அநுராதபுரம் பகுதியில் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட அதிபரை நவம்பர் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தம்புத்தேகம நீதவான் நீதிமன்றம் குறித்த உத்தரவை இன்று (12.11.2025) பிறப்பித்துள்ளது.
தேசிய மக்கள் கட்சியின் பேலியகொட நகரசபை உறுப்பினர் டிஸ்னா நெரஞ்சலவின் கணவரான குறித்த பாடசாலை அதிபர், கடந்த 5ஆம் திகதி (05.11.2025) போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்தார்.
மேலும், அவர்களது மகன், கடந்த மாதம் 29ஆம் திகதி போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா, ஹொரவப்பொத்தானை வீதியில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய உணவகம் ஒன்று மாநகரசபை சுகாதார பரிசோதகர்களால் இன்று (11.11) சீல் வைத்து மூடப்பட்டது.
வவுனியா, ஹொரவப்பொத்தனை வீதியில் உள்ள உணவகம் ஒன்றில் வழங்கப்பட்ட உணவில் புழு காணப்பட்டதாகவும், சுகாதார சீர்கேட்டுடன் குறித்த உணவகம் இயங்கியதாகவும் தெரிவித்து வவுனியா மாநகரசபை பொது சுகாதார பரிசோதகர்களால் நீதிமன்ற உத்தரவுக்கமைய மூடப்பட்டது.
இன்றில் (11.11) இருந்து எதிர்வரும் 25 ஆம் திகதி வரை குறித்த உணவகம் மூடப்பட்டுள்ளது. குறித்த காலப்பகுதியில் சுகாதார பரிசோதகர்களின் அறிவுறுத்தலுக்கமைய திருத்த வேலைகளை மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தென்கொரியாவில் பணிபுரிந்த இரண்டு இலங்கையர்கள் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உயிரிழந்த இலங்கைத் தொழிலாளர்கள் இருவரும் உள்ளூர் மீன் வளர்ப்புப் பண்ணை ஒன்றில் பணிபுரிந்த என்று கூறப்படுகின்றது.
இந்நிலையில் நேற்று முன்தினம் (09) இரவு, உள்ளூர் மீன் வளர்ப்புப் பண்ணை ஒன்றின் நீர்த்தாங்கிக்குள் மூன்று பேர் உயிரிழந்ததாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் அங்குப் பொலிஸ் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
பண்ணையில் இருந்த 4 மீட்டர் அகலம், 3 மீட்டர் நீளம் மற்றும் 2 மீட்டர் உயரம் கொண்ட பெரிய நீர்த்தாங்கி ஒன்றில் சிக்கி, 50 வயதுடைய கொரிய நாட்டவரும், 20 மற்றும் 30 வயதுடைய இரண்டு இலங்கையர்களும் உயிரிழந்தமை தெரியவந்துள்ளது.
உயிரிழந்த கொரிய நாட்டவர் அந்த மீன் வளர்ப்புப் பண்ணையின் முகாமையாளராகப் பணியாற்றி வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் சம்பவம் தொடர்பில் அந்நாட்டுப் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
கிளிநொச்சி ஆனையிறவு பகுதியில் இன்று (11.11.2025) விபத்து ஒன்று இடம் பெற்றுள்ளது. இந்த விபத்தில் டிப்பர் சேதமடைந்துள்ளது.
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, மாடு ஒன்று வீதிக்கு குறுக்காக சென்று கொண்டிருந்தபோது வீதியில் பயணித்த பேருந்து ஒன்று விபத்து ஏற்படுவதை தவிர்ப்பதற்காக பேருந்தின் சாரதி வேகத்தை குறைத்து பேருந்தை நிறுத்தியுள்ளார்.
இந்நிலையில் பின்னால் சென்றுகொண்டிருந்த டிப்பர் வேக கட்டுப்பாட்டை இழந்து பட்டா ரக வாகனத்துடன் மோதி விபத்து சம்பவித்துள்ளது. இது தொடர்பான விசாரணைகளை பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
தம்புள்ளையைச் சேர்ந்த 19 வயது மாணவி ஒருவர் க.பொ.த உயர்தர பரீட்சை எழுதவிருந்த நிலையில் திடீரென உயிரிழந்த சம்பவம் தொடர்பில் அதிர்ச்சி தகவலொன்று வெளியாகியுள்ளது.
அதன்படி குறித்த மாணவி விஷம் அருந்தியே உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. தம்புள்ளை ஆதார வைத்தியசாலையில் நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையின் போது இந்த விடயம் தெரியவந்துள்ளதாக மேற்கோள்காட்டி செய்தி வெளியாகியுள்ளது.
இவ்வாண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சை எழுதவிருந்த தம்புள்ளை மேல்அரவுல பகுதியைச் சேர்ந்த உயிரியல் துறை மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த மாணவி இரவு முழுவதும் படித்துக் கொண்டிருந்த நிலையில் அவர் தூங்கியதாகவும், தூக்கத்திலிருந்து எழுந்திருக்காததால் பெற்றோர் அவரைப் பரிசோதித்த போது மயக்கமடைந்திருந்தமையும் தெரியவந்துள்ளது.
இதன் விளைவாக, இந்த மாணவியை தம்புள்ளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்க பெற்றோர் நடவடிக்கை எடுத்துள்ள போதும் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரியப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சுற்றுலா அல்லது யாத்திரை பயணங்களின் போது நீங்கள் இருக்கும் இடத்தை முகநூல் மூலம் தெரியப்படுத்த வேண்டாம் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஃப்.யூ.வுட்லர் தெரிவித்துள்ளார்.
பத்தரமுல்லையில் உள்ள பொலிஸார் ஊடகப் பிரிவு கேட்போர் கூடத்தில் இன்று (11.11.2025) நடந்த ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
சுற்றுலாவிற்குத் தேர்ந்தெடுக்கும் பேருந்து அல்லது வாகனம் நல்ல நிலையில் உள்ளதா என்பதை சரிபார்க்குமாறு அவர் இதன்போது வலியுறுத்தியுள்ளார்.
மேலும், குறித்த வாகனத்தின் ஓட்டுநரைப் பற்றிய சரியான புரிதல் மிகவும் முக்கியம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், பயணங்களின் போது, நீங்கள் எங்கு உள்ளீர்கள் என்பதை புகைப்படம் மூலம் முகநூலில் பகிர்ந்துகொள்வது குற்றவாளிகள் அல்லது உங்களின் வீட்டை நோட்டமிடும் ஒருவருக்கு சாதகமானதாக இருக்கலாம் என அவர் எச்சரித்துள்ளார்.
எனவே, நீங்கள் எங்கு இருக்குறீர்கள் என்பதை யாரும் அறியத் தேவையில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குளியாப்பிட்டியில் பரீட்சை விண்ணப்பப் படிவம் மற்றும் தேசிய அடையாள அட்டையுடன் கூடிய தனது பணப்பை பேருந்தில் திருடப்பட்டதைத் தாங்க முடியாமல், மாணவன் ஒருவர் மயங்கி விழுந்துள்ளார்.
குளியாப்பிட்டியில் பிரதான வீதியில் மயக்கமடைந்து விழுந்த மாணவனை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல நகரவாசிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்தனர்.
உயிரியல் துறையில் மூன்றாவது முறையாக பரீட்சை எழுத வந்த மாணவர் ஒருவரே இந்த சம்பவத்தை எதிர்கொண்டுள்ளனர். பேருந்திற்கு பணம் செலுத்தச் சென்றபோது, பணப்பை காணாமல் போனதை உணர்ந்ததாக மாணவர் குறிப்பிட்டுள்ளார்.
அந்த நேரத்தில், அங்கு இருந்த ஒருவர் உடனடியாக தலையிட்டு விண்ணப்பப் படிவத்தின் நகலை ஒன்லைனில் பெற உதவியுள்ளார்.
அதே நேரத்தில், ஒருவர் விரைவாக மாணவனுடன் சேர்ந்து, பேருந்து நிறுத்தத்திற்கு எதிரே வசிக்கும் சமாதான நீதிவான் ஒருவரிடம் கையொப்பத்தைப் பெற்று, மாணவனை பரீட்சைக்கு அனுப்பி வைத்தார்.
எனினும் மாணவர் மீண்டும் சிரமப்படுவதைத் தடுக்க, சமாதான நீதிவான் சம்பா ஏகநாயக்க மாணவருக்கு பணம் கொடுத்து, புகைப்படம் எடுக்க ஒரு புகைப்பட ஸ்டுடியோவிற்கு அனுப்பினார்.
அந்த நேரத்தில், அவர் நகரத்தின் நடுவில் மயக்கமடைந்து விழுந்துள்ளார். உடனடியாக மாணவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தாயாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
போதைக்கு அடிமையான கும்பல் ஒன்று, பேருந்துகளில் திருட்டில் ஈடுபட்டிருப்பதாக பலர் தெரிவித்துள்ளனர்.
டெல்லியில் நேற்றையதினம் (10.11.2025) இடம்பெற்ற குண்டுவெடிப்பு தொடர்பில பல அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாகிஸ்தான் பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்பில் இருந்த 3 வைத்தியர்கள் உட்பட 8 பேர் காஷ்மீரில் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடம் இருந்து ஏராளமான ஆயுதங்களும், வெடிபொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன. விசாரணையில் அவர்கள் பல இடங்களில் நாச வேலைக்கு சதித்திட்டம் தீட்டி இருப்பது கண்டறியப்பட்டது.
மேலும், கார் குண்டுவெடிப்புக்கு மூளையாக செயற்பட்ட டொக்டர் உமர் முகமதுவின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. எனினும், அவர் குண்டுவெடிப்பில் இறந்தாரா அல்லது தலைமறைவாக இருக்கிறாரா என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
டெல்லியில் வெடித்த காரை ஓட்டி வந்தது மருத்துவர் முகமது உமர் என்ற பயங்கரவாதி எனவும் அரியானாவில் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டு கைதான மருத்துவர் ஷக்கீர், உமரின் நண்பர் எனக் கூறப்படுகிறது.
மேலும் கார் வெடிப்புக்கு அமோனியம் நைட்ரேட் ரசாயனம் பயன்படுத்தப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
சுமார் 3 மணி நேரம் செங்கோட்டை அருகே பார்க்கிங்கில் நின்றிருந்த கார் மாலை 6.48 மணிக்கு மெதுவாக இயக்கப்பட்டு சிக்னல் அருகே வந்த பிறகுவெடித்துள்ளது. இவ் வெடிப்பில் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனிடையே, முகமது உமரின் தாய், சகோதரியை காஷ்மீரில் வைத்து கைது செய்யப்பட்டள்ளனர். டெல்லி கார் வெடிப்பு தற்கொலைப் படைத் தாக்குதலாக இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதனால் உள்நாட்டு பாதுகாப்பில் சிறப்பு கவனம் செலுத்துமாறு பாதுகாப்பு படைகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டன. இந்தியாவின் பல்வேறு இடங்களுக்கு பயங்கரவாத அச்சுறுத்தல்கள் இருப்பதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளதாக கூறப்படுகின்றது.
கொழும்பு செட்டியார்தெரு நிலவரப்படி 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 300,600 ரூபாவாக பதிவாகியுள்ளது.
உலக சந்தையில் ஏற்பட்டுள்ள விலை அதிகரிப்பு காரணமாக, இலங்கையில் மீண்டும் தங்கத்தின் விலை அதிகரித்து வருகின்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய (11.11.2025) தங்க விற்பனை நிலவரப்படி, 24 கரட் தங்க பவுணொன்றின் விலை 325,000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது.
அதேநேரம் 22 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 300,600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கடந்த செவ்வாய்க்கிழமை கொழும்பு செட்டியார்தெரு தகவல்களின் படி 22 கரட் தங்கப்பவுணின் விலை 293,200 ரூபாவாகவும், 24 கரட் தங்கப்பவுணின் விலை 317,000 ரூபாவாகவும் இருந்துள்ளது.
இந்த தகவல்படி கடந்த செவ்வாய்க்கிழமையை விட இன்றைய தினம் தங்கத்தின் விலையானது சுமார் எட்டாயிரம் ரூபா வரையில் அதிகரித்துள்ளதாக தெரியவருகிறது.
கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் கல்வி கற்ற மாணவியின் திடீர் மரணத்தையடுத்து அவரது உடல் உறுப்புக்களை தானமாக வழங்க பெற்றோர் முடிவு செய்துள்ளனர்.
அதற்கமைய சிறுநீரகங்கள் உட்பட உறுப்புகள் வேறு நோயாளிகளுக்கு மாற்று அறுவை சிகிச்சைக்காக வழங்கப்படவுள்ளது. கண்டியை சேர்ந்த 24 வயது மாணவி ஜெயதிலகா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அவர் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் சுகாதார அறிவியல் பீடத்தில் தாதி மற்றும் குடும்ப சுகாதார பட்டப்படிப்பின் மூன்றாம் ஆண்டில் படித்து வந்தார்.
கடந்த 5 ஆம் திகதி பல்கலைக்கழகத்திலிருந்து வீடு திரும்பிய மாணவி, தனது வீட்டின் குளியலறையில் தவறி விழுந்துள்ளார்.
மறுநாள் அதிகாலை 2.00 மணியளவில் கண்டி தேசிய மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையின் நரம்பியல் அறுவை சிகிச்சை தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று உயிரிழந்துள்ளார்.
இந்த நிலையில் பெற்றோரின் விருப்பப்படி மாற்று அறுவை சிகிச்சைக்குத் தேவையான உறுப்புகள் அகற்றப்பட்டதைத் தொடர்ந்து, அவரது பிரேத பரிசோதனை கண்டி தேசிய மருத்துவமனையில் நடத்தப்பட்டது.
முதுகெலும்புகள் அழுத்தம் காரணமாக மூளையில் ஏற்பட்ட இரத்தக்கசிவே மரணத்திற்கான காரணம் என்பது உறுதி செய்யப்பட்டது.
மருத்துவ அறிக்கைகள் மற்றும் சமர்ப்பிக்கப்பட்ட ஆதாரங்களை பரிசீலித்த பின்னர், இதுவோரு திடீர் மரணம் என கண்டி தேசிய மருத்துவமனையின் மரண விசாரணை அதிகாரி உறுதி செய்துள்ளார்.
மன்னார் – யாழ்ப்பாணம் பிரதான வீதியில் அமைந்துள்ள சிப்பியாறு பாம்பு வழிகாட்டி அந்தோனியார் ஆலய வளாகத்தில் இன்று திங்கட்கிழமை (10) காலை சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சடலமாக மீட்கப்பட்டவர் வடக்கு மாகாண முன்னாள் கல்விப் பணிப்பாளராகவும், இலங்கை கல்வி வெளியீட்டுப் பிரிவின் பணிப்பாளராகவும் கடமையாற்றிய திருஞானம் ஜோன் குயின்ரஸ் என்ற 60 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இன்று காலை தனது வாகனத்தில் பாம்பு வழிகாட்டி அந்தோனியார் ஆலயத்திற்கு வருகை தந்து வழிபாட்டில் ஈடுபட்டபோது இவர் உயிரிழந்திருக்கலாம் என தெரியவருகிறது.
சடலத்தை கண்ட ஆலய நிர்வாகத்தினர் இலுப்பைக்கடவை பொலிஸாருக்கு தகவல் வழங்கிய நிலையில் சம்பவ இடத்துக்கு வருகை தந்த பொலிஸார் சடலத்தை பார்வையிட்டனர்.
அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற மன்னார் திடீர் மரண விசாரணை அதிகாரி பீ.பிரபானந்தன் சடலத்தை பார்வையிட்டார். பின்னர் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக சடலத்தை மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒப்படைக்க உத்தரவிட்டார்.
தம்புள்ளை பிரதேசத்தில் இன்று (10) ஆரம்பமான உயர்தரப் பரீட்சைக்கு எழுதத் தயாராகி வந்த 19 வயது மாணவி ஒருவர் தூக்கத்திலேயே மர்மமான முறையில் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவத்தில் உயிரிழந்தவர் தம்புள்ளை மேல் அரவுல பகுதியைச் சேர்ந்த இறந்த மாணவி உயிரியல் பிரிவில் உயர்தரப் பரீட்சை இன்று (10) எழுதவிருந்த மாணவி என தம்புள்ளை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இறந்த மாணவி தம்புள்ளை தேசியப் பள்ளியில் பயின்று வரும் தருஷி சாமோடி வயது 19 என பொலிஸார் கூறியுள்ளனர்.
மாணவி தனது அறையில் ஞாயிற்றுக்கிழமை (09) படித்துக் கொண்டிருந்ததாகவும், மறுநாள் தேர்வுக்குத் தேவையான பொருட்களைத் தயாரித்துவிட்டு தூங்கச் சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலையில் எழுந்திருக்காதது குறித்து அவரது பெற்றோர் எழுப்பியபோது, அவர் மயக்கமடைந்திருப்பதாகக் கருதி தம்புள்ளை ஆதார மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இருப்பினும், வெளிநோயாளர் பிரிவில் உள்ள மருத்துவர்கள் அவரைப் பரிசோதித்தபோது, அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக உறுதிப்படுத்தியதாக தம்புள்ளை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் மாணவியின் மரணத்திற்கான காரணம் இன்னும் வெளியாகவில்லை என தெரிவித்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில், பிறந்தநாளன்று தந்தை வாங்கிக் கொடுத்த புது புல்லட்டை ஓட்டிச் சென்ற பள்ளி மாணவன், பேருந்து மோதிய விபத்தில் பலியான சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
லக்னோவைச் சேர்ந்த வழக்கறிஞர் சந்தோஷ் குமாரின் ஒரே மகன் வைபவ் ஷா (17). பிளஸ்-1 படித்து வந்த வைபவ், நன்றாக படிப்பதாக உறுதி கூறிய நிலையில், மகனுக்குப் பிறந்தநாள் பரிசாக கடந்த 3 வாரங்களுக்கு முன்பு புல்லட் பைக் ஒன்றை வாங்கி தந்தார் சந்தோஷ் குமார்.
புதிய பைக்கை ஓட்டி வருவதில் ஆர்வம் கொண்டிருந்த வைபவ், நேற்று காலை 7 மணியளவில் தனது பிறந்தநாளையொட்டி நண்பர் ஒருவருடன் ஆயிஷானா பகுதிக்குச் சென்றார்.
அப்போது நெடுஞ்சாலையில் பயணிக்கும் போது எதிரே வந்த ஆம்னி பேருந்து திடீரென மோதியதாக கூறப்படுகிறது. மோதிய வேகத்தில் புல்லட்டில் இருந்து தூக்கி வீசப்பட்ட மாணவர்கள் இருவரும் படுகாயமடைந்தனர்.
உடனடியாக அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர். ஆனால், மருத்துவர்கள் வைபவ் ஏற்கனவே பரிதாபமாக உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
அவருடன் சென்றிருந்த சிறுவன் தீவிர சிகிச்சையில் உள்ளார். விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்ப முயன்ற பேருந்து ஓட்டுநரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே மகனை இழந்த பெற்றோர் துயரத்தில் கதறினர்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே ரேஷ்மா என்ற இளம்பெண் கணவருடன் தொடர்ந்து அடிக்கடி சண்டை ஏற்பட்ட நிலையில் மன அழுத்தத்தில் தாயாருக்கு செல்போனில் பேசிவிட்டு, தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாகர்கோவில் கீழமறவன்குடியிருப்பு பகுதியை சேர்ந்த செல்வசரண் (25). டெம்போ ஓட்டுநராக பணியாற்றி வரும் அவர், விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்த ரேஷ்மா (20) என்பவரை 1.5 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துக் கொண்டார்.
திருமணத்திற்குப் பின் இருவருக்கும் இடையே சிறிய குடும்ப பிரச்சினைகள் அடிக்கடி ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் நடந்த தகராறு காரணமாக, செல்வசரண் வீட்டை விட்டு வெளியேறியதாக தகவல். வீட்டில் தனியாக இருந்த ரேஷ்மா, மனஉளைச்சலால் தற்கொலை முடிவு செய்ததாக தெரிகிறது. தற்கொலை செய்யும் முன்,
தாயாருக்கு போன் செய்து, “நான் தற்கொலை செய்துக் கொள்ளப் போகிறேன்” என கூறி விட்டு அழைப்பை துண்டித்துள்ளார். இதைக் கேட்ட தாயார் உடனடியாக அருகிலிருந்த உறவினர்களுக்கு இது குறித்து தகவல் அளித்தார்.
அவர்கள் ரேஷ்மாவின் வீட்டுக்கு சென்று கதவைத் தட்டியும் நீண்ட நேரமாக பதில் கிடைக்காததால் கதவை உடைத்து உள்ளே சென்ற போது, ரேஷ்மா தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இது குறித்த தகவல் பெறப்பட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக கோட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி 1.5 ஆண்டில் இளம்பெண் உயிரிழந்ததால், விதிமுறைப்படி ஆர்.டி.ஓ.வும் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
தலாவ விபத்தில் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர் ஒருவரே உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
முதலாம் இணைப்பு : அநுராதபுரம், தலாவ, ஜெயகங்கா சந்தி பகுதியில் தனியார் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், 40 இற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். காயமடைந்தவர்களில் உயர் தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் தம்புத்தேகம மற்றும் தலாவ வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
விலை ஏற்றத்தைத் தொடர்ந்து தற்போது சந்தை நிலைத்தன்மையை கொண்டிருப்பதால், நுகர்வோர் வாகனங்களை வாங்குவதற்கு இதுவே சரியான நேரம் என்று வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் கூறியுள்ளது.
வாகன விலைகள் மீதான அண்மைய மேல்நோக்கிய அழுத்தம் தணிந்துள்ளது. தற்போது சந்தை மிகவும் சமநிலையான நிலையை எட்டியுள்ளதாக சங்கத்தின் தலைவர் இந்திக சம்பத் மெரென்சிகே கூறியுள்ளார்.
2026 வரவு செலவுத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள 2.5 சதவீத சமூக பாதுகாப்பு வரி குறித்து கருத்து தெரிவித்த மெரென்சிகே, இது ஒரு புதிய வரி அல்ல என்று தெளிவுபடுத்தினார்.
வாகன விற்பனைக்குப் பிறகு அல்லாமல் சுங்கத்தின்போது இந்த வரியை வசூலிக்கக் கோரியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
விற்பனைக்குப் பிறகு வரி வசூலிப்பது இறக்குமதியாளர்கள் மற்றும் வாங்குபவர்களுக்கு தேவையற்ற சிக்கல்களை உருவாக்கியதால் இந்த மாற்றம் கோரப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.