நாடு முழுவதும் பல இடங்களில் திடீர் மின் தடை!!

நாடு முழுவதும் பல இடங்களில் இன்று காலை திடீர் மின் தடை ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டது. காலை 7.40 மணியளவில் மின் தடை ஏற்பட்டதால், போக்குவரத்து சமிக்ஞை கட்டமைப்பு செயல்படாததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

எனினும் சில பகுதிகளில் காலை 8 மணியளவில் சுமார் 20 நிமிடங்களுக்குள் மின்சாரம் மீண்டும் வழங்கப்பட்டன.

ஏனைய பகுதிகளில் சில மணி நேரங்களில் மின் விநியோகம் வழமைக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த திடீர் மின் தடை குறித்து மின்சார சபை இதுவரை எந்த அறிக்கையும் வெளியிடவில்லை.

You Tube நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு : iPhone பாவனையாளர்களுக்கு அதிர்ச்சித் தகவல்!!

மில்லியன் கணக்கான மக்கள் பயன்படுத்தும் வீடியோ செயலியான YouTube நிறுவனம் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

சில வகை அலைபேசிகளுக்கு YouTube செயலியை பயன்படுத்த முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ஐபோன் iPhone பயனர்களுக்கு இது ஒரு பெரிய அதிர்ச்சி செய்தியாக அமைந்துள்ளது.

ஐபோன்களில் இனி பார்வையிட முடியாது

YouTube தனது புதிய அப்டேட்டில், YouTube இப்போது iOS 16 அல்லது அதற்கும் மேல் காணப்படும் அலைபேசிகளிலேயே செயலியை இயக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, பின்வரும் ஐபோன்களில் இனி YouTube பார்வையிட முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

• iPhone 6s

• iPhone 6s Plus

• iPhone 7

• iPhone 7 Plus

• முதலாம் தலைமுறை iPhone SE

• iPod Touch 7

• iPad Air 2

• iPad mini 4

இவை iOS 15ஐ விட மேலே அப்டேட் செய்ய முடியாத சாதனங்கள் என்பதால்தான் இவற்றில் YouTube பயன்படுத்த முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது. YouTube செயலியின் புதிய பதிப்பு 20.22.1, ஜூன் 2-ஆம் திகதி வெளியிடப்பட்டது.

 

கட்டுநாயக்கவிலிருந்து சென்ற ஸ்ரீலங்கன் விமானம் அவசரமாக தரையிறக்கம்!!

கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூருக்கு நேற்று மாலை புறப்பட்ட UL 306 ஸ்ரீலங்கன் விமானம், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்தோனேசியாவின் மேடான் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.

இந்தோனேசிய தொழில்நுட்பக் குழுவினர் விமானத்தை ஆய்வு செய்ததுடன், கோளாறை சரிசெய்ய நேரம் எடுக்கும் என தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து, அதுவரை பயணிகளை ஹோட்டல் அறைகளில் வைத்திருக்க இலங்கை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

எனினும், இந்தோனேசிய அதிகாரிகள் பயணிகளை ஹோட்டல் அறைகளில் தங்க அனுமதிக்காதபோது கடுமையான நெருக்கடி மற்றும் குழப்ப நிலை ஏற்பட்டது. மேலும் அந்த நாட்டிற்கான இலங்கை தூதர் இந்தப் பிரச்சினையைத் தீர்க்க தலையிட்டுள்ளார்.

இதற்கிடையில், தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்ட இலங்கை விமானத்தை ஆய்வு செய்வதற்காக இன்று காலை ஜகார்த்தாவுக்குப் புறப்பட்ட விமானத்தில் இலங்கை தொழில்நுட்பக் குழு பயணித்துள்ளது.

விபத்துக்குள்ளான விமானத்தில் பயணிகளை திருப்பி அனுப்ப இன்று மதியம் 1.45 மணிக்கு மற்றொரு விமானம் புறப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்தியாவில் உலகின் உயரமான ரயில்வே பாலம் திறப்பு!!

இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ள உலகின் உயரமான ரயில்வே பாலத்தை இன்று திறக்கப்படுகிறது. இந்திய ரயில்வேயால் ஜம்மு காஷ்மீரில் செனாப் நதியின் குறுக்கே 359 மீட்டர் உயரத்தில் ஒரு வளைவான பாலம் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது.

இரும்பால் கட்டப்பட்ட இந்த பாலம் 1,315 மீட்டர் நீளம் கொண்டது. இது உலகின் மிக உயரமான ரயில்வே பாலம் என இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. அதோடு நில அதிர்வு மற்றும் பலத்த காற்று சூழலை தாங்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டு உள்ளது.

ஜம்மு மற்றும் ஸ்ரீநகர் இடையேயான போக்குவரத்தை மேம்படுத்துவதில் இப்பாலம் முக்கியப் பங்கு வகிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து கம்பி வழி ரயில் பாலமான அஞ்சி பாலத்தையும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைக்கிறார்.

ஸ்ரீமாதா வைஷ்ணவ தேவி கோவில் அமைந்துள்ள கத்ராவில் இருந்து ஸ்ரீநகர் வரை இயக்கப்படும் 2 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களின் சேவையையும் கொடியசைத்துத் தொடங்கி வைக்கிறார்.

அதைத்தொடர்ந்து, கத்ராவில் இந்திய ரூபாய் 46 ஆயிரம் கோடிக்கும் மேலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் அவர், அங்கு ஏற்கனவே நிறைவடைந்த திட்டங்களைத் தொடங்கி வைத்து, நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

அதேவேளை பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு முதல் முறையாக இந்திய பிரதமர் மோடி ஜம்மு காஷ்மீர் செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.

விபத்தில் பறிபோன இளைஞனின் உயிர்!!

குளியாபிட்டி- மாதம்பே வீதியில் கனதுல்ல பகுதியில் இன்று(6) இடம்பெற்ற பயங்கர விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வேன், மோட்டார் சைக்கிளுடன் மோதியதைத் தொடர்ந்து, மோட்டார் சைக்கிள் எதிர்த்திசையில் வந்த பேருந்துடன் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது.

குளியாபிட்டியிலிருந்து மாதம்பே நோக்கி பயணித்த வேன், அதே திசையில் சென்ற மோட்டார் சைக்கிளை முந்த முயன்றபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இதனால், எதிரே வந்த பேருந்துடன் மோட்டார் சைக்கிள் மோதியதில், மோட்டார் சைக்கிள் சாரதி மற்றும் பின்னால் அமர்ந்திருந்த பெண் ஒருவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகினர்.

இருவரும் குளியாபிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டநிலையில் மோட்டார் சைக்கிள் சாரதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உயிரிழந்தவர் பத்துலு ஓய பகுதியைச் சேர்ந்த 23 வயது இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

பின்னால் அமர்ந்திருந்த பெண் வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்து தொடர்பாக வேன் சாரதி மற்றும் பேருந்து சாரதி கைது செய்யப்பட்டுள்ளனர்.

வவுனியா சைவப்பிரகாச மகளீர் கல்லூரிக்கு புதிய அதிபராக ந.சத்தியாதேவி பதவியேற்பு!!

வவுனியாவில் அமைந்துள்ள பிரபல பாடசாலைகளில் ஒன்றான வவுனியா சைவப்பிரகாச மகளீர் கல்லூரியில் அதிபர் வெற்றிடம் காணப்பட்ட சூழ்நிலையில் புதிய அதிபர் நியமனம் இடம்பெற்றுள்ளது.

வவுனியா சைவப்பிரகாச மகளீர் கல்லூரியில் அதிபராக கடமையாற்றிய திருமதி.ரட்ணாதேவி ரமேஸ் ஓய்வு பெற்ற போது திருமதி இந்துமதி குணரூபன் தற்காலிகமாக அதிபராக கடமையாற்றி வந்தார்.

இந்த சூழ்நிலையில் பாடசாலையில் காணப்பட்ட அதிபர் வெற்றிடத்திற்கு தற்போது திருமதி.சத்தியாதேவி நந்தசேன புதிய அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.

திருமதி.சத்தியாதேவி நந்தசேன வவுனியா சைவப்பிரகாச மகளீர் கல்லூரியில் 1997ம் ஆண்டு தொடக்கம் 2010ம் ஆண்டு வரை ஆசிரியராக கடமைபுரிந்து பின்னர் 2010ம் ஆண்டு தொடக்கம் 2011ம் ஆண்டு வரை பிரதி அதிபராக கடையாற்றியுள்ளார்.

இதன் பின்னர் அதிபராக 2011ம் ஆண்டு நியமனம் பெற்று வவுனியா கணேசபுரம் சண்முகாநந்தா வித்தியாலயத்தில் 2018ம் ஆண்டு வரை தனது சேவையினையாற்றி பின்னர் 2018ம் ஆண்டு அநுராதபுரம் விவேகானந்தா தமிழ் மகாவித்தியாலயத்தில் 2025ம் ஆண்டு காலப்பகுதி வரை அதிபராக சேவையாற்றி மீண்டும் அதிபர் தரம் 1 இல் வவுனியா சைவப்பிரகாச மகளீர் கல்லூரிக்கு அதிபராக சேவையாற்றுவதற்கு நியமனம் பெற்று வந்துள்ளார்.

வவுனியா சைவப்பிரகாச மகளீர் கல்லூரியானது வவுனியாவில் காணப்படும் பிரசித்தமான பாடசாலைகளில் ஒன்றாகக் காணப்படுவதுடன் பல புத்தியீவிகளை இச்சமூகத்திற்கு வழங்கிவரும் பாடசாலையாகும்.

திருமதி.சத்தியாதேவி நந்தசேன அவர்களின் வருகை பாடசாலை சமூகத்திற்கு மகிழ்வினை ஏற்படுத்தியுள்ளதுடன் பாடசாலையின் ஆசிரியர்கள், மாணவர்கள், அபிவிருத்திக்குழு உறுப்பினர்கள் மற்றும் பழைய மாணவர்கள் புதிய அதிபருக்கு தமது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். மேலும் பாடசாலையின் பழைய மாணவர்கள் புதிய அதிபரை சந்தித்து தமது வாழ்த்தினையும் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் வீட்டு வளாகத்தில் 09 அடி நீளமான முதலை மீட்பு!!

வவுனியா – கொக்குவெளி பகுதியில் வீட்டில் இருந்து 09 அடி நீளமான முதலை ஒன்று வனஜீவராசிகள் திணைக்களத்தால் மீட்கப்பட்டுள்ளது. நேற்றையதினம் குறித்த வீட்டிற்கு பின்புறமுள்ள தோட்டப்பகுதியில் முதலை ஒன்று உள்ளதை வீட்டின் உரிமையாளர் அவதானித்துள்ளார்.

அதனை துரத்துவதற்கு முற்பட்ட போது குறித்த காணியில் அமைந்துள்ள கைவிடப்பட்ட கிணற்றில் முதலை வீழ்ந்துள்ளது. இதனையடுத்து அவரால் வனயீவராசிகள் வனஜீவராசிகள் திணைக்களதிக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து இன்றையதினம் குறித்த பகுதிக்கு சென்ற அதிகாரிகள் கிணற்றில் இருந்து குறித்த முதலையை பிடித்துச்சென்றனர்.

வவுனியா நெளுக்குளத்தில் உலக சுற்றாடல் தினத்தினையடுத்து மரங்கள் நாட்டிவைப்பு!!

வவுனியா நெளுக்குளம் கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு சுற்றுச்சூழலை நேசிக்கும் ஒரு சமூகத்தை உருவாக்கும் எனும் தொனிப்பொருளில் இன்று (05.06.2025) காலை மரங்கள் நாட்டி வைக்கப்பட்டன.

நெளுக்குளம் கிராம சேவையாளர் கௌசல்யா லெனின் தலைமையில் இடம்பெற்ற இம் மரநடுகையானது நெளுக்குளம் பிள்ளையார் ஆலய வளாகம், நெளுக்குளம் தொடக்கம் குழுமாட்டுச்சந்தி வரையிலான வீதியோரம் ஆகிய பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டது.

இந்நிகழ்வில் வவுனியா பிரதேச செயலாளர், வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை செயலாளர், வனவளத் துறையினர், தொழிநுட்ப கல்லூரி அதிபர், மாவட்ட மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், நெளுக்குளம் பொலிஸார்,

நிர்வாக கிராம அலுவலர், சமூர்த்தி அலுவலர், கிராம அபிவிருத்தி சங்கத்தினர், அரச மற்றும் அரசார்பற்ற ஊழியர்கள், பொதுமக்கள் ஆகியோர் பங்குபற்றியதுடன் மரநடுகையிலும் ஈடுபட்டிருந்தனர்.

நெளுக்குளம் கிராம சேவையாளரினால் முன்னெடுக்கப்படும் இம் மரநாடுகையானது பல்வேறு கட்டங்களாக தொடர்ந்தும் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சியில் 18 வயது மாணவி மரணம் : துயரத்தில் உறவுகள்!!

கிளிநொச்சி பூநகரி பிரதெசத்தில் உயர்தர பரீட்சைக்கு தோற்றிய மாணவி உயிரிழந்துள்ளார். உயர்தரத்தில் விஞ்ஞான பீடத்தில் கல்வி கற்கும் 18 வயதுடைய மாணவி ஒருவரே உயிரிழந்துள்ளார்.

கிளி முழங்காவில் தேசிய பாடசாலையில் இரண்டாம் வருட மாணவியாக கல்வியினை தொடர்ந்து வந்த பூநகரி இரணைமாதா நகரினை பிறப்பிடமாக கொண்ட மாணவி நேற்றைய தினம் உடல்நல குறைவால் மரணம் அடைந்துள்ளார்.

இந்நிலையில் மாணவியின் மரணம் உறவுகள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையில் நேரவிருந்த விபரீதம் : பலரின் உயிரை காப்பாற்றிய தனி நபர்!!

மொரட்டுவை, மோதர பகுதியில் இன்று (05) காலை ஏற்படவிருந்த ரயில் விபத்தை தனி நபராக ஒருவர் தடுத்து நிறுத்திய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இன்று (05) காலை கரையோர ரயில் மார்க்கத்தில் மொரட்டுவை, மோதர பிரதேசத்தில் தண்டவாளம் சேதமடைந்து காணப்பட்டுள்ளது.

சேதமடைந்த ரயில் பாதையைக் கண்டதும், சமந்த பெர்னாண்டோ என்ற நபர் விரைந்து செயற்பட்டு, அந்நேரத்தில் வந்து கொண்டிருந்த ரயிலை நிறுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

இதன் காரணமாக ரயில்வே திணைக்களத்திற்கு சொந்தமான ரயிலில் ஏற்படவிருந்த பெரிய விபத்தையும், பல பேரின் உயிர்களையும் குறித்த நபர் காப்பாற்றியுள்ளார். குறித்த நபரின் செயலுக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் காரணமாக பாணந்துறையிலிருந்து மொரட்டுவை வரையிலான கடற்கரைப் பாதை இன்று காலை மூடப்பட வேண்டியிருந்தது, மேலும் ரயில் சேவையில் தாமதமும் ஏற்பட்டது.

பின்னர் ரயில்வே ஊழியர்களால் ரயில் பாதை சீரமைக்கப்பட்ட பின்னர், தற்போது ரயில் சேவைகள் வழக்கம் போல் இயங்குவதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

வங்கியில் பணியாற்றும் பெண் அதிகாரிகளின் மோசமான செயல் : பல கோடி ரூபா மோசடி!!

பாணந்துறை – கெசல்வத்தயில் உள்ள அரச வங்கியில் குறைந்த மதிப்புள்ள தங்கப் பொருட்களை அடகு வைத்து கிட்டத்தட்ட 10 கோடி ரூபாய் மோசடி செய்ததாக கூறப்படும் குற்றச்சாட்டில் 3 பெண் அதிகாரிகளை குற்றப் புலனாய்வு பிரிவு கைது செய்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்களில் ஒரு உதவி அதிகாரி மற்றும் இரண்டு இடைநிலை நிர்வாக அதிகாரிகள் உள்ளடங்குகின்றனர். குறைந்த மதிப்புள்ள தங்கப் பொருட்களை வங்கியில் அடமானம் வைத்த பின்னர் 3 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டனர் அடமான பத்திரங்களில் போலி கையொப்பங்களைப் பயன்படுத்தி மூவரும் 99,370,100 ரூபாவை மோசடி செய்துள்ளனர்.

குற்றப் புலனாய்வு பிரிவின் நிதிப் புலனாய்வுப் பிரிவுக்குக் கிடைத்த முறைப்பாட்டை தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் இந்த விடயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

உதவி பணியாளர் அதிகாரியாக பணியாற்றிய 36 வயது பெண், பாணந்துறையில் உள்ள அவரது வீட்டில் கைது செய்யப்பட்டார். மேலும் 37 வயது இளைய நிர்வாக அதிகாரி ஒருவர் தலதாவத்த வீதியில் உள்ள அவரது வீட்டில் கைது செய்யப்பட்டார்.

36 வயதான மற்றுமொரு அதிகாரி பாணந்துறை, விஹார வீதியில் உள்ள அவரது வீட்டில் கைது செய்யப்பட்டார். சந்தேக நபர்கள் பொது சொத்துச் சட்டத்தின் கீழ் நீதிமன்றங்களில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

மேலும், குற்றப் புலனாய்வுத் துறையின் நிதி புலனாய்வுப் பிரிவு விசாரணைகளை நடத்தி வருகிறது.

கொழும்பில் கோர சம்பவம் : தமிழ் தம்பதி பரிதாபமாக பலி!!

கொழும்பின் புறநகர் பகுதியான தெஹிவளை ரயில் பாதையில் நேற்றையதினம் பயணித்த தம்பதியினர் ரயிலில் மோதி உயிரிழந்துள்ளனர். கொழும்பு கோட்டையில் இருந்து அளுத்கம நோக்கி பயணித்த ரயிலில் இந்த தம்பதி மோதுண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர்கள் பதுளை, பதுளுபிட்டியவைச் சேர்ந்த 58 மற்றும் 59 வயதுடைய தம்பதியினர் என தெரியவந்துள்ளது. சடலங்கள் களுபோவில மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன.

இது தற்செயலான விபத்தாக அல்லது உயிரை மாய்க்கும் செயற்பாடா என்பது குறித்து தெஹிவளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நாட்டில் அதிகரிக்கும் டெங்கு நோய் : தொடர்ந்து உயரும் பலி எண்ணிக்கை!!

நாட்டில் இந்த ஆண்டு (2025) இதுவரை 24,180 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதாகவும், 13 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி, கொழும்பு, கம்பஹா, இரத்தினபுரி, கண்டி மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் அதிக எண்ணிக்கையிலான டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதாக வைத்திய நிபுணர் பிரசீலா சமரவீர தெரிவித்துள்ளார்.

நாட்டில் டெங்கு பரவலில் விரைவான அதிகரிப்பு காணப்படவில்லை என்றாலும், இடைவிடாத மழையுடன் டெங்கு கொசுக்கள் இனப்பெருக்கம் செய்யக்கூடிய இடங்களில் அதிகரிப்பு காரணமாக பதிவான நோயாளிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு எதிர்பார்க்கப்படலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஜூலையில் பெரிய சுனாமி : ஜப்பானின் பாபா வங்கா கணிப்பால் ரத்தாகும் பயணங்கள்!!

ஜப்பானின் பாபா வங்கா என அழைக்கப்படும் ரியோ டட்சுகி என்ற பெண்ணின் தீர்க்க தரிசனம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மங்கு கலை ஓவியரான ரியோ டட்சுகி தனது கனவுகளில் காணும் சம்பவங்களை வரைய தொடங்கினார்.

அவர் 1980 முதல் தெளிவான கனவுகளை வரைய தொடங்கிய நிலையில் இது அடுத்த சில ஆண்டுகளில் அவ்வாறே நடந்ததாக கூறப்படுகிறது.

1991-ம் ஆண்டு பிரெட்டி மெர்குரியின் மரணம், 1995-ம் ஆண்டு கோபே நிலநடுக்கம், 2011-ம் ஆண்டு ஜப்பானில் பூகம்பம் மற்றும் சுனாமி, 2020-ம் ஆண்டு கொரோனா தொற்று நோய் குறித்த இவரது கணிப்புகளை அவர் முன்கூட்டியே துல்லியமாக வரைந்திருந்ததாக கூறுகிறார்கள்.

அதன்பிறகே அவர் முன்கூட்டியே கணிக்கும் வல்லமை பெற்றவராக அங்கீகரிக்கப்பட்டதோடு அவரது ஓவியங்கள் தொடர்ந்து ஆய்வுக்கும் உட்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் அவர் வரைந்த மிக மோசமான சுனாமி பற்றிய ஓவியம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அதோடு இந்த ஆண்டு (2025)-ம் ஜூலை மாதத்தில் ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸ் நாட்டில் கடலுக்குள் ஏற்படும் பெரும் பிளவு காரணமாக மிக பயங்கரமான சுனாமி ஏற்படும் என ரியோ டட்சுகி கணித்துள்ளார்.

இந்த சுனாமி 2011-ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியை விட 3 மடங்கு பெரிதாக இருக்கும் எனவும் ஜப்பான் தெற்கு பகுதியில் கடல் கொந்தளிப்பது போல இருக்கும் என்பதோடு அப்பகுதியில் மீண்டும் நிலநடுக்கம் மற்றும் சுனாமி ஏற்படும் என கணித்துள்ளார்.

இதனால் மீண்டும் சுனாமி ஆபத்து ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் மக்களிடம் ஏற்பட்டுள்ளது. ஆனால் ரியோ டட்சுகியின் கணிப்பு தொடர்பாக ஜப்பான் அரசு இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

அதே நேரம் ஜப்பானில் உள்ள சீன தூதரகம் இயற்கை பேரழிவு குறித்து தங்கள் நாட்டு மக்களை எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுத்தியுள்ளது.

ரியோ டட்சுகியின் இந்த கணிப்பு காரணமாக ஜப்பானுக்கு சுற்றுலா செல்ல இருந்த பலர் தங்களது பயணத்தை ரத்து செய்து வருகின்றனர். இதனால் ஜப்பானுக்கான விமான முன்பதிவுகளில் 83 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது.

கழிப்பறை பயன்படுத்த சென்ற தொழிலதிபர் சிங்கம் தாக்கி உயிரிழப்பு!!

இரவில், கழிப்பறை பயன்படுத்த சென்ற தொழிலதிபர் சிங்கம் தாக்கி உயிரிழந்துள்ளார். நமீபியாவை சேர்ந்த 59 வயது தொழிலதிபரான பெர்ன்ட் கெபல், நமீபியாவில் உள்ள பாலைவன சிங்கங்களை ஆதரிப்பதற்காக பெருமளவிலான பணத்தை நன்கொடையாக வழங்கியுள்ளார்.

இந்நிலையில், கடந்த மே 30ஆம் திகதி, விடுமுறையைக் கழிப்பதற்காக, செஸ்ஃபோன்டைன் (Sesfontein) பகுதியில் உள்ள ஹோனிப் ஸ்கெலிட்டன் கோஸ்ட் கேம்ப் பகுதியில், தனது மனைவி மற்றும் நண்பர்களுடன் ஒரு காரின் மேல் சிறிய கூடாரம் அமைத்து கெப்பல் தங்கியியுள்ளார்.

இரவில், கழிப்பறை செல்வதற்காக அவர் கூடாரத்தில் இருந்து கீழே இறங்கிய போது, சிங்கம் ஒன்று அவரை தாக்கியுள்ளது. அவரின் அலறல் சத்தம் கேட்டு, அங்கிருந்தவர்கள் சிங்கத்தை முயன்றனர். ஆனால் அதற்குள் கெபல் உயிரிழந்து விட்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு, அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என நமீபியா காவல்துறை தெரிவித்துள்ளது.

2023 ஆம் ஆண்டு அந்த பகுதியில் 60க்கும் மேற்பட்ட சிங்கங்கள் இருந்துள்ளது. தற்போது மனித மோதல்கள் காரணமாக அந்த எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது.

கல்லூரி மாணவியை கொலை செய்து காதலன் எடுத்த விபரீத முடிவு!!

சென்னையில் தனிக்குடித்தனம் நடத்தி வந்த நிலையில், கல்லூரி மாணவியை கொலை செய்து, காதலன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பெரம்பூர் ராஜீவ்காந்தி நகரில் ஒரு வீட்டில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு 19 வயதுடைய இளம் ஜோடி ஒன்று தங்களுக்கு திருமணமாகி விட்டதாக கூறி, ரூ.4,000க்கு வாடகை வீடு எடுத்து குடும்பம் நடத்தி வந்தனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் காலை 10.30 மணிவரை அவர்களது வீட்டின் கதவு திறக்கப்படாததால், இது குறித்து சந்தேகமடைந்த பக்கத்து வீட்டுக்காரர்கள், ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தனர்.

அப்போது வீட்டில் இளைஞர் தூக்கில் தொங்கியபடி சடலமாக கிடந்தார். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனடியாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். இது குறித்து தகவல் அறிந்த ஐசிஎப் போலீசார் விரைந்து சென்று கதவை உடைத்து உள்ளே சென்றனர்.

அங்கு இளைஞர் தூக்கில் தொங்கியவாறும், அவருடன் இருந்த இளம்பெண் படுத்த நிலையில் வாய் மற்றும் கண்ணில் ரத்தம் வடிந்தவாறும் சடலமாக கிடந்தனர். இருவரின் உடல்களையும் மீட்ட போலீசார், பிரேதப் பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டு, விசாரணை நடத்தினர்.

போலீசாரின் தொடர் விசாரணையில், ஒரே வீட்டில் இறந்து கிடந்த இருவரும் கல்லூரி மாணவ-மாணவி என்பதும், அவர்களது பெயர் ஆகாஷ் மற்றும் அபிநயா என்பதும், இருவரும் விழுப்புரத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் 2ம் ஆண்டு படித்து வந்ததும் தெரிய வந்தது.

காதலர்களான இவர்கள் இருவரும், கல்லூரி புராஜெக்ட் தொடர்பாக சென்னை செல்வதாக தங்களது வீடுகளில் கூறிவிட்டு, விழுப்புரத்தில் இருந்து தனித்தனியாக சென்னை வந்து, பெரம்பூரில் பெற்றோருக்கு தெரியாமல் தனிக்குடித்தனம் நடத்தி வந்துள்ளனர்.

இந்நிலையில் அவர்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அப்போது காதலி அபிநயாவை ஆகாஷ் தாக்கியுள்ளார். இதில் அபிநயா இறந்துள்ளார். இதனால் பயந்துபோன ஆகாஷ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் எனத் தெரிய வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இது ஒருபுற இருக்க இருவரின் உடல்களும் பிரேதப் பரிசோதனை முடிந்து நேற்று அவர்களது சொந்த ஊரான விழுப்புரத்துக்கு கொண்டு செல்லப்பட்டன. இச்சம்பவம் சென்னையில் மட்டும் அல்லாமல் விழுப்புரத்திலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.