கொழும்பு செட்டியார்தெருவின் இன்றைய தகவல்களின் படி 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 393000 ரூபாவாக பதிவாகியுள்ளது. அத்துடன் 24 கரட் தங்கப்பவுணொன்றின் விலையானது 425000 ரூபாவாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை உலக சந்தையில் இன்றைய நிலவரப்படி ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை சுமார் USD 5,360 முதல் 5,380 டொலர்களாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் இலங்கையிலும், உலக சந்தையிலும் தங்கத்தின் விலையானது வரலாறு காணாத அளவிற்கு அதிகரிக்கும் சாத்தியம் உள்ளதாக பொருளாதார ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
களுத்துறை – பாணந்துறையில் கை,கால்கள் கட்டப்பட்ட நிலையில் இளைஞரொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த சடலம் இன்று (03) காலை பாணந்துறை – கொழும்பு பழைய வீதியில் பாணந்துறை தெற்கு பொலிஸாரால் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர் பாணந்துறை வடக்கு, ஞானசேன மாவத்தையில் வசித்து வந்த 37 வயதுடைய ஒருவர் என தெரியவந்துள்ளது.
இந்த கொலை எவ்வாறு இடம்பெற்றது என்பது குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை என குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றத்துக்கு இன்று முற்பகல் சமுகமளித்த அவர், கையிருப்பிலுள்ள எரிபொருளின் அளவு குறித்தும் விளக்கமளித்துள்ளார்.
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் பதற்றத்தை தொடர்ந்து, இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படலாம் என்ற அச்சம் நிலவி வருகின்றது.
அண்மைய நாட்களாக, நாட்டில் மக்கள் எரிபொருள் நிலையங்களில் வரிசையாக நின்ற நிலையில் எரிபொருளை கொள்வனவு செய்து வருகின்றனர்.
இதன் காரணமாக, அரசாங்கத்தினால் தொடர்ந்து, எரிபொருள் பற்றாக்குறை ஏற்படாது என வலியுறுத்தி வரப்படும் அதேவேளை, சட்டவிரோதமாக பதுக்கி வைப்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், இன்றைய தினம், நாடாளுமன்றத்திற்கு சமுகமளித்த ஜனாதிபதி, டீசல் – 33 நாட்களுக்கும் பெட்ரோல் – 27 நாட்களுக்கும் விமான எரிபொருள் – 49 நாட்களுக்கும் மசகு எண்ணெய் – 44 நாட்களுக்கும் கையிருப்பில் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம், மக்கள் இது தொடர்பில் தொடர்ந்து பதற்றம் கொள்ள தேவையில்லை எனவும் எரிபொருளை கொள்வனவு செய்ய வரிசையில் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை எனவும் அரசாங்கம் வலியுறுத்தி வருகின்றது.
கிரீஸ் நாட்டில் நடைபெற்ற மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கிடையிலான fruits and vegetable carving championship போட்டியில் பங்குபற்றி ஈழத்தமிழர் ஒருவர் சாதனை படைத்துள்ளார்.
இத்தாலி நாட்டின் போட்டியாளராக பங்கேற்ற chef தனுராஜ் ரவிராஜ் (தனு) என்பவரே இவ்வாறு வெற்றி பெற்றுள்ளார். இதன்போது தனுராஜ் ரவிராஜ்க்கு வெள்ளிப்பதக்கமும், Greece culinary professional என்னும் அதியுயர் விருதையும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.
அத்துடன், Serbia நாட்டைச்சேர்ந்த ICU Honorary Member DANIJELA PANTIC VLAHOVIC அவர்களிடருந்து சிறந்த ஆளுமைக்கான அங்கீகாரத்தையும் பெற்றுக்கொண்டார்.
இந்த போட்டியில் 15 நாடுகளை சேர்ந்த போட்டியாளர்கள் கலந்து கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நடுவர்களாக உலகத்தரம் வாய்ந்த போட்டிகளின் தமைமை நடுவர்களான Andy Cuthbert – President Worldchefs (World Association of Chefs Societies),
Dimitris Kyriakopoulos – President Culinary Professionals, George Damianou – Continental Director of Southern Europe, Roberto Beltramini – Chief of Judges, Christos Gkotsis – Organizing Chairman SECC 2026 ஆகியோர் கலந்து கொண்டனர்.
அவர்களின் மதிப்பீட்டிலேயே Chef தனுவிற்கான குறித்த அங்கீகாரம் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் சூழ்நிலை காரணமாக பல்வேறு நாடுகளுக்கு பொருட்களை அனுப்புவதில் சிக்கல் நிலவுவதாக தபால் மா அதிபர் ஜெனரல் எஸ்.ஆர்.டபிள்யூ.எம்.ஆர்.பி. சத்குமார கூறியுள்ளார்.
இன்று ( 03) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், கடந்த வெள்ளிக்கிழமை ஏற்றுக்கொள்ளப்பட்ட பல பொருட்கள் இன்னும் அனுப்பப்படவில்லை.மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் சூழ்நிலை காரணமாக, சில பகுதிகளுக்கு பொருட்களை அனுப்புவது குறைவாக உள்ளது.
மேலும் சில பொருட்களை அனுப்புவதில் இடையூறுகள் இருக்கலாம்.சர்வதேச அஞ்சல் சேவைகள் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக அந்த பகுதிக்கான ஏராளமான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் தாமதங்கள் குறித்து பொதுமக்களுக்குத் தெரிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்தந்த நாடுகளின் அஞ்சல் நிர்வாகங்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கின்றோம். சர்வதேச அஞ்சல் சேவைகள் இயல்புநிலைக்கு திரும்பியவுடன் மீண்டும் பொருட்களை அனுப்பும் நடவடிக்கை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக அழியக்கூடிய பொருட்களினால், தாமதம் ஏற்படுவதால் ஆபத்துகள் உள்ளன என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
எனவே, தற்போதைய சூழ்நிலையைப் புரிந்துகொண்டு பொருட்களை வெளிநாடுகளுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள்.
சம்பந்தப்பட்ட இடங்களுக்கு பொருட்களை அனுப்புவதில் உள்ள சிரமங்கள் இலங்கைக்கு மட்டுமல்ல, பிற நாடுகளுக்கும் உள்ளன என்று அவர் மேலும் கூறியுள்ளார்.
புதிய இணைப்பு : மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் காரணமாக, மத்திய கிழக்கு இடங்களுக்குச் செல்லும் அனைத்து விமானங்களையும் இன்று (03) இரத்து செய்ய ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் முடிவு செய்துள்ளது.
தீவிரமடையும் போர் பதற்றம் மற்றும் வான்வெளி மூடல்களை உன்னிப்பாக கண்காணித்து வருவதாகவும், பயணிகளின் பாதுகாப்பிற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
இரண்டாம் இணைப்பு : கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு பயணிக்க திட்டமிடப்பட்ட 57 விமானங்கள் இன்று (03) இரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு : மத்திய கிழக்கில் வான்வெளி மூடப்பட்டதால், மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து நேற்று (02) நள்ளிரவு 12.00 மணி முதல் இன்று நள்ளிரவு 12.00 மணி வரை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வரும் 33 விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்தக் காலகட்டத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்குப் புறப்படவிருந்த 32 விமானங்களும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக கட்டுநாயக்க விமான நிலையப் பொறுப்பாளர் தெரிவித்துள்ளார்.
4 விமானங்கள் கட்டுநாயக்கவில் தரையிறக்கம்
மத்திய கிழக்கிலிருந்து இலங்கைக்கு வந்த கல்ஃப், ஏர் அரேபியா, ஃப்ளை துபாய் மற்றும் கத்தார் ஏர்வேஸ் ஆகிய 04 விமானங்கள் கட்டுநாயக்க விமான நிலையத்திலேயே தரையிறக்கப்பட்டுள்ளதாகவும், அந்த நாடுகளுக்குத் திரும்ப முடியாமல் தவிப்பதாகவும் விமான நிலையப் பொறுப்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.
இருப்பினும், இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் நேபாளம் போன்ற மத்திய ஆசிய நாடுகள், ரஷ்யா, இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி போன்ற ஐரோப்பிய நாடுகள் மற்றும் சீனா, சிங்கப்பூர், மலேசியா, ஜப்பான் மற்றும் தென் கொரியா போன்ற தூர கிழக்கு நாடுகளுக்கான விமானங்கள் வழக்கம் போல் இயக்கப்படுகின்றன.
விசா காலம் முடிந்தும் நாட்டில் தங்கியுள்ள வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கான விசாக்களை மேலும் 14 நாட்களுக்கு கட்டணம் வசூலிக்காமல் நீட்டிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது,
மாற்று விமான சேவைகளை ஏற்பாடு
மேலும் அவர்கள் தங்கள் சொந்த நாடுகளுக்குத் திரும்ப மாற்று விமான சேவைகளை ஏற்பாடு செய்யவும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது.
சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் 115 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மத்திய கிழக்கில் நடந்து வரும் மோதல்கள் காரணமாக கிட்டத்தட்ட 10,000 சுற்றுலாப் பயணிகள் தங்கள் நாடுகளுக்குத் திரும்ப முடியாமல் இலங்கையில் சிக்கித் தவிக்கின்றனர்.
இலங்கையில் எதிர்வரும் ஏப்ரல் முதலாம் திகதி தொடக்கம் கட்டாயமாக்கப்படும் TIN சான்றிதழ் தொடர்பான புதிய நடைமுறை குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அந்த வகையில் முக்கியமான பல நிதி மற்றும் பொதுச் சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்கு வரி செலுத்துவோர் TIN சான்றிதழை சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
2026ஆம் ஆண்டின் உள்நாட்டு இறைவரி (திருத்தச்) சட்டத்தின் கீழ் இந்த புதிய நடைமுறை கொண்டுவரப்படவுள்ளது.
புதிய சட்டம்
புதிய சட்டத்தின்படி, நிதி நிறுவனங்களில் ஏதேனும் ஒரு வங்கிக் கணக்கை ஆரம்பித்தல், கடன் அட்டைகளை பெற்றுக் கொள்ளுதல், காணிகளைப் பதிவு செய்தல் அல்லது காணி உரிமையை உறுதிப்படுத்துதல்,
கட்டடத் திட்டங்களுக்கான உத்தியோகபூர்வ அனுமதியைப் பெற்றுக்கொள்ளுதல், மோட்டார் வாகனங்களைப் பதிவு செய்தல், மோட்டார் வாகன வருமான வரி அனுமதிப்பத்திரத்தை புதுப்பித்தல்,
புதிய வணிகங்களைப் பதிவு செய்தல், இலங்கையில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களின் பங்குகளை கைமாற்றுதல் (வாங்குபவர் மற்றும் விற்பவர் இருவருக்கும் இது பொருந்தும்) போன்ற சேவைகளைப் பெற்றுக் கொள்ளும் போது செல்லுபடியாகும் TIN சான்றிதழை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க வேண்டியது அவசியமாகும்.
வர்த்தமானி அறிவித்தலின்படி, வங்கி மேலாளர்கள், பதிவாளர்கள், மாகாண அல்லது பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட குறிப்பிட்ட அதிகாரிகள், தத்தமது சேவைகளை வழங்குவதற்கு முன் விண்ணப்பதாரரின் TIN சான்றிதழை சரிபார்க்க வேண்டியது கட்டாயமாகும்.
வரி செலுத்தும் முறையை முறைப்படுத்துவதற்காகவும், வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்துவதற்காகவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம் காரணமாக இலங்கையின் தங்கத்தின் விலை எதிர்பாராத அளவு அதிகரித்துள்ளதாக இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
அதன்படி இன்று ஒரே நாளில் மூன்று முறை தங்கம் விலை அதிகரித்துள்ளது. அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 410,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
22 கரட் தங்கம் பவுண் ஒன்று 379,300 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 51,250 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 47,413 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
இந்தியாவின் ராஜஸ்தானில், ஆறு ஆண்டுகளுக்கு முன் மாயமான சிறுவன் ஒருவனை அவனது உறவினர்களே பாபநாசம் திரைப்பட பாணியில் கொன்று புதைத்துவிட்டது தெரியவந்துள்ளது.
ராஜஸ்தானைச் சேர்ந்த ஜக்மோகன் பைரவா என்னும் நபரின் மகன் டில்லு என்னும் பிரின்ஸ். பிரின்ஸ் ஆறு ஆண்டுகளுக்கு முன் ஒருநாள் காணாமல் போனான்.
ஆறு ஆண்டுகளாக பொலிசார் அவனைத் தேடிவந்தும் சிறுவன் கிடைக்காததால், எப்படியாவது அவனைக் கண்டுபிடிக்க நீதிமன்றம் ஒன்று உத்தரவிட்டது.
அதைத் தொடர்ந்து பொலிசார் மேற்கொண்ட விசாரணையில், பிரின்ஸின் உறவினர்களான அனில் மற்றும் கிருஷ்னா தம்பதியர் சிறுவனைக் கொன்று புதைத்தது தெரியவந்துள்ளது.
2020ஆம் ஆண்டு, ராஜஸ்தான் வழியாக டெல்லி மும்பை நெடுஞ்சாலை அமைக்கப்பட்டபோது, குழந்தையைக் கொன்று சாலை அமைக்கும் இடத்தில் புதைத்துவிட்டதாக அனில், கிருஷ்னா தம்பதியர் தற்போது தெரிவித்துள்ளனர்.
ஆகவே, நெடுஞ்சாலையின் ஓரமாக, பூமிக்கடியில் ஸ்கேன் செய்யும் இயந்திரங்கள் மற்றும் ஜேசிபி வாகனங்களின் உதவியுடன் பிரின்ஸின் உடலைத் தேடும் பணி துவக்கப்பட்டுள்ளது.
விடயம் என்னவென்றால், குழந்தை காணாமல்போன அன்று அனில் கிருஷ்னா தம்பதியரும் கவலையுடன் குழந்தையைத் தேடினார்களாம்.
பிரின்ஸுடைய அக்காவான அர்ச்சனாவும் அண்ணனான சமரும் அதை நினைவுகூர்ந்துள்ளதுடன், அவர்கள் இப்படி செய்திருப்பார்கள் என தாங்கள் நினைக்கவேயில்லை என்றும் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்கள்.
ஒடிசாவின் புகழ்பெற்ற சின்னத்திரை நடிகை லட்சுமிப்பிரியா பெஹரா (நிகிதா) 2019 ஜனவரி 4ஆம் தேதி கட்டாக் நகரில் உள்ள வீட்டின் மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்தார்.
குடும்ப தகராறு காரணமாக கணவர் லிபன் சாஹு தள்ளிவிட்டதாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். நிகிதாவின் தந்தை அளித்த புகாரின் பேரில் வரதட்சணை கொடுமை மற்றும் கொலை உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் கட்டாக் மூன்றாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. மனைவியை திட்டமிட்டு கொலை செய்த குற்றம் நிரூபிக்கப்பட்டதாக கூறி நடிகர் லிபன் சாஹுவுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.20,000 அபராதம் விதிக்கப்பட்டது. நீதிமன்றம் தனது தீர்ப்பில் குற்றவாளிக்கு உரிய தண்டனை வழங்கப்பட்டதாக குறிப்பிட்டது.
போதிய ஆதாரங்கள் இல்லாததால் லிபன் சாஹுவின் பெற்றோர் விடுவிக்கப்பட்டனர்.
‘ஏசிபி நிகிதா’, ‘தபஸ்யா’ போன்ற தொடர்களில் நடித்த லட்சுமிப்பிரியா பெஹரா, பல படங்களிலும் நடித்திருந்தார். அவரது மரணம் ஒடிசா மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
பெங்களூருவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த திரைப்பட இயக்குநர் ஒருவரை மர்மமான முறையில் கடத்தி, தாக்கிய வழக்கில் கன்னட நடிகை உட்பட 11 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ள சம்பவம் திரைத்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தைச் சேர்ந்த அனிஷ் (35) என்ற இயக்குநர், கன்னடத்தில் ‘ஜீவனத பாஷே’ என்ற திரைப்படத்தை இயக்கி வந்தார்.
இந்தப் படத்தின் தயாரிப்புப் பணிகளுக்காக அவர் ஆஷீர்வாத் என்ற நடிகரிடம் சுமார் ரூ.6 லட்சம் கடனாகப் பெற்றதாகக் கூறப்படுகிறது. கடனைத் திருப்பிச் செலுத்தாதது மற்றும் படத்தின் படப்பிடிப்பைப் பாதியிலேயே நிறுத்தியது போன்ற காரணங்களால் இருவருக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது.
இந்நிலையில் கடந்த பிப்ரவரி 9ம் தேதி, தனது காரை விற்பனை செய்ய உதவுமாறு நடிகை ஐஸ்வர்யாவை அனிஷ் அணுகியுள்ளார். இதைப் பயன்படுத்திக் கொண்ட ஐஸ்வர்யா, காரை வாங்க ஆள் இருப்பதாகக் கூறி பிப்ரவரி 22ம் தேதி அனிஷை பெங்களூருவுக்கு வரவழைத்துள்ளார்.
பெங்களூரு இந்திரா நகரில் உள்ள ஒரு வீட்டிற்கு அனிஷ் சென்றபோது, அங்கு மறைந்திருந்த ஆஷீர்வாத் மற்றும் அவரது நண்பர்கள் அனிஷை ஒரு அறைக்குள் பூட்டி வைத்து கிரிக்கெட் மட்டையால் கடுமையாகத் தாக்கியுள்ளனர்.
அவரிடமிருந்து 22 கிராம் தங்கச் சங்கிலி, செல்போன் மற்றும் 30 ஆயிரம் ரூபாய் ரொக்கத்தைப் பறித்துக்கொண்ட கும்பல், அவரை நகருக்கு வெளியே கொண்டு சென்றும் தாக்கியுள்ளது. காயமடைந்த அனிஷை ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்துவிட்டு அந்தக் கும்பல் தப்பியோடியது.
இது குறித்து மருத்துவமனை அளித்த தகவலின் பேரில் வழக்குப்பதிவு செய்த ஆடுகோடி போலீசார், தீவிர விசாரணைக்குப் பிறகு நடிகை ஐஸ்வர்யா மற்றும் நடிகர் ஆஷீர்வாத் உள்ளிட்ட 11 பேரைக் கைது செய்துள்ளனர். விசாரணையில் இவர்கள் அனைவரும் கன்னடத் திரையுலகில் நுழைய முயன்று வரும் புதுமுகங்கள் என்பது தெரிய வந்துள்ளது.
அனுராதபுரம் சாலியபுர – தெப்பங்குளம் பகுதியில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
வீட்டு உரிமையாளருக்கும் வீட்டிற்கு வந்த ஒருவருக்கும் இடையே ஏற்பட்ட தர்க்கம் முற்றியதில், வீட்டு உரிமையாளர் வீட்டிற்கு வந்தவர் மீது இவ்வாறு தாக்குதல் நடத்தியுள்ளார்.
இந்தத் தாக்குதலினால் குறித்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு உயிரிழந்தவர் சாலியபுர பிரதேசத்தைச் சேர்ந்த 41 வயதுடையவராவார்.
சம்பவம் தொடர்பாக வீட்டு உரிமையாளரைப் கைது செய்துள்ள அனுராதபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
நடிகரும், தமிழக வெற்றி கழக தலைவருமான விஜய் , தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ள நிலையில், அவரது மனைவி சங்கீதா விவாகரத்து கேட்டு மனுத்தாக்கல் செய்துள்ளமை தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு நடிகையுடனான திருமணத்திற்கு மீறிய தொடர்பே விவகாரத்துக்கு காரணம் என சங்கீதா மனுவில் குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இது தொடர்பில் இந்திய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளதாவது,
“நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவை கொண்டிருந்தார் விஜய். இது எனக்கு 2021 ஏப்ரலில் தெரிய வந்தது. நான் இதை கண்டுபிடித்த பிறகும் இரக்கமே இல்லாமல் அந்த உறவை தொடர்ந்தார். இது வலியையும், மன உளைச்சலையும் கொடுத்தது.
கடந்த 5 ஆண்டுகளாக மனதளவில் அவர் என்னை பிரிந்து வாழ்ந்து வருகிறார். அவர் நடிகையுடன் தொடர்பில் இருந்ததால் மன உளைச்சலுக்கு ஆளானேன். அந்த உறவை முறித்துக்கொள்வதாக கூறினார். ஆனால் அவரது நடவடிக்கையில் மாற்றம் இல்லை.
திருமணத்தை மீறிய அந்த உறவை தட்டிக் கேட்டதால், வீட்டில் எனக்கான உரிமைகளை விஜய் நிறுத்திவிட்டார். கட்டுப்பாடுகளையும் ஏற்படுத்தினார். சம்பந்தப்பட்ட நடிகையோடு விஜய் வெளிநாடுகளுக்கு சென்றார். வெளிநாடுகளுக்கு சென்றதை நடிகையே பகிர்ந்தார்.
விஜய் உடன் அடிக்கடி வெளிநாடு சென்று அங்கு எடுத்த புகைப்படங்களை அந்த நடிகை சமூக ஊடகங்களில் பகிர்ந்ததால், அது என்னையும் எனது குழந்தைகளையும் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக்கியது.
பொது வெளியில் நன்மதிப்பை கெடுக்கக்கூடாது என்பதால் நடிகையின் பெயரை குறிப்பிடவில்லை. கணவரிடம் ஏதேனும் அழுத்தம் வந்தால் அந்த நடிகையின் பெயரை வெளியிடுவேன். தேவைப்பட்டால் எனது கணவருடன் உறவில் இருக்கும் நடிகையை வழக்கின் 2 ஆவது எதிர்மனுதாரராக சேர்ப்பேன்.
விஜய்யின் நடத்தை குழந்தைகளுக்கு அவமானம் ஏற்பட்டது. என்னை தொடர்ந்து அலட்சியப்படுத்தியதால் தனித்து வாழ்ந்து வருகிறேன். விஜய்யிடம் சமூக அந்தஸ்து மற்றும் வருவாயை கருத்தில் வைத்து எனக்கு ஜீவனாம்சம் வாங்கித் தர வேண்டும்.
விஜயின் பொதுவெளி பிம்பத்தைக் கருதி நீதிமன்றத்தை நாடாமல் இருந்தேன். பேச்சுவார்த்தை நடத்த இருமுறை முயற்சி மேற்கொண்டும் அது தோல்வியில் முடிந்தது” என்றும் பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
அதேவேளை 2025 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சங்கீதா விவாகரத்து கோரி மனுதாக்கல் செய்துள்ளதாக கூறப்படும் நிலையில், வரும் ஏப்ரல் மாதம் மனு விசாரணைக்கு வரவுள்ளதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் விஜய் அரசியலில் காலடி எடுத்து வைத்தது முதல் பல்வேறு சிக்கலகளை எதிர்கொண்டு வருவதாகவும், எல்லாவற்றையும் முறியடித்து மக்கள் மனங்களில் இடம்பிடித்த விஜய்யை அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சனைகளை சிலர் பெரிது படுத்தி சேறுபூசும் நடவடிக்கையில் ஈடுபடுவதாகவும் விஜய் ஆதரவாளர்கள் கூறியுள்ளனர்.
எம்பிலிபிட்டியவில் , தனது 16 வயது மகளின் நினைவாக ஒரு தந்தை பல ஏக்கர் காணிகளை தானமாக வழங்கி வரும் நெகிழ்ச்சியான சம்பவம் இடம்பெற்றுள்ளது.
எம்பிலிபிட்டிய, கச்சிகல பகுதியைச் சேர்ந்த டபிள்யூ.ஏ. கல்யாணசிறி (W.A. Kalyanasiri) என்பவரின் 16 வயது மகள் லக்சுமி தீபிகா, கடந்த 2024 ஆம் ஆண்டு கடுமையான சுகயீனம் காரணமாக உயிரிழந்தார்.
இந்நிலையில் தனது மகளின் நினைவாக , இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மற்றும் காணியற்ற ஏழைக் குடும்பங்களுக்காக இந்த கிராமத்திற்கு ‘லக்சுமி பூமி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் நுவரெலியா மாவட்டத்தின் வலப்பனை, தஹராவ போன்ற பிரதேசங்கள் மண்சரிவு மற்றும் இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டபோது, அங்கு நிவாரணப் பொருட்களைக் கொண்டு சென்ற கல்யாணசிறி அங்குள்ள மக்களிடம் ஒரு பகிரங்க அழைப்பை விடுத்தார்.
இயற்கை அனர்த்த அபாயம் இல்லாத எம்பிலிபிட்டிய பகுதியில் காணி வழங்கத் தயாராக இருக்கிறேன், விருப்பமுள்ளவர்கள் வந்து குடியேறலாம்” என அவர் விடுத்த அழைப்பையேற்று பல குடும்பங்கள் தற்போது அங்கு குடியேறி வருகின்றதாக கூறப்படுகின்றது.
இதுவரை 4.5 ஏக்கர் காணி 47 நபர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொருவருக்கும் தலா சில பேர்ச் காணிகள் வீதம் வழங்கப்பட்டுள்ளன. காணி மட்டுமன்றி, விளையாட்டு மைதானம், மூலிகைத் தோட்டம் மற்றும் பொது மண்டபம் போன்ற வசதிகளுக்காகவும் காணியில் ஒரு பகுதியை அவர் ஒதுக்கியுள்ளார்.
குடியேறியுள்ள மக்களுக்குத் தேவையான நீர் வசதியையும் அவரே ஏற்படுத்திக் கொடுத்துள்ளதுடன், .தற்போது குடியேறியுள்ள மக்கள் வீடுகளை அமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பில் காணி தானம் வழங்கியவர் கூறுகையில்,
இயற்கை அனர்த்தங்களால் காணியை இழந்தவர்கள் இன்னும் வருவார்களானால், இதற்கு அருகிலுள்ள மேலும் 4.5 ஏக்கர் காணியையும் வழங்க நான் தயாராக இருக்கிறேன் எனத் தெரிவித்தார்.
இந்தக் கிராமத்திற்கு அருகாமையில் இரண்டு மின்சார விநியோக மார்க்கங்கள் காணப்படுகின்றன. எனவே, இந்தக் கிராமத்திற்கு மின்சார வசதியைப் பெற்றுக்கொடுக்க ஜனாதிபதி, பிரதமர் அல்லது மின்சக்தி அமைச்சர் தலையிட வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்
பிரான்ஸில் இலங்கையை பின்புலமாக கொண்ட தமிழர் ஒருவர் சாதனை படைத்துள்ளார். தலைநகர் பாரிஸில் சித்தம்பரப்பிள்ளை ஜெகதீபன் சிறந்த பாண் தயாரிப்பாளருக்கான போட்டியில் வெற்றி பெற்றுள்ளார்.
ஜெகதீபன் 142 போட்டியாளர்களை வீழ்த்தி Grand Prix de la Baguette de Tradition Franchise de la Ville de Paris 2026 பட்டத்தை வென்றுள்ளார். இந்த வெற்றியின் மூலம், அவரது பேக்கரியான Fournil Didot பேக்கரி 4,000 யூரோ பரிசை வென்றுள்ளது.
மேலும் ஜனாதிபதியின் எலிசே மாளிகைக்கு பாண் வழங்குவதற்கான ஒரு வருட ஒப்பந்தத்தையும் பெற்றுள்ளார்.
இதற்கிடையில், 2023 ஆம் ஆண்டில், இலங்கையை சேர்ந்த பேக்கரான தர்ஷன் செல்வராஜா, பாரிஸில் சிறந்த பாண் தயாரிக்கும் போட்டியில் வெற்றி பெற்ற முதல் இலங்கையர் என்ற வரலாற்றைப் படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
உலக சந்தையில் தொடர்ந்தும் தங்கத்தின் விலையில் அதிகரிப்பு போக்கு பதிவாகி வருகிறது. அதற்கமைய இன்றைய நிலவரப்படி, ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை, 5278 டொலராக அதிகரித்துள்ளது.
அத்துடன், வெள்ளியின் விலையும் அதிகரித்து, 93.72 டொலராக விற்பனை செய்யப்படுகிறது. அதேநேரம் கடந்த ஒரு மாதத்தில் தங்கத்தின் விலை 1.94 சதவீதத்தால் அதிகரிப்பை பதிவு செய்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.
கொழும்பு செட்டியார்தெரு தகவல்களின் படி இன்றைய தினம் 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 372800 ரூபாவாகவும், 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 403000 ரூபாவாகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.