கொழும்பில் உணவகமொன்றில் அதிகாலை ஏற்பட்ட தீ விபத்து : மூவர் உயிரிழப்பு : மற்றுமொருவர் வைத்தியசாலையில் அனுமதி!!

புதிய இணைப்பு : கொழும்பு – தலவத்துகொட பகுதியில் உள்ள உணவகமொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த மூவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தீ விபத்தில் காயமடைந்த நான்கு பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில், அவர்களில் மூவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை (09) குறித்த உணவகத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதுடன், தீயை அணைப்பதற்காக கோட்டை மாநகர சபைக்குச் சொந்தமான 03 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இருப்பினும், எரிவாயு கசிவின் காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

முதலாம் இணைப்பு : கொழும்பு – தலவத்துகொட பகுதியில் உள்ள உணவகமொன்றில் இன்று காலை (09) திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை கட்டுப்படுத்த மூன்று தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் காரணமாக நான்கு பேர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் எரிவாயு கசிவின் காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இருப்பினும், தீ விபத்துக்கான உண்மையான காரணம் இன்னும் கண்டறியப்படாத நிலையில், தலவத்துகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர் சரிவில் இலங்கை ரூபாவின் பெறுமதி : இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட தகவல்!!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று (09) தினசரி நாணய மாற்று விகித அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 332.38 ரூபாவாகவும், விற்பனை விலை 342.08 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

கடந்த 03ஆம் திகதிக்குப் பின்னரான ஒரு வார காலப்பகுதியில், அமெரிக்க டொலருக்கான கொள்வனவு மற்றும் விற்பனை விலைகள் அதிகூடிய அளவை எட்டியுள்ள நாள் இன்றாகும் என மத்திய வங்கியின் தரவுகள் தெரிவிக்கின்றன.

இதன் மூலம், அண்மைய நாட்களில் அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்ந்து அழுத்தத்திற்குள்ளாகி வருவதை அவதானிக்க முடிகின்றது.

வவுனியாவில் சொல்லிசைப் பாடகர் சங்கீதனை உடனடியாக விடுவிக்கக் கோரி கலைஞர்கள், பொதுமக்கள் மாபெரும் ஆர்ப்பாட்டம்!!

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள பிரபல சொல்லிசைப் (Rap) பாடகர் சங்கீதனை எவ்வித நிபந்தனையுமின்றி உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி, வவுனியாவில் இன்று (08.06.2026) கண்டன கவனயீர்ப்புப் போராட்டம் மற்றும் பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா பழைய பேருந்து நிலையப் பகுதியில் ஆரம்பமான இப்போராட்டத்தை வவுனியா மாவட்ட கலைஞர்கள் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்திருந்தனர். இதில் அரசியல் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள், கலைஞர்கள் மற்றும் பெருந்திரளான பொதுமக்கள் கலந்துகொண்டு தங்களது பலத்த எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.

பழைய பேருந்து நிலைய பகுதியில் திரண்ட போராட்டக்காரர்கள், அங்கிருந்து கோஷங்களை எழுப்பியவாறு வவுனியா மணிக்கூட்டு கோபுரச் சந்தி வரை பேரணியாகச் சென்றனர். பின்னர் மீண்டும் போராட்ட இடத்தை வந்தடைந்து தமது கவனயீர்ப்புப் போராட்டத்தைத் தொடர்ந்தனர்.

கைது நடவடிக்கைக்குக் கண்டனம் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியிருந்தனர். குறிப்பாக அமைச்சர் சந்திரசேகரன் சொன்னால் இனிக்கும், சங்கீதன் சொன்னால் புளிக்குதோ?,

கலைஞர்களுக்கும் கைவிலங்கோ?, பாடுவதும் ஆடுவதும் பயங்கரவாதமா? போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தி, அரசாங்கத்திற்கும் பொலிஸாருக்கும் எதிராகக் கோஷங்களை எழுப்பினர்.

போராட்டத்தின் போது கருத்துத் தெரிவித்த ஏற்பாட்டாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள், இந்நாட்டில் கருத்துச் சுதந்திரமும், கலைஞர்களின் உரிமைகளும் மிக மோசமான முறையில் நசுக்கப்பட்டு வருவதாகக் கவலை வெளியிட்டனர்.

ஒரு கலைஞன் சமூக அவலங்களை பாடுவதும் ஆடுவதும் பயங்கரவாதச் செயலாகாது. கலைஞர்கள் மீதான இத்தகைய அடக்குமுறைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். பாடகர் சங்கீதன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் கைவிடப்பட்டு, அவர் உடனடியாகவும் நிபந்தனையின்றியும் விடுதலை செய்யப்பட வேண்டும்” என அவர்கள் வலியுறுத்தினர்.

தனுஷ்கோடியில் 62 ஆண்டுகளுக்குப் பிறகு வெளிப்பட்ட தரைப்பாலம் : ஆச்சர்யத்தில் மக்கள்!!

தமிழ்நாட்டின் தனுஷ்கோடி பகுதியில்,கடலில் மூழ்கியிருந்த தரைப்பாலத்தின் ஒரு பகுதி, 62 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வெளிப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

1964ஆம் ஆண்டு ஏற்பட்ட கடும் புயலின் தாக்கத்தால் மூடியிருந்த பாலமீ தற்போது வெளிப்பட்டுள்ளதாக கூரப்படுகின்றது. பல தசாப்தங்களுக்கு பிறகு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தரைப்பாலம்

இந்நிலையில், பல தசாப்தங்களுக்கு பிறகு அந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தரைப்பாலம் மீண்டும் வெளிப்பட்டிருப்பது அப்பகுதி மக்களிடமும் சுற்றுலாப் பயணிகளிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

முகுந்தராயர் சத்திரம் கடற்கரை பகுதியில் ஏற்பட்ட மண் அரிப்பு காரணமாக, நீண்ட காலமாக கடலுக்குள் மறைந்திருந்த அந்த பாலத்தின் பகுதி தற்போது மீண்டும் தென்படத் தொடங்கியுள்ளது.

1964ஆம் ஆண்டின் பெரும் புயல் காரணமாக தனுஷ்கோடி நகரம் கடுமையாக சேதமடைந்ததுடன், பல கட்டிடங்கள் மற்றும் அடிப்படை அமைப்புகள் கடலில் மூழ்கியிருந்தன.

தற்போது அந்த பகுதியை பார்வையிட சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வருகை தருவதாகவும், விரைவில் தொல்லியல் துறை ஆய்வாளர்கள் இதனை ஆய்வு செய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், கடலில் புதைந்திருந்த பழைய கட்டமைப்புகள் இன்னும் வெளிப்படலாம் என எதிர்பாப்பதாகவும் இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

யாழில் குடும்பப் பெண் எடுத்த விபரீத முடிவு : கணவர் தப்பியோட்டம்!!

யாழ்ப்பாணம் நீர்வேலிப் பகுதியில் கணவரின் கொடுர தாக்குதலை தாங்கிக் கொள்ளா முடியாத மனைவி மண்ணெண்ணை ஊற்றி தீமுட்டியுள்ளார். 3 பிள்ளைகளின் தாயானா ஒருவரே இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார்.

நீர்வேலிப் பகுதியில் வசித்துவந்த குறித்த குடும்பப் பெண், கணவரால் தொடர்ந்து சித்திரவதைகளை அனுபவித்த நிலையில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் 3 தடவை கணவருக்கு எதிராக முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

கோப்பாய் பொலிஸார் அவ்விடயம் தொடர்பில் எந்த நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால், யாழ்ப்பாணம் தலமைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்த்துள்ளார்.

எனினும் பொலிஸ் தரப்பினரால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் நேற்று முந்தினம் கணவரின் தாக்குதலை தாங்காது உடலில் மண்ணெண்ணை ஊற்றி தீ மூட்டியுள்ளார்.

சம்பவத்தின் போது வீட்டில் இருந்த கணவர், தீயை அணைக்காமல் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். பெண்ணின் தாய் தீயை அணைத்து, அவரை சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்.

வைத்தியசாலையில் திவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவரும் பெண்ணிடம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மகளை காப்பாற்ற மருமகனுக்கு மாமனார் நிகழ்த்திய கொடூரம் : பலியான இளைஞன்!!

அம்பலாந்தோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மல்பெத்தாவ பகுதியில் இன்று (08) திங்கட்கிழமை அதிகாலை மாமனாரின் தாக்குதலில் மருமகன் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவத்தில் மாமடல பகுதியைச் சேர்ந்த 26 வயதுடையவரே உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

இறந்தவரின் மனைவி, குடும்பத் தகராறு காரணமாக அம்பலந்தோட்டா மாவட்டம், மல்பெத்தாவாவில் உள்ள அவரது தந்தையின் வீட்டிற்கு வந்திருந்தார். இதன்போது குடிபோதையில் இருந்த கணவன் தன் மனைவியை தாக்கியுள்ளார்.

இந்நிலையில் குறித்த பெண்ணின் தந்தை தன் மருமகன் மீது மாமனார் கொடூரமான முறையில் தாக்குதல் நடத்தியுள்ளார். இந்த தாக்குதலில் காயமடைந்தே மருமகன் உயிரிழந்துள்ளதாக ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இக்கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய மாமனார் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்தவரின் சடலம் அம்பலாந்தோட்டை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், அம்பலாந்தோட்டை பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

குடும்பத் தகராறில் கணவனை கொலை செய்த மனைவி : தென்னிலங்க்கையில் அதிர்ச்சி!!

காளுத்துறை – ஹொரணை காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட அரம்பகந்த பகுதியில் நேற்று (07) அதிகாலை ஏற்பட்ட குடும்பத் தகராறின் போது, கணவனைக் கூர்மையான ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கணவனை கொலை செய்த மனைவி கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவத்தில் அரம்பகந்த பகுதியைச் சேர்ந்த 49 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தம்பதியினருக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிய நிலையிலேயே, வீட்டின் உள்ளே வைத்து கூர்மையான ஆயுதத்தால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

சம்பவம் நடந்த சில மணிநேரங்களிலேயே, உயிரிழந்தவரின் மனைவியான சந்தேகநபர் ஹொரணை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கொலைச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹொரணை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்ட மாற்றம் : நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி!!

இலங்கையில் கடந்த வார தங்க விலையுடன் ஒப்பிடுகையில் இன்று (08) 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 1000 ரூபாயால் குறைந்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

நாட்டில் இன்று தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 383,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 352,400 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 47,875 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 44,050 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது

பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பலி எண்ணிக்கை உயர்வு!!

புதிய இணைப்பு : பிலிப்பைன்ஸில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தில் 129 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

பிலிப்பைன்ஸில் இன்று (8) காலை 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவானது. இந்த நிலநடுக்கம் 10 கி.மீ கடல் ஆழத்தில் ஏற்பட்டதாக ஜேர்மனிய புவியியல் ஆய்வு மையம் கூறியுள்ளது.

முதலாம் இணைப்பு : தெற்கு பிலிப்பைன்ஸின் மிண்டனாவோ பிராந்தியத்தில் 7.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் தகவலுக்கமைய, இந்த நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி காலை 07.37 மணியளவில் சுமார் 35 கிலோமீட்டர் ஆழத்தில் தாக்கியுள்ளது.

இதனைத் தொடர்ந்து பிலிப்பைன்ஸ் மற்றும் அதன் அண்டை நாடான இந்தோனேசியாவிற்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கடலோரப் பகுதிகளில் வாழும் மக்களை வெளியேறுமாறு கோரி பிலிப்பைன்ஸின் நில அதிர்வு நிறுவனம் சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது.

பிலிப்பைன்ஸின் சில பகுதிகளில் சுனாமி அலைகள் அலை மட்டத்திற்கு மேல் 1 முதல் 3 மீட்டர் வரை உயரக்கூடும் என அமெரிக்க சுனாமி எச்சரிக்கை அமைப்பு தெரிவித்துள்ளது.

நிலநடுக்கம் காரணமாக ஜெனரல் சாண்டோஸ் நகரிலுள்ள வணிக வளாகங்கள் மற்றும் கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளதை காட்டும் புகைப்படங்களும் வெளியாகியுள்ளது.

தங்களது கொடியேற்ற நிகழ்வின் போது இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், அதன் காரணமாக பொலிஸ் கட்டிடத்தில் சில விரிசல்கள் ஏற்பட்டுள்ளதாகவும் பிலிப்பைன்ஸின் சரங்கானியிலுள்ள அலபெல் நகர பொலிஸ் தலைவர் தெரிவித்துள்ளார்.

உடனடியாக உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை என்றும், ஆனால் நடுக்கத்தைத் தொடர்ந்து சிலர் மயக்கமடைந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், நாங்கள் அனுபவித்த மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் இதுதான் என அவர் தொலைபேசி மூலம் தெரிவித்துள்ளார்.

இந்தோனேசியாவும் தனது வடகிழக்கு கடலோரப் பகுதிக்கு சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

கொடூரமான முறையில் எரித்துக் கொலை செய்யப்பட்ட 4 பிள்ளைகளின் தாய் : கணவனின் வெறிச்செயல்!!

மொனராகலை, கொடிகமுவ முஸ்லிம் கிராமத்தில் வசிக்கும் 4 பிள்ளைகளின் தாய் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று அதிகாலை பெட்ரோல் ஊற்றி தீ வைக்கப்பட்ட நிலையில் பியகம ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மனைவி உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் பிபில, கொடிகமுவ முஸ்லிம் கிராமத்தைச் சேர்ந்த ரினோஷா உம்மா என்ற நான்கு பிள்ளைகளின் தாயாராவார்.

அவர் தனது பிள்ளைகள் மற்றும் கணவனுடன் இரவு உணவின் பின் உறங்கச் சென்றுள்ளார். பிள்ளைகள் தனி அறையொன்றில் உறங்கிக் கொண்டிருந்தனர்.

இந்தநிலையில், அதிகாலையில் அறையில் தீப்பிழம்பு எரிவதைக் கண்டு பிள்ளைகள் கதவைத் திறந்து பார்த்த போது, தாய் தீப்பற்றி எரிவதைக் கண்டுள்ளனர்.

உடனடியாக தீயை அணைத்து, அவரை பிபில ஆதார மருத்துவமனையில் அனுமதித்த போதிலும் அவர் உயிரிழந்துள்ளார். அவர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததாக சந்தேகிக்கப்படும் கணவர் தற்போது பிரதேசத்தை விட்டு தப்பியோடி தலைமறைவாகியுள்ளார்.

அவர் கோழி இறைச்சிக் கடையொன்றை நடத்தி வரும் ஒரு வர்த்தகர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதாலேயே இந்தக்கொலை இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இலங்கை கடன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!!

இலங்கையில் எதிர்வரும் ஜுலை மாதம் முதலாம் திகதி முதல் கடன் அட்டைகளுக்கான வட்டி வீதத்தை 1 முதல் 3 சதவீதம் வரையான தொகையினால் அதிகரிப்பதற்கு வங்கிகளும் நிதி நிறுவனங்களும் தீர்மானித்துள்ளன.

அதற்கமைய, தற்போதைய பொருளாதார சூழ்நிலைக்கு மத்தியில் இலங்கையில் கடன் அட்டைகளை பயன்படுத்தும் 22 லட்சம் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படவுள்ளனர்.

அன்றாடத் தேவைகளை நிறைவு செய்வதற்காக பலரும் இந்த அட்டைகளை பயன்படுத்தி வரும் நிலையில், ஜுலை மாதம் முதலாம் திகதி முதல் இந்த அதிகரிப்பு அவர்களுக்குப் பெரும் சுமையாக இருக்கும் என நிதி ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

சமீபத்தில் தனது கொள்கை வட்டி வீதத்தை ஒரு சதவீதத்தினால் அதிகரிப்பதற்கு இலங்கை மத்திய வங்கி நடவடிக்கை மேற்கொண்டிருந்தது.

இதன் நேரடித் தாக்கம் கடன் அட்டை வைத்திருப்பவர்கள் மீது விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதற்கமைய, இதுவரையில் கடன் அட்டைகளுக்கு நிலவிய 26 சதவீதம் என்ற வருடாந்த வட்டி வீதத்தை, ஜுலை முதலாம் திகதி முதல் 28 சதவீதமாக அதிகரிப்பதற்கு சில வங்கிகள் ஏற்கனவே தீர்மானித்துள்ளன.

மத்திய வங்கியின் தரவு அறிக்கைகளுக்கமைய, இந்த ஆண்டு மார்ச் மாதமளவில் இலங்கையிலுள்ள கடன் அட்டை வைத்திருப்பவர்கள் வங்கிகளுக்குத் திருப்பிச் செலுத்த வேண்டிய மொத்தக் கடன் நிலுவை 194,105 மில்லியன் ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் ஒரு பவுண் தங்கத்துக்கு பெருந்தொகை வரி : நகை வாங்க காத்திருப்போருக்கு வெளியான அதிர்ச்சித் தகவல்!!

இலங்கையில் ஒரு பவுண் தங்கத்துக்கு அரசாங்கத்தினால் சுமார் 82 ஆயிரம் ரூபா வரி விதிக்கப்படுவதாக தெரியவந்துள்ளது. தற்போது ஒரு பவுன் தங்கத்தின் உண்மையான தங்க மதிப்பு சுமார் 358,700 ரூபாவாகும். ஆயினும் ஒரு பவுன் தங்கத்தின் விலை தற்போது 400,000 ரூபாயைத் தாண்டியுள்ளது.

இந்நிலையில் தங்க நகை கொள்வனவின் போது நுகர்வோரால் செலுத்தப்படும் இறுதி விலையில் சுமார் 82,00 ரூபாய் அளவில் வரிகள் மட்டுமே உள்ளடங்கியிருப்பதாக தெரியவந்துள்ளது.

அத்துடன் செய்கூலி மற்றும் அதனுடன் தொடர்புடைய செலவுகளை உள்ளடக்கியே தங்க நகைககளின் இறுதி விலையை தீர்மானிக்கப்படுகின்றது.

தங்க நகை வர்த்தகர்களின் கருத்துப்படி, தற்போதைய வரி முறையானது தங்கத்தின் மதிப்பு மற்றும் செய்கூலி (கூலி) ஆகிய இரண்டிற்கும் 18 சதவீத பெறுமதி சேர்க்கப்பட்ட வரியையும் (VAT), அதனுடன் கூடுதலாக 2.5 சதவீத சமூகப் பாதுகாப்புப் பங்களிப்பு வரியையும் (SSCL) விதிக்கின்றது.

இந்த வரிகள் தங்க நகைகளின் சில்லறை விலையை கணிசமாக உயர்த்தியுள்ளதால், விற்பனையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

எனவே தங்கம் மீதான வரி அமைப்பை உடனடியாக மாற்றியமைக்குமாறு கொழும்பு, புறக்கோட்டைப் பகுதியிலுள்ள நகை வியாபாரிகள் அரசாங்கத்திடம் அவசர கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதிகப்படியான வரிவிதிப்பு காரணமாக நகைகளின் விலைகள் சாதாரண நுகர்வோரின் கைக்கு எட்டாத அளவிற்கு உயர்ந்துள்ளதோடு, உள்ளூர் நகைத்தொழில் கிட்டத்தட்ட 75 சதவீதத்தால் சுருங்கிப் போயுள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

வட் (VAT) வரி அமைப்பில் திருத்தம் செய்வது நுகர்வோர் மற்றும் திறைசேரி (TREASURY) ஆகிய இரு தரப்பினருக்கும் பயனளிக்கும் என்று அவர்கள் நம்புகின்றனர்.

நிதி அமைச்சின் வசம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள முன்மொழிவொன்றில், தங்கத்தின் மதிப்பு மீதான வட் வரியை நீக்கிவிட்டு, அதனைச் செய்கூலிக்கு (Labor Charge) மாத்திரம் விதிக்குமாறும், அதேநேரம் நடைமுறையிலுள்ள சமூகப் பாதுகாப்பு வரியைத் தக்கவைத்துக் கொள்ளுமாறும் நகை வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-தமிழ்வின்-

நிலச்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலியான சோகம்!!

மேற்குவங்க மாநிலம் சிலிகுரிக்குச் சுற்றுலா வந்த இடத்தில் பெய்த அசுர மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி, 5 வயதுக் குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியுள்ளது.

அண்டை மாநிலமான சிக்கிமைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர், கடந்த சில தினங்களுக்கு முன்பு மேற்குவங்க மாநிலத்தின் முக்கியச் சுற்றுலாத் தலமான சிலிகுரிக்கு காரில் சுற்றுலா வந்துள்ளனர்.

அப்போது அப்பகுதியில் எதிர்பாராத விதமாகக் கொட்டித் தீர்த்த கனமழை காரணமாகப் பல்வேறு இடங்களில் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டது.

இதற்கிடையே, சிலிகுரி மலைப்பாதையில் அவர்கள் பயணித்துக் கொண்டிருந்த போது திடீரென ஏற்பட்ட நிலச்சரிவில் இவர்களது கார் சிக்கியுள்ளது.

நிலச்சரிவின் கோரப் பிடியில் சிக்கிய கார், அருகில் பெருக்கெடுத்து ஓடிய ஆற்று வெள்ளத்தில் பயங்கரமாக அடித்துச் செல்லப்பட்டது.

கார் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், சுற்றுலா வந்த 4 பேரும் என்ன ஆனார்கள் என்று தெரியாமல் கடந்த இரண்டு நாட்களாக மாயமாகி இருந்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த மீட்புப் படையினர் மற்றும் உள்ளூர் போலீசார் ஆற்றுப் பகுதியில் தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், இன்று காலை ஆற்றங்கரையோரம் மாயமான 4 பேரின் உடல்களும் சடலங்களாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளன. பலியானவர்களில் ஒரு 5 வயதுக் குழந்தையும் அடங்குவர் என்பது பார்ப்போரின் நெஞ்சை நொறுக்குவதாக உள்ளது.

பலியானவர்களின் உடல்களைக் கைப்பற்றிய போலீசார், பிரேதப் பரிசோதனைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

5 வயது மகள் திடீர் மரணம் : தாய் மீது புகார் கொடுத்த தந்தை!!

பெங்களூருவில் 5 வயது மகள் உயிரிழந்த சம்பவத்தில் தாய் மற்றும் அவரது நண்பர் மீது கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. கடந்த 2007ம் ஆண்டு பெங்களூருவை சேர்ந்த பிரியங்கா என்ற பெண்ணுக்கும், தாவணகெரேயைச் சேர்ந்த பிரவீன் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது.

இருவருக்கும் 17 வயது மற்றும் 5 வயதில் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் தாய் பிரியங்காவிற்கு தனது கல்லூரி நண்பரான மோகன் என்பவருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது.

இது நாளுக்கு நாள் தீவிரமடையவே கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு அதிகரித்து இருவரும் விவாகரத்து கோரும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இருவரும் தனித்தனியாக பிரிந்து பிறகு, அவர்களின் 5 வயது மகள் தாய் பிரியங்காவின் பாதுகாப்பில் மோகனுடன் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் மார்ச் 24ம் திகதி 5 வயது சிறுமி வெண்ணிலா உயிரிழந்ததார்.

சிறுமி வெண்ணிலா உயிரிழந்தது தொடர்பாக தாய் முன்னுக்கு பின் முரணான தகவலை கொடுக்கவே, சந்தேகமடைந்த உறவினர்கள் மற்றும் சிறுமியின் தந்தை,

வெண்ணிலாவின் பிரேத பரிசோதனை அறிக்கையை வெளிநாட்டில் மருத்துவராக உள்ள தன்னுடைய உறவினருக்கு அனுப்பி விசாரித்துள்ளார்.

அப்போது சிறுமி தாக்கப்பட்டிருக்கலாம் அல்லது மூச்சுத்திணறடிக்கப்பட்டு கொல்லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதனை தொடர்ந்து தந்தை பிரவீன் காவல்துறையிடம் முறையான புகாரை தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தாயின் நண்பர் மோகனை பொலிஸார் கைது செய்துள்ளனர். மேலும் தாய் பிரியங்கா தலைமறைவாக உள்ள நிலையில் அவரை பொலிஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

தென்னிலங்கையில் பேஸ்புக் விருந்து முற்றுகை : பெண்கள் உட்பட 25 பேர் கைது!!

அம்பலாங்கொட, போனதூவ பகுதியில் பேஸ்புக் விருந்து ஒன்று முற்றுகையிடப்பட்டு, 3 பெண்கள் உட்பட 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் நிலைய அதிகாரிகள் மற்றும் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் குழுவினர் மேற்கொண்ட முற்றுகையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடமிருந்து 225 மில்லிகிராம் கொகெய்ன், 8 கிராம் 125 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள், 2 கிராம் 400 மில்லிகிராம் கஞ்சா மற்றும் சட்டவிரோத சிகரெட்டுகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட பெண்கள் மற்றும் ஆண்கள் 18 முதல் 44 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என தெரியவந்துள்ளது. அவர்கள் படபொல, பலபிட்டிய, ஹோமாகம, பேருவளை, அம்பலாங்கொடை, மீடியாகொட, வத்துகெதர மற்றும் அஹுங்கல்ல ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பிரித்தானியாவை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ள இலங்கைப் பெண்ணின் கோரிக்கை!!

இலங்கைப் பெண்ணொருவரும் அவரது பிள்ளைகளும் 14 நாட்களுக்குள் பிரித்தானியாவை விட்டு வெளியேறவேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், என் குடும்பத்தைப் பிரித்துவிடாதீர்கள் என அவர் பிரித்தானிய உள்துறை அலுவலகத்துக்குக் கோரிக்கை விடுத்துள்ளார்.

2022ஆம் ஆண்டு, கல்வி கற்பதற்காக பிரித்தானியா வந்த இலங்கையரான Rasika Samarasinghe (46), சட்டப்படி தன் மனைவி பிள்ளைகளையும் பிரித்தானியாவுக்கு அழைத்துவந்தார். அவர் இப்போது இங்கிலாந்தில் care worker ஆக பணி செய்துவருகிறார்.

Rasikaவின் மனைவியான Chamila Dilrakshi (45), உதவி ஆசிரியையாக பணியாற்றிவருகிறார். தம்பதியருக்கு, Thedara (12), Vivas (9) மற்றும் Hiran (8) ஆகிய மூன்று பிள்ளைகள் இருக்கிறார்கள்.

இந்நிலையில், Chamilaவும் அவரது பிள்ளைகளும் 14 நாட்களுக்கும் பிரித்தானியாவை விட்டு வெளியேறவேண்டும் என பிரித்தானிய உள்துறை அலுவலகம் உத்தரவிட்டுள்ளது.

அதாவது, 2024ஆம் ஆண்டு, மார்ச் மாதம் முதல், care worker ஆக பணி புரிவோர் தங்கள் குடும்பங்களை பிரித்தானியாவுக்கு அழைத்துவர அனுமதி இல்லை என அரசு அறிவித்துள்ளது. அதேபோல, 2025ஆம் ஆண்டு, ஜூலை மாதம், வெளிநாடுகளிலிருந்து care worker பணியாளர்களை வேலைக்கு எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

விடயம் என்னவென்றால், தற்போது பிரித்தானியாவை விட்டு வெளியேறும்படி உள்துறை அலுவலகத்தால் அறிவுறுத்தப்பட்டுள்ளவர்கள், இந்த விதிகள் அமுலுக்கு வரும் முன்பே பிரித்தானியாவுக்கு வந்தவர்கள்.

இந்நிலையில், நாங்கள் முறைப்படிதான் புலம்பெயர்ந்தோம், சட்டத்துக்கு உட்பட்டு நடக்கிறோம், இருந்தும் இப்படி எங்கள் பிள்ளைகளை தங்கள் தந்தையை விட்டுப் பிரிப்பது அவர்களுடைய மன நலனை பாதிக்கும் என்று கூறியுள்ள Chamila,

தங்களை நாட்டை விட்டு வெளியேற்றும் முன், தானும் தன் கணவரும் சமுதாயத்துக்கு ஆற்றியுள்ள சேவைகளை கருத்தில் கொள்ளுமாறு உள்துறை அலுவலகத்தைக் கோரியுள்ளார்.

Chamila குடும்பத்தினருக்கு ஆதரவாக, உள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினரான Victoria Collins உட்பட ஏராளமானோர் குரல் கொடுத்துவருகிறார்கள்.