வவுனியாவில் புலிகளின் காலத்துப் புதைகுழி தேடல் : ஏமாற்றத்தில் முடிந்த அகழ்வுப் பணி!!

வவுனியா, கற்குளம் சாஸ்திரிகுளங்குளம் பகுதியில் விடுதலைப் புலிகளின் காலத்தில் புதைக்கப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் ஆயுதங்கள் மற்றும் நகைகளைத் தேடி இன்று (29.05.2026) முன்னெடுக்கப்பட்ட அகழ்வுப் பணி எவ்விதப் பொருட்களும் மீட்கப்படாத நிலையில் நிறைவடைந்துள்ளது.

பொதுமகன் ஒருவரின் வீட்டு வளாகத்தில் இந்தத் தேடுதல் வேட்டை மற்றும் அகழ்வுப் பணிகள் அதிஉயர் பாதுகாப்புக்கு மத்தியில் முன்னெடுக்கப்பட்டன.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) பணிப்பாளர் ஷானி அபேசேகரவின் நேரடி ஆலோசனைக்கு இணங்கவும், அவரது பிரசன்னத்துடனும் இந்த விசேட நடவடிக்கை திட்டமிடப்பட்டிருந்தது.

வவுனியா மாவட்ட பதில் நீதிமன்ற நீதவான் தி.திருஅருளின் நேரடி கண்காணிப்பில், பொலிஸாரின் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இந்த அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

குறித்த வீட்டின் வளாகத்தில், சந்தேகத்திற்குரியதாகக் கருதப்பட்ட நான்கு வெவ்வேறு இடங்களில் எக்ஸ்கவேட்டர் (Excavator) இயந்திரங்கள் மூலம் ஆழமாக அகழ்ந்து சோதனையிடப்பட்டது.

எனினும், பல மணிநேரம் நீடித்த இந்தத் தீவிர தேடுதல் நடவடிக்கையின் முடிவில், சந்தேகிக்கப்பட்டவாறு ஆயுதங்களோ அல்லது தங்க நகைகளோ என எந்தவொரு பொருளும் கிடைக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.

எவ்விதப் பொருட்களும் கண்டெடுக்கப்படாததைத் தொடர்ந்து அகழ்வுப் பணிகள் தற்காலிகமாகக் கைவிடப்பட்டு, பாதுகாப்புத் தரப்பினர் அவ்விடத்திலிருந்து வெளியேறியுள்ளனர்.

வவுனியா ஓமந்தையில் மாட்டுடன் மோதுண்டு முச்சக்கரவண்டி விபத்து : ஒருவர் படுகாயம், டிப்பர் சாரதி கைது!!

வவுனியா ஓமந்தைப் பகுதியில் மாட்டுடன் மோதுண்டு கட்டுப்பாட்டை இழந்த முச்சக்கரவண்டி எதிரே வந்த டிப்பர் வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் முச்சக்கரவண்டி சாரதி படுகாயமடைந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பில் டிப்பர் வாகன சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ் விபத்து குறித்து மேலும் தெரியவருவதாவது, ஏ9 வீதியூடாக பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கரவண்டி, வீதியில் திடீரென குறுக்கே வந்த மாட்டுடன் மோதி விபத்துக்குள்ளானது. அவ்வேளையில், கட்டுப்பாட்டை இழந்த முச்சக்கரவண்டி, எதிரே வந்த டிப்பர் வாகனத்துடனும் மோதியுள்ளது.

இந்த இரட்டை விபத்தில் முச்சக்கரவண்டி பலத்த சேதமடைந்ததுடன், அதன் சாரதி படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு, வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். முச்சக்கரவண்டி டிப்பர் வாகனத்துடன் மோதியதன் அடிப்படையில், டிப்பர் வாகனத்தின் சாரதி ஓமந்தைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சாரதியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஓமந்தைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

வெளிநாடொன்றில் மர்மமான முறையில் உயிரிழந்த இலங்கை இளைஞன் : சகோதரியின் கோரிக்கை நிராகரிப்பு!!

ஜப்பானின் Ibaraki மாகாணத்தில் உள்ள Tsuchiura நகர பொலிஸ் நிலையத்தில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்தபோது, இலங்கை மாணவன் உயிரிழந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த மே 19ஆம் திகதி உயிரிழந்த இலங்கை மாணவனின் மர்ம மரணம் தொடர்பில் அவரது தங்கை செய்த முறைப்பாட்டினை ஜப்பனிய பொலிஸார் ஏற்றுக்கொள்ளவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

தற்போது ஜப்பானில் வசித்து வரும் உயிரிழந்த மாணவனின் தங்கையான சத்யானி ஷாக்யா என்பவரே இந்த முறைப்பாட்டை செய்துள்ளார்.

உயிரிழந்த மாணவனின் சடலம்

உயிரிழந்த மாணவனின் சடலம் இதுவரை இலங்கைக்கும் அனுப்பப்படாமல், ஜப்பானில் உள்ள ஒரு பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது.

ஹம்பாந்தோட்டை, பெலியத்த மஹாஹீல்ல பிரதேசத்தை சேர்ந்த 22 வயதுடைய விசக்ஷன, 2023ஆம் ஆண்டு தொழில்துறை கல்விநெறி ஒன்றிற்காக ஜப்பான் சென்றுள்ளார்.

உயிரிழக்கும் போது அவர் Toride நகரில் வசித்து வந்ததாக ஜப்பனிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பெப்ரவரி 22ஆம் திகதி, விசக்ஷன தனது நண்பர்கள் சிலருடன் Tsuchiura நகருக்கு பொருட்கள் வாங்கச் சென்றுள்ளார்.

அங்குள்ள ஒரு கடையில், அவரும் மற்றொரு யுவதியும் பொருட்களைத் திருடியதாகக் கூறி கடை உரிமையாளர் முறைப்பாடு செய்துள்ளார். முறைப்பாட்டின் அடிப்படையில் அவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

பொலிஸாரின் அலட்சியம்

இது குறித்து ஜப்பானில் உள்ள அவரது தங்கைக்கு பொலிஸார் தகவல் வழங்கியதை அடுத்து, அவர் தூதரகத்தின் மூலம் வழக்கறிஞர் ஒருவரை ஏற்பாடு செய்து சட்ட நடவடிக்கைகளுக்கு தயாராகியுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதிலும், குற்றச்சாட்டுகளை நிரூபிக்க போதிய ஆதாரங்கள் இல்லாததால் வழக்கு தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு வந்தது.

ஜப்பனிய பொலிஸ் தடுப்புக்காவலில் பல வாரங்களாக வைக்கப்பட்டிருந்ததால் அந்த இளைஞரின் உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளது.

தனக்கு தலைவலியும் நெஞ்சுவலியும் இருப்பதாக பொலிஸாரிடம் கூறிய போதும், அதனைப் பொருட்படுத்தவில்லை என்று உயிரிழந்த இளைஞர் தனது தங்கையிடம் பலமுறை தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், பெப்ரவரி 22 முதல் மூன்று மாதங்களுக்கும் மேலாகத் தொடர்ந்து விசக்ஷன பொலிஸ் நிலையத் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் கடந்த மே 19ஆம் திகதி மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக அவரது தங்கை சத்யானி ஷாக்யாவுக்கு ஜப்பனிய பொலிஸார் அறிவித்துள்ளனர்.

தனது சகோதரனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி தங்கை செய்த முறைப்பாட்டினையும் தற்போது ஜப்பானிய பொலிஸார் நிராகரித்துள்ளனர்.

நாடு முழுவதும் நிலைபெற்றுள்ள தென்மேற்கு பருவக்காற்று : வானிலை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

தென்மேற்கு பருவக்காற்று நாடு முழுவதும் நிலைபெற்றுள்ளதன் காரணமாக, நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் மழை நிலைமை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இப்பகுதிகளின் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும், வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் தெற்கு மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 30 முதல் 40 கிலோமீற்றர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக ஏற்படும் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய விபத்துக்களை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

கோர விபத்தில் 2 பேர் உயிரிழ்ப்பு : மகளும் தாயும் படுகாயம்!!

டிப்பர் வாகனம் மற்றும் முச்சக்கர வண்டி மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்ததுடன் மேலும் இருவர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அம்பாறை மாவட்டம் புறநகர் பகுதியான புத்தங்கல நான்கு வழி சந்தி பகுதியில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன் படுகாயமடைந்த இருவர் அம்பாறை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நேற்று செவ்வாய்க்கிழமை(26) இரவு சுமார் 8.30 மணியளவில் இடம்பெற்ற இவ்விபத்தில் மூச்சக்கர வாகன சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அத்துடன் அதில் பயணம் செய்த மூன்று பேரில் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார். ஒரு பெண்ணும் ஒரு குழந்தையும் உயிர் தப்பி இருந்தனர்.

குறித்த விபத்தின் போது டிப்பர் வாகனம் புத்தங்கல பகுதியில் இருந்து பிலிமகல நோக்கி சென்று கொண்டிருந்ததுடன் அதே சமயம் முச்சக்கர வண்டி பண்டாரநாயக்க பாலிகா வித்தியாலயப் பகுதியிலிருந்து அம்பாறை பொது மருத்துவமனைக்குச் சென்று கொண்டிருந்ததாக விபத்தினை நேரில் கண்டவர்கள் குறிப்பிட்டனர்.

அத்துடன் குறித்த விபத்தின் போது டிப்பர் வாகன சாரதி வழிவிடும் விதியை மீறியதால் பிரதான சாலையில் சென்று கொண்டிருந்த முச்சக்கர வண்டி டிப்பர் மீது மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டிருந்தது.

அத்துடன் குறித்த விபத்தை தொடர்ந்து டிப்பர் வாகன சாரதி வாகனத்தை நிறுத்தாமல் தொடர்ந்து ஓட்டிச் சென்று பின்னர் அவர் டிப்பர் வாகனத்துடன் அம்பாறை தலைமையக பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தார். இவ்வாறு பொலிஸாரிடம் சரணடைந்த பின்னர் கைது செய்யப்பட்டார்.

மேலும் முச்சக்கர வண்டி சாரதி விபத்தின் போது சம்பவ இடத்தில் உயிரிழந்தார். இவர் அம்பாறை நவகம்புர பகுதியைச் சேர்ந்தவர் ஆவார். அத்துடன் படுகாயமடைந்த அம்பாறை லயன்ஸ் கழகத்தைச் சேர்ந்த துலஞ்சன இமேஷ் அம்பாறை பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இரவு சுமார் 10.30 மணியளவில் உயிரிழந்தார்.

மேலும் நவகம்புர லயன்ஸ் கழகத்தை சேர்ந்த சுதேஷ் மஹின்சாவும் அவரது மூன்று வயது மகள் ஹசரி லியாராவும் அம்பாறை பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்தில் மருத்துவமனையில் உயிரிழந்த சுதேஷ் மஹின்சாவின் கணவர் துலஞ்சனா இமேஷ் என பொலிஸார் தெரிவித்தனர்.

இது தவிர விபத்தின் போது டிப்பர் வாகன சாரதி மதுபோதையில் இருந்தது தற்போதைய விசாரணையில் தெரியவந்துள்ளதாக அம்பாறை மாவட்ட தலைமையக பொலிஸ் பிரிவின் சிரேஷ்ட அதிகாரி தெரிவித்தார்.

குறித்த சாரதியின் கவனக்குறைவான சாரதியத்தினால் தான் விபத்து ஏற்பட்டதாக ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.எனவே இந்த சாரதி மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

நேற்றிரவு இடம்பெற்ற கோர விபத்து : இரு இளைஞர்கள் பரிதாபமாக பலி!!

அம்பாறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ட்ராக்டர் சந்திக்கு அருகில் நேற்றிரவு இடம்பெற்ற கோர விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.

புத்தங்கல பகுதியிலிருந்து ஹோல்மன்கல நோக்கிப் பயணித்த டிப்பர் வாகனம், பாலிகா சுற்றுவட்டம் பகுதியிலிருந்து அம்பாறை பொது வைத்தியசாலை நோக்கிச் சென்ற முச்சக்கர வண்டியுடன் மோதி நேற்றிரவு இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் முச்சக்கர வண்டியில் பின்னால் பயணித்த மேலும் மூவர் அம்பாறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு உயிரிழந்தவர்கள் தடயந்தலாவ மற்றும் நவகம்புர பிரதேசங்களைச் சேர்ந்த 23 மற்றும் 24 வயதுடைய இரு இளைஞர்கள் ஆவர்.

இந்த விபத்துடன் தொடர்புடைய டிப்பர் வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். விபத்து குறித்து அம்பாறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அரச வெசாக் விழாவை முன்னிட்டு இன்று முதல் மூடப்படும் இடங்கள் : பொதுமக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்!!

இலங்கை வாழ் பௌத்தர்களின் புனிதமிக்க வெசாக் பண்டிகையை முன்னிட்டு, இன்று (27) முதல் ஜூன் 02 ஆம் திகதி வரை ‘வெசாக் வாரம்’ பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இதனை முன்னிட்டு இறைச்சிக்கடைகள், இறைச்சிக்கூடங்கள், பந்தய மையங்கள், சூதாட்ட விடுதிகள் மற்றும் கேளிக்கை விடுதிகளை மூட முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு மேற்கூறிய இடங்கள் இன்று (27) முதல் ஜூன் 2 வரை வெசாக் வாரம் முழுவதும் மூடப்பட்டிருக்கும் என்று அறிவித்துள்ளது.

இதற்கிடையில், மே 30, 31 மற்றும் ஜூன் 01 ஆகிய திகதிகளில் நாடு முழுவதும் உள்ள இறைச்சிக் கூடங்கள் மற்றும் இறைச்சிக்கடைகளை மூடவும், பல்பொருள் அங்காடிகளில் இறைச்சி விற்பனையை நிறுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, வெசாக் பண்டிகையை முன்னிட்டு கடந்த காலங்களில் அமைக்கப்பட்டிருந்த பேய் மாளிகைகள் மற்றும் விசித்திரமான நடனங்கள், பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பயன்பாடு போன்றவற்றை முற்றாகத் தவிர்க்குமாறு வழிகாட்டல்கள் வழங்கப்பட்டுள்ளன.

அரசாங்க விசேட விடுமுறை அறிவிப்பு!!

அரச வெசாக் தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 31 ஆம் திகதி (ஞாயிற்றுக்கிழமை) அரசாங்க விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுநிர்வாகம், மாகாணசபைகள் மற்றும் உள்ளுராட்சிமன்றங்கள் அமைச்சர் சந்தன அபேரத்ன வர்த்தமானி அறிவித்தலையும் பிரசுரித்துள்ளார்.

2026.03.30 ஆம் திகதியன்று எடுக்கப்பட்ட அமைச்சரவை தீர்மானத்துக்கமைய, 2026.05.27 ஆம் திகதி முதல் 2026.06.02 ஆம் திகதி வரையிலான காலப்பகுதி வெசாக் வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய, இன்று மே 27ஆம் திகதி முதல் ஜூன் 02ஆம் திகதி வரையிலான காலப்பகுதியை வெசாக் வாரமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, 2026ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் உற்சவத்தின் உத்தியோகபூர்வ நிகழ்வு மே மாதம் 30ஆம் திகதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்கமைய, அடுத்த நாளான மே மாதம் 31ஆம் திகதியை அரசாங்க விடுமுறை தினமாக பிரகடனப்படுத்தி பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலையும் அண்மையில் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

2570 ஸ்ரீ புத்த வருடத்தை முன்னிட்டு, 2026 ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் விழாவை மாத்தறை, திஹகொட மிதெல்லவல புராதன விகாரையை மையப்படுத்தி நடத்துவதற்குத் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

அதன்படி, இந்த ஆண்டுக்கான அரச வெசாக் விழா, ஜனாதிபதி அநுர குமார திசநாயக்கவின் தலைமையில், மாத்தறை, திஹகொடவில் உள்ள மிதெல்லவல விகாரையில் இன்று நடைபெற உள்ளது.

இதற்கிடையில், நாடு முழுவதும் வெசாக் விழாக்களை ஏற்பாடு செய்வதில் பின்பற்றப்பட வேண்டிய வழிகாட்டுதல்களைக் கொண்ட சுற்றறிக்கையைப் பின்பற்றுமாறும் பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

24 மணித்தியாலத்திற்குள் மீண்டும் பாரிய சரிவைச் சந்தித்த இலங்கை ரூபா!!

அமெரிக்க டொலருக்கு எதிரான ரூபாவின் பெறுமதி மேலும் சரிவடைந்து டொலரின் பெறுமதி மீண்டும் உயர்ந்துள்ளது.

இதன்படி, நேற்றையதினத்துடன் ஒப்பிடும் போது அமெரிக்க டொலரொன்றின் விற்பனைப் பெறுமதியானது 330 ரூபாவை இன்றுத் தாண்டியுள்ளது.

இலங்கை மத்திய வங்கியினால் இன்று (27) வெளியிடப்பட்ட தினசரி நாணய மாற்று வீத அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை 320.40 ரூபாயாகவும், விற்பனை விலை 330.81 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.

நேற்று (26) இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை 318.32 ரூபாயாகவும், விற்பனை விலை 328.69 ரூபாயாகவும் அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

கொழும்பில் உள்ள பெற்றோரை பார்க்க தனியாகப் புறப்பட்ட 7 வயது மாணவன்!!

ஹட்டன் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 7 வயதுடைய மாணவன் ஒருவர், தனியாக கொழும்பு செல்ல முயன்ற நிலையில் இன்று (27) ஹட்டன் பஸ் நிலையத்தில் வைத்து மீட்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

ஹட்டன் இலங்கை போக்குவரத்து சபை (SLTB) பஸ் நிலைய நேரக் காப்பாளரின் அவதானமான நடவடிக்கையினாலேயே சிறுவன் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பில் தங்கி வேலை செய்து வரும் தனது பெற்றோரை பார்க்கவே தாம் தனியாக பஸ்ஸில் கொழும்பு செல்ல முயன்றதாக அந்தச் சிறுவன் நேரக் காப்பாளரிடம் தெரிவித்துள்ளான்.

மேலும், பயணச் செலவிற்காக தனது பெரியம்மா பணம் வழங்கியதாகவும் கூறியுள்ளார். சிறுவன் தனியாக பயணம் செய்ய முயன்றதை அடுத்து சந்தேகமடைந்த நேரக் காப்பாளர், அவனை பஸ்ஸில் ஏற விடாமல் தடுத்து வைத்து உடனடியாக ஹட்டன் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார், சிறுவனைப் பொறுப்பேற்று பாதுகாப்பாக ஹட்டன் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த ஹட்டன் பொலிஸ் நிலைய உயர் அதிகாரி ஒருவர், “சிறுவன் தொடர்பில் ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது.

நீதிமன்ற நடைமுறைகளின் பின்னர், சிறுவனின் பெற்றோர் அல்லது பாதுகாவலர்களை அடையாளம் கண்டு அவர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்தார்.

பாடசாலை முடிந்து வீடு திரும்பிய மாணவன் பரிதாபமாக பலியான சோகம்!!

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே உள்ள புத்தூர்வயல் பகுதியில், பள்ளி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த மாணவன் ஒருவனை காட்டு யானை திடீரெனத் தாக்கி கொடூரமாகக் கொன்ற சோகச் சம்பவம் தற்பொழுது அரங்கேறியுள்ளது.

இந்த நெஞ்சை உலுக்கும் விபத்தில் சிக்கி உயிரிழந்த சிறுவன் எட்டாம் வகுப்பு படித்து வந்த 12 வயதான மிஸ்ஹாப் என்பது தெரியவந்துள்ளது. இச்சம்பவத்தின் காரணமாக அந்தப் பகுதி முழுவதிலும் தற்பொழுது பெரும் சோகமும் அலை அலையான பயமும் சூழ்ந்து காணப்படுகிறது.

மாலை நேரத்தில் பள்ளி முடிந்து மிஸ்ஹாப் தனது வீட்டை நோக்கிச் சாலையோரமாக நடந்து சென்று கொண்டிருந்த போது, காட்டில் இருந்து திடீரென வெளியேறிய காட்டு யானை ஒன்று அவனை நோக்கி அசுர வேகத்தில் பாய்ந்து வந்துள்ளது.

யானையைக் கண்டு அதிர்ச்சியடைந்த சிறுவன் அங்கிருந்து தப்பி ஓட முயன்றபோதிலும், அந்தப் பெரிய யானை அவனைத் துரத்திச் சென்று மிகக் கொடூரமாகத் தாக்கியுள்ளது.

இதில் உடல் முழுவதும் பலத்த மற்றும் கடுமையான படுகாயமடைந்த அந்தச் சிறுவன், சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தான்.

இந்தத் துயரமான சம்பவம் குறித்துத் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உள்ளூர் போலீஸார் மற்றும் வனத்துறை அதிகாரிகள், சிறுவனின் உடலை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

கூடலூர் மற்றும் பந்தலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மனித-விலங்கு மோதல்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாகக் கூறி, ஆத்திரமடைந்த பொதுமக்கள் தங்களின் பாதுகாப்பை உறுதி செய்யக் கோரி அதிகாரிகளிடம் தற்பொழுது முறையிட்டு வருகின்றனர்.

காடுகளில் இருந்து குடியிருப்புப் பகுதிகளுக்குள் யானைகள் புகுவதைத் தடுக்க வனத்துறை உடனடியாக நிரந்தர மற்றும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது.

கணவனுக்கு 3 மணி நேரம் கரண்ட் ஷாக், விஷம் கொடுத்துக் கொடூரக் கொலை : அதிர வைக்கும் மனைவியின் வாக்குமூலம்!!

உத்தரப் பிரதேச மாநிலம் முராதாபாத் நகரில், கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை, மனைவி தனது தங்கை மற்றும் கள்ளக்காதலர்களுடன் சேர்ந்து கொடூரமான முறையில் சித்திரவதை செய்து கொலை செய்துள்ள அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

சுமார் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்ட தம்பதியினரின் இல்லற வாழ்க்கை, மனைவியின் தவறான உறவினால் தற்பொழுது கொடூரமான முறையில் முடிவுக்கு வந்துள்ளது.

அஞ்சல் என்ற அந்தப் பெண், தனது தங்கை சிகா மற்றும் அவர்களது கள்ளக்காதலர்களான அங்கித், அஜய் ஆகியோருடன் இணைந்து இந்தத் திட்டமிட்ட கொலையை அரங்கேற்றியுள்ளார்.

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், இக்கொலை சம்பவம் உடனடி ஆத்திரத்தில் நடந்தது அல்ல என்றும், மிகத் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டது என்றும் தெரியவந்துள்ளது.

சம்பவத்தன்று இரவு, பாதிக்கப்பட்ட கணவனை நான்கு பேரும் சேர்ந்து கயிற்றால் கட்டிப்போட்டு, சுமார் மூன்று மணி நேரத்திற்கும் மேலாகக் கொடூரமாக அடித்துத் துன்புறுத்தியுள்ளனர்.

அலறல் சத்தம் வெளியே கேட்காமல் இருக்க அவரது வாயில் துணியைத் திணித்ததோடு, கொடூரத்தின் உச்சமாக அவருக்குப் பலமுறை மின்சார அதிர்ச்சியும் கொடுத்துள்ளனர்.

அதோடு நிற்காமல், அந்த இளைஞருக்குக் கட்டாயப்படுத்தி விஷத்தையும் வாயில் ஊற்றியுள்ளனர்.

இதன்பின்னர், இந்தத் திட்டமிட்ட கொலையைத் தற்கொலை அல்லது விபத்து போலக் காட்டுவதற்காக, கணவனின் உடலை மாடிப் படிக்கட்டுகளிலிருந்து கீழே வீசியுள்ளனர்.

இதற்கிடையே, வீட்டை விட்டு இரண்டு மர்ம நபர்கள் ஓடுவதைக் கண்டு சந்தேகமடைந்த உறவினர்கள் உள்ளே சென்று பார்த்தபோது, அந்த இளைஞர் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார்.

அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முயன்றபோது, கொலையாளி மனைவியான அஞ்சல் ஏதேதோ காரணங்களைக் கூறி தடுத்து நிறுத்த முயன்றுள்ளார்.

எனினும், உறவினர்கள் கொடுத்த புகாரின் பேரில் விரைந்து செயல்பட்ட போலீசார், கொடூரக் கொலையில் ஈடுபட்ட அஞ்சல், அவரது தங்கை மற்றும் கள்ளக்காதலர்கள் உட்பட 4 பேரையும் அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

203 பேர் மூளைக் காய்ச்சலினால் பாதிப்பு : மக்களே அவதானம்!!

நாட்டின் பல பகுதிகளிலிருந்து இதுவரையில் 203 பேர் மூளைக் காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

தெனியாய, தியத்தலாவ, ரிபில்லகஸ்கட, கண்டி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து பாதிப்புகள் குறித்து பதிவாகியுள்ளது.

நோய் பரவலைக் கட்டுப்படுத்த தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

மரக்கறிகளின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்!!

இலங்கை உள்நாட்டு சந்தையில் மரக்கறிகளின் விலை சற்று அதிகரிப்பை பதிவுசெய்துள்ளது. இதன்படி, நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தில், ஒரு கிலோகிராம் கறிமிளகாய் 580 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டும் அதேவேளை , வவுனியாவில் 450 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

வவுனியாவில், ஒரு கிலோகிராம் உருளைக் கிழங்கு 300 ரூபாய்க்கும் நுவரெலியாவில் 270 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளது. வவுனியாவில் ஒரு கிலோகிராம் கரட், 420 ரூபாய்க்கும் நுவரெலியாவில் 330 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

நுவரெலியாவில் ஒரு கிலோகிராம் லீக்ஸ் 310 ரூபாய்க்கும் வவுனியாவில் 380 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதேவேளை வவுனியாவில் ஒரு கிலோகிராம் கோவா 300 ரூபாய்க்கும் நுவரெலியாவில் 180 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

 

லண்டனில் தமிழருக்கு சொந்தமான கடையில் நடந்த விசா மோசடி அம்பலம்!!

பிரித்தானியாவில் தமிழருக்கு சொந்தமான கடையொன்றில் விசா இன்றி ஒருவர் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் பெருந்தொகை பவுண்ட் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

லண்டனில் செயற்படும் தமிழ் கடையொன்றில் விசா இல்லாத இளைஞன் பணியாற்றிய நிலையில், மிகவும் குறைந்த அளவிலான சம்பவம் கொடுக்கப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

கடந்த 2025 நவம்பர் 29 அன்று ஈலிங் கவுன்சில் அதிகாரிகள் மற்றும் குடிவரவு அதிகாரிகள் கடைக்குள் புகுந்து அதிரடி சோதனை ஒன்றை நடத்தியிருந்தனர்.

இதன்போது பிரித்தானியாவில் தங்குவதற்கோ அல்லது வேலை செய்வதற்கோ சட்டபூர்வ விசா இல்லாத நபர் அங்கு பணிபுரிந்தமை கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டார்.

அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் மணித்தியாலத்திற்கு 6.50 பவுண்டுகள் மட்டுமே கைக்காசாக கடையின் உரிமையாளரினால் வழங்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

இந்த குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் குறித்த கடையின் உரிமையாளருக்கு 28,000 பவுண்டுகள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் வட்டி வீத உயர்வு தொடர்பில் மத்திய வங்கியின் அறிவிப்பு!!

இலங்கையில் நேற்று அதிகரிக்கப்பட்ட பணவியல் கொள்கை வட்டி வீதம் என்பது மத்திய வங்கியினால் தீர்மானிக்கப்படும் அடிப்படை வட்டி விகிதமாகும் என பொது மக்களுக்கு தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த வட்டி பொதுமக்களுக்கு நேரடியாக வழங்கப்படும் கடன் வட்டி அல்ல என்றபோதிலும், வணிக வங்கிகள் மத்திய வங்கியிடமிருந்து பணத்தைப் பெறும்போது அல்லது வைப்புச் செய்யும்போது இந்த அடிப்படை வட்டியே தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

இந்தக் கொள்கை வட்டி வீதம் ஒரு சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டால், தனிநபர், வீட்டு மற்றும் வாகனக் கடன்களுக்கான வட்டி வீதங்கள் உடனடியாக உயரும்.

உதாரணமாக, முன்னர் 12 சதவீதமாக இருந்த கடன் வட்டி, 13 சதவீதம் அல்லது அதற்கும் அதிகமாக மாறுவதால் பொதுமக்கள் மற்றும் வணிகங்களின் கடன் சுமை அதிகரிக்கும்.

வட்டி உயர்வால் கடன் பெறுவது கடினமாகவும் செலவுமிக்கதாகவும் மாறுவதால், மக்களின் செலவீனங்கள் குறையும் என குறிப்பிடப்படுகின்றது.

எனினும் புதிய தொழில்களைத் தொடங்குதல், வாகனங்கள் வாங்குதல், வீடு கட்டுதல் மற்றும் நுகர்வுப் பொருட்களைக் கொள்வனவு செய்தல் போன்ற நடவடிக்கைகள் சந்தையில் கணிசமாகக் குறைய வாய்ப்புள்ளது.

பொதுமக்களும் வணிகங்களும் குறைவாகக் கடன் பெறுவதால் சந்தையில் பணப் புழக்கம் குறைந்து, பொருட்களுக்கான தேவையும் வீழ்ச்சியடையும்.

சந்தையில் பணப் புழக்கம் அதிகமாக இருந்தால் பொருட்களின் விலை உயரும் என்பதால், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதே இந்த வட்டி வீத உயர்வின் முதன்மை நோக்கமாகும்.

இதன் சாதகமாக, பணவீக்கம் கட்டுப்படுத்தப்பட்டு பொருட்களின் விலை வேகமாக உயர்வது தடுக்கப்படும். அத்துடன், வைப்பு வட்டி அதிகரிப்பதால் சேமிப்புப் பழக்கம் ஊக்குவிக்கப்படும்.

அத்துடன், வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதன் மூலம் நாட்டின் நாணய மதிப்பை ஸ்திரப்படுத்தவும் இந்த வட்டி வீத அதிகரிப்பு உதவும். எனினும் இதன் பாதக விளைவாக மாறும் வட்டி வீதக் கடன்களைப் பெற்றவர்களின் மாதாந்திரத் தவணை கட்டணம் அதிகரிக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தொழில்கள் மற்றும் சிறு வணிகங்களின் விரிவாக்கம் மந்தமடைவதால் நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி குறைவடைந்து, புதிய வேலைவாய்ப்புகளும் பாதிக்கப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.