லண்டன் நகர சபை ஒன்றின் மேயராக தெரிவான இலங்கைத் தமிழர்!!

லண்டனின் கிங்ஸ்டன் அப்போன் தேம்ஸ் அரச நகராட்சியின் புதிய மேயராக இலங்கைப் பிறப்புடைய கவுன்சிலர் தாய் தயாளன் நியமிக்கப்பட்டுள்ளார்.

2026 ஆம் ஆண்டு மே 21 ஆம் திகதி நடைபெற்ற வருடாந்திர மன்றக் கூட்டத்தில் இந்த நியமனம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இலங்கையில் பிறந்த தாய் தயாளன், 1970 ஆம் ஆண்டு பிரித்தானியாவுக்கு குடிபெயர்ந்ததுடன், 1976 ஆம் ஆண்டு முதல் கிங்ஸ்டன் பகுதியில் வசித்து வருகிறார்.

2014 ஆம் ஆண்டு டோல்வொர்த் வார்டின் கவுன்சிலராக முதன்முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், மக்கள் சேவையில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

இதற்கு முன்னர் 2018 முதல் 2019 வரையிலான காலப்பகுதியில் கிங்ஸ்டன் மேயராகப் பதவி வகித்த அவர், பன்முகத்தன்மை, இளைஞர் மேம்பாடு மற்றும் சமூக ஒற்றுமையை வலுப்படுத்தும் பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்திருந்தார்.

மேலும், ஐ.டி.சி தமிழ் மையத்தின் நிறுவன உறுப்பினராகவும் தற்போதைய புரவலராகவும் உள்ள அவர், 1986 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட கிங்ஸ்டன் தமிழ்ப் பள்ளியின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றி வருகிறார்.

இந்தப் பள்ளி மூலம் 250-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு தமிழ் மொழி, கலை, பாரம்பரியம் மற்றும் பண்பாடு கற்பிக்கப்பட்டு வருகிறது.

கிங்ஸ்டன் இன மற்றும் சமத்துவ மன்றத்தின் இணை நிறுவனர்களில் ஒருவரான தாய் தயாளன், நகரின் பன்முகத்தன்மையை கொண்டாடும் வகையில் ‘கிங்ஸ்டன் திருவிழா’ உருவாக்கத்திலும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளார்.

சமத்துவம், அனைவரையும் உள்ளடக்கும் சமூகக் கட்டமைப்பு மற்றும் இனவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் பல தசாப்தங்களாக ஆற்றிவரும் சேவையைப் பாராட்டி, 1990 ஆம் ஆண்டு சமூக சேவைக்கான கிங்ஸ்டன் மேயர் விருதும், 2020 ஆம் ஆண்டு லிபரல் டெமாக்ரட் தலைவர் விருதும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளன.

உலகில் மிகக் கூடிய விலையுள்ள மாம்பழம் : ஒரு ஜோடியின் விலை 3.5 லட்சம் ரூபாய்!!

உலகில் மிக அதிக விலைக்கு விற்கப்படும் பழங்களில் ஜப்பானின் ‘மியாசாகி’ மாம்பழம் முதலிடம் வகிக்கின்றது.

ஜப்பானில் ஒரு ஜோடிமியாசாகி மாம்பழங்கள் சுமார் 600,000 ஜப்பானிய யென் (இலங்கை பெறுமதியில் 3.5 லட்சம் ரூபாய்) வரை ஏலத்தில் விற்பனையாகின்றன.

இதன் விசேட அம்சங்கள் மற்றும் வளர்ப்பு முறையே இந்தளவு அதிக விலைக்குக் காரணம் என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஜப்பானின் மியாசாகி மாகாணத்தில் விளையும் இந்த மாம்பழம், அதன் தோற்றம் மற்றும் வடிவம் காரணமாக “சூரியனின் முட்டை என அழைக்கப்படுகின்றது.

சாதாரண மாம்பழங்கள் போலன்றி, இவை மாணிக்கக் கல் போன்ற அடர் சிவப்பு நிறத் தோலைக் கொண்டுள்ளன. நார் இல்லாத, அதிக சாறு நிறைந்த இதன் உட்பகுதி 15% இற்கும் அதிகமான சர்க்கரை அளவைக் கொண்டுள்ளது.

இவை பச்சை வீட்டு வளர்ப்பு முறையில் வளர்க்கப்படுகின்றன. பழத்தின் எல்லாப் பக்கங்களிலும் சமமாகச் சூரிய ஒளி படுவதற்காக, மரங்களுக்குக் கீழே பிரதிபலிப்பான்கள் வைக்கப்பட்டு, ஒவ்வொரு பழமும் தனித்தனியாக வலையமைப்பிற்குள் கட்டித் தொங்கவிடப் படுகின்றன.

இந்த நிலையில், 350 கிராமுக்கு அதிக எடை, கீறல்களற்ற முழுமையான சிவப்பு நிறம் கொண்ட சிறந்த பழங்கள் மாத்திரமே ஏலத்திற்குத் தெரிவு செய்யப்படுகின்றன.

தற்போது இந்தியா (ஒடிசா), தாய்லாந்து, வியட்நாம் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளிலும் இந்த மாம்பழம் வெற்றிகரமாகப் பயிரிடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பிரான்ஸில் இலங்கைத் தமிழர் பொலிசாரால் சுட்டுக்கொலை!!

பாரிஸில் பொலிஸாரை கத்தியால் தாக்க முற்பட்ட இலங்கைத் தமிழர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாரிஸின் புறநகர்ப் பகுதியான சென்-சென்-டெனிஸ் (Seine-Saint-Denis) மாவட்டத்தில் உள்ள பொபினி (Bobigny) நகரில் நேற்று (30.05) அண்டை வீட்டாருடன் ஏற்பட்ட தகராறில் இருவரைக் கத்தியால் குத்திக் காயப்படுத்திய நபர் ஒருவர், பொலிஸாரையும் தாக்க முற்பட்டபோது சுட்டுக்கொல்லப்பட்டார்.

அடுக்குமாடிக் குடியிருப்பில் அண்டை வீட்டாருக்கு இடையே மோதல் நடப்பதாகக் கிடைத்த தகவலின் பேரில், பிராந்திய பொலிஸ் பிரிவைச் சேர்ந்த மூன்று அதிகாரிகள் அங்கு விரைந்துள்ளனர்.

பொலிஸார் வருவதைப் பார்த்த அந்த நபர், தனது இரண்டு கைகளிலும் தலா ஒரு கத்தியை ஏந்தியபடி ஆக்ரோஷமாக அவர்களை நோக்கி வந்துள்ளார். ஆபத்தை உணர்ந்த பொலிஸ் அதிகாரி ஒருவர், முதலில் அந்த நபரைத் தன் காலால் உதைத்துப் பின்னுக்குத் தள்ளியுள்ளார்.

இருப்பினும் அந்த நபர் மீண்டும் அதிகாரிகளை நோக்கிக் கத்தியுடன் பாய்ந்துள்ளார். வேறு வழியின்றித் தற்காப்புக்காக அந்த அதிகாரி தனது அரசுத் துப்பாக்கியால் அந்த நபரின் வயிற்றுப் பகுதியில் குறைந்தது இரண்டு முறை சுட்டுள்ளார்.

படுகாயமடைந்த அந்த நபருக்கு அவசர மருத்துவப் படையினர் சம்பவ இடத்திலேயே தீவிரச் சிகிச்சையளித்தும் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

கத்திக்குத்தில் காயமடைந்த அவரது அண்டை வீட்டார் இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்தச் சம்பவம் குறித்துப் பொபினி அரசு வழக்கறிஞர் (Parquet de Bobigny) அலுவலகம் விசாரணையைத் தொடங்கியுள்ளது.

தேர் சக்கரத்தில் சிக்கி கல்லூரி மாணவன் பரிதாபமாக உயிரிழப்பு!!

தேர் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த கல்லூரி மாணவர் குடும்பத்திற்கு முதல்வர் விஜய் நிவாரணம் அறிவித்துள்ளார்.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் அர்த்தநாரீஸ்வரர் கோவில் வைகாசி விசாக தேரோட்டம் இன்று நடைபெற்றது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரை இழுத்தனர்.

ரதவீதியில் தேர் திரும்பும் போது, தேரின் சக்கரத்திற்கும், அங்கிருந்த சுவருக்கும் நடுவே கல்லூரி மாணவர்கள் இருவர் சிக்கிக்கொண்டனர்.

இதில், கோவிந்தராஜா என்பவரின் மகனான ஹர்ஷவர்தன் என்ற 18 வயதான முதலாமாண்டு பொறியியல் கல்லூரி மாணவர், பலத்த காயம் அடைந்து முதலுதவி சிகிச்சைக்காக திருச்செங்கோடு அரசு மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டார்.

அதன் பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அங்கு அவர் உயிரிழந்துள்ளார்.

கௌரிசங்கர் என்பவரின் மகனான சஷ்டிகன் என்ற மற்றொரு மாணவர், கடுமையான காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அமைச்சர் அருண்ராஜ் மருத்துவமனைக்கு நேரில் சென்று, உயிரிழந்த ஹர்ஷவர்தனின் குடுமபத்திற்கு ஆறுதல் தெரிவித்துள்ளார்.

உயிரிழந்த ஹர்ஷவர்தனின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.5 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளார். மேலும், சஷ்டிகனுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளார்.

பாடசாலை பரீட்சைக் காலங்களில் ஏற்படவுள்ள மாற்றம்!!

எதிர்வரும் 2027ஆம் ஆண்டு தொடக்கம் கல்விப் பொதுப் பரீட்சைகளுக்கான கால அட்டவணைகள் மற்றும் பாடசாலைத் தவணைகளில் மாற்றம் ஏற்படுத்தப்படவுள்ளது.

கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ இது தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளார். அதன் பிரகாரம் எதிர்வரும் 2027ஆம் ஆண்டு தொடக்கம்,2020ஆம் ஆண்டுக்கு முந்தைய கால அட்டவணைக்கேற்ப கல்விப் பொதுப் பரீட்சைகள் மற்றும் பாடசாலைத் தவணைகள் மாற்றம் பெறவுள்ளன.

கடந்த 2020ஆம் ஆண்டில் நாடு எதிர்கொண்ட கொவிட்-19 பெருந்தொற்று காரணமாக கல்வி நடவடிக்கைகள், பரீட்சைக் கால அட்டவணைகளில் மாற்றம் ஏற்பட்டது.

அதன்பின் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி, எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் போக்குவரத்து சிரமங்கள் காரணமாக பாடசாலைகளை அடிக்கடி மூட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.

இதன் காரணமாக கல்வி நடவடிக்கைகளில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. இவ்வாறான விடயங்களைக் கருத்திற் கொண்டு கல்விப் பொதுப் பரீட்சைகள் மற்றும் பாடசாலைத் தவணைகளை அவற்றின் வழக்கமான கால அட்டவணைக்கு மாற்ற கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

எதிர்வரும் 2027ஆம் ஆண்டில் க.பொ.த.சாதாரண தரப் பரீட்சை டிசம்பர் மாதத்திலும், உயர்தரப் பரீட்சை ஆகஸ்ட் மாதத்திலும் நடைபெறவுள்ளது.

அத்துடன் பாடசாலைத் தவணைகளிலும் மாற்றம் செய்யப்படவுள்ளது. அதற்கு ஏதுவாக வருடத்தின் எஞ்சியுள்ள இரண்டு பாடசாலைத் தவணைகளிலும் நீண்ட விடுமுறை வழங்கப்படவுள்ளது.

19 சீன கடவுச்சீட்டுகளுடன் கைதான முக்கிய அதிகாரி : தலைமறைவாகிய இளம்பெண்!!

வெலிக்கடை பொலிஸ் நிலையத்தின் முன்னாள் பொறுப்பதிகாரி, 19 சீன பிரஜைகளின் கடவுச்சீட்டுகளை சட்டவிரோதமாக தக்கவைத்து, அவற்றை மீள வழங்குவதற்காக பணம் கோரியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதன்படி, இந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் இளம் பெண்ணை பொலிஸார் கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வெலிக்கடை பொலிஸ் நிலையத்தின் முன்னாள் பொறுப்பதிகாரி ஒருவர், ஏற்கனவே கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

மத்திய குற்றப்புலனாய்வு பணியகத்தின் (CCIB) பணிப்பாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் (SSP) கமல் ஆரியவன்ச ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

19 சீன பிரஜைகளின் கடவுச்சீட்டுகளை மையமாகக் கொண்டதாகக் கூறப்படும் இலஞ்சம் மற்றும் பணப்பறிப்பு நடவடிக்கையில் குறித்த பெண் இடைத்தரகராக செயல்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

இதேவளை, “அவர் முன்பே பொலிஸில் சரணடையுமாறு அறிவிக்கப்பட்டிருந்தார். எனினும், பொலிஸார் அவரது வீட்டிற்குச் சென்றபோது அது பூட்டப்பட்டிருந்தது. தற்போது அவர் தலைமறைவாக உள்ளார்,” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

விசாரணையாளர்களின் தகவலின்படி, சீனப் பிரஜைகளுக்கும் பொறுப்பதிகாரிக்கும் இடையே தொடர்பாளராகச் செயல்பட்ட அந்தப் பெண், கடவுச்சீட்டுகளை மீளப் பெறுவதற்காக கோரப்பட்ட பணத்தை வசூலிப்பதில் உதவியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மேலும், ஒவ்வொரு கடவுச்சீட்டிற்கும் ரூ.300,000 வீதம் அறவிடப்பட்டதாகவும், இதன் மூலம் 19 கடவுச்சீட்டுகளுக்காக ரூ.5.7 மில்லியனுக்கும் அதிகமான தொகை வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் தரவுகளில் கண்டறியப்பட்டுள்ளது.

சென்னையை உலுக்கிய இலங்கைத் தமிழ்ப் பெண் கொடூர கொலை : விசாரணையில் வெளியான தகவல்!!

புதிய இணைப்பு : சென்னை கோயம்பேட்டில் தனியார் கேளிக்கை விடுதியில் ஏற்பட்ட தகராறில் இலங்கை பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக கோயம்பேடு பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய பாலகுரு, அவருடைய நண்பர் சுமன் சக்திவேல் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் விபத்தினை ஏற்படுத்திய காரில் அரசியல் கட்சியொன்றின் கட்சி கொடி கட்டப்பட்டு இருந்துள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வந்த 18 வயதான யான்சி என்ற இளம்பெண், இன்ஸ்டாகிராம் மூலம் சென்னையைச் சேர்ந்த பெண்ணுடன் பழகி வந்துள்ளார்.

இந்நிலையில், தோழியை பார்ப்பதற்காக சென்னை வந்த யான்சி, இரவில் கோயம்பேட்டில் உள்ள கேளிக்கை விடுதிக்கு சென்று நடனமாடியபோது மற்றொரு தரப்பினருடன் தகராறு ஏற்பட்டுள்ளது.

இருதரப்பினரையும் பவுன்சர்கள் வெளியேற்றிய நிலையில், சாலையில் வந்து இருதரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டுள்ளனர்.

இதனை தொடர்ந்து, இருசக்கர வாகனத்தில் சென்ற யான்சி மீது மற்றொரு தரப்பைச் சேர்ந்த குழுவினர் காரை வேகமாக ஏற்றிகொலை செய்துள்ளனர்.

முதலாம் இணைப்பு : சென்னையில் இடம்பெற்ற மோதலில் இலங்கையை சேர்ந்த தமிழ் பெண் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.

சென்னை கோயம்பேட்டில் நேற்றிரவு (30.05.2026) இடம்பெற்ற இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் இலங்கையை சேர்ந்த 18 வயதான யான்சி என்பவரே உயிரிழந்துள்ளார்.

இன்று விடுமுறையை முன்னிட்டு நேற்றிரவு சென்னை கோயம்பேட்டில் உள்ள ஒரு பாரில் இளம்பெண் ஒருவர் நடனம் ஆடிய நிகழ்ச்சியின் போது இரு தரப்பினரிடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டு, அது பெரும் மோதலாக மாறியுள்ளது.

இந்த நிலையில், அந்த இளம்பெண் அங்கிருந்து வெளியேறி, தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் சென்றபோது, பாரில் இருந்த ஒரு கும்பல் அவரை துரத்திச்சென்று மோட்டார் சைக்கிள் மீது காரை ஏற்றியுள்ளனர்.

இந்த சம்பவத்தில் இளம்பெண் காரின் அடியில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். குறித்த பெண்ணுடன் மோட்டார் சைக்கிளில் பின்னால் சென்ற சிறுமி பலத்த காயமடைந்து தற்போது தீவிர சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த கோயம்பேடு பொலிஸார் உடனடியாக விரைந்து உடலைக் கைப்பற்றியுள்ளனர்.

இந்த கொலை மற்றும் மோதல் சம்பவம் தொடர்பாக, சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சவுதி மரண தண்டனை விதிக்கப்பட்ட நபர் : 34 கோடி ரூபாய் செலுத்தி மீட்ட கேரள மக்கள்!!

சவுதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட நபரை ரூ.34 கோடி செலுத்தி கேரள மக்கள் பத்திரமாக மீட்டு இருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்த அப்துல் ரஹீம் என்ற நபர் கடந்த 2006 ஆண்டு வேலை நிமித்தமாக வளைகுடா நாட்டிற்கு சென்றுள்ளார்.

அப்போது எதிர்பாராத விதமாக, சவுதியில் தான் கவனித்து கொண்டிருந்த மாற்றுத்திறனாளி சிறுவன் ஒருவனின் தற்செயலான மரணத்திற்கு காரணமாக அமைந்ததை தொடர்ந்து ரஹீம் சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும் உயிரிழந்த சிறுவனின் குடும்பத்தினர் ரஹீமுக்கு பொது மன்னிப்பு வழங்க மறுத்த விட்ட நிலையில், அவருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.

அதே நேரத்தில் குறிப்பிட்ட காலத்திற்குள் அபராதமாக ரூ.34 கோடி செலுத்தினால் மரண தண்டனை ரத்து செய்யப்படும் என்றும் அறிவித்தது.

இதையடுத்து அப்துல் ரஹீம் தூக்கு தண்டனையை ரத்து செய்ய கோரி கேரள மக்கள் ஒன்று திரண்டு ரூ.34 கோடி செலுத்தி அவரை மரண தண்டனையில் இருந்து காப்பாற்றியுள்ளனர்.

மேலும் அவரை சிறை தண்டனையில் இருந்தும் விடுவித்து சவுதி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் 20 ஆண்டுகளுக்கு பிறகு கேரளாவின் கரிப்பூர் விமான நிலையத்தில் வந்து இறங்கிய அப்துல் ரஹூமை குடும்பத்தினர் திரண்டு வந்து வரவேற்றனர்.

மேலும் தன்னுடைய விடுதலைக்காக உதவிய அனைத்து கேரள மக்களுக்கும் நன்றி என்று ரஹூம் தெரிவித்துள்ளார்.

தொலைபேசியை தரமறுத்த சகோதரியை கொலை செய்த சகோதரன் : தமிழர் பகுதியில் அதிர்ச்சி சம்பவம்!!

மட்டக்களப்பு – ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நீதிமன்ற வீதியில் உள்ள வீட்டில் தந்தை இல்லாத நேரத்தில் தனது 11 வயது சகோதரி கையடக்க தொலைபேசியை தர மறுத்த காரணத்தால் சகோதரனே அவரை கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் இன்று (30.05.2026) குறித்த சிறுவன் ஏறாவூர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கடந்த வியாழக்கிழமை (28.05.2026) மாலையில் ஏறாவூர் 5 பிரிவு நீதிமன்ற வீதியைச் சேர்ந்த சத்யானந்தன் சதிஷா, என்ற சிறுமி குளியலறை தண்ணீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

இவரின் தாயார் வெளிநாட்டில் வேலைவாய்ப்பு பெற்று சென்றுள்ளதுடன், தந்தையின் பராமரிப்பில் 14 வயது சிறுவனும், 11 வயது சிறுமியும் வளர்ந்து வந்துள்ளனர்.

சம்பவ தினத்தன்று தந்தை வேலைக்காக வெளியில் சென்று வீடு திரும்பும் பொழுது தண்ணீர் தொட்டிக்குள் குறித்த சிறுமி சடலமாக கிடந்து, மீட்கப்பட்டு வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற வேளையில், குறித்த சிறுமி ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையில், சிறுமி தான் வைத்திருந்த கையடக்க தொலைபேசியை தர மறுத்தக் காரணத்தினால் சகோதரனுக்கும், சிறுமிக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. இதன்போது, சகோதரியின் கழுத்தை நெரித்ததையடுத்து அந்த இடத்திலேயே சிறுமி உயிரிழந்துள்ளார்.

அதன்பின்னர், சகோதரியை இழுத்து சென்று குளியலறையில் உள்ள தண்ணீர் தொட்டியில் போட்டுவிட்டு ஒன்றும் தெரியாதது போன்று வீட்டில் இருந்து பக்கத்து வீட்டுக்கு சென்றுள்ளார்.

அந்த சமயத்தில் வெளியில் இருந்து வீட்டுக்குள் வந்த தந்தை வீட்டில் பிள்ளைகளை காணவில்லை என தேடிய வேளையில், சம்பவம் தொடர்பில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், சிறுமி உயிரிழப்பு தொடர்பில், 14 வயது சிறுவன் மீது சந்தேகம் கொண்ட பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில், சிறுவன் தான் சகோதரியை கொலை செய்துள்ளார் என்பது தெளிவாகியுள்ளது.

குறித்த சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸ் நிலைய பெரும் குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியா குருமன்காடு ஸ்ரீ காளியம்மன் ஆலய இரதோற்சவம்!!

வவுனியா குருமன்காடு ஸ்ரீ காளியம்மன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் முக்கிய நிகழ்வான இரதோற்சவம் (தேர்த் திருவிழா) இன்று (30.05.2026) காலை மிகச் சிறப்பாகவும் பக்திப் பூர்வமாகவும் நடைபெற்றது.

ஆலயத்தின் வருடாந்த பெருந்திருவிழாவை முன்னிட்டு இன்று அதிகாலை முதற்கொண்டே விசேட கிரியைகள் மற்றும் அபிஷேகங்கள் ஆரம்பமாகின. அதனைத் தொடர்ந்து, அடியார்கள் புடைசூழ காளி அம்பாளுக்கு பக்திப் பெருக்குடன் கூடிய வசந்தமண்டப பூஜை வெகு விமரிசையாக நடத்தப்பட்டது.

பூஜை வழிபாடுகள் நிறைவடைந்ததும், காளி அம்பாள் உள்வீதி வலம் வந்து, அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் எழுந்தருளினார். தேரில் வீற்றிருந்தவாறு அம்பாள், கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்களுக்குக் காட்சியளித்து அருள் பாலித்தார்.

அம்பாளின் அருளைப் பெறுவதற்காக வவுனியா மற்றும் அதன் நாலா திசைகளிலிருந்தும் பெருமளவிலான அடியார்கள் ஆலயத்தில் குழுமியிருந்தனர். வீதியெங்கும் பக்தி கோஷங்கள் முழங்க, அடியார்கள் தமது நேர்த்திக்கடன்களைச் செலுத்தினர்.

பக்தர்களின் பக்தி வெள்ளத்தில் வீதியுலா வந்த திருத்தேர் காலை 10 மணியளவில் மீண்டும் தனது இருப்பிடத்தை (தேர் முட்டியை) வந்தடைந்தது. அதனைத் தொடர்ந்து, தேரில் வீற்றிருந்த அம்பாளுக்கு மகா தீபாராதனையுடன் கூடிய விசேட அர்ச்சனைகள் இடம்பெற்றன.

இவ்விழாவில் கலந்துகொண்ட அனைத்துப் பக்தர்களுக்கும் ஆலய நிர்வாகத்தினரால் பிரசாதங்களும் அன்னதானமும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் பேருந்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து : இளம் குடும்பஸ்தர் பலி, மனைவி படுகாயம்!!

யாழ்ப்பாணம் – கண்டி பிரதான வீதியில், வவுனியா ஈரற்பெரியகுளம் பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக நேற்று (29.05.2026) இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், அவரது மனைவி படுகாயமடைந்துள்ளார்.

நேற்று இரவு 9.30 மணியளவில் கொழும்பில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த சொகுசு பேருந்து ஒன்று, எதிரே வந்த மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளதாக ஈரற்பெரியகுளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் பெரியஉளுக்குளம் பகுதியைச் சேர்ந்த எஸ். தில்ஹால் சதுரங்க (வயது 30) என்ற இளம் குடும்பஸ்தரே சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்திருந்த அவரது மனைவி பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில், மீட்கப்பட்டு வவுனியா மாவட்ட பொது மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்தை அடுத்து, சொகுசுப் பேருந்தின் ஓட்டுநரை ஈரற்பெரியகுளம் பொலிஸார் கைது செய்துள்ளனர். உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வவுனியா மாவட்ட பொது மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஈரற்பெரியகுளம் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

அவுஸ்திரேலியாவில் இலங்கை விஞ்ஞானியின் அசாத்திய கண்டுபிடிப்பு!!

அவுஸ்திரேலியாவின் சிட்னி தொழில்நுட்ப பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், பார்வைக் குறைபாடு மற்றும் பார்வையற்றோருக்கு உதவும் வகையில், செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் புதிய ரோபோ வழிகாட்டி நாயை உருவாக்கி வருகிறார்.

இந்தத் திட்டத்திற்கு இலங்கையை சேர்ந்த ரோபோட்டிக்ஸ் மற்றும் மெக்கட்ரோனிக்ஸ் நிபுணர் சரத் கொடகொட தலைமை தாங்குகிறார். இந்த ரோபோ ஒரு சாதாரண நாயைப் போலவே வடிவமைக்கப்பட்டுள்ளது.

இது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மற்றும் சென்சார்களைப் பயன்படுத்தி, சுற்றியுள்ள சூழலைக் கண்டறிந்து, பேசிக்கொண்டே மக்களுக்கு வழிகாட்டுகிறது.

இந்த அமைப்பு, நிகழ்நேர செயற்கை நுண்ணறிவு முடிவெடுக்கும் திறன்களுடன் பொருத்தப்பட்டுள்ளது.

மேலும், பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்வதற்காக, சுற்றியுள்ள சூழலைக் கண்டறிந்து பயனரின் தேவைகளுக்கு ஏற்ப வழித்தடங்களை திட்டமிட, LiDAR போன்ற மேம்பட்ட சென்சார்களைப் பயன்படுத்துகிறது.

உதாரணமாக, ஒரு பயனர் தேனீர் கடைக்குச் செல்ல விரும்புகிறேன் என கூறும்போது, ​​அந்த ரோபோ அருகிலுள்ள இடங்களைக் கண்டறிந்து மாற்று வழிகளைப் பரிந்துரைக்கிறது.

அந்த ரோபோ தேர்ந்தெடுக்கப்பட்ட இடத்திற்கு ஒரு பாதுகாப்பான வழியைத் திட்டமிட்டு பயனருக்கு வழிகாட்டுகிறது.

தேவைப்பட்டால், உள்ளே இருக்கும் சூழலையும் விவரிக்கிறது. இந்த ரோபோ, Unitree Go2 ரோபோ நாய் தளத்தின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இது செயற்கை நுண்ணறிவு, சென்சார்கள் மற்றும் தொட்டுணரக்கூடிய பின்னூட்ட அமைப்பை பயன்படுத்துகிறது.

பார்வைக் குறைபாடு உள்ளவர்களுக்கு அதிக தன்னம்பிக்கையை அளிப்பது, பயணத்தை எளிதாக்குவது மற்றும் சமூகப் பங்கேற்பை அதிகரிப்பது ஆகியவையே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.

எனினும், இது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் இயங்கும் ஒரு புதிய தலைமுறை பேசும் ரோபோ வழிகாட்டி நாய் ஆகும். இது எதிர்காலத்தில் பார்வைக் குறைபாடு உள்ள சமூகத்திற்குப் பெரும் உதவியாக இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

கோர விபத்தில் சிக்கிய கர்ப்பிணி பெண் பலி : வயிற்றிலுள்ள குழந்தையும் மரணம்!!

அனுராதபுரம் – விமான நிலைய வீதியில் சம்பவித்த கோர விபத்தில், பெண் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் அனுராதபுரத்தை சேர்ந்த ஆர். எம். பாக்யா நிலுபுலி வடுகொடபிட்டிய என்ற 32 வயதுடைய கர்ப்பிணிப் பெண் என தெரியவந்துள்ளது.

இவர் அநுராதபுரம் மத்திய நுவரகம்பலாத பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பகுதியில் கிராம உத்தியோகத்தராகக் கடமையாற்றி வந்தார்.

கடந்த 18ஆம் திகதி கவரக்குளம பகுதியில் இருந்து அநுராதபுரம் நோக்கி, பெண் மற்றொரு பெண்ணுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போது விபத்து ஏற்பட்டுள்ளது.

எதிர் திசையில் வந்த சிறிய லொறி ஒன்று மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

விபத்தில் பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற கிராம உத்தியோகத்தரும், பின்னால் அமர்ந்து சென்ற பெண்ணும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே கர்ப்பிணிப் பெண் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இதன்போது அவரது வயிற்றில் இருந்த குழந்தையும் உயிரிழந்து விட்டதாக மருத்துவமனை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

விபத்து தொடர்பாக சிறிய லொறியின் ஓட்டுநரான 27 வயதுடைய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த விபத்து குறித்து கவரக்குளம பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்துப் பிரிவு அதிகாரிகள் குழுவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

யாழிலிருந்து சென்ற புகையிரதம் மோதி பெண் ஒருவர் உயிரிழப்பு!!

யாழ்ப்பாணம் காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த சொகுசு ரயிலில் மோதி பெண் ஒருவர் உயிரிழந்தார். சாலியபுர பகுதியில் உள்ள பாதுகாப்பற்ற ரயில் கடவையிலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது.

இவ்வாறு விபத்தில் உயிரிழந்தவர் சாலியபுர பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாய் என தெரியவந்துள்ளது.

சுயதொழிலில் ஈடுபட்டு வந்த அவர், அநுராதபுரத்திலுள்ள கடை ஒன்றுக்குச் சென்று ‘ஐஸ் பக்கெட்டுகளை’ விற்பனை செய்துவிட்டு, மோட்டார் சைக்கிளில் மீண்டும் வீடு திரும்பிக் கொண்டிருந்த போதே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளார்.

இந்நிலையில் குறித்த ரயில் கடவையில் பாதுகாப்பு கதவுகள் இல்லை எனவும், அங்கு எந்தவொரு காவலரும் பணியில் அமர்த்தப்படவில்லை எனவும் பிரதேசமக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

 

யாழில் படகினை தவறவிட்ட அதிபருக்கு நடந்த பெரும் சோகம் : நயினாதீவில் நடந்த சம்பவம்!!

வள்ளத்திலிருந்து தவறி விழுந்து அதிபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் நயினாதீவு – குறிகட்டுவான் பகுதியில் நேற்று இடம்பெற்றுள்ளது.

நயினாதீவை பூர்வீகமாகக் கொண்ட அதிபரான நடராசா மயூரன் என்பவரே மேற்படி பரிதாபமாக உயிரிழந்தவராவார்.

அதிபரும் மற்றுமொரு ஆசிரியரும் , பயணிகள் படகினை தவறவிட்டமையால் , கடற்தொழிலாளி ஒருவரின் சிறு படகில் நயினாதீவில் இருந்து குறிகட்டுவான் நோக்கி பயணித்துள்ளனர்.

அதன் போது, கடற்காற்று காரணமாக கடல் கொந்தளிப்பாக காணப்பட்ட நிலையில், படகு கடலையில் அடிப்பட்டமையால் , படகில் இருந்து அதிபர் நிலை தடுமாறி கடலில் விழுந்துள்ளார்.

அதனை அடுத்து, உடனடியாக செயற்பட்ட படகோட்டி அதிபரை மீட்க முற்பட்ட நிலையில் , அவர் உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இவர் புங்குடுதீவு றோமன் கத்தோலிக்க பாடசாலை முன்னாள் அதிபரும், நயினாதீவு கணேச மகா வித்தியாலய தற்போதைய அதிபருமாவார்.

பிரித்தானிய புங்குடுதீவு நலன்புரிச் சங்கத்தினால் புங்குடுதீவில் மேற்கொள்ளப்படும் கல்வித் திட்டங்களுக்கு குறித்த அதிபர் பேருதவியாக செயற்பட்டார். குறித்த அதிபரின் இழப்பு புங்குடுதீவு மண்ணுக்குப் பேரிழப்பாகும்.

பரபரப்பை ஏற்படுத்திய டிக்கோயா இரட்டை கொலை சந்தேக நபர் தொடர்பில் பொலிசார் வெளியிட்ட முக்கிய தகவல்!!

ஹட்டன், டிக்கோயாவில் வயோதிப தம்பதியினர் இரட்டைக் கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த சந்தேக நபர் மீண்டும் கைது செய்யப்பட்டதாக செய்திகள் வெளியான நிலையில் அவர் இன்னும் கைது செய்யப்படவில்லை என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று (27) கைது செய்யப்பட்டு கண்டி தேசிய மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

இன்னும் தலைமறைவு

இருப்பினும், அவர் சிறை அதிகாரிகளின் கண்காணிப்பில் இருந்தபோது தப்பித்து, இன்னும் தலைமறைவாகவே உள்ளார்.

அவர் மீண்டும் கைது செய்யப்பட்டதாகக் கூறும் ஊடகச் செய்திகளை பொலிஸார் மறுத்ததுடன், தப்பிச் சென்ற சந்தேக நபர் இன்னும் கைது செய்யப்படவில்லை என்றும் தெளிவுபடுத்தியுள்ளனர்.

ஹட்டன்-டிக்கோயா நகரப் பகுதியில் கணவன்-மனைவியைக் கொலை செய்துவிட்டு, தங்க நகைகளுடன் தப்பிச் சென்றதாக சந்தேக நபர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

நகரில் உள்ள ஒரு கடைக்குள் வசித்து வந்த தம்பதியினர், வெள்ளிக்கிழமை (22) அன்று கொலை செய்யப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.