இலங்கையில் நடந்த கொடூரம் : மனைவியை விரட்டி விரட்டி கொலை செய்த கணவன்!!

கேகாலை, அரநாயக்க பிரதேச வைத்தியசாலையில் பணியாற்றி வந்த பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். 35 வயதுடைய ருவினி மதுஷிகா என்ற செவிலிய பெண்ணே கொலை செய்யப்பட்டுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கூர்மையான ஆயுதத்தால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஒரு பிள்ளையின் தாயான இவர், தனது கணவருடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்தார்.

இந்த நிலையில், தற்காலிகமாக வாடகை வீட்டில் வசித்து வந்த நிலையில் கொலை செய்யப்பட்டுள்ளார். கொலை செய்யப்பட்ட செவிலியருக்கும், வீதி அபிவிருத்தி அதிகார சபையில் பணியாற்றும் 33 வயதுடைய மனோஜ் பெத்தும் அகலங்க என்ற நபருக்கும் இடையே நீண்டகாலமாக தொடர்பு இருந்துள்ளது.

கடந்த முதலாம் திகதி பணி முடிந்து வீடு திரும்பிய செவிலியருக்கும், சந்தேக நபருக்கும் இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கொலையில் முடிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தன்று இரவு 7.30 மணியளவில், முன்னாள் மனைவி வீதியில் சென்ற வந்தபோது, அவரைத் துரத்திச் சென்ற சந்தேக நபர் கத்தியால் அவரது மார்பில் குத்தியுள்ளார்.

இரத்த வெள்ளத்தில் வீதியில் விழுந்து கிடந்த அவரைக் கண்ட அப்பகுதி மக்கள், உடனடியாக அரநாயக்க வைத்தியசாலையில் அனுமதித்தனர். எனினும், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் உறுதிப்படுத்தினர்.

கேகாலை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் மேற்பார்வையில், அரநாயக்க பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்தனர்.

இதன்போது, சந்தேக நபர் ஏற்கனவே திருமணமாகி சட்ட ரீதியாக பிரிந்தவர் என்பதும், செவிலியருடன் ஏற்பட்ட தகராறு காரணமாகவே இந்த கொலையை செய்ததும் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மாவனெல்லை நீதவான் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை : 3.3 மில்லியன் ரூபாவை இழந்த பெண்!!

காலி, தொடந்துவ பகுதியில் பெண்ணிடம் தொலைபேசி நிறுவனத்திடமிருந்து பரிசு வென்றதாகக் கூறி, அவரது வங்கிக் கணக்கிலிருந்து 3.3 மில்லியன் ரூபாய் மோசடி செய்த சந்தேக நபரைக் கைது செய்ய காலி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

அந்தப் பெண்ணை தொலைபேசியில் அழைத்த ஒருவர், தொலைபேசி நிறுவனத்திலிருந்து பேசுவதாகவும், தொலைபேசி நிறுவனத்திடமிருந்து 257,000 ரூபாய் பரிசை வென்றதாகவும் கூறியுள்ளார்.

சுமார் அரை மணி நேரம் அவருடன் தொலைபேசியில் உரையாடிய பின்னர் பரிசுப் பணத்தை வரவு வைக்க அவருடைய வங்கிக் கணக்கு எண், அவருடைய ஏடிஎம் அட்டையின் புகைப்படம் மற்றும் அதன் பின் எண்ணைக் வழங்குமாறு கோரியுள்ளார்.

அவர் மிகவும் மகிழ்ச்சியடைந்து, கணக்கு எண், ஏடிஎம் அட்டையின் புகைப்படம் மற்றும் அதன் பின் எண்ணை அந்த நபரின் தொலைபேசிக்கு அனுப்பினார்.

மறுநாள், அவர் கணக்கு வைத்திருந்த தனியார் வங்கிக்குச் சென்றபோது, ​​அவருடைய கணக்கிலிருந்து 3.3 மில்லியன் ரூபாய் பணம் எடுக்கப்பட்டதைக் கண்டுபிடித்தார்.

பின்னர், வங்கியில் இது குறித்து விசாரித்தபோது, ​​தொலைபேசி அழைப்பு வந்த அதே நாளில் பணம் எடுக்கப்பட்டதை அறிந்தார்.

பணத்தை வைப்பு செய்த பிறகு அல்லது எடுத்த பிறகு, கணக்கு வைத்திருப்பவரின் கையடக்க தொலைபேசிக்கு வங்கியிலிருந்து ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது.

ஆனால் அவரது தொலைபேசிக்கு வந்த செய்தியும் மறைக்கப்பட்டுள்ளது. பின்னர் அவர் இது குறித்து காலி பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதற்கமைய, அவ்வாறு எடுக்கப்பட்ட 3.3 மில்லியன் ரூபாய் சில நிமிடங்களில் எட்டு கணக்குகளுக்கு மாற்றப்பட்டதாக ஆரம்ப விசாரணையில் தெரியவந்தது.

அவருக்கு அழைப்பு விடுத்த தொலைபேசியும் இயங்கவில்லை. இந்த மோசடியில் ஈடுபட்ட சந்தேக நபரை கைது செய்வதற்காக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வைத்தியசாலைக்குச் சென்ற குடும்பப் பெண்ணை காணவில்லை : விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை!!

மட்டக்களப்பில் வைத்தியசாலைக்குச் சென்ற குடும்பப் பெண் இதுவரை வீடு திரும்பவில்லை என அவரது உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

மட்டக்களப்பு- போரதீவுப் பற்றுப் பிரதேசத்திற்குட்பட்ட நாற்பதாம் கிராமம்(வம்மியடியூற்று) எனும் கிராமத்தைச் சேரந்த 45 வயதுடைய நளாயினி எனும் குடும்பப் பெண்ணே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கடந்த சனிக்கிழமை(28.02.2026) அன்று குறித்த பெண் பழுகாமம் வைத்தியசாலைக்குச் சென்று பின்னர் பழுகாமத்திலிருக்கின்ற வங்கி ஒன்றுக்கும் சென்றுவிட்டு அன்றையதினம் முற்பல் 11 மணியளவில் மீண்டும் அவரது வீடு செல்வதற்காக பேருந்துக்காக காத்திருந்துள்ளார்.

அன்றயதினம் 11 மணிவரைக்கும் பெண்ணின் பைபேசி தொடர்பிலிருந்துள்ளது. 11 மணிக்குப் பின்னர் அவரது தொலைபேசி இயங்கவில்லை, எனவும் அவரது உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் அவரது உறவினர்கள் வெல்லாவெளி மற்றும் களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு செய்துள்ளனர்.

தமது மகளுக்கு என்ன நடந்தது எவ்வாறு காணாமல் போனார் என்பது தமக்குத் தெரியாதுள்ளது. எனவே எனது மகளைக் கண்டு பிடித்துத் தருமாறு காணாமல் போயுள்ள பெண்ணிய் தாய் உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்நிலையில் தமது அம்மாவிற்கு என்ன நடந்தது என நாம் தவித்துக் கொண்டிருக்கின்றோம். இதுவரையில் அம்மாவை நாம் தேடி அலைந்து திரிகின்றோம், அம்மாவைக் கண்டு பிடித்து தாருங்கள் என அப்பெண்ணின் பிள்ளைகள் தெரிவிக்கின்றனர்.

அந்தப் பெண் காணாமல் போனபோது சாம்பல் நிற சாறி அணிந்திருந்துள்ளார்.

பெண்ணைக் கண்டால் 075 694 0655, 077 384 8385, 074 157 7381 ஆகிய கைபேசி இலக்கங்களுக்குத் தகவல் தருமாறும் உறவினர்கள் தெரிவித்துள்ளார்.

க.பொ.த சாதாரணதர பரீட்சை பெறுபேறுகள் குறித்து வெளியான அறிவிப்பு!!

2025 (2026) க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் தொடர்பான அறிவிப்பொன்றை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ்.இந்திகா குமாரி லியனகே வெளியிட்டுள்ளார்.

அதன்படி குறித்த பெறுபேறுகள் ஏப்ரல் 30ஆம் திகதிக்குப் பின் வெளியிடப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த ஆண்டுக்கான விடைத்தாள் திருத்தும் பணிகள் மார்ச் 12ஆம் திகதி முதல் ஏப்ரல் 10 ஆம் திகதி வரை இரண்டு கட்டங்களாக நடத்தப்படும்.

அதன்படி, முதல் கட்டம் மார்ச் 12 முதல் 23 ஆம் திகதி வரையிலும், இரண்டாம் கட்டம் ஏப்ரல் 01 முதல் 10 ஆம் திகதி வரையிலும் நடைபெறும். நடைமுறைத் தேர்வுகள் ஏப்ரல் 22 முதல் 30ஆம் திகதி வரை நடைபெறும்.

இந்த செயல்முறை முடிந்தவுடன், தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கான திகதி குறித்து முடிவு செய்யப்படும் என கூறினார்.

மூடப்படும் ஹோர்முஸ் நீரிணை : இலங்கைக்கான எரிபொருள் இறக்குமதி தொடர்பில் அரசாங்கத்தின் அறிவிப்பு!!

ஹோர்முஸ் நீரிணை மூடப்படுவதால், அது இலங்கையின் எரிபொருள் இறக்குமதிக்கு நேரடிப் பாதிப்பை ஏற்படுத்தாது என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று (04.03.2026) உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலை காரணமாக ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) மூடப்படுவதால், அது இலங்கையின் எரிபொருள் இறக்குமதிக்கு நேரடிப் பாதிப்பை ஏற்படுத்தாது.

இலங்கை தற்போது எரிபொருள் இறக்குமதிக்கு ஹோர்முஸ் நீரினையைப் பயன்படுத்துவதில்லை. ஹோர்முஸ் நீரிணைக்கு மாற்றாக, இலங்கை தற்போது ஆப்பிரிக்க நன்னம்பிக்கை முனை ஊடாகச் செல்லும் கடல் வழித்தடங்களையே எரிபொருள் இறக்குமதிக்குப் பயன்படுத்தி வருகிறது.

இந்த நீரிணை மூடப்படுவது உலகளாவிய எரிபொருள் உற்பத்தி மற்றும் போக்குவரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.

என்றாலும், இலங்கைக்கு அது ஒரு பிரதான தடையாக அமையாது. ஏற்கனவே மாற்று வழிகள் மூலமே எரிபொருள் கொண்டு வரப்படுவதால், இந்த நெருக்கடி நிலை இலங்கையைப் பாதிக்காது என குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் அதிகாலை இடம்பெற்ற கொடூரம் : இளம் யுவதி கழுத்தறுத்து கொலை!!

கொழும்பு – கஹதுடுவ ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றிய இளம் யுவதியொருவர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டுள்ளதாக கஹதுடுவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

புளத்சிங்கள, கோவின்ன, நாரகல வெடகே வட்டத்தில் வசித்து வந்த பணிபுரிந்த 25 வயதுடைய திருமணமாகாத யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

ஆடைத்தொழிற்சாலையில் உதவியாளராக பணியாற்றியதாக கூறப்படும் சந்தேகநபர், கொலைக்கு பிறகு தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த கொலைக்குப் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இரத்தக்கறை படிந்த கத்தியை பொலிஸார் மீட்டுள்ளனர்.

கொலை செய்யப்பட்ட இளம் பெண் கடந்த ஆண்டு ஆடைத்தொழிற்சாலையில் பணிக்கு வந்த நிலையில், சந்தேகநபர் 2024 ஆண்டு பணிக்கு சேர்ந்துள்ளார்.

பதுளை, கெப்பெட்டிபொலவை சேர்ந்த சந்தேகநபர், திருமணமானவர் எனவும், கொலை செய்யப்பட்ட யுவதியும், சந்தேகநபரும் சுமார் ஒரு வருடமாக காதல் உறவில் இருந்து வந்துள்ளனர்.

இதன்போது இருவருக்கும் ஏற்பட்ட பிரச்சினையினால் இளம் பெண் பல நாட்களாக சந்தேக நபரிடம் பேசாமல் தவிர்த்து வந்ததாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இன்று காலை, ஆடைத்தொழிற்சாலையின் பிரதான நுழைவாயிலில் இளம் யுவதிக்கும், சந்தேகநபருக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தை தொடர்ந்து கழுத்தறுக்கு கொலையை செய்ததாக கூறப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளில், இளம் பெண்ணின் கழுத்தை அறுத்த பிறகு, சந்தேக நபர் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்று, அவர் தங்கியிருந்த வீட்டிற்கு சென்று துணிப்பையை எடுத்துக்கொண்டு தப்பிச்சென்றுள்ளார்.

இதன்போது படுகாயமடைந்த இளம் யுவதி மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். இளம் பெண்ணின் கழுத்தில் பலத்த காயம் ஏற்பட்டதாக மருத்துவமனை செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

சம்பவம் குறித்து கஹதுடுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

தங்க விலையில் திடீர் மாற்றம் : இலங்கையில் நகை வாங்க காத்திருந்தோருக்கான செய்தி!!

கொழும்பு செட்டியார்தெரு தகவல்களின் படி இன்றைய தினம் 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 407000 ரூபாவாக பதிவாகியுள்ளது. அத்துடன் 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 376500 ரூபாவாக காணப்படுகின்றமை குறிப்பிடுகிறது.

இதேவேளை நேற்றைய தினம் (03.03.2026) கொழும்பு செட்டியார்தெருவின் தகவல்களின் படி 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 393000 ரூபாவாக பதிவாகியிருந்தது.

அத்துடன் 24 கரட் தங்கப்பவுணொன்றின் விலையானது 425000 ரூபாவாக காணப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முதலாம் இணைப்பு : சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகள் இன்று வீழ்ச்சியை சந்தித்துள்ளதாக தெரியவருகிறது. அதற்கமைய, ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 5,171 டொலராக விற்பனை செய்யப்படுகிறது.

அதேநேரம், வெள்ளி ஒரு அவுண்ஸ் இன்றையதினம் 84.63 டொலராக விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த சில நாட்களாக உள்நாட்டு சந்தையில் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்ட நிலையில், சர்வதேச விலைக் குறைவு காரணமாக இன்று இலங்கையிலும் விலை குறைய வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.

 

யாழில் காணாமல் போன கடற்றொழிலாளர்கள் : முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு!!

யாழ்ப்பாணம் – தையிட்டி பகுதியில் இருந்து கடந்த 27ஆம் திகதி கடற்றொழில் நடவடிக்கைகளுக்காக சென்ற இருவர் இதுவரை திரும்பி வரவில்லை என அவர்களது உறவினர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

தங்கராசா அமல்ராஜ் (வயது 44), செல்வராசா ராஜ்குமார் (வயது 30) என்ற இரண்டு கடற்றொழிலாளர்களே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது குறித்து கடற்றொழிலாளர்களது உறவுகள் கருத்து தெரிவிக்கையில், அவர்கள் கடலில் இரண்டு நாட்கள் தங்கி இருந்து கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றவர்கள்.

கடற்படையினர் நடவடிக்கை

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் கரையை வந்தடைந்திருக்க வேண்டும். இருப்பினும் இன்றுவரை திரும்பி வரவில்லை. அவர்கள் இருவரையும் நேற்றையதினம் (03) இந்திய கடற்றொழிலாளர்கள் கடலில் கண்டதாகவும், அவர்களுக்கு சாப்பாடு கொடுத்தாகவும் கூறினர்.

இந்திய எல்லையில் நின்றால் இந்திய கடற்படையினர் கைது செய்து விடுவார்கள் என்றும், ஆகையால் கரையோரமாக செல்வதாகவும் அவர்கள் தங்களுக்கு கூறிவிட்டு சென்றதாக இந்திய கடற்றொழிலாளர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து நாங்கள் கடற்படையினர், பொலிஸார் என அனைவருக்கும் தெரியப்படுத்தியும் அவர்கள் எந்தவிதமான நடவடிக்கைகளும் இதுவரை எடுக்கவில்லை.

தேடுதல் நடவடிக்கை

முல்லைத்தீவு பகுதியைச் சேர்ந்த கடற்றொழிலாளர் ஒருவர் காணாமல் போன நிலையில் அவரை உலங்குவானூர்தி மூலம் மீட்டனர். அதுபோல இவர்களையும் ஏன் காப்பாற்ற கூடாது? இதுவரை கடற்படை எந்தவொரு தேடுதல் நடவடிக்கைகளும் மேற்கொள்ளவில்லை.

இதுவரை 3500 லீட்டர்கள் எரிபொருளை பயன்படுத்தி நாங்களே தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டோம். எல்லை தாண்டி சென்று தேடவும் முடியாது.

நாங்கள் தேடி சென்றவேளை இந்திய கடற்படையினர் எங்களை விரட்டினர். எனவே அவர்களை உயிருடன் காப்பாற்ற விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் கடற்பரப்பில் விபத்துக்குள்ளான ஈரானிய கப்பல் : நூற்றுக்கணக்கானோரை தேடி தொடரும் மீட்புப் பணி!!

புதிய இணைப்பு : இலங்கை கடல் எல்லைக்குள் விபத்துக்குள்ளான ஈரானிய கப்பலில் மேலும் இருவர் மீட்கப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் சி.டி.ஆர் சம்பத் தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில், வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 32ஆக அதிகரித்துள்ளதுடன், அவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அத்துடன், கப்பலில் 180 பேர் பயணித்துள்ளதாகவும், அவர்களை தேடும் பணிகளில் கடற்படை சுழியோடிகள் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, ஏனையோருக்கு என்ன நடந்தது என்பது பற்றி கடற்படை ஆராய்ந்து வருவதுடன், இன்று (04) மாலை 3 மணியளவில் அது தொடர்பில் அவசர ஊடக சந்திபொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இரண்டாம் இணைப்பு : இலங்கை கடற்பரப்பில் விபத்துக்குள்ளான ‘ஐரிஸ் தேனா’ என்ற ஈரானிய கப்பலில் இருந்த 180 பேரில் சுமார் 30 பேர் காயமடைந்து காலி தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஈரான் கப்பலொன்று காலி கடலில் விபத்துக்குள்ளாகியுள்ளதா அல்லது அதன் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டுள்ளதா என சற்றுமுன்னர் நாடாளுமன்றத்தில் சாமர சம்பத் எம்.பினால் கேள்வியெழுப்பப்பட்டிருந்து.

இதற்கு பதிலளிக்கும் விதமாக அமைச்சர் இன்று (04) நாடாளுமன்றத்தில் இதனை தெரிவித்துள்ளார்.

1979 ஆம் ஆண்டின் ‘சர்வதேச கடல்சார் தேடல் மற்றும் மீட்பு’ (International Convention on Maritime Search and Rescue) உடன்படிக்கையில் இலங்கை கையெழுத்திட்டுள்ளது.

இந்த உடன்படிக்கையின் படி, கடலில் ஆபத்தில் இருக்கும் எவருக்கும் அவர்களின் தேசியத்தைப் பாராது மனிதாபிமான அடிப்படையில் உதவ வேண்டியது இலங்கையின் கடமையாகும் என்பதை அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.

முதலாம் இணைப்பு : காலி கடற்பரப்பில் விபத்துக்குள்ளான கப்பல் ஈரானுக்குச் சொந்தமானது என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.

காலி கடல் பகுதியிலிருந்து சுமார் 40 கடல் மைல் தொலைவில் உள்ள கடல் பகுதியில் கப்பலொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

மீட்பு பணிகள் தீவிரம்

குறித்த கப்பலில் உள்ள கடற்றொழிலாளர்கள் மற்றும் ஊழியர்களைப் பாதுகாப்பாக மீட்பதற்காக இலங்கை கடற்படை மற்றும் விமானப்படை இணைந்து விசேட கூட்டு நடவடிக்கையொன்றை ஆரம்பித்துள்ளன.

குறித்த கப்பல் விபத்துக்குள்ளான பின்னர் அபாய சமிக்ஞையை (Distress call) வெளியிட்டதாகவும், இதனையடுத்து மீட்புப்பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அதிகாலை 5:08 மணியளவில் கடற்படை மற்றும் கடலோர பாதுகாப்பு திணைக்களத்திற்கு அவசர செய்தி கிடைத்ததினையடுத்து உடனடியாகச் செயல்பட்ட இலங்கை கடற்படை, காலை 6:00 மற்றும் 7:00 மணியளவில் மீட்புப் படகுகளை அனுப்பி வைத்தது.

கடலில் நிலவும் சீரற்ற வானிலைக்கு மத்தியிலும், மீட்பு பணிகள் முப்படையினரால் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, ஈரான் கப்பலொன்று காலி கடலில் விபத்துக்குள்ளாகியுள்ளதா அல்லது அதன் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டுள்ளதா என சற்றுமுன்னர் நாடாளுமன்றத்தில் சாமர சம்பத் எம்.பினால் கேள்வியெழுப்பப்பட்டுள்ளது.

மனைவி, 3 மகள்களையும் கழுத்தறுத்துக் கொன்று விட்டு தப்பியோடிய கணவன்!!

சூதாட்டப் பழக்கத்தால் கடன் சுமை அதிகரித்த நிலையில், என்ன செய்வது என்று தெரியாமல் காய்கறி வியாபாரி ஒருவர் தனது மனைவி மற்றும் மூன்று பெண் குழந்தைகளையும் கழுத்தறுத்துக் கொடூரமாகக் கொலை செய்துவிட்டு, அங்கிருந்து தப்பியோடிய சம்பவம் டெல்லியில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி அசாத்பூர் மண்டி பகுதியைச் சேர்ந்தவர் முன்ஜன் கேவாட். ஆன்லைன் சூதாட்ட விளையாட்டிற்கு அடிமையாகி இருந்ததால் பல லட்சம் ரூபாய் கடன் ஏற்பட்டுள்ளது.

சூதாட்டத்தில் பணத்தை இழந்த கேவாட்டிற்கு, கடன் கொடுத்தவர்கள் தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வந்துள்ளனர். கடன் சுமை அதிகரித்ததால், குடும்பத்தோடு தற்கொலை செய்துகொள்ள அவர் முடிவெடுத்துள்ளார்.

கடந்த புதன்கிழமை அன்று, தனது மனைவி அனிதா (27) மற்றும் 5, 4, 3 வயதுடைய மூன்று பெண் குழந்தைகளை அவர் கழுத்தறுத்துக் கொடூரமாகக் கொலை செய்தார்.

குடும்பத்தினர் அனைவரையும் கொன்றுவிட்டு, தான் தற்கொலை செய்து கொள்ளத் துணிவில்லாமல் கேவாட் அங்கிருந்து தப்பி ஓடினார். ரயில் மூலம் ராஜஸ்தான் மாநிலத்திற்குச் சென்று தலைமறைவானார்.

அனிதாவின் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதை அடுத்து, அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில் போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு ரத்த வெள்ளத்தில் கிடந்த நான்கு பேரின் உடல்களையும் மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

தப்பியோடிய கொலையாளி கேவாட்டைப் பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டது. தொழில்நுட்ப உதவியுடன் அவர் இருக்கும் இடத்தை மோப்பம் பிடித்த போலீசார், ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் வைத்து அவரைக் கைது செய்தனர்.

கைதான கேவாட் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார். கடன் கொடுத்தவர்களின் மிரட்டல் காரணமாகவே இந்தத் தீவிர முடிவை எடுத்ததாக அவர் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

ஆன்லைன் ரம்மி மற்றும் இதர சூதாட்டப் பழக்கங்களால் சமீபகாலமாக உயிரிழப்புகள் அதிகரித்து வருவது கவலைக்குரிய ஒன்றாக மாறியுள்ளது. கடன் பிரச்சினைகளால் பாதிக்கப்படுபவர்கள் தற்கொலை அல்லது இது போன்ற விபரீத முடிவுகளை எடுப்பதற்குப் பதிலாக, முறையான ஆலோசனைகளை நாட வேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

பாடசாலை மாணவர்கள் 2 பேர் குட்டையில் மூழ்கி பலியான சோகம்!!

பள்ளி விடுமுறை நாளில் குளிக்க சென்ற மாணவர்கள் குட்டையில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் திருப்பூரில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே அனந்தகிரி அமுதன் கார்டன் பகுதியைச் சேர்ந்த தரணிஷ் (11) அரசு பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்து வந்தார்.

அதே பகுதியைச் சேர்ந்த ஹரிஹரன் (8) 2ம் வகுப்பு மாணவர். கடந்த சனிக்கிழமை பள்ளி விடுமுறை என்பதால் இருவரும் விளையாடச் சென்றனர். இரவு ஆகிவிட்டும் வீடு திரும்பாததால் பெற்றோர் கவலை அடைந்தனர்.

இதையடுத்து, அவிநாசி காவல் நிலையத்தில் சிறுவர்கள் காணவில்லை என புகார் அளிக்கப்பட்டது. தேடுதல் நடைபெற்று கொண்டிருந்த நிலையில் நம்பியம்பாளையம் அனந்தகிரி குட்டையில் இரண்டு உடல்கள் மிதப்பதாக தகவல் கிடைத்தது.

சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் விசாரணை நடத்தினர். உயிரிழந்தவர்கள் தரணிஷ் மற்றும் ஹரிஹரன் என்பதும் உறுதி செய்யப்பட்டது.

இரு சிறுவர்களின் உடல்கள் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அவிநாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

ஒரே பகுதியில் இரு சிறுவர்கள் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வழக்குப்பதிவு செய்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

நாட்டில் 1.5 மடங்கு அதிக எரிபொருள் சந்தைக்கு : எரிபொருள் விநியோகம் குறித்து வெளியான தகவல்!!

நாடளாவிய ரீதியில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு குறித்து பொதுமக்கள் எவ்வித அச்சமும் அடையத் தேவையில்லை என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி எஸ். ராஜகருணா தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்ட தேவையற்ற பதற்றம் மற்றும் அளவுக்கு அதிகமான எரிபொருள் சேமிப்பு காரணமாகவே நேற்று காலை சில நிலையங்களில் தற்காலிகமாகக் கையிருப்பு தீர்ந்திருந்த போதிலும், நேற்று அதிகாலை முதல் விநியோக நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

நேற்று காலை 6 மணி முதல் ஆரம்பிக்கப்பட்ட விநியோகப் பணிகள் ஊடாக, சாதாரண ஒரு நாளை விட 1.5 மடங்கு அதிக எரிபொருள் சந்தைக்கு விடுவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, நேற்று மாலை 6 மணி வரையான காலப்பகுதிக்குள் 842,810 லீட்டர் ஒட்டோ டீசல், 95,700 லீட்டர் 92 ரக பெட்ரோல், 5,97,000 லீட்டர் 95 ரக பெட்ரோல் மற்றும் 184,800 லீட்டர் சுப்பர் டீசல் ஆகியவை நாடளாவிய ரீதியில் விநியோகிக்கப்பட்டுள்ளன.

தற்போதைய நிலவரப்படி, கொழும்பின் முக்கிய பகுதிகளில் எரிபொருள் வரிசைகள் எதுவும் இல்லை என்பது அவதானிக்கப்பட்டுள்ளதுடன், விநியோக வாகனங்களின் போக்குவரத்து காரணமாக சில இடங்களில் சிறிய தாமதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதே தவிர, தட்டுப்பாடு ஏற்பட வேறு எவ்வித காரணமும் இல்லை என அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.

எனவே, பொதுமக்கள் தேவையற்ற பதற்றமடையாமல் தங்களுக்குத் தேவையான அளவு எரிபொருளை மட்டும் வழக்கம் போல் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

பொதுமக்கள் இவ்வாறு இயல்பாகச் செயற்படும் பட்சத்தில், நாளை காலைக்குள் எரிபொருள் விநியோகம் முழுமையாக வழமைக்குத் திரும்பும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் மேலும் உறுதியளித்துள்ளார்.

மின்னேரியாவில் பேருந்து விபத்தில் 10 பேர் படுகாயம்!!

ஹபரணை – பொலன்னறுவை வீதியின் மின்னேரிய பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் பத்து பேர் காயமடைந்துள்ளனர்.

ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று, மற்றொரு பேருந்துடனும் நெல் அறுவடை இயந்திரத்தைக் கொண்டு சென்ற உழவு இயந்திரடத்துடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் பேருந்துகளில் பயணித்த ஏழு பேர் உட்பட 10 பேர் காயமடைந்து ஹபரணை மற்றும் பொலன்னறுவை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் ஒருவரது நிலைமை கவலைக்கிடமாக இருந்தமையால், அவர் தம்புள்ளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சடலத்துடன் தகாத உறவு கொண்ட மூவர் : டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் சம்பவம்!!

டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் பிணவறையில் வைக்கப்பட்டிருந்த இறந்த பெண் ஒருவரின் சடலத்துடன் தகாத உறவு கொண்ட மூன்று வைத்தியசாலை ஊழியர்கள் தொடர்பாக, டிக்கோயா ஆதார வைத்தியசாலைக்கு முன் பொது மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த போராட்டமானது இன்று (03.02.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது. டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் பிணவறையில் வைக்கப்பட்டிருந்த 23 வயது பெண்ணின் சடலத்தை இரவு நேரத்தில் மூன்று வைத்தியசாலை ஊழியர்கள் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக,

மருத்துவமனை நிர்வாகத்திற்கு எதிராக தோட்டத் தொழிலாளர்கள் குழு ஒன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஹட்டன் பொலிஸ் பிரிவில் உள்ள அபோஸ்லி தோட்டத்தைச் சேர்ந்த 23 வயதுடைய எஸ். ஹரினி என்ற பெண், குடும்ப தகராறு காரணமாக கடந்த 23 ஆம் திகதி தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டதை அடுத்து,

ஹட்டன் பொலிஸ் அதிகாரிகள் முறையான விசாரணை நடத்தி, உடலை பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா ஆதார வைத்தியசாலையின் தடயவியல் நிபுணரிடம் ஒப்படைத்தனர்.

அன்றிரவு சடலம் டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் பிண அறையில் வைக்கப்பட்டது.

அன்று அதிகாலை பிணவறைக்குள் நுழைந்த டிக்கோயா ஆதார வைத்தியசாலையின் மூன்று ஊழியர்கள் பூட்டுகளை உடைத்து உடலில் இருந்து துணிகளை அகற்றி காணப்பட்டதாக வைத்தியசாலையின் பிரேத அறை மேலாளர் டிக்கோயா ஆதார வைத்தியசாலை பணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார்.

எனினும் இந்த சம்பவம் தொடர்பாக வைத்தியசாலை நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி, தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் அரசியல் சார்ந்த தலைவர்கள் குழு (03) காலை டிக்கோயா ஆதார மருத்துவமனைக்கு முன்னால் உள்ள ஹட்டன்- பொககவந்தலாவ பிரதான வீதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து வைத்தியசாலை பணிப்பாளர் மற்றும் மருத்துவமனை நிர்வாகத்தை அழைக்குமாறு நோர்வூட் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இந்த கோரிக்கையைத் தொடர்ந்து, நோர்வூட் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, டிக்கோயா ஆதார மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் எம்.எஸ். ஃபஸீல் ஆகியோருடன் சேர்ந்து போராட்டக்காரர்களிடம் வந்து,

சம்பவம் குறித்து அறிந்ததும், மருத்துவமனையின் பாதுகாப்பு கேமரா அமைப்பு சரிபார்க்கப்பட்டதாகவும், மருத்துவமனை ஊழியர்கள் மூன்று பேர் (24) அதிகாலையில் பிணவறைக்குச் சென்றதை தரவுத்தளத்தில் பதிவு செய்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

போராட்டக்காரர்களின் கோரிக்கை

அதன்படி, சம்பவம் குறித்து விசாரிக்க மருத்துவமனை நிபுணர்களைக் கொண்ட மூன்று பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டது,

மேலும் அந்தக் குழு (03) இன்று விசாரணையைத் தொடங்கி உள்ளது எனவும் விசாரணை பாரபட்சமின்றி நடத்தப்படும் என்றும், மருத்துவமனை ஊழியர்கள் யாராவது தவறு செய்திருந்தால் அதிகபட்ச ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மருத்துவமனை இயக்குநர் போராட்டக்காரர்களிடம் கூறியுள்ளார்.

தற்போதைய சூழ்நிலையில், சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வரும் பெண்களின் பாதுகாப்பு குறித்து சிக்கல் இருப்பதாகவும், சம்பவம் குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட மூன்று பேர் கொண்ட குழு நடத்தும் விசாரணையில் தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றும், அதன்படி, பொலிஸாரே விசாரணை நடத்த வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் கூறியுள்ளனர்.

சம்பவத்தில் தொடர்புடைய மூன்று மருத்துவமனை ஊழியர்களையும் பொலிஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த வேண்டும் என்ற போராட்டக்காரர்களின் கோரிக்கைக்கு பதிலளிக்கும் விதமாக, மருத்துவமனை இயக்குநர், ஹட்டன் பொலிஸாரிடம் சென்று இது தொடர்பாக முறைப்பாடு பதிவு செய்து, மூன்று ஊழியர்களையும் கைது செய்யுமாறு பொலிஸாரிடம் கோரிக்கை வைப்பதாகக் கூறியுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குற்றங்கள் தொடர்பில் இறுக்கமான சட்டங்களை கொண்டு மூன்று நபர்களுக்கும் அதிகபட்ச தண்டனை வழங்கப்படலாம் என போராட்டக்காரர்கள் சார்பில் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

பற்றி எரியும் வளைகுடா : கொழும்பிலிருந்து துபாய்க்கு செல்லும் முதல் விமானம்!!

கொழும்புக்கும் துபாய்க்கும் இடையிலான விமானங்களை முதலாவதாக இலங்கை விமான நிறுவனமாக ஃபிட்ஸ்ஏர் மீண்டும் ஆரம்பித்துள்ளது.

மத்திய கிழக்கில் நடந்து வரும் போரின் காரணமாக பல வான்பரப்புக்கள் மூடப்பட்டுள்ள நிலையில் பல பிராந்திய விமான நிறுவனங்கள் நடவடிக்கைகளை நிறுத்தி வைத்திருக்கின்றன. இதற்கிடையில், விமான ஃபிட்ஸ்ஏர் நிறுவனம் மீண்டும் சேவைக்குத் திரும்பியுள்ளது.

அவசரமாகப் பயணம் செய்ய, குடும்பத்தினருடன் மீண்டும் ஒன்றிணைய அல்லது முக்கியமான கடமைகளில் கலந்து கொள்ள வேண்டிய பயணிகளுக்கு ஃபிட்ஸ்ஏரின் இந்த நடவடிக்கை நிவாரணத்தையும் வசதியையும் வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிராந்தியத்தில் நிலையற்ற சூழ்நிலை இருந்தபோதிலும், பயணிகளின் பாதுகாப்பு மற்றும் நேரத்தை கடைபிடிப்பதற்கு முன்னுரிமை அளித்து, சீரான, நம்பகமான மற்றும் தொந்தரவு இல்லாத பயண அனுபவத்தை தொடர்ந்து வழங்குவதாக விமான நிறுவனம் ஒரு அறிக்கையில் உறுதியளித்துள்ளது.

அத்துடன், மத்திய கிழக்கு முழுவதும் வான்வெளியில் மோதல் தொடர்ந்து பாதிப்பை ஏற்படுத்தி வருவதால், பயணிகள் www.fitsair.com என்ற இணைய தளத்தில் ஒன்லைனில் டிக்கெட்டுகளைப் பெறலாம் மற்றும் புதுப்பிக்கப்பட்ட பயணத் தகவல்களை அணுகலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உலக சந்தையில் எரிவாயு விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம் : ஆசியாவில் கடுமையான தாக்கம்!!

அமெரிக்காவும் இஸ்ரேலும் வார இறுதியில் ஈரானை தாக்கத் தொடங்கியதிலிருந்து உலகளாவிய எண்ணெய் மற்றும் எரிவாயு விலைகள் உயர்ந்துள்ளன.

ஈரானின் ஹோர்முஸ் நீரிணையை மூடும் முடிவால் ஆசிய மற்றும் ஐரோப்பிய சந்தைகள் கடுமையாக பாதிக்கப்படும் என தொழில்துறை ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

உலகின் மிகப்பெரிய ஏற்றுமதியாளர்களில் ஒன்றான கத்தார் எனர்ஜி, அதன் உற்பத்தி நடவடிக்கைகளை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. இதனையடுத்து சடுதியாக எல்என்ஜி இயற்கை எரிவாயு விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

உலகின் ஐந்தில் ஒரு பங்கு எல்என்ஜி ஹோர்முஸ் நீரிணை வழியாக செல்கிறது. மேலும் கத்தார் அதன் எல்என்ஜி ஏற்றுமதியில் 90 சதவீதம் ஓமன் மற்றும் ஈரானுக்கு இடையே உள்ள ஹோர்முஸ் நீரிணை வழியாக கொண்டு செல்கிறது.

சீனா, இந்தியா, தாய்வான் மற்றும் தென் கொரியா ஆகியவை எல்என்ஜி எரிவாயு விநியோகத்தில் அதிகம் பாதிக்கப்படும் ஆசிய நாடுகளில் அடங்கும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.