வவுனியா மாநகரசபை தொடர்பில் உயர் நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து மகிழ்ச்சிக் கொண்டாட்டம்!!

வவுனியா மாநகர சபையின் முதல்வர் மற்றும் பிரதி முதல்வர் தெரிவு தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றம் விதித்திருந்த தடை உத்தரவை உயர் நீதிமன்றம் நீக்கியுள்ளதைத் தொடர்ந்து, வவுனியாவில் ஆதரவாளர்கள் பட்டாசு கொளுத்தி தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.

வவுனியா மாநகர சபை முதல்வர் மற்றும் பிரதி முதல்வர் தெரிவுக்கு ஆட்சேபம் தெரிவித்து எதிரணியினரால் தொடரப்பட்ட வழக்கில், அவர்களது செயற்பாடுகளுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் தடை விதித்திருந்தது.

இத்தடை உத்தரவுக்கு எதிராக மாநகர சபை முதல்வர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனும், பிரதி முதல்வர் சார்பில் சிரேஸ்ட சட்டத்தரணி நிசாம் காரியப்பரும் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர்.

இன்று இவ்வழக்கை பரிசீலித்த உயர் நீதிமன்றம், முதல்வர் தலைமையிலான மாநகர சபை இயங்குவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவை நீக்கி இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதேநேரம், பிரதி முதல்வர் தொடர்பான இடைக்கால தடை தொடர்ந்து நீடிக்கப்பட்டு வரும் நிலையிலும், அவர் தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினால் அதனை ஏற்றுக்கொள்வதற்கு உயர் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

மாநகர சபை இயங்குவதற்கான தடை நீக்கப்பட்ட செய்தி வெளியானதைத் தொடர்ந்து, வவுனியாவில் ஆதரவாளர்கள் இடையே உற்சாகமான சூழ்நிலை ஏற்பட்டது.

வவுனியா மாநகர சபை முதல்வர் மற்றும் பிரதி முதல்வரின் ஆதரவாளர்கள் மாநகர சபை வாயில் முன்பாக ஒன்றுகூடி, பட்டாசுகளைக் கொளுத்தி தமது மகிழ்ச்சியைக் கொண்டாடினர்.

மேலும் , திருநாவக்குளம் பகுதியிலும் ஆதரவாளர்கள் பட்டாசு கொளுத்தி, இனிப்புகள் வழங்கி இந்த வெற்றியைக் கொண்டாடியதைக் காணக்கூடியதாக இருந்தது.

இதேவேளை, மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் எதிர்வரும் 19ஆம் திகதி வவுனியா மாநகர சபை தொடர்பான இறுதித் தீர்ப்பு வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழில் இடம்பெற்ற கோர விபத்து : ஆபத்தான நிலையில் ஒருவர் வைத்தியசாலையில்!!

யாழில் பொலிஸார் துரத்தி வந்த மோட்டார் சைக்கிள் வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருகையில், நேற்று(31.05.2026) மாலை யாழ்ப்பாணம் பொலிஸார் மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவரை பொலிஸார் துரத்தி வந்துள்ளனர்.

இதன்போது யாழ்ப்பாணம் மவுண்ட் ஹாமல் சந்தியடியில், பொலிஸார் துரத்தி வந்த மோட்டார் சைக்கிளானது வேறொரு மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதன்போது மற்றைய மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் படுகாயமடைந்துள்ளார். பின்னர் துரத்தி வந்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

காயமடைந்த நபர் ஆபத்தான நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்து சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

கொழும்பை உலுக்கிய கோர விபத்து : தன்சல் வரிசையில் உயிரிழந்தவர்கள் தொடர்பில் வெளியான தகவல்!!

கொழும்பின் புறநகரான மீகொட பகுதியில் நேற்று இரவு (31) சிற்றூந்து ஒன்று, அன்னதான வரிசையில் நின்றவர்களின் மேல் மோதியதில் 06 பேர் உயிரிழந்துள்ள கோரமான விபத்து குறித்து தற்போது பல விவரங்கள் வெளியாகியுள்ளன

இந்த விபத்தில் காயமடைந்த மேலும் ஏழு பேர் சிகிச்சைக்காக ஹோமகம வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தில் 3 ஆண்களும் 3 பெண்களும் உயிரிழந்துள்ளதுடன், ஏழு பேர் காயமடைந்த நிலையில் ஹோமகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதன்போது தானசாலை வரிசையில் நின்றிருந்த 15, 32, மற்றும் 56 வயதுடைய மூன்று பெண்களும், 35, 38 வயதுடைய மூன்று ஆண்களும் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிலியந்தல, வெவல பள்ளிய வீதியைச் சேர்ந்த 56 வயதான பி. பி. இந்திராணி என்ற பெண், அவரது 35 வயதான மகள் நவிஷா நிலாக்ஷி, அவரது 38 வயதான மருமகன் லசிகா பிரியங்கர நனயக்கரா மற்றும் உயிரிழந்த பெண்ணின் சகோதரரின் 15 வயதான மகள் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்தவர்களில் தம்பதியினரும் உள்ளடங்கியுள்ளதாகவும், பெண்ணும் அவரது கணவரும் அவிசாவெல்லவைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

சனிக்கிழமையன்று பிலியந்தல பள்ளிய வீதியிலுள்ள தங்கள் பெற்றோர் வீட்டிற்கு செல்வதற்காக ஒரு முச்சக்கர வண்டியில் பயணம் செய்து கொண்டிருந்தபோது, ​​வழியில் வரிசையில் காத்திருந்த போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

இந்த விபத்து நடந்தபோது இந்திராணியின் கணவர் தனது மகளின் மூத்த குழந்தையுடன் வாகனத்தில் இருந்ததாகவும், அவர்கள் உயிர் தப்பியதாகவும் கூறப்படுகிறது.

இவ்வாறு உயிரிழந்தவர்களில் பாதுக்க துன்னனா பகுதியை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு சகோதரர்களும் உள்ளடங்கியுள்ளனர்.

இந்த விபத்தினை ஏற்படுத்திய பிறகு வாடகைக் கார் சாரதி வாகனத்தை நிறுத்தாமல் சென்ற நிலையில், விரைந்து செயல்பட்ட பொலிஸார் கொடகம சந்திப்பில் சாரதியை கைது செய்துள்ளனர்.

பிலியந்தலாவைச் சேர்ந்த 42 வயதான சந்தேகநபர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது சந்தேகத்திற்குரிய வாடகைக் கார் சாரதி மதுபோதையில் இருந்ததும் உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் ஹோமாகம வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன.

இந்த விபத்து வேண்டுமென்றே ஏற்படுத்தப்பட்டது என்றும், சந்தேகநபருக்கு வழங்கப்படக்கூடிய அதிகபட்ச தண்டனையான கொலைக் குற்றத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் முறையான சாரதி அனுமதிப்பத்திரம் இல்லை என்பதும், வாகனத்தின் உரிமமும் முன்பே வழங்கப்பட்டிருந்தது என்பதும் தெரியவந்துள்ளது.

இந்த காரணத்திற்காக வாகனத்தின் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணை இன்று (01) நடைபெற்றுள்ளதுடன், கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஹோமகம நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தபட்டுள்ளார்.

இதனையடுத்து ஜூன் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சென்னையை உலுக்கிய இலங்கை தமிழ் பெண் கொலை : விசாரணையில் வெளியான தகவல்!!

சென்னை கோயம்பேடு அருகே உள்ள தனியார் மதுபான கேளிக்கை விடுதியில் ஏற்பட்ட தகராறில், இலங்கை தமிழ் பெண் கார் ஏற்றி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னை கோயம்பேட்டில் தனியார் கேளிக்கை விடுதியில் ஏற்பட்ட தகராறில் இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வந்த யான்சி (வயது 18) என்ற இலங்கை பெண் பரிதாபமாக உயிரிழந்திருந்தார்.

பெண் இருசக்கர வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிசிடிவி கமரா காட்​சிகள் அடிப்​படை​யில் சம்பவம் தொடர்பில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், விடுதிக்கும் சீல்வைக்கப்பட்டுள்ளது. மேலும், தடய​வியல் நிபுணர்​கள் சம்பவ இடத்​தில் தடயங்​களைச் சேகரித்துள்ளனர்.

சென்னை,விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள இலங்கை தமிழர் முகாமில் வசித்து வந்த யுவதி பாடசாலையில் 12ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். திருவள்ளூரை சேர்ந்த இவரது தோழியுடன் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை வந்துள்ளார்.

இதையடுத்து சென்னை வந்த யாசினி பல்வேறு இடங்களுக்கு தோழிகளுடன் சென்று சுற்றி பார்த்துள்ளதாக கூறப்படுகிறது.

இதன்போது 20 ஆம் திகதி சென்னை கோயம்பேட்டில் உள்ள ஒரு விடுதியில் நடன நிகழ்ச்சியின் போது இரு தரப்பினரிடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டு, அது பெரும் மோதலாக மாறியுள்ளது.

இந்த நிலையில், அந்த இளம்பெண் அங்கிருந்து வெளியேறி, தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் சென்றபோது, கேளிக்கை விடுதியில் இருந்த ஒரு கும்பல் அவரை துரத்திச்சென்று மோட்டார் சைக்கிள் மீது காரை ஏற்றியுள்ளனர்.

இந்த சம்பவத்தில் இளம்பெண் காரின் அடியில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்திருந்தார். குறித்த பெண்ணுடன் மோட்டார் சைக்கிளில் பின்னால் சென்ற சிறுமி பலத்த காயமடைந்து தற்போது தீவிர சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் மதுவிலக்கு ஆயத்தீர்வு துணை ஆணை மணிகண்டன் விடுதிக்கு சீல் வைத்துள்ளார்.

இந்நிலையில், உயிரிழந்த யுவதி இலங்கை தமிழர் எனவும், பல ஆண்​டு​களுக்கு முன்​னர் இலங்​கை​யில் நடை​பெற்ற உள்​நாட்டு பிரச்சினை​யால் அவரது குடும்​பத்​தினர்​ தமிழகத்​தில்​ தஞ்​சம்​ அடைந்​த​தாக​வும்​ பொலிஸார்​ தெரி​வித்​துள்ளனர்​.

இதற்கிடையே குற்றவாளிகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், உயிரிழந்த யுவதியின் தாய் மேரி ஸ்டெல்லா முதலமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

எரிபொருள் கியூஆர் குறியீடு தொடர்பில் வெளியான அறிவிப்பு!!

நாட்டில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் கியூஆர் (QR) முறைமையை எதிர்காலத்திலும் கடுமையாக செயல்படுத்த எதிர்பார்க்கப்படுவதாக, துறைமுகங்கள், சிவில் விமானப் போக்குவரத்து மற்றும் எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.

இன்று (01) நடைபெற்ற ஊடக சந்திப்பில் பங்கேற்றபோது அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தற்போது நிலவும் நெருக்கடியான காலகட்டத்தில் எரிபொருள் நுகர்வை கட்டுப்படுத்துவதே இதன் நோக்கம் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் மூலம் பொருளாதாரத்தில் ஏற்படும் தாக்கம் ஓரளவிற்காவது தணிக்கப்படும் என நம்பப்படுவதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

தற்போது, ​​உலக எரிபொருள் சந்தையில் எரிபொருள் விலைகள் கணிசமாக அதிகரித்துள்ளதால், பெரும் அளவிலான அந்நியச் செலாவணி நாட்டிலிருந்து வெளியேறி வருகிறது.

எனவே, நாட்டிலிருந்து வெளியேறும் டொலர்களின் அளவை குறைக்க நாம் நடவடிக்கை எடுக்காவிட்டால், எரிபொருள் பற்றாக்குறைக்கு வழிவகுக்கும் என்றும், விலை உயர்வில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆகவே, தற்போது செயல்படுத்தி வரும் கியூஆர் (QR) முறையை இன்னும் சற்று கடுமையாக நடைமுறைபடுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க தீர்மானித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தொடர் வீழ்ச்சியில் இலங்கை ரூபா : வெளியானது இன்றைய பெறுமதி!!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி இன்று(01.06.2026) வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கி வௌியிட்டுள்ள நாளாந்த நாணய மாற்று விகித அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 325.97 ரூபாவாக பதிவாகியுள்ளது. அத்துடன், அதன் விற்பனை பெறுமதி 335.70 ரூபாவாக காணப்படுகின்றது.

கடந்த 29ஆம் திகதி அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 324.45 ரூபாவாகவும், விற்பனை பெறுமதி 334.24 ரூபாவாகவும் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

கார் மரத்தில் மோதி மருத்துவ மாணவி பரிதாபமாக பலி : சுற்றுலா சென்றிருந்த போது பெரும் சோகம்!!

சென்னை கேளம்பாக்கம் கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் வசித்து வருபவர் அந்தோணிராஜ். இவர் நேற்று முன்தினம் தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் 2 கார்களில் சென்னையில் இருந்து வேளாங்கண்ணி பேராலயத்திற்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார்.

இதில் அந்தோணிராஜ் உட்பட 6 பேர் பயணம் செய்த ஒரு காரை அவரது உறவினர் சத்தியராஜ் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இவர்களின் வாகனம் மயிலாடுதுறை அருகே பெரம்பூர் காவல் எல்லைக்கு உட்பட்ட கடலி என்ற இடத்தின் அருகே வந்து கொண்டிருந்தது.

அப்போது எதிர்பாராத விதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அந்த கார், சாலையோரம் இருந்த ஒரு பெரிய மரத்தின் மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தின் கொடூரமான தாக்கத்தால் காரில் பயணம் செய்த அந்தோணிராஜ், அவரது மனைவி சங்கீதா, மகள் ஹரிணி மற்றும் உறவினர்கள் லிபியா ஜாய்சி, சத்தியராஜ், பிரேமா ஆகிய 6 பேரும் உடல் முழுவதும் பலத்த காயமடைந்தனர்.

விபத்தைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர், காயமடைந்தவர்களை மீட்டுச் சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ஹரிணியைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

விபத்தில் சிக்கிப் பலியான 20 வயது இளம் பெண் ஹரிணி, சென்னையில் 2-ம் ஆண்டு மருத்துவம் படித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. காயமடைந்த மற்ற 5 பேருக்கும் மருத்துவமனையில் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்தச் சோகமான விபத்து குறித்துப் பெரம்பூர் காவல் ஆய்வாளர் மலைச்சாமி வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்.

திருமணமான சில மணிநேரத்திலேயே மணமகன் பலி : புதுமணத் தம்பதி சென்ற ஹெலிகொப்டர் விபத்து!!

அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில், திருமணம் முடிந்த மகிழ்ச்சியோடு பயணித்த புதுமணத் தம்பதியின் ஹெலிகாப்டர் திடீரென விபத்துக்குள்ளானதில், கேரளாவைப் பூர்வீகமாகக் கொண்ட மணமகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் வசித்து வரும் கேரளப் பூர்வீகக் குடும்பத்தைச் சேர்ந்தவர் டேவ் பிஜி. இவருக்கும், இவருடைய காதலிக்கும் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் மிகவும் கோலாகலமாகத் திருமணம் நடைபெற்று முடிந்தது.

திருமணச் சடங்குகள் அனைத்தும் முடிந்த பிறகு, புதுமணத் தம்பதியர் இருவரும் தங்களது புதிய வாழ்க்கையின் தொடக்கத்தைக் கொண்டாடும் விதமாக, அங்கிருந்து ஒரு தனியார் ஹெலிகாப்டர் மூலம் தங்களது பயணத்தைத் தொடர்ந்துள்ளனர்.

ஹெலிகாப்டர் புறப்பட்ட சில மணி நேரங்களிலேயே, ஜார்ஜியா மாகாணத்தின் ஒரு குறிப்பிட்ட வான் பகுதியில் பறந்து கொண்டிருந்த போது,

எதிர்பாராதவிதமாகத் தொழில்நுட்பக் கோளாறு காரணமாகக் கட்டுப்பாட்டை இழந்து தரையிறங்க முடியாமல் விபத்துக்குள்ளானது. அமெரிக்கப் பாதுகாப்பு மற்றும் மீட்புக் குழுவினர் உடனடியாக விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.

இந்த ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி மணமகன் டேவ் பிஜி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

அவருடன் பயணித்த மணமகள் மற்றும் விமானியின் நிலை குறித்த கூடுதல் விபரங்களை அமெரிக்க வான்வழி விபத்து விசாரணை அதிகாரிகள் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.

திருமணப் பந்தலில் வாழ்த்திவிட்டுச் சென்ற சில மணி நேரங்களிலேயே, மணமகன் பிணமாக மீட்கப்பட்ட செய்தி அமெரிக்கா மற்றும் கேரளாவில் உள்ள அவரது சொந்த ஊரில் இருக்கும் உறவினர்கள் மற்றும் நண்பர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

இலங்கையில் எபோலாவை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை!!

இலங்கையில் எபோலா வைரஸ் பரவல் அபாயத்தை எதிர்கொள்வதற்காக ஆரம்ப கட்ட அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொது சுகாதார விசேட நிபுணர் வைத்தியர் துஷானி தாபரேரா தெரிவித்துள்ளார்.

உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டல்களுக்கு இணங்க சுகாதார அமைச்சு ஆயத்தத் திட்டங்களையும் ஒத்திகைகளையும் முன்னெடுத்து வருகின்றதாக ஊடக சந்திபொன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எபோலா பரவல் பதிவான ஆபிரிக்க நாடுகளிலிருந்து வரும் பயணிகள் குறித்து விசேட கண்காணிப்பு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், சந்தேக நோயாளர்கள் கண்டறியப்பட்டால் உடனடியாக தொற்றுநோயியல் பிரிவுக்கு அறிவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன், சந்தேக நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்குவதற்காக IDH வைத்தியசாலை தயார் நிலையில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாடொன்றில் இலங்கை தமிழ் இளைஞனின் வெறியாட்டம் – ஒருவர் கொடூரமாக படுகொலை!!

தாய்லாந்தில் தனது நண்பர் ஒருவரை கொடூரமாக கத்தியால் குத்தி கொலை செய்த இலங்கையர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

தலைநகர் பேங்கொக்கின் Prawet பகுதியில் கடந்த 29ஆம் திகதியன்று இந்த கொலை சம்பவம் பதிவாகி உள்ளது. கத்திக்குத்துக் தாக்கலை தடுக்க முயன்ற தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த நபர் ஒருவர் கொடூரமாகக் குத்திக் கொலை செய்யப்பட்டார்.

அபிஷேக் ராஜா என்ற இலங்கையர் தனது நண்பரான 23 வயது Adiman Hayilapeh என்பவரை கத்தியால் தாக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதன்போது மற்றொரு நபர், இந்தத் தாக்குதலைத் தடுக்க முயன்ற போது கத்திக் குத்துக்கு இலக்காகி உள்ளார்.

பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தாக்குதலின் பின்னர் சம்பவ இடத்திலிருந்து தப்பியோடிய அபிஷேக், அவரது தங்குமிடத்தில் மறைந்திருந்த போது பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.

பாதிக்கப்பட்டவரின் நண்பர் கொடுத்த தகவலின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட அபிஷேக் மீது மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மற்றுமொரு பொலிஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.

அத்துடன் பொலிஸாரின் நடவடிக்கைகளை விசாரிக்கும் சிறப்புப் பிரிவான ‘ஐ.ஜி.பி.என்’ இந்தத் துப்பாக்கிச் சூடு குறித்த முழுமையான விசாரணையை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கட்டிலில் இருந்து கீழே விழுந்த குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு!!

அனுராதபுரம், கெக்கிராவை பகுதியில் பெற்றோர்களுக்கு நடுவில் பாதுகாப்பாக உறங்கிக் கொண்டிருந்த இரண்டு வயது ஆண் குழந்தை ஒன்று, கட்டிலில் இருந்து கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்த துயரச் சம்பவமொன்று அரங்கேறியுள்ளது.

பெற்றோர்களுக்கு நடுவில் உறங்கிக் கொண்டிருந்த குறித்த குழந்தை, அதிகாலை வேளையில் எதிர்பாராத விதமாக கட்டிலில் இருந்து கீழே தவறி விழுந்துள்ளது.

சத்தம் கேட்டுப் பதறியெழுந்த பெற்றோர், உடனடியாகக் குழந்தையை மீட்டு அருகில் உள்ள வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றுள்ளனர்.

எனினும், தலையில் ஏற்பட்ட கடுமையான உட்புறக் காயங்கள் காரணமாக சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்துள்ளது. சம்பவம் தொடர்பில் கெக்கிராவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நாட்டில் 15 மாதங்களில் பல கோடி ரூபாவாக அதிகரித்துள்ள தங்கக் கடன்!!

2026 மார்ச் மாதம் வரை தங்கப் பொருட்களை அடகு வைத்து வணிக வங்கிகளில் பெற்றுக் கொள்ளப்பட்ட மொத்தக் கடன் தொகை 101,169 கோடி (ஒரு இலட்சத்து ஓராயிரத்து நூற்று அறுபத்தொன்பது கோடி) ரூபாய் வரை

அதிகரித்துள்ளதாக புள்ளிவிபரத் தரவுகள் மூலம் தெரியவருவதாக பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரத் துறைப் பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்துள்ளார்.

2024ஆம் ஆண்டின் இறுதியில் இந்தக் கடன் தொகை 66,024 கோடி (அறுபத்தாறாயிரத்து இருபத்து நான்கு கோடி) ரூபாயாக இருந்ததாகக் குறிப்பிட்ட பேராசிரியர்,

2026 மார்ச் வரையிலான கடந்த பதினைந்து மாத காலப்பகுதியில் தங்கப் பொருட்களை அடகு வைத்து வணிக வங்கிகளில் கடன் பெறுவது 35,145 கோடி ரூபாயினால் அதிகரித்துள்ளது.

இத்தரவுகளை இந்நாட்டின் மொத்தக் குடும்பங்களின் எண்ணிக்கையான 6 மில்லியனால் வகுப்பதன் மூலம் ஒரு குடும்பம் தங்கப் பொருட்களை அடகு வைத்து வணிக வங்கிகளில் பெற்றுக்கொண்டுள்ள கடன் தொகையை அறிந்துகொள்ள முடியும்.

அதற்கமைய 2026 மார்ச் மாதமளவில் ஒரு குடும்பம் தமக்குச் சொந்தமான தங்கப் பொருட்களை அடகு வைத்து வணிக வங்கிகளில் இருந்து 1,67,761 (ஒரு இலட்சத்து அறுபத்தேழாயிரத்து எழுநூற்று அறுபத்தொன்று) ரூபாய் பணத்தைக் கடனாகப் பெற்றுள்ளது.

2024ஆம் ஆண்டின் இறுதியில் இத்தொகையானது 1,09,482 (ஒரு இலட்சத்து ஒன்பதாயிரத்து நானூற்று எண்பத்திரண்டு) ரூபாயாக இருந்ததென்றும், கடந்த பதினைந்து மாத காலப்பகுதியில் அதன் அதிகரிப்பு 58,279 ரூபாயாகும்.

இலங்கையின் வணிக வங்கிகளினால் தனியார் துறைக்கு வழங்கப்படும் கடன்கள் மற்றும் முன்பணங்களில் (அட்வான்ஸ்கள்) குறிப்பிடத்தக்கதொரு வளர்ச்சி கடந்த ஒன்றரை வருட காலப்பகுதிக்குள் அவதானிக்கக் கூடியதாக உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த அறிகுறிகளுடன் இரண்டு நாட்களுக்கு மேல் காய்ச்சல் நீடிப்பவர்களுக்கு எச்சரிக்கை!!

பருவமழையை தொடர்ந்து இலங்கையில் டெங்கு மற்றும் சிக்கன்குனியா நோய்த்தொற்றுகள் அதிகரித்து வருவதாக பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எனவே இரண்டு நாட்களுக்கு மேல் காய்ச்சல் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும் மற்றும் உரிய இரத்தப் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வைத்தியர் மகேஷக விஜயவர்தன தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் உயர்ந்துள்ளதாகவும், குறிப்பாக மேற்கு மாகாணம், அதிலும் கொழும்பு மற்றும் கம்பஹாவில் அதிக எண்ணிக்கையிலான நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளதாகவும் வைத்தியர் எச்சரித்துள்ளார். “டெங்கு மற்றும் சிக்கன்குனியா ஆகிய இரண்டுமே ஏடிஸ் கொசுக்களால் பரவுகின்றன.

மேலும், காய்ச்சல், தலைவலி, உடல் வலி, மூட்டு வலி மற்றும் தோல் தடிப்புகள் போன்ற ஒரே மாதிரியான அறிகுறிகளுடன் இவை பெரும்பாலும் ஏற்படுவதால் ஆரம்பத்திலேயே நோயைக்கண்டறிவது கடினம் என்றும் கூறியுள்ளார்.

டெங்கு குருதிப்போக்குக் காய்ச்சல் (Dengue Haemorrhagic Fever – DHF) முற்றிய நிலையில், அது உயிருக்கு ஆபத்தானதாக மாறக்கூடும் என்றும், உடனடியாக சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் இரத்தக்கசிவு, அதிர்ச்சி மற்றும் மரணத்திற்கு வழிவகுக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

“டெங்கு இரத்தக் கசிவு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு, காய்ச்சல் குறையத் தொடங்கும் போது உடல்நிலை மேலும் மோசமடைகிறது.

சோர்வு, வயிற்று வலி மற்றும் கைகள் அல்லது பாதங்கள் குளிர்ச்சியாக இருப்பது போன்ற அறிகுறிகளை ஒருபோதும் புறக்கணிக்கக்கூடாது,” என்றும் வைத்தியர் விஜயவர்தன அறிவுறுத்தியுள்ளார்.

மேலும், காய்ச்சல் ஏற்படும் நோயாளிகள் அழற்சி எதிர்ப்பு மருந்துகளை (NSAIDs) ஆரம்பத்திலேயே பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறும், இவை டெங்கு பாதிப்புகளில் இரத்தக் கசிவு ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கக்கூடும் என அறிவுறுத்தியுள்ளார்.

நுளம்புகள் இனப்பெருக்கம் செய்யும் இடங்களை அகற்றவும், நுளம்பு விரட்டிகளைப் பயன்படுத்தவும், தொடர் மழையால் நோய் பரவும் அபாயம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் விழிப்புடன் இருக்குமாறும் பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

வவுனியாவில் தற்காலிக கடைகளை அகற்றும் நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தம்!!

வவுனியா மாநகரசபைக்கு சொந்தமான காணியில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக கடைகள் மாநகரசபை உத்தியோகத்தர்களால் இன்றையதினம் அகற்றப்பட்டு வந்த நிலையில் முன்னாள் துணைமுதல்வரின் தலையீட்டை அடுத்து தற்காலிகமாக அது நிறுத்தப்பட்டது.

வவுனியா கொறவப்பொத்தான வீதியின் இரு பகுதியிலும் இருந்த நடைபாதை கடைகள் கடந்தவருடம் மாநகரசபையால் அகற்றப்பட்டதுடன் அங்கு வியாபார செயற்பாடுகளை மேற்கொண்டு வந்த வியாபாரிகளுக்கு வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக இருந்த மாநகரசபைக்கு சொந்தமான காணியில் தற்காலிக இடங்கள் ஒதுக்கப்பட்டு வியாபார செயற்பாடுகள் இடம்பெற்று வந்தது.

இந்நிலையில் வவுனியா மாநகரசபையின் முதல்வர் மற்றும் பிரதி முதல்வர் ஆகியோர் மீது பிறிதொரு விடயம் தொடர்பாக கொழும்பு நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் சபையின் மக்கள் பிரதிநிதிகளின் செயற்பாட்டிற்கு நீதிமன்றம் இடைக்கால தடை விதித்திருந்தது. குறித்த தடை உத்தரவு இன்றுவரை நீடித்து வருகின்றது.

இந்தநிலையில் குறித்த பகுதியில் அமைக்கப்பட்ட வியாபார நிலையங்கள் உரிய அனுமதிகளை பெற்று அமைக்கப்படவில்லை. எனவே அவற்றை இன்று 31 ஆம் திகதிக்குள் அகற்ற வேண்டும் என மாநகரசபையின் ஆணையாளரால் அண்மையில் அறிவித்தல் ஒட்டப்பட்டது.

இந்நிலையில் இன்றையதினம் குறித்த பகுதிக்கு சென்ற மாநகரசபையின் அதிகாரிகள் மற்றும் பொலிசார் அகற்றப்படாத வியாபாரநிலையங்களை அகற்றும் செயற்ப்பாட்டில் ஈடுபட்டனர். அதற்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனையடுத்து அங்கு சென்ற மாநகரசபையின் முன்னாள் துணை முதல்வர் ப.கார்த்தீபன் தனது கடும் எதிர்ப்பை தெரிவித்ததுடன், மாநகரசபையின் அதிகாரிகளிடம் சில விடயங்களையும் எடுத்துக் கூறியிருந்தார்.

இதனையடுத்து கடைகளை அகற்றும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. அத்துடன் வியாபாரிகளின் விபரங்களை சபையின் அதிகாரிகள் பெற்றுச்சென்றனர்.

இதேவேளை பாதிக்கப்பட்ட வியாபாரிகள் கூறும் போது குறித்த கடைகளை எமது நகைகளை அடைவு வைத்தும் கடன் பட்டுமே அமைத்திருந்தோம். முன்னர் இருந்த நிர்வாகம் சொல்லியே நாம் இதனை அமைத்தோம். தற்போது அகற்றுமாறு சொல்வதால் தமது வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கவலை தெரிவித்தனர்.

வவுனியாவில் அநுராதபுரம் சிறுமி துஸ்பிரயோக சம்பவத்துக்கு எதிராக போராட்டம்!!

அநுராதபுரத்தில் மதகுரு ஒருவரால் சிறுமியொருவர் துஸ்பிரயோகத்திற்குள்ளாக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து வவுனியா பழைய பேருந்து நிலையப் பகுதியில் இன்று (01.06.2026) கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

சமூக ஆர்வலர்கள், மகளிர் அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் இணைந்து இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

நாட்டில் சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் அதிகரித்து வருவதாகக் குறிப்பிட்ட போராட்டக்காரர்கள், குற்றவாளிகளுக்கு தராதரம் பாராமல் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்ப்பட வேண்டும் என வலியுறுத்தினர்.

சிறுவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசாங்கமும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதன்போது பிக்குவே உனக்கு பிணை ஒரு கேடா, காவி உடைக்கும் சட்டம் வேண்டும், தனிநீதிமன்றம் தப்பிக்கும் நாடகமா போன்ற வாசகங்கள் தாங்கப்பட்ட பதாதைகளை ஏந்தியிருந்ததுடன் கோசங்களையும் எழுப்பியிருந்தனர். முன்னதாக குறித்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கையெழுத்துக்களும் பெறப்பட்டிருந்தது.

பலரையும் திரும்பி பார்க்க வைத்த பஸ் தன்சல் : பலரின் மனதை கவர்ந்த பேருந்து ஊழியர்கள்!!

மத்திய மாகாண சபையில் பதிவு செய்யப்பட்டு, கண்டி — கடுகண்ணாவை ஆகிய நகரங்களுக்கு இடையே சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்தொன்றின் உரிமையாளரும் அதன் ஊழியர்களும் இணைந்து, வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு இந்த விசேட ‘பஸ் தன்சல்’ (Bus Dansala) ஏற்பாடு செய்திருந்தனர்.

இதன்போது, அந்தப் பேருந்தில் பயணித்த பயணிகள் அனைவரும் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு முற்றிலும் இலவசமாக அழைத்துச் செல்லப்பட்டனர்.

அதுமட்டுமன்றி, பேருந்தில் பயணித்த அனைத்துப் பயணிகளுக்கும் சுவையான மதிய உணவுப் பார்சல்களும் குடிநீர் போத்தல்களும் இலவசமாக வழங்கப்பட்டன.

“பணத்திற்காகப் போட்டிபோடும் இன்றைய காலகட்டத்தில், பயணிகளிடம் காசு வாங்காமல் இலவசமாக ஏற்றிச் சென்றதுடன், மதிய உணவும் தந்து உபசரித்தது எங்களுக்கு நெகிழ்ச்சியாக இருந்தது,” என அதில் பயணித்த பயணிகள் பலரும் தங்களது நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர்.