யாழ் பல்கலைகழக விரிவுரையாளர் கொலை வழக்கில் புதிய திருப்பம்!!

யாழ்ப்பாண பல்கலைக்கழக சிரேஷ்ட சித்த மருத்துவத் துறை விரிவுரையாளர் தயாளினி திலீபன் கொலை வழக்கில், விரிவுரையாளர் அவரது வீட்டிலேயே வைத்து கையினால் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளமை நீதிமன்றத்தில் வெளிக்கொணரப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு நேற்று (3) யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, நீதிவான் எஸ். லெனின்குமார் இந்த விடயங்களை சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனையடுத்து, மேலதிக விசாரணைகள் மற்றும் தொடர்ச்சியான சட்ட நடவடிக்கைகளுக்காக வழக்கு எதிர்வரும் ஜூன் 16 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

விரிவுரையாளர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சிரேஷ்ட விரிவுரையாளரின் மருமகன் மற்றும் மகள் ஆகியோரின் விளக்கமறியல் காலத்தையும் ஜூன் 16 ஆம் திகதி வரை நீடிக்க நீதிவான் உத்தரவிட்டார்.

வழக்கு விசாரணைகளின் போது, பாதிக்கப்பட்ட தரப்புக்காக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரனின் வழிகாட்டலில் சட்டத்தரணி பெனிஸ்லஸ் துஷான் முன்னிலையாகினார்.

முதலாம் சந்தேகநபரான விரிவுரையாளரின் மருமகன் சார்பில் சட்டத்தரணி சர்மினி விக்னேஸ்வரன் முன்னிலையாகியிருந்தார்.

அதேவேளை, இரண்டாம் சந்தேகநபரான விரிவுரையாளரின் மகள் சார்பில் சட்டத்தரணி சமந்த அத்துக்கோரளவின் வழிகாட்டலில் மற்றொரு சட்டத்தரணி முன்னிலையாகியிருந்தார்.

இந்த வழக்கின் மேலதிக விசாரணைகள் எதிர்வரும் ஜூன் 16 ஆம் திகதி நடைபெறவுள்ளன. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சித்த மருத்துவத் துறை விரிவுரையாளர் தயாளினி திலீபன் (வயது 54) மார்ச் 2026-ல் படுகொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

கோர விபத்தில் பெற்றோர் கண்முன்னே பறிபோன 2 வயதுச் சிறுமியின் உயிர்!!

கண்டி மாவட்டத்தின் தலாத்துஒய, மயிலபிட்டிய பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் இரண்டு வயது மற்றும் இரண்டு மாதங்கள் வயதுடைய சிறுமியொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (03) பிற்பகல் தென்னகும்பூர – ராகல பிரதான வீதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

தென்னகும்பூர நோக்கி பயணித்த சொகுசு கார் ஒன்று, முன்னால் சென்ற வாகனத்தை முந்திச் செல்ல முயன்றபோது, எதிர்திசையில் வந்த முச்சக்கரவண்டியுடன் நேருக்கு நேர் மோதியதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

விபத்து நேரத்தில், குறித்த சிறுமி தனது பெற்றோருடன் முச்சக்கரவண்டியின் பின்புற ஆசனத்தில் பயணித்துக் கொண்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

மோதலின் தாக்கத்தால் முச்சக்கரவண்டியில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரும் படுகாயமடைந்து உடனடியாக ஹங்குரன்கெத்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

அவர்களில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உயிரிழந்த சிறுமி உனுவின்ன பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இதனிடையே, காயமடைந்த சிறுமியின் தாயும் முச்சக்கரவண்டியை செலுத்திய தந்தையும் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சம்பவம் தொடர்பாக சொகுசு காரின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், தலாத்துஒய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

முச்சக்கரவண்டி மீது மரம் வீழ்ந்ததில் மூவர் பரிதாபமாக பலி!!

நாவலப்பிட்டி, மாபாகந்த பகுதியில் முச்சக்கரவண்டி மீது மரமொன்று முறிந்து வீழ்ந்ததில், அதில் பயணித்த பாடசாலை மாணவர் உட்பட மூவர் உயிரிழந்துள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று (04) காலை 6:45 மணியளவில் குறித்த முச்சக்கரவண்டி மாபாகந்த பகுதியிலிருந்து நாவலப்பிட்டி நோக்கி பயணித்துக் கொண்டிருந்தபோதே இந்த விபத்து நேர்ந்துள்ளது.

பிரதான வீதிக்கு அருகில் இருந்த பெரிய மரம் முறிந்து வீழ்ந்ததில் முச்சக்கரவண்டியில் இருந்த மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், அதன் சாரதி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்.

மீலும் விபத்து சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு மண்ணில் புதைக்கப்பட்ட யுவதி!!

கண்டியில் இளம் யுவதி ஒருவர் மர்மான முறையில் படுகொலை செய்யப்பட்டு மண்ணில் புதைகப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

தெல்தெனிய, ரங்கல பகுதியில் 22 வயதான ஆடைத் தொழிற்சாலை ஊழியரான யுவதியே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நீதிமன்ற உத்தரவுக்கு அமைய ரங்கல பொலிஸ் பொறுப்பதிகாரி நிஷாந்த ஜெயரத்ன தலைமையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதற்கமைய யுவதி கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சடலமாக மீட்கப்பட்டவர், உதிஸ்பட்டுவ, ஹக்மான பகுதியை சேர்ந்த 22 வயதான வசன சந்தமாலி என ரங்கல பொலிஸாரால் உறுதிப்படுத்தபட்டுள்ளது.

தெல்தெனிய நீதவான் கமல் சஞ்சய ஜெயதிலக சடலம் கண்டெடுக்கப்பட்ட இடத்தில் நேரில் விசாரணை நடத்தி, நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு ரங்கல பொலிஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

அதனைத் தொடர்ந்து, சடலம் தொடர்பான மேலதிக பிரேதப் பரிசோதனைகளைத் தெல்தெனிய வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி உபுலி பண்டார ஊடாக மேற்கொண்டு, அது குறித்த விரிவான அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு ரங்கல பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு நீதிவான் உத்தரவிட்டார்.

இந்தக் கொலைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், சந்தேகநபர்களைக் கைது செய்வதற்கான தீவிர விசாரணைகளை ரங்கல பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

 

பலாப்பழம் மூக்கின் மீது தாக்கியதில் குடும்பஸ்தர் பரிதாபமாக உயிரிழப்பு!!

மரத்திலிருந்து விழுந்த பலாப்பழம் ஒன்று மூக்கின் மீது தாக்கியதில் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த, மூன்று குழந்தைகளின் தந்தை உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த நபர் கண்டி தேசிய மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் , கேகாலை வத்துரடிகேன பகுதியைச் சேர்ந்த 56 வயதானவர் என கூறப்படுகின்றது. இவரது மனைவி கடந்த இரண்டரை ஆண்டுகளாக வெளிநாட்டில் பணிபுரிந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த நபர் நண்பரின் வீட்டிற்கு கடந்த 25-ஆம் திகதி சென்று நண்பர்களுடன் இருந்த வேளை திடீரெனப் பலத்த காற்று வீசியது.

இதன்போது, ​​ பலா மரத்திலிருந்து விழுந்த பலாப்பழம் ஒன்று, முதலில் ஒரு பாறையின் மீது மோதிவிட்டு, பின்னர் நேராக அவரது மூக்கின் மீது வந்து விழுந்தது.

அந்தத் தாக்கத்தினால் அவர் நிலைதடுமாறி கீழே விழுந்ததில், அவரது தலையின் பின்பகுதி ஒரு பாறையின் மீது பலமாக மோதியதில் குறித்த நபர் படுகாயங்களுக்குள்ளானார்.

இதையடுத்து, கேகாலை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிற்சைக்காக கண்டி தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்குள்ள தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

சாரதிக்கு நித்திரை கலக்கம் : பேருந்து வீதியை விட்டு விலகி சுவருடன் மோதி விபத்து!!

காலி – கொழும்பு பிரதான வீதியின் காலி, தடல்ல பகுதியில் பயணிகள் போக்குவரத்து பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி சுவருடன் மோதி இன்று (04) காலை ஏற்பட்ட விபத்தில் மூவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹம்பாந்தோட்டையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த பயணிகள் போக்குவரத்து பேருந்து ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. பேருந்தில் சுமார் 20 பயணிகள் பயணித்த விலையில் விபத்து இடம்பெற்றுள்ளது.

பேருந்து கொழும்பு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த போது, தடல்ல பகுதியில் வைத்து சாரதியில் நித்திரை கலக்கத்தால் பேருந்தைக் கட்டுப்படுத்த முடியாமல் வீதியை விட்டு விலகி அருகில் இருந்த சுவருடன் மோதி விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

விபத்தினால் பேருந்திற்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதுடன்,விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை காலி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

நீட் மறுதேர்வு எழுத அச்சம் மாணவி எடுத்த விபரீத முடிவு!!

நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டு, மறுதேர்வு அறிவிக்கப்பட்டதால் ஏற்பட்ட கடுமையான மன உளைச்சல் மற்றும் அச்சம் காரணமாக, 18 வயது மாணவி ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் அஹன்ஷா (18). இவர் மருத்துவர் ஆக வேண்டும் என்ற லட்சியத்தோடு, மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் தங்கியிருந்து அங்குள்ள ஒரு தனியார் பயிற்சி மையத்தில் நீட் தேர்விற்காகத் தீவிரமாகப் படித்து வந்தார்.

கடந்த மாதம் 3-ம் தேதி நாடு முழுவதும் நடைபெற்ற நீட் பொது நுழைவுத் தேர்வினை மாணவி அஹன்ஷாவும் எழுதியிருந்தார்.

தேர்வு கடினமாக இருந்தாலும், தனது கடின உழைப்பால் நல்ல மதிப்பெண்களைப் பெற்று, நிச்சயம் மருத்துவக் கல்லூரியில் இடம் பிடித்துவிடலாம் என்ற நம்பிக்கையில் அவர் இருந்துள்ளார்.

இதற்கிடையே, நாடு முழுவதும் நீட் தேர்வில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறி, மத்திய அரசு மற்றும் தேர்வு முகமை அண்மையில் அந்தத் தேர்வினை ரத்து செய்து அதிரடி உத்தரவிட்டது. மேலும், மாணவர்களுக்கு மீண்டும் ‘மறுதேர்வு’ நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

ஏற்கனவே கடுமையான மன அழுத்தத்துடன் படித்துத் தேர்வு எழுதியிருந்த மாணவி அஹன்ஷாவுக்கு, இந்த அறிவிப்பு பேரிடியாக இறங்கியது. தேர்வு ரத்து செய்யப்பட்டதால் கடந்த சில நாட்களாகவே அவர் கடுமையான மன உளைச்சலில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

மீண்டும் முதலிலிருந்து படித்து மறுதேர்வு எழுத வேண்டுமே என்ற அச்சமும், அதில் தம்மால் நல்ல மதிப்பெண் பெற முடியுமா என்ற பயமும் அவரிடம் தொற்றிக்கொண்டது.

இந்த நிலையில், நேற்று மன உளைச்சலின் உச்சத்துக்கே சென்ற அஹன்ஷா, தான் தங்கியிருந்த அறையில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், மாணவியின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார்,

மாணவியின் தற்கொலைக்கு நீட் தேர்வு ரத்து மற்றும் மறுதேர்வு பயம் தான் காரணமா? அல்லது வேறு ஏதேனும் அழுத்தங்கள் இருந்ததா? என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் சக மருத்துவ ஆர்வலர்கள் மற்றும் மாணவர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. தேர்வுகளில் ஏற்படும் பயம் அல்லது மன உளைச்சல் போன்ற சமயங்களில் தங்களுக்கு ஏதேனும் உதவி தேவைப்பட்டால், தமிழக அரசின் மாநில மனிதவள மேம்பாட்டுத் துறை மற்றும் மனநல உதவி எண்களை (044-24640050, 104) தொடர்புகொண்டு கட்டணமில்லா ஆலோசனை பெறலாம்.

மூன்று பெண்கள் இணைந்து அரங்கேற்றிய பயங்கரம் : திரைப்படத்தை மிஞ்சிய ஒரு சம்பவம்!!

இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் மூன்று பெண்கள் இணைந்து ஒரு பெண்ணைக் கொன்றுவிட்டு ஆடிய நாடகம், பொலிஸ் விசாரணையில் வெட்டவெளிச்சமாகியுள்ளது. கர்நாடகா மாநிலத்திலுள்ள Chikkaballapur என்னுமிடத்தைச் சேர்ந்தவர் பாவ்யா.

கடந்த வியாழக்கிழமை, அதாவது, மே மாதம் 28ஆம் திகதி, நள்ளிரவு பொலிசாரை அழைத்த பாவ்யா, தன் வீட்டுக்குள் பர்தா அணிந்த இருவர் நுழைந்து தன் சகோதாரர் மனைவியை கொலை செய்துவிட்டு அவரது நகைகளையும் பறித்துச் சென்றுவிட்டதாக கூறியுள்ளார்.

தானும் பயங்கரமாக தாக்கப்பட்டதாகவும், தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் பாவ்யா கூற, பொலிசார் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளார்கள்.

பொலிசார் பாவ்யா வீட்டுக்கு வந்தபோது, அங்கு அவரது சகோதரர் மனைவியான புஷ்பலதா (23) கழுத்தறுபட்ட நிலையில் இறந்து கிடந்துள்ளார்.

ஆனால், வீட்டில் சிறிது இரத்தம் மட்டுமே சிந்திக்கிடந்துள்ளது. கடுமையாக தாக்கப்பட்டதாக கூறிய பாவ்யாவின் உடலில் பெரிய அளவில் காயங்களே இல்லை.

அத்துடன், தடயவியல் நிபுணர்கள் புஷ்பலதா கழுத்தறுத்துக் கொல்லப்படவில்லை, அவர் முகத்தில் தலையணையை வைத்து அழுத்திக் கொல்லப்பட்டுள்ளார். பின் யாரோ அவரது கழுத்தை அறுத்துள்ளார்கள், அதனால்தான் வீட்டில் இரத்தம் அதிகமில்லை என்றும் கூற, பொலிசாரின் சந்தேகம் அதிகரித்துள்ளது.

அதைத் தொடர்ந்து பொலிசார் மீண்டும் பாவ்யாவிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளார்கள். நடந்தது என்னவென்றால், பாவ்யா தன் கணவனை விட்டுவிட்டு, கிருஷ்ணா என்னும் ட்ரக் சாரதியுடன் ஓடிவந்துள்ளார்.

ஆனால், கிருஷ்ணாவோ கொஞ்ச நாட்களில் பாவ்யாவின் சில அந்தரங்க வீடியோக்களைக் காட்டி அவரை மிரட்டி பணம் பிடுங்கத் துவங்கியுள்ளார்.

ஆகவே, தன் உறவினரான லோஹித் என்பவரின் உதவியை நாடியுள்ளார் பாவ்யா. லோகித்தோ, அந்த வீடியோக்களை வைத்து பாவ்யாவை மிரட்டத் துவங்க, அவருக்கு ஆறு லட்ச ரூபாய் கொடுத்துள்ளார் பாவ்யா.

லோஹித் தொடர்ந்து பணம் கேட்டு மிரட்ட, கடைசியில் வேறு வழியில்லாமல் நடந்ததை தன் தாய் மற்றும் பாட்டியிடம் பாவ்யா கூற, மூன்று பெண்களுமாக திட்டம் ஒன்றைத் தீட்டியுள்ளார்கள்.

அதன்படி தன் சகோதரர் மனைவியான புஷ்பலதாவை வீட்டுக்கு வரவழைத்துள்ளார் பாவ்யா. நள்ளிரவில் லோஹித் வீட்டுக்கு வர, பாவ்யா கதவைத் திறந்துவிட, லோஹித் புஷ்பலதாவின் முகத்தில் தலையணையை வைத்து அழுத்திக் கொன்றுள்ளார்.

பின்னர் கொள்ளையர்கள் வந்ததுபோல் காட்ட, உயிரிழந்த புஷ்பலதாவின் கழுத்தை அறுத்துள்ளார் லோஹித்.

அவர் பாவ்யாவிடம் கேட்ட பணத்துக்காக புஷ்பலதாவின் தாலியை எடுத்துக்கொண்டு வெளியேற, பொலிசாரை அழைத்த பாவ்யா கொள்ளை நடந்ததாக கதைவிட, இப்போது பாவ்யா, பாவ்யாவின் தாய், பாட்டி மற்றும் லோஹித் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பள்ளத்தில் பாய்ந்த முச்சக்கரவண்டி ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவருக்கு நேர்ந்த விபரீதம்!!

பண்டாரவளை அருகே 450 அடி பள்ளத்தில் முச்சக்கர வண்டியொன்று சறுக்கி வீழ்ந்ததில், நபரொருவர் உயிரிழந்து, இரு சிறுவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

இன்று வியாழக்கிழமை (04) அதிகாலை, பண்டாரவளை அருகே ஹாலிஎல, நெலுவ ஊடாக பண்டாரவளை செல்லும் வீதியின் சாந்த ஜேம்ஸ் பகுதியில் விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன்போது ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பசறை பகுதியிலுள்ள பள்ளிவாசலொன்றில் நடைபெற்ற மத வழிபாட்டு நிகழ்வொன்றில் கலந்துகொண்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த முச்சக்கர வண்டி வீதியை விட்டு விலகி, சுமார் 450 அடி ஆழமான பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ்விபத்தில் தந்தை உயிரிழந்துள்ளதுடன், அவரது இரு சிறு பிள்ளைகளும் முச்சக்கர வண்டியின் சாரதியும் படுகாயமடைந்த நிலையில் பதுளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் அட்டாம்பிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பண்டாரவளை, செல்சி வத்தையின் கீழ் பிரிவில் வசித்து வந்த சம்சுதீன் ஜவ்பர் (41) என்பவரே இவ்விபத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

உயிரிழந்த தந்தை, தனது இரு மகன்களுடன் முச்சக்கர வண்டியில் பசறை பகுதியிலுள்ள பள்ளிவாசலொன்றில் நடைபெற்ற மத வழிபாட்டு நிகழ்வொன்றில் கலந்துகொண்டு,

இரவு வேளையில் மீண்டும் பண்டாரவளை, செல்சி வத்தையிலுள்ள தங்களது வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்த போதே இந்தத் துயரமான விபத்து நேர்ந்துள்ளதாகப் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

முச்சக்கர வண்டியின் சாரதிக்கு ஏற்பட்ட திடீர் தூக்கக் கலக்கமே இந்த விபத்துக்குக் காரணம் எனப் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

நாட்டை உலுக்கிய கோர சம்பவம் 12 ஆக அதிகரித்த மரணங்கள்!!

புதிய இணைப்பு : அங்குருவாதொட, பட்டகொட பகுதியில் அமைந்துள்ள தனியார் முதியோர் பராமரிப்பு நிலையம் ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது.

முன்னதாக மூவர் காணாமல் போயிருந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது உயிரிழந்த அனைவரின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இவ்விபத்தில் காயமடைந்த 7 பேர் தற்போது ஹொணை மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகப் பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன், அந்த மையத்தில் இருந்த சுமார் 51 பேர் எவ்வித ஆபத்துகளுமின்றி பாதுகாப்பாக மீட்கப்பட்டு, தற்போது பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

முதலாம் இணைப்பு  : அங்குருவத்தோட்டா – படகொடாவில் உள்ள முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 11 பேர் உயிரிழந்ததாகவும், மேலும் மூன்று பேரைக் காணவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்தவர்களில் 7 பேர் தற்போது ஹொராணை மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், இல்லத்தில் இருந்த சுமார் 51 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டு, பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அங்குருவத்தோட்டா, படகொடாவில் உள்ள முதியோர் இல்லத்தில் நேற்று (03) பிற்பகல் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து, தீயணைப்பு வீரர்கள் மற்றும் அப்பகுதி மக்களின் உதவியுடன் தீயை அணைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையிலும் தீயினால் மையம் பெருமளவில் சேதமடைந்துள்ளதாக கூறப்படுகின்றது.

தீ விபத்து நடந்த நேரத்தில் இல்லத்தில் சுமார் 72 பேர் இருந்ததாகக் கூறப்படுகிறது. தனியாரால் நடத்தப்படும் இந்த இல்லத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட நபர்களும் தங்க வைக்கப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீ விபத்து காரணமாக அங்கிருந்த ஒரு குழுவினர் தீக்காயங்களுக்கு உள்ளானதாகவும், அவர்களில் 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், மற்றொருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று காலை (04) நீதித்துறை விசாரணை நடத்தப்பட்ட பின்னர், சடலங்கள் சம்பவ இடத்திலிருந்து அகற்றப்படும் என்று பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இருப்பினும், தீ விபத்திற்கான காரணம் இன்னும் வெளியிடப்படவில்லை, மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரிக்க மூன்று பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன

கொழும்பில் கண்டுபிடிக்கப்பட்ட இரகசிய ஆயுதக்கிடங்கு : இளம் தம்பதியினர் தலைமறைவு : அவசர உதவிகோரும் பொலிசார்!!

பேலியகொட குற்றப்பிரிவினரால் கொழும்பு – தெமட்டகொட பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பல்வேறு பாதாள உலகக்கும்பல்களுக்கு விற்பனை செய்வதற்காக தயாரிக்கப்பட்டு மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.

இவற்றில் 19 உள்ளூர் கைத்துப்பாக்கிகள், பல்வேறு பாதாள உலகக்கும்பல்களுக்கு விற்பனை செய்வதற்காக தயாரிக்கப்பட்டிருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

நேற்று (03) காலை சிறப்பு அதிரடிப்படையின் உதவியுடன், இந்த ஆயுதங்களுடன் ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள ஒரு இலட்சம் போதைப்பொருட்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இந்த ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்ட நான்கு சந்தேகநபர்களும் செவனகல மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்கள் தெமட்டகொட பகுதியில் சில காலமாகத் தங்கியிருந்து வந்ததும் தெரியவந்துள்ளது.

இந்த கைத்துப்பாக்கிகள் வேறு இடத்தில் தயாரிக்கப்பட்டு, இரண்டு இடங்களில் மறைத்து வைக்கப்பட்டு, தெமட்டகொடவில் உள்ள இரண்டு மாடிக்கட்டிடத்தின் மேல் தளத்தில் அமைந்துள்ள ஒரு வீட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

குறித்த வீடு மூன்று மாதங்களுக்கு முன்பு வாடகைக்கு எடுக்கப்பட்டு ஒரு இரகசிய பதுங்குமிடமாக பயன்படுத்தப்பட்டுள்ளமையும் தெரியவந்துள்ளது.

இந்த ஆயுதங்களும் போதைப்பொருட்களும் கைப்பற்றப்பட்ட நேரத்தில், அந்த வீட்டில் இருந்த ஒரு இளம் தம்பதியினர் பொலிஸாரிடமிருந்து தப்பியோடியுள்ளனர்.

இளம் தம்பதியினர் தலைமறைவு

இளம் தம்பதியினர் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தால், பேலியகொட குற்றப் பிரிவுக்குத் தெரிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.

இதன்போது கைப்பற்றப்பட்ட 19 உள்நாட்டுத்தயாரிப்பு கைத்துப்பாக்கிகள் நல்ல நிலையில் இருந்ததாகவும், அவை டி-56 ரக தோட்டாக்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டவை என்றும் பொலிஸ் கூறுகின்றது.

தற்போது வெலிசர சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாதாள உலகக்கும்பல் உறுப்பினர் தெமட்டகொட சமிந்தவின் மகனுடன் இவை தொடர்புடையவை என்றும், சமிந்தவின் மகன் துபாயில் தங்கியிருப்பதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, கைது செய்யப்பட்ட நான்கு சந்தேகநபர்களும் தெமட்டகொட பகுதியில் உள்ள ஒரு பாதாள உலகக்கும்பலுடன் தொடர்புடையவர்கள் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதற்கமைய, அவர்கள் தடுப்புக்காவல் உத்தரவுகளின் கீழ் காவலில் வைக்கப்பட்டு, விரிவாக விசாரிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சோதனையில் சிறப்பு அதிரடிப் படையும் பொலிஸாருக்கு உதவியுள்ளதாக கூறப்படுகின்றது.

கொழும்பில் இவ்வளவு பெரிய அளவிலான துப்பாக்கிகள் கண்டுபிடிக்கப்பட்டது இதுவே முதல் முறை என பொலிஸ் அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.

மேற்கு வடக்கு பொறுப்பு பிரதி பொலிஸ் அதிகாரியின் அறிவுறுத்தல்களின் பேரில், பேலியகொட குற்றப் பிரிவுப்பணிப்பாளர் வழிகாட்டுதலின் கீழ் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

அடுத்த மாதம் மீண்டும் எரிபொருள் விலை திருத்தம் வெளியான அறிவிப்பு!!

உலகச்சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்த போதிலும், கடந்த சில ஆண்டுகளாக நாட்டில் எரிபொருள் விலையை நிலையாக வைத்திருக்க அரசாங்கம் பெரும் மானியம் வழங்கி வருவதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருண தெரிவித்துள்ளார்.

சமீபத்திய எரிபொருள் விலை திருத்தம் மற்றும் உலகச்சந்தை விலைகள் தொடர்பாக, நேற்று (03) இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தில் நடைபெற்ற சிறப்பு ஊடக சந்திப்பில் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

உலகச்சந்தையில் எரிபொருள் விலை குறைந்திருக்கும் நிலையில், நாட்டில் விலையை உயர்த்த அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து சமூகத்தில் விவாதம் கிளம்பி வருகின்றது.

நாட்டில் சில தரப்பினர் அரசியல் ஆதாயத்திற்காகவோ அல்லது உண்மைகளைப் பற்றிய அறியாமையின் காரணமாகவோ தரவுகளைத் திரித்து, பொதுமக்களைத் தவறாக வழிநடத்துகின்றனர்.

ரஷ்ய-உக்ரைன் போர் வெடித்ததைத் தொடர்ந்து, உலகச்சந்தையில் டீசல் விலை வேகமாக அதிகரித்தது.

மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழல் காரணமாக, பெப்ரவரியில் 88 டொலராக இருந்த சராசரி விலை, ஏப்ரல் மாதத்தில் 190 டொலராக (115% அதிகரிப்பு) உயர்ந்தது. சில நாட்களில், அது 291 டொலர் என்ற சாதனை உச்சத்தை எட்டியது என்றும் சுட்டிக்காட்டினார்.

எரிபொருள் விலையை நிலையாக வைத்திருக்க, கடந்த காலத்தில் அரசாங்கம் ஒரு பெரிய மானியத்தை வழங்கியுள்ளது. ஒரு லிட்டர் டீசலுக்கு ரூ. 100 செலவை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளது.

மேலும் இதற்காகச் செலவழிக்கப்பட்ட மொத்தத் தொகை ரூ. 57 பில்லியன் ஆகும். இந்த நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்திருந்தால்,

எரிபொருள் விலை உயர்வால் போக்குவரத்து மற்றும் பிற பொருட்களின் விலை கடுமையாக அதிகரித்து, ஒட்டுமொத்தப் பொருளாதாரமும் சரிந்திருக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

தற்போதைய மானிய முறை இந்த மாதத்துடன் முடிவடைவதால், விலை திருத்தம் அவசியம். உலகச் சந்தை விலை தற்போது 148 டொலராகக் குறைந்திருந்தாலும்,

அது போருக்கு முந்தைய விலையை விட சுமார் 179% அதிகமாகவே உள்ளது. எண் தரவுகளைக் கருத்தில் கொண்டால், டீசலின் உலக விலை 179.8% அதிகரித்துள்ளது, ஆனால் உள்ளூர் விலை 148% மட்டுமே அதிகரித்துள்ளது.

பெட்ரோலின் உலகச் சந்தை விலை 172% அதிகரித்திருந்தாலும், உள்ளூர் விலை 148% மட்டுமே அதிகரித்துள்ளது.

இந்தத் தரவுகளின்படி, உலகச் சந்தை விலையின் உயர்வை விட உள்ளூர் விலை இன்னும் குறைவாகவே உள்ளது என்பது தெளிவாகிறது என்றும் விளக்கமளித்துள்ளார்.

வவுனியாவில் ஸ்மார்ட் AI பயிற்சி முகாம் : இன்றே பதிவுகளை மேற்கொள்ளுங்கள்!!

நவீன தொழில்நுட்ப உலகில் செயற்கை நுண்ணறிவு (AI) கருவிகளின் பயன்பாடு அத்தியாவசியமாகி வரும் நிலையில், வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த பணியாளர்கள் மற்றும் ஆர்வலர்களுக்காக பிரத்தியேகமான “ஸ்மார்ட் பணியாளர்களுக்கான AI பயிற்சி முகாம்”ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஜூன் மாதம் 14ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை, வவுனியா குருமன்காட்டில் அமைந்துள்ள IDM Nations Campus International வளாகத்தில் காலை 9.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை இப்பயிற்சி முகாம் நடைபெறவுள்ளது.

இன்றைய போட்டி நிறைந்த வேலைச் சூழலில், வேலைப்பளுவை குறைத்து, நேரத்தை மிச்சப்படுத்தி, அன்றாட பணிகளை எவ்வாறு புத்திசாலித்தனமாகவும் வேகமாகவும் கையாள்வது என்பதை கற்றுக்கொடுக்கும் நோக்கில் இந்த விழிப்புணர்வு மற்றும் பயிற்சி முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முழுக்க முழுக்க செய்முறைப் பயிற்சியாக (100% Hands-on Training) அமையவுள்ள இந்த முகாமில், பங்கேற்பாளர்கள் தொழில்முறை மற்றும் அன்றாட பணிகளில் பல்வேறு AI கருவிகளை (AI Tools) சரியான முறையில் கையாளுதல் , நேரத்தை மிச்சப்படுத்தி, வேலைகளில் உற்பத்தித்திறனை (Productivity) பல மடங்கு அதிகரிப்பதற்கான நவீன உத்திகள் , AI கருவிகளைப் பயன்படுத்தும் போது பொதுவாக ஏற்படும் தவறுகள் மற்றும் அவற்றைத் தவிர்ப்பதற்கான வழிமுறைகள் போன்ற பல முக்கிய விடயங்களை கற்றுக்கொள்ள முடியும்

இப்பயிற்சி முகாமினை மென்பொருள் பொறியாளரும், தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப (ICT) ஆலோசகருமான திரு.தனுராஜ் சிவகுமார் வழிநடத்தவுள்ளார்.

துறைசார் நிபுணரின் வழிகாட்டலில் நடைபெறும் இப்பயிற்சி முகாமில் கலந்துகொள்ளும் அனைவருக்கும் எதிர்கால வேலைவாய்ப்புகளுக்குப் பயன்படக்கூடிய தொழில்முறை சான்றிதழ் (Professional Certificate) வழங்கப்படும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இப்பயிற்சியில் கலந்துகொள்வதற்கான பதிவு கட்டணமாக ரூபாய் 1000 மாத்திரம் அறவிடப்படும். இதற்கான இருக்கைகள் மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே (Limited Seats) ஒதுக்கப்பட்டுள்ளதால், ஆர்வமுள்ளவர்கள் முன்கூட்டியே தங்களது பதிவுகளை உறுதி செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலதிக விபரங்கள் மற்றும் பதிவுகளுக்கு :
தொலைபேசி எண்: 0760970955
வாட்ஸ்அப் தொடர்பு இங்கே கிளிக் செய்யவும்..

மாறிவரும் டிஜிட்டல் உலகிற்கு ஏற்ப தங்களது திறமைகளை அடுத்த கட்டத்திற்கு உயர்த்தி, புத்திசாலித்தனமாக வேலை செய்ய விரும்பும் வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த அரச மற்றும் தனியார் துறை பணியாளர்கள், தொழில்முனைவோர் மற்றும் இளைஞர்கள் இந்த அறிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு ஏற்பாட்டுக்குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

வவுனியா கனகராயன்குளம் பகுதியில் கோர விபத்து : இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!!

வவுனியா, கனகராயன்குளம் பகுதியில் (பெரியகுளம்) A-9 பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

வவுனியா – யாழ்ப்பாணம் A-9 வீதியில் கனகராயன்குளம் பெரியகுளம் பகுதிக்கு அருகில் பாதசாரிகளாக நடந்து சென்றுகொண்டிருந்த இரண்டு இளைஞர்களை, அதே திசையில் வேகமாக வந்த வாகனம் ஒன்று ரிதாபகரமாக மோதித் தள்ளியுள்ளது.

மோதிய வேகத்தில் தூக்கி வீசப்பட்ட இரு இளைஞர்களும், படுகாயமடைந்த நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

உயிரிழந்த இரண்டு இளைஞர்களும் கனகராயன்குளம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களின் உடல்கள் தற்போது பிரேத பரிசோதனைக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.

விபத்தை ஏற்படுத்திய வாகனம் மற்றும் அதன் ஓட்டுநர் தொடர்பில் கனகராயன்குளம் காவற்துறையினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

விபத்து நடந்த பகுதியில் தற்போது பதற்றமான சூழல் நிலவுவதுடன், மேலதிக விசாரணைகள் தொடர்கின்றன.

 

வவுனியாவில் உழவு இயந்திரத்தில் சிக்குண்டு 20 வயது இளைஞன் பரிதாபமாக மரணம்!!

வவுனியா, கனகராயன்குளம் குறிசுட்டகுளம் பகுதியில் உழவு இயந்திரத்தில் சிக்குண்டு 20 வயது இளைஞன் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

நேற்று மாலை 2.30 மணியளவில் குறிசுட்டகுளத்தில் அமைந்துள்ள காளிகோயிலில் வேலை செய்வதற்காக உழவு இயந்திரம் இயக்கப்பட்டுள்ளது. இதன்போது, எதிர்பாராதவிதமாக குறித்த இளைஞன் உழவு இயந்திரத்திற்குள் தவறி வீழ்ந்துள்ளார். இயந்திரத்தில் சிக்குண்டு பலத்த காயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

இவ்விபத்தில் உயிரிழந்தவர் குறிசுட்டகுளம், கனகராயன்குளத்தைச் சேர்ந்த கஜேந்திரன் குகப்பிரியன் (வயது 20)என அடையாளம் காணப்பட்டுள்ளார்
இச்சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

மனைவி மற்றும் மாமியார் தொல்லை : கருணைக்கொலை செய்யக்கோரும் கணவன்!!

இந்தியாவில், தன் மனைவி மற்றும் மாமியாரின் கொடுமைகளை தாங்க முடியாத நபர் ஒருவர், மாவட்ட கலெக்டரிடம் தன்னை கருணைக் கொலை செய்ய அனுமதிக்கக்கோரி மனு அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குஜராத் மாநிலம் சூரத்தைச் சேர்ந்த துணி வியாபாரியான குறித்த நபர் , அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை நான்காவதாக திருமணம் செய்தார். அவரது மனைவி, சிறிய விஷயங்களுக்குக் கூட சந்தேகம் அடைந்து சண்டையிட்டு வந்துள்ளார்.

திருமணமாகி பல ஆண்டுகள் ஆனாலும் இதே நிலை நீடித்ததால், குறித்த நபர் , கடும் மன உளைச்சலுக்கு உள்ளாகினார். இந்நிலையில் சூரத் மாவட்ட கலெக்டரிடம், கிரித் படேல் சமீபத்தில் அளித்த கோரிக்கை மனுவில் ,

மனைவி, மாமியார் மற்றும் அவரது குடும்பத்தினர் என் மீது பொய் குற்றச்சாட்டுகளை சுமத்தி, உடல் மற்றும் மன ரீதியாக தொல்லை கொடுத்து வருகின்றனர். , இந்த கொடுமைகளை பல ஆண்டுகள் சகித்துக் கொண்டு வாழ்ந்து வந்தேன்.

தற்போது எல்லை மீறியதால், வேறு வழியின்றி உயிரை போக்கிக் கொள்ள முடிவெடுத்துள்ளேன். எனவே, கருணை கொலை தொடர்பான என் மனுவை பரிசீலித்து அனுமதி வழங்க வேண்டும்.

மூன்று நாட்களுக்குள் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், விபரீத முடிவு எடுக்க நேரிடும் என கூறியுள்ளார். அத்துடன் என் முதல் மனைவிக்கு பிறந்த மகனை, நான்காவது மனைவி மனிஷா சவுகான் கொலை செய்ய திட்டமிட்டார்.

எனவும் ‘இதுதொடர்பாக, பொலிஸாரிடம் புகார் அளித்தும், நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் தான் ஒரு ஆண் என்பதால், என் மனுவை பரிசீலிக்கவில்லை எனவும் பாதிக்கப்பட்ட நபர் தெரிவித்துள்ளதாகௌம் கூறப்படுகின்றது.