியடைந்து அவை தான் அடகுவைத்த மோதிரங்கள் அல்ல என ஊழியர்களுக்கு தெரியப்படுத்தினார்.
அது குறித்து வங்கி அதிகாரியிடம் தெரிவித்ததையடுத்து நிலைமையை உணர்ந்துகொண்ட வங்கி முகாமையாளர் ஒரு வாரம் கழித்து வரும்படியும் மோதிரங்களை பெற்றுக்கொள்ளலாம் என்றும் கூறியுள்ளார்.
இதனையடுத்து தான் செலுத்திய பணத்தையும் அவர் மீளப்பெற்றுக்கொண்டுள்ளார். எனினும் ஒரு வாரம் கழித்து அவர் சென்றபோதும் அவருக்கு மோதிரங்கள் கிடைக்கவில்லை. இதையடுத்து அவர் அட்டன் பொலிஸ் தலைமை காரியாலயத்துக்கு முறைப்பாடு ஒன்றை செய்வதற்காக சென்றுள்ளார்.
சம்பவத்தை செவிமடுத்த பொலிஸ் அதிகாரி இது குறித்து வங்கியின் பாதுகாப்பு கமராவை சோதனை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.
அவர் முறைப்பாட்டை பதிவு செய்யாமல் இரு நாட்கள் கழித்து மீண்டும் வங்கிக் கிளைக்கு சென்ற போது அவரது மோதிரம் வேறு ஒரு நபருக்கு தவறுதலாக சென்று விட்டதாகவும் அவரை தொடர்பு கொண்டு அதை மீண்டும் கொண்டு வந்து தரும்படி தகவல் அனுப்பியுள்ளதாகவும் வங்கி முகாமையாளர் தெரிவித்துள்ளார்.
தான் அடகுவைத்த இரண்டு மோதிரங்களின் எடை 5.30 கிராம் என்று கூறும் குறித்த நபர், வங்கி முகாமையாளர் ஒரு மோதிரமே அடகு வைக்கப்பட்டதாக ஒரு கட்டத்தில் கூறியதாகவும் இது தொடர்பில் தான் மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பதாகவும் மோதிரங்கள் கிடைக்காவிட்டாலும் அதன் எடைக்கேற்ப தற்போதைய சந்தை விலைப் பெறுமதியை எதிர்பார்த்துள்ளதாகவும் தெரிவிக்கின்றார்.
இந்நிலையில் பாதுகாப்பாக இருக்கும் என அரச வங்கியில் அடகு வைத்த நகை மாரிப்போயுள்ள சம்பவம், ஊழிஅயகளின் மெத்தனத்தை காட்டுவதாக பலல்ரும் விசனம் வெளியிட்டுள்ளனர்.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியிலும், இன்றைய தினம் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இதற்கமைய, உலக சந்தையில் இன்றைய தினம் ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 5,072.20 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.
இலங்கை நகை வியாபாரிகள் சங்கத்தின் உத்தியோகபூர்வ தரவுகளின்படி, நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று தங்கத்தின் விலையில் வீழ்ச்சியில் பதிவாகியுள்ளது.
நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் 24 கரட் தங்கம் ஒரு பவுன் தங்கத்தின் விலை 2,000 ரூபாவினால் குறைந்துள்ளது. அதன்படி, 24 கரட் தங்கம் ஒரு பவுனின் விலை 410,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.
மேலும், நேற்றைய தினம் 381,000 ரூபாவாக காணப்பட்ட 22 கரட் தங்கம் ஒரு பவுன் 1,800 ரூபாவினால் குறைந்துள்ளது. அதன்படி, 22 கரட் தங்கம் ஒரு பவுனின் விலை 379,200 ரூபாவாக பதிவாகியுள்ளது.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியிலும், இன்றைய தினம் உள்நாட்டு தங்கச் சந்தையில் விலை வீழ்ச்சியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
பண்டிகைக் காலத்தில் இணைய விளம்பரங்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு இலங்கை கணினி அவசரகால பதிலளிப்பு மன்றம் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
கடந்த இரண்டு மாதங்களில் பல இணைய மோசடி சம்பவங்கள் இலங்கை கணினி அவசரகால பதிலளிப்பு மன்றத்திற்கு கிடைத்துள்ளதாக மூத்த தகவல் பாதுகாப்பு பொறியாளர் சாருகா தமுனுபொல தெரிவித்தார்.
பண்டிகைக் காலத்தில், குறிப்பாக தமிழ், சிங்கள புத்தாண்டுக் காலத்தில், தள்ளுபடிகள், பரிசுகள் அல்லது சிறப்பு விளம்பரங்களாக போலி விளம்பரங்கள் மற்றும் இணைப்புகள் ஒன்லைனில் பரவும் அபாயம் அதிகம் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.
பயனர்கள் தங்கள் தனிப்பட்ட தகவல்களையும் முக்கியமான தரவையும் திருட இது போன்ற இணைப்புகள் மூலம் போலி வலைத்தளங்களுக்கு வழிநடத்தப்படும் அபாயம் இருப்பதாகவும் அவர் வலியுறுத்தினார்.
வெசாக் மற்றும் பொசன் பண்டிகைகளின் போது, பொசன் டேட்டா தன்சல போன்ற பல்வேறு பெயர்களில் பயனர்களின் தனிப்பட்ட தகவல்களைப் பெறுவதற்கான மோசடி முயற்சிகளும் இடம்பெறும் என அவர் குறிப்பிட்டார்.
அதற்கமைய, அங்கீகரிக்கப்படாத இணைப்புகள் அல்லது இணையம் வழியாகப் பெறப்படும் விளம்பரங்களை அணுகும்போது எச்சரிக்கையாக இருக்குமாறு இலங்கை கணினி அவசரகால பதிலளிப்பு மன்றம் பொதுமக்களை வலியுறுத்துகிறது.
சமகால நெருக்கடியை எதிர்கொண்டு உலகின் பல நாடுகள் வீட்டிலிருந்து வேலை செய்யும் முறையை நாடியுள்ளன.
இந்நிலையில் அதனை இலங்கையில் செயல்படுத்த வேண்டிய அவசியமில்லை என வர்த்தக, வணிக மற்றும் கூட்டுறவு அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் இதுபோன்ற நடவடிக்கைகள் தேவைப்பட்டால், அது குறித்து கவனம் செலுத்தப்படும் என அவர் கூறியுள்ளார். எரிசக்தியைப் பாதுகாத்து மக்கள் முன்னேறக்கூடிய சூழலை உருவாக்க அரசாங்கம் பாடுபடும் என அவர் கூறினார்.
சப்புகஸ்கந்த மற்றும் முதுராஜவெலவில் எரிவாயு கிடங்கு ஒன்றை நிர்மாணிக்கவும் எண்ணெய் தொட்டிகளை நிர்மாணிக்கவும், திருகோணமலையில் பத்து எண்ணெய் தொட்டிகளை நவீனமயமாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
தற்போதைய நெருக்கடி சூழ்நிலை காரணமாக, உலக சந்தையில் விலை உயர்வு காரணமாக இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலையில் நுகர்வோர் அதிகரிப்பை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று அமைச்சர் கூறியுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி உட்பட முரண்பட்ட நாடுகளின் தலைவர்கள் எடுக்கும் முடிவுகளுக்கு ஏற்ப எரிபொருள் விலைகள் மாறும் என்று அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
இலங்கை விண்ணப்பம் செய்துள்ள 4 எரிபொருள் கப்பல்களும், 6 லிட்ரோ எரிவாயு கப்பல்களும் இந்த மாதத்திற்குள் நாட்டை வந்தடையவுள்ளதாக பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருணா தெரிவித்துள்ளார்.
தற்போது சேமிப்பு வசதிகள் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் உள்ளது. எனினும் மார்ச் மாதத்திற்கான விநியோகம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் அடுத்த மாதம் இறுதி வரை போதுமான அளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளதால் பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை என அவர் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கைக்கு எரிபொருளை ஏற்றுமதி செய்யும் நாடுகள் போர் வலயத்திற்கு வெளியே அமைந்துள்ளதால், விநியோகத்தை தடையின்றி முன்னெடுத்துச் செல்ல முடிந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, 38,000 மெட்ரிக் தொன் எரிவாயுவை ஏற்றிய கப்பல் அமெரிக்காவிலிருந்து மாலைத்தீவு வரை ஏற்கனவே வந்தடைந்துள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தத் தொகுதி அடுத்த சில நாட்களில் இலங்கையை வந்தடையும் என அதன் தலைவர் சன்ன குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.
மேலும், விண்ணப்பம் செய்யப்பட்ட மற்றுமொரு 33,000 மெட்ரிக் தொன் எரிவாயு கொண்ட கப்பல் மார்ச் 17ஆம் திகதி மாலைத்தீவை வந்தடையவுள்ளது.
ஏப்ரல் மாதத்திலும் மற்றுமொரு எரிவாயு கப்பல் இலங்கைக்கு வரவுள்ளதாக லிட்ரோ நிறுவனத் தலைவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
உள்ளூர் சந்தையில் மரக்கறி எண்ணெய் மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட எண்ணெய்களுக்கு கடுமையான பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக பேக்கரிகள் மற்றும் சிற்றுண்டி உணவு உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தற்போதுள்ள பற்றாக்குறையின் அடிப்படையில், சந்தையில் மரக்கறி எண்ணெயின் விலையை ஒரு லீற்றருக்கு சுமார் 100 ரூபாய் அதிகரிக்க வணிகர்கள் நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இறக்குமதி செய்யப்பட்ட எண்ணெய் பற்றாக்குறையுடன், உள்ளூர் சந்தையில் தேங்காய் எண்ணெயின் விலையும் ஒரு லீற்றர் சுமார் 100 ரூபாய் அதிகரித்துள்ளதாக பேக்கரிகள் மற்றும் சிற்றுண்டி உணவு உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டு காலத்தில் தேங்காய் எண்ணெயின் விலை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.
இறக்குமதி செய்யப்பட்ட எண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெயின் விலை அதிகரித்திருந்தாலும், சந்தையில் மீன் மற்றும் தேங்காயின் விலை இன்னும் குறைவாகவே உள்ளது என்று அவர்கள் கருதுகின்றனர்.
எனினும் தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, அடுத்த சில நாட்களில் தேங்காய் விலையும் அதிகரிக்கக்கூடும் என வணிகர்கள் தெரிவித்தனர்.
மரக்கறி எண்ணெய் உட்பட இறக்குமதி செய்யப்பட்ட எண்ணெய்கள் 04 முக்கிய நிறுவனங்களால் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
பிலியந்தலை – கொரகபிட்டிய பகுதியில் அமைந்துள்ள தனியார் அச்சு நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர், அச்சு இயந்திரத்தில் தலை சிக்கி விபத்துக்குள்ளானதில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
தெனியாய, பல்லேகம பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய மிலிந்த மதுசங்க விஜேசிங்க என்ற திருமணமான இளம் குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
உயிரிழந்தவரின் மனைவியும் அதே நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றார் என்று தெரிவிக்கப்படுகின்றது.
இந்தச் சம்பவம் குறித்து தெரியவருவதாவது: நேற்றுமுன்தினம்(11), உயிரிழந்த இளைஞர் மற்றொரு ஊழியருடன் இணைந்து இயந்திரத்தின் தினசரிப் பணிகளில் ஈடுபட்டுள்ளார்.
இதன்போது இயந்திரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு ஒன்றைச் சரிபார்ப்பதற்காக மற்றைய ஊழியர் ஒருபுறமாக இயந்திரத்துக்குள் தலையை நுழைத்துள்ளார்.
அதேநேரம் மிலிந்தவும் இயந்திரத்தின் மறுபுறமாகத் தலையை நுழைத்துச் சரிபார்க்க முயன்றுள்ளார். அவ்வேளையில், அச்சு இயந்திரம் எதிர்பாராத விதமாகத் தானாகவே இயங்கத் தொடங்கியுள்ளது.
இதில் மிலிந்தவின் தலை இயந்திரத்தினுள் சிக்கிப் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளது. இரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை ஏனைய ஊழியர்கள் மீட்டு உடனடியாக ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.
ஹோமாகம மரண விசாரணை அதிகாரி சிந்தக உதய குமார சம்பவ இடத்துக்கு வருகை தந்து முதற்கட்ட விசாரணைகளை முன்னெடுத்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பில் பிலியந்தலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கையில் தங்க நகைகள், பணம் உள்ளிட்ட பெறுமதியான சொத்துக்கள் வைத்திருப்பவர்களுக்கு பொலிஸார் அவசர எச்சரிக்கையை வழங்கியுள்ளனர்.
அந்த வகையில் நாட்டில் அண்மைக்காலமாக வீட்டுப் பணியாளர்களினால் திருடும் சம்பவங்கள் அதிகளவில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து, பொதுமக்களுக்கு பொலிஸார் அவசர பாதுகாப்பு ஆலோசனைகளை வழங்கியுள்ளனர்.
வீடுகளில் வேலைக்கு அமர்த்தப்படும் பணியாளர்கள், அந்த வீடுகளில் உள்ள தங்க நகைகள், பணம், வெளிநாட்டு நாணயம் மற்றும் ஏனைய பெறுமதியான சொத்துக்களைத் திருடிச் செல்வதாகப் பல முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
முகவர் நிலையங்கள் அல்லது இடைத்தரகர்கள் ஊடாகவோ அல்லது நேரடியாகவோ வேலைக்குச் சேரும் நபர்கள், இவ்வாறான கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபடுவது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
எனவே, வீட்டுப் பணியாளர்களை வேலைக்கு அமர்த்தும் போது அவர்களது தேசிய அடையாள அட்டை, பொலிஸ் நடத்தைச் சான்றிதழ் என்பவற்றைப் பெறுவதுடன், குடும்ப உறுப்பினர்களின் விபரங்களையும் சரிபார்க்குமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும், நகை மற்றும் பணத்தைப் பாதுகாப்பான இடங்களில் வைக்குமாறும், பணியாளர்களை வீடுகளில் தனியாக விட்டுச் செல்வதைத் தவிர்க்குமாறும், புதிய பணியாளர்கள் குறித்த விபரங்களை அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் அறிவிக்குமாறும் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.
நாடு முழுவதும் நிலவும் லிட்ரோ மற்றும் லாஃப் எரிவாயு பற்றாக்குறை மேலும் மோசமடைந்து வருவதாக மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், பதிவு செய்யப்பட்ட எரிவாயு இருப்புக்கள் பெறப்பட்டு வருவதாகவும் லிட்ரோ மற்றும் லாஃப் எரிவாயு நிறுவன அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இதற்கிடையில், கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, குருநாகல் மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் எரிவாயு பற்றாக்குறை கடுமையாக இருப்பதாக மேலும் தெரிவித்துள்ளனர்.
அதன்படி, லாஃப் எரிவாயுக்கு இன்னும் கடுமையான பற்றாக்குறை இருப்பதாகவும் நுகர்வோர் தெரிவித்து வருகின்றனர்.
இருப்பினும், மக்கள் அதிகளவில் எரிவாயுவை வாங்குவதனால் சில பகுதிகளில் கடுமையான எரிவாயு பற்றாக்குறை நிலவி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
தற்போது பல உணவகங்கள், ஹோட்டல்கள் மற்றும் வீடுகளில் லிட்ரோ மற்றும் லாஃப் ஆகிய இரண்டு நிறுவனங்களின் எரிவாயு சிலிண்டர்கள் இருப்பதாகவும், நுகர்வோர் இரண்டையும் வாங்க நடவடிக்கை எடுப்பதால் பற்றாக்குறை மேலும் மோசமடைந்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
இலங்கையில் கடந்த ஐந்து ஆண்டுகளில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி மற்றும் இயற்கை அனர்த்தங்கள் காரணமாக, உணவுப் பாதுகாப்பு மற்றும் வறுமை நிலைமை முன்னெப்போதும் இல்லாத வகையில் மோசமடைந்துள்ளதாக சர்வதேச ஆய்வறிக்கை எச்சரித்துள்ளது.
சர்வதேச உணவுக் கொள்கை ஆராய்ச்சி நிறுவனம் (IFPRI) வெளியிட்டுள்ள தரவுகளின்படி, 2019 முதல் 2025 வரையிலான காலப்பகுதியில் பண வறுமை (Monetary Poverty) மூன்று மடங்கு அதிகரித்துள்ளது.
நாட்டின் 18 சதவீத மக்கள் பண வறுமையிலும், 25 சதவீதத்தினர் அடிப்படை வசதிகள் அற்ற பல பரிமாண வறுமையிலும் (Multidimensional Poverty) வாடுகின்றனர்.
சுமார் 33 சதவீத குடும்பங்கள் மிதமான அல்லது கடுமையான உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்கொள்கின்றன. குறிப்பாக ‘டிட்வா’ (Cyclone Ditwah) சூறாவளித் தாக்குதலுக்குப் பிறகு இந்தப் பாதிப்பு மேலும் தீவிரமடைந்துள்ளது.
40 சதவீதத்திற்கும் அதிகமான குடும்பங்கள் கடனில் மூழ்கியுள்ளன. இதில் பெரும்பாலானோர் அந்தக் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத நிலையில் இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். நீர் பாதுகாப்பின்மை (Water Insecurity) ஊவா மாகாணத்தில் மிக அதிகமாக (24%) பதிவாகியுள்ளது.
இது வடக்கு மாகாணத்தை விட இரண்டு மடங்கு அதிகமாகும். வசதி குறைந்த குடும்பங்களே இத்தகைய நீர் தட்டுப்பாட்டால் அதிகம் பாதிக்கப்படுவதாக சர்வதேச நீர் மேலாண்மை நிறுவனம் (IWMI) சுட்டிக்காட்டியுள்ளது.
சமீபத்திய வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் 2 மில்லியன் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 2 லட்சம் பேர் இடம்பெயர்ந்துள்ளதோடு, வாழ்வாதாரங்கள் மற்றும் உள்கட்டமைப்புகள் கடுமையாகச் சிதைந்துள்ளன.
தமிழகத்தில் செங்கல்பட்டு மாவட்டத்தில் கூடுவாஞ்சேரி அருகே கன்னிவாக்கம் பகுதியில் வசித்து வரும் தம்பதி பார்த்திபன், ஜெயசித்ரா . இவர்களுக்கு ஜெயஸ்ரீ என்ற இரண்டரை வயது பெண் குழந்தை உள்ளது.
இவர் வழக்கம் போல் நேற்று இரவும் பணி முடித்து கொசுவர்த்தி ஏற்றி வைத்துவிட்டு தூங்கச் சென்றனர். நள்ளிரவில் இந்த கொசுவர்த்தி சுருள் துணி அல்லது எளிதில் தீப்பற்றக் கூடிய பொருளின் மீது விழுந்து திடீர் தீவிபத்து ஏற்பட்டது.
இதனையடுத்து தீ வேகமாக பரவி மளமளவென பற்றி எரியத் தொடங்கியது. தூக்கத்தில் இருந்து விழித்த தம்பதிகளுக்கு தீவிபத்தால் மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது.
இதில் பார்த்திபன், ஜெயசித்ரா மற்றும் குழந்தை ஜெயஸ்ரீ ஆகிய மூவரும் பரிதாபமாக உயிரிழந்ததாக அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகியுள்ளன. இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சேலம் மாவட்டத்தில் மேச்சேரி பகுதியில் வசித்து வருபவர் முருகன். இவரது மனைவி சுசீலா. தம்பதியர் இருவரும் திடீரென தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேச்சேரி ஓமலூரான் தெருவை சேர்ந்த முருகன் மற்றும் அவரது மனைவி சுசீலா இருவரும் வீட்டிலேயே பட்டு நெசவு தொழில் செய்து வந்தனர்.
திருமணம் ஆனது 30 ஆண்டுகளுக்கும் மேலாகியும் அவர்களுக்கு குழந்தைகள் இல்லை. இதனால் இருவரும் நீண்ட நாட்களாக மன வருத்தத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் குழந்தை இல்லாத ஏக்கத்தில் இருவரும் பூச்சிக்கொல்லி மருந்து குடித்து தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மேச்சேரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பெங்களூரு ஹென்னூர் பகுதியில் 27 வயது இளம்பெண் சுப்ரிதா மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம், தற்போது கொலை வழக்காக உருவெடுத்துள்ளது. தலைமறைவாக உள்ள கணவரைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
சிக்கபள்ளாப்பூர் மாவட்டம் ஷிட்லகட்டா பகுதியைச் சேர்ந்த சுப்ரிதாவிற்கும் (27), பெங்களூருவில் தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் கிரண் குமார் என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
இவர்களது திருமண வாழ்க்கை ஆரம்பத்தில் மகிழ்ச்சியாக இருந்த நிலையில், கடந்த சில மாதங்களாக வரதட்சணை கொடுமை தலைதூக்கியதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று காலை சுப்ரிதா தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாக அவரது பெற்றோருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால், பெற்றோர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது அதிர்ச்சியில் உறைந்து போயினர்.
சுப்ரிதா தூக்கில் தொங்குவதாகச் சொல்லப்பட்ட நிலையில், அவரது உடல் படுக்கையில் கிடத்தப்பட்டிருந்தது. “என் மகள் தூக்கில் தொங்கவில்லை.
அவர் விஷம் கொடுத்து அல்லது பலமான ஆயுதத்தால் தாக்கிக் கொலை செய்யப்பட்டுள்ளார்” எனச் சுப்ரிதாவின் பெற்றோர் கதறியபடியே இது குறித்து புகார் தெரிவித்தனர்.
சுப்ரிதாவின் உடலில் காயங்கள் இருந்ததாகவும், உண்மையை மறைக்கத் தற்கொலை நாடகம் ஆடுவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்தச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்ததில் இருந்து சுப்ரிதாவின் கணவர் கிரண் குமார் மாயமாகியுள்ளார். அவரது செல்போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளது. அவர் வீட்டில் இல்லாதது போலீசாருக்கு அவர் மீதுள்ள சந்தேகத்தை வலுப்படுத்தியுள்ளது.
புதிய வாகனம் வாங்குவதற்காகத் தனது பெற்றோரிடம் பணம் கேட்டு வருமாறு சுப்ரிதாவை கிரண் குமார் தொடர்ந்து வற்புறுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது.
உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் சுப்ரிதா கடுமையாகத் துன்புறுத்தப்பட்டதாக அவரது உறவினர்கள் ஹென்னூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இந்நிலையில் இந்த வழக்கில், தற்போது பல அதிரடி திருப்பங்கள் ஏற்பட்டுள்ளன. தப்பியோடிய கணவர் கிரண் குமாரை பிடிப்பதற்காகப் போலீசார் மூன்று தனிப்படைகளை அமைத்துள்ளனர்.
பி.ஆர்.அம்பேத்கர் மருத்துவமனையில் இன்று நடத்தப்பட்ட முதற்கட்ட உடற்கூறு ஆய்வில், சுப்ரிதாவின் கழுத்தில் நகக்கீறல்கள் மற்றும் பலமான காயங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது தற்கொலை அல்ல, ‘மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழப்பு’ என மருத்துவர்கள் சந்தேகிக்கின்றனர்.
தலைமறைவாக உள்ள கிரண் குமாரின் செல்போன் சிக்னல் கடைசியாகத் தமிழக-கர்நாடக எல்லையான ஓசூர் பகுதியில் காட்டியுள்ளது. அங்கிருந்து அவர் கேரளா அல்லது ஆந்திராவுக்குத் தப்பிச் சென்றிருக்கலாம் எனப் போலீசார் கருதுகின்றனர்.
சுப்ரிதாவின் அறையில் இருந்து அவரது கைப்பட எழுதிய டைரி ஒன்றை போலீசார் கைப்பற்றியுள்ளனர். அதில், “என்னால் இனி இந்தத் துன்பத்தைப் பொறுக்க முடியாது.
வண்டி வாங்க என் அப்பாவிடம் பணம் கேட்கச் சொல்லி தினமும் என்னை அடிக்கிறார்கள்” என உருக்கமாக எழுதியுள்ளது தெரியவந்துள்ளது.
வரதட்சணை கொடுமை மற்றும் கொலைக்குத் தூண்டுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் கிரண் குமாரின் பெற்றோர் (சுப்ரிதாவின் மாமனார், மாமியார்) இன்று மாலை போலீசாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
சுப்ரிதாவிற்கு நியாயம் கேட்டு ஹென்னூர் காவல் நிலையத்தை இன்று மதியம் அவரது உறவினர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் முற்றுகையிட்டனர். இதனால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்துப் பாதிப்பு ஏற்பட்டது.
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கார் – முச்சக்கர வண்டி விபத்தில் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் இருவர் உள்ளிட்ட 5 பேர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இலங்கைக்கு சுற்றுலா வந்துள்ள பிரான்ஸ் நாட்டை சேர்ந்த 67 மற்றும் 70 வயதுடைய இருவர் வாடகைக் கார் ஒன்றில் மண்கும்பான் பகுதியில் பயணித்துக்கொண்டிருந்த வேளை அவர்களின் காருக்கு எதிரே வந்த முச்சக்கரவண்டியில் மோதி விபத்துக்குள்ளானது.
அதன்போது காரில் பயணித்த பிரான்ஸ் நாட்டவர்கள் இருவர் மற்றும் கார் சாரதி, முச்சக்கர வண்டியில் பயணித்த இருவர் ஆகிய ஐவரும் படுகாயமடைந்த நிலையில் அங்கிருந்து மீட்கப்பட்டு, யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்விபத்துச் சம்பவம் தொடர்பில் ஊர்காவற்றுறை பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.
சுவிட்சர்லாந்தில் பேருந்தில் தீ பரவி ஏற்பட்ட விபத்தில் இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட இளைஞன் ஒருவரும் உயிரிழந்துள்ளார். இந்த விடயத்தை, உயிரிழந்த இளைஞனின் உறவினர்கள், சூரியன் செய்திச் சேவைக்கு உறுதிப்படுத்தினர்.
விபத்தில் உயிரிழந்த 5 பேரில், யாழ்ப்பாணம் இணுவில் பகுதியைப் பூர்வீகமாகக் கொண்ட, 30 வயதான இளைஞனும் அடங்கியுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
சுவிட்சர்லாந்து ஜனாதிபதி, உயிரிழந்தவர்களுக்கான இறுதி அஞ்சலியைச் செலுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த சம்பவம், விபத்தா, அல்லது பயங்கரவாத தாக்குதலா என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக , குறித்த பேருந்தில் பயணித்த ஒருவர் தனக்கு தானே தீ மூட்டிக்கொண்டுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இதன்போது, 6 பேர் உயிரிழந்துள்ளதுடன், 5 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேற்கு சுவிட்சர்லாந்தின் ப்ரிபோர்க் மாகாணத்தில் கெர்சர்ஸ் நகரில் பயணிகளை ஏற்றிக்கொண்டு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென பஸ்சில் புகை மூட்டமாக காட்சி அளித்தது.
பிறகு பஸ்சில் இருந்த பயணிகள் அனைவரும் வெளியேற முயன்ற போது, தீ மள மளவென பற்றி எரியத் தொடங்கியதாக சுவிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.