யாழில் விளம்பரத்தை நம்பி மோசம்போன இளைஞன் : மாயமான தம்பதி!!

யாழில் சமூக வலைத்தளத்தின் மூலம் ‘காஸ் குக்கர்’ (GAS COOKER)விற்பனை செய்வதாக கூறி தம்பதிகள் மோசடி செய்துள்ளதாக பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

நவீன ரக காஸ் குக்கர் (GAS COOKER) விற்பனைக்கு உள்ளதாக முகநூலில் வெளியிடப்பட்ட விளம்பரத்தை நம்பி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞன் விளம்பரத்தில் கொடுக்கப்பட்டிருந்த நபர்களுடன் தொடர்பு கொண்டுள்ளார்.

அதன்போது, காஸ் குக்கரை (GAS COOKER)பெறுவதற்காக பணத்தை தங்களது வங்கி கணக்கில் வைப்பிலிடுமாறும், வாட்ஸ்அப் இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து, காஸ் குக்கரின் விலை எனக் கூறப்பட்ட 32 ஆயிரம் ரூபாயை அவர்கள் வழங்கிய வங்கி கணக்கு இலக்கத்திற்கு வைப்பிலிட்ட இளைஞன் , அதற்கான தகவலை வாட்ஸ்அப் மூலம் அறிவித்துள்ளார்.

பின்னர் காஸ் குக்கரை அனுப்பி வைப்பதாக கூறிய நபர்கள், இரண்டு முதல் மூன்று நாட்கள் வரை பல்வேறு காரணங்களை கூறி அவரை ஏமாற்றிய பின்னர், பொருளை அனுப்பி வைத்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

காஸ் குக்கர் (GAS COOKER)அனுப்பி வைக்கப்பட்டதற்கான ஆதாரத்தை கேட்டபோது, அவர்கள் பயன்படுத்தியிருந்த வாட்ஸ்அப் இலக்கத்தை உடனடியாக அழித்துவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

தொடர்ந்து சந்தேகம் ஏற்பட்டதால், பாதிக்கப்பட்ட நபர் அந்த முகநூல் கணக்கில் பயன்படுத்தப்பட்டிருந்த முகப்பு புகைப்படத்தை ஆராய்ந்தபோது அந்த புகைப்படம் ஒரு புகைப்படக்காரர் தனது முகநூல் பக்கத்தில் பதிவேற்றியிருந்த தம்பதியினரின் படம் என்பதும், மோசடிக்காரர்கள் அதனை பயன்படுத்தியிருந்ததும் தெரியவந்துள்ளது.

தாம் மோசடிக்குள்ளானது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, சம்பவம் தொடர்பில் அவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

அதேவேளை சமூக வலைத்தள் போலி விளம்பரங்கள் தொடர்பில் பொலிஸார் மக்களுக்கு ஏற்கனவே பல தடைவை எச்சரிக்கை விட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

காட்டு நாய்கள் சூழ சுயநினைவிழந்து கிடந்த கனடிய பெண் : வெளியான புதிய தகவல்!!

கனடாவைச் சேர்ந்த இளம்பெண்ணொருவர் அவுஸ்திரேலியாவில் உயிரிழந்த விடயத்தில், புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவைச் சேர்ந்த பைப்பர் ஜேம்ஸ் (19) என்னும் இளம்பெண் சுற்றுலா சென்றிருந்த நிலையில், அவுஸ்திரேலியாவின் Fraser Island என்னும் K’gari என்னுமிடத்திலுள்ள கடற்கரை ஒன்றில் அவர் சுயநினைவின்றிக் கண்டெடுக்கப்பட்டார்.

பொலிசாருடன் மருத்துவ உதவிக்குழுவினரும் அங்கு விரைந்த நிலையிலும், அவரைக் காப்பாற்ற இயலவில்லை, சிறிது நேரத்திற்குள் அவர் உயிரிழந்துவிட்டார்.

அவர் விழுந்து கிடந்த இடத்தில், அவரைச் சுற்றி dingoes என அழைக்கப்படும் 12 காட்டு நாய்கள் நின்றதால், அவர் அந்த நாய்களால் கொல்லப்பட்டாரா என கேள்வி எழுந்தது.

புதிய தகவல்

இந்நிலையில், பைப்பர் ஜேம்ஸ், காட்டு நாய்கள் தாக்கித் துரத்தியதால் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்ததாக தற்போது நீதிமன்ற விசாரணை அதிகாரி தெரிவித்துள்ளார்.

பைப்பரின் உடலில், அவர் உயிரிழப்பதற்கு முன் ஏற்பட்ட காயங்களும், அவர் உயிரிழந்தபின் ஏற்பட்ட காயங்களும் இருந்தன.

ஆக, அந்த காட்டு நாய்கள் அவரைத் தாக்க, அவர் கடலுக்குள் விழுந்து தண்ணீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என முன்பே கருதப்பட்டது.

தற்போது, நீதிமன்ற விசாரணை அதிகாரியின் அறிக்கையிலும் அது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஜோதிடரின் கணிப்பை கேட்டு திருமண பரிகாரம் : இறுதி நாளில் உயிரை மாய்த்துக்கொண்ட இளம்பெண்!!

இந்திய மாநிலம் கர்நாடகாவில் இளம்பெண்ணொருவர், ஜோதிட பரிகாரம் செய்த பின் உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த 27 வயது இளம்பெண் வித்யஜோதி. இவர் தொழில்நுட்ப வல்லுநராக பணியாற்றி வந்தார்.

வித்யஜோதி மாற்று சமூக இளைஞர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். என்றாலும் இருவரது குடும்பத்தினரும் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், வித்யஜோதியிடம் ஜோதிடர் ஒருவர் மாற்று சமூகத்தினரை திருமணம் செய்வதால் பிரச்சனை உண்டாகும் என்றும், அது விவாகரத்து வரை செல்லும் என்றும் கூறியிருக்கிறார்.

அதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த வித்யஜோதி அதற்கான பரிகாரத்தை கேட்டுள்ளார். ஜோதிடர் கூறியபடி, 9 நாட்கள் பரிகாரமும் செய்துள்ளார். ஆனால், இறுதி நாள் பரிகாரம் முடிந்தவுடன் இரவு கோவிலுக்கு செல்ல வேண்டும் என்ற நிலையில், வித்யஜோதி தனது அறைக்கு சென்றுள்ளார்.

அவரது பெற்றோர் இரவு வேளையில் பலமுறை அழைத்து வித்யஜோதியை அழைத்தும் அவர் கதவை திறக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்து சன்னல் வழியாக பார்த்தபோது, வித்யஜோதி தூக்கில் தொங்கியபடி இருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதனையடுத்து தகவல் அறிந்த பொலிஸார் வித்யஜோதியின் உடலைக் கைப்பற்றி, வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

கணவருக்கு 3 நாள் பழைய சாம்பாரை பரிமாறிய மனைவி : வாக்குவாதத்தால் ஏற்பட்ட விபரீதம்!!

பெங்களூருவில் பழைய சாம்பாரை பறிமாறியது தொடர்பாக நடந்த குடும்ப தகராறில் 27 வயது இளம் தாய் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூருவை சேர்ந்த காவ்யா என்ற 27 வயது மனைவிக்கும் ரங்கசாமி என்ற அவரது கணவருக்கும் திருமணமாகி 5 ஆண்டுகள் ஆன நிலையில் இவர்களுக்கு 4 வயதில் குழந்தை ஒன்று உள்ளது.

இந்த தம்பதி இடையே கடந்த வியாழக்கிழமை 3 நாள் பழைய சாம்பாரை பறிமாறியது தொடர்பாக கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

வாக்குவாதத்தின் போது கணவர் ரங்கசாமி மனைவி காவ்யாவை மோசமான வார்த்தைகளால் திட்டியதோடு அவரை தாக்கவும் முயன்றுள்ளார்.

இதனால் மனமுடைந்த காவ்யா, அவரது வீட்டு விவசாய பயன்பாட்டிற்காக வைத்து இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை உட்கொண்டுள்ளார்.

சிறிது நேரத்திற்கு பிறகு காவ்யா வாந்தி எடுத்ததை அடுத்து, அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்க அழைத்து சென்றனர்.

ஆனால் துர்திஷ்டவசமாக மருத்துவமனை செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

காவ்யாவின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் காவல்துறையினர் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

2 குழந்தைகளைக் கொன்று தாய் எடுத்த விபரீத முடிவு : உருக்கமான கடிதம் சிக்கியது!!

தெலுங்கானா மாநிலம் யாதாத்திரி புவனகிரி மாவட்டத்தில், கணவனின் சந்தேகப் புத்தி மற்றும் மாமியார் வீட்டின் வரதட்சணை கொடுமை காரணமாக இளம் தாய் ஒருவர் தனது இரண்டு குழந்தைகளைக் கொன்றுவிட்டுத் தானும் தற்கொலை செய்து கொண்ட நெஞ்சை உருக்கும் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

யாதாத்திரி புவனகிரி மாவட்டம் கொள்ளகூடம் கிராமத்தைச் சேர்ந்த ரயில்வே ஊழியர் மேகல மகேஷ் என்பவருக்கும், ஐஸ்வர்யா (28) என்பவருக்கும் 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஜான்சி (2) மற்றும் பண்டு (10 மாதம்) என இரண்டு குழந்தைகள் இருந்தனர்.

மகேஷ் தனது மனைவி ஐஸ்வர்யாவின் நடத்தையில் சந்தேகப்பட்டுத் தொடர்ந்து சண்டையிட்டு வந்துள்ளார்.

இதனால் மனவேதனையடைந்த ஐஸ்வர்யா, தனது இரண்டு மாதக் கர்ப்பத்துடன் தாய் வீட்டிற்குச் சென்று அங்கேயே வசித்து வந்துள்ளார். ஐஸ்வர்யாவுக்கு ஆண் குழந்தை பிறந்தபோது கூட, மகேஷ் ஒருமுறை கூட வந்து பார்க்கவில்லை என்று கூறப்படுகிறது.

உறவினர்கள் முன்னிலையில் சமரசம் செய்யப்பட்டு, கடந்த சில நாட்களுக்கு முன்புதான் ஐஸ்வர்யா கணவர் வீட்டிற்கு அனுப்பப்பட்டார். ஆனால் அங்கேயும் அவருக்கு அமைதி கிடைக்கவில்லை.

சம்பவத்தன்று இரவு அனைவரும் உறங்கிய பிறகு, ஐஸ்வர்யா தனது இரண்டு குழந்தைகளையும் கொன்றுவிட்டு, தானும் மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

மறுநாள் காலையில் அவரது மாமியார் சத்தம்மா இதைப் பார்த்துப் போலீசாருக்குத் தகவல் அளித்தார்.

சம்பவ இடத்தில் ஐஸ்வர்யா எழுதிய இரண்டு கடிதங்கள் சிக்கியுள்ளன. அதில், “என் நடத்தையில் சந்தேகம் இருந்தால், என் மகனின் டி.என்.ஏ-வை பரிசோதனை செய்து பார்த்துக் கொள்ளுங்கள்” என்று தனது

நடத்தையைச் சந்தேகித்த கணவனுக்குக் கடிதம் மூலம் பதிலடி கொடுத்துள்ளார். தனது மரணத்திற்குத் தனது கணவர், மாமனார், மாமியார் மற்றும் மைத்துனிகளே காரணம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இன்னொரு கடித்தத்தில் தனது தந்தைக்கு, “அப்பா, மீண்டும் ஒரு ஜென்மம் இருந்தால் உனக்கு மகனாகப் பிறக்கிறேன். பெண்ணாகப் பிறந்து வாழ்வது இந்த உலகில் அசாத்தியமானது. அவர்கள் நீங்கள் கொடுத்த 32 லட்சம் வரதட்சணை மற்றும் 30 சவரன் நகையைத் தான் பார்த்தார்கள்,

என்னை அல்ல” என்று உருக்கமாக எழுதியுள்ளார். போலீசார் இரண்டு கடிதங்களையும் பறிமுதல் செய்து, வரதட்சணை கொடுமை மற்றும் தற்கொலைக்குத் தூண்டுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குடும்பப் பிரச்சனைகள் அல்லது மன அழுத்தத்தால் பாதிக்கப்படுபவர்கள் தற்கொலை எண்ணம் தோன்றினால், சினேகா (044-24640050) அல்லது மாநில அரசின் உதவி எண் 104-ஐத் தொடர்புகொண்டு ஆலோசனை பெறலாம்.

நடிகர் விஜய் விவாகரத்து வழக்கில் புதிய திருப்பம் : மனைவி சங்கீதா புதிதாக மனு தாக்கல்!!

தமிழக அரசியலிலும், சினிமா வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நடிகர் மற்றும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையிலான விவாகரத்து வழக்கில் புதிய திருப்பமாக சங்கீதா புதிதாக மனு தாக்கல் செய்துள்ளார்.

சுமார் 27 ஆண்டு கால திருமண வாழ்க்கைக்குப் பிறகு, நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா, செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்தத் தகவல் பிப்ரவரி 27, 2026 அன்று அதிகாரப்பூர்வமாகப் பல ஊடகங்களில் வெளியாகித் தமிழகத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. சங்கீதா தனது மனுவில் விஜய்க்கு எதிராகப் பல்வேறு தீவிரமான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

விஜய் ஒரு பிரபல நடிகையுடன் நெருக்கமான தொடர்பில் இருந்ததாகவும், பலமுறை எச்சரித்தும் அந்தத் தொடர்பைக் கைவிடவில்லை என்றும் சங்கீதா தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

விஜய் தனக்குப் போதுமான நிதி சுதந்திரம் அளிக்கவில்லை என்றும், சில அடிப்படை வசதிகளைத் தடுத்ததாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

கடந்த 5 ஆண்டுகளாகத் தாங்கள் மனதளவில் பிரிந்து வாழ்ந்து வருவதாகவும், விஜய்யின் நடவடிக்கைகள் தனக்கும் தனது பிள்ளைகளுக்கும் பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தனது சமூக அந்தஸ்து மற்றும் விஜய்யின் வருமானத்திற்கு ஏற்பப் போதுமான ஜீவனாம்சம் மற்றும் பராமரிப்புச் செலவு வழங்க வேண்டும் என்றும், நீலாங்கரையில் உள்ள அவர்களது இல்லத்திலேயே தான் வசிக்க அனுமதிக்க வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.

சங்கீதாவின் இந்த மனுவை ஏற்றுக்கொண்ட செங்கல்பட்டு நீதிமன்றம், இது குறித்த அடுத்தகட்ட விசாரணையை ஏப்ரல் 20ம் தேதிக்குத் தள்ளிவைத்துள்ளது.

அன்று நடைபெறும் விசாரணைக்கு நடிகர் விஜய் நேரில் ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

விஜய் தற்போது ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற கட்சியைத் தொடங்கி, 2026 சட்டமன்றத் தேர்தலுக்குத் தீவிரமாகத் தயாராகி வருகிறார்.

இந்த இக்கட்டான நேரத்தில் அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள இந்தச் சிக்கல், அவரது அரசியல் பயணத்தில் ஏதேனும் தாக்கத்தை ஏற்படுத்துமா என்ற விவாதங்கள் எழுந்துள்ளன.

இருப்பினும், இது அவரது தனிப்பட்ட விஷயம் என்றும், இதற்கும் அரசியலுக்கும் சம்பந்தமில்லை என்றும் அவரது ஆதரவாளர்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

மத்திய கிழக்கில் பதற்றநிலை : ஆட்டம்காணும் தங்கத்தின் விலை – ஒரே நாளில் ஏற்பட்ட மாற்றங்கள்!!

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள பதற்றநிலை காரணமாக இலங்கையில் இரண்டு முறை தங்கவிலை அதிகரித்துள்ளது.

இன்று காலை 410,000 ரூபாயாக இருந்த தங்கவிலை மாலையில் 2,000 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

அந்தவகையில், இலங்கையில் தற்போதைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 412,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 381,000 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

உலக சந்தையில் இன்றைய தினம் (07.03.2026) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 5170 முதல் 5190 வரை உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை நேற்றைய தினம் 5136 அமெரிக்க டொலர்களாகவும், நேற்று முன் தினம் 5,062.14 அமெரிக்க டொலர்களாகவும் பதிவாகியிருந்தது.

அத்துடன் கொழும்பு செட்டியார்தெரு தகவல்களின்படி இன்றைய தினம் 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 379200 ரூபாவாக பதிவாகியுள்ளது.

மேலும் 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 410000 ரூபாவாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை முன்னெப்போதையும் விட மிக அதிக உயர்வைக் கண்டுள்ளதால், ஆசியாவின் மிகப்பெரிய தங்கச் சந்தைகளில் ஒன்றான இந்தியாவில் அதன் தேவை பெருமளவு குறைந்துள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றம் மற்றும் உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற தன்மையால், தங்கத்தின் விலை ஒரு அவுன்ஸ் 5,100 டொலர்களுக்கு மேல் வர்த்தகமாகி வருகிறது.

இந்தியாவில் இந்த அதீத விலை உயர்வு மற்றும் விலையில் காணப்படும் நிலையற்ற தன்மை காரணமாக, பொதுமக்கள் மற்றும் நகை வியாபாரிகள் புதிய தங்கத்தை வாங்குவதில் ஆர்வம் காட்டவில்லை.

இதனால் இந்திய சந்தையில் தங்கத்திற்கான தள்ளுபடி அதிகரித்துள்ள போதிலும், விற்பனை மந்தமாகவே உள்ளது. மறுபுறம், உலகின் மிகப்பெரிய தங்க நுகர்வு நாடான சீனாவில் நிலைமை சற்று வித்தியாசமாக உள்ளது.

சீனாவில் பங்குச் சந்தை மற்றும் ரியல் எஸ்டேட் துறைகளில் நிலவும் மந்தநிலை காரணமாக, அந்நாட்டு முதலீட்டாளர்கள் தங்களின் பணத்தைப் பாதுகாப்பதற்கான சிறந்த வழியாகத் தங்கத்தையே கருதுகின்றனர்.

இதனால் விலை அதிகமாக இருந்தபோதிலும், சீனாவில் தங்கத்திற்கான முதலீட்டுத் தேவை குறையாமல் சீராக உள்ளது. இருப்பினும், விலை உயர்வு காரணமாக நகை வடிவில் தங்கம் வாங்குவது அங்கும் சற்றே பாதிக்கப்பட்டுள்ளது.

வரும் நாட்களில் அமெரிக்காவின் வேலைவாய்ப்பு தரவுகள் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் போர் சூழலைப் பொறுத்தே தங்க விலையில் அடுத்தகட்ட மாற்றம் இருக்கும் என்று பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர்.

கறிவேப்பிலையில் மறைந்துள்ள நன்மைகள் என்னென்ன தெரியுமா?

கறிவேப்பிலை தினமும் சாப்பிட்டால் முடி வளர்ச்சிக்கு உதவும் என எல்லோரும் அறிந்த ஒரு விடயம் ஆகும். இருப்பினும் கருவேப்பிலை பற்றி அறிந்து கொள்ளாத சில விடயங்களை பற்றி தெரிந்து கொள்வோம்.

கறிவேப்பிலையை தினசரி உணவில் சேர்த்து வந்தால், தற்போது பல சந்திக்கும் மூட்டு தொடர்பான பிரச்சனைகள் வருவதைத் தடுக்கலாம். அதுவும் இந்த கறிவேப்பிலையுடன் ஒருசில பொருட்களை சேர்த்து உட்கொள்ளும் போது,

உடலுக்கு கால்சியம் போதுமான அளவு கிடைத்து, எலும்புகள் வலுவடையும். இப்போது எந்த உணவுப் பொருட்களை கறிவேப்பிலையுடன் சேர்த்து சாப்பிட்டால், இரட்டிப்பு கல்சியம் கிடைக்கும் என்பதை நாம் இங்கு பார்க்கலாம்.

எள்ளு விதைகள்

எள்ளு விதைகளில் கால்சியம் அதிகம் உள்ளது. அதுவும் 1 டேபிள் ஸ்பூன் எள்ளு விதைகளில் 88 மிகி கால்சியம் உள்ளது. இது எலும்புகள், பற்கள் மற்றும் தசைகளின் செயல்பாட்டிற்கு உதவி புரிகிறது.

மேலும் இவற்றில் ஆரோக்கியமான கொழுப்புக்கள், நார்ச்சத்து, ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் போன்றவை உள்ளன.

சிறந்த அளவில் கால்சியத்தைப் பெற எள்ளு விதைகளையும், கறிவேப்பிலையையும் வறுத்து பொடி தயாரித்து, சாதத்துடன் அல்லது இட்லி, தோசையுடன் சேர்த்து சாப்பிடலாம்.

ராகி

தானியங்களிலேயே ராகியில் கால்சியம் ஏராளமான அளவில் உள்ளன. அதுவும் 100 கிராம் ராகியில் சுமார் 344 மிகி கால்சியம் உள்ளன. அதுவும் மற்ற தானியங்களை விட ராகியில் தான் கால்சியம் அதிகம் உள்ளது.

சிறந்த அளவில் கால்சியத்தைப் பெற ராகி மாவுடன், கறிவேப்பிலையை வறுத்து சேர்த்து தோசையாகவோ அல்லது ரொட்டியாகவோ அல்லது கஞ்சியாகவோ உட்கொள்ளலாம்.

பன்னீர்

பன்னீர் கால்சியம் அதிகம் நிறைந்த உணவுப் பொருட்களுள் ஒன்று. அதுவும் 100 கிராம் பன்னீரில் 200-250 மிகி கால்சியம் உள்ளது. இது பற்கள் மற்றும் எலும்புகளை வலிமையாக வைத்துக் கொள்ளவும்,

தசைகளின் செயல்பாட்டை ஆதரிக்கவும், நரம்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. சிறந்த அளவில் கால்சியத்தைப் பெற பன்னீருடன் கறிவேப்பிலையை சேர்த்து சாப்பிடலாம்.

பாதாம்

உடலில் கால்சியத்தை அதிகரிக்க பாதாமை உட்கொள்வது சிறந்த வழியாகும். 100 கிராம் பாதாமில் 264 மிகி கால்சியம் உள்ளது. அதோடு, இதில் வைட்டமின் ஈ, மக்னீசியம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புக்களும் உள்ளன.

இவை அனைத்தும் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது. சிறந்த அளவில் கால்சியத்தைப் பெற பாதாமுடன், கறிவேப்பிலையை சேர்த்து சட்னி தயாரித்தோ அல்லது சாலட்டுகளின் மேல் தூவியோ உட்கொள்ளலாம்.

முருங்கைக்கீரை

முருங்கைக்கீரையிலும் கால்சியம் அதிகம் உள்ளது. அதுவும் 100 கிராம் முருங்கைக்கீரையில் 440 மிகி கால்சியம் உள்ளது. சொல்லப்போனால் மற்ற உணவுகளை விட அதிகளவு கால்சியம் இந்த கீரையில் உள்ளது.

இந்த கீரையை தொடர்ந்து உட்கொண்டு வந்தால், எலும்புகள் மற்றும் பற்கள் வலுவடைவதோடு, மூட்டுகளின் ஆரோக்கியம் மேம்படும் மற்றும் கால்சியம் குறைபாட்டினால் வரக்கூடிய ஆஸ்டியோபோரோசிஸை தடுக்கிறது.

சிறந்த அளவில் கால்சியம் சத்தைப் பெற முருங்கைக்கீரையுடன் கறிவேப்பிலையை சேர்த்து சப்ஜி செய்தோ, பொரியலாகலோ சாப்பிடலாம்.

 

நாட்டில் வெப்பநிலை தொடர்பில் விடுக்கப்பட்ட எச்சரிக்கை!!

நாட்டில் வெப்பநிலை அதிகரிப்பு தொடர்பில் இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சபரகமுவ மாகாணம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல மாவட்டங்களில் இன்று (6) வெப்பச் சுட்டெண் (Heat Index) கணிசமாக அதிகரிக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர்.

போதிய அளவு தண்ணீர் குடிப்பது, வெளிர் நிற ஆடைகளை அணிவது மற்றும் வெப்பம் அதிகமாக இருக்கும் நேரங்களில் கடினமான உடற்பயிற்சிகளைத் தவிர்ப்பது போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

வெப்பச் சுட்டெண் என்பது வெறும் காற்றின் வெப்பநிலையை மட்டும் குறிக்காமல், ஈரப்பதத்தையும் கருத்தில் கொண்டு மனித உடலால் உணரக்கூடிய வெப்பநிலையைப் பிரதிபலிக்கிறது என்று திணைக்களம் தெளிவுபடுத்தியுள்ளது.

முதியவர்கள் போன்ற பாதிப்புக்குள்ளாகக்கூடிய நபர்களைக் கண்காணிப்பதன் முக்கியத்துவத்தை அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

அதிக வெப்பம் நிலவும் காலங்களில் குழந்தைகளை வாகனங்களுக்குள் தனியாக விட்டுச் செல்ல வேண்டாம் என்றும் , மக்கள் தங்கள் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இலங்கையில் குறைவடைந்த தங்கவிலை!!

இலங்கையில் தங்கம் விலையானது இன்று சற்று குறைவடைந்துள்ளதாக இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள பதற்றநிலை காரணமாக சர்வதேச சந்தையிலும் இலங்கையிலும் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிறது.

அதன்படி நேற்றுடன் ஒப்பிடுகையில் இன்று (06) தங்க விலை 2,000 ரூபாயால் குறைந்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

அந்தவகையில், இலங்கையில் தற்போதைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 406,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

22 கரட் தங்கம் பவுண் ஒன்று 375,500 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது. இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 50,750 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 46,938 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

வெளிநாட்டிற்குத் தப்பிச் சென்றவரின் 2 கோடி பெறுமதியான சொத்துக்கள் முடக்கம்!!

வெளிநாட்டிற்குத் தப்பிச் சென்று தலைமறைவாக இருக்கும்பாணந்துறை குடு சலிந்து என்ற சலிந்து மல்சித்தவுக்கு சொந்தமான சுமார் 2 கோடி ரூபாய் பெறுமதியான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன.

பாதாள உலகக் குழுத் தலைவரும், பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரருமான சலிந்து மல்சித்தவின் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினர் இது தொடர்பான விரிவான தகவல்களை வெளியிட்டுள்ளனர்.

பாணந்துறை – இரத்தினபுரி வீதியில், மகாபெலன சந்தியில் அமைந்துள்ள 40 பேர்ச் காணி, அதில் உள்ள ஒரு வீடு, களஞ்சியத் தொகுதி மற்றும் ஒரு கடைத் தொகுதி ஆகியவை இவ்வாறு முடக்கப்பட்டுள்ளன.

வெளிநாட்டில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட குடு சலிந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில் மீண்டும் ரகசியமாக வெளிநாட்டிற்குத் தப்பிச் சென்றுள்ளார்.

போதைப்பொருள் கடத்தல் மூலம் உழைத்த பணத்தில் இந்தச் சொத்துக்கள் கொள்வனவு செய்யப்பட்டதாக கூறப்படும் நிலையில், சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு மேற்கொண்ட நீண்டகால விசாரணையைத் தொடர்ந்து சொத்துக்களை முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் குடு சலிந்து மற்றும் பாணந்துறை குடு நிலங்க ஆகிய இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல்கள் காரணமாக பாணந்துறை தெற்கு, ஹிரண மற்றும் பின்வத்தை ஆகிய பகுதிகளில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் இடம்பெற்று பலர் கொல்லப்பட்டனர்.

குடு நிலங்க உள்ளிட்ட குழுவினர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதை அடுத்து இந்த மோதல்கள் ஓரளவுக்குக் குறைவடைந்துள்ளன.

தற்போது வெளிநாடொன்றில் தலைமறைவாக இருக்கும் குடு சலிந்து தொடர்பாகவும், அவரது சொத்துக்கள் குறித்தும் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

யாழில் பெரும் துயரம் : அந்தோனியாரை தரிசிக்க சென்றவர்களுக்கு நேர்ந்த கதி!!

யாழ்ப்பாணம் குருநகர் இறங்குதுறையிலிருந்து புதிய அந்தோனியர் ஆலயத்திற்குப் புறப்பட்ட படகு ஒன்று நீரில் மூழ்கி விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்துச் சம்பவம் சற்று முன்னர் இடம்பெற்றுள்ளதாக தெரிவிகபப்டுகின்றது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில் “ஆலயத்திற்குச் சென்ற பயணிகள் படகு ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. படகில் முதியவர்கள், சிறுவர்கள், பெண்கள் எனப் பலர் நீரில் மூழ்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்தநிலையில், அவர்களை மீட்கும் நடவடிக்கைகளில் அப்பிரதேச கடற்றொழிலாளர்கள் உடனடியாக ஈடுபட்டுள்ளனர். இதில் மூன்று பேர் கரைக்குக் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மேலும், தேடுதல் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், படகு விபத்தால் அங்கு பரபரப்பான சூழல் உருவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இரண்டாம் இணைப்பு : நீரில் மூழ்கியவர்களில் 04 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் பணிப்பாளர் மருத்துவர் ரி.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களில் மூன்று பேருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

மற்றையவர் சாதாரண விடுதியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முன்னதாக, பாலைதீவுக்கு இன்று முற்பகல் பயணித்த, பயணிகள் படகொன்று விபத்துக்குள்ளானதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

அதேநேரம், படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பாதிக்கப்பட்ட மேலும் சிலர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுவதாகவும் காவல்துறையினர் குறிப்பிட்டனர்.

கோர விபத்தில் பலியான இரண்டு சிறுவர்கள்!!

புத்தளம், மதுரங்குளிய பொலிஸ் பிரிவின் கிளிமடுச்சேனை பகுதியில் நேற்று இடம்பெற்ற இந்த விபத்தில், 2 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். கிளிமடுச்சேனை பகுதியைச் சேர்ந்த 8 மற்றும் 13 வயதுடைய இரண்டு சிறுவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

மதுரங்குளியவில் இருந்து ரணவிரு வசந்த மாவத்தை வழியாக குருங்கன்வெட்டிய நோக்கி பயணித்த லொறி, எதிர் திசையில் இருந்து வந்த இரு சிறுவர்கள் பயணித்த சைக்கிளில் மோதியது.

அப்போது இரண்டு சிறுவர்கள் பலத்த காயமடைந்து புத்தளம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதோடு, மதுரங்குளிய பொலிஸாரால் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

உண்மையான ஆபத்து இதுவே : தயார் நிலையில் இலங்கை – ஜனாதிபதியின் புதிய அறிவிப்பு!!

விரோதங்களை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒவ்வொரு அடியையும் ஆதரிக்க இலங்கை தயாராக உள்ளது என இலங்கை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அறிவித்துள்ளார்.

எக்ஸ் தள பதிவொன்றில் இன்றைய தினம் அவர் குறித்த விடயத்தை கூறியுள்ளார். அதில் மேலும், எந்தவொரு குடிமகனும் போர்களில் இறக்கக்கூடாது. ஒவ்வொரு உயிரும் ஒருவரின் சொந்தத்தைப் போலவே விலைமதிப்பற்றது.

மனிதாபிமான விழுமியங்களும் உயிர்களைக் காப்பாற்றுவதும் எங்கள் முன்னுரிமையாக இருப்பதை உறுதி செய்யும் அதே வேளையில், எங்கள் அணிசேரா கொள்கையை நாங்கள் பெருமையுடன் பாதுகாக்கிறோம்.

இன்று உலகிற்கு அவசரமாகத் தேவைப்படுவது அமைதி. கடுமையான உலகளாவிய பொருளாதார நெருக்கடியின் உண்மையான ஆபத்து உள்ளது, மேலும் முழு சமூகங்களும் கடுமையான மற்றும் சிக்கலான சவால்களை எதிர்கொள்கின்றன.

அமைதிக்கான உறுதியான அர்ப்பணிப்பை நிரூபிக்க அனைத்து தரப்பினரையும் நாங்கள் அழைக்கிறோம். ஒரு நாடாக, விரோதங்களை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒவ்வொரு அடியையும் ஆதரிக்க இலங்கை தயாராக உள்ளது.

எங்கள் அனைத்து நடவடிக்கைகளும் உயிர்களைக் காப்பாற்றுவதையும் மனிதநேயம் மேலோங்குவதை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன என சுட்டிக்காட்டியுள்ளார்.

இரகசிய தகவலின் அடிப்படையில் 500 லீட்டர் மண்ணெண்ணெய் உடன் வசமாக சிக்கிய நபர்!!

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை மந்திகை எரிபொருள் நிரப்பு நிலையம் அருகே மண்ணெண்ணெய் பதுக்க முயன்ற சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று முன் தினம் இடம்பெற்றுள்ளதுடன், இதன்போது மண்ணெண்ணெய் பதுக்க பயன்படுத்த பயன்படுத்திய வாகனமும் கைப்பற்றப்பட்டுள்ளது.

பருத்தித்துறை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சந்தேகநபர் சிக்கியுள்ளார்.

சுமார் 500 லீட்டர் மண்ணெண்ணையை மந்திகை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் அருகாமையில் இருந்து கொண்டு செல்ல முற்பட்ட போது இந்த கைது சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர், அவரின் வாகனம் மற்றும் எரிபொருளுடன் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக இன்றைய தினம் பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

பதற்றத்தினால் அவசரமாக மூடப்பட்டுள்ள வான்பரப்புகள் : இலங்கையிலும் நூற்றுக்கணக்கான விமானங்கள் இரத்து!!

மத்திய கிழக்கில் நடந்து வரும் போருக்கு மத்தியில், இலங்கை எயார்லைன்ஸ் இயக்கும் விமானங்கள் இன்றும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக இலங்கை எயார்லைன்ஸ் தெரிவித்துள்ளது.

இருப்பினும், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள ஷார்ஜா, மஸ்கட் மற்றும் சயீத் ஆகிய இடங்களுக்கு இன்று 6 விமானங்கள் இயக்கப்படும் என்று சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் இயக்குநர் ஜெனரல் தமிந்த ரம்புக்வெல்லா தெரிவித்துள்ளார்.

மேலும், தற்போதைய சூழ்நிலை காரணமாக கடந்த 28 ஆம் திகதி முதல் மத்திய கிழக்கு நாடுகளுக்கான 288 விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் கொழும்புக்கும் லண்டனுக்கும் இடையே 8 ஆம் திகதி கூடுதல் விமானத்தை இயக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அறிவித்ததுள்ளது.

மத்திய கிழக்கில் தற்போதைய நெருக்கடி சூழ்நிலை காரணமாக விமானங்கள் இரத்து செய்யப்பட்டதால் சிரமத்திற்கு உள்ளான பயணிகளுக்கு உதவ இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தெரிவித்துள்ளது.

அதன்படி, கூடுதல் விமான எண் UL1205, 8 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 06:50 மணிக்கு கொழும்பிலிருந்து புறப்பட்டு அதே நாளில் பிற்பகல் 13:10 மணிக்கு லண்டனை வந்தடையும்.

அதன் திரும்பும் விமானமான UL1206, அதே நாளில் பிற்பகல் 15:05 மணிக்கு லண்டனில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 06:55 மணிக்கு கொழும்புவை வந்தடையும். ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தற்போதைய நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருகின்றது.

மேலும் பயண இடையூறுகளை சந்தித்தவர்களுக்கு உதவ தேர்ந்தெடுக்கப்பட்ட வழித்தடங்களில் கூடுதல் விமானங்களை இயக்க திட்டமிட்டுள்ளது என்று விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, எமிரேட்ஸ் நிறுவனம் மறு அறிவிப்பு வரும் வரை வரையறுக்கப்பட்ட விமான அட்டவணையை இயக்கும் என்று அறிவித்துள்ளது.

பிராந்திய வான்வெளி பகுதியளவு மீண்டும் திறக்கப்பட்ட பிறகு வணிக விமானங்களை பாதுகாப்பாக மீண்டும் தொடங்க இந்த அட்டவணை செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மார்ச் 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் வுஹானில் இருந்து 100க்கும் மேற்பட்ட விமானங்கள் புறப்பட்டு திரும்ப திட்டமிடப்பட்டுள்ளது.

பாதுகாப்புக்கு எப்போதும் முதன்மையான முன்னுரிமையாக இருக்கும் என்றும், வான்வெளி திறக்கப்படும்போது அனைத்து செயல்பாட்டுத் தேவைகளும் பூர்த்தி செய்யப்பட்டவுடன் அதன் விமான அட்டவணையை படிப்படியாக மீண்டும் கட்டமைக்கும் என்றும் எமிரேட்ஸ் மேலும் கூறியுள்ளது.