நாட்டில் கடும் வெப்பமான காலநிலை : சிறுவர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!!

நாட்டில் தற்போது நிலவி வரும் கடும் வெப்பமான காலநிலை காரணமாக, சிறுவர்களுக்கு தோல் நோய்கள் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு (Dehydration) ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அதிகரித்து வரும் வெப்பநிலையால் சிறுவர்களின் ஆரோக்கியத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து சுகாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

சிறுவர்களின் மென்மையான தோல் காரணமாக வெப்பப் படைகள் (Heat rashes), அரிப்பு மற்றும் பூஞ்சை தொற்று (Fungal infections) போன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

உடலில் நீர்ச்சத்து குறைவதால் தூக்கமின்மை, அதிக சோர்வு மற்றும் பசியின்மை போன்ற பிரச்சினைகள் ஏற்படக்கூடும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

தற்போது பாடசாலைகளில் வருடாந்த விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில், வெயிலில் நீண்ட நேரம் விளையாடுவதால் வெப்ப மயக்கம் (Heat exhaustion) அல்லது வெப்பத்தாக்கம் (Heatstroke) ஏற்படும் அபாயம் உள்ளது.

அதிகப்படியான வியர்வை வெளியேறுவதால் உடலில் உள்ள சோடியம் மற்றும் பொட்டாசியம் போன்ற அத்தியாவசிய உப்புச் சத்துக்கள் குறையக்கூடும்.

இது மூளை மற்றும் இதயத்தின் செயல்பாடுகளைப் பாதிக்கலாம் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

சிறுவர்கள் போதியளவு நீர் மற்றும் இயற்கை பானங்களை அருந்துவதை உறுதி செய்ய வேண்டும். நண்பகல் வேளையில் சிறுவர்களை நேரடியாக வெயிலில் நடமாட விடுவதைத் தவிர்க்க வேண்டும்.

தகுந்த கண்காணிப்பின் கீழ் சிறுவர்கள் நீரில் விளையாட அனுமதிப்பது அவர்களின் உடல் வெப்பத்தைத் தணிக்க உதவும் விளையாட்டுப் போட்டிகளின் போது மாணவர்களுக்கு போதிய ஓய்வு மற்றும் நீர் அருந்துவதற்கான இடைவேளைகளை வழங்க வேண்டும்.

விடுமுறைக்கு சென்ற இடத்தில் விபரீதம் : உயிருக்கு போராடும் அவுஸ்திரேலிய இளம் தாய்!!

இந்தோனேசியாவில் விபத்தில் சிக்கிய அவுஸ்திரேலிய இளம் பெண்ணொருவர் கோமாவில் உயிருக்கு போராடி வருகிறார். அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த அலிவியா ஜேன் காம்ப்பெல் (28) என்ற இளம் பெண் இந்தோனேசியாவின் பாலி தீவுக்கு சுற்றுலாவிற்காக சென்றுள்ளார்.

அங்கு குட்டாவில் உள்ள கடைகளுக்கு செல்லும் வழியில், அவரது மோட்டார் சைக்கிள் ஒரு லொறியுடன் மோதியதில் படுகாயமடைந்தார்.

இதில் அவருக்கு கடுமையான மூளை காயம் மற்றும் இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இரண்டு குழந்தைகளின் தாயான அவர் வென்டிலேட்டரில் இருக்கிறார்.

மேலும் வரும் நாட்களில் அவர் இரண்டாவது அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட உள்ளார். அவரை அவுஸ்திரேலியாவிற்கு அழைத்து வர அலிவியாவின் குடும்பத்தினர் நம்புகிறார்கள்.

அவரது சகோதரி ரீஸ் எழுதிய பதிவில், ‘அவர் இன்னும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் இருக்கிறார். பேரழிவு தரும் மோட்டார் சைக்கிள் விபத்திற்குப் பிறகு ஒவ்வொரு நாளும் போராடி வருகிறார்’ என தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், வெளியுறவு மற்றும் வர்த்தகத் துறை குடும்பத்திற்கு தூதரக உதவி வழங்குவதை உறுதிப்படுத்தியது.

இலங்கையில் எரிபொருளின் விலை திடீரென அதிகரிக்க இதுதான் காரணம்!!

ஒரே தடவையில் எரிபொருள் விலை உயர்வு ஏற்படுவதை தடுக்கும் நோக்கிலேயே தற்போது எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.ஊடக சந்திப்பொன்றின் போது அவர் இதனை குறிப்பிட்டார்.

முன்னைய மாதங்களின் எரிபொருள் விலையுடன் ஒப்பிட்டே ஒவ்வொரு மாதமும் எரிபொருள் விலை தீர்மானிக்கப்படுகிறது. நாட்டில் 30 நாட்களுக்கு தேவையான எரிபொருள் கையிருப்பில் உள்ளது.

இருந்தபோதிலும், இலங்கைக்கு வருகைதரவுள்ள எண்ணெய் கப்பல்களில் உள்ள எண்ணெய் விலை சடுதியாக உயர்வடைந்து வருகிறது.

எனவே, ஒரே தடவையில் பாரியளவில் விலை அதிகரிப்பை தவிர்ப்பதற்காகவே, எரிபொருட்களின் விலையை குறைந்தது 10 சதவீதத்தினால் அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது.

இந்தநிலையில், கையிருப்பிலுள்ள எரிபொருளை எதிர்வரும் மாதங்களுக்காக விநியோகித்து விலையை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்கு பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எதிர்பார்க்கிறது. எனவே, தேவைக்கு மேலதிக எரிபொருளை சேமித்து வைப்பதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.

எனினும், மசகு எண்ணெய் விலை விரைவில் குறைவடையுமாயின் மாத இறுதிக்கு முன்னரே விலையை குறைக்க முடியும் எனவும் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் மயூர நெத்திகுமார தெரிவித்தார்.

3 பெண் குழந்தைகளை ஏரியில் தள்ளிக் கொன்ற தந்தை : கடத்தப்பட்டதாக நாடகமாடியது அம்பலம்!!

தெலங்கானா மாநிலம் காமரெட்டி மாவட்டத்தில், தந்தை ஒருவரே தனது மூன்று பெண் குழந்தைகளை ஏரியில் வீசிக் கொலை செய்த கொடூரமான சம்பவம் பயங்கர அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

காமரெட்டி மாவட்டத்தின் ஆர்.பி. நகர் பகுதியைச் சேர்ந்த இஸ்மாயில் என்ற ஆட்டோ ஓட்டுநர், தனது சொந்தக் குழந்தைகளையே கொலை செய்த குற்றத்திற்காகக் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த சனிக்கிழமை மார்ச் 7ம் தேதி முதல் இஸ்மாயிலின் மகள்களான ஷீபத் (8), அயாத் (7) மற்றும் மரியம் (5) ஆகிய மூன்று சிறுமிகளும் காணாமல் போயினர்.

குழந்தைகளைத் தேடிய உறவினர்கள், எங்கு தேடிப் பார்த்தும் குழந்தைகள் கிடைக்காததால் காவல்துறையில் புகார் அளித்தனர்.

ஆரம்பத்தில் குழந்தைகளை யாரோ கடத்திச் சென்று விட்டதாக இஸ்மாயில் நாடகமாடினார். ஆனால் அவரது மனைவி ஷபீனாவுக்குத் தனது கணவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. இஸ்மாயில் குழந்தைகளை ஆட்டோவில் அழைத்துச் சென்றதை அவர் உறுதிபடக் கூறினார்.

காவல்துறையினர் இஸ்மாயிலை அழைத்துத் தங்கள் பாணியில் விசாரணை நடத்தியபோது, அவர் உண்மையை ஒப்புக்கொண்டார்.

தமக்கு சுமார் 5 லட்சம் ரூபாய் கடன் இருப்பதாகவும், மூன்று பெண் குழந்தைகளை வளர்ப்பது தமக்கு பாரமாகத் தெரிந்ததாலும் அவர்களைக் கொலை செய்ய முடிவெடுத்ததாகத் தெரிவித்தார்.

போலீசாரின் விசாரணையில் குழந்தைகளை ஆட்டோவில் அழைத்துச் சென்று காமரெட்டி பகுதியில் உள்ள ஒரு பெரிய ஏரியில் வீசியதாக இஸ்மாயில் கூறியுள்ளார்.

குழந்தைகள் உயிரிழக்கும் வரை சுமார் அரை மணி நேரம் அந்த ஏரியின் கரையில் நின்றே வேடிக்கை பார்த்ததாகவும் அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

தற்போது அந்த ஏரியில் இருந்து மூன்று சிறுமிகளின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளன. உலக மகளிர் தினத்தை ஒட்டி நாடு முழுவதும் கொண்டாட்டங்கள் நடந்து வரும் வேளையில், தந்தை ஒருவரே தனது 3 மகள்களையும் கொலை செய்துள்ள இந்தச் சம்பவம் தெலங்கானாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

காணாமல் போன இளம்பெண் 3வது நாளில் ஏரியில் சடலமாக மீட்பு!!

சென்னையில் மாயமான ஐடி நிறுவனத்தில் வேலைப் பார்த்து வந்த இளம்பெண், காணாமல் போன 3வது நாளில் புழல் ஏரி அருகே சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

சென்னையை அடுத்த புழல் ஏரியின் பின்புறம் உள்ள தேங்கியுள்ள தண்ணீரில் பெண் சடலம் மிதப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், புழல் போலீசார் மற்றும் மாதவரம் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து உடலை மீட்டனர்.

போலீசாரின் விசாரணையில், சடலமாக மீட்கப்பட்டவர் சென்னை ராஜமங்கலம் மேட்டுத் தெருவைச் சேர்ந்த ஆஷா கீர்த்தி (26) என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் தனியார் ஐடி நிறுவனம் ஒன்றில் ஊழியராகப் பணியாற்றி வந்தார்.

கடந்த மார்ச் 5-ம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற ஆஷா கீர்த்தி மீண்டும் வீடு திரும்பவில்லை. இது குறித்து அவரது பெற்றோர் ஏற்கனவே ராஜமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடுதல் வேட்டை நடந்து வந்த நிலையில், நேற்று புழல் அறிஞர் அண்ணா நகர் பகுதியில் உள்ள இரட்டை ஏரியின் பின்புறம் அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

ஆஷா கீர்த்தியின் உடல் தற்போது உடற்கூறு பிரேத பரிசோதனை ஆய்வுக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது யாராவது அவரை அடித்துக் கொலை செய்து ஏரியில் வீசினார்களா என்ற கோணத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆஷா கீர்த்தி மாயமான மார்ச் 5ம் தேதி முதல் அவரது செல்போன் சிக்னல்கள் எங்கு இருந்தது? அவர் கடைசியாக யாரிடம் பேசினார்? என்பது குறித்து சைபர் கிரைம் உதவியுடன் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

 

தாய் இறந்து 16வது நாள் மகன் விபத்தில் உயிரிழப்பு : உடல் உறுப்புகள் 3 பேருக்கு தானம்!!

தாய் உயிரிழந்த நிலையில், தாயின் 16வது நாள் காரியத்தன்று விபத்தில் படுகாயமடைந்த மகன், மூளைச்சாவு அடைந்த நிலையில், உறுப்பு தானம் செய்து 3 பேருக்கு மறுவாழ்வு அளித்துள்ள சம்பவம் திருப்பூரில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே மடத்தூர் கிராமத்த்தை சேர்ந்தவர் ராஜகோபால். விவசாயியான இவரது மனைவி விசாலாட்சி. இவர்களது மகன் பாஸ்கரன்(29). பாஸ்கரன் பேப்பர் ஆலை ஒன்றில் ஊழியராக பணியாற்றி வந்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு விசாலாட்சி உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்த நிலையில், விசாலாட்சியின் 16ம் நாள் காரிய நிகழ்ச்சிக்கான பொருட்கள் வாங்க மகன் பாஸ்கரன், 11 மாத குழந்தை மற்றும் சகோதரியுடன் உடுமலைப்பேட்டை சென்றிருந்தார்.

அங்கு பொருட்கள் வாங்கி விட்டு ஊருக்கு திரும்பும் வழியில் அவர்கள் சென்ற கார் விபத்தில் சிக்கியது. இந்த கோர விபத்தில் பாஸ்கரனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

மற்றவர்கள் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில், பாஸ்கரன் மட்டும் உயிருக்கு ஆபத்தான நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் அவர் மூளைச் சாவு அடைந்ததாக மருத்துவர்கள் கூறிவிட்டனர். இதையடுத்து அவரது குடும்பத்தினர் மனிதநேய முடிவு எடுத்து பாஸ்கரனின் கண், கல்லீரல், சிறுநீரகம் உள்ளிட்ட உடல் உறுப்புகளை தானமாக வழங்க ஒப்புக் கொண்டனர்.

இதன் மூலம் மூன்று பேர் மறுவாழ்வு பெற இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதி முழுவதும் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் தாயின் 16 வது நாள் காரியத்துக்காக பொருள் வாங்க சென்றவர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உங்கள் தொல்லை தாங்க முடியவில்லை : மொட்டையடித்து பெற்றோருக்கு அதிர்ச்சி கொடுத்த இளம்பெண்!!

தனது பெற்றோரின் தொல்லையைத் தாங்க முடியாமல், மொட்டையடித்துக் கொண்டு இளம்பெண் ஒருவர் அதிர்ச்சியளித்துள்ளார். இது குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தனது பெற்றோர், தன்னை சீக்கிரம் திருமணம் செய்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தி தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருவதாக கூறி, இளம்பெண் ஒருவர் தனது நீண்ட கூந்தலை தானே மொட்டை அடித்துக் கொண்ட சம்பவம் பெண்கள் எதிர்கொள்ளும் திருமண அழுத்தம் குறித்து மீண்டும் பெரிய விவாதத்தை எழுப்பியுள்ளது.

பெண்களின் தனிப்பட்ட வாழ்க்கை முடிவுகள் குறித்து சமூகத்தில் நிலவும் பார்வையும் கேள்விக்குறியாகியுள்ளது. இது குறித்து சமூக வலைத்தளங்களில் வைரலாகி அதிகமாக பகிரப்படும் அந்த வீடியோவில்,

தனது கூந்தலை மொட்டை அடிக்கும் போது இளம்பெண் மனஉணர்ச்சியுடன் தனது கருத்துக்கள் குறித்து பேசுகிறார். தனது கூந்தலை மிகவும் நேசிப்பதாக கூறிய அவர், சமூகமும் குடும்பமும் அமைதியாக வாழ விடவில்லை .

ஆண்கள் தங்கள் விருப்பப்படி வாழ்க்கை முடிவுகளை எடுத்தால் அது ஏற்றுக்கொள்ளப்படுகிறது; ஆனால் பெண்கள் அதே முடிவுகளை எடுத்தால் ஏன் சமூகம் வேறுபட்ட பார்வையில் பார்க்கிறது எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

தான் திருமணத்திற்கு தயாராக இல்லை என்பதை வெளிப்படையாக தெரிவிக்கவும், தொடர்ந்து ஏற்பட்ட மன அழுத்தத்திலிருந்து விடுபடவும் தான் இந்த முடிவை எடுத்ததாக அந்த இளம்பெண் கூறியுள்ளார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துகளை உருவாக்கியுள்ளது. சிலர் விமர்சித்தாலும், பலர் பெண்களின் தனிநபர் சுதந்திரத்தை ஆதரித்து கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

பெரும் சேதத்ததை ஏற்படுத்திய லொறி விபத்து : பரிதாபமாக பிரிந்த உயிர்!!

பண்டாரகம, கெஸ்பேவ வீதியில் இன்று (10) காலை லொறி மோதியதில் 72 வயதுப் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதோடு, குறித்த லொறியின் சாரதியும் காயமடைந்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

பண்டாரகமயிலிருந்து கெஸ்பேவ நோக்கிச் சென்ற லொறியானது, சேனபுரவில் வீதியின் எதிர்ப்பக்கமாகச் செல்ல முயன்றபோது குறித்த பெண் மீது மோதியுள்ளது.

குறித்த லொறியானது, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி எதிர்த்திசையில் உள்ள டயர் கடையின் முன் விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அருகிலிருந்தவர்கள் படுகாயமடைந்த பெண்ணை முச்சக்கர வண்டியில் பண்டாரகம மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். ஆனால், வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் முன்னரே குறித்த பெண் உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

லொறியின் சாரதி தற்போது பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

இவ் விபத்தால் லொறி, அருகில் நிறுத்தப்பட்டிருந்த கார், தொலைபேசி கம்பம் மற்றும் அருகிலிருந்த கடைக்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சக மாணவனை இரும்புக் கம்பியால் அடித்து கொலை செய்த 9ம் வகுப்பு மாணவன்!!

கர்நாடக மாநிலம் பெல்லாரி மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளி விடுதியில் மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறு கொடூர தாக்குதலாக மாறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குருகல் இன்டர்நேஷனல் என்ற பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்த மாணவன், சக மாணவர்களுடன் ஏற்பட்ட தகராறால் ஆத்திரமடைந்ததாக கூறப்படுகிறது.

இரவு நேரத்தில் மாணவர்கள் அனைவரும் தங்கள் அறைகளில் தூங்கிக் கொண்டிருந்தபோது அந்த மாணவன் இரும்புக் கம்பியுடன் சென்று சரமாரியாக தாக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதில் 8 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர். விடுதி வார்டனையும் தாக்கிவிட்டு அந்த மாணவன் அங்கிருந்து தப்பியோடிவிட்டதாக கூறப்படுகிறது.

காயமடைந்த மாணவர்கள் பெல்லாரியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவருக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

மற்ற மாணவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய மாணவனை தீவிரமாக தேடி வருகின்றனர்.

 

மத்திய கிழக்கு நெருக்கடியால் இலங்கைக்கு காத்திருக்கும் பாரிய நெருக்கடி!!

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை வேகமாக அதிகரித்து வருவதால், பண்டிகை காலம் வரை நாட்டில் எரிபொருள் விலை உயர்வை தாமதப்படுத்தப்படக்கூடாது என பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதாரத் துறையின் பேராசிரியர் பிரியங்க துனுசிங்க நேற்று தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு கலந்துரையாடும் போதே இதனை குறிப்பிட்டுள்ளார்.

இத்தகைய பின்னணியில் நாட்டில் எரிபொருள் விலைகள் உயரும் சூழ்நிலைக்குத் தயாராக அரசாங்கம் அவசர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

உலக சந்தையில் எண்ணெய் விலைகளுடன் ஒப்பிடும்போது அதிகரித்து வருவது தெளிவாகிறது.

கடந்த வெள்ளிக்கிழமை, பேரண்ட்ஸ் கச்சா எண்ணெயின் பீப்பாய் விலை 92 – 93 டொலருக்கு இடையில் இருந்தது. திங்கட்கிழமை சந்தை திறக்கப்பட்டவுடன், அது 115 டொலராக அதிகரித்துள்ளது.

அதற்கமைய, உலகளவில் மற்றும் உள்நாட்டில் எரிபொருள் விலைகளில் அதிகரிப்பு, இது முக்கியமாக பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு ஆகும்.

மறுபுறம், எரிபொருளைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் மின்சாரமும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதற்கமைய, இலங்கையில் எண்ணெயைப் பற்றி நாம் சிந்தித்தால், பெட்ரோல் 92 இன் விலை சராசரியாக 360 – 370 ரூபாய் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

கொள்கை வகுப்பாளர்கள்

இதன் விளைவு ஆச்சரியமல்ல. அதில், ஒவ்வொரு தயாரிப்பு மற்றும் சேவையின் விலையும் அதற்கேற்ப அதிகரிக்கும். எனவே, உலகம் முழுவதும் மற்றும் இலங்கை அதிக பணவீக்க சூழ்நிலையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

செலவு-பிரதிபலிப்பு முறையில் விலைகளை அதிகரிக்க எதிர்பார்க்கிறோம் என்று கொள்கை வகுப்பாளர்கள் ஏற்கனவே யோசனை முன்வைத்துள்ளனர்.

உலக சந்தையில் எண்ணெய் விலை அதிகரிப்புக்கு இணையாக நாம் உள்நாட்டில் எண்ணெய் விலையை உயர்த்த வேண்டும்.

ஆனால் எதிர்காலத்தில் எண்ணெய் விலையை உயர்த்தும்போது கொள்கை வகுப்பாளர்கள் என்னென்ன விருப்பங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்பது குறித்து நாம் விவாதிக்க வேண்டும்.

ஏப்ரல் பண்டிகை காலம் வரை இதை தாமதப்படுத்தக்கூடாது. விரைவாகச் செய்து ஒரே நேரத்தில் ஒரு பெரிய அழுத்தத்தைக் கொண்டு வருவதை விட ஏதாவது ஒரு வழியில் அழுத்தத்தைப் பரப்புவது நல்லது என்பதால், முடிந்தால் அதை விரைவில் செய்ய வேண்டும்.

இல்லையெனில், உற்பத்தி சரிவு பிரச்சினை மிகவும் கடுமையான சூழ்நிலையாக இருக்கும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

வீதியில் சென்ற யுவதிக்கு விபத்தை ஏற்படுத்தி இளைஞன் செய்த கொடூரம்!!

புத்தளம், வென்னப்புவ பகுதியில் அமைந்துள்ள குறுக்கு வீதியொன்றில், யுவதி ஒருவரிடம் தங்கச் சங்கிலியைப் பறித்துக்கொண்டு தப்பியோட முயன்ற இளைஞர் ஒருவர் அப்பகுதி மக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் சனிக்கிழமை (07) அன்று பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தன்று குறித்த பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த யுவதி ஒருவரை, பிறிதொரு மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவர் பின் தொடர்ந்துள்ளார்.

இந்நிலையில், வீதியின் வளைவு ஒன்றில் வைத்து குறித்த பெண்ணை முந்திக்கொண்டு சென்று வழி மறித்துள்ளார். இதன் போது, பெண் நிலைதடுமாறி கீழே விழுந்ததையடுத்து, அவர் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை அறுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச்செல்ல அந்த நபர் முயன்றுள்ளார்.

எனினும், அவர் வந்த மோட்டார் சைக்கிள் அந்த நேரத்தில் இயங்கவில்லை. அச்சமயம் அங்கு வந்த பிறிதொரு இளைஞர், சங்கிலிப் பறிப்பில் ஈடுபட்ட நபரை மடக்கிப் பிடித்ததோடு, அக்கம் பக்கத்தினரும் அங்கு திரண்டனர்.

பொதுமக்களால் தாக்கப்பட்ட குறித்த சந்தேக நபர், பின்னர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதை அடுத்து சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

3 நாட்களுக்கு முன் வைத்த சாம்பாரை சூடுபடுத்தி பரிமாறிய மனைவி : பரிதாபமாக பலியான உயிர்!!

பெங்களூருவில் மூன்று நாட்களுக்கு முன்பு செய்த சாம்பாரை தொடர்ந்து பரிமாறியது தொடர்பாக ஏற்பட்ட குடும்பத் தகராறு, 27 வயது இளம்பெண்ணின் உயிரை பறித்த சோகச் சம்பவம் நடந்துள்ளது.

காவ்யா என்ற அந்தப் பெண், தனது கணவர் ரங்கசாமியுடன் கடந்த வியாழக்கிழமை ஏற்பட்ட கடும் வாக்குவாதத்திற்கு பிறகு பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான இந்த தம்பதிக்கு நான்கு வயதில் ஒரு குழந்தை உள்ளது. சம்பவத்தன்று, மூன்று நாட்களுக்கு முன் வைத்த சாம்பாரை மீண்டும் சூடுபடுத்தி பரிமாறியதால் கணவன்-மனைவி இடையே வாக்குவாதம் வெடித்தது.

இதில் ஆத்திரமடைந்த கணவர் ரங்கசாமி, காவ்யாவை தகாத வார்த்தைகளால் திட்டி, தாக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த காவ்யா, விவசாயத்திற்காக வைத்திருந்த பூச்சிக்கொல்லியை அருந்தினார்.

வாந்தி எடுத்த அவரை உறவினர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர், ஆனால் அவர் வழியிலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து பொலிஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

10 ஆண்​டு முன்பகை : இலங்கைத் தமிழர் மறு​வாழ்வு முகாம் தலை​வர் கொலை : இரு பெண்கள் உட்பட 6 பேர் கைது!!

சென்னையை அடுத்துள்ள கும்​மிடிப்பூண்டி, இலங்கை தமிழர் மறு​வாழ்வு முகாம் தலை​வர் கொலை செய்​யப்​பட்ட சம்​பவம் தொடர்​பாக 6 பேர் கைது செய்​யப்​பட்​டுள்​ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் கைதானவர்​களின் 3 வீடு​கள் சூறை​யாடி தீ வைக்​கப்​பட்​டுள்​ள​தா​லும், சாலை மறியல் போராட்டத்தா​லும் பரபரப்பு ஏற்​பட்​டுள்​ளது. சம்பவம் தொடர்பில் மே;லும் தெரியவருகையில்,

திரு​வள்​ளூர் மாவட்​டம், கும்​மிடிப்​பூண்​டி, பெத்​திக்​குப்​பம் பகு​தி​யில் இலங்கை தமிழர் மறு​வாழ்வு முகாம் உள்​ளது. இந்த முகாமின் நிர்​வாகத் தலை​வ​ராக கண்​ணன் என்​கிற சிவகு​மார் ​(42) இருந்து வந்​தார்.

நேற்று முன்​தினம் இரவு முகாம் பகு​தி​யில் சிவகு​மார் நடந்து சென்​ற​போது, அங்கு வந்த முகாம் வாசிகள் சிலருக்​கும், சிவகு​மாருக்​கும் இடையே வாக்​கு​வாதம் ஏற்​பட்​டது. வாக்குவாதம் முற்றி சிவகு​மாரை எதிர்தரப்பினர் இரும்புக்கம்பி மற்​றும் உருட்டு கட்டைகளால் தாக்கி கொலை செய்​து​ விட்டு தப்​பினர்.

தகவலறிந்து சம்பவ இடம் விரைந்த கும்​மிடிப்​பூண்டி சிப்​காட் போலீ​ஸார், உடலை கைப்​பற்றி பரிசோதனைக்​காக பொன்​னேரி அரசு மருத்​து​வ​மனைக்கு அனுப்பினர்.

கொலை சம்​பவத்​தால் அதிர்ச்​சி​யடைந்த முகாம்​வாசிகள், சிவகு​மாரை கொலை செய்​தவர்​களின் குடும்​பங்​கள் வசித்து வந்த 3 வீடு​களை சூறை​யாடி, தீவைத்​தனர்.

இதையடுத்​து, சம்பவ கும்​மிடிப்​பூண்டி மற்​றும் சிப்​காட் தீயணைப்பு நிலை​ய வீரர்​கள் தீயை அணைத்​தனர்.

இதற்​கிடையே, வழக்​குப்பதிந்த கும்​மிடிப்​பூண்டி சிப்​காட் போலீ​ஸார், முகாமில் வசிக்​கும் செல்வா என்ற சுவேந்​திரன், அவரது அண்​ணன் கண்ணா என்​கிற மகேந்​திரன், மகேந்​திரன் மனைவி புஷ்பஜோ​தி, மகன் தீபக், மகள் நிஷா என்​கிற அக் ஷயா, சுவேந்​திரனின் மகன் ஆகாஷ் பிரசன்னா ஆகிய 6 பேரை கைது செய்​தனர்.

அவர்​களிடம் நடத்​தப்பட்ட முதல் கட்ட விசா​ரணை​யில் , சிவகு​மாருக்கும், சுவேந்​திரன் குடும்​பத்துக்கும் 10 ஆண்​டு​க்கு முன்பிருந்தே முன்பகை இருந்துள்​ளது. சமீபத்​தில் முகாம்​ மக்களுக்​கு 198 தொகுப்பு வீடு​களை தமிழக அரசு வழங்கியது.

இந்த தொகுப்பு வீட்​டை, சுவேந்​திரன் தரப்​பினருக்கு கிடைக்​க​வி​டா​மல் சிவகு​மார் செய்​ததாக தெரிகிறது. இதன்தொடர்ச்சியாகவே வாக்குவாதமும் கொலையும் நிகழந்ததாக போலீ​ஸார் தரப்​பில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

இந்​நிலை​யில், கொலையாளிகளை நாடு கடத்தக் கோரி, முகாமைச் சேர்ந்த 400-க்​கும் மேற்​பட்​டோர் நேற்று சென்னை – கொல்​கத்தா தேசிய நெடுஞ்​சாலை​யிலும் வட்​டாட்​சி​யர் அலு​வல​கம் முன்பும் போ​ராட்​டத்​தில் ஈடு​பட்​ட நிலையில் எஸ்பி விவே​கானந்தா சுக்லா, பேச்சு நடத்​தி​யதன் பேரில்​போ​ராட்​டம்​ கைவிடப்​பட்​டது.

 

கொழும்பில் காதலனால் இளம் பெண் கழுத்தறுத்து கொலை : பொலிஸார் வெளியிட்டுள்ள காரணம்!!

தென்னிலங்கையில் இளம் பெண் ஒருவர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

கொழும்பு, கஹதுடுவ பகுதியில் உள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்த 25 வயதுடைய யுவதி ஒருவர், அவரது காதலனால் தொழிற்சாலை வளாகத்தினுள்ளேயே கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டிருந்தார்.

சம்பவம் தொடர்பில் கடந்த 5 நாட்களாகப் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதீத சந்தேகத்தின் காரணமாகவே இந்த விபரீதம் இடம்பெற்றுள்ளதாகவும், எனினும், மேற்படி யுவதியைப் படுகொலை செய்த காதலன் இதுவரை கைது செய்யப்படவில்லை என்று முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

ஹொரணை – புளத்சிங்கள வீதி, கோவின்ன நாரகல பிரதேசத்தைச் சேர்ந்த எல்.ஆர். கிம்ஹானி பெரேரா (வயது 25) என்பவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 4ஆம் திகதி காலை வழக்கம் போல் பணிக்குச் சென்ற கிம்ஹானி, தொழிற்சாலையின் பிரதான வாயிலூடாக நுழைந்து தனது பையை வைக்கும் இடத்திற்குச் சென்றுள்ளார்.

அங்கு ஏற்கனவே மறைந்திருந்த அவரது காதலன், மறைத்து வைத்திருந்த கத்தியால் கிம்ஹானியைத் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.

உயர்தரக் கல்வியை முடித்த பின்னர் ஆடைத் தொழிற்சாலையில் இணைந்த கிம்ஹானிக்கும், அங்கு பணிபுரிந்த பதுளை – கெப்பட்டிபொல பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் இடையே கடந்த ஒரு வருடமாக காதல் தொடர்பு இருந்துள்ளது.

குறித்த இளைஞர் ஏற்கனவே திருமணமானவர் என்பதும், பின்னர் விவாகரத்து பெற்றவர் என்பதும் கிம்ஹானியின் வீட்டாருக்குத் தெரிந்திருந்தது. சுமார் ஒரு மாதத்துக்கு முன்பு கிம்ஹானியின் பாட்டி காலமானதால், அவர் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்தார்.

இதனால் வீட்டில் இருக்கும் நேரங்களில் காதலனுடன் தொலைபேசியில் பேசுவதைத் தவிர்த்து வந்துள்ளார்.

“வேலையிடத்தில் நாம் 8 மணிநேரம் ஒன்றாகவே இருக்கிறோம், வீட்டில் இருக்கும் நேரத்தில் எனது பாட்டியின் நினைவுகளுடன் இருக்க அனுமதி கொடு” என்று கிம்ஹானி தனது காதலனிடம் கோரியிருந்தார் என்று உயிரிழந்தவரின் பெரியம்மா தெரிவித்துள்ளார்.

இருப்பினும், காதலி தன்னைத் தவிர்க்கின்றார் என்ற அதீத சந்தேகத்தின் காரணமாகவே இந்தக் கொலை இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

5 வயதிலேயே தந்தையை இழந்த கிம்ஹானியை, அவரது தாய் நதீகா (வயது 46) பெரும் கஷ்டங்களுக்கு மத்தியில் வளர்த்தெடுத்துள்ளார். நிர்வாகத் திறமைக்காக விரைவில் பதவி உயர்வு பெறவிருந்த நிலையிலேயே கிம்ஹானிக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

அவரது இறுதிச் சடங்குகள் கடந்த 6ஆம் திகதி வேதகேவத்த பொது மயானத்தில் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் கண்ணீருக்கு மத்தியில் இடம்பெற்றன.

தலைமறைவாகியுள்ள சந்தேகநபரை கைது செய்யப் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள அபாய நிலை : விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை!!

அதிக வெப்பநிலை வெப்ப வெடிப்புகள், எரிச்சல் மற்றும் பூஞ்சை தொற்று போன்ற பொதுவான தோல் நோய்களை ஏற்படுத்தும் என சுகாதார நிபுணர்கள் பொது மக்களை எச்சரித்துள்ளனர்.

மேலும் குழந்தைகள் மென்மையான தோல் மற்றும் வெளிப்புற வெப்பத்திற்கு அடிக்கடி வெளிப்படுவதால் பாதிக்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

நாட்டில் நிலவும் வெப்பமான வானிலை காரணமாக குழந்தைகளிடையே தோல் பிரச்சினைகள் மற்றும் நீரிழப்பு அதிகரிக்கும் என்று சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

இது தொடர்பான அறிவிப்பில் மேலும், அதிக வெப்பம் குழந்தைகளிடையே நீரிழப்பு அபாயத்தை அதிகரிக்கிறது. இது மோசமான தூக்கம், சோர்வு மற்றும் பசியின்மை போன்ற பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.

சரியான மேற்பார்வையின் கீழ் தண்ணீரில் விளையாடுவதன் மூலம் குழந்தைகளை குளிர்விக்க அனுமதிப்பது வெப்பமான காலநிலையில் உடல் வெப்பத்தைக் குறைக்க உதவும்.

இதற்கிடையில், பல பாடசாலைகள் தற்போது ஆண்டுதோறும் விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதால், வெளிப்புற விளையாட்டு நடவடிக்கைகளின் போது வெப்ப சோர்வு மற்றும் வெப்ப பக்கவாதம் ஏற்படும் அபாயம் குறித்து சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

விளையாட்டுகளின் போது அதிகப்படியான வியர்வை சோடியம் மற்றும் பொட்டாசியம் போன்ற அத்தியாவசிய உடல் உப்புகளை இழக்க வழிவகுக்கும்.

இது மூளை மற்றும் இதயம் உள்ளிட்ட முக்கிய உறுப்புகளை பாதிக்கலாம். பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் விளையாட்டு அமைப்பாளர்கள், குழந்தைகள் போதுமான அளவு தண்ணீர் குடிப்பதை உறுதி செய்ய வேண்டும்,

வழக்கமான இடைவெளிகளை எடுக்க வேண்டும் மற்றும் அதிக வெப்பத்திற்கு நீண்ட நேரம் வெளிப்படுவதைத் தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

குறிப்பாக வெப்பமான நேரங்களில், குழந்தைகளை நேரடி சூரிய ஒளியில் இருந்து விலக்கி வைக்கவும், நீரேற்றமாக இருக்க நிறைய தண்ணீர் மற்றும் இயற்கை பானங்களை குடிக்க ஊக்குவிக்கவும் சுகாதார அதிகாரிகள் பெற்றோரை வலியுறுத்தியுள்ளனர்.

 

மத்திய கிழக்கில் நிலவும் இராணுவ நிலைமை : இலங்கையில் லிட்ரோ எரிவாயு குறித்து வெளியான தகவல்!!

மத்திய கிழக்கில் நிலவும் இராணுவ நிலைமை காரணமாக லிட்ரோ எரிவாயு பற்றாக்குறை இருக்காது என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் சன்ன குணவர்தன தெரிவித்துள்ளார்.

ஊடகமொன்றுக்கு நேற்று (08.03.2026) தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். மேலும் தெரிவிக்கையில், 30000 மெட்ரிக் தொன் எரிவாயுவை ஏற்றிச் செல்லும் ஒரு கப்பல் தற்போது மாலைத்தீவில் நங்கூரமிடப்பட்டுள்ளது.

33,000 மெட்ரிக் தொன் எரிவாயுவை ஏற்றிச் செல்லும் மற்றொரு கப்பல் மார்ச் 17 அன்று மாலைத்தீவை வந்தடைய திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தக் கப்பல்கள் இலங்கையின் உத்தரவுகளின்படி மாலைத்தீவுக்கு வந்து, அங்கிருந்து இரண்டு நாட்களுக்கு ஒரு முறை ஒரு சிறிய கப்பல் மூலம் எரிவாயு நாட்டிற்கு கொண்டு வரப்படுகின்றன.

இதுவரை ஒரு ஓமானி நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட எரிவாயு விநியோக டெண்டரை இந்த முறை ஒரு அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்குவது தற்போதைய இராணுவ சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட முடிவு என சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த எரிவாயு கப்பல்கள் போர் மண்டலம் வழியாக மாலைத்தீவுக்கு கொண்டு வரப்படாது. இந்தக் கப்பல்கள் அமெரிக்காவிலிருந்து ஆப்பிரிக்காவுக்குப் பயணித்து மாலைத்தீவை வந்தடைவதால், இராணுவ நிலைமை காரணமாக எரிவாயு விநியோகத்தில் எந்த இடையூறும் ஏற்படாது என சுட்டிக்காட்டியுள்ளார்.