தளம்பல் நிலையில் தங்கத்தின் விலை : நகை வாங்க காத்திருப்போருக்கான செய்தி!!

உலக சந்தையில் இன்று (மார்ச் 9, 2026) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை சுமார் 5090 முதல் 5110 டொலர்களாக பதிவாகியுள்ளது.

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் நிலைமையை அடுத்து உலகளவில் ஏற்பட்டுள்ள பதற்றம் காரணமாக தங்கத்தின் விலையில் தொடர் ஏற்ற இறக்கங்கள் பதிவாகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கொழும்பு செட்டியார்தெரு தகவல்களின் படி 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 408000 ரூபாவாக பதிவாகியுள்ளது. அத்துடன் 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 377400 ரூபாவாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையிலும் தங்கத்தின் விலையில் தளம்பல் நிலை காணப்படும் போதிலும் நான்கு இலட்சத்தை அண்மித்த போக்கே காணப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

எதற்கும் தயாராக இருங்கள் : பணவீக்கம் தொடர்பில் IMF எச்சரிக்கை!!

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் காரணமாக உலகளாவிய ரீதியில் பணவீக்கம் அதிகரிக்கும் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

எண்ணெய் விலைகள் ஆசிய வர்த்தகத்தில் 30% க்கும் அதிகமாக உயர்ந்து 2022 க்குப் பிறகு மிக உயர்ந்த மட்டத்தை எட்டியுள்ள நிலையில், சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாகப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவா இவ்வாறு எச்சரித்துள்ளார்.

ஜப்பானின் நிதி அமைச்சகம் இன்று ( 9) நடத்திய ஒரு கருத்தரங்கில் இதனை குறிப்பிட்டுள்ளார்.

ஈரானுடனான அமெரிக்க-இஸ்ரேல் மோதல் தொடர்ந்து பத்தாவது நாளில் நுழைந்ததால், கச்சா எண்ணெய் விலை 30% க்கும் மேலாக உயர்ந்து ஒரு பீப்பாய்க்கு $119.50 ஆக உயர்ந்த நிலையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கு மோதலால் ஏற்பட்டுள்ள 10 சதவீத எண்ணெய் விலை அதிகரிப்பைத் தொடர்ந்து 40 புள்ளி உலகளாவிய பணவீக்க அதிகரிப்புக்கு வழிவகுக்கும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், எண்ணெய் விலைகளில் 10% அதிகரிப்பு, ஆண்டின் முழுவதும் நீடித்தால், உலகளாவிய பணவீக்கத்தின் பாரிய அதிகரிப்புக்கு வழிவகுக்கும் என்று கூறியுள்ளார்.

எனவே “இந்த புதிய உலகளாவிய சூழலில் கொள்கை வகுப்பாளர்களுக்கு எனது அறிவுரை என்னவென்றால், நினைத்துப் பார்க்க முடியாததைப் பற்றி சிந்தித்து எதற்கும் தயாராக இருக்குமாறு” அறிவுறுத்தியுள்ளார்.

உணவு பொருட்கள் மற்றும் எரிபொருள் கையிருப்பு : அரசாங்கத்தின் முக்கிய அறிவிப்பு!!

பண்டிகை காலத்திற்கான அத்தியாவசிய உணவுப்பொருட்களின் இறக்குமதி மற்றும் உணவுப் பொருட்களை கையிருப்பில் வைத்திருப்பது குறித்து அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளது.

மத்திய கிழக்கின் நிலைமையை கருத்தில் கொண்டு, அடுத்த இரண்டு மாதங்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் பற்றாக்குறை இல்லாமல் வழங்கப்படுவதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க உறுதியளித்துள்ளார்.

இதற்கமைய, அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதில் உள்ள தடைகளை நீக்குவது குறித்து பேச்சுவார்த்தைகள் தொடங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.

மேலும், ஏப்ரல் இறுதி வரை எந்த பிரச்சினையும் இல்லாமல் அரசாங்கத்தால் எரிபொருளை வழங்க முடியும் என்றும் உறுதியளித்துள்ளார்.

இதற்கிடையில், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போதைய இராணுவ சூழ்நிலை காரணமாக இலங்கையில் அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் மற்றும் உணவுப் பாதுகாப்பில் ஏற்படும் தாக்கத்தை நிர்வகிக்க உணவுக் கொள்கை மற்றும் பாதுகாப்புக் குழுவின் சிறப்புக் கூட்டமும் நடத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக வரவிருக்கும் பண்டிகைக் காலத்திற்கான அத்தியாவசிய உணவுப் பொருட்களின் இறக்குமதி, மற்றும் உணவுப் பொருட்களின் விலை ஏற்ற இறக்கங்கள் போன்றவற்றில் மக்களுக்குத் தேவையான அளவு கையிருப்பில் வைத்திருப்பது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, உணவு உற்பத்தி மற்றும் மீன்வளத் துறைக்கு முன்னுரிமையாக தொடர்ந்து எரிபொருளை வழங்குவதற்கான முறையான வழிமுறையை வகுக்க சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

சம்பந்தப்பட்ட நாடுகள் ஏற்றுமதியைக் கட்டுப்படுத்தினால், நாட்டில் உணவு உற்பத்திக்குத் தேவையான உரங்கள் மற்றும் வேளாண் இரசாயனங்களின் இறக்குமதியை எவ்வாறு நிர்வகிப்பது என்பது குறித்தும் மேலும் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டுள்ளன.

பாடசாலையொன்றில் திடீரென நேர்ந்த விபரீதம் : ஐந்து மாணவர்கள் வைத்தியசாலையில்!!

பத்தேகமவில் உள்ள பாடசாலையொன்றில் இன்று (9) மதியம் தண்ணீர் தொட்டி விழுந்ததில் ஐந்து மாணவர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பத்தேகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்த ஐந்து மாணவர்களும் முதலில் பத்தேகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் பலத்த காயமடைந்த மூன்று மாணவர்கள் கராபிட்டிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

பாடசாலையில் ஆறு மற்றும் ஏழாம் வகுப்புகளைச் சேர்ந்த ஐந்து மாணவர்களே விபத்தில் சிக்கியுள்ளதாக தவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவம் குறித்து பத்தேகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

வவுனியா பூந்தோட்டத்தில் வீட்டை தீயிட்டு எரித்த இளைஞர் குழு!!

வவுனியா பூந்தோட்டம் பாடசாலைக்கு முன்பாக உள்ள வீட்டில் நேற்று (08.03.2026) மாலை உள்நுழைந்த குழு வீட்டில் இருந்தவர்கள் மீது தாக்குதலை மேற்கொண்டதுடன் வீட்டை பெற்றோல் ஊற்றி தீயிட்டு எரித்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்.. நேற்று மாலை அந்த பகுதியில் இளைஞர்களுக்கிடையில் முரன்பாடு ஒன்று ஏற்ப்பட்ட நிலையில் அதன் தொடர்ச்சி கைகலப்பாக மாறியுள்ளது.

இதனையடுத்து அந்தப்பகுதிக்கு வெளிஇடங்களில் இருந்து வன்முறை கும்பல் ஒன்று வாள்கள், மற்றும் பொல்லுகள் சகிதம் வருகைதந்துள்ளனர்.

அவர்கள் தாக்குதலை மேற்கொள்ள முயன்ற போது வீதியில் நின்றிருந்த இளைஞர்கள் வீட்டிற்குள் சென்று கதவை பூட்டியுள்ளார்.

இதனையடுத்து வீட்டிற்குள் உள்நுழைந்த வன்முறைக்கும்பல் வீட்டின் யன்னல்களை உடைத்து சேதப்படுத்தியுள்ளதுடன், கதவின் வழியாக பெற்றோல் ஊற்றி தீயிட்டு எரித்துள்ளனர்.

வீடெங்கும் தீ பரவ முற்பட்ட நிலையில் கடும் போராட்டத்திற்கு மத்தியில் அது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது. அதிஸ்டவசமாக வீட்டில் இருந்தவர்கள் சிறுகாயங்களுடன் உயிர் பிழைத்தனர்.

வன்முறைக்குழு வீட்டை எரிக்கும் போது உள்ளே பெண்கள் மற்றும் சிறுவர்கள் இருந்துள்ளனர். குழந்தைகள் உள்ளதால் எரிக்க வேண்டாம் என்று அவர்கள் அவலக்குரல் எழுப்பியபோதும் வன்முறைகுழு. அதனை பொருட்படுத்தாமல் கொழுத்திவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றது.

இதேவேளை குறித்த சம்பவத்தில் காயமடைந்த இருவர் வவுனியா பொதுவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது. சம்பவ இடத்திற்கு வருகைதந்த வவுனியா தலைமை பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் விரிவான விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை தீயை அணைப்பதற்காக மாநகரசபையின் தீயணைப்பு பிரிவின் உதவியும் கோரப்பட்டு தீயணைப்பு வாகனமும் வருகைதந்திருந்தது.

வவுனியாவில் போதை மாத்திரைகளுடன் நான்கு இளைஞர்கள் கைது!!

போதை மாத்திரைகளுடன் வவுனியாவில் நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிசார் தெரிவித்தனர்.

வவுனியா மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிசாருக்கு கிடைத்த தகவலையடுத்து வவுனியா பூந்தோட்டம் பகுதியில் நேற்று (08.03.2026) காலை மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது 4 இளைஞர்கள் போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 500 போதை மாத்திரைகள் பொலிசாரால் மீட்கப்பட்டது.

குறித்த கைது நடவடிக்கை வவுனியா மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ராஜபக்ச தலைமையில் அசங்க(61867), ரன்வெல(61518), மிதுசன்(91800), நிஜாம்(84963), றொசான்(86009) ஆகியவர்களை கொண்ட பொலிஸ் குழுவால் மேற்கொள்ளப்பட்டது.

கைது செய்யப்பட்டவர்கள் நாளையதினம் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

வவுனியா புளியங்குளத்தில் விபத்து : ஒருவர் பலி!!

வவுனியா புளியங்குளத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளதாக புளியங்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சம்பவமானது நேற்று முன்தினம் (07.03) நள்ளிரவு இடம்பெற்றிருந்தது.

முல்லைத்தீவில் இருந்து குருணாகல் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் முன்னே சென்ற துவிச்சக்கர வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ்விபத்தில் மோட்டார் சைக்கிள் சாரதி மற்றும் துவிச்சக்கர வண்டி சாரதி ஆகியோர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், மோட்டார் சைக்கிளின் பயணித்த மற்றையவர் பலியாகியுள்ளார்.

குருணாகல் பகுதியை சேர்ந்த 59 வயதுடைய உமர் லெப்பை அப்துல் ரவூப் என்பவரே குறித்த விபத்தில் பலியாகியுள்ளார். இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணையினை வவுனியா, புளியங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இஸ்ரேலின் வடக்குப் பகுதியில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்ட அறிவிப்பு!!

இஸ்ரேலின் வடக்குப் பகுதியில் பணிபுரியும் இலங்கையர்கள், தற்போதைய மோதல் சூழ்நிலை காரணமாக, தங்கள் பாதுகாப்பு குறித்து மிகவும் விழிப்புடன் இருக்குமாறு இஸ்ரேலில் உள்ள இலங்கைத் தூதரகம் கேட்டுக் கொண்டுள்ளது.

இஸ்ரேலின் வடக்குப் பகுதியில் ஹிஸ்புல்லாவின் ஏவுகணைத் தாக்குதல்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை அவதானிக்க முடிந்துள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதர் நிமல் பண்டாரா தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலிய அவசர சேவை

ஹைஃபா, நஹாரியா, அர்கோ, கலிலேயா, அஃபுலா, கார்மல் மலைகள், நாசரேத் மற்றும் திபேரியாஸ் உள்ளிட்ட வடக்குப் பகுதியில் வசிக்கும் மக்கள்,

லெபனானில் இருந்து வரக்கூடிய தாக்குதல்கள் மற்றும் நாட்டிற்குள் சில குழுக்களால் நடத்தப்படக்கூடிய சம்பவங்கள் குறித்து கவனம் செலுத்த வேண்டும் என்றும் நிமல் பண்டாரா கூறியுள்ளார்.

இஸ்ரேலின் வடக்குப் பகுதியில் 9,000க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் பணியாற்றி வருவதால், விழிப்புடன் இருக்கவும், நாட்டின் பாதுகாப்புப் படைகள்,

அரசாங்க ஊடகங்கள் மற்றும் தூதரகம் வழங்கிய வழிமுறைகளைப் பின்பற்றவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

ஏதேனும் தாக்குதல் ஏற்பட்டால், இஸ்ரேலிய அவசர சேவைகளை இலவசமாகப் பெறுவீர்கள் என்றும், உங்கள் இருப்பிடத்தை 101 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு சேவையைப் பெறலாம் என்றும் இஸ்ரேலில் உள்ள இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது.

தேவையான வழிமுறைகளுக்கு, வாரத்தில் 7 நாட்களும் தூதரகத்தின் வாட்ஸ்அப் எண்ணை 00972-559305731 அழைக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவில் இலங்கைப் பெண் உட்பட தம்பதியினர் இரத்த வெள்ளத்தில் சடலமாக மீட்பு!!

அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் உள்ள லொட்ரோப் பகுதியில், உள்ள வீட்டில் இலங்கைப் பெண் உட்பட தம்பதியினர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

உயிரிழந்தவர்கள் 46 வயதான ஆரோன் ஹம்மண்ட் மற்றும் 47 வயதான சமிந்திகா ஜெயவர்தன என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கடந்த சனிக்கிழமை இரவு அந்த வீட்டிலிருந்து 30 விநாடி இடைவெளியில் இரண்டு துப்பாக்கிச் சூடு சத்தங்கள் கேட்டதாக அயலவர்கள் தெரிவித்துள்ளனர்.

முதற்கட்ட விசாரணையில், இது ஒரு கொலை மற்றும் உயிர் மாய்ப்பு சம்பவமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

உயிரிழந்த சமிந்திகா இலங்கை பூர்வீகம் கொண்டவராகும். சமிந்திகா சமீபத்தில் தனது கணவரை விட்டுப் பிரிந்து சென்றதாகவும், அதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் ஆரோன் அவரைச் சுட்டுக் கொன்றுவிட்டுத் தானும் தற்கொலை செய்திருக்கலாம் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

ஆரோன் ஏற்கனவே பலமுறை வன்முறை மற்றும் துன்புறுத்தல் செயல்களில் ஈடுபட்டவர் என முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

ஆரம்பத்தில் துப்பாக்கிச் சத்தத்தைக் கேட்ட அயலவர்கள் அது நரியைச் சுடப் பயன்படுத்தப்பட்ட சத்தமாக இருக்கலாம் என தவறாக கருதியுள்ளனர்.

இந்த வழக்கில் வேறு யாருக்கும் தொடர்பு இல்லை எனவும் தற்போது விசாரணை தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் விக்டோரியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த ஆரோனின் குடும்பத்தினர் இந்த விவகாரம் குறித்துக் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டதோடு, தங்களின் தனிப்பட்ட சுதந்திரத்திற்கு மதிப்பளிக்குமாறு கேட்டுள்ளனர்.

ஒரு வருடத்திற்கு மேலாக அந்த வீட்டில் வசித்து வந்த இவர்களை ஒரு அன்பான தம்பதி என அயலவர்கள் நினைத்திருந்தனர். எனினும் சமிந்திகா சிறிது காலம் பிரிந்து வாழ்ந்துள்ளார்.

இந்தச் சம்பவம் குறித்து ஏதேனும் கூடுதல் தகவல் தெரிந்தால் பொலிஸாரை தொடர்பு கொள்ளுமாறு அந்நாட்டு அதிகாரிகள் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதேவேளை, இந்தச் சம்பவம் நடந்த வீடு Haunted Hills எனப்படும் மர்மமான கதைகள் நிறைந்த பகுதிக்கு அருகே அமைந்திருப்பது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையில் வாகனம் வாங்க காத்திருப்போருக்கான செய்தி : விதிக்கப்படும் வரி குறித்து வெளியான தகவல்!!

வரி திருத்தங்களின் ஒட்டுமொத்த விளைவாக, வாகன இறக்குமதிக்கான மொத்த சுங்க வரி கட்டமைப்பில் எந்த மாற்றமும் இருக்காது என வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

2026ஆம் ஆண்டு ஏப்ரல் முதலாம் திகதி தொடக்கம் நடைமுறைக்கு வரும் புதிய சுங்க வரி திருத்தங்கள் குறித்து வழங்கியுள்ள விளக்கத்தில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, நிதி அமைச்சகத்தின் நிதி கொள்கை திணைக்கள அதிகாரிகளிடமிருந்து பெறப்பட்ட தகவல்களின்படி, வரி அமைப்பில் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன.

அந்த வகையில் சுங்க இறக்குமதி வரி – தற்போதுள்ள 20 வீத வரி விகிதம் 30 வீதமாக ஆக உயர்த்தப்பட உள்ளது.

சுங்க வரி கூடுதல் கட்டணம் – தற்போது நடைமுறையில் உள்ள 50 வீத கூடுதல் கட்டணம், மற்றொரு வர்த்தமானி அறிவிப்பின் மூலம் ரத்து செய்யப்பட உள்ளது.

இந்த வரி திருத்தங்களின் ஒட்டுமொத்த விளைவாக, வாகன இறக்குமதிக்கான மொத்த சுங்க வரி கட்டமைப்பில் எந்த மாற்றமும் இருக்காது.

இருப்பினும், ஏப்ரல் 1 முதல் இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு, தற்போதுள்ள வரிகளுடன் கூடுதலாக 2.5 வீத சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி மட்டும் சேர்க்கப்படும்.

இதுவே வாகன இறக்குமதியாளர்களுக்கு ஏற்படும் ஒரே கூடுதல் செலவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இலங்கையில் ஒரே நாளில் இரு முறை அதிகரித்த தங்கத்தின் விலை!!

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள பதற்றநிலை காரணமாக இலங்கையில் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிறது. அதன்படி இன்று இரண்டு முறை தங்கவிலை அதிகரித்துள்ளது.

இன்று காலை 410,000 ரூபாயாக இருந்த தங்கவிலை மாலையில் 2,000 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

அந்தவகையில், இலங்கையில் தற்போதைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 412,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 381,000 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 51,500 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 47,625 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

ஏப்ரல் மாதத்திற்குள் இலங்கையில் மின்வெட்டு? பொதுமக்களுக்கு எரிசக்தி அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு!!

நுரைச்சோலையில் உள்ள லக்விஜய நிலக்கரி மின் நிலையத்தில் நிலக்கரி விநியோகம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் காரணமாக எதிர்காலத்தில் மின்வெட்டு விதிக்கப்படும் என்ற தவறான மற்றும் ஏமாற்றும் அறிக்கைகளால் பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என எரிசக்தி அமைச்சு அறிவித்துள்ளது.

இது தொடர்பான அறிவிப்பில் மேலும், நுரைச்சோலை மின் நிலையத்தில் நிலக்கரி விநியோகம் தொடர்பாக சிக்கல்கள் எழுந்துள்ளதாகவும், குறிப்பாக ஏப்ரல் மாதத்திற்குள் மின்வெட்டு விதிக்கப்படலாம் என்றும் சில ஊடகங்களில் தவறான மற்றும் தவறான தகவல்கள் பரவி வருகின்றன.

நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்திற்கு எதிர்கால செயல்பாடுகளுக்காக ஓடர் செய்யப்பட்ட 36 நிலக்கரி ஏற்றுமதிகளில், 22 ஏற்றுமதிகள் ஏற்கனவே இறக்கப்பட்டுவிட்டது.

இந்த நிலையில் ஆலை தற்போது வழக்கம் போல் இயங்குகிறது. மீதமுள்ள நிலக்கரி விநியோகங்களை தடையின்றி வழங்க முடியும் என விநியோகஸ்தர் உறுதியளித்துள்ளார்.

தேவைப்பட்டால் அவசர நிலக்கரி விநியோகங்களைப் பெறுவதற்கு ஏற்கனவே முதன்மை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. கூடுதலாக, மின்சார உற்பத்திக்குத் தேவையான உலை எண்ணெயின் தேவையான இருப்பு ஏப்ரல் இறுதி வரை இருக்கிறது.

இந்த சூழலில், பரப்பப்படும் செய்தி அறிக்கைகளில் கூறப்பட்டுள்ளபடி மின்வெட்டு இருக்காது என்று தெளிவாகக் கூற முடியும்.

அதன்படி, இதுபோன்ற தவறான மற்றும் தவறான தகவல்களைப் பரப்புவதன் மூலம் தவறாக வழிநடத்தப்பட வேண்டாம் என்று எரிசக்தி அமைச்சு சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரையும் கேட்டுக் கொண்டுள்ளது.

அமெரிக்காவில் எடைத்தூக்கும் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற இலங்கையர்!!

அமெரிக்காவில் எடைத்தூக்கும் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று இலங்கையர் (Ransilu Jayathilake) ஒருவர் சாதனை படைத்துள்ளார்.

அமெரிக்காவில் நடைபெற்ற 2026 அர்னால்ட் ஸ்போர்ட்ஸ் ஃபெஸ்டிவல் (Arnold Sports Festival) போட்டியில்,

120 கிலோ எடைப்பிரிவில் (Pro category) இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய பவர்லிஃப்டிங் செம்பியன் ரன்சிலு ஜயதிலக்க (Ransilu Jayathilake) தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

டெட்லிஃப்ட் (Deadlift) பிரிவில் 320 கிலோ எடையைத் தூக்கி அவர் தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.

அதேவேளை 37ஆவது முறையாக நடைபெறும் இந்த போட்டியில், இலங்கை வீரர் (Ransilu Jayathilake) ஒருவர் பங்கேற்ற முதல் சந்தர்ப்பம் ஆகும்.

 

புழுக்களுடன் பொரித்த கோழி : கடை உரிமையாளருக்கு அபராதம்!!

சுகாதாரச் சீர்கேட்டுடன் உணவு வழங்கிய கடை உரிமையாளருக்கு 15 ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டு சம்மாந்துறை நீதவான் நீதிமன்று உத்தரவிட்டது.

குறித்த வழக்கு நேற்று(6.3.2026) அன்று சம்மாந்துறை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட வேளை கடை உரிமையாளரை கடந்த 13 மாதங்களுக்கு மேலாக நீடித்த சட்டப் போராட்டத்திற்குப் பின் குற்றவாளியாக இனங்கண்ட நீதிமன்று அபராதம் விதித்து வழக்கினை முடிவிற்கு கொண்டு வந்துள்ளது.

கடந்த 2025 பெப்ரவரி 2 அன்று சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட கல்லரிச்சல் பொதுச் சுகாதார பரிசோதகர் பிரிவுக்குட்பட்ட சங்க ஒன்றுகூடலில் வழங்கப்பட்ட இரவு விருந்தில் பொரித்த கோழியில் புழுக்கள் இருந்தமை கண்டறியப்பட்டிருந்தது.

அத்துடன் சம்பவ தினமன்று கடை உரிமையாளருடன் சங்க ஒன்று கூடலில் ஈடுபட்டவர்கள் தர்க்கம் செய்த நிலையில் பொதுச் சுகாதாரப் பரிசோதகர் குழுவினருக்கு தகவல் வழங்கி இருந்தனர்.

இதற்கமைய சட்ட நடவடிக்கையை தொடர்ந்த சுகாதார தரப்பினர் கடந்த 13 மாதங்களுக்கு மேலாக நீடித்த சட்டப் போராட்டத்திற்குப் பின் குறித்த உணவு வழங்கிய நபருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தின் பின் கடையை மூடிவிட்டு தலைமறைவான வெளி ஊர் கடை உரிமையாளர் சம்மாந்துறை நீதவான் நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கு விசாரணைகளுக்கும் மூன்று முறை முன்னிலையாகாமல் தவிர்த்து வந்த நிலையில் இறுதியில் நீதிமன்ற பிடிவிறாந்து (Warrant) மூலம் அவர் முன்னிலைப்படுத்தப்பட்டு இருந்தார்.

அத்துடன் தான் நிரபராதி என வாதாட முற்பட்ட போதிலும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர் குழுவினரின் வலுவான சாட்சியங்கள் மற்றும் அனுபவ ரீதியிலான சட்ட வாதங்களின் அடிப்படையில் அவரால் உண்மையை மறைக்க முடியாமல் அவர் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டார்.

இந்நிலையில் குற்றவாளியின் பொருளாதார நிலையை கருத்திற்கொண்டு ரூபா 15 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு வழக்கு நிறைவு செய்யப்பட்டது.

 

வவுனியா உட்பட நாட்டின் சில மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!!

இலங்கையின் பல பகுதிகளில் மனித உடலால் உணரப்படும் வெப்பத்தின் அளவு ‘எச்சரிக்கை மட்டத்திற்கு’ அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

குறிப்பாக பின்வரும் மாகாணம் மற்றும் மாவட்டங்களில் வெப்பம் அதிகமாக இருக்கும் என அடையாளம் காணப்பட்டுள்ளது: சபரகமுவ மாகாணம், கொழும்பு, கம்பஹா, குருநாகல் அனுராதபுரம், வவுனியா, அம்பாந்தோட்டை, மொனராகலை

அதிகரிக்கும் வெப்பம் காரணமாக பொதுமக்கள் பின்வரும் உடல்நலப் பாதிப்புகளைச் சந்திக்க நேரிடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது:

நீண்ட நேரம் வெயிலில் இருப்பதாலும், வேலைகளில் ஈடுபடுவதாலும் அதிக சோர்வு ஏற்படலாம்.

போதிய ஓய்வின்றி தொடர்ந்து வெயிலில் வேலை செய்வதால் உடலில் தசைப்பிடிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

வெப்பத்தின் தாக்கத்திலிருந்து தப்பிக்க பொதுமக்கள் போதிய அளவு தண்ணீர் அருந்துமாறும், இயன்றவரை நிழலான இடங்களில் தங்கியிருக்குமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

குறிப்பாக முதியவர்கள் மற்றும் குழந்தைகள் மீது கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மன்னாரில் நடந்த திருட்டுச் சம்பவம் : நான்கு பெண்கள் கைது!!

மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாந்திபுரம் 50 வீட்டுத்திட்ட பகுதியில் உள்ள வீடு ஒன்றில் கடந்த புதன் கிழமை (04) இரவு இடம்பெற்ற திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரான பெண் ஒருவர் உள்ளடங்களாக நான்கு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடம் இருந்து திருடப்பட்ட பல இலட்சம் ரூபாய் பெறுமதியான நகைகள் மற்றும் பெருந்தொகை பணம் ஆகியவற்றையும் மன்னார் பொலிஸார் மீட்டுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில்,

மன்னார் சாந்திபுரம் 50 வீட்டுத்திட்ட பகுதியில் உள்ள வீடு ஒன்றில் கடந்த புதன்கிழமை (04) இரவு பாரிய திருட்டுச் சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளமை குறித்து குறித்த வீட்டின் உரிமையாளர் நேற்று வியாழக்கிழமை (5) மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இதன் போது குறித்த வீட்டில் தாலிக்கொடி, சங்கிலி , காப்பு உள்ளடங்களாக 15 பவுன் தங்க நகைகளும்,4 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய் பணமும் காணாமல் போயுள்ளதாக மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர்.

குறித்த முறைப்பாடுகளுக்கு அமைவாக மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி யூ.என்.கெட்டியாராச்சி இன் பணிப்புரைக்கு அமைவாக மன்னார் பொலிஸ் நிலைய குற்ற தடுப்பு பிரிவு பொலிஸ் பரிசோதகர் பத்தே விதான, பொலிஸ் சாஜன் சிவ ராஜா(53207),

பொலிஸ் கொஸ்தபல் களான சஞ்ஜீவ ராஜ்(37747), கருணாரத்ன(105221), பெண் பொலிஸ் கொஸ்தபில்களான ரஜித்தா(10137), ஓவியா(12439) ஆகியோர் இணைந்து முன்னெடுத்த விசேட தேடுதல் நடவடிக்கைகளின் போது பிரதான சந்தேக நபரான பெண் கைது செய்யப்பட்டார்.

மன்னார் பொலிஸார்

அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது ஏனைய சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதோடு, அவர்களிடம் இருந்து திருடப்பட்ட சுமார் 56 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள 15 பவுன் தங்க நகைகள் மற்றும் பணம் என்பன முழுமையாக மீட்கப்பட்டுள்ளது.

கைதுசெய்யப்பட்ட குறித்த நான்கு பெண்களும் தற்போது மன்னார் பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டு விசாரணைகளுக்கு உற்படுத்தி வருகின்றனர்.

மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் முன்னெடுத்து வருவதோடு விசாரணைகளின் பின்னர் மீட்கப்பட்ட நகைகள்,பணம் மற்றும் கைது செய்யப்பட்ட நபர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த மன்னார் பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.