வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த 2 சிறுமிகள் இரும்பு கேட் விழுந்து பலி!!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே விளையாடிக் கொண்டிருந்த போது வீட்டின் இரும்பு கேட் மற்றும் தூண் சரிந்து விழுந்ததில், பெண் காவலரின் மகள் மற்றும் அவரது உறவினர் சிறுமி என இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

சிவகாசி அருகே கொங்கலாபுரத்தைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரி. இவர் சிவகாசி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றி வருகிறார்.

இவருடைய கணவர் ராஜாமணி வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இந்தத் தம்பதிக்கு கவின் (11) என்ற மகனும், கமலிகா (6) என்ற மகளும் உள்ளனர்.

தற்போது பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை விடப்பட்டுள்ளதால், ராஜேஸ்வரியின் சகோதரியும் செவிலியருமான தனலட்சுமி, தனது குழந்தைகளுடன் சிவகாசியில் உள்ள ராஜேஸ்வரி வீட்டிற்கு வந்துள்ளார்.

ராஜேஸ்வரி பணிக்குச் சென்றிருந்த நிலையில், வீட்டில் குழந்தைகள் அனைவரும் விளையாடிக் கொண்டிருந்தனர்.

ராஜேஸ்வரியின் மகள் கமலிகா (6) மற்றும் அவரது சகோதரி மகள் லசிகா (4) ஆகிய இருவரும் வீட்டின் முன்புறம் உள்ள பெரிய இரும்பு கேட்டில் ஏறி ஊஞ்சலாடி விளையாடிக் கொண்டிருந்தனர்.

எதிர்பாராத விதமாக, பாரம் தாங்காமல் கேட் பொருத்தப்பட்டிருந்த சிமெண்ட் சுவர் தூண் திடீரென இடிந்து சரிந்தது. தூணுடன் சேர்ந்து அந்த கனமான இரும்பு கேட் இரண்டு சிறுமிகள் மீதும் அப்படியே விழுந்தது.

இடிபாடுகளுக்குள் சிக்கி பலத்த காயமடைந்த இரண்டு சிறுமிகளும் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர்.  குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த உறவினர்களும் அக்கம் பக்கத்தினரும், சிறுமிகளை மீட்க முயன்றனர்.

ஆனால் அதற்குள் அவர்கள் உயிர் பிரிந்திருந்தது. இது குறித்த தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், சிறுமிகளின் உடல்களைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பிஞ்சுக் குழந்தைகள் விடுமுறை நாளில் உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியையே கண்ணீர் கடலில் மூழ்கடித்துள்ளது.

அரையாண்டு விடுமுறை காலங்களில் குழந்தைகள் வீட்டில் இருக்கும்போது, இத்தகைய விபத்துகளைத் தவிர்க்கப் பெற்றோர்கள் கவனிக்க வேண்டியவை:

வீட்டின் இரும்பு கேட்டுகள் துருப்பிடிக்காமல் இருக்கிறதா, தூண்கள் வலுவாக இருக்கிறதா என்பதை அவ்வப்போது சோதிக்க வேண்டும். குழந்தைகள் இரும்பு கேட்டில் ஏறித் தொங்குவதையோ அல்லது ஊஞ்சலாடுவதையோ கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.

குழந்தைகள் விளையாடும்போது பெரியவர்கள் யாராவது ஒருவர் அருகில் இருந்து கண்காணிப்பது அவசியம். பழைய கட்டிடங்கள் அல்லது முறையாகப் பராமரிக்கப்படாத தூண்கள் இருக்கும் இடங்களில் குழந்தைகளை விளையாட அனுமதிக்கக் கூடாது.

சகோதரனுடன் சண்டை : வீட்டை விட்டு வெளியேறிய சிறுவன் குளத்தில் சடலமாக மீட்பு!!

கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டம் எர்மன்கோடு பகுதியில், அண்ணனுடன் விளையாட்டாக ஏற்பட்ட சண்டையில் வீட்டை விட்டு வெளியேறிய 6 வயது சிறுவன் சுஹன், குளத்தில் மூழ்கி உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளான்.

எர்மன்கோடு பகுதியைச் சேர்ந்த முகமது அனீஸ் – துஹிடா தம்பதியினருக்கு ரயன் மற்றும் சுஹன் (6) என இரு மகன்கள் உள்ளனர். தந்தை வெளிநாட்டில் வேலை பார்த்து வர, தாய் துஹிடா ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறார்.

நேற்று துஹிடா வெளியே சென்றிருந்த நேரத்தில், அண்ணன் ரயனுக்கும் தம்பி சுஹனுக்கும் இடையே டிவி பார்ப்பதில் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இந்தச் சண்டையில் கோபித்துக் கொண்ட சிறுவன் சுஹன், அழுதுகொண்டே வீட்டை விட்டு வெளியேறியுள்ளான்.

மாலை வீட்டிற்குத் திரும்பிய தாய், சுஹன் இல்லாததைக் கண்டு அதிர்ச்சியடைந்து அண்ணனிடம் விசாரித்தபோது, சண்டையிட்டு வெளியே சென்ற விவரம் தெரியவந்தது.

உடனடியாகத் தாய் மற்றும் உறவினர்கள் அக்கம் பக்கத்தில் தேடியும் சுஹன் கிடைக்காததால், காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் மற்றும் கிராம மக்கள் இணைந்து பல மணி நேரம் தேடுதல் வேட்டை நடத்தினர்.

இறுதியில், வீட்டிலிருந்து சுமார் 800 மீட்டர் தொலைவில் உள்ள ஒரு குளத்தில் சிறுவன் சுஹன் சடலமாகக் கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. சிறுவனின் உடலை மீட்ட போலீசார், அதனைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

அண்ணனுடன் கோபித்துச் சென்ற சிறுவன், குளத்தில் தவறி விழுந்து உயிரிழந்தானா அல்லது மன உளைச்சலில் குளத்தில் குதித்தானா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரு சிறிய விளையாட்டுத் தகராறு பிஞ்சுயிரைப் பறித்த இச்சம்பவம் அந்த கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

19 வயதில் 8 ஆண்களுடன் திருமணம் : பணத்திற்காக நடந்த மோசடி!!

19 வயது, பணம் பறிக்கும் நோக்கில், 8 ஆண்களை திருமணம் செய்து மோசடி செய்துள்ளார். ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டம் இச்சாபுரம் நகரின் கர்ஜி தெருவை சேர்ந்த 19 வயதான முத்திரெட்டி வாணி என்ற பெண்ணுக்கும், கர்நாடகாவை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் ஸ்ரீகாக்குளம் மாவட்டத்தில் சோம்பேட்டில் அமைந்துள்ள துர்கா தேவி கோயிலில் கடந்த சில வாரத்திற்கு முன்னர் திருமணம் நடைபெற்றது.

திருமணத்திற்கு பின்னர் ரயில் மூலம் மணமகன் ஊருக்கு சென்ற போது, விசாகப்பட்டினம் ரயில் நிலையம் வந்ததும், கழிவறைக்கு செல்வதாக ரெயிலில் இருந்து இறங்கிய வாணி மீண்டும் ரயிலில் ஏறவில்லை. இதனையடுத்து, புது மனைவியை காணாமல் பதறிய நபர் அவரை, தேடி அலைந்தார்.

வாணி மாயமானது குறித்து இச்சாபுரத்தில் உள்ள வாணியின் அத்தை சத்யா வீட்டில் தகவல் தெரிவிக்கச் சென்ற போது, வாணி அங்கிருந்ததை கண்டு மணமகன் தரப்பினர் அதிர்ச்சியடைந்தனர்.

மணமகன் வீட்டார் வாணியின் குடும்பத்துக்கு திருமண செலவுக்காக கொடுத்த ரூ.1 லட்சம் பணத்திற்காக தான் திருமணம் செய்தது தெரிய வந்தது.

இதனையடுத்து, மணமகன் தரப்பினர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அதிர்ச்சிகர தகவல்கள் வெளியானது.

சிறுவயதிலே பெற்றோரை இழந்த வாணியை அவரது தாய் வழி அத்தையான சத்யா என்பவரே வளர்த்து வந்துள்ளார்.

கர்நாடக நபர் உட்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 8 ஆண்களை திருமணம் செய்து, அதன் பின்னர் அவர்களிடம் நகை மற்றும் பணத்தை பறித்து விட்டு மாயமாகியுள்ளனர்.

வாணி அப்போது மைனர் பெண் என்பதால், பணத்தை பறித்தது குறித்து புகார் அளித்தால் மைனர் பெண்ணை திருமணம் செய்ததற்காக தங்கள் மீதும் வழக்கு பாயும் என யாரும் புகார் அளிக்கவில்லை.

தற்போது தலைமறைவாகியுள்ள வாணி மற்றும் சத்யாவை தனிப்படை காவல்துறை தேடி வரும் நிலையில், ஏற்கனவே அவரை திருமணம் செய்து பணத்தை இழந்த நாகிரெட்டி மற்றும் கேசவ ரெட்டி ஆகிய இருவரும் காவல் நிலையில் புகார் அளித்துள்ளனர்.

ஆற்றில் கவிழ்ந்து கார் விபத்து : மூவர் காயம்!!

அம்பாறை, பக்கிஎல்ல, ரஜகலதென்ன பிரதேசத்தில் பாலத்திலிருந்து ஆற்றில் கவிழ்ந்து கார் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை (28.12.2025) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் காரில் பயணித்த சாரதி உட்பட மூவர் காயமடைந்துள்ள நிலையில்,

கொனகொல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் காரின் சாரதி மேலதிக சிகிச்சைக்காக அம்பாறை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

2026 இல் வானில் நிகழ்வுள்ள அதிசயம் : கண்களைப் பறிக்கும் காட்சி!!

வரவிருக்கும் 2026ஆம் ஆண்டு ஓர் அற்புதமான வானியல் விருந்துடன் தொடங்கவுள்ளது. வழக்கத்தை விடப் பெரியதாகவும், அதீத பிரகாசத்துடனும் ஒரு முழு நிலவு நம் கண்களுக்கு விருந்தளிக்கப் போகிறது.

2026ஆம் ஆண்டின் முதல் பௌர்ணமி தினமான ஜனவரி 3ஆம் திகதி இந்த ‘ஓநாய் சூப்பர் மூன்’ (wolf-supermoon) நிகழ்வு வானில் அரங்கேற உள்ளது.

உலகெங்கிலும் உள்ள மக்கள் அனைவரும் இந்த அழகிய காட்சியைக் கண்டு ரசிக்கலாம். ஏன் இதற்கு ‘ஓநாய் சூப்பர் மூன்’ என்று பெயர் வந்தது தெரியுமா?

ஜனவரி மாதத்தில் நிலவும் கடும் பனிப்பொழிவின் போது, உணவிற்காக அலைந்து திரியும் ஓநாய்களின் சத்தம் (ஊளையிடுதல்) வழக்கத்தை விட அதிகமாகக் கேட்கும்.

பழங்கால நம்பிக்கைகள் மற்றும் அதன் அடிப்படையில் உருவான காரணங்களால், ஜனவரி மாத முழு நிலவை ‘ஓநாய் நிலவு’ (Wolf Moon) என்று அழைக்கின்றனர்.

சூப்பர் மூன் – அப்படி என்ன சிறப்பு? இந்த நிலவு ஏன் மற்ற பௌர்ணமிகளை விடச் சிறப்பு வாய்ந்தது என்பதற்கு அறிவியல் பூர்வமான காரணம் ஒன்று உண்டு.

நிலவு பூமியைச் சுற்றி வரும் பாதையில், பூமிக்கு மிக அருகில் வரும் நிலையை அடையும் போது இந்த ‘சூப்பர் மூன்’ நிகழ்கிறது.

பூமிக்கு அருகில் வருவதால், வழக்கமான பௌர்ணமி நிலவை விட இது அளவில் பெரியதாகத் தெரியும். நிலவின் ஒளி வழக்கத்தை விட மிக அதிக பிரகாசமாகவும், தெளிவாகவும் காட்சியளிக்கும்.

ஜனவரி 3ஆம் திகதி அன்று இரவு மறக்காமல் வானத்தைப் பாருங்கள். இயற்கையின் இந்த மாபெரும் இயற்கையின் கலைப்படைப்பைக் கண்டு ரசிக்கத் தவறாதீர்கள்.

முல்லைத்தீவு சிறுமி டினோஜாவின் மரணத்திற்கு நீதி கோரி போராட்டம்!!

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி டினோஜாவின் மரணத்திற்கு நீதிகோரி தற்போது கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது. முல்லைத்தீவு மாவட்ட மாஞ்சோலை வைத்தியசாலைக்கு முன்பாக இன்று(29.12.2025) இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இதன்போது, முல்லைத்தீவு மக்களின் கோரிக்கைகள் அடங்கிய கடிதம் ஒன்று, ஜனாதிபதி செயலகத்திற்கும் அதன் பிரதிகள் சுகாதார அமைச்சர், செயலாளர் நாயகம், சுகாதார பணிமனை,

வடமாகாண ஆளுனர் அலுவலகம், முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் அலுவலகம், முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை ஆகியவற்றிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அத்துடன், போராட்டத்திற்கு பொலிஸார் பாதுகாப்பு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முதலாம் இணைப்பு

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சையின்போது உயிரிழந்த சிறுமி டினோஜாவுக்கு நீதி கோரி ஆர்ப்பாட்டமொன்று இடம்பெறவுள்ளது. குறித்த ஆர்ப்பாட்டமானது இன்றையதினம்(29) நடைபெறவுள்ளது. இந்தப் போராட்டத்துக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

முல்லைத்தீவு – சிலாவத்தை பகுதியைச் சேர்ந்த குகநேசன் டினோஜா (வயது 12) என்ற சிறுமி திடீர் சுகவீனம் காரணமாக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்தார்.

அதனை தொடர்ந்து கடந்த 21ஆம் திகதி சிகிச்சையின்போது உயிரிழந்தார். மருத்துவத் தவறு காரணமாகவே, இந்த இறப்புச் சம்பவித்தது என்று சிறுமியின் உறவினர்கள் குற்றஞ்சாட்டினர்.

இந்த விடயம் தொடர்பில் முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களிலும் விவாதிக்கப்பட்டதுடன், மேலதிக விசாரணைகளும் இடம்பெற்று வருகின்றன.

இவ்வாறான பின்னணியிலேயே, சிறுமியின் இறப்புக்கு நீதி கோரி, முல்லைத்தீவு மாவட்டவைத்தியசாலைக்கு முன்பாக இன்று காலை கவனயீர்ப்புப் போராட்டம் இடம்பெறவுள்ளது.

இந்தப் போராட்டத்துக்கு வணிக நிறுவனங்கள், சங்கங்கள் எனப் பல தரப்புகளும் தமது ஆதரவைத் தெரிவித்துள்ளன. அத்துடன், ஏனையோரின் ஆதரவையும் அந்தத் தரப்பினர் கோரியுள்ளனர்.

இந்த நிலையில், மருத்துவமனையின் செயற்பாட்டினை உறுதி செய்ய மருத்துவமனையில் பணியில் இருக்கும் மருத்துவ அதிகாரிகள்,சுகாதார பணியாளர்களுக்கும்,மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கும் பாதுகாப்பு வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் 4லட்சத்தை நோக்கி நகரும் தங்கத்தின் விலை!!

இலங்கையில் 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 342,200 ரூபாவாக பதிவாகியுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கையில் கடந்த வாரத்தில் மாத்திரம் தங்கத்தின் விலை எதிர்பாராத அளவு அதிகரித்துள்ளது.

உலக சந்தையில் தங்கத்தின் விலையில் வரலாறு காணாத அதிகரிப்பு பதிவாகியுள்ளது. இதனை தொடர்ந்து இலங்கையிலும் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து செல்கிறது.

அதன்படி, இன்றையதினம் (29.12.2025) 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 370,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 342,200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக தெரியவருகிறது.

அந்தவகையில் 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 46,250 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 42,775 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

மீண்டும் கனமழை எச்சரிக்கை : பாதுகாப்பு அமைச்சின் ஏற்பாடுகள் தீவிரம்!!

நாட்டில் இன்று (29) முதல் கனமழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதால், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசாங்க நிறுவனங்கள் தயார் நிலையில் உள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) மற்றும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் (DMC) ஆகியவற்றுடன் இணைந்து அவசர நடவடிக்கைகளை முன்னெடுக்க அரசாங்கம் தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தமான் தீவுகளுக்கு அருகிலுள்ள வளிமண்டலக் குழப்பம் காரணமாக வடக்கு, வடமத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் 50 மில்லிமீற்றர் முதல் 75 மில்லிமீற்றர் வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.

தற்போதைய நிலையில் மதிப்பீட்டில் உள்ளவர்களுக்கு ஆபத்து எதுவும் இல்லை என்றாலும், ஏதேனும் அவசரநிலை ஏற்பட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாதுகாப்பு அமைச்சின் தகவலின்படி, அனர்த்த முகாமைத்துவ நிலையம் அனைத்து அதிகாரிகளுக்கும் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.

அத்துடன் மத்திய மலைநாட்டில் அனர்த்த அபாயம் உள்ள பகுதிகளில் நில உரிமை மற்றும் இடமாற்றம் குறித்து மதிப்பீடு செய்ய 50 குழுக்கள் களத்தில் இறக்கப்பட்டுள்ளன.

மேலும் அவசர உதவிகளுக்கு பொலிஸ் மற்றும் மீட்புக் குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த நவம்பர் மாதம் வீசிய ‘டித்வா’ சூறாவளியின் போது, முன்கூட்டியே எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டும் அரசாங்கம் சரியாக செயற்படவில்லை என எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் குற்றம் சுமத்தியிருந்தனர்.

இவ்வாறான பின்னணியில், தற்போதைய வானிலை எச்சரிக்கையை அரசாங்கம் மிகவும் தீவிரமாகக் கையாண்டு வருகின்றது.

அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் விழிப்புணர்வு பிரிவு பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி, வானிலை முன்னறிவிப்புகளுக்கு ஏற்ப அனைத்து தயார் நிலைகளும் எட்டப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளார்.

மீண்டும் கொட்டி தீர்க்கப்போகும் கன மழை : மக்களுக்கு விடுத்துள்ள அவசர முன்னெச்சரிக்கை!!

வளிமண்டலவியல் திணைக்களத்தின் எதிர்வு கூறல்களின்படி, எதிர்வரும் திங்கட்கிழமை (29.12.2025) முதல் மழையுடனான வானிலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், அதனை எதிர்கொள்ளத் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் (DMC) தெரிவித்துள்ளது.

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) சம்பத் கொட்டுவேகொட இது குறித்துக் கூறுகையில், முப்படைகள், காவல்துறை மற்றும் சிவில் பாதுகாப்புத் திணைக்களம் ஆகியவற்றுக்கு இது குறித்து அறிவிக்கப்பட்டு, அவர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

அத்துடன் அவசரகால மீட்புப் பணிகளுக்காகக் கடற்படை வீரர்கள், விமானங்கள் மற்றும் படகுகள் தயார் நிலையில் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

வளிமண்டலவியல் திணைக்களத்தின் தரவுகளின்படி, நாட்டின் கிழக்குப் பகுதியில் அலை போன்ற காற்று ஓட்டம் (Wave-like wind flow) உருவாகியுள்ளது.

இதன் காரணமாக வடக்கு, வடமத்திய, மத்திய, கிழக்கு மற்றும் ஊவா ஆகிய மாகாணங்களில் இயல்பை விட அதிக மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

வடகிழக்கு பருவமழைக் காலத்தில் ஏற்படக்கூடிய அனர்த்த இடர்களைக் குறைக்கும் நோக்கில் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

பொதுமக்கள் அவதானத்துடன் இருக்குமாறும், அதிகாரிகளால் அவ்வப்போது வழங்கப்படும் பாதுகாப்பு அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும் மேஜர் ஜெனரல் கொட்டுவேகொட கேட்டுக்கொண்டுள்ளார்.

மின்சார தூணுடன் மோதிய மோட்டார் சைக்கிள் : பாடசாலை மாணவன் பரிதாபமாக உயிரிழப்பு!!

வென்னப்புவ, லுணுவில பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தும்மோதர – போலவத்த பிரதான வீதியில் பெஸ்டஸ் பெரேரா மாவத்தை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். மஹாவெவ, கொஸ்வாடிய பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய உயர்தர வகுப்பில் கல்வி கற்று வந்த மாணவனே விபத்தில் உயிரிழந்துள்ளார்.

குறித்த மாணவன் சம்பவ தினத்தன்று லுணுவில பகுதியில் இருந்து பெஸ்டஸ் பெரேரா மாவத்தை நோக்கி பயணம் செய்துக்கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி அருகிலுள்ள தொலைபேசி கம்பத்தில் மோதியுள்ளது.

விபத்தில் காயமடைந்த மாணவனை உடனடியாக மாரவில வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்த போதிலும் அந்த மாணவன் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்துச் சம்பவம் தொடர்பில் லுணுவில பொலிஸ் நிலைய போக்குவரத்துப் பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

யாழில் குடை பிடித்து தேசியக் கொடியை ஏற்றிய அமைச்சரின் செயலுக்கு கடும் விசனம்!!

யாழ்ப்பாணத்தில் கொட்டும் மழைக்கு மத்தியில் குடை பிடித்தவாறு கடற்தொழில் அமைச்சர் , தேசிய கொடியை ஏற்றிய சம்பவம் கடும் விமர்சனங்களை உருவாக்கியுள்ளது.

தேசிய பாதுகாப்பு தினம் மற்றும் சுனாமி ஆழிப்பேரலையின் 21 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் நேற்றைய தினம் (26) யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

நிகழ்வின் ஆரம்பத்தில் கொட்டும் மழைக்குள் குடை பிடித்தவாறு கடற்தொழில் அமைச்சர் தேசிய கொடியினை ஏற்றியுள்ளார்.

இதன் போது கூட மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் மற்றும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரதிப்பணிப்பாளர் ரி. என்.சூரியராஜா ஆகியோரும் உடனிருந்தனர்.

அமைச்சர் குடை பிடித்தவாறு தேசிய கொடி ஏற்றும் போது , மாவட்ட செயலரும் , அனர்த்த முகாமைத்துவ பிரதிப்பணிப்பாளர் குடை பிடித்தவாறு உடனிருப்பது கடும் விமர்சனங்களை ஏற்படுத்தி இருக்கிறது.

 

ட்ரம்பின் மீது நம்பிக்கை இல்லை : டன் கணக்கில் தங்கத்தை மீட்க இத்தாலியும் ஜேர்மனியும் தீவிரம்!!

அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ்வில் பத்திரப்படுத்தப்பட்டுள்ள டன் கணக்கிலான தங்க இருப்புக்களை ஜேர்மனியும் இத்தாலியும் திரும்பப் பெற உள்ளது.

ஜேர்மனியும் இத்தாலியும்

கடுமையான இறக்குமதி வரிகள் உட்பட உலகப் பொருளாதாரத்தையே உலுக்கும் பல முடிவுகளை ட்ரம்ப் எடுத்துள்ள நிலையிலேயே ஜேர்மனியும் இத்தாலியும் இந்த முடிவுக்கு வந்துள்ளது.

உலகில் மிக அதிகமாக தங்கம் இருப்பு வைத்துள்ள நாடுகளில் ஜேர்மனியும் இத்தாலியும் முதலிடங்களில் உள்ளன. இத்தாலிக்கு சுமார் 2,500 டன் தங்கமும் ஜேர்மனிக்கு 3,500 டன் தங்கமும் கையிருப்பு உள்ளது.

இந்த நிலையில், ஜேர்மனி 1,200 டன் தங்கத்தை அமெரிக்காவின் மத்திய வங்கியில் முதலீடு செய்துள்ளது. இத்தாலி 1000 டன் வரையிலான தங்கத்தையும் பத்திரப்படுத்தியுள்ளது.

ஆனால் தற்போது இரு நாடுகளும் இந்த தங்கம் மொத்தமும் திரும்பப்பெறும் நடவடிக்கையில் தீவிரமாக இறங்கியுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிலைப்பாடுகள் மீதான அவநம்பிக்கை காரணமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், ட்ரம்ப் எப்போது, ​​என்ன முடிவு எடுப்பார் என்பது குறித்த நிச்சயமற்ற தன்மையும், பெடரல் ரிசர்வ் நடவடிக்கைகளில் தலையிட அவர் எடுக்கும் முயற்சிகளும்,

ஈரான் மீது தாக்குதல் நடத்த அவர் எடுத்த முடிவும், தங்கம் விவகாரத்தில் இத்தாலியும் ஜேர்மனியும் கருத்தில் கொண்டுள்ளதாகவே கூறப்படுகிறது.

முடக்க ட்ரம்ப் முடிவு

புவிசார் அரசியல் பதட்டங்கள் மற்றும் அமெரிக்க பொருளாதார மந்தநிலைக்கு மத்தியில் அமெரிக்க தங்க இருப்புக்கள் உள்ளிட்ட வெளிநாட்டு சொத்துக்கள் அனைத்தையும் முடக்க ட்ரம்ப் முடிவு செய்யலாம் என்ற அச்சம் காரணமாகவே இத்தாலி மற்றும் ஜேர்மனி தங்கள் தங்க இருப்புக்களை திரும்பப் பெறும் முடிவுக்கு வந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

பொதுவாக அமெரிக்கா அரசியல் ரீதியாக நிலையானதாகவும், உலகின் மிகப்பெரிய இராணுவ சக்தியாகவும் இருப்பதைக் கருத்தில் கொண்டு மட்டுமே உலக நாடுகள் பல தங்களின் தங்க கையிருப்பை அமெரிக்க மத்திய வங்கியில் பாதுகாக்கின்றன.

ஆனால், புவிசார் அரசியல் பதட்டங்கள் மற்றும் நாணய ஏற்ற இறக்கம் காரணமாக, இந்தியா உட்பட பல நாடுகள் வெளிநாடுகளில் உள்ள தங்க இருப்புக்களை மீண்டும் தங்கள் சொந்த நாடுகளுக்கு மாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

முறிகண்டி பிள்ளையார் அருகே தலைகீழாக கவிழ்ந்து கார் விபத்து : தெய்வாதீனமாக தப்பிய உயிர்கள்!!

யாழ்ப்பாணம் ஏ-9 பிரதான வீதியில் திருமுறிகண்டி பிள்ளையார் ஆலயத்தை அண்மித்த பகுதியில் அதிவேகமாக வந்த கார் ஒன்று, கட்டுப்பாட்டை இழந்து குட்டிக்கரணம் அடித்து விபத்துக்குள்ளகியுள்ளது.

இந்த விபத்து காலை இன்று( 27.12.2025) இடம்பெற்றுள்ளது. அதிவேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்திலிருந்த கழிவுநீர்க் கால்வாய்க்குள் பாய்ந்து தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

எனினும் காரில் பயணம் செய்தவர்கள் தெய்வாதீனமாக சிறு சிறு காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார்கள்.

பரிதாபமாக உயிரிழந்த பாடசாலை மாணவி – பெற்றோர்களே அவதானம்!!

மாத்தறை மாவட்டத்தின் வரல்ல பகுதியை சேர்ந்த பாடசாலை மாணவி ஒருவர் இன்று மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்தவர், நாகொட கமகே யெனுகி செஹன்சா ஹன்சாதி என அடையாளம் காணப்பட்டுள்ளார். ஆரம்ப பாடசாலையில் படிக்கும் ஏழு வயது மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவர் வரல்ல பகுதியில் வசித்து வருகிறார். மாணவி வைத்திருந்த அளவிடும் நாடா தனது வீட்டோடு இணைக்கப்பட்டிருந்த மின்சார கம்பியின் இரண்டு கம்பிகளில் பட்டதால் மின்சாரம் தாக்கியுள்ளது.

உடனடியாக மாணவி மொரவாக்கவில் உள்ள கொஸ்னில்கொட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதும் அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

முல்லைத்தீவு சிறுமி உயிரிழப்பு : நீதியான விசாரணை கோரி முன்னெடுக்கப்படவுள்ள கவனயீர்ப்பு போராட்டம்!!

முல்லைத்தீவு – சிலாவத்தை பகுதியில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 12 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. குறித்த உயிரிழப்பு சம்பவம் கடந்த 21.12.2025 அன்று பதிவாகியிருந்தது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி மருத்துவர்களின் கவனயீனத்தினால் உயிரிழந்துள்ளதாகவும், இதற்கான தீர்வினை மருத்துவமனை அதிகாரிகள் தர வேண்டும் என கோரியும் இந்த போராட்டம் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சிலாவத்தை மக்கள் மற்றும் பொது அமைப்புக்கள் ஒன்றிணைந்து எதிர்வரும் 29.12.2025 முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை முன்பாக இந்த போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த போராட்டத்திற்கு முல்லைத்தீவு மாவட்ட அழகக கூட்டுறவு சங்கம் தனது ஆதரவினை தெரிவித்துள்ளது.

இவ்வாறான இழப்புக்கள் இனியும் நடைபெறாமல் தவிர்ப்பதற்கான நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்தினை வலியுறுத்தும் இந்த போராட்டத்தில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

 

இலங்கை மக்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் பச்சை மிளகாயின் விலை!!

நாடு முழுவதும் உள்ள வர்த்தக நிலையங்களில், மரக்கறிகளின் விலைகள் சடுதியாக அதிகரித்துள்ளன. இதனிடையே, விசேட பொருளாதார மையங்களிலும், கொழும்பு மரக்கறி சந்தையிலும் மரக்கறிகளின் விலை அதிகரித்துள்ளது.

அந்த வகையில், கொழும்பு பொருளாதார மையங்களைச் சுற்றியுள்ள பகுதிகளிலும், தம்புள்ளை மற்றும் நாரஹேன்பிட்டவிலும் போஞ்சி உட்பட பல வகையான மரக்கறிகளின் விலைகள் இன்று (27.12.2025) அதிகரித்துள்ளன.

இதற்கமைய, சில இடங்களில் ஒரு கிலோ போஞ்சி ரூ. 1,400க்கு விற்கப்பட்டுள்ளதுடன்,பச்சை மிளகாயின் விலை ரூ. 1,500ஐத் தாண்டியுள்ளது.

மத்திய வங்கியின் தினசரி விலை அறிக்கையில் தக்காளியின் விலையும் ரூ. 500ஐத் தாண்டியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.