இலங்கையை உலுக்கிய சம்பவத்தின் அதிர்ச்சிப் பின்னணி : மகளின் பிறந்தநாளில் குடும்பத்தை எரித்த ஈவிரக்கமற்ற தந்தை!!

அனுராதபுரம் காலென்பிந்துனுவெவ பிரதேசத்தில் தனது மகளின் பிறந்தநாளில் தந்தை தீவைத்து குடும்பத்தை கொன்ற சம்பவம் முழு இலங்கையையுமே உலுக்கியுள்ள்து.

முழு அனுராதபுரத்தையும் உலுக்கிய, மனித இதயங்களைக் கலங்கடிக்கும் ஒரு பெரும் சோகச் செய்தி இது. நேற்று காலை (6) நுவரகம கொலனியாவில் உள்ள காலென்பிந்துனுவெவ பகுதியிலிருந்து வெளிவந்தது.

குடும்பத் தகராறு முற்றியதன் இறுதி விளைவாக, ஒரு முழு குடும்பமும் அழித்தொழிக்கப்பட்டது, தன்னுடைய குழந்தைகளின் பாதுகாப்புக்கு அர்ப்பணித்திருக்க வேண்டிய ஒரு தந்தை,

குழந்தைகளையும், அ மனைவியையும் தீயில் கருகிப் போகச் செய்தது விதியின் கொடூரமான விளையாட்டா என்பதைப் புரிந்துகொள்வதே கடினமாக உள்ளது.

காலென்பிந்துனுவெவ காவல் பிரிவுக்கு உட்பட்ட பண்டிகரமடுவ பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இந்த கொடூரக் குற்றம் நடந்துள்ளது.

நேற்று அதிகாலை 2:00 மணியளவில், சமன் அனுருத்த பிரதீப்பிரியா என்ற 43 வயது தச்சரான ஒருவர், தனது மனைவி, குழந்தைகள் மற்றும் மாமியார் தூங்கிக்கொண்டிருந்த அறைக்குள் பெட்ரோல் போன்ற எரியக்கூடிய திரவத்தை ஊற்றி தீ வைத்ததன் மூலம் இந்தக் குற்றத்தைச் செய்துள்ளார். இந்தத் துயரம் பலியான 13 வயது மகளின் பிறந்தநாளில் நிகழ்ந்துள்ளது.

உயிரிழந்த 13 வயது மகள் திமல்கா ஜெயஷானியின் பிறந்தநாள், சம்பவம் நடந்த நாளுக்கு முந்தைய நாள், ஜனவரி 5 ஆம் தேதி ஆகும். சந்தேகத்திற்குரிய தந்தை, தனது இளைய மகளின் பிறந்தநாளைக் கொண்டாடுவதாகக் கூறி,

கேக்குகள் மற்றும் பரிசுகளுடன் பண்டிகரமடுவவில் உள்ள தனது மனைவியின் தாயாரின் வீட்டிற்கு மிகுந்த பாசத்துடன் வந்துள்ளார்.

அவர் தனது குழந்தைகளுடனும் மனைவியுடனும் பிறந்தநாளைக் கொண்டாடி, கேக் வெட்டி மகிழ்ச்சியாக இருந்ததாக ஆரம்பகட்ட காவல்துறை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பிறந்தநாள் கொண்டாட்டத்தின் முடிவில் தந்தையின் மனதில் உருவான கொடூரமான திட்டத்தால் அந்த மகிழ்ச்சி ஒரு கணத்தில் சாம்பலானது. திரும்பிச் செல்வதாகக் கூறி வீட்டை விட்டு வெளியேறுவது போல் நடித்த அந்தச் சந்தேக நபர், உண்மையில் அந்த இடத்தை விட்டுச் செல்லவில்லை.

அவர் வந்த லாரியை வீட்டிற்கு அருகில் நிறுத்திவிட்டு, வீட்டில் இருந்தவர்கள் தூங்கும் வரை காத்திருந்ததாக காவல்துறை சந்தேகிக்கிறது. நள்ளிரவுக்குப் பிறகு, வீட்டில் இருந்தவர்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது, ​​சந்தேக நபர் தனது செயலை அரங்கேற்றினார்.

அவர் வீட்டிற்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த லாரியின் கூரை மீது ஏறி, அதன் வழியாக இரண்டு மாடி வீட்டின் மேல் தளத்திற்குள் நுழைந்தார்.

பின்னர், தனது மனைவி, இரண்டு மகள்கள் மற்றும் மாமியார் உறங்கிக்கொண்டிருந்த அறையைக் கண்டுபிடித்து, அதில் எரியக்கூடிய திரவத்தை ஊற்றி தீ வைத்தார். தீ மளமளவெனப் பரவி, அறை முழுவதும் கொழுந்துவிட்டு எரிந்தது, உள்ளே இருந்தவர்களுக்குத் தப்பிப்பதற்கு எந்த வாய்ப்பும் கிடைக்கவில்லை.

தீ விபத்தால் ஏற்பட்ட கடுமையான தீக்காயங்கள் காரணமாக, தீ வைத்த சமன் அனுருத்த பிரதீப்பிரியா மற்றும் பிறந்தநாள் கொண்டாடப்பட்ட 13 வயது மகள் திமல்கா ஜெயஷானி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலத்த காயமடைந்த 36 வயது மனைவி திருமதி பிரபாஷா சந்தமாலி ஜெயரத்ன மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.

வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் : தயார் நிலையில் அதிகாரிகள்!!

எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய எந்தவொரு பேரிடரையும் எதிர்கொள்ள தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொண்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் (DMC) தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு தென்கிழக்கே வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் முன்னெச்சரிக்கை அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

இதன் காரணமாக, 8 ஆம் திகதி முதல் வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் மழை பெய்யும் நிலை அதிகரிப்பு ஏற்படக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், காலநிலை மாற்றங்களை எதிர்கொள்ள தேவையான அனைத்து ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் இயக்குநர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.

அதன்படி ஏற்படக்கூடிய அனர்த்தங்கள் குறித்து அவதானம் செலுத்தி, அவற்றிலிருந்து பாதுகாப்புப் பெறுவதற்காக அனர்த்த முகாமைத்துவப் பிரிவுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதற்கிடையில், கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் பல பகுதிகளுக்கு மண்சரிவு குறித்து தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் சிவப்பு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளமை கறிப்பிடத்தக்கது.

காற்றழுத்த தாழ்வு மண்டலம் : யாழ்ப்பாணம் இதுவரை எதிர்கொள்ளாத பாதிப்பை சந்திக்குமென எச்சரிக்கை!!

தற்போது உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் யாழில் 650 மில்லிமீற்றருக்கும் அதிக மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் உள்ளதாக யாழ். பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.

இதன் தாக்கம் காரணமாக யாழ். மாவட்டம் இதுவரை எதிர்கொள்ளாத அளவு பாதிப்புகளை எதிர்கொள்ள நேரிடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் இன்று (07.01.2026) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், உருவாகியுள்ள தாழ்வு மண்டலமானது, நாட்டின் கிழக்கு கடற்கரையை நோக்கி நகர உள்ளது. இது மணிக்கு 9 கிலோமீற்றர் வேகத்தில் நகரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதனால் 60 கிலோமீற்றர் வேகத்தில் காற்றும் வீசுக்கூடும்.

குறிப்பாக 1970ஆம் ஆண்டுக்கு பின்னர் ஜனவரி மாதத்தில் உருவாகியுள்ள 21ஆவது தாழ்வு மண்டலமாக அமைகின்றது. ஆனாலும் கடந்து சென்ற தாழ்வு மண்டலங்கள் விட இது அதிக தாக்கத்தை ஏற்படுத்தும்.

அதாவது இதன் நகர்வும் பாதை கடல் பகுதியாக இருந்தாலும் வடக்கு நோக்கி நகரும் போது தரையையும் ஊடறுத்துச் செல்லவுள்ளது. அத்துடன் மிக குறைந்தளவு வேகத்தில் நகர்வதால் எதிர்வரும் 8, 9, 10ஆம் திகதிகளில் கிழக்கு மாகாணம் பாரியளவு மழைவீழ்ச்சியை எதிர்கொள்ள வாய்ப்புள்ளது.

அத்துடன் 9, 10 ஆம் திகதிகளில் யாழ். மாவட்டம் மிக அதிக மழைவீழ்ச்சியை எதிர்கொள்ள உள்ளது. இதன் தாக்கம் டிட்வா புயலால் தென்பகுதி எதிர்கொண்ட பேரழிவுகளை விட அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்க முடிகிறது.

துறைசார் அதிகாரிகள் இது தொடர்பில் துரித முன்னேற்பாடுகளை முன்னெடுப்பது சிறந்தது. எனவே பொதுமக்கள் இந்த விழிப்புணர்வு எச்சரிக்கையை அவதானத்தில் கொண்டு தங்களது பாதுகாப்பை உறுதி செய்வது அவசியம் என அறிவுறுத்தியுள்ளார்.

 

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய இளைஞன் : பின்னணியில் இலங்கைப் பெண்!!

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த இலங்கை பயணி ஒருவர் சுமார் 70 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள ‘குஷ்’ போதைப்பொருள் பொதியுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று (07) காலை போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகள் குழுவினால் ‘கிரீன் ரோடு’ வழியாக விமான நிலையத்திலிருந்து போதைப்பொருள் பொதியை எடுத்துச்செல்ல முயன்றபோது கைது செய்யப்பட்டுள்ளார்.

நீர்கொழும்பில் சுற்றுலா விடுதியை நடத்தும், ஜாஎலயை சேர்ந்த 24 வயதுடைய சந்தேகநபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

பின்னணியில் இலங்கை பெண்

தாய்லாந்தின் பெங்காங்கிலிருந்து இந்தியாவின் புது டில்லிக்கு ‘குஷ்’ போதைப்பொருள் பொதியை அவர் கொண்டு வந்து, அங்கிருந்து இன்று காலை சுமார் 07.33 மணிக்கு இந்தியன் எயார்லைன்ஸ் விமானம் AI 277 இல் கட்டுநாயக்க விமான நிலையத்தினை வந்தடைந்துள்ளார்.

இவர் 7 கிலோகிராம் 70 கிராம் ‘குஷ்’ என்ற போதைப்பொருளை 15 பொதிகளில் இரண்டு சூட்கேஸ்களில் இனிப்புகள் அடங்கிய பொதிகளுடன் மறைத்து வைத்திருந்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து சுங்கத்துறையினர் நடத்திய ஆரம்பகட்ட விசாரணையில், தாய்லாந்தில் வசிக்கும், இலங்கை பெண் ஒருவரால், நாட்டிற்கு கொண்டுவருவதற்காக போதைப்பொருள் ஒப்படைக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

சந்தேகநபரை மேலதிக விசாரணைக்காக கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியக அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வலுப்பெற்றுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் : சில பகுதிகளில் நாளை முதல் தீவிரமடையும் மழை!!

வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென் கிழக்கே நிலை கொண்டிருந்த நன்கமைந்த காற்றழுத்த தாழ்வு நிலை தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது என்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளரான நாகமுத்து பிரதீபராஜா குறிப்பிட்டுள்ளார்.

அவர் இன்று 07.01.2026 புதன்கிழமை நண்பகல் 12.45 மணிக்கு வெளியிட்டுள்ள அறிக்கையிலே இவ்வாறு குறிப்பிட்டார். இது நாளை இரவு (08.01.2026) ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது ஒரு புயலாக மாறுமா என்பது தொடர்பாக நாளை இரவே(08.01.2026) தீர்மானிக்க முடியும்.

ஒரு புயலின் படிநிலை வளர்ச்சியில்,

1. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி

2. காற்றுச் சுழற்சி

3. காற்றழுத்த தாழ்வு நிலை

4. நன்கமைந்த காற்றழுத்த தாழ்வு நிலை

5. தாழ்வு மண்டலம்

6. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்

7. புயல்

8. சூறாவளி

9. சூப்பர் சூறாவளி என அமையும்.

நாளை முதல் தீவிரம்

தற்போது தெற்கு, மத்திய, ஊவா, கிழக்கு, வட மத்திய, வடக்கு ( ஒரு சில பகுதிகளில்) மாகாணங்களுக்கு கிடைத்து வரும் மழை நாளை முதல் தீவிரமடையும்.

குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் நாளை முதல் மழை பரவலடைவதோடு செறிவடையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

தாழமுக்கம் தொடர்ச்சியாக வலுவடைகிறது. ஆகவே வானிலை நிலைமைகளின் குழப்பநிலையும் மோசமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆகவே மக்கள் எச்சரிக்கை அறிவுறுத்தல்களைப் பின்பற்றி, போதுமான தயார்ப்படுத்தல்களை மேற்கொள்வது அவர்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புக்களைக் குறைக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

 

இந்திய முகாமில் வசிக்கும் இலங்கைப் பெண்ணின் கோரிக்கை!!

இலங்கைக்கு தங்களை மீள அனுப்புமாறு இந்திய முகாமில் வசிக்கும் மன்னாரை சேர்ந்த பெண் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் (05) மாவட்ட ஆட்சியரிடம் மனுவினை வழங்கிய பின்னர் இந்திய ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையில் நிலவிய பொருளாதார நெருக்கடியின் காரணமாக 2023ஆம் ஆண்டு மே மாதம் மன்னாரில் இருந்து கடல்வழியாக இந்தியாவிற்கு சென்று இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வரும் மன்னார் மாவட்டத்தை சேர்ந்த ஜிம்ஸ்ரிக் அவரது மனைவி கிறிஸ்ரபேல் ராஜினி குடும்பத்தினரே கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

தாங்கள் தங்கவைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் போதியளவு அடிப்படை மற்றும் உணவு வசதிகள் இல்லாததால் சொந்த நாட்டுக்கு அனுப்புமாறு மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை மனு கொடுத்தும்

இதுவரை தம்மை அனுப்பிவைக்காததால் மிகுந்த சிரமங்களை எதிர்கொள்வதாகவும், இந்த விடயத்தில் இலங்கை ஜனாதிபதி உதவ வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

தம்மோடு தங்கியிருந்த 13 குடும்பங்களில் 9 குடும்பங்கள் சட்டவிரோதமான முறையில் பணம் செலுத்தி படகில் இலங்கைக்கு மீண்டும் சென்றுள்ளதாகவும், தம்மிடம் படகில் செல்வதற்குரிய போதியளவு பண வசதி இல்லாத காரணத்தினால் தங்களால் செல்ல முடியாமல் உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த 2022 மார்ச் மாதம் 20ஆம் திகதியிலிருந்து 300க்கும் மேற்பட்ட இலங்கை தமிழர்கள் தனுஷ்கோடி கடல் வழியாக தமிழகத்திற்குள் அகதிகளாக வரத் தொடங்கியுள்ளனர்.

இவர்கள் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் தங்க வைத்து அவர்களுக்கு உணவு மற்றும் அடிப்படை வசதிகளை செய்து கொடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கஜேந்திரகுமாருக்கு எதிரான அர்ச்சுனாவின் கடும் விமர்சனம் : இடத்தை மாற்றுமாறு சபையில் குழப்பம்!!

நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தனது நாடாளுமன்ற சிறப்புரிமைகள் மீறும் வகையில் செயற்பட்டுள்ளார் என்று அர்ச்சுனா ராமநாதன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்றையதினம் (07.01.2026) உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மோசமான வார்த்தை பிரயோகங்களில் தன்மை பேசியதாகவும் மேலும் பல குற்றச்சாட்டுகளை முன்வைத்து அதற்கெதிராக நடவடிக்கை எடுக்குமாறும்,

அத்தோடு தனது பக்கத்து ஆசனத்தில் அமர்ந்திருக்கும் அவரை மாற்றுமாறும் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன் சபாநாயகரை கேட்டுக் கொண்டுள்ளார். தொடர்ந்து பேசிய அவர்,

அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் எனது தாய் தொடர்பில் மோசமான வார்த்தைகளில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பேசினார்.

ஒரு சாதாரண மனிதர் கூட அவ்வாறான மோசமான வார்த்தைகளில் கதைக்க மாட்டார்கள். மேலும் எனது தாயை நான் கேவலமாக நடத்தியதாகவும் ஆங்கிலத்தில் பல மோசமான வார்த்தைகளை பிரயோகித்தார்.

நாடாளுமன்றத்தில் எனது பெயரை விழித்து தனது கதிரைக்கு வலப்பக்கத்தில் இருப்பதாகவும் தமிழில் வேண்டத்தகாத வார்த்தைகளை பிரயோகித்துள்ளார்.

இவ்வாறான ஒரு நபர் நாடாளுமன்ற ஒழுக்காற்று சபையில் தொடர்ந்து பதவி வகிப்பது தொடர்பில் ஐயப்பாடு ஏற்பட்டுள்ளது. இது ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் சிறப்புரிமை மீறல் மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழ் மக்களின் கலாசாரம் தொடர்பானதாகும்.

ஆதலால் எனது கதிரையின் வலப்பக்கத்தில் இருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை வேறு இடத்திற்கு மாற்றவும். அவர் தொடர்ந்து எனதருகில் இருப்பதால் ஏற்படும் பிரச்சினைகளுக்கு எனக்கு பொறுப்பு கூட முடியாது.

இவ்வாறான ஒழுக்கமற்ற பண்பற்ற ஒரு நபர் நாடாளுமன்ற சிறப்புரிமை குழுவில் இருக்க முடியாது என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டிருந்தார்.

வவுனியாவில் அதிரடி சோதனை : 10க்கு மேற்பட்ட வாகன சாரதிகளுக்கு எதிராக குற்றப்பத்திரம்!!

வவுனியாவில் பேருந்துகள் மற்றும் முச்சக்கரவண்டிகளை மறித்து திடீர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதுடன் 10க்கு மேற்பட்ட சாரதிகளுக்கு எதிராக குற்றப்பத்திரமும் தாக்கல் செய்யப்பட்டது.

வவுனியா மாவட்ட மோட்டார் திணைக்கள பிரதான பரிட்சையாளர் ஏ.எம்.வி.கே அதிகாரி தலைமையில் வவுனியா நெளுக்குளம் பொலிஸ் நிலைய மற்றும் மாவட்ட பிரிவு போக்குவரத்து பொலிஸாரினால் இந்த திடீர் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

குறித்த செயற்பாடானது வவுனியா நெளுக்குளம் பகுதியில் சதொச சந்தியில் இன்று காலை 10.30 மணி தொடக்கம் மதியம் 1.30 மணி வரை முன்னெடுக்கப்பட்டது. இதன்போது அரச மற்றும் தனியார் பேருந்துகள், அதிவேக மோட்டார் சைக்கிள்கள், முச்சக்கரவண்டிகள் என்பன சோதனைக்குட்படுத்தப்பட்டன.

அவற்றில் மேலதிக பாகங்கள் பொருத்தியமை, வழுக்கையான ரயர்கள், லைட் மற்றும் வைசர் வேலை செய்யாமை, அதிக ஒலி எழுப்பும் கோன், விபத்தினை ஏற்படுத்தும் வகையிலான பாகங்கள் பொருத்தியமை,

போன்ற பல்வேறு குற்றங்களுக்காக முச்சக்கரவண்டி சாரதி, மோட்டார் சைக்கிள் சாரதி, பேருந்து சாரதிகள் என 10க்கு மேற்பட்ட வாகன சாரதிகளுக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டன.

அரச சேவையில் இணைய காத்திருப்போருக்கு மகிழ்ச்சித் தகவல் : அரசின் அதிரடி அறிவிப்பு!!

அரச சேவையில் புதிதாக 72,000 பேரை இணைத்துக் கொள்ளவுள்ளதாக தொழிலாளர் அமைச்சரும் நிதி மற்றும் திட்டமிடல் இராஜாங்க அமைச்சருமான அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

2026ஆம் ஆண்டில் பொதுமக்களுக்கு மிகவும் அத்தியாவசியமான மற்றும் நெருக்கமான சேவைகளை வழங்கும் அரசு நிறுவனங்கள் உட்பட, முழு அரச சேவையிலும் உள்ள வெற்றிடங்கள் பூர்த்தி செய்யப்படவுள்ளன.

குறித்த வேலை வெற்றிடங்களை நிரப்புவதற்கு தேவையான ஒப்புதலையும், 20 பில்லியன் ரூபாய் நிதியையும் அரசாங்கம் ஏற்கனவே ஒதுக்கியுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

பொருளாதார மேம்பாடு மற்றும் நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சராக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வழங்கிய அறிவுறுத்தல்களுக்கமைய இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

அரச சேவையில் உள்ள அந்தந்த வெற்றிடங்களுக்கு பட்டதாரிகள் கூட போட்டித் தேர்வை எதிர்கொண்ட பின்னரே ஆட்சேர்ப்பு செய்யப்படுவார்கள் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

வெளிப்படைத்தன்மை மற்றும் திறமைகள் நிறைந்த ஒரு குழுவை அரச சேவையில் கொண்டு வருவது பொது மக்களுக்கு சேவைகளை வழங்குவதில் பெரும் உறுதுணையாக இருக்கும்.

ஒவ்வொரு ஆண்டும் 25,000 அரசு ஊழியர்கள் ஓய்வு பெறுகிறார்கள். ஓய்வு பெறுபவர்களுக்கு பதிலாக புதியவர்களை நியமிக்க வேண்டும். அதற்கமைய, பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையிலான குழு மூலம் வெற்றிடங்களை நிரப்ப அரசாங்கம் ஒப்புதல் வழங்கியுள்ளதாக அமைச்சர் கூறினார்.

அமைச்சுகள், கூட்டுத்தாபனங்கள், சட்டரீதியான வாரியங்கள் மற்றும் பிற பொது நிறுவனங்களில் பணியாளர் வெற்றிடங்களை விரைவாக நிரப்புவதன் காரணமாக இந்த ஆண்டு பல புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்.

பொது மக்களுக்கு நேர்மையான அரச சேவையை வழங்கும் நோக்கில், அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கும், அரச சேவையில் புதிய ஆட்சேர்ப்பு செய்வதற்கும் நாட்டின் வரலாற்றில் அதிக அளவு பணம் ஒதுக்கப்பட்ட ஆண்டாக 2026ஆம் ஆண்டு பதிவு செய்யப்படும்” என அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கையை உலுக்கிய கோர சம்பவம் தந்தை – மகள் பலி : மனைவி மற்றும் பிள்ளை படுகாயம்!!

அனுராதபுரம், கலேன்பிந்துனுவெவ பகுதியில் குடும்ப தகராறு காரணமாக ஒருவர் தனது வீட்டிற்கு பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ள நிலையில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

கலேன்பிந்துனுவெவ பொலிஸ் பிரிவில் உள்ள ஒரு வீட்டில் இன்று அதிகாலை 2 மணியளவில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தீ வைத்த 43 வயது நபரும் அவரது 13 வயது மகளும் தீயில் கருகி உயிரிழந்துள்ளனர். தீ விபத்தில் சிக்கிய 36 வயது மனைவி, 15 வயது மகள், 20 வயது மகன் மற்றும் 66 வயது பாட்டி ஆகியோர் அநுராதபுரம் போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தந்தை வீட்டிற்கு தீ வைத்தபோது இரண்டு மகள்கள், மனைவி மற்றும் மனைவியின் தாய் மட்டுமே வீட்டில் இருந்தனர்.

சம்பவத்தைக் கேள்விப்பட்டு மகன் சம்பவ இடத்திற்கு வந்துள்ளார். தனது தாய் மற்றும் சகோதரிகளை மீட்க முயன்றபோது, ​​20 வயது மகனுக்கும் தீக்காயம் ஏற்பட்டது.

தீ வைத்த நபர் அடிக்கடி மது அருந்திவிட்டு தனது மனைவியைத் தாக்கி வந்துள்ளார். அவர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறுகள் காரணமாக, கலென்பிந்துனுவெவ பொலிஸாரிடம் பலமுறை முறைப்பாடு செய்யப்பட்டதுடன், இரு தரப்பினரும் எச்சரிக்கப்பட்டனர் எனவும் தெரியவந்தது.

 

வங்காள விரிகுடாவில் நிலை கொண்டுள்ள தாழமுக்கம் : வடக்கு – கிழக்கிற்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!!

இலங்கைக்கு தென்கிழக்காக வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் நிலைகொண்டிருந்த வளிமண்டலவியல் தளம்பல் நிலையானது தீவிரமடைந்து ஒரு தாழ் அமுக்க பிரதேசமாக விருத்தியடைந்துள்ளது என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஆகையால் நாட்டின் வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் நாளை மறுதினம் முதல் மழையுடனான வானிலை அதிகரித்துக் காணப்படும். வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் அடிக்கடி மழை பெய்யக்கூடும்.

ஊவா மாகாணத்தின் சில இடங்களிலும் அத்துடன் நுவரெலியா, மாத்தளை, பொலனறுவை, அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் சில இடங்களிலும் 100 மில்லிமீற்றர் வரையிலான பலத்த மழை பெய்யக்கூடும்.

நாட்டின் ஏனைய பிரதேசங்களின் பல இடங்களில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது.

மத்திய மலைப் பிராந்தியங்களின் கிழக்கு சரிவுகளிலும், வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கொழும்பு, கம்பஹா, அம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு 50கிலோமீற்றரிலும் கூடிய வேகத்தில் அடிக்கடி பலத்த காற்று வீசக் கூடும்.

பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொது மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

ஊவா மாகாணத்தின் சில இடங்களிலும் அத்துடன் நுவரெலியா, மாத்தளை, பொலனறுவை, அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் சில இடங்களிலும் 100 மில்லிமீற்றர் வரையிலான பலத்த மழை பெய்யக்கூடும்.

நாட்டின் ஏனைய பிரதேசங்களின் பல இடங்களில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது.

மத்திய மலைப்பிராந்தியங்களின் கிழக்கு சரிவுகளிலும், வடக்கு, கிழக்கு , வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கொழும்பு, கம்பஹா, அம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு 50 கிலோமீற்றரிலும் கூடிய வேகத்தில் அடிக்கடி பலத்த காற்று வீசக் கூடும்.

பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொது மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

வெள்ளவத்தையில் உணவகம் ஒன்றுக்கு சென்ற தமிழ் குடும்பத்திற்கு அதிர்ச்சி!!

கொழும்பு, வெள்ளவத்தையில் பிரபல சைவ உணவகம் ஒன்றில் சாப்பிடச் சென்றவர்கள் அதிர்ச்சி அடையும் சம்பவம் ஒன்று பதிவாகி உள்ளது. குறித்த உணவகத்தில் வழங்கிய உழுந்து வடை ஒன்றுக்குள் முழுமையான கராப்பான் பூச்சி ஒன்றை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அதனை சாப்பிட முற்பட்ட வேளையில், அதனை கண்ட பெண் ஒருவர் அதிர்ச்சி அடைந்துள்ளதுடன், கடையின் நிர்வாகத்தினரிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.

அத்துடன் வெள்ளவத்தை பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

கிழக்கில் டொல்பின், வடக்கில் ஆமை : உயிரிழந்து கரையொதுங்கும் கடல்வாழ் உயிரிழங்கள்!!

வடமராட்சி கிழக்கு கடற்பகுதியில் சில நாட்களாக ஆமைகள் இறந்த நிலையில் கரை ஒதுங்கி வருகின்றன. அந்தவகையில் செவ்வாய்க்கிழமை (06.01.2026) ஆமையின் இறந்த உடல்கள் கரையொதுங்கிய உள்ளன.

கடலின் சீற்றம் காரணமாக கடல் கொந்தளிப்பாக காணப்படுவதால் காயமடைந்த ஆமைகள் உயிரிழந்து கரை ஒதுங்குவதாக அப்பகுதி மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆமைகளை பிடிப்பதும், இறைச்சிக்காக பயன்படுத்துவதும் சட்டவிரோதம் என்பதால் கரையொதுங்கிய ஆமைகள் துர்நாற்றம் வீசக்கூடிய நிலையிலும் உருக்குலைந்து காணப்படுகின்றது.

அதேவேளை திருகோணமலை – ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள சல்லி கடற்கரையில் இறந்த நிலையில் டொல்பின் ஒன்று செவ்வாய்க்கிழமை (6) காலை கரையொதுங்கியுள்ளது. இந்த டொல்பின் சுமார் 5 அடி நீளம் கொண்டதாகவும் சிறியதாகவும் உள்ளது என தெரிவிக்கப்படுகிறது.

போலி சீட்டிழுப்பு : 10 மில்லியன் மோசடி செய்த இருவர் மட்டக்களப்பில் கைது!!

போலி சீட்டிழுப்பு திட்டத்தின் மூலம் பொதுமக்களை ஏமாற்றி ரூ. 10 மில்லியன் மோசடி செய்த இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

பணமோசடி குற்றச்சாட்டுடன் தொடர்புடைய சந்தேக நபர் வடக்கு மாகாணப் பிரிவின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால், நேற்று திங்கட்கிழமை (05.01.2026) கைது செய்யப்பட்டுள்ளார்.

வடக்கு மாகாண கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நடத்தப்பட்டு வந்த விசாரணைகளுக்கு அமைய இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

டயலொக் மெகா வாசனா அதிஸ்டச் சீட்டிழுப்பில் பரிசுகளைப் பெற்றுள்ளதாகக் கூறி, இணையம் மூலம் மக்களை ஏமாற்றி 10 மில்லியன் ரூபாய் பணமோசடி செய்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேக நபர் மட்டக்களப்பு பகுதியைச் சேர்ந்த 29 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. வடக்கு மாகாண கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவு, இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

இலங்கையில் மீண்டும் எகிறிய தங்கத்தின் விலை : நகைப்பிரியர்கள் கவலை!!

இலங்கையில் நேற்று (05) 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 6000 ரூபாயால் அதிகரித்த நிலையில் இன்று (06) மீண்டும் 3000 ரூபாயால் அதிகரித்துள்ளமை நகைப்பிரியர்களுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று (05) 24 கரட் தங்கம் பவுண் 362,000 ரூபாயாக விற்பனையாகியிருந்த நிலையில், இன்று (06) மீண்டும் 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 3000 ரூபாயால் அதிகரித்துள்ளதாக, அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 365,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 337,600 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 45,625 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 42,200 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

ஓவியத்தால் குழறுபடி ; சந்தேகநபராக கருதி அப்பாவி இளைஞனை தாக்கிய பொலிசார்!!

சந்தேக நபர் ஒருவரை கைது செய்வதற்காக பொரளை பொலிஸாரால் வரையப்பட்ட ஓவியத்துடன், ஒப்பிட்டு வேறு ஒரு நபர் தாக்கப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

சம்பவத்திற்கு முகம் கொடுத்தவர் தெரணியகல பகுதியில் சிறிய உணவகம் ஒன்றை நடத்தி வருபவர் என தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

கடந்த டிசம்பர் 30ஆம் திகதி இரவு கொஹூவல, போதியாவத்தை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 16 வயது சிறுமி ஒருவர் காயமடைந்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக பொலிஸாரால் தேடப்பட்டு வரும் சந்தேக நபர் ஒருவரை கைது செய்வதற்கு பொதுமக்களின் உதவியை நாடியுள்ளதுடன், பொலிஸ் ஓவியக் கலைஞர்களினால் வரையப்பட்ட சந்தேக நபரின் மாதிரி படம் ஒன்றையும் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்திருந்தனர்.

இந்த சூழலில், தெரணியகல பகுதியில் சிறிய உணவகம் நடத்தும் லஹிரு மதுசங்க என்பவர், தனது வியாபாரத்திற்குத் தேவையான பொருட்களை வாங்குவதற்காக கடந்த ஜனவரி முதலாம் திகதி கொழும்புக்கு வந்திருந்தார்.

அன்று இரவு பேஸ்லைன் வீதியிலுள்ள தமது மனைவியின் வீட்டில் தங்கியிருந்தபோது, அடுத்த நாள் காலை பொலிஸ் உத்தியோகத்தர்கள் அந்த வீட்டிற்கு பிரவேசித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, தனது விருப்பத்தின் பேரில் வாக்குமூலம் அளிப்பதற்காக பொரளை பொலிஸ் நிலையத்திற்குச் சென்றபோது, சந்தேக நபரின் வரைபடத்தைக் காட்டி பொலிஸார் தன்னைத் தாக்கியதாக அந்த இளைஞர் குற்றம் சாட்டியுள்ளார்.

சுமார் 2 நாட்கள் பொரளை பொலிஸில் தடுத்து வைக்கப்பட்டிருந்த லஹிரு, கடந்த 3ஆம் திகதி பிற்பகலே விடுவிக்கப்பட்டுள்ளார்.

அதேவேளை , அந்த இளைஞரைத் தாக்கியதாக பொலிஸார் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி நிராகரித்துள்லார்