வற்றாப்பளை கண்ணகி அம்மன் பொங்கல் : மெய்சிலிர்க்க வைத்த பெண்கள் பக்தி!!

ஈழத்தின் வரலாற்றுச் சிறப்பு மிக்க முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வைகாசிப் பொங்கல் உற்சவம் நேற்றையதினம் (01) மிகச் சிறப்பாக இடம்பெற்றிருந்தது.

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயம், வைகாசி விசாகத் திருநாளன்று நடைபெறும் பொங்கல் திருவிழாவிற்கு மிகவும் பிரசித்தி பெற்றது.

இதன்போது உப்புநீரில் விளக்கெரியும் எம்பிராட்டிக்கு நேர்த்திகடன்களை நிறைவேற்ற பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

அதோடு பெண்கள் தூக்கு காவடிகள் எடுத்தும், பொங்க்கல் பொங்கியும் தங்கள் நேர்த்தி கடன்களை நிறைவேற்றினர்.

இரவில் அம்மனின் ஆலயம் தங்க குவியல்போல் காட்சி அளித்த புகைபடங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

 

32000 டன் தங்கத்தை வைத்திருக்கும் இந்தியர்கள் : நாட்டின் வளர்ச்சிக்காக பயன்படுத்த மோடி திட்டம்!!

இந்திய மக்கள் 32,000 டன் தங்கத்தை வைத்திருக்கும் நிலையில், அதை பொருளாதார வளர்ச்சிக்காக பயன்படுத்த வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.

இந்தியா உலகின் மிகப்பெரிய தங்கக் கையிருப்பைக் கொண்ட நாடுகளில் ஒன்றாகும். இந்திய மக்களின் வீடுகள், கோவில்கள் மற்றும் தனியார் வங்கிகளில் 32,000 முதல் 35,000 டன் தங்கம் சேமிக்கப்பட்டுள்ளது.

இந்த தங்கம் பெரும்பாலும் பயன்பாடின்றி கிடக்கிறது. இந்த தங்கத்தை நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்காக மீண்டும் பயன்பாட்டில் கொண்டு வர வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்துகிறார்.

அரசு, தங்கத்தை வங்கிகளில் டெபாசிட் செய்யும் திட்டங்கள், தங்க பத்திரங்கள் (Gold Bonds) மற்றும் தங்க சேமிப்பு திட்டங்கள் மூலம் மக்கள் தங்கள் தங்கத்தை நிதி சந்தையில் பயன்படுத்த ஊக்குவிக்கிறது.

இந்தியாவின் பொருளாதாரத்தில் தங்கம் முக்கிய பங்கு வகிக்கிறது. மக்கள் தங்கத்தை பாதுகாப்பான சேமிப்பாகவும் மற்றும் பாரம்பரியத்தின் அடையாளமாக வைத்திருப்பதால், அது சந்தையில் சுழற்சி செய்யாமல் இருப்பது நாட்டின் நிதி வளர்ச்சிக்கு தடையாக உள்ளது.

அரசு திட்டங்கள் மூலம் தங்கத்தை வங்கிகளில் வைப்பு செய்தால், மக்கள் வட்டி வருமானம் பெறலாம். அதேசமயம், நாட்டின் நிதி நிலை வலுப்பெறும்.

உலகளவில் இந்தியா தங்கத்தின் மிகப்பெரிய நுகர்வோராக இருப்பதால், இந்த முயற்சி பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் ஆதாரமாக இருக்கும். இந்தியாவின் 32,000 டன் தங்கம், சரியான திட்டமிடலால் நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய பங்களிப்பை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

சிசேரியன் அறுவை சிகிச்சையின் நடுவில் ஓட்டம் பிடித்த மருத்துவர் : கர்ப்பிணி பலி!!

சிசேரியன் அறுவை சிகிச்சையின் நடுவில் மருத்துவர் ஒருவர் ஓட்டம் பிடித்ததைத் தொடர்ந்து பெண்ணொருவர் பரிதாபமாக பலியாகியுள்ளார். உத்தரப்பிரதேசத்திலுள்ள Sonbhadra என்னுமிடத்தில் வாழ்ந்துவரும் விவசாயியான தேவ் நாராயணின் மனைவி சீமா (34). நிறைமாத கர்ப்பிணியான சீமாவுக்கு கடந்த வெள்ளிக்கிழமை பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.

உடனடியாக அவரை அருகிலுள்ள ஆரம்ப சுகாதார மையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளார் தேவ். ஆனால், அங்கு மருத்துவர்கள் யாரும் இல்லாததால், தனியார் மருத்துவமனை ஒன்றிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார் சீமா.

அந்த மருத்துவமனையில் Dr. நஸீம் அஹமது என்பவர் தன் உதவியாளர்களான இரண்டு செவிலியர்களுடன் சீமாவுக்கு சிசேரியன் அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளார்.

மனைவியை பிரசவ அறைக்குள் அழைத்துச் சென்று வெகுநேரமாகியும் யாரும் வெளியே வராததால், மனைவியைப் பார்க்கச் சென்றுள்ளார் தேவ். ஆனால், அங்கு சீமாவின் உயிரற்ற உடல்தான் இருந்துள்ளது.

நடந்தது என்னவென்றால், Dr. நஸீம் ஒரு ஆயுர்வேத மருத்துவர். அவர் சிசேரியன் செய்ய உரிமமோ, பயிற்சியோ பெறாதவர்.

ஆகவே, குழந்தையை அறுவை சிகிச்சை செய்து வெளியே எடுத்தபின், தாய்க்கு தையல் போட முடியாததால், அவரை அப்படியே விட்டு விட்டு Dr. நஸீம் மற்றும் அவரது குழுவினர் வேறு வழியாக ஓட்டம் பிடித்துள்ளனர். சீமா பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

தேவின் புகாரைத் தொடர்ந்து, அந்த மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. Dr. நஸீம் மற்றும் அவரது குழுவினரை பொலிசார் தேடிவருகிறார்கள்.

Dr. நஸீமைக் குறித்து தகவல் கொடுத்தால் 25,000 ரூபாயும், செவிலியர் சல்மாவைக் குறித்து தகவல் கொடுத்தால் 10,000 ரூபாயும் சன்மானம் அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சராக பதவியேற்ற முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்!!

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் அசோக் திண்டா அமைச்சராக பதவியேற்றுள்ளார். மேற்கு வங்கத்தை சேர்ந்த பந்துவீச்சாளரான அசோக் திண்டா 2009 முதல் 2013 ஆம் ஆண்டு வரை இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடியுள்ளார்.

மேலும், ஐபிஎல் தொடரில், கொல்கத்தா, டெல்லி, புனே, பெங்களூரு ஆகிய அணிகளுக்காக விளையாடியுள்ளார். 2021 ஆம் ஆண்டில் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த அவர், அதன் பின்னர் பாஜகவில் இனைந்து அரசியலில் நுழைந்தார்.

2021 மேற்குவங்க சட்டமன்ற தேர்தலில் மய்னா தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட அசோக் திண்டா, 1,260 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

2026 மேற்குவங்க சட்டமன்ற தேர்தலில், அதே தொகுதியில் மீண்டும் போட்டியிட பாஜக வாய்ப்பு வழங்க நிலையில், 16,241 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

இந்த தேர்தலில் பாஜக 208 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றிய நிலையில், சுவேந்து அதிகாரி மேற்குவங்க முதலமைச்சராக பதவியேற்றார். நேற்று, நடைபெற்ற அமைச்சரவை விரிவாக்கத்தில் அசோக் திண்டா அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.

10ஆண்டு காதல் : திருமணம் நடந்த சில மணி நேரங்களில் நடந்த சோகம் : மணமகன் உயிரிழப்பு!!

அமெரிக்காவில் திருமணம் நடந்த சில மணி நேரங்களில் ஹெலிகாப்டர் விபத்தில் இந்திய வம்சாவளி பைலட்டான மணமகன் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்கா​வின் டெல்டா ஏர் லைன்ஸ் நிறுவனத்தில், கேரளாவை பூர்வி​க​மாகக் கொண்ட தேவ் பிஜி (26) பைலட்​டாகப் பணிபுரிந்து வந்​தார். பிஜி​யும் செவிலியர் ஜெஸ்னியும் சுமார் 10 ஆண்​டு​களுக்கு முன்பு நியூ டெஸ்​டமென்ட் தேவால​யத்​தில் முதன்​முதலில் சந்​தித்​துக் கொண்​டனர்.

அப்​போது முதல் காதலித்து வந்​தனர். இந்​நிலை​யில், அமெரிக்​கா​வின் ஜார்​ஜியா மாகாணம், டாசன்வில்லே நகரில் உள்ள ‘தி ரெவெர்’ என்ற இடத்​தில் இவர்களது திரு​மணம் நடை​பெற்​றது

சுமார் 400 விருந்​தினர்​கள் கலந்​து​கொண்ட இந்த திரு​மணத்​தில் தேவ் பிஜி மிக​வும் மகிழ்ச்சியாகக் காணப்​பட்​டார். திருமண வரவேற்பு முடிந்​ததும், ஹனிமூன் செல்​வதற்​காக தேவ் தம்​ப​தி​யினர் ‘ராபின்​சன் ஆர்​66′ ஹெலி​காப்​டரில் ஏறினர்.

அப்​போது வானிலை மோச​மாக இருந்தது. இதனால் ஒரு பைலட் என்ற முறை​யில், இப்​போது ஹெலிகாப்டரில் பயணிக்க வேண்​டாம் என பைலட்​டிடம் தேவ் கூறி​யுள்​ளார். ஆனால், அதிக உயரத்​தில் பறக்​கலாம் என்று கூறி பைலட் ஹெலி​காப்​டரை இயக்​கி​னார்.

ஆனால் புறப்​பட்ட சில நிமிடங்​களி​லேயே, திரு​மணம் நடந்த இடத்​துக்கு அரு​கிலேயே உள்ள அடர்ந்த காட்​டுப் பகு​தி​யில் ஹெலி​காப்​டர் விழுந்து நொறுங்​கியது. இந்த விபத்​தில் டேவ் பிஜி மற்​றும் ஹெலி​காப்​டர் பைலட் ஆகிய இரு​வரும் சம்பவ இடத்​திலேயே உயி​ரிழந்​தனர்.

பலத்த காயமடைந்த மணமகள் ஜெஸ்னி மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்​டுள்ளதாக கூறப்படுகின்றது. இந் நிலையில் 10 ஆண்டு காலம் காதலித்து திருமணம் நடைபெற்ற சில மணி நேரங்களில் மணமகன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

 

2026 FIFA உலகக் கோப்பை அணியில் இடம்பிடித்த தமிழர் நிஷான் வேலுப்பிள்ளை!!

தமிழர் வம்சாவழியை சேர்ந்த மெல்போர்ன் விக்டரி அணியின் விங்கர் நிஷான் வேலுப்பிள்ளை, 2026 FIFA உலகக் கோப்பைக்கான அவுஸ்திரேலியாவின் 26 பேர் கொண்ட இறுதி அணியில் இடம்பிடித்துள்ளார்.

இதன் மூலம் உலகக் கோப்பை கால்பந்தாட்டப் போட்டியில் பங்கேற்கும் முதல் தமிழர் வம்சாவழியைர்ந்த வீரர் என்ற வரலாற்றை அவர் படைத்துள்ளார்.

25 வயதான நிஷான் வேலுப்பிள்ளை, திங்கட்கிழமை அவுஸ்திரேலிய அணியின் தலைமைப் பயிற்சியாளர் டோனி போபோவிச் அறிவித்த இறுதி அணியில் தேர்வு செய்யப்பட்டார்.

வட அமெரிக்காவில் நடைபெறவுள்ள 2026 உலகக் கோப்பையில் அவுஸ்திரேலியா, டி குழுவில் துருக்கி, அமெரிக்கா மற்றும் பராகுவே அணிகளுடன் இடம்பெற்றுள்ளது.

அவுஸ்திரேலியாவின் முதல் போட்டி ஜூன் 13ஆம் திகதி BC Place BC Place மைதானத்தில் துருக்கிக்கு எதிராக நடைபெறுகிறது.

நிஷானின் தந்தை சசிநாத் வேலுப்பிள்ளை தமிழர் மரபைச் சேர்ந்தவர். அவரது தாய் கில்லியன் வேலுப்பிள்ளை ஆங்கிலோ-இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்.

மெல்போர்னில் பிறந்து வளர்ந்த நிஷான், Mazenod College பள்ளியில் கல்வி கற்றதுடன், பின்னர் Glen Eira FC இன் இளையோர் அணியில் விளையாடி, அதன்பின் Melbourne Victory மெல்போர்ன் விக்டரி அகாடமியில் இணைந்தார்.

2024 ஆம் ஆண்டு ஓக்டோபரில், சீனாவுக்கு எதிரான உலகக் கோப்பை தகுதிச்சுற்றுப் போட்டிக்காக அவர் முதல் முறையாக அவுஸ்திரேலிய தேசிய அணிக்கு அழைக்கப்பட்டார்.

போட்டியின் 83ஆவது நிமிடத்தில் மாற்று வீரராக களமிறங்கிய அவர், ஏழு நிமிடங்களுக்குப் பின்னர் கோல் அடித்து அவுஸ்திரேலியாவின் 3-1 வெற்றியை உறுதிப்படுத்தினார். அந்த அறிமுகப் போட்டியே அவரை அவுஸ்திரேலிய கால்பந்தாட்ட ரசிகர்களுக்கும் உலகத் தமிழர் சமூகத்திற்கும் அறிமுகப்படுத்தியது.

இதுவரை அவுஸ்திரேலிய தேசிய அணிக்காக ஏழு போட்டிகளில் விளையாடியுள்ள நிஷான், மூன்று கோல்களைப் பதிவு செய்துள்ளார். அந்த மூன்று கோல்களும் உலகக் கோப்பை தகுதிச்சுற்றுப் போட்டிகளிலேயே வந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Melbourne Victory மெல்போர்ன் விக்டரியின் கால்பந்தாட்ட இயக்குநரான John Didulica ஜான் டிடுலிகா, நிஷானின் சாதனையைப் பாராட்டியுள்ளார்.

“இளம் வீரராக இந்தக் கழகத்துக்குள் வந்த நாளிலிருந்து இந்த நிலையை அடைவதற்காக நிஷான் கடுமையாக உழைத்துள்ளார்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவின் 26 பேர் கொண்ட உலகக் கோப்பை அணியில் இடம்பெற்றுள்ள 17 வீரர்கள் முதல் முறையாக உலகக் கோப்பையில் விளையாட உள்ளனர்.

அவர்களில் நிஷானும் ஒருவர். மேலும், நான்காவது உலகக் கோப்பையில் விளையாடவுள்ள Mathew Leckie மேத்யூ லெக்கி உள்ளிட்ட பலரும் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

தமிழீழ தேசிய கால்பந்தாட்ட அணி, FIFA அங்கீகாரம் பெறாத நாடுகள் மற்றும் மக்களின் கால்பந்தாட்ட அமைப்பான CONIFA CONIFA-வின் கீழ் போட்டியிடுகிறது.

தமிழீழ அணி 2023 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளில் CONIFA ஆசியக் கிண்ணத்தை வென்றிருந்தாலும், தற்போதைய சர்வதேச கால்பந்தாட்ட அமைப்பின் கீழ் FIFA உலகக் கோப்பைக்குத் தகுதி பெறும் வாய்ப்பு இல்லை.

இதனால், நிஷான் வேலுப்பிள்ளையின் உலகக் கோப்பைத் தேர்வு உலகம் முழுவதும் பரவியுள்ள தமிழர் புலம்பெயர் சமூகத்திற்கு ஒரு முக்கியமான வரலாற்று தருணமாகக் கருதப்படுகிறது.

குறிப்பாக, இலங்கையின் நீண்டகால உள்நாட்டு போரின் பின்னர் அவுஸ்திரேலியா, கனடா, ஐரோப்பா மற்றும் ஐக்கிய இராச்சியம் உள்ளிட்ட நாடுகளில் குடியேறிய தமிழர்களுக்கு இது பெருமை சேர்க்கும் சாதனையாக பார்க்கப்படுகிறது.

2026 FIFA உலகக் கோப்பையில் அவுஸ்திரேலியாவின் பயணம் ஜூன் 13ஆம் திகதி துருக்கிக்கு எதிரான போட்டியுடன் ஆரம்பமாகிறது.

மட்டக்களப்பில் சொந்த மகளிடம் தந்தை செய்த மோசமான செயல்!!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தனது 24 வயது மகளிடம் ஆபாச வார்த்தைகளால் பேசி வந்த 60 வயதுடைய தந்தையை நேற்று (01) இரவு பாலியல் கொடுமை சட்டத்தின் கீழ் சந்தேகத்தின் கீழ் கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பை சேர்ந்த 24 வயதுடைய யுவதியொருவரின் தந்தை தொடர்ச்சியாக ஆபாசமாக பேசி வருவதாக பாதிக்கப்பட்ட யுவதி பொலிஸ் மா அதிபருக்கு இணையத்தளத்தின் ஊடாக முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.

இதையடுத்து பொலிஸ் மா அதிபர் காரியாலயத்தில் இருந்து குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த பொலிஸ் நிலையத்திற்கு அனுப்பப்பட்ட முறைப்பாட்டினை தொடர்ந்து பொலிசார் மதுபானசாலை விற்பனை நிலையம் ஒன்றில் கடமையாற்றி வந்த குறித்த 60 வயதுடைய தந்தையை நேற்றையதினம்(1) கைது செய்தனர்.

குறித்த யுவதி தனது தந்தை தொடர்ச்சியாக ஆபாசமாக பேசி வருவதால் அவருடன் இருக்க முடியாது என முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை கைது செய்யப்பட்டவரின் கையடக்க தொலைபேசியை சோதனை செய்த போது அவர் ஆபாச படங்கள் மற்றும் காணொளிகளை அதிகமாக தரை இறக்கம் செய்து வைத்திருந்தமையும் தெரியவந்துள்ளது.

இதையடுத்து கைது செய்தவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அந்த பிரதேச பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

வெளிநாடொன்றில் கடத்தப்பட்டுள்ள இலங்கையர்களுக்கு நேர்ந்த கொடுமை!!

இலங்கையர்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதாக கூறி எத்தியோப்பியாவுக்கு அனுப்பி, அங்கு செயற்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற கும்பல்கள் மூலம் பல்வேறு சித்திரவதைகளுக்கு உள்ளாக்கும் நடவடிக்கை குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அவர்களை விடுவிப்பதற்காக தலா 30,000 அமெரிக்க டொலர்களை கப்பமாக கோரிய சம்பவம் குறித்து விசாரணைகளை முன்னெடுக்க கொழும்பு பிரதான நீதவான் அசங்க போதரகம, குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு நேற்று அனுமதி வழங்கியுள்ளார்.

குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் மனித வர்த்தகம், கடத்தல் மற்றும் கடல்சார் குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் இந்தச் சம்பவம் தொடர்பில் நீதிமன்றில் தகவல் வெளியிட்ட போதே பிரதான நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்தார். முறைப்பாட்டாளர் தரப்பில் முன்னிலையான குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றில் தகவல் முன்வைத்துள்ளனர்.

இலங்கை வான்பரப்பில் தோன்றிய மர்மம் : குழப்பத்தில் மக்கள்!!

புத்தளம் நகருக்கு மேலாக வானில் நெருப்பு பிழம்புகளை ஏற்படுத்தியவாறு, ஏவுகணை போன்றதொரு பொருள் தென்பட்டதாக அந்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

நேற்று அதிகாலை 4.31 மணியளவில் ஏவுகணைக்கு சமமான இந்த பொருள், அந்த நேரத்தில் புத்தளம் புகையிரத நிலையத்தில் தங்கியிருந்த மக்களாலும் அவதானிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனை நேரில் பார்த்தவர்கள், இது சில அடிகள் நீளமுடையதாக காணப்பட்டதுடன், ஏவுகணை ஒன்று ஏவப்படும் போது வெளிவரக்கூடிய பாரிய நெருப்புப் பிழம்புகளை உமிழ்ந்தவாறு பயணித்துக் கொண்டிருந்ததாக தெரிவித்துள்ளனர்.

எனினும், சிலர் இதனைத் தமது கையடக்க தொலைபேசி காணொளி எடுத்துள்ளதுடன், இன்னும் சிலர் இதைப் பார்த்து அச்சமடைந்தும் அதிர்ச்சியடைந்தும் ஒளிந்துகொள்ள முயற்சித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

தரைமட்டத்தில் இருந்து சுமார் 300 அடி உயரத்தில் இப்பொருள் பயணித்ததாகவும், பார்த்துக் கொண்டிருந்தவர்களின் கண்களில் இருந்து மறையும் வரை அது தொடர்ந்து பயணித்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, இது குறித்து பாதுகாப்புப் பிரிவினர் எவரும் இதுவரை எந்தவொரு உத்தியோகபூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை.

காதலை மறுத்த வங்கி ஊழியரான இளம் யுவதி அயல் வீட்டு இளைஞரால் வெட்டிக் கொலை!!

பொலன்னறுவை மாவட்டம், மெதிரிகிரியை பிரதேசத்தில் இளம் யுவதி ஒருவர், அவரது அயல் வீட்டு இளைஞரினால் கோரமான முறையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்தக் கொடூரச் சம்பவம் நேற்று திங்கட்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது. தனியார் வங்கியொன்றில் ஊழியராகக் கடமையாற்றி வந்த மெதிரிகிரியைப் பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளம் பெண்ணே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டவராவார்.

சம்பவம் குறித்து மேலும் தெரிவிக்கையில், படுகொலை செய்யப்பட்ட யுவதியை அவரது அயல் வீட்டில் வசிக்கும் 28 வயதுடைய இளைஞர் ஒருவர் நீண்டகாலமாகக் காதலித்து வந்துள்ளார். எனினும், மேற்படி இளைஞரின் காதலை அந்த யுவதி தொடர்ச்சியாக மறுத்து வந்துள்ளார்.

இதனால் கடும் மனவிரக்தியடைந்திருந்த அந்த இளைஞர், நேற்று மாலை யுவதி மீது கூரிய ஆயுதத்தால் வெட்டுத் தாக்குதல்களை மேற்கொண்டு படுகொலை செய்துள்ளார்.

இந்தக் கொலைச் சம்பவத்தின் பின்னர் சந்தேகநபரான 28 வயதுடைய இளைஞர் அந்தப் பிரதேசத்தை விட்டுத் தப்பியோடியுள்ளார். அவரைக் கைது செய்யப் பொலிஸார் தீவிரமான தேடுதல் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர். யுவதியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

கொழும்பை உலுக்கிய கோர விபத்து – தன்சல் வரிசையில் விபத்தினை ஏற்படுத்திய சாரதி தொடர்பில் வெளியான தகவல்!!

கொழும்பின் புறநகரான மீகொட பகுதியில் அன்னதான வரிசையில் கோர விபத்தினை ஏற்படுத்திய சந்தேகநபர் தொடர்பில் பொலிஸார் பல தகவல்களை வெளியிட்டுள்ளனர்.

கொழும்பின் புறநகரான மீகொட பகுதியில் நேற்று முன்தினம் இரவு (31) சிற்றூந்து ஒன்று, அன்னதான வரிசையில் நின்றவர்களின் மேல் மோதியதில் 06 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஏழு பேர் சிகிச்சைக்காக ஹோமகம வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்தினை ஏற்படுத்திய பிறகு வாடகைக் கார் சாரதி வாகனத்தை நிறுத்தாமல் சென்ற நிலையில், விரைந்து செயல்பட்ட பொலிஸார் கொடகம சந்திப்பில் சாரதியை கைது செய்திருந்தனர்.

இந்த விபத்து தொடர்பில் பிலியந்தலாவைச் சேர்ந்த 42 வயதான வாடகை கார் சாரதி கைது செய்யப்பட்டு ஜூன் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்போது சந்தேகத்திற்குரிய வாடகை கார் சாரதி மதுபோதையில் இருந்ததும் உறுதி செய்யப்பட்டிருந்தது.

இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையில், சந்தேகநபர் முந்தைய நாள் நள்ளிரவு வரை அவிசாவெல்லை பகுதியில் மேலும் இருவருடன் மது அருந்தியுள்ளமை தெரியவந்துள்ளது.

இதன்பின்னர், மூவரும் வாடகைக்காரில் ஏறி, அவிசாவெல்லை-கொழும்பு பிரதான வீதியில் கொழும்பை நோக்கி அதிவேகமாக சென்றுள்ளனர்.

மயக்கமடையும் அளவுக்கு மது அருந்தியதாக கூறப்படும் சந்தேகநபர் வழியில் மேலும் இருவரை மோதிவிட்டு, அதிவேகமாக வாகனத்தை செலுத்திச்சென்றுள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது.

இதனையடுத்து ​​நள்ளிரவு 12.30 மணியளவில் மீகொட சந்திப்பில் ரொட்டி தன்சல் நடைபெற்றுக்கொண்டிருந்த போது சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

போக்குவரத்து நெரிசலைக்கண்டு, கடும் கோபமடைந்து, வரிசையில் காத்திருந்த மக்கள் மீது வாகனத்தை அதிவேகமாக மோதிச்சென்றதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து வாகனத்தை நிறுத்தாமல் சென்ற போது பொலிஸார் மற்றும் அங்கிருந்த இளைஞர்கள் குழு துரத்திச்சென்று கொடகம சந்திப்பில் பிடித்துள்ளனர்.இதன்போது அவர் போதையில் சுயநினைவின்றி சிரித்துக்கொண்டே இருந்துள்ளமை தெரியவந்துள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் முறையான சாரதி அனுமதிப்பத்திரம் இல்லை என்பதும், வாகனத்தின் உரிமமும் முன்பே வழங்கப்பட்டிருந்தது என்பதும் தெரியவந்துள்ளது.

இந்த காரணத்திற்காக வாகனத்தின் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், விபத்தை தவிர்க்க தவறியமை, அஜாக்கிரதையாக வாகனம் செலுத்தல், அதிவேகமாக வாகனம் செலுத்தல் மற்றும் குடிபோதையில் இருத்தல் ஆகிய குற்றச்சாட்டுகள் சந்தேகநபர் மீது பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதேவேளை, தானசாலை விபத்தில் வரிசையில் நின்றிருந்த 15, 32, மற்றும் 56 வயதுடைய மூன்று பெண்களும், 35, 38 வயதுடைய மூன்று ஆண்களும் உயிரிழந்திருந்தனர்.

இந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த பிலியந்தல, வெவல பள்ளிய வீதியைச் சேர்ந்த 56 வயதான பி. பி. இந்திராணி என்ற பெண், அவரது 35 வயதான மகள் நவிஷா நிலாக்ஷி,

அவரது 38 வயதான மருமகன் லசிகா பிரியங்கர நனயக்கரா மற்றும் உயிரிழந்த பெண்ணின் சகோதரரின் 15 வயதான மகள் ஆகியோர் உயிரிழந்திருந்தனர்.

மேலும் பாதுக்கவை சேர்ந்த சகோதரர்களான கிருஷ்ண பிரியங்கர மற்றும் நிஷான் பிரியங்கர ஆகியோர் உயிரிழந்திருந்தனர்.

இலங்கையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்!!

இலங்கையில் கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில், இந்த வார தொடக்கத்தில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது.

அதற்கமைய, ஒரு பவுன் தங்கத்தின் விலை சுமார் 5,000 ரூபாவினால் அதிகரித்துள்ளதாக அகில இலங்கை ஆபரண உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் ராமன் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

நேற்றை நிலவரத்திற்கு அமைய 24 கரட் தங்கப் பவுன் ஒன்றின் விலை 388,000 ரூபாயாக பதிவாகியுள்ளது.

மேலும், 22 கரட் தங்கப் பவுன் ஒன்றின் விலை 357,000 ரூபாவாக அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்காலத்தில் தங்கத்தின் விலை மேலும் அதிகரிக்கக்கூடும் என அவர் கூறினார்.

தங்கத்தின் விலை அதிகரிப்பு காரணமாக, உள்நாட்டு ஆபரண சந்தையில் விற்பனை 40 சதவீதம் வரை வீழ்ச்சியடைந்துள்ளதாக செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

விலை திருத்தம் தொடர்பில் லிட்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பு!!

ஜூன் மாதத்திற்கான எரிவாயு விலை திருத்தம் நாளை மறுநாள் (04) அறிவிக்கப்படும் என்று லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன்படி, ஜூன் 5 ஆம் திகதி எரிவாயு விலை திருத்தம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது என்று நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

மாதாந்திர எரிவாயு விலை திருத்தம் தொடர்பான அறிக்கைகள் நிதி அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதுடன், இறுதி அறிக்கை நாளை மறுநாள் பெறப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக சந்தையில் நிலவும் விலைகளுக்கு ஏற்ப இந்த முறை எரிவாயு விலையைத் திருத்த திட்டமிட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

இருப்பினும், கடந்த மாதம் லிட்ரோ எரிவாயு விலையைத் திருத்த வேண்டாம் என்று நிறுவனம் நடவடிக்கை எடுத்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் இருந்து வெளியேற்றப்படும் இலங்கைக் குடும்பம்!!

பிரித்தானியாவில் புதிய குடிவரவு சட்டத்திற்கு அமைய அங்கு வசிக்கும் இலங்கை குடும்பம் ஒன்று நாட்டை விட்டு வெளியேற வேண்டிய நெருக்கடி நிலைக்கு முகங்கொடுத்துள்ளது.

பிரித்தானியாவில் புலம்பெயர் பராமரிப்புப் பணியாளர்களின் ஐந்து வயதுக்குட்பட்ட சிறு சிறுவர்களை நாட்டை விட்டு வெளியேற்ற உள்துறை அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

அதற்கமைய பிரித்தானியாவில் தொடர்ந்து தங்குவதற்கு பெற்றோருக்கு விசா நீடிப்பு மற்றும் அனுமதி வழங்கப்பட்டுள்ள போதிலும், அவர்களின் சார்ந்திருப்போரை நாட்டை விட்டு வெளியேறுமாறு கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன.

இதற்கமைய இலங்கையை சேர்ந்த வருணி அரச்சிகே என்ற பெண் ஸ்கொட்லாந்தில் பராமரிப்புப் பணியாளராக பணிபுரிந்து வருகிறார்.

குறித்த பெண்ணுக்கு 2031ஆம் ஆண்டு வரை விசா நீடிக்கப்பட்டுள்ள போதிலும், அவருடைய கணவர் மற்றும் 8, 5 வயது குழந்தைகளை நாட்டை விட்டு வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இலங்கையில் வேதியியல் பட்டமும், பிரித்தானியாவின் டண்டீ பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டமும் வருணி பெற்றுள்ளார்.

முறையாக அனைத்து விசா கட்டணங்களையும் செலுத்தி, அங்கு வரி செலுத்தி வாழும் தங்களுக்கு இந்த உத்தரவு மிகப்பெரிய அதிர்ச்சியை அளித்துள்ளதாக அவர் வேதனை தெரிவித்துள்ளார்.

சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இலங்கை தமிழ்ப் பெண் கொலை : இளைஞன் வெளியிட்ட பரபரப்பு வாக்குமூலம்!!

சென்னையில் இடம்பெற்ற மோதலில் இலங்கையை சேர்ந்த தமிழ் பெண் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வந்த 18 வயதான யான்சி என்ற இளம்பெண்,

நேற்று முன்தினம் (30) சென்னையை சேர்ந்த பெண்ணுடன் கோயம்பேட்டில் உள்ள தனியார் கேளிக்கை விடுதிக்கு சென்றிருந்தபோது ஏற்பட்ட தகராறில் குழுவொன்றினால் காரை வேகமாக ஏற்றிகொலை செய்யப்பட்டிருந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக கோயம்பேடு பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய பாலகுரு, அவருடைய நண்பர் சுமன் சக்திவேல் உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இவர்கள் விபத்தினை ஏற்படுத்திய காரில் அரசியல் கட்சியொன்றின் கட்சி கொடி கட்டப்பட்டு இருந்துள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில், உயிரிழந்த பெண்ணுடன் இருந்த ஆண் நண்பர் ஒருவர் மோதல் தொடர்பில் காணொளியொன்றில் பரபரப்பான தகவல்களை வெளியிட்டுள்ளார். அவர் தனது காணொளியில்,

நானும், எனது நண்பரும் வாரத்தில் 2 நாட்கள் கோயம்பேடு விடுதிக்கு செல்வது வழக்கம். அங்கு வேலை செய்யும் சிலர் எங்களுக்கு நண்பர்கள் என்பதால் சில நேரங்களில் இலவசமாக சென்று வருவோம்.

ஜோடியாக சென்றால் நுழைவு கட்டணம் இல்லை என்பதால் சம்பவத்தன்று ஆன்லைன் மூலம் இருசக்கர வாகனத்தை பதிவு செய்து அங்கு வந்த யான்சி மற்றும் அவரது 17 வயது தோழி ஆகியோர் தங்களை உள்ளே அழைத்துச் செல்லும்படி கூறியதால் அவர்களை நுழைவு கட்டணம் இல்லாமல் அழைத்துச் சென்றோம்.

இதன்போது நடனமாடும் போது, அங்கிருந்த சில இளைஞர்கள், இவர்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதால் தகராறு ஏற்பட்டு அனைவரையும் அங்கிருந்த பாதுகாவலர்கள் வெளியேற்றினர்.

இந்த நிலையில் பெண்கள் இருவரும் குடிபோதையில் இருந்ததால் அவர்களை பாதுகாப்பாக அழைத்துச்செல்ல இருசக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டோம். பெண்கள் இருவரும் நடுவில் அமர்ந்து கொண்டனர். அவர்களுக்கு பின்னால் எனது நண்பர் அமர்ந்துகொள்ள ஒரே வண்டியில் 4 பேர் பயணம் செய்தோம்.

இதன்போது மதுபான விடுதிக்குள் ஏற்கனவே தகராறு செய்த நபர்கள், மற்றைய குழுவினர் சென்ற கார் மீது கல்லை வீசிவிட்டு தப்பிச்சென்றுவிட்டனர்.

இதனால் கோபமடைந்த நபர்கள் நாங்கள் தான் கல்லை எறிந்ததாக நினைத்து 7 பேர் கொண்ட கும்பல் கோபத்தில் நாங்கள் சென்ற இருசக்கர வாகனம் மீது வேகமாக வந்து மோதினார்கள்.

முதல் முறை இடித்த போது வாகனம் கீழே விழவில்லை. பின்னர் 2 ஆவதாக வேகமாக வந்து இடித்ததால் 4 பேரும் தூக்கி வீசப்பட்டதில் யான்சி அதே இடத்தில் உயிரிழந்துவிட்டார் என தெரிவித்துள்ளார்.

வவுனியாவிலிருந்து குடும்பச் சுமையால் ஓமான் சென்ற தாய் மர்ம மரணம் : சடலத்தை மீட்க இரு வாரங்களாகப் போராடும் குடும்பம்!!

வவுனியா, ஓமந்தை பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயான சிந்துஜா என்ற பெண், தனது குடும்பத்தின் வறுமை மற்றும் பொருளாதாரச் சுமையைத் தாங்குவதற்காக ஓமான் நாட்டிற்கு பணிப்பெண்ணாகச் சென்றிருந்தார்.

இந்நிலையில், அவர் அங்கு உயிரிழந்துள்ளதாக அவரது குடும்பத்தினருக்கு அதிர்ச்சியளிக்கும் தகவல் கிடைத்துள்ளது. உயிரிழந்த சிந்துஜா ஓமான் நாட்டில் இருந்தபடியே தனது கணவர் மற்றும் பிள்ளைகளுடன் தொலைபேசி மூலம் தொடர்ச்சியாகப் பேசி வந்துள்ளார். குடும்பத்தினருடன் மிகவும் மகிழ்ச்சியாகவே அவர் உரையாடி வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

எனினும், கடந்த மே மாதம் 19ஆம் திகதிக்கு பின்னர் அவரிடமிருந்து எவ்வித அழைப்புகளும் வரவில்லை. இதனால் பதற்றமடைந்த கணவர், சிந்துஜாவின் தொலைபேசிக்கு பலமுறை தொடர்பு கொள்ள முயன்றும் அதற்கான பதில் கிடைக்கவில்லை.

சில நாட்கள் நீடித்த மௌனத்தின் பின்னர், சிந்துஜா உயிரிழந்துவிட்டதாக வவுனியாவில் உள்ள அவரது குடும்பத்தினருக்கு உத்தியோகபூர்வமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் தவறான முடிவு (தற்கொலை) எடுத்து உயிரிழந்துள்ளதாக ஓமானில் இருந்து வந்த தகவல்கள் கூறுகின்றன. எனினும், இறுதிவரை மகிழ்ச்சியாகப் பேசிவந்தவர் திடீரென இத்தகைய முடிவை எடுத்திருப்பாரா என்ற சந்தேகம் உறவினர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

சிந்துஜா உயிரிழந்து தற்போது இரண்டு வாரங்கள் (இரண்டு கிழமைகள்) கடந்துவிட்ட நிலையிலும், அவரது சடலத்தை இலங்கைக்குக் கொண்டு வருவதற்கான எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை என அவரது கணவர் கவலையுடன் தெரிவித்துள்ளார். வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் மற்றும் அரச அதிகாரிகளின் நடவடிக்கைகள் மிகவும் மந்தகதியில் உள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

வாழ்வாதாரத்தை தேடி மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்று, அங்கு இவ்வாறான மர்ம மரணங்களைச் சந்திக்கும் இலங்கைத் தொழிலாளர்களின் அவலநிலை தொடர்கதையாகவே உள்ளது. இதற்கான நிரந்தரத் தீர்வை அரசுகள் எப்போது வழங்கப்போகின்றன என்பது இன்னும் கேள்விக்குறியாகவே இருக்கிறது.

தற்போது, தாயை இழந்து தவிக்கும் அந்த இரண்டு பிஞ்சுப் பிள்ளைகளும், தங்களின் தாய் எப்போது திரும்புவார் என வழிமேல் விழிவைத்துக் காத்திருக்கும் காட்சி பார்ப்போரின் நெஞ்சைக் உலுக்குவதாக அமைந்துள்ளது.

இந்த விடயத்தில் இலங்கை வெளிவிவகார அமைச்சும், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகமும் உடனடியாகத் தலையிட்டு சடலத்தை விரைவாக நாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.