4 வருட ரகசிய காதல் தொடர்பில் இருந்த மருமகனும் மாமியாரும், திருமணம் செய்த சான்றிதழை வெளியிட்டுள்ளமை உறவினர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. இந்த சம்பவம் இந்தியாவின் உத்தர பிரதேச மாவட்டம் கான்பூரில் நடந்திருக்கிறது.
இருவரும் நீதிமன்றத்தில் திருமணம் செய்து கொண்டு அதற்கான சான்றிதழை காட்டும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த சம்பவம் உண்மைதான் என்றாலும் இது தொடர்பாக யாரும் காவல் நிலையத்தில் இதுவரை புகார் அளிக்கவில்லை என சொல்லப்படுகிறது.
கடந்த நான்கு வருடங்களாக மாமியாருடன் ரகசிய உறவில் இந்த மருமகன் இதற்கு மேல் பொறுக்க முடியாது என முடிவெடுத்து மனைவியை பிரிந்து மாமியாரை முறைப்படி திருமணம் செய்து கொண்டதாக சொல்லப்படுகிறது.
கழுத்தில் தாலியுடன், கையில் திருமண சான்றிதழை வைத்துக்கொண்டு ஜோடியாக அவர்கள் வெளியிட்ட வீடியோவால் நெட்டிசனங்களும், அவர்களின் குடும்பத்தினரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
வவுனியா ஓமந்தை நாவற்குளத்தில் கோயில் பூசை தொடர்பான சம்பவத்தில் 32 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான சேதுபதி நிரோஜன் என்பவர் பலியாகியுள்ளதுடன், அவருடைய தாய் பலத்த காயங்களுக்குள்ளாகியுள்ளதாக ஓமந்தை பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் பற்றி தெரியவருவதாவது,
வவுனியா, ஓமந்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவற்குளம் பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றின் கதவை உடைத்து, ஆறு பேர் கொண்ட குழுவொன்று வலுக்கட்டாயமாக பூசை செய்வதற்கு முற்பட்டுள்ளது.குறித்த சட்டவிரோதமான செயலை அந்த இடத்திலிருந்த கொலையுண்டவரின் தாய் தட்டிக்கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அக்குழுவினர் தாய் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இது தொடர்பாக மகன் அவர்களிடம் கேட்கச் சென்றுள்ளார். இதன் போது ஏற்பட்ட வாய்த்தர்க்கம் மோதலாக மாறிய நிலையில் அக்குழுவினர் மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரை குத்தியுள்ளனர்.
இதனால் பலத்த காயமடைந்த இளைஞனை அங்கிருந்தவர்கள் மீட்டு உடனடியாக வைத்தியசாலைக்குக் கொண்டு சென்ற போதிலும், அவர் கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இக் கொலைச் சம்பவம் தொடர்பாக ஓமந்தைப் பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டதை அடுத்து, உடனடியாகச் செயற்பட்ட பொலிஸார் சந்தேக நபர் ஒருவரைக் கைது செய்துள்ளனர்.
சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக வவுனியா பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளையும், ஏனைய சந்தேக நபர்களைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளையும் ஓமந்தைப் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தற்போதைய நிலையில் உலக சந்தை நிலவரங்களின் பிரகாரம் எரிபொருள் விலையை அதிகரித்துள்ள போதும், ஏனைய பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படவில்லை என்று ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பத்மகுமார வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், உலக சந்தை நிலவரங்களுக்கு மத்தியில் எரிபொருள் விலை அதிகரித்துள்ள போதிலும், ஏனைய மேலதிக மூலப்பொருட்களின் விலைகளில் பாரிய உயர்வு எதுவும் ஏற்படவில்லை தற்போதைய பொருளாதார நிலைமையை அரசாங்கம் மிகச் சிறந்த முறையில் முகாமைத்துவம் செய்து வருகின்றது.
கடந்த பெப்ரவரி மாதத்தில் எரிபொருள் இறக்குமதிக்காக 98 மில்லியன் டொலர்கள் செலவிடப்பட்ட போதிலும், ஏப்ரல் மாதமாகும் போது அந்தச் செலவு 522 மில்லியன் டொலர்கள் வரை அதிகரித்துள்ளது.
உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரிப்புக்கு மத்தியில், ஒரு லீட்டர் எரிபொருளின் உண்மையான விலை சுமார் 740 ரூபாவாக இருக்க வேண்டும் என்ற போதிலும், அரசாங்கம் தற்போது அதனை 424 ரூபா என்ற எல்லைக்குள் பேணி வருகின்றது.
இதற்காக திறைசேரி சுமார் 20,000 கோடி ரூபாவை செலவிட்டு எரிபொருள் விலையை முகாமைத்துவம் செய்வது, மக்கள் மீது முழுமையான சுமையை சுமத்தாமல் இருப்பதற்காகவே ஆகும்.
எரிபொருள் விலையைத் தவிர ஏனைய மேலதிக மூலப்பொருட்களின் விலைகளில் பாரிய அதிகரிப்பு எதுவும் ஏற்படவில்லை என்பதால், பேருந்து கட்டணங்களை அதிகரிப்பதற்கான கடுமையான தேவை தற்போது இல்லை.
கடந்தகால அரசாங்கங்களைப் போலல்லாமல், உலக சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப விலைகளைக் குறைக்கக்கூடிய ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அந்த நிவாரணத்தை மக்களுக்கு வழங்க அரசாங்கம் உறுதியாக உள்ளது.
சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி போன்ற நிறுவனங்கள் கூட இலங்கையின் பொருளாதாரம் எந்தவொரு சர்வதேச சூழ்நிலையையும் எதிர்கொள்ளக்கூடிய மட்டத்திற்கு வந்துள்ளதாக ஏற்றுக்கொண்டுள்ளது.
2026ஆம் ஆண்டுக்குரிய எந்தவொரு அபிவிருத்தித் திட்டத்தையும் நிறுத்தாமல் முன்னோக்கி கொண்டு செல்ல அரசாங்கம் தீர்மானித்துள்ளது என்றார்.
இலங்கையில் மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்யவும், நெருக்கடியான காலப்பகுதிகளில் தடையற்ற மின்சார விநியோகத்தை உறுதி செய்யவும் பிரம்மாண்டமான புதிய திட்டமொன்று வவுனியாவில் முதன்முறையாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
நுகர்வுக்கு மேலதிகமாக உள்ள மின்சாரத்தை அதிநவீன தொழில்நுட்ப மின்கலங்களில் (Battery Storage System) சேமித்து வைத்து, மின்சாரப் பற்றாக்குறை அல்லது நெருக்கடி ஏற்படும் நேரங்களில் அதனை மீண்டும் பகிர்ந்தளிப்பதே இச்செயற்திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.
தற்போதைய அரசாங்கத்தின் தொலைநோக்கு பார்வையின் கீழ், மின்சார வீணடிப்பைத் தடுத்து, மேலதிக மின்சாரத்தை வினைத்திறனாகப் பயன்படுத்தும் நோக்கில் இத்திட்டம் உத்தியோகபூர்வமாகத் தொடங்கப்பட்டுள்ளது.
இலங்கையிலேயே முதன்முறையாக இத்தகையதொரு அதிநவீன மின்சாரச் சேமிப்பு மின்கலக் கட்டமைப்பு வவுனியாவில் நிறுவப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மின்சாரக் கட்டமைப்பில் திடீர் முறிவுகள் அல்லது மின்சாரப் பற்றாக்குறை ஏற்படும் போது, இந்த மின்கலங்களில் சேமிக்கப்பட்டுள்ள மின்சாரம் உடனடியாக நுகர்வோருக்குப் பகிரப்படும் , அதிக செலவுள்ள மின் உற்பத்தி முறைகளுக்கான தேவையைக் குறைத்து, நுகர்வுக்குப் பிந்தைய உபரி மின்சாரத்தை முழுமையாகப் பயன்படுத்த வழிவகுக்கும் , சூரிய சக்தி மற்றும் காற்று ஆற்றல் மூலம் பெறப்படும் மேலதிக மின்சாரத்தை வீணாக்காமல் சேமிக்க போன்றன இத் திட்டத்தின் முக்கிய நோக்கங்கள் மற்றும் நன்மைகள் ஆகும்.
இத்திட்டத்தின் மூலம் வவுனியா மாவட்டம் மட்டுமன்றி, ஒட்டுமொத்த இலங்கையின் மின்சாரக் கட்டமைப்பும் ஒரு புதிய தொழில்நுட்பப் புரட்சியை நோக்கி நகரத் தொடங்கியுள்ளது.
தற்போது வவுனியாவில் மின்கலக் கட்டமைப்பை நிறுவும் பணிகள் மிக வேகமாக முன்னெடுக்கப்பட்டு வருவதோடு, மிக விரைவில் இத்திட்டம் முழுமையான மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று வீழ்ச்சி பதிவு செய்துள்ளது அதன்படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,441.66 அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது.
இது முன்னைய விலையுடன் ஒப்பிடுகையில் -35.60 டொலர்கள் (-0.80%) வீழ்ச்சியாகும் இதேவேளை வெள்ளியின் விலையும் இன்று வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. அதன்படி, ஒரு அவுன்ஸ் வெள்ளியின் விலை 72.67 அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது. இது 1.09 டொலர்கள் (1.48% ) வீழ்ச்சியை காட்டுகின்றது.
அதேவேளை இலங்கையில் நேற்றைய தங்க விலையுடன் ஒப்பிடுகையில் இன்று (05) 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 1000 ரூபாயால் குறைந்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
24 கரட் தங்கம் பவுண் ஒன்று 386,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 355,200 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 48,250 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 44,400 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை கோயம்பேடு பகுதியில் உள்ள மதுபான பாருக்கு வெளியே, கார் ஏற்றி இளம்பெண் படுகொலை செய்யப்பட்ட கொடூரச் சம்பவத்தில், நெல்லை மாவட்டத்தில் பதுங்கியிருந்த மேலும் 2 முக்கியக் குற்றவாளிகளைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதன் மூலம் இந்த வழக்கில் கைதானவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை கோயம்பேட்டில் உள்ள ஒரு மதுபான பாருக்கு வெளியே இரு தரப்பினரிடையே கடுமையான தகராறு ஏற்பட்டது.
இந்த மோதலின் உச்சகட்டமாக, ஒரு கும்பல் தங்களது காரை அநாகரீகமான முறையில் எதிர்த்தரப்பினர் மீது மிக வேகமாக ஏற்றியது. இந்த விபரீதச் சம்பவத்தில் சம்பவ இடத்திலேயே ஒரு இளம்பெண் உடல் நசுங்கிப் பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும், அதே காரின் சக்கரத்தில் சிக்கி மிகக் கடுமையான தீக்காயங்கள் மற்றும் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு,
தீவிர சிகிச்சைப் பிரிவில் போராடி வந்த ஒரு சிறுமியும் சிகிச்சை பலனின்றி துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்துள்ளார். இதனால் இந்த வழக்கின் கொலைப் பலி எண்ணிக்கை இரண்டாக உயர்ந்துள்ளது.
இந்தக் கொடூர இரட்டைக் கொலைச் சம்பவம் தொடர்பாகக் கோயம்பேடு போலீசார் ஏற்கனவே 7 பேரைத் தனிப்படை அமைத்துத் தீவிரமாகத் தேடிக் கைது செய்து சிறையில் அடைத்திருந்தனர்.
இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய மேலும் சிலர் தென் மாவட்டங்களுக்குத் தப்பி ஓடிவிட்டதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், தனிப்படை போலீசார் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது, நெல்லைப் பகுதியில் தலைமறைவாகப் பதுங்கியிருந்த தியாகராஜன் மற்றும் பாரதி ஆகிய இருவரையும் போலீசார் இன்று வளைத்துப் பிடித்து அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
சென்னைக்கு அழைத்து வரப்படும் இவர்களிடம், இந்த மோதலின் முழுப் பின்னணி குறித்துப் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருகோணமலை – கண்டி பிரதான வீதியின் முள்ளிப்பொத்தானை 96 வைத்தியசாலைக்கு முன்னால் வியாழக்கிழமை (04) அன்று மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான (SLTB) பேருந்து, முச்சக்கர வண்டி மற்றும் பெரிய கொள்கலன் லொறி ஆகிய மூன்று வாகனங்களும் எதிர்பாராதவிதமாக ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டதில் இவ்விபத்து நேர்ந்துள்ளது.
விபத்தில் வாகனங்கள் பலத்த சேதமடைந்த போதிலும், வாகனங்களில் பயணித்தவர்கள் அதிர்ஷ்டவசமாக சிறிய காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர். மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
இலங்கையின் 23 வயதுடைய இளம் தடகள வீரரான ருமேஷ் பத்திரகே, ரோம் டைமண்ட் லீக் தொடரில் 92.62 மீற்றர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்து உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.
இந்த அசாத்திய சாதனை மூலம் ஆசிய வரலாற்றின் மிகச்சிறந்த இரண்டாவது ஈட்டி எறிதல் வீரர் என்ற பெருமையையும், உலக வரலாற்றின் மிகச்சிறந்த தடகள வீரர்களின் வரிசையில் எட்டாவது இடத்தையும் பிடித்து வரலாற்றுப் பக்கங்களில் தனது பெயரைப் பொறித்துள்ளார்.
ஆண்கள் பிரிவிற்கான ஈட்டி எறிதல் போட்டியின் தனது இரண்டாவது முயற்சியிலேயே இந்த பிரம்மாண்ட தூரத்தை எட்டிய பத்திரகே, புதிய இலங்கை தேசிய சாதனையைப் படைத்துள்ளார்.
அத்துடன், இது 2026 ஆம் ஆண்டிற்கான உலகளாவிய ரீதியில் மிக நீண்ட தூரமாக (World-leading mark) பதிவாகியுள்ளதுடன், அவரது தனிப்பட்ட வாழ்வின் மிகச்சிறந்த சாதனையாகவும் அமைந்துள்ளது.
இதன் மூலம், கடந்த 20 வருடங்களாக ஆண்ட்ரியாஸ் தோர்கில்ட்சன் (Andreas Thorkildsen) வசம் இருந்த 90.34 மீற்றர் ரோம் டைமண்ட் லீக் போட்டி சாதனையை முறியடித்து, இளம் வயதிலேயே உலகத் தடகள அரங்கில் இலங்கையின் கொடியை ருமேஷ் பத்திரகே உயரப் பறக்கவிட்டுள்ளார்.
மொஹாலியில் சக பெண் ஊழியரை கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் வியாழக்கிழமை இரவு 7.40 மணி அளவில் தனியார் அலுவலகத்தில் பெண் ஊழியர் ஒருவரை சக ஊழியர் கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹரி என்று அழைக்கப்படும் ஹிரிவிந்தர் மான்(Harvinder Mann) என்ற நபர், நேற்று தனது சக பெண் ஊழியரான டிம்பிள்(Dimple) பணிபுரிந்து வந்த மேஜைக்கு சென்று பின்புறத்தில் இருந்து கழுத்தில் கத்தியால் பல முறை குத்தியுள்ளார்.
தப்பிச் செல்ல முயன்ற டிம்பிளின் தலைமுடியை இழுத்து 20-க்கும் மேற்பட்ட முறை கத்தியால் குத்தியுள்ளார்.
பின்னர், தன்னுடைய மேஜைக்கு திரும்பிய ஹரி அதே கத்தியால் தன்னுடைய கழுத்தை அறுத்து உயிரை மாய்த்துக் கொள்ள முயற்சித்துள்ளார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், இருவரையும் மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இருப்பினும் துரதிர்ஷ்டவசமாக டிம்பிள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக அறிவிக்கப்பட்டார். குற்றவாளியான ஹரி தற்போது கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
பொலிஸார் விசாரணையில், பாதிக்கப்பட்ட இருவரும் கடந்த 3 ஆண்டுகளாக அந்த பகுதியில் அமைந்துள்ள பேக்கர்ஸ் அண்ட் மூவர்ஸ் என்ற நிறுவனத்தில் பணிபுரிந்து வந்ததும், இருவரும் காதலித்து வந்த நிலையில் சமீபத்தில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஹரியின் இந்த கொடூர செயலுக்கு காதல் முறிவு தான் காரணமா? அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா? என பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கண்டி, நாவலப்பிட்டியில் நேற்று ஏற்பட்ட கோர விபத்தில் உயிரிழந்தவர்கள் தொடர்பான தகவல்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
மாப்பாகந்த பகுதியில் இருந்து நாவலபிட்டிய நோக்கி பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கர வண்டி மீது, பாரிய மரமொன்று முறிந்து விழுந்ததில் மாணவன் உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர்.
பாடசாலை மாணவனுடன் அவரது தாயாரும் மற்றொரு பெண்ணும் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாவலபிட்டி கல்பட தமிழ் மகா வித்தியாலயத்தில் 9ஆம் தரத்தில் கல்வி பயிலும் சுரேஷ் சந்திரன், 42 வயதுடைய அவரது தாயாரான கவிதா மற்றும் 57 வயதான அயல்வீட்டு பெண் பாக்கியநாதன் ஜெனி ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.
விபத்தில் முச்சக்கர வண்டி ஓட்டுநர் சிறு காயங்களுக்கு உள்ளாகியிருப்பதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். உயிரிழந்த மூவரும் நாவலபிட்டிய வைத்தியசாலைக்கு சென்று கொண்டிருந்த போதே விபத்துக்குள்ளாகியுள்ளனர்.
முச்சக்கர வண்டி மீது முறிந்து விழுந்த மரம் மிகவும் பழைமையான மற்றும் உக்கிய நிலையில் காணப்பட்டுள்ளது. குறித்த மரத்தை வெட்டி அகற்றுமாறு அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், அது செய்யப்படாததாலேயே இந்த விபத்து நேரிட்டுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
ஹொரணை – அங்குருவாத்தோட பகுதியில் உள்ள ‘மவ்பிய செவண’ முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 13 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த (3) திகதி மாலை 5 மணிக்கும் 6 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரசாங்க நிறுவனத்தில் பதிவு செய்யப்படாத இல்லம்
குறித்த இல்லத்தில் மனநலக் குறைபாடுகள் கொண்ட பல்வேறு வயதுடைய பெண்கள் மற்றும் ஆண்கள் என சுமார் 72 பேர் இருந்தமை இதுவரை உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், பராமரிப்பு பணிகளுக்காக நிர்வாகத்தரப்பில் ஐந்து பேர் இருந்துள்ளமையும் தெரியவந்துள்ளது.
இருப்பினும், இந்த இல்லம், எந்தவொரு அரசாங்க நிறுவனத்திலும் பதிவு செய்யப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.
குறித்த இல்லம் எந்தவொரு நிறுவனத்திலும் பதிவு செய்யாமலும், முறையான அரசாங்க வழிகாட்டுதல்களை மீறியும் செயற்பட்டுள்ள நிலையில், இல்லம் செயல்படுவதற்கு
எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு அங்குருவாத்தோட பொலிஸ் நிலையத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக தேசிய முதியோர் செயலகத்தின் பணிப்பாளர் சதுர மிஹிந்துனி தெரிவித்துள்ளார்.
தீ விபத்தில் தற்போது இருவரை காணவில்லை என்றும், மேலும் வீட்டில் இருந்த 4 முதிய பெண்கள் மற்றும் 4 ஆண்களைக் கதிர்காமம் முதியோர் நலப்பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்திற்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஏனைய மனநலக்குறைபாடுகள் உள்ளவர்களின் பாதுகாவலர்கள் வந்து அவர்களை அழைத்துச் செல்லவும், மீதமுள்ளவர்களை மாற்றுத்திறனாளிகளுக்கான அரசாங்கப்பதிவு பெற்ற தடுப்புக்காவல் மையங்களில் சேர்க்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
குறித்த இல்லத்தின் சேர்க்கை கட்டணம் 75,000 ரூபாய் என்றும், ஒவ்வொரு மாதமும் 25 ஆம் திகதி அவர்களின் கணக்கில் 35,000 ரூபாய் செலுத்தப்படுவதாகவும் இல்லத்தில் தங்கவைக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
உறவினர்களை பார்க்க வருவதாக இருந்தால் முன்கூட்டியே அறிவித்து அனுமதி பெற்றுக்கொண்டே வர வேண்டும். அப்போது நன்றாகக் குளிப்பாட்டித் தூய்மையாக வைத்திருப்பார்கள்.
இல்லையெனில், மற்றைய நாட்களில் எந்தவொரு தூய்மையும் இருக்காது.சங்கிலியால் பிணைத்துக் கட்டி வைத்திருப்பார்கள். இவர்கள் செய்வது என்னவென்றால், இயலாதவர்களை ஒரு பக்கமாகப் போட்டுவிட்டு,
ஓரளவிற்குப் பேசவும் நடக்கவும் கூடியவர்களை வெளியே அழைத்து வந்து காணொளி எடுத்து பேஸ்புக்கில் பதிவிட்டுப் பணம் சம்பாதிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் நடந்த நேரத்தில் இந்த நிறுவனத்தின் உரிமையாளர் அங்கு இல்லை என்றும், சுமார் 100 மீட்டர் தொலைவில் உள்ள இரண்டு மாடி வீட்டில் அவர்கள் வசதியாக தங்குவதாகவும் உள்ளூர்வாசிகள் கூறுகின்றனர்.
மேலும், மனநலக் குறைபாடு உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் ஒரு நிறுவனத்தை நடத்துவதற்குத் தேவையான மருத்துவர், செவிலியர், ஆம்புலன்ஸ் போன்ற எந்த வசதிகளும் இந்த நிறுவனத்தில் இல்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
கண்டியில் இளம் பெண்ணை கொலை செய்து வீட்டுக்கு அருகில் மண்ணில் புதைத்ததாக குற்றம் சாட்டப்பட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார். தெல்தெனிய, ரங்கல பிரதேசத்தில் பெண்ணை கொலை செய்த நிலையில், சந்தேக நபர் அங்கிருந்து தப்பியோடியிருந்தார்.
இந்நிலையில், நேற்று மீண்டும் வீட்டிற்கு வந்திருந்த நிலையில், அவரது வீட்டுத் தோட்டத்தில் ஒளிந்திருந்த போது பொலிஸாரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்படும் போது சந்தேகநபரிடமிருந்து ஒருவித நாற்றம் வீசியதால், அவர் விஷம் குடித்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் அவரை தெல்தெனிய வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இளம் பெண் காணாமல் போனமை தொடர்பாக சந்தேகநபரே பொலிஸில் செய்த முறைப்பாடு குறித்து பொலிஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இதையடுத்து, இது தொடர்பாக அவரது தாயாரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இதன்போது, பெண்ணைத் தாக்கி கொலை செய்து, வீட்டிற்கு அருகிலுள்ள சேற்று நிலத்தில் புதைத்தமை தெரியவந்துள்ளது.
அதற்கமைய, ரங்கல பொலிஸார் நீதிமன்ற உத்தரவைப் பெற்று சேற்று நிலத்தைத் தோண்டிய போது, பெண்ணின் சடலம் சுமார் மூன்று அடி ஆழமான குழியில் இருந்து மீட்கப்பட்டது.
கொலை செய்யப்பட்ட யுவதி ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்த 22 வயதுடைய வாசனா சந்தமாலி வீரசேகர என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
திருமணமானவரான சந்தேகநபர், தனது மனைவியைப் பிரிந்து சுமார் நான்கு வருடங்களாக இந்த இளம் பெண்ணுடன் வாழ்ந்து வந்துள்ளார் என்பது பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மர்மமான முறையில் உயிரிழந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவின் மரணம் குறித்த மேலதிக நீதவான் விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த விசாரணை இன்று (05) கொழும்பு கோட்டை நீதவான் பசன் அமரசேன முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே உத்தரவிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, வழக்கு விசாரணை எதிர்வரும் 9ஆம் திகதி வரை ஒத்திவைக்க கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் மறைந்த கபில சந்திரசேனவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு ஒன்றில் முன்னிலையாகியிருந்த ஜனாதிபதி சட்டத்தரணி ரியென்சி அர்சகுலரத்ன மற்றும் அவரது உதவி சட்டத்தரணி உதார முஹந்திரம்கே ஆகியோரின் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டன.
இதனைத்தொடர்ந்து, கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் சாட்சியமும் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, மேலதிக சாட்சி விசாரணை இம்மாதம் 9ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது.
சமூக ஊடகங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய “வவுனியா சிறுவர் பாதாளக் குழு” தாக்குதல் சம்பவம் தொடர்பாக 7 மாணவர்களை ஈரற்பெரியகுளம் பொலிஸார் கைது செய்துள்ளனர். தாக்குதலுக்குள்ளான இரு மாணவர்கள் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சமூக வலைத்தளங்களில் அண்மையில் ஒரு அதிர்ச்சியூட்டும் காணொளி (Video) பரவலாகப் பகிரப்பட்டது. அதில், வவுனியா பகுதியைச் சேர்ந்த மாணவர்கள் சிலர், மற்றுமொரு தரப்பைச் சேர்ந்த இரு மாணவர்களை மனிதாபிமானமற்ற முறையில் மிகக் கொடூரமாகத் தாக்கும் காட்சிகள் பதிவாகியிருந்தன. இச்சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியிருந்தது.
இக்காணொளி தொடர்பாக தீவிர விசாரணைகளில் இறங்கிய ஈரற்பெரியகுளம் பொலிஸார், தாக்குதலில் ஈடுபட்ட வவுனியா, ஈரற்பெரியகுளம் பகுதியைச் சேர்ந்த 7 மாணவர்களை அதிரடியாகக் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் அனைவரும் 14 முதல் 17 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இக்கொடூரத் தாக்குதலுக்கு இலக்காகி படுகாயமடைந்த 15 வயதுடைய இரு மாணவர்கள், தற்போது வவுனியா மாவட்ட பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவசர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட 7 மாணவர்களும் நேற்று (03.06.2026) வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதவான், சந்தேகநபர்களான 7 மாணவர்களையும் எதிர்வரும் ஜூன் மாதம் 10 ஆம் திகதி வரை கெபித்திகொல்லாவ சிறுவர் பராமரிப்பு இல்லத்தில் தடுத்து வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து ஈரற்பெரியகுளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
வவுனியாவில் சிறுவர்கள் மத்தியில் இத்தகைய வன்முறைப் போக்கு அதிகரித்திருப்பது பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் பலத்த கவலையை ஏற்படுத்தியுள்ளது.
புத்தளம் – அநுராதபுரம் வீதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் தாயும் மகளும் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக இராஜாங்கனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் உயிரிழந்தவர்கள், இரண்டு பிள்ளைகளின் தாயான 52 வயதுடைய சமுத்ரா அலுவிஹாரே மற்றும் அவரது மூத்த மகளான 32 வயதுடைய சஜினி மஹேஷிகா என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
உயிரிழந்த தாயார் அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றின் நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வருகின்றார். உயிரிழந்த மகள் ஒரு பிள்ளையின் தாய் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
புத்தளம் – அநுராதபுரம் வீதியின் 27ஆம் மைல்கல் பகுதியில், தாயும் மகளும் பயணித்த மோட்டார் சைக்கிள் மீது மூன்று சக்கர வண்டி ஒன்று மோதியமையால் விபத்து சம்பவித்துள்ளது.
விபத்தின் பின்னர் படுகாயமடைந்த தாயும் மகளும் அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
எனினும் சிகிச்சை பலனின்றி மகள் ஏற்கனவே உயிரிழந்த நிலையில், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த தாய் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்