மட்டக்களப்பு – ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நீதிமன்ற வீதியில் உள்ள வீட்டின் குளியலறையில் உள்ள தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து 11 வயது சிறுமியொருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்று(28.05.2026) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஏறாவூர் 5 பிரிவு நீதிமன்ற வீதியைச் சேர்ந்த சத்யானந்தன் சதிஷா என்ற சிறுமியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த சிறுமியின் தாயார் வெளிநாட்டில் வேலைவாய்ப்பு பெற்று சென்ற நிலையில், தந்தையுடனும், சகோதரனுடம் இருந்து வந்துள்ளார்.
சம்பவ தினமான நேற்று(28) மாலை 5.30 மணியளவில் சிறுமி அவரது சகோதரன் மட்டுமே தனியாக இருந்து வந்துள்ள நிலையில், தந்தையார் வெளியில் இருந்து வீட்டிற்கு வந்த போது குளியலறையில் சுமார் இரண்டரை அடி உயரமுள்ள தொட்டியில் சிறுமி கிடப்பதை கண்டுள்ளார்.
இதனையடுத்து, சிறுமியை மீட்டு ஏறாவூர் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர். இதன்போது, சிறுமி ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் கூறியுள்ளதுடன், சடலம் பிரேத பரிசோதனைக்காக பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழகத்தைச் சேர்ந்த 19 வயது இளைஞன் ஒருவன், படிப்பை முடித்துவிட்டு எவ்வித வேலைக்கும் செல்லாமல், நாள் முழுவதும் வீட்டிலேயே முடங்கியும் நண்பர்களுடன் சுற்றியும் வந்துள்ளான்.
இதனால் கவலையடைந்த அவனது பெற்றோர், குடும்ப சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, “இப்படிப் பொறுப்பில்லாமல் இருந்தால் எப்படி? ஒழுங்காக ஏதாவது வேலைக்குப் போய் பிழைப்பைப் பார்” என்று அவனது எதிர்கால நலனுக்காகக் காரசாரமாகக் கண்டித்துத் திட்டியுள்ளனர்.
பெற்றோர் தன்னை அனைவரது முன்னிலையிலும் திட்டி அவமானப்படுத்திவிட்டதாக எண்ணிய அந்தச் சிறுவன், கடும் ஆத்திரத்திலும் மன உளைச்சலிலும் யாரிடமும் சொல்லாமல் வீட்டை விட்டு வெளியேறியுள்ளான்.
பின்னர், பெற்றோரைப் பழிவாங்க வேண்டும் என்ற குறுகிய எண்ணத்திலும், அதிர்ச்சியூட்ட வேண்டும் என்ற விபரீத நோக்கத்திலும் யாரும் எதிர்பாராத ஒரு விசித்திரமான முடிவை எடுத்துத் தற்கொலைக்கு முயன்றுள்ளான்.
அதிர்ஷ்டவசமாக, அவனது இந்த விபரீதச் செயலைக் கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் மற்றும் சாமானியப் பொதுமக்கள், அவனைப் போர்க்கால அடிப்படையில் மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அவசரச் சிகிச்சைப் பிரிவில் அனுமதித்தனர்.
அங்கு அவனுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்துள்ள உள்ளூர் போலீசார், பெற்றோர்கள் கண்டிக்கும் போது டீனேஜ் பிள்ளைகள் இது போன்ற விபரீத முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்க அவர்களுக்குத் தகுந்த மனநல ஆலோசனை வழங்க வேண்டும் என அவசர விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர்.
அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பிறந்து 6 நாட்களான ஆண் சிசு ஒன்றை வைத்தியசாலை அறையில் தாய் கைவிட்டுச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சில நாட்களுக்கு முன்னர் பிரசவத்திற்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இந்த தாய், குழந்தையைப் பிரசவித்த பின்னர், 6 நாட்களின் பின்னர் தப்பிச் சென்றுள்ளார்.
வைத்தியசாலையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஆவணங்களுக்கமைய, குறித்த தாய் இராஜாங்கனை பகுதியை சேர்ந்த 31 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டில் எதிர்காலத்தில் செய்யப்படவுள்ள எரிபொருள் விலை திருத்தத்தில், எரிபொருள் விலைக் குறைப்பை எதிர்பார்க்க முடியாது என்று இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் நிர்வாக பணிப்பாளர் மயூர நெத்திகுமரகே தெரிவித்துள்ளார்.
உலகச் சந்தையில் நிலவும் எரிபொருள் விலைகளின் அடிப்படையில், இத்தகைய சூழல் நிலவுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுடன் ஒப்பிடுகையில் எரிபொருள் விலைகளில் சில குறைவுகள் காணப்பட்டாலும்,
மத்திய கிழக்கு போருக்கு முன்பு நிலவிய விலைகளை விட உலகச் சந்தையில் எரிபொருள் விலைகள் தொடர்ந்து அதிகமாகவே உள்ளன என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இருப்பினும், உலகச் சந்தையில் இன்றைய (29) எரிபொருள் விலை பிற்பகலுக்குள் தீர்மானிக்கப்படும் என்றும், அதற்கேற்ப, அந்த நிலைமைகளைக் கருத்தில் கொண்டு நாட்டில் எரிபொருள் விலைகள் குறித்து ஒரு முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
அது மாத்திரமன்றி, எரிபொருள் விலைகள் குறித்து இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை என்றும், விலை திருத்தத்திற்காக பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் தொடங்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
எரிபொருள் விலைகளில் சிறிதளவு உயர்வு இருக்குமா அல்லது தற்போதைய விலையிலேயே விற்க முடிவு செய்யப்படுமா என்பது அந்தப் பேச்சுவார்த்தைகளின் போது தீர்மானிக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
WTI வகை கச்சா எண்ணெய் கப்பல் ஒன்று நேற்று (28) நாட்டிற்கு வருகை தந்ததாகவும், அதில் 89,000 மெட்ரிக் தொன் கச்சா எண்ணெய் இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அத்துடன், முர்பான் வகை கச்சா எண்ணெய் கப்பல் ஒன்று 31ஆம் திகதிக்குள் மீண்டும் நாட்டிற்கு வரும் என்றும், அதில் 95,000 மெட்ரிக் தொன் கச்சா எண்ணெய் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
இலங்கை மத்திய வங்கி (CBSL) வெளியிட்டுள்ள தினசரி நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 334 ரூபாயைத் தாண்டியுள்ளது.
இதன்படி, இன்றைய தினம் (29) அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை (Buying Rate) 324.45 ரூபாயாகவும், விற்பனை விலை (Selling Rate) 334.24 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.
அதனுடன் ஒப்பிடுகையில், கடந்த புதன்கிழமை (27) மத்திய வங்கி வெளியிட்ட நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 320.40 ரூபாயாகவும், விற்பனை விலை 330.81 ரூபாயாகவும் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் ஏ பிரிவில் இடம் பிடித்த மன்னார் மாவட்டம் பேசாலை கிராமத்தைச் சேர்ந்த சதீஸ்குமார் சஜிந்தினியை வரவேற்கும் நிகழ்வு இன்று (28) காலை இடம்பெற்றது.
பேசாலை புனித பற்றிமா மகா வித்தியாலய பாடசாலை நிர்வாகம் மற்றும் பழைய மாணவர்கள் இணைந்து குறித்த வீராங்கனையை வரவேற்றனர்.
மன்னார் அரச பஸ் தரிப்பிடத்தில் குறித்த வீராங்கனை மற்றும் விருந்தினர்கள் கௌரவிக்கப்பட்டு இசை வாத்தியம் முழங்க மன்னார் பஜார் பகுதியூடாக மாவட்டச் செயலகம் வரை ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார்.
பின்னர் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் வீராங்கனையை கௌரவித்தார். தொடர்ந்து குறித்த மாணவி அவரது சொந்த கிராமமான பேசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். சதீஸ்குமார் சஜிந்தினி , பேசாலை புனித பற்றிமா மகா வித்தியாலய பாடசாலையின் பழைய மாணவியவார்.
திருகோணமலை – தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 96ஆம் கட்டை பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்று வயலுக்குள் குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில் வயோதிப பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்து இன்று (29) இடம்பெற்றுள்ளதாக தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்தில், 99ஆம் கட்டையைச் சேர்ந்த 67 வயதுடைய பெண் ஒருவரே உயிரிழந்துள்ளார்.
ஆரம்பக்கட்ட தகவல்களின் படி, உயிரிழந்த பெண் இரு சிறுவர்கள் உட்பட மூவருடன் 99ஆம் கட்டையிலிருந்து 10ஆம் கொலனியில் உள்ள உறவினர் வீட்டிற்கு முச்சக்கரவண்டியில் பயணித்துக் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், முச்சக்கரவண்டி 96ஆம் கட்டை பகுதியை அண்மித்தபோது கட்டுப்பாட்டை இழந்து வயலுக்குள் குடைசாய்ந்துள்ளது. சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை கலக்கமே விபத்திற்கான காரணமாக இருக்கலாம் என ஆரம்பக்கட்ட பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
விபத்தில் முச்சக்கரவண்டி சாரதி உட்பட மேலும் இருவர் பலத்த காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்பலகாமம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
வவுனியா, கற்குளம் சாஸ்திரிகுளங்குளம் பகுதியில் விடுதலைப் புலிகளின் காலத்தில் புதைக்கப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் ஆயுதங்கள் மற்றும் நகைகளைத் தேடி இன்று (29.05.2026) முன்னெடுக்கப்பட்ட அகழ்வுப் பணி எவ்விதப் பொருட்களும் மீட்கப்படாத நிலையில் நிறைவடைந்துள்ளது.
பொதுமகன் ஒருவரின் வீட்டு வளாகத்தில் இந்தத் தேடுதல் வேட்டை மற்றும் அகழ்வுப் பணிகள் அதிஉயர் பாதுகாப்புக்கு மத்தியில் முன்னெடுக்கப்பட்டன.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) பணிப்பாளர் ஷானி அபேசேகரவின் நேரடி ஆலோசனைக்கு இணங்கவும், அவரது பிரசன்னத்துடனும் இந்த விசேட நடவடிக்கை திட்டமிடப்பட்டிருந்தது.
வவுனியா மாவட்ட பதில் நீதிமன்ற நீதவான் தி.திருஅருளின் நேரடி கண்காணிப்பில், பொலிஸாரின் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இந்த அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.
குறித்த வீட்டின் வளாகத்தில், சந்தேகத்திற்குரியதாகக் கருதப்பட்ட நான்கு வெவ்வேறு இடங்களில் எக்ஸ்கவேட்டர் (Excavator) இயந்திரங்கள் மூலம் ஆழமாக அகழ்ந்து சோதனையிடப்பட்டது.
எனினும், பல மணிநேரம் நீடித்த இந்தத் தீவிர தேடுதல் நடவடிக்கையின் முடிவில், சந்தேகிக்கப்பட்டவாறு ஆயுதங்களோ அல்லது தங்க நகைகளோ என எந்தவொரு பொருளும் கிடைக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.
எவ்விதப் பொருட்களும் கண்டெடுக்கப்படாததைத் தொடர்ந்து அகழ்வுப் பணிகள் தற்காலிகமாகக் கைவிடப்பட்டு, பாதுகாப்புத் தரப்பினர் அவ்விடத்திலிருந்து வெளியேறியுள்ளனர்.
வவுனியா ஓமந்தைப் பகுதியில் மாட்டுடன் மோதுண்டு கட்டுப்பாட்டை இழந்த முச்சக்கரவண்டி எதிரே வந்த டிப்பர் வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் முச்சக்கரவண்டி சாரதி படுகாயமடைந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பில் டிப்பர் வாகன சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ் விபத்து குறித்து மேலும் தெரியவருவதாவது, ஏ9 வீதியூடாக பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கரவண்டி, வீதியில் திடீரென குறுக்கே வந்த மாட்டுடன் மோதி விபத்துக்குள்ளானது. அவ்வேளையில், கட்டுப்பாட்டை இழந்த முச்சக்கரவண்டி, எதிரே வந்த டிப்பர் வாகனத்துடனும் மோதியுள்ளது.
இந்த இரட்டை விபத்தில் முச்சக்கரவண்டி பலத்த சேதமடைந்ததுடன், அதன் சாரதி படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு, வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். முச்சக்கரவண்டி டிப்பர் வாகனத்துடன் மோதியதன் அடிப்படையில், டிப்பர் வாகனத்தின் சாரதி ஓமந்தைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சாரதியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஓமந்தைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
ஜப்பானின் Ibaraki மாகாணத்தில் உள்ள Tsuchiura நகர பொலிஸ் நிலையத்தில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்தபோது, இலங்கை மாணவன் உயிரிழந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மே 19ஆம் திகதி உயிரிழந்த இலங்கை மாணவனின் மர்ம மரணம் தொடர்பில் அவரது தங்கை செய்த முறைப்பாட்டினை ஜப்பனிய பொலிஸார் ஏற்றுக்கொள்ளவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
தற்போது ஜப்பானில் வசித்து வரும் உயிரிழந்த மாணவனின் தங்கையான சத்யானி ஷாக்யா என்பவரே இந்த முறைப்பாட்டை செய்துள்ளார்.
உயிரிழந்த மாணவனின் சடலம்
உயிரிழந்த மாணவனின் சடலம் இதுவரை இலங்கைக்கும் அனுப்பப்படாமல், ஜப்பானில் உள்ள ஒரு பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது.
ஹம்பாந்தோட்டை, பெலியத்த மஹாஹீல்ல பிரதேசத்தை சேர்ந்த 22 வயதுடைய விசக்ஷன, 2023ஆம் ஆண்டு தொழில்துறை கல்விநெறி ஒன்றிற்காக ஜப்பான் சென்றுள்ளார்.
உயிரிழக்கும் போது அவர் Toride நகரில் வசித்து வந்ததாக ஜப்பனிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பெப்ரவரி 22ஆம் திகதி, விசக்ஷன தனது நண்பர்கள் சிலருடன் Tsuchiura நகருக்கு பொருட்கள் வாங்கச் சென்றுள்ளார்.
அங்குள்ள ஒரு கடையில், அவரும் மற்றொரு யுவதியும் பொருட்களைத் திருடியதாகக் கூறி கடை உரிமையாளர் முறைப்பாடு செய்துள்ளார். முறைப்பாட்டின் அடிப்படையில் அவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
பொலிஸாரின் அலட்சியம்
இது குறித்து ஜப்பானில் உள்ள அவரது தங்கைக்கு பொலிஸார் தகவல் வழங்கியதை அடுத்து, அவர் தூதரகத்தின் மூலம் வழக்கறிஞர் ஒருவரை ஏற்பாடு செய்து சட்ட நடவடிக்கைகளுக்கு தயாராகியுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதிலும், குற்றச்சாட்டுகளை நிரூபிக்க போதிய ஆதாரங்கள் இல்லாததால் வழக்கு தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு வந்தது.
ஜப்பனிய பொலிஸ் தடுப்புக்காவலில் பல வாரங்களாக வைக்கப்பட்டிருந்ததால் அந்த இளைஞரின் உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளது.
தனக்கு தலைவலியும் நெஞ்சுவலியும் இருப்பதாக பொலிஸாரிடம் கூறிய போதும், அதனைப் பொருட்படுத்தவில்லை என்று உயிரிழந்த இளைஞர் தனது தங்கையிடம் பலமுறை தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், பெப்ரவரி 22 முதல் மூன்று மாதங்களுக்கும் மேலாகத் தொடர்ந்து விசக்ஷன பொலிஸ் நிலையத் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் கடந்த மே 19ஆம் திகதி மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக அவரது தங்கை சத்யானி ஷாக்யாவுக்கு ஜப்பனிய பொலிஸார் அறிவித்துள்ளனர்.
தனது சகோதரனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி தங்கை செய்த முறைப்பாட்டினையும் தற்போது ஜப்பானிய பொலிஸார் நிராகரித்துள்ளனர்.
தென்மேற்கு பருவக்காற்று நாடு முழுவதும் நிலைபெற்றுள்ளதன் காரணமாக, நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் மழை நிலைமை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இப்பகுதிகளின் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும், வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் தெற்கு மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 30 முதல் 40 கிலோமீற்றர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக ஏற்படும் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய விபத்துக்களை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
டிப்பர் வாகனம் மற்றும் முச்சக்கர வண்டி மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்ததுடன் மேலும் இருவர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அம்பாறை மாவட்டம் புறநகர் பகுதியான புத்தங்கல நான்கு வழி சந்தி பகுதியில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன் படுகாயமடைந்த இருவர் அம்பாறை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நேற்று செவ்வாய்க்கிழமை(26) இரவு சுமார் 8.30 மணியளவில் இடம்பெற்ற இவ்விபத்தில் மூச்சக்கர வாகன சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அத்துடன் அதில் பயணம் செய்த மூன்று பேரில் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார். ஒரு பெண்ணும் ஒரு குழந்தையும் உயிர் தப்பி இருந்தனர்.
குறித்த விபத்தின் போது டிப்பர் வாகனம் புத்தங்கல பகுதியில் இருந்து பிலிமகல நோக்கி சென்று கொண்டிருந்ததுடன் அதே சமயம் முச்சக்கர வண்டி பண்டாரநாயக்க பாலிகா வித்தியாலயப் பகுதியிலிருந்து அம்பாறை பொது மருத்துவமனைக்குச் சென்று கொண்டிருந்ததாக விபத்தினை நேரில் கண்டவர்கள் குறிப்பிட்டனர்.
அத்துடன் குறித்த விபத்தின் போது டிப்பர் வாகன சாரதி வழிவிடும் விதியை மீறியதால் பிரதான சாலையில் சென்று கொண்டிருந்த முச்சக்கர வண்டி டிப்பர் மீது மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டிருந்தது.
அத்துடன் குறித்த விபத்தை தொடர்ந்து டிப்பர் வாகன சாரதி வாகனத்தை நிறுத்தாமல் தொடர்ந்து ஓட்டிச் சென்று பின்னர் அவர் டிப்பர் வாகனத்துடன் அம்பாறை தலைமையக பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தார். இவ்வாறு பொலிஸாரிடம் சரணடைந்த பின்னர் கைது செய்யப்பட்டார்.
மேலும் முச்சக்கர வண்டி சாரதி விபத்தின் போது சம்பவ இடத்தில் உயிரிழந்தார். இவர் அம்பாறை நவகம்புர பகுதியைச் சேர்ந்தவர் ஆவார். அத்துடன் படுகாயமடைந்த அம்பாறை லயன்ஸ் கழகத்தைச் சேர்ந்த துலஞ்சன இமேஷ் அம்பாறை பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இரவு சுமார் 10.30 மணியளவில் உயிரிழந்தார்.
மேலும் நவகம்புர லயன்ஸ் கழகத்தை சேர்ந்த சுதேஷ் மஹின்சாவும் அவரது மூன்று வயது மகள் ஹசரி லியாராவும் அம்பாறை பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்தில் மருத்துவமனையில் உயிரிழந்த சுதேஷ் மஹின்சாவின் கணவர் துலஞ்சனா இமேஷ் என பொலிஸார் தெரிவித்தனர்.
இது தவிர விபத்தின் போது டிப்பர் வாகன சாரதி மதுபோதையில் இருந்தது தற்போதைய விசாரணையில் தெரியவந்துள்ளதாக அம்பாறை மாவட்ட தலைமையக பொலிஸ் பிரிவின் சிரேஷ்ட அதிகாரி தெரிவித்தார்.
குறித்த சாரதியின் கவனக்குறைவான சாரதியத்தினால் தான் விபத்து ஏற்பட்டதாக ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.எனவே இந்த சாரதி மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
அம்பாறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ட்ராக்டர் சந்திக்கு அருகில் நேற்றிரவு இடம்பெற்ற கோர விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.
புத்தங்கல பகுதியிலிருந்து ஹோல்மன்கல நோக்கிப் பயணித்த டிப்பர் வாகனம், பாலிகா சுற்றுவட்டம் பகுதியிலிருந்து அம்பாறை பொது வைத்தியசாலை நோக்கிச் சென்ற முச்சக்கர வண்டியுடன் மோதி நேற்றிரவு இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் முச்சக்கர வண்டியில் பின்னால் பயணித்த மேலும் மூவர் அம்பாறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு உயிரிழந்தவர்கள் தடயந்தலாவ மற்றும் நவகம்புர பிரதேசங்களைச் சேர்ந்த 23 மற்றும் 24 வயதுடைய இரு இளைஞர்கள் ஆவர்.
இந்த விபத்துடன் தொடர்புடைய டிப்பர் வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். விபத்து குறித்து அம்பாறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கை வாழ் பௌத்தர்களின் புனிதமிக்க வெசாக் பண்டிகையை முன்னிட்டு, இன்று (27) முதல் ஜூன் 02 ஆம் திகதி வரை ‘வெசாக் வாரம்’ பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இதனை முன்னிட்டு இறைச்சிக்கடைகள், இறைச்சிக்கூடங்கள், பந்தய மையங்கள், சூதாட்ட விடுதிகள் மற்றும் கேளிக்கை விடுதிகளை மூட முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு மேற்கூறிய இடங்கள் இன்று (27) முதல் ஜூன் 2 வரை வெசாக் வாரம் முழுவதும் மூடப்பட்டிருக்கும் என்று அறிவித்துள்ளது.
இதற்கிடையில், மே 30, 31 மற்றும் ஜூன் 01 ஆகிய திகதிகளில் நாடு முழுவதும் உள்ள இறைச்சிக் கூடங்கள் மற்றும் இறைச்சிக்கடைகளை மூடவும், பல்பொருள் அங்காடிகளில் இறைச்சி விற்பனையை நிறுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, வெசாக் பண்டிகையை முன்னிட்டு கடந்த காலங்களில் அமைக்கப்பட்டிருந்த பேய் மாளிகைகள் மற்றும் விசித்திரமான நடனங்கள், பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பயன்பாடு போன்றவற்றை முற்றாகத் தவிர்க்குமாறு வழிகாட்டல்கள் வழங்கப்பட்டுள்ளன.
அரச வெசாக் தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 31 ஆம் திகதி (ஞாயிற்றுக்கிழமை) அரசாங்க விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுநிர்வாகம், மாகாணசபைகள் மற்றும் உள்ளுராட்சிமன்றங்கள் அமைச்சர் சந்தன அபேரத்ன வர்த்தமானி அறிவித்தலையும் பிரசுரித்துள்ளார்.
2026.03.30 ஆம் திகதியன்று எடுக்கப்பட்ட அமைச்சரவை தீர்மானத்துக்கமைய, 2026.05.27 ஆம் திகதி முதல் 2026.06.02 ஆம் திகதி வரையிலான காலப்பகுதி வெசாக் வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கமைய, இன்று மே 27ஆம் திகதி முதல் ஜூன் 02ஆம் திகதி வரையிலான காலப்பகுதியை வெசாக் வாரமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 2026ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் உற்சவத்தின் உத்தியோகபூர்வ நிகழ்வு மே மாதம் 30ஆம் திகதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதற்கமைய, அடுத்த நாளான மே மாதம் 31ஆம் திகதியை அரசாங்க விடுமுறை தினமாக பிரகடனப்படுத்தி பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலையும் அண்மையில் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
2570 ஸ்ரீ புத்த வருடத்தை முன்னிட்டு, 2026 ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் விழாவை மாத்தறை, திஹகொட மிதெல்லவல புராதன விகாரையை மையப்படுத்தி நடத்துவதற்குத் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
அதன்படி, இந்த ஆண்டுக்கான அரச வெசாக் விழா, ஜனாதிபதி அநுர குமார திசநாயக்கவின் தலைமையில், மாத்தறை, திஹகொடவில் உள்ள மிதெல்லவல விகாரையில் இன்று நடைபெற உள்ளது.
இதற்கிடையில், நாடு முழுவதும் வெசாக் விழாக்களை ஏற்பாடு செய்வதில் பின்பற்றப்பட வேண்டிய வழிகாட்டுதல்களைக் கொண்ட சுற்றறிக்கையைப் பின்பற்றுமாறும் பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.