தரமற்ற மருந்தால் பறிபோன உயிர் : மனைவியின் மரணத்திற்கு நீதிகோரும் கணவர்!!

கொழும்பு தொற்று நோய்கள் நிறுவனம் (IDH) மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 11 ஆம் திகதி உயிரிழந்த இரண்டு குழந்தைகளின் தாயான ஷானிகா சமரபால (37)வின் மரணத்துக்கு தரமற்ற மருந்துகளே காரணம் என அவரது கணவர் குற்றம்சாட்டியுள்ளார்.

டெங்கு காய்ச்சலுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குறித்த இளம் தாயார் 11 ஆம் திகதி உயிரிழந்த நிலையில் பிள்ளைகள் நிர்க்கதியாகியுள்ளனர்.

இந்நிலையில் தனது மனைவியின் மரணத்திற்கு நீதிகோரி நேற்று (23.12.2025) அதுருகிரிய பொலிஸில் கணவர் முறைப்பாடளித்தார். இறந்த பெண்ணின் கணவர், ஹோமாகம, ஹபரகடாவைச் சேர்ந்த பி. சானக மதுசங்க கூறுகையில்,

டெங்கு காய்ச்சலுக்காக தனது மனைவி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதாகவும், அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருப்பதாகவும் அவர் கூறினார்.

சம்பந்தப்பட்ட மருந்து வழங்கப்பட்ட உடனேயே தனது மனைவியின் இதயம் நின்றுவிட்டது என்றும், அவரது இதயம் சுமார் ஆறு முறை நின்றாலும், சிகிச்சை அளிக்கப்பட்டு ஒவ்வொரு முறையும் இயல்பு நிலைக்குத் திரும்பிய போதிலும் அவரைக் காப்பாற்ற முடியவில்லை என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

சம்பவத்திற்கான காரணத்தை மருத்துவர்களால் கூட புரிந்து கொள்ள முடியவில்லை என்றும், இந்த விஷயத்தில் விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகவும் மதுசங்க கூறினார்.

“நான் என்ன செய்தாலும், இப்போது எனக்கு மனைவி இல்லை. என் குழந்தைகளுக்கு அம்மா இல்லை. எனவே, இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் இளம் மனைவியை இழந்து வாடும் கணவர் வலியுறுத்தினார்.

முச்சக்கரவண்டி – லொறி மோதி விபத்து : குழந்தை உட்பட மூவர் காயம்!!

காலி – பெரெலிய பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட மூன்று பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து நேற்று செவ்வாய்க்கிழமை (23) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

முச்சக்கரவண்டி ஒன்று லொறியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த குழந்தை உட்பட மூன்று பேர் காயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கோர விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த இளைஞன்!!

கொழும்பு-பதுளை பிரதான வீதியில் ஓபநாயக்க ஹுனுவல பகுதியில், இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகி ஓடையில் விழுந்ததில், மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று முன்தினம் நள்ளிரவு சம்பவித்த விபத்தில் மத்தீத மந்தினு என்ற 22 வயது இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்த இளைஞரின் பிரேத பரிசோதனை நேற்று கஹவத்தை ஆதார மருத்துவமனையில் நடைபெற்றது. விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மண்சரிவு அபாயத்தால் இடம்பெயர்ந்தோர் வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி : எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சடலம்!!

கண்டி, அங்கும்புர – கல்கந்த பகுதியில் மண்சரிவு அபாயம் காரணமாக ஆட்கள் எவரும் இன்றி இருந்த வீடொன்றிலிருந்து, அடையாளம் காண முடியாத அளவிற்கு எரியுண்ட நிலையில் நபர் ஒருவரின் உடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த உடலம் நேற்றையதினம் (23.12.2025) கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த வீட்டின் உரிமையாளர்கள் அந்த பகுதியில் நிலவிய மண்சரிவு அபாயம் காரணமாக, சில நாட்களுக்கு முன்னர் வீட்டைப் பூட்டிவிட்டு நீர்கொழும்பு பகுதியில் உள்ள உறவினர் ஒருவரின் வீட்டிற்குச் சென்றுள்ளனர்.

நேற்றுமுன்தினம்(22) காலை வீட்டின் அருகே வசிக்கும் உறவினர் ஒருவர் வழங்கிய தகவலின் அடிப்படையில், உரிமையாளர்கள் மதியம் வீட்டுக்கு சென்று பார்த்துள்ளனர்.

இதன்போது, வீட்டின் உட்புறத்தில் அடையாளம் காண முடியாத நிலையில் மனித உடலமொன்று எரிந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள், அங்கும்புர பொலிஸாருக்குத் தகவல் வழங்கினர்.

சம்பவ இடத்துக்கு விரைந்த அங்கும்புர பொலிஸார் உடலத்தை மீட்டதுடன், மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழிலிருந்து இன்று ஓட்டப் பயணத்தை தொடங்கிய ஹொங்காங் கிரிக்கெட் வீரர்!!

புற்றுநோயில் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்காக நிதி திரட்டுவதற்காக இலங்கையின் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி, முன்னாள் ஹொங்காங் கிரிக்கெட் வீரர் ராகுல் சர்மா ஓட்ட பயணத்தை இன்று ஆரம்பித்துள்ளார்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான நிதி திரட்டும் முயற்சியில், இவர் இலங்கை முழுவதும் ஓட்ட பயணத்தை மேற்கொள்ள தீர்மானித்துள்ளார்.

குறித்த பயணமானது, இன்று (24.12.2025), யாழ்ப்பாணம் – பருத்தித்துறை முனையிலிருந்து ஆரம்பித்து, டிசம்பர் 30ஆம் திகதி அன்று மாத்தறையில் உள்ள தேவுந்தரா முனையில் முடிவடையும் என தெரிவிக்கப்படுகின்றது. இந்த ஓட்ட பயணமானது, 574 கிலோமீட்டர் (356.7 மைல்) வரையானது என தெரிவிக்கப்படுகின்றது.

இதன் காரணமாக அவரது உடல் மற்றும் மனம் கடுமையான சோர்வினை எதிர் கொள்ளும் எனவே, ஒரு நாளைக்கு சுமார் 100 கிலோமீட்டர் ஓட அவர் திட்டமிட்டுள்ளார்.

ராகுல் சர்மா, இதற்கு முன்பு முயற்சி செய்திடாத ஒரு சவாலை ஏற்க ஆர்வமாக இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது அவுஸ்திரேலியாவின் மெல்போர்னில் உடற்பயிற்சி உடலியல் நிபுணராக பணிபுரியும் அவர், 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் ஹொங்காங்கின் 19 வயதுக்குட்பட்டோர் கிரிக்கெட் அணியைப் பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடினார்.

இந்நிலையில், குழந்தை பருவ புற்றுநோயைக் குணப்படுத்த ஆராய்ச்சி நடத்தும் சிட்னியை தளமாகக் கொண்ட குழந்தைகள் புற்றுநோய் நிறுவனத்திற்கு நிதி திரட்டுவதற்கே அவர் இந்த ஓட்ட பயணத்தை மேற்கொள்ள தீர்மானித்துள்ளார்.

அதன்படி, இந்த நல்ல நோக்கத்திற்காக குறைந்தது 20,000 அவுஸ்திரேலிய டொலர்களை (தோராயமாக 13,100 அமெரிக்க டொலர்கள்) திரட்டுவதே அவரது இலக்கு எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இவரின் இந்த நடவடிக்கைக்கு பலரும் வரவேற்பு மற்றும் வாழ்த்து தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தங்கத்தின் அதிரடி விலையேற்றம் – புதிய உச்சத்தைத் தொட்டு சாதனை!!

கொழும்பு தங்கச் சந்தையில் தங்கத்தின் விலை இன்று (24.12.2025) மீண்டும் அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. இதன்படி, 24 கரட் தங்கப் பவுன் (8 கிராம்) ஒன்றின் விலை இன்று 354,000 ரூபாவாகப் பதிவாகியுள்ளது.

நேற்று (23) இதன் விலை 352,000 ரூபாவாகக் காணப்பட்டது. நேற்றைய விலையுடன் ஒப்பிடுகையில் இன்று 2,000 ரூபாவினால் விலை அதிகரித்துள்ளது.

அதேபோல, 22 கரட் தங்கப் பவுன் ஒன்றின் விலை இன்று ரூ. 327,500 ஆக பதிவாகியுள்ளது. நேற்று இதன் விலை சுமார் ரூ. 325,600 ஆகக் காணப்பட்டது.

உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4500 அமெரிக்க டொலர்களுக்கும் அதிக பெறுமதியை பதிவு செய்துள்ளது. வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில் தங்கத்தின் விலையானது புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

வெனிசுலாவில் நிலவி வரும் தீவிர அரசியல் பதற்றங்கள் மற்றும் அமெரிக்காவில் வட்டி விகிதங்கள் மேலும் குறைக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்புகள் ஆகியவை இந்த அதிரடி விலையேற்றத்திற்கு முதன்மையான காரணங்களாகக் கூறப்படுகின்றன.

உலகளாவிய ரீதியில் நிலவும் இத்தகைய பொருளாதார மற்றும் அரசியல் நிச்சயமற்ற சூழலால், முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக கருதப்படும் தங்கத்தின் மீது அதிக ஆர்வம் காட்டி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெனிசுலாவில் நிலவும் போர் பதற்றங்கள் உலக சந்தையில் ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், அமெரிக்க மத்திய வங்கி தனது வட்டி விகிதங்களை மீண்டும் குறைக்கக்கூடும் என்ற தகவல்கள் தங்கத்தின் மதிப்பை மேலும் வலுப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த விலை உயர்வு உலக நாடுகள் பலவற்றிலும் ஆபரணத் தங்கத்தின் விலையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஸ்பாட் கோல்ட் XAU ஒரு அவுன்ஸ் 4,391.92 டொலர் ஆக 1.2வீதம் உயர்ந்து 4,391.92 டொலராக நேற்று பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

விவாகரத்து கேட்ட மனைவியை வீதியில் சுட்டுக்கொன்ற கணவன்!!

இந்தியாவின் கர்நாடகாவில் விவாகரத்து கேட்ட மனைவியை, சாலையில் வைத்து கணவன் துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலத்தைச் சேர்ந்த 39 வயதான புவனேஷ்வரி என்பவர் பெங்களுருவில் வங்கி மேலாளராக பணியாற்றி வந்தார். இவரது கணவர் பாலமுருகன் (சேலம் மாவட்டம்) ஐடி ஊழியராக பணியாற்றி வருகிறார். இந்த தம்பதிக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

புவனேஷ்வரி கணவர் பாலமுருகனுக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், பாலமுருகன் வேலை முடிந்து வீடு திரும்பிய மனைவி புவனேஷ்வரியை சாலையில் வைத்து துப்பாக்கியால் சுட்டுள்ளார்.

இதனையடுத்து கையில் துப்பாக்கியுடன் பாலமுருகன் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். படுகாயமடைந்த புவனேஷ்வரி இரத்த வெள்ளத்தில் உயிரிழந்துள்ளார்.

அவரது உடலைக் கைப்பற்றிய பொலிஸார், தமிழ்நாட்டில் உள்ள அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் கஞ்சா செடி வளர்த்த நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

வவுனியா மடுக்கந்தபகுதியில் காணி ஒன்றில் கஞ்சா செடி ஒன்றை பயிரிட்டு வளர்த்த ஒருவரை வவுனியா தலைமை பொலிஸ்நிலைய போதைத்தடுப்பு பிரிவினர் கைதுசெய்துள்ளனர்.

இதன்போது, அதே இடத்தை சேர்ந்த 32 வயதான ஒருவரை கைதுசெய்ததுடன், அவரிடமிருந்து கஞ்சாசெடியும் கைப்பற்றப்பட்டது. கைது செய்யப்பட்டவர் மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முற்படுத்த உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த கைது நடவடிக்கை வவுனியா தலைமை பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

Screenshot
Screenshot
Screenshot
Screenshot

இரண்டரை வயது குழந்தை ஆற்றில் விழுந்து உயிரிழப்பு!!

பலாங்கொடை, வேவல்வத்த வெள்ளவள பகுதியில் இரண்டரை வயதுடைய ஆண் குழந்தை ஒன்று ஆற்றில் விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குழந்தை, தனது வீட்டின் அருகில் விளையாடிக்கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக அங்குள்ள சிறிய ஆற்றில் தவறி விழுந்துள்ளது. தவறி விழுந்த குழந்தையை உறவினர்கள் உடனடியாக மீட்டு, பலாங்கொடை ஆதார மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. குழந்தையின் உடலம் தற்போது பிரேத பரிசோதனைக்காக பலாங்கொடை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

யாழ் கடற்கரையில் அடையாள தெரியாத சடலம் : இந்திய மீனவருடையதா?

யாழ்ப்பாணம் பருத்தித்துறை இன்பருட்டி கடற்கரையில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கரை ஒதுங்கியுள்ளது.

எனினும் கரையொதுங்கிய உடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை. இந்நிலையில் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதேவேளை யாழில் கரையொதுங்கிய உடலம் இந்தியா இராமேஸ்வரம் பகுதியிலிருந்து மீன்பிடிக்க சென்று கடந்த 6ஆம் திகதி நடுக்கடலில் தவறி விழுந்து மாயமான மீனவர் உடலாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக தமிழ்நாடு தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

கைதான பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனாவுக்கு பிணை!!

கொழும்பு கோட்டை பொலிஸாரிடம் சரணடைந்த பின்னர் இன்று (24.12.2025) காலை கைது செய்யப்பட்ட யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனாவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

கோட்டை காவல்நிலையத்தை சேர்ந்த அதிகாரி ஒருவர் தனது கடமையைச் செய்துகொண்டிருந்தபோது, பொலிஸாருக்கு இடையூறு விளைவித்ததாக இராமநாதன் அர்ச்சுனா மீது வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கு நேற்று கோட்டை நீதவான் இசுரு நெத்திகுமார முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

ஏற்கனவே இந்த வழக்கில் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, நேற்றைய வழக்கு விசாரணையின்போது நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருக்கவில்லை.

இதனையடுத்து , அவரை உடனடியாகக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கோட்டை நீதவான் பிடியாணை பிறப்பித்திருந்தது.

கோர விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த மாணவன்!!

களுத்துறை, பதுரலிய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 17 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். கடந்த 19 ஆம் திகதி மோட்டார் சைக்கிள் ஒன்றை முந்தி செல்ல முயற்சித்த மாணவன், ​​கெப் வண்டியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த மாணவனும் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த இளைஞனும் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதன் போது மாணவன் உயிரிழந்துள்ளார் என பதுரலிய பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த மாணவர் பதுரலிய, இலுக்பத, டெல்கிட் வத்த பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் திலான் என்ற 17 வயதுடையவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

பதுரலிய பொலிஸ் பிரிவின் கலுகல சந்திக்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

பதுரலிய பிரதேச செயலகத்திற்கு சொந்தமான கெப் வண்டி, பதுரலியவிலிருந்து அகலவத்தை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த 21 வயதுடைய நவராஜா கசுன் காயமடைந்து மேலதிக சிகிச்சைக்காக நாகொட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கெப் வண்டியின் சாரதியும் பதுரலிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!!

சீரற்ற வானிலை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட 2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையின் மீதமுள்ள பாடங்களுக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு பரீட்சைகள் திணைக்களம் முக்கிய அறிவுறுத்தலொன்றினை விடுத்துள்ளது.

அனர்த்தங்கள் காரணமாக பாதிக்கப்பட்ட பரீட்சார்த்திகள் தங்கள் வசிப்பிடத்தில் மாற்றம் ஏற்பட்டிருந்தால், உடனடியாக அதிகாரிகளுக்கு தெரிவிக்குமாறு பரீட்சைகள் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

விண்ணப்பதாரர்கள் தங்கள் முகவரியில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால், அது குறித்து தங்கள் பாடசாலை அதிபர் அல்லது பரீட்சைகள் திணைக்களத்திற்கு அறிவிக்க வேண்டும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி கூறியுள்ளார்.

இந்த நோக்கத்திற்காக 011 2784537 அல்லது 011 2788616 என்ற தொலைபேசி இலக்கங்களின் ஊடாக பரீட்சைகள் திணைக்களத்தை தொடர்பு கொள்ளலாம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அனர்த்தம் காரணமாக முன்னர் ஒதுக்கப்பட்ட பரீட்சை மையத்தில் ஒரு மாணவர் பரீட்சை எழுத முடியாவிட்டால், அவர்கள் முன்கூட்டியே திணைக்களத்திற்கோ அல்லது பாடசாலை அதிபருக்கோ தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.

அதன்படி, மாணவரின் புதிய வசிப்பிடம் அல்லது மாவட்டத்திற்கு அருகில், குறிப்பாக பேரிடர் சூழ்நிலைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, மாற்று பரீட்சை நிலையத்தினை ஒதுக்க ஏற்பாடு செய்யப்படும்.

இந்த ஏற்பாடு தனியார் பரீட்சார்த்திகளுக்கும் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பேரிடர் சூழ்நிலை காரணமாக விண்ணப்பதாரர்களின் அனுமதி அட்டைகள் அல்லது தேசிய அடையாள அட்டைகள் சேதமடைந்தாலோ அல்லது காணாமல் போயிருந்தாலோ உடனடியாக உதவியை பெறுமாறு பரீட்சைகள் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

அத்தகைய சந்தர்ப்பங்களில், வலயக்கல்வி அதிகாரி மற்றும் பாடசாலை அதிபரால் சான்றளிக்கப்பட்ட புகைப்படங்களை சமர்ப்பிப்பதன் மூலம் பரீட்சைக்கு அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் மரக்கறி விலையில் பாரிய மாற்றம் : உச்சம் தொட்ட கறிமிளகாய் விலை!!

நாரஹென்பிட்டி பொருளாதார மத்திய நிலையத்தில் நேற்றைய தினம் ஏனைய மரக்கறிகளை விட, கறிமிளகாயின் விலை அதிகரித்துக் காணப்பட்டது.

இதன்படி, நாரஹென்பிட்டி பொருளாதார மத்திய நிலையத்தில் கறிமிளகாய் ஒரு கிலோகிராம் 1,900 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இருப்பினும், நுவரெலியா, தம்புள்ளை மற்றும் கெப்பட்டிபொல ஆகிய பொருளாதார மத்திய நிலையங்களில் கறிமிளகாய் ஒரு கிலோகிராம் 1000 முதல் 1,200 ரூபாய் வரையான விலையில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே, நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தின் இன்றைய நிலவரப்படி, கறிமிளகாய் ஒரு கிலோ 1000 முதல் 1,050 ரூபாய் வரையான விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

அத்துடன், குடை மிளகாய் ஒரு கிலோ 1,400 முதல் 1,500 ரூபாய் வரையான விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

அதேநேரம், கோவா ஒரு கிலோ 220 முதல் 250 ரூபாய்க்கும், கரட் ஒரு கிலோ 200 முதல் 230 ரூபாய்க்கும், பீட்ரூட் ஒரு கிலோ 350 முதல் 380 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கணவரை கொன்று கிரைண்டரில் அரைத்த மனைவி!!

உத்தரபிரதேச மாநிலம் சம்பல் பகுதியில் காணாமல் போன காலணி வியாபாரி ராகுல், கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மனைவி ரூபி மற்றும் அவரது காதலன் கௌரவ் சேர்ந்து இந்த கொலையை செய்தது விசாரணையில் அம்பலமானது. நவம்பர் 18 முதல் காணாமல் போனதாக நாடகமாடிய ரூபி, 20-ஆம் தேதி காவல் நிலையத்தில் புகாரும் அளித்திருந்தார்.

27 நாட்களுக்குப் பிறகு வடிகாலில் பாலிதீனில் சுற்றப்பட்ட சிதைந்த உடல் மீட்கப்பட்டபோது வழக்கு திருப்பம் கண்டது.

கை மீது ‘ராகுல்’ என பச்சை குத்தப்பட்டிருந்ததன் மூலம் அடையாளம் உறுதி செய்யப்பட்டது. வீட்டில் இருந்த இரும்புக் கம்பி, ரத்தக் கறைகள் மற்றும் அக்கம்பக்கத்தினரின் தகவல்கள் சந்தேகத்தை மேலும் வலுப்படுத்தின.

காதல் உறவை கணவன் கண்டுபிடித்ததால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ராகுல் கொல்லப்பட்டதாக ரூபியும் கௌரவமும் ஒப்புக்கொண்டனர்.

இரும்புக் கம்பியால் தாக்கி கொன்ற பின், உடலை கிரைண்டரில் துண்டுகளாக்கி பல இடங்களில் வீசியுள்ளனர். இந்த கொடூரத்திற்கு உதவிய அபிஷேக் உட்பட மூன்று பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பில் திடீரென தீப்பற்றி எரிந்த முச்சக்கரவண்டி!!

கொழும்பு – கொள்ளுப்பிட்டி லிபர்டி பிளாஸாவுக்கு அருகில் வீதியில் பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்று திங்கட்கிழமை (22.12.2025) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தீ பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன், தீ பரவலில் முச்சக்கரவண்டி முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். எவ்வாறிருப்பினும் தீ பரவலின் போது எந்தவித உயிர் சேதங்களும் ஏற்படவில்லை என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.