தென் மாகாணத்தில் நபர் ஒருவருக்கு சொந்தமான சுமார் 1,500 லட்சம் ரூபாய் பெறுமதியான சொத்துக்கள், சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினால் நேற்று தடை செய்யப்பட்டுள்ளன.
தென் மாகாணத்தின் முன்னணி பாதாள உலகக் குழுத் தலைவனும் போதைப்பொருள் வர்த்தகருமான ரத்கம விதுர என்பவருக்குச் சொந்தமானதாகக் கூறப்படும் சொத்துக்களே இவ்வாறு தடை செய்யப்பட்டுள்ளது.
இந்தச் சொத்துக்கள் ரத்கம விதுரவின் சித்தியின் பெயரில் விலைக்கு வாங்கப்பட்டவை என விசாரணைகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் பல்வேறு சட்டவிரோதச் செயல்கள் மூலம் ஈட்டிய பணத்திலிருந்தே ரத்கம விதுர இந்தச் சொத்துக்களைச் சேர்த்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அதற்கமைய, தடை செய்யப்பட்டுள்ள சொத்துக்களுக்குள் 4 நிலங்கள், 3 மாடிகளைக் கொண்ட 2 வீடுகள் மற்றும் ஒரு மாடி வீடு ஒன்று அடங்குவதாகச் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ரத்கம விதுரவுக்கு சொந்தமான கோடிக்கணக்கான ரூபாய் பெறுமதியான மேலும் பல சொத்துக்கள் எதிர்காலத்தில் தடை செய்யப்படவுள்ளது.
வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ள ரத்கம விதுரவிற்கு எதிராக 18 கொலைகள் உட்பட 24 குற்றச்சாற்றுகள் உள்ளதாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அவர் தொடர்பில் தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதேவேளை, நீதிமன்ற நடவடிக்கைகளை தொடர்ந்து இந்தச் சொத்துக்கள் எதிர்காலத்தில் அரசமயமாக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்து சமுத்திரப் பிராந்தியத்தை எல்நினோ நெருங்கி வருவதால் பொதுமக்கள் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என ழ்ப்பாணப் பல்கலைக்கழகப் புவியியல் துறை பேராசிரியரும் கலைப் பீடாதிபதியுமான நாகமுத்து பிரதீபராஜா கேட்டுக்கொண்டார்.
பெண்கள் வாழ்வுரிமைச் சங்கத்தின் ஏற்பாட்டில் எல்நினோ (El Niño) காலநிலை மாற்றம் தொடர்பான விசேட விழிப்புணர்வுச் செயலமர்வு, யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று(24) காலை 10.00 மணியளவில் நடைபெற்றது. இந்த செயலமர்வில் முதன்மை வளவாளராகக் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
செயலமர்வில் பேராசிரியர் சுட்டிக்காட்டிய முக்கிய அம்சங்கள் ஒன்றான வெப்பத் தாக்கத்தின் காலப்பகுதி தொடர்பாக அவர் கூறுகையில் மத்திய பசுபிக் பிராந்தியக் கடற்பகுதிகளில் இருந்து இந்து சமுத்திரக் கடல் பிராந்தியத்திற்கு ஊடுருவியுள்ள எல்நினோ, ஜூலை மாதம் தொடக்கம் ஒக்டோபர் மாதம் வரை அதிக வெப்பத் தாக்கத்தை ஏற்படுத்தும்.
மற்றும் வேகமாகப் பரவும் கடல் வெப்பம் நிலத்தின் ஊடாக வெப்பம் கடத்தப்படுவதை விட 16 மடங்கு வேகமாக நீரின் ஊடாக வெப்பம் கடத்தப்படுகிறது.
இதனால் இந்து சமுத்திரக் கடற்பரப்பில் ஏற்படும் வெப்ப ஏற்றம் ஏனைய பகுதிகளுக்கும் மிக வேகமாகப் பரவி வருகிறது. அத்துடன் இலங்கை மற்றும் வட மாகாணத்திற்கான பாதிப்புகள் இந்தக் கடல் வெப்ப ஏற்றம் இலங்கை மற்றும் மாலைதீவுகளில் அதிக தாக்கத்தைச் செலுத்த வாய்ப்புள்ளது.
இலங்கையைப் பொறுத்தவரை, குறிப்பாக வட மாகாணத்தின் முல்லைத்தீவு, மன்னார் மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் கடுமையான நீர் தட்டுப்பாட்டை இது உருவாக்கும்.
மற்றும் வறட்சியும் மழைவீழ்ச்சியும் ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலப்பகுதியில் கடுமையான வறட்சியை ஏற்படுத்தும் எல்நினோ, ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் பாரிய மழைவீழ்ச்சியையும் தோற்றுவிக்கும்.
ஒக்டோபர் மாதத்திற்குப் பின்னரே காற்றழுத்தத் தாழ்வு மண்டலங்கள் உருவாவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதால், அதுவரை அதிக வறட்சியான காலநிலையே நிலவும்.
“எல்நினோ இந்து சமுத்திரத்தை அண்மித்துள்ள நிலையில், பொதுமக்கள் சரியான நீர் முகாமைத்துவத்தைப் பின்பற்றி, அதிக வெப்பத்தினால் ஏற்படக்கூடிய நீர்த்தட்டுப்பாட்டைச் சமாளிக்கும் செயற்பாடுகளில் ஈடுபட முன்வர வேண்டும் என பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா கலந்து கொண்டோரை கேட்டுக்கொண்டார்.
இந்தநிகழ்வில் பெண்கள் வாழ்வுரிமைச் சங்கத்தின் இணைப்பாளர் வாசுகி, அமைப்பின் முக்கியஸ்தர்கள், வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கிராமங்களின் பிரதிநிதிகள் மற்றும் சமூகச் செயற்பாட்டாளர்கள் எனப் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
பெங்களூரைச் சேர்ந்த கென்னத் என்ற வாலிபர், நிதி நெருக்கடி காரணமாகத் தனது காதலியின் பெற்றோர் மற்றும் அவரது தங்கையைத் திட்டமிட்டுக் கொடூரமான முறையில் கொலை செய்துள்ளார்.
இந்தத் தொடர் கொலையை அரங்கேற்றுவதற்காக, கென்னத் கடந்த 6 மாதங்களாக ‘கூகுள் ஜெமினி’ ஏஐ சாட்பாட்டிடம் மறைமுகமான பல்வேறு கேள்விகளைக் கேட்டுத் திட்டமிட்டு வந்தது தெரிய வந்துள்ளது.
கொலையைச் செய்து முடித்த பிறகு, வீட்டிலிருந்த பெருந்தொகை பணம் மற்றும் வெள்ளிப் பொருட்களைத் திருடிக் கொண்டு, கென்னத் தனது காதலி ஸ்வேதாவுடன் தப்பியோடியுள்ளார்.
சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த காவல்துறையினர், தப்பியோடிய கென்னத் – ஸ்வேதா ஜோடியைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
குற்றவாளி கென்னத் கூகுள் ஜெமினி ஏஐ தளத்தில் எந்த மாதிரியான கேள்விகளைக் கேட்டு உத்தியைத் திட்டமிட்டார் என்பதற்கான முழு ஆதாரங்களைச் சேகரிக்கக் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதற்காகக் குற்றவாளியின் முழு ‘ஏஐ அரட்டை வரலாற்றை’ முறைப்படி வழங்கி உதவுமாறு கோரி கூகுள் நிறுவனத்திற்குப் பெங்களூர் காவல்துறையினர் அதிகாரப்பூர்வக் கடிதம் எழுதியுள்ளனர்.
இந்தியா தெலுங்கானா மாநிலத்தில் ஒரு 22 வயது பெண் இரண்டு ஆண்டுகளில் மட்டும் 14 திருமணங்கள் செய்து, மொத்தம் சுமார் 350 சவரன் தங்க நகைகளை கொள்ளை அடித்த சம்பவம் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இது தொடர்பில் இந்திய ஊடகங்க்கள் தெரிவித்துள்ளதாவது, தெலுங்கானாவில் 22 வயதுடைய ஸ்வேதா என்ற பெண் பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி காதலனை திருமணம் செய்தார். சில மாதங்களில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கணவரைப் பிரிந்தார்.
அதன் பிறகு பெற்றோரும் உறவினர்களும் அவரை ஏற்க மறுத்தனர். தனியாக விடப்பட்ட ஸ்வேதா, ஒரு விடுதியில் தங்கி சூப்பர் மார்க்கெட் பில்லிங் கவுண்டரில் வேலைக்குச் சேர்ந்தார்.
அப்போது ஒரு இளைஞருடன் காதல் வயப்பட்டு இரண்டாவது திருமணம் செய்தார். திருமணத்தின் போது 15 சவரன் நகைகள் அணிவிக்கப்பட்டன. “எனக்கு பெற்றோர் இல்லை. அனாதை. விடுதியில் தனியாக இருக்கிறேன்” என்று பல பொய்களை கூறி திருமணம் செய்தார்.
திருமணம் முடிந்து இரண்டு நாட்களிலேயே அந்த 15 சவரன் நகைகளையும் வீட்டில் இருந்த 30,000 ரூபாய் பணத்தையும் எடுத்துக்கொண்டு காணாமல் போனார் ஸ்வேதா . புகார் கொடுக்கப்பட்டாலும் எந்த முன்னேற்றமும் இல்லை.
இந்த சம்பவத்திற்குப் பிறகுதான் ஸ்வேதா இதை ஒரு “தொழில்” ஆக்கிக்கொண்டார். கொள்ளையடித்த நகைகளையும் பணத்தையும் வைத்துக்கொண்டு அருகில் உள்ள வெவ்வேறு ஊர்களுக்குச் சென்றார்.
அங்கெல்லாம் “நான் அனாதை. சிறுவயதிலேயே பெற்றோர் விபத்தில் இறந்துவிட்டார்கள். ஆசிரமத்தில் வளர்ந்தேன்” என்ற பொய்களைச் சொல்லி ஆண்களை வசப்படுத்தினார். திருமணம் செய்து ஒன்று அல்லது இரண்டு நாட்களில் நகைகளையும் பணத்தையும் சுருட்டி மீண்டும் மறைந்துவிடுவது அவரது வழக்கமாக மாறியது.
ஸ்வேதாவால் ஏமாற்றப்பட்ட பெரும்பாலான ஆண்கள் இரண்டாம் திருமணம் செய்ய விரும்பியவர்களாக இருந்தனர்.
மேட்ரிமோனி தளங்களைப் பயன்படுத்தி புகைப்படம் இல்லாமல் வெவ்வேறு பெயர்களில் விளம்பரம் போட்டார். ஏன் புகைப்படத்தை பதிவு செய்யவில்லை என கேட்பவர்களிடம், “யாராவது புகைப்படத்தை தவறாகப் பயன்படுத்திவிடுவார்களோ என்ற பயம்” என்று பேசி ஆண்களைக் கவர்ந்தார்.
இப்படி 14 திருமணங்கள் செய்துள்ளார் ஸ்வேதா . மொத்தம் சுமார் 350 சவரன் தங்க நகைகள். கடந்த மார்ச் மாதம் தெலுங்கானாவைச் சேர்ந்த வைத்தியர் ராஜேஷ் குமார் (35). முதல் மனைவியை முறைப்படி விவாகரத்து செய்திருந்த அவர், இரண்டாம் திருமணத்திற்காக மேட்ரிமோனி தளத்தில் விவரங்களைப் பதிவு செய்திருந்தார்.
ஸ்வேதா அவரைத் தொடர்புகொண்டு வழக்கம்போல தனது “அனாதைக் கதையை” சொல்லி திருமணம் வரை கொண்டுவந்தார். திருமணத்தின்போது 60 சவரன் நகைகள் அணிவிக்கப்பட்டன.
இரண்டு நாட்கள் மட்டும் வைத்தியர் ராஜேஷுடன் தங்கினார். பிறகு கிட்டத்தட்ட 80 சவரன் நகைகளையும் 3 லட்சம் ரூபாய் ரொக்கப் பணத்தையும் எடுத்துக்கொண்டு மறைந்துவிட்டார். வைத்தியர் ராஜேஷின் தாய் மாமா இன்ஸ்பெக்டர் ஸ்ரீனிவாஸ் ஒரு பொலிஸ் அதிகாரி.
திருமணத்திற்கு முன்பே ஏதாவது பிரச்சனை வரலாம் என்ற சந்தேகத்தில் ஸ்வேதாவின் தொலைபேசியில் எதற்கும் இருக்கட்டும் நம் பாதுகாப்பு முக்கியம் என மறைமுகமாக டிராக்கிங் ஆப் ஒன்றை இன்ஸ்டால் செய்திருந்தார்.
நகைகளுடன் தப்பிய ஸ்வேதா அடுத்ததாக கோவாவுக்குச் சென்று தங்கியிருப்பது அந்த ஆப் மூலம் தெரியவந்தது. உடனடியாக புகார் கொடுக்கப்பட்டது. கோவாவில் அந்த தொலைபேசி சிக்னல் காட்டிய இடத்தில் ஸ்வேதாவைக் கைது செய்தனர்.
விசாரணையில் அவர் அதிர்ச்சியான ஒன்றைச் சொன்னார், “வெப் சீரியஸ்களைப் பார்த்து இந்த யோசனை வந்தது. இப்படி கொள்ளை அடித்து வாழலாம் என்று முடிவு செய்தேன்.” தற்போது ஸ்வேதாவிடம் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
தென்னிந்திய பிரபல நடிகர் விமலுக்கு காசோலை மோசடி வழக்கில் ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து சென்னை நீதிமன்றம் இன்று (23) தீர்ப்பளித்துள்ளது.
நடிகர் விமல் நடித்த திரைப்படம் ‘மன்னர் வகையறா’. இந்தப் படத்தை தயாரிக்க நடிகர் விமல், பைனாஸ்சியர் கோபி என்பவரிடமிருந்து 4.5 கோடி இந்திய ரூபா கடனாகப் பெற்றுள்ளார். படம் வெளியான பின்னரும் அந்தத் தொகையை அவர் வழங்கவில்லை.
பின்னர், அந்த தொகையை விமல் காசோலையாக வழங்கியுள்ளார். காசோலையை கோபி வங்கியில் செலுத்தியபோது, விமல் வங்கிக் கணக்கில் பணம் இல்லை என்று திரும்பி வந்தது.
இதையடுத்து ரூ. 4.5 கோடி செக் மோசடி வழக்கை நடிகர் விமல் மீது தயாரிப்பாளர் கோபி சென்னையில் உள்ள 11-வது சிறு வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் தொடர்ந்தார்.
இந்த வழக்கு விசாரணைக்காக நடிகர் விமல் ஏற்கெனவே நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்தார். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்த்தி இன்று தீர்ப்பு அளித்தார்.
அதில், விமலுக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து நடிகர் விமலுக்கு , அவருக்கு ஓராண்டு சிறைத் தண்டனையும் வாங்கிய காசு தொகையை திருப்பிக் கொடுக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
எல் நினோ காலநிலை மாற்றமானது முன்னர் எதிர்பார்க்கப்பட்டதை விட முன்கூட்டியே இலங்கையில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என சுற்றாடல் துறை அமைச்சர் தம்மிக பட்டபெந்தி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்று வரும் விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,’எல் நினோ’வின் உச்சகட்ட தாக்கம் நவம்பர் மாதமளவில் எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன், ஆகஸ்ட் மற்றும் செப்டெம்பர் மாதங்களில் இலங்கையில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அதனைத் தொடர்ந்து அக்டோபர் முதல் டிசம்பர் வரையான காலப்பகுதியில் பலத்த மழை பெய்யக்கூடும்.
இந்தக் காலநிலை மாற்றத்தினால் ஏற்படக்கூடிய சாத்தியமான தாக்கங்களுக்குத் திறம்பட முகங்கொடுக்கும் வகையில், அரச நிறுவனங்கள் மற்றும் ஊடகங்களின் செயற்பாடுகளை ஒருங்கிணைப்பது தொடர்பில் உரிய தரப்பினருடன் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
‘எல் நினோ’ என்பது ஒரு உலகளாவிய மோசமான காலநிலை தாக்கமாகும். அதன் தாக்கங்கள் இலங்கைக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டதல்ல என குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் நிலையியல் கட்டளைகள் தொடர்பில் எழுப்பிய கேள்வியைத் தொடர்ந்து, நாடாளுமன்றத்தில் இன்று (23.07) கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் நிலையியல் கட்டளைகள் தொடர்பில் எழுப்பிய கேள்வியைத் தொடர்ந்து, நாடாளுமன்றத்தில் இன்று (23) கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இன்றைய நாடாளுமன்ற அமர்வின்போது, நிலையியல் கட்டளைகள் தொடர்பான கேள்வியை எழுப்ப முற்பட்ட அர்ச்சுனா இராமநாதன், கேள்வியை முன்வைப்பதற்கு முன்னரே அதற்கு தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக சபாநாயகரிடம் தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த சபாநாயகர், நாடாளுமன்ற நடவடிக்கைகளை விளையாட்டுத்தனமாக மாற்ற முயற்சிக்க வேண்டாம் என எச்சரித்ததுடன், நாடாளுமன்றத்தில் பொறுப்புடன் செயற்படுமாறும் அறிவுறுத்தினார்.
சபாநாயகரின் இந்தக் கருத்துக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எதிர்ப்புத் தெரிவித்தார்.
நிலையியல் கட்டளைகளின்படி எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினரையும் தகாத வார்த்தைகளால் குறிப்பிட முடியாது என சுட்டிக்காட்டிய அவர்,
சபாநாயகர் ஆசனத்தில் அமர்ந்துள்ளவர் நிலையியல் கட்டளைகளுக்கு அமைய செயற்பட வேண்டும் எனவும், உறுப்பினர்களுக்கு கேள்விகளை எழுப்புவதற்கான வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.
இதன்போது கருத்து தெரிவித்த சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க, நாடாளுமன்றத்தின் அனைத்து உறுப்பினர்களும் நிலையியல் கட்டளைகளுக்கு அமைய செயற்படுவதாகக் குறிப்பிட்டார்.
மேலும், அர்ச்சுனா இராமநாதனின் நாடாளுமன்ற செயற்பாடுகள் தொடர்பில் கடுமையான விமர்சனங்களை முன்வைத்த அவர், இதுவரை காலமும் நாடாளுமன்றத்தில் இவ்வாறான முறையில் நேரத்தை வீணடிக்கும் செயற்பாடுகளை எவரும் மேற்கொண்டதில்லை என தெரிவித்தார்.
அத்துடன், அர்ச்சுனா இராமநாதனின் செயற்பாடுகள் ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் அவமதிக்கும் வகையில் அமைந்துள்ளதாகவும், அவரது செயற்பாடுகள் தொடர்பில் பலரும் அதிருப்தி தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூட அவருடன் அருகில் அமர முடியாது எனக் குறிப்பிட்டு கடிதம் ஒன்றை சமர்ப்பித்துள்ளதாகவும், யாழ்ப்பாணத்தில் அவரால் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் ஒன்றைக்கூட நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
மேலும், கடந்த காலங்களில் அரசியல் ரீதியாக கருத்து வேறுபாடுகள் காணப்பட்ட போதிலும், தனிப்பட்ட முறையில் சபாநாயகரை இலக்காகக் கொண்டு இவ்வாறான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டதில்லை எனவும் அவர் கூறினார்.
இந்த விவகாரத்தினால் நாடாளுமன்றத்தில் சில நிமிடங்கள் பதற்றமான சூழ்நிலை நிலவியதுடன், அமர்வு பரபரப்பாக அமைந்தது.
பொலிஸ் அதிகாரிகளின் படங்களைப் பயன்படுத்தியும், அவ்வாறு போலியாக ஆள்மாறாட்டம் செய்தும் சமூக வலைத்தளங்கள் ஊடாக மேற்கொள்ளப்படும் நிதி முறைகேடுகள் மற்றும் மோசடிகளில் இருந்து அவதானமாக இருக்குமாறு பொதுமக்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
மற்றும் டெலிகிராம் போன்ற சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி, போலி புகைப்படங்களுடன் மேற்கொள்ளப்படும் நிதி மோசடிகள் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்று வருவதாக பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கி, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) அல்லது பொலிஸ் விசாரணை பிரிவுகளில் இருந்து அழைப்பதாக கூறி மோசடிகளில் ஈடுபடுகின்றமை கண்டறியப்பட்டுள்ளது.
தொலைபேசி இலக்கங்களுக்கு அழைப்பு விடுத்து வங்கிக்கணக்குகள் பணமோசடிக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதால் வழக்கு தொடரப்படும் என அச்சுறுத்தல் விடுக்கப்படுகின்றமை கண்டறியப்பட்டுள்ளது.
இதன் காரணமாக இரகசிய விசாரணை நடத்தப்படுவதாகக்கூறி, அதற்கு உதவி செய்தால் விடுவிப்பதாகக் குறிப்பிட்டு வட்ஸ்அப் ஊடாக போலி பொலிஸ் அடையாளச் சின்னங்கள், ஆவணங்கள் மற்றும் அதிகாரிகளின் படங்களை அனுப்புதல்.
வேறு கணக்குகளுக்குப் பணத்தை மாற்றுமாறு பணித்தல் அல்லது USDT போன்ற கிரிப்டோ நாணயங்கள் ஊடாகப் பணத்தைச் செலுத்துமாறு அழுத்தம் கொடுத்துதல் போன்ற செயற்பாடுகளில் மோசடியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
எனவே, எந்தவொரு அரச அல்லது தனியார் நிறுவனமும் தொலைபேசி அழைப்புகள் அல்லது வட்ஸ்அப் ஊடாக தேசிய அடையாள அட்டை இலக்கம், வங்கிக் கணக்கு விபரங்கள், அட்டை இலக்கங்கள், CVV இலக்கம்,
கடவுச்சொற்கள் அல்லது OTP இலக்கங்களைக் கேட்பதில்லை என்பதால், இத்தகைய தகவல்களைக் கோரும் அழைப்புகள் மோசடியானவை என்பதைப் பொதுமக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
எனவே, கணக்கு முடக்கப்படும் அல்லது வழக்குத் தொடரப்படும் போன்ற அச்சுறுத்தல்களுக்குப் பயந்து வேறு கணக்குகளுக்குப் பணத்தை மாற்றுவதைத் தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
ஏதேனும் சந்தேகம் இருந்தால் சம்பந்தப்பட்ட வங்கியின் அல்லது நிறுவனத்தின் உத்தியோகபூர்வ தொலைபேசி இலக்கத்தைத் தொடர்புகொண்டு தகவல்களை உறுதிப்படுத்திக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இலங்கைக் பொலிஸ் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் அல்லது இலங்கை மத்திய வங்கி ஆகியவை தனிப்பட்ட வட்ஸ்அப் இலக்கங்கள் ஊடாக விசாரணைகளை நடத்துவதில்லை என்பதுடன்,
வங்கிக் கணக்கு இலக்கங்களை வழங்கிப் பணத்தை வைப்புச் செய்யுமாறு கோருவதும் கிடையாது என அறிவித்துள்ளது.
சந்தேகத்திற்கிடமான இணைய பயன்பாடுகளை தவிர்க்குமாறும் எச்சரிக்கை
மேலும், அறியாத நபர்கள் மற்றும் இணைப்புகள் (Links) மூலம் வெளியிடப்படும் இணையவழிப் பரிசுகள் மற்றும் சந்தேகத்திற்கிடமான இணைய பயன்பாடுகளை தவிர்க்குமாறும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
எனவே, ஆள்மாறாட்டம் செய்து பணம் பெற முயற்சிக்கும் மோசடி நபர்கள் அல்லது குழுக்கள் குறித்து கணினி குற்ற விசாரணை பிரிவின் இலக்கங்களுக்கு உடனடியாக அறிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
கணினி குற்ற விசாரணைப் பிரிவின் பணிப்பாளர்: 071 – 8592918
கணினி குற்ற விசாரணைப் பிரிவு அதிகாரிகள்: 071 – 8591765
கணினி குற்ற விசாரணைப் பிரிவு (அலுவலகம்): 011 – 2300756
இதுபோன்ற மோசடிகள் தொடர்பாகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு நேரடியாகச் சென்று எழுத்துமூலம் முறைப்பாடு செய்யும் வசதியும் காணப்படுவதாக பொலிஸ் தலைமையகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
லண்டனில் நடைபெற்ற சர்வதேச மேடைப்பேச்சு போட்டியில் (International Public Speaking Competition – IPSC 2026) இலங்கையைச் சேர்ந்த ஒமர் ஹசாரி என்ற மாணவர் முதலிடம் பெற்று உலக சாம்பியன் பட்டத்தை வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார்.
கொழும்பு ரோயல் கல்லூரியைப் பிரதிநிதித்துவப்படுத்திய 19 வயதுடைய ஒமர் ஹசாரி, உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்களை பின்னுக்குத் தள்ளி இந்த சாதனையைப் பதிவு செய்துள்ளார்.
பிரித்தானியாவின் The English-Speaking Union UK அமைப்பினால் நடத்தப்பட்ட இந்த சர்வதேச போட்டியில், அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 45 நாடுகளைச் சேர்ந்த ஒரு இலட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் பங்கேற்றிருந்தனர்.
கடும் போட்டிக்குப் பிறகு இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்ற ஒமர் ஹசாரி, தனது சிறப்பான பேச்சுத் திறமையால் நடுவர்களின் பாராட்டைப் பெற்று முதலிடத்தை கைப்பற்றினார்.
இப்போட்டியில் ருமேனியாவைச் சேர்ந்த மாணவர் இரண்டாம் இடத்தையும், உகாண்டாவைச் சேர்ந்த மாணவர் மூன்றாம் இடத்தையும் பெற்றனர்.
இறுதிச் சுற்றில், தனது சிறுவயது அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு ஒமர் ஹசாரி ஆற்றிய உரை நடுவர்களை பெரிதும் கவர்ந்தது.
பாடசாலைப் பருவத்தில் எதிர்கொண்ட கேலி, அவமதிப்பு மற்றும் அதனால் ஏற்பட்ட திக்குவாய் குறைபாட்டை பிறரின் ஆதரவுடன் எவ்வாறு வெற்றிகரமாகக் கடந்து வந்தார் என்பதை அவர் உணர்வுபூர்வமாக பகிர்ந்து கொண்டார்.
அத்துடன், பாடசாலைகளில் இடம்பெறும் கொடுமைப்படுத்தலுக்கு (Bullying) எதிராக தனது பாடசாலையில் 3,000-க்கும் மேற்பட்ட மாணவர்களை சென்றடைந்த விழிப்புணர்வு இயக்கத்தை ஆரம்பித்த அனுபவத்தையும் தனது உரையில் எடுத்துரைத்தார்.
இந்த வெற்றியின் மூலம், உலகளாவிய மேடைப்பேச்சு போட்டியில் இலங்கை தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துள்ளது. இதற்கு முன்னர், 2025ஆம் ஆண்டு நடைபெற்ற இதே போட்டியில் இலங்கையைச் சேர்ந்த சஷேன் தசநாயக்க உலக சாம்பியன் பட்டத்தை வென்றிருந்தார்.
தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டும் இலங்கை மாணவர்கள் உலக சாம்பியன் பட்டத்தை வென்றிருப்பது, சர்வதேச அரங்கில் இலங்கை இளைஞர்களின் பேச்சாற்றல், தன்னம்பிக்கை மற்றும் தலைமைத்துவத் திறனுக்கு கிடைத்துள்ள மற்றுமொரு முக்கிய அங்கீகாரமாகப் பார்க்கப்படுகிறது.
கம்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெலிகல்ல – உடோவிட்ட பகுதியில், நேற்று (22) மாலை மகாவலி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது நீரில் மூழ்கி மாயமான 15 வயதுச் சிறுவன், இன்று (23) பிற்பகல் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நேற்று மாலை நான்கு சிறுவர்கள் இணைந்து மகாவலி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த போதே இத்துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஆற்றில் மூழ்கி காணாமல்போன சிறுவனைக் கண்டறியும் பணியில் பிரதேசவாசிகளும் கம்பளை பொலிஸாரும் இணைந்து உடனடியாகத் தீவிர தேடுதலில் ஈடுபட்டனர்.
இரண்டாவது நாளாக இன்று காலை கடற்படையின் சுழியோடிகள் வரவழைக்கப்பட்டு, தீவிர தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
இத்தீவிர தேடுதலின் பலனாக இன்று பிற்பகல் சிறுவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. சடலம் தொடர்பான முதற்கட்ட சட்டப்பூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, உடற்கூற்றுப் பரிசோதனைக்காகக் கம்பளை வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்படவுள்ளது.
பரிசோதனைகள் நிறைவடைந்த பின்னர் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து கம்பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஹோமாகம, கட்டுவான கைத்தொழில் வலயத்தில் அமைந்துள்ள தலைக்கவசம் தயாரிக்கும் தொழிற்சாலையில் இடம்பெற்ற தீ விபத்தில் உயிரிழந்தவர்கள் தொடர்பில் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறித்த தொழிற்சாலையில் நேற்று முன்தினம் (21) காலை ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் ஐவர் உயிரிழந்த நிலையில், அவர்களின் உடலங்கள் மீதான மரபணு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
மரபணு பரிசோதனை
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் முழுமையாக அடையாளம் காண முடியாத அளவுக்கு எரிந்துள்ளதால், அவை ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டு மரபணு பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
இந்த பரிசோதனை முடிவுகள் வெளியாவதற்கு ஐந்து நாட்கள் வரை செல்லலாம் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்த தீ விபத்தில் உயிரிழந்தவர்களில் பன்னிப்பிட்டியவைச் சேர்ந்த, மரியோ எட்வர்ட் என்ற, சுமார் 15 வருடங்களாக குறித்த தொழிற்சாலையில் மேற்பார்வையாளராக பணிபுரிந்த ஒருவரும் அடங்குவதாக கண்டறியப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் உயிரிழந்த தெனியாயவைச் சேர்ந்த 19 வயதுடைய சஹன் உதார ஆறு மாதங்களுக்கு முன்பு அங்கு பணிக்கு சேர்ந்துள்ளதுடன், அவரது நண்பரான அதே பகுதியைச் சேர்ந்த கமகே திலீப் மதுசங்க (வயது 19) என்பவர் 4 நாட்களுக்கு முன்பே பணியில் இணைந்து கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்தவர்களில் நால்வர் அங்கு, பணிக்கு சேர்ந்து சில மாதங்களே ஆகின்றன என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவத்தில் ஹட்டன் – மஸ்கெலியாவைச் சேர்ந்த 26 வயதுடைய வரதராஜ் தமயந்தி என்ற யுவதியும் உயிரிழந்துள்ளதுடன், இவர் குறித்த தொழிற்சாலையில், 6 மாதங்களுக்கு முன்பே பணியில் இணைந்து கொண்டுள்ளமை தெரியவந்துள்ளது.
இந்த சம்பவத்தில் உயிரிழந்த மற்றையவர் அட்டகலம்பன்ன பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய சச்சின் தில்ஷான் என்பவரென கண்டறியப்பட்டுள்ளது.
இவர் ருமேனியா நாட்டுக்கு தொழிலுக்காக செல்வதற்கு விசா கிடைக்கும் வரை தற்காலிகமாக அங்கு பணிபுரிந்து வந்தவர் என தெரியவந்துள்ளது.
வேலைவாய்ப்பு பணியகத்தில் இரண்டு நாட்கள் பயிற்சியை நிறைவுசெய்துள்ள இவர், பணியில் இணைந்து இரண்டு வாரங்களேயாவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனிடையே, இந்த தொழிற்சாலையின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அனுமதிப்பத்திரத்தை புதுப்பிக்கும் நடவடிக்கையின்போது, மத்திய சுற்றாடல் அதிகார சபையினால் அங்குள்ள பல குறைபாடுகளை சுட்டிக்காட்டியுள்ளனர்.
குறிப்பாக, தொழிற்சாலையில் முறையான தீயணைப்பு பாதுகாப்பு அமைப்பு இன்மையை பிரதானமாக அதிகாரிகள் சுட்டிக்காட்டியிருந்தனர்.
அத்துடன், 20 நாட்களுக்குள் குறைபாடுகளை நிவர்த்தி செய்யுமாறு மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் அதிகாரிகள், கடந்த மாதம் 2 ஆம் திகதியன்று எழுத்துமூலம் குறித்த தொழிற்சாலையில் நிர்வாகத்துக்கு அறிவுறுத்தியிருந்ததாகவும் தெரியவந்துள்ளது.
இந்த கால அவகாசம் முடிவடைவதற்கு ஒரு நாள் மாத்திரமே இருந்த நிலையில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகின்றது.
இதேவேளை, மின்சாரக் கசிவு காரணமாகவே இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
தொழிற்சாலைகளில் 80 முதல் 100-க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்த போதிலும், தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான போதிய பாதுகாப்பு வழிமுறைகளும் அவசரகாலத் திட்டங்களும் அங்கு முறையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை என மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்
ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் மல்லியப்பூ சந்திக்கு அருகில் இடம்பெற்ற லொறி விபத்தில், அதில் பயணித்த இருவர் கடுமையான காயங்களுக்கு உள்ளாகி டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து நேற்று (22) சுமார் 11.00 மணியளவில், ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மல்லியப்பூ பகுதியில் இடம்பெற்றுள்ளது.
கொழும்பிலிருந்து மஸ்கெலியா நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த லொறி, திடீரென கட்டுப்பாட்டை இழந்து வீதியோர மதிலில் மோதி விபத்துக்குள்ளானதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
விபத்து ஏற்பட்டதையடுத்து, அப்பகுதி மக்கள் மற்றும் அவசர சேவைப் பிரிவினர் உடனடியாக மீட்புப் பணிகளில் ஈடுபட்டு, லொறியில் சிக்கியிருந்த இருவரையும் மீட்டு டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பியுள்ளனர்.
லொறி சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை மயக்கம் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளதுடன், விபத்திற்கான துல்லியமான காரணத்தை கண்டறியும் நோக்கில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
ஹட்டன் போக்குவரத்து பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
ஹோமாகம, கட்டுவான பகுதியில் தலைக்கவசம் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த யுவதி தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நேற்று முன்தினம் (21) காலை தொழிற்சாலையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் ஐவர் உயிரிழந்த நிலையில், அவர்களின் உடல்கள் அடையாளம் காணமுடியாத அளவு தீயில் எரிந்திருந்தன.
இதனையடுத்து ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் மரபணு பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், பரிசோதனை முடிவுகள் வெளியாவதற்கு ஐந்து நாட்கள் வரை செல்லலாம் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்த தீ விபத்தில் பன்னிப்பிட்டியவை சேர்ந்த 55 வயதுடைய மரியோ எட்வர்ட், தெனியாயவைச் சேர்ந்த 19 வயதுடைய சஹன் உதார, அவரது நண்பரான அதே பகுதியைச் சேர்ந்த கமகே திலீப் மதுசங்க (வயது 19),
அட்டகலம்பன்ன பகுதியை சேர்ந்த 24 வயதுடைய சச்சின் தில்ஷான், ஹட்டன் – மஸ்கெலியாவை சேர்ந்த 26 வயதுடைய வரதராஜ் தமயந்தி ஆகியோர் உயிரிழந்திருந்தனர்.
இந்நிலையில், 26 வயதான வரதராஜன் தமயந்தியின் உடல் இன்று ( 23) ஆம் திகதி அதிகாலை 3:00 மணியளவில் அவரது இல்லத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
குடும்பத்தில் இரண்டாவது பிள்ளையான வரதராஜன் தமயந்தியின் குடும்பத்தில், மூத்த சகோதரர் ஒருவர் மற்றும் இரண்டு இளைய சகோதரர்கள், பெற்றோர் உள்ளடங்களாக ஆறு பேர் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவரது தந்தை தோட்டத்தொழிலாளி என்றும், குடும்பத்தின் நிதி நெருக்கடி காரணமாக, அவர் ஆறு மாதங்களுக்கு முன்பு ஹோமாகம தலைக்கவச தொழிற்சாலையில் பணியில் சேர்ந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
சிங்கள, தமிழ் புத்தாண்டுக்காக இரண்டு நாட்கள் விடுப்பில் அவர் கடைசியாக வீட்டிற்கு சென்று மீண்டும் பணிக்கு திரும்பியதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், அவரது இறுதிச்சடங்குகள் இன்று ( 23) தோட்ட பொது மயானத்தில் நடைபெறவுள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் தங்கத்தின் விலை இன்றைய தினம் (23.07.2026) வீழ்ச்சியடைந்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
24 கரட் தங்கம் ஒரு பவுண் ரூ.1,000 குறைந்து ரூ.377,000 ஆகப் பதிவாகியுள்ளது.
தற்போதைய விலை நிலவரப்படி, 22 கரட் தங்கம் ஒரு பவுண் ரூ.346,800 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
அதேவேளை, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராம் ரூ.47,125 ஆகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராம் ரூ.43,350 ஆகவும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை மாற்றங்களுக்கு ஏற்ப, உள்நாட்டு தங்க விலைகளிலும் தொடர்ந்து ஏற்ற, இறக்கங்கள் பதிவாகி வருவதாக நகை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
வவுனியா காமினி மகா வித்தியாலய மாணவர் மன்றத்தின் ஏற்பாட்டில், சமூக விழிப்புணர்வையும் சுற்றாடல் தூய்மையையும் வலியுறுத்தும் வகையில் சிறப்புத் தூய்மையாக்கல் திட்டமொன்று இன்று (23.07.2026) காலை வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது.
வவுனியா – மன்னார் வீதியில் அமைந்துள்ள பொதுப் பேருந்து தரிப்பிடம் மற்றும் அதனைச் சூழ்ந்துள்ள பகுதிகளை இலக்காகக் கொண்டு இத்தூய்மைப் பணி முன்னெடுக்கப்பட்டது.
இதன் போது, பேருந்து தரிப்பிடத்தின் சுவர்களில் ஒட்டப்பட்டிருந்த விளம்பரச் சுவரொட்டிகள் முழுமையாக அகற்றப்பட்டு, அப்பகுதியில் படிந்திருந்த தூசிகள், குப்பைகள் என்பன மாணவர்களால் அகற்றிச் சுத்தம் செய்யப்பட்டன.
சுற்றாடலைப் பேணிப் பாதுகாக்கும் நோக்கில் மாணவர்கள் ஆற்றிய இந்தச் சேவை, அப்பகுதியால் பயணித்த பொதுமக்கள் மற்றும் பயணிகளிடையே பெரும் வரவேற்பையும் பாராட்டையும் பெற்றுள்ளது.
இளம்பருவத்திலேயே மாணவர்கள் காட்டிய இந்தச் சமூகப் பொறுப்புணர்வு, ஏனைய பாடசாலை மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் ஒரு மிகச்சிறந்த முன்மாதிரியாகவும் வழிகாட்டியாகவும் அமைந்துள்ளது என பொதுமக்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
வவுனியா ஈஸ்வரிபுரம் இளந்தளிர் முன்பள்ளியின் 2026ஆம் ஆண்டிற்கான வருடாந்த விளையாட்டு விழா நிகழ்வு நேற்றுமுன்தினம் (21.07.2026) மிகச் சிறப்பாக நடைபெற்றது.
சிறுவர்களின் திறமைகளை வெளிக்கொணரும் வகையில் அமைந்த இந்நிகழ்வில், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்பித்தார்.
கௌரவ விருந்தினர்களாக வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் உப தவிசாளர் பாலசுப்ரமணியம் கோணேஸ்வரி மற்றும் ஓய்வுநிலை முன்பள்ளி உதவிக்கல்விப் பணிப்பாளர் இராஜேஸ்வரன் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.
மேலும், சிறப்பு விருந்தினர்களாக சிவசுப்ரமணியம் லோகேஸ்வரன் (அதிபர் – மறவன்குளம் பாரதிதாசன் வித்தியாலய சமூக சேவையாளர்), பாலச்சந்திரன் சிந்துஜன் (பாராளுமன்ற உறுப்பினரின் செயலாளர்), ரூபன் (தலைவர் – ஈஸ்வரிபுரம் கிராம அபிவிருத்தி சங்கம்)
அத்துடன்,
அயல் முன்பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டு சிறுவர்களின் விளையாட்டு நிகழ்வுகளைக் கண்டு களித்து அவர்களை உற்சாகப்படுத்தினர்.
நிகழ்வின் நிறைவில் போட்டிகளில் வெற்றிபெற்ற சிறுவர்களுக்கு விருந்தினர்களால் சான்றிதழ்களும் பரிசுகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டன.