இலங்கையில் வட்டி வீத உயர்வு தொடர்பில் மத்திய வங்கியின் அறிவிப்பு!!

இலங்கையில் நேற்று அதிகரிக்கப்பட்ட பணவியல் கொள்கை வட்டி வீதம் என்பது மத்திய வங்கியினால் தீர்மானிக்கப்படும் அடிப்படை வட்டி விகிதமாகும் என பொது மக்களுக்கு தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த வட்டி பொதுமக்களுக்கு நேரடியாக வழங்கப்படும் கடன் வட்டி அல்ல என்றபோதிலும், வணிக வங்கிகள் மத்திய வங்கியிடமிருந்து பணத்தைப் பெறும்போது அல்லது வைப்புச் செய்யும்போது இந்த அடிப்படை வட்டியே தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

இந்தக் கொள்கை வட்டி வீதம் ஒரு சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டால், தனிநபர், வீட்டு மற்றும் வாகனக் கடன்களுக்கான வட்டி வீதங்கள் உடனடியாக உயரும்.

உதாரணமாக, முன்னர் 12 சதவீதமாக இருந்த கடன் வட்டி, 13 சதவீதம் அல்லது அதற்கும் அதிகமாக மாறுவதால் பொதுமக்கள் மற்றும் வணிகங்களின் கடன் சுமை அதிகரிக்கும்.

வட்டி உயர்வால் கடன் பெறுவது கடினமாகவும் செலவுமிக்கதாகவும் மாறுவதால், மக்களின் செலவீனங்கள் குறையும் என குறிப்பிடப்படுகின்றது.

எனினும் புதிய தொழில்களைத் தொடங்குதல், வாகனங்கள் வாங்குதல், வீடு கட்டுதல் மற்றும் நுகர்வுப் பொருட்களைக் கொள்வனவு செய்தல் போன்ற நடவடிக்கைகள் சந்தையில் கணிசமாகக் குறைய வாய்ப்புள்ளது.

பொதுமக்களும் வணிகங்களும் குறைவாகக் கடன் பெறுவதால் சந்தையில் பணப் புழக்கம் குறைந்து, பொருட்களுக்கான தேவையும் வீழ்ச்சியடையும்.

சந்தையில் பணப் புழக்கம் அதிகமாக இருந்தால் பொருட்களின் விலை உயரும் என்பதால், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதே இந்த வட்டி வீத உயர்வின் முதன்மை நோக்கமாகும்.

இதன் சாதகமாக, பணவீக்கம் கட்டுப்படுத்தப்பட்டு பொருட்களின் விலை வேகமாக உயர்வது தடுக்கப்படும். அத்துடன், வைப்பு வட்டி அதிகரிப்பதால் சேமிப்புப் பழக்கம் ஊக்குவிக்கப்படும்.

அத்துடன், வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதன் மூலம் நாட்டின் நாணய மதிப்பை ஸ்திரப்படுத்தவும் இந்த வட்டி வீத அதிகரிப்பு உதவும். எனினும் இதன் பாதக விளைவாக மாறும் வட்டி வீதக் கடன்களைப் பெற்றவர்களின் மாதாந்திரத் தவணை கட்டணம் அதிகரிக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தொழில்கள் மற்றும் சிறு வணிகங்களின் விரிவாக்கம் மந்தமடைவதால் நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி குறைவடைந்து, புதிய வேலைவாய்ப்புகளும் பாதிக்கப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

வவுனியா ஓமந்தையில் 4 நாட்களாக பூட்டப்பட்டுள்ள பிரதேச சபை முன்பள்ளி : சிறுவர்களின் கல்வி பாதிப்பு : நிதி முறைகேடு தொடர்பிலும் விசாரணை!!

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் கீழ் இயங்கி வரும் ஓமந்தை முன்பள்ளி, கடந்த வியாழக்கிழமை முதல் இன்று செவ்வாய்க்கிழமை வரை தொடர்ச்சியாக நான்கு நாட்களாக பூட்டப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியைச் சேர்ந்த முன்பள்ளிச் சிறுவர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

இது குறித்து வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் தவிசாளரைத் தொடர்புகொண்டு வினவியபோது, “முன்பள்ளி ஆசிரியரின் சுகயீனம் காரணமாகவே முன்பள்ளி மூடப்பட்டுள்ளது” என அவர் தெரிவித்தார்.

எனினும், ஆசிரியர் சுகயீனமுற்றால் அதற்குரிய மாற்று ஏற்பாடுகளைச் செய்து முன்பள்ளியைத் தொடர்ந்து இயக்குவதற்கு பிரதேச சபை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பெற்றோர் கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.

முன்பள்ளியில் நிதி முறைகேடுகள் மற்றும் நிர்வாக சீர்கேடுகள் தொடர்பாக பல்வேறு தரப்பு முறைப்பாடுகளின் அடிப்படையில் தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அறிய முடிகிறது.

கடந்த ஆண்டு நடைபெற்ற விளையாட்டுப் போட்டிக்காக ஒவ்வொரு பிள்ளையிடமிருந்தும் தலா ரூ.5000 வீதம், மொத்தம் பயிலும் 18 பிள்ளைகளிடமிருந்து 90,000 ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது.

இது குறித்துக் கேள்வியெழுப்பியபோது, “பிரதேச சபையிலிருந்து பணம் வழங்கப்படவில்லை, அதனால் பெற்றோரே வழங்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், வசூலிக்கப்பட்ட அந்தப் பெருந்தொகையின் கணக்கு விவரங்கள் (வரவு – செலவு) எதுவும் பெற்றோருக்கு முறையாகச் சமர்ப்பிக்கப்படவில்லை எனவும்,

முன்பள்ளிச் சிறுவர்களின் சுற்றுலாவுக்கென்று அங்கத்தவர் அடிப்படையில் பெற்றோரிடமிருந்து பணம் பெறப்பட்டுள்ளது. ஆனால், அந்தப் பணத்திற்கும் இதுவரை எவ்வித வரவு செலவு அறிக்கையும் சமர்ப்பிக்கப்பில்லை எனவும் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையில் பெற்றோரால் முறைப்பாடு செய்யப்பட்டு விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இவ்வாறு பல்வேறு நிதிக் குற்றச்சாட்டுகள் மற்றும் முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் ஒரு சூழ்நிலையிலேயே, ஓமந்தை முன்பள்ளி திடீரென நான்கு நாட்களாகப் பூட்டப்பட்டுள்ளது.

ஆசிரியரின் சுகயீனம் என்ற காரணம் கூறப்பட்டாலும், நிதி முறைகேட்டு விசாரணைகளைத் திசைதிருப்ப அல்லது தாமதப்படுத்த இத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறதா என்ற சந்தேகமும் பெற்றோர் மத்தியில் எழுந்துள்ளது.

எது எவ்வாறாயினும், அதிகாரிகளின் இத்தகைய பொறுப்பற்ற தன்மையாலும், முறையான மாற்று ஏற்பாடுகள் இன்மையாலும் போதிய விபரமறியாத முன்பள்ளிச் சிறுவர்களின் ஆரம்பக் கல்வி மற்றும் மனநிலை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

எனவே, பொறுப்புவாய்ந்த அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு, இந்த நிதி முறைகேடுகள் குறித்த விசாரணைகளை நியாயமான முறையில் நடத்துவதோடு, சிறுவர்களின் கல்வியைக் கருத்திற்கொண்டு உடனடியாக முன்பள்ளியை மாற்று ஆசிரியர் ஒருவரைக் கொண்டு இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட பெற்றோர்கள் அவசரக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மாணவியை காப்பாற்றசென்று உயிரிழந்த ஆசிரியர் : துயரத்தில் முடிந்த கல்விச் சுற்றுலா!!

மொனராகலை கல்வி வலயத்திற்குட்பட்ட படல்கும்பூர, வைகும்பூர தமிழ் கனிஷ்ட வித்தியாலயத்தின் கணித ஆசிரியர் ஒருவர், கல்விச் சுற்றுலா சென்றிருந்த இடத்தில் கடலில் நீராடிக்கொண்டிருந்த மாணவி ஒருவரைக் காப்பாற்ற முயன்றபோது உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் நேற்று , திங்கட்கிழமை (25) இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் படல்கும்பூர, அலுபொத்த, பிலிமல பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான என்.எம்.எம். நுஜூம் (56 வயது) என்ற கணித ஆசிரியரே உயிரிழந்துள்ளார்.

குறித்த பாடசாலையின் அதிபர் மற்றும் சில ஆசிரியர்கள், மாணவ மாணவிகளுடன் கல்விச் சுற்றுலாவில் ஈடுபட்டிருந்தபோது, மாலை 4.30 மணியளவில் கிரிந்த (Kirinda) கடற்கரைக்குச் சென்று கடலில் நீராடியுள்ளனர்.

அதன்போது, ஒரு மாணவி கடல் அலையினுள் சிக்கி நீரில் மூழ்கிக் கொண்டிருப்பதைக் கண்ட ஆசிரியர், மாணவியை காப்பாற்றச் சென்ற தருணத்தில் இருவருமே நீரில் மூழ்கியுள்ளனர்.

தொடர்ந்து, உயிர்காக்கும் பிரிவினரும் (Life Guards) பிரதேசவாசிகளும் இணைந்து அவர்கள் இருவரையும் மீட்டு, தெபரவெவ ஆதார வைத்தியசாலையில் அனுமதித்ததன் பின்னர் சிகிச்சை பலனின்றி ஆசிரியர் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து கிரிந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வரும் நிலையில், ஆசிரியரின் மரணம் பாடசாலை சமூகத்தை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

என்னை விஷம் வைத்து கொன்று விடுங்கள் : பிரபல நடிகர் வெளியிட்ட பரபரப்பு வீடியோ!!

தென்னிந்திய திரை உலகில் பிரபல நடிகர் பாலா, இவர் இயக்குனர் சிறுத்தை சிவாவின் சகோதரரர். தமிழில் அன்பு , அப்பா அம்மா செல்லம், அஜிதின் தம்பியாக வீரம் படித்திலும் நடித்திருந்தார், இவர் தற்போது வெளியிட்டிருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இவருக்கும் பாடகி அம்ருத்தா என்பவருக்கும் 2010 ஆம் ஆண்டில் காதல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு மகளும் பிறந்துள்ளார். திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, இருவரும் விவாகரத்து பெற்றனர்.

பின்னர் கோகிலா என்பவரை பாலா திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் , அவரது முன்னாள் மனைவி பாலா குறித்து பல அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வரும் நிலையில், நடிகர் பாலா ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில்,

“என்னால் முடியவில்லை எனக்கு விஷம் கொடுத்துக் கொன்றுவிடுங்கள்” என்று பேசி இருக்கிறார். பத்து வருடங்களாக என்னை வதைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

சட்டத்தின் பெயரால் எனக்கூறி பத்து வருடங்களாக ஒரு மனிதனை இப்படி வதைத்துக் கொண்டிருக்கிறார்கள். என்னால் அதைச் சொல்ல முடியவில்லை. காரணம் நான் தான், நானே தான். நான் அதைச் சொல்லக் கூடாது.

எவ்வளவு சங்கடங்கள் இருந்தாலும், அதை மனதிற்குள் வைத்துக் கொண்டு, சிரித்துக் கொண்டே இருக்க வேண்டும். அப்படித்தானே? ஊடகங்கள் நல்ல விஷயங்களையும் செய்கின்றன. நல்ல நல்ல காரியங்களை இன்னும் மக்களிடம் கொண்டு சேர்க்கின்றன.

சில உண்மைகளை வெளியே கொண்டு வருகின்றன. சில போலித்தனங்களையும் அம்பலப்படுத்துகின்றன இனிமேலும் என்னை வதைத்தால், நான் எல்லாவற்றையும் வெளிப்படையாகப் பேசிவிடுவேன்.

எல்லா உண்மைகளும் வெளியே வரும். இது நடக்கும், எழுதி வைத்துக் கொள்ளுங்கள், இது கண்டிப்பாக நடக்கும்.

உண்மைகள் அனைத்தும் வெளியே வரும் போது, உங்களுடைய முகமூடி கிழியும். யாரும் வருத்தப்பட வேண்டாம், என்னை மன்னியுங்கள்” என நடிகர் பாலா தெரிவித்துள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

700 ரூபாய் வரை அதிகரிக்க திட்டமிடப்பட்ட எரிபொருள் விலை? பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு!!

புதிய இணைப்பு : எதிர்வரும் ஜூலை மாதம் இறுதி வரை நாட்டிற்குத் தேவையான எரிபொருள் இருப்புக்கள் தற்போது நாட்டில் உள்ளதாகப் பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் (CPSTL) முகாமைத்துவப்பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, இந்த மாதம் 28 மற்றும் 31 ஆம் திகதிகளில் மேலும் இரண்டு கச்சா எண்ணெய் கப்பல்கள் நாட்டிற்கு வரவுள்ளதாகவும்,

எதிர்வரும் நாட்களில் எரிபொருள் விலையில் பெரியளவிலான உயர்வையோ அல்லது விலை குறைப்பையோ எதிர்பார்க்க முடியாது என்றும் கூறியுள்ளார்.

ஏப்ரல் மாதத்தில் உலக சந்தையில் டீசல் விலை அதிகரித்திருந்த போதிலும், தற்போது அந்த விலை படிப்படியாகக் குறைந்து வருவதாகவும் விளக்கமளித்துள்ளார்.

இதற்கு முன்னதாக எதிர்பார்க்கப்பட்டவை போன்று விலையை 700 ரூபாய் வரை அதிகரிக்க வேண்டிய தேவை தற்போது இல்லை என்றும் தெரிவித்துள்ளார்

முதலாம் இணைப்பு : நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு எதுவும் இல்லை என்றும், தேவையான எரிபொருள் கையிருப்பு உள்ளதாகவும் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் (CPC) அறிவித்துள்ளது.

கடந்த சில நாட்களாக எரிபொருள் விலை உயர்வு குறித்து பொய் வதந்திகள் பரவி வருவதாகவும் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் நிர்வாக இயக்குனர் மயூர நெத்திகுமாரகே விளக்கமளித்துள்ளார்.

இதேவேளை, அடுத்த சில நாட்களுக்குள் இரண்டு மசகு எண்ணெய் கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தை வந்தடைவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக, நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்கா மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து தலா 90,000 மெட்ரிக் தொன் மசகு எண்ணெயை அந்த கப்பல்கள் ஏற்றி வரவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

எரிபொருள் விலை உயர்வு குறித்து பரவும் வதந்திகளால் சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசைகள் உருவாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

எனவே தற்போது தேவையான எரிபொருள் கையிருப்பு உள்ளதாகவும், பொதுமக்கள் அச்சமடைய தேவையில்லை என்றும் விளக்கமளித்துள்ளார்.

இலங்கையில் நடைமுறைக்கு வந்துள்ள டிஜிட்டல் மோட்டார் காப்பீட்டு அட்டை : மில்லியன் கணக்கான பிளாஸ்டிக் அட்டைகள் ஒழிப்பு!!

இலங்கையில் இதுவரை காலமும் நடைமுறையில் இருந்த வாகனக் காப்புறுதி பிளாஸ்டிக் அட்டைகளுக்குப் பதிலாக அதிகாரப்பூர்வமாக முழுமையான டிஜிட்டல் மோட்டார் காப்புறுதி முறை நடைமுறைக்கு வந்துள்ளது.

அதன் பிரகாரம் இனிவரும் காலங்களில் காப்புறுதி நிறுவனங்களால் வழங்கப்படும் பாரம்பரிய பிளாஸ்டிக் அட்டைகளுக்குப் பதிலாக, டிஜிட்டல் முறையில் வாகனக் காப்புறுதியை உறுதிப்படுத்தும் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

புதிய நடைமுறை மே 1ம் திகதி முதல் செயற்பாட்டுக்கு வந்துள்ளதாகவும், நாட்டில் இயங்கும் 14 காப்புறுதி நிறுவனங்களும் இப்போது பிளாஸ்டிக் அட்டைகளுக்குப் பதிலாக டிஜிட்டல் காப்புறுதி முறைக்கு மாறியுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய செயல்முறையின் கீழ், காப்புறுதி திட்டமொன்றை பெற்றுக்கொள்ளும் வாகன உரிமையாளர்கள், டிஜிட்டல் காப்புறுதி முறையுடன் இணைக்கப்பட்ட மொபைல் செயலி, இணையத்தள இணைப்பு அல்லது QR குறியீட்டை பெறுவார்கள்.

பொலிஸாரின் வீதியோர சோதனைகளின் போது ஒரு வாகனத்திற்கு செல்லுபடியாகும் காப்புறுதித் திட்டம் உள்ளதா என்பதை உடனடியாகச் சரிபார்க்க உதவும் வகையில், பொலிஸாருக்கும் ஒரு பிரத்யேக டிஜிட்டல் சரிபார்ப்பு கருவி வழங்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் ஆண்டுதோறும் சுமார் அறுபது லட்சம் பிளாஸ்டிக் காப்புறுதி அட்டைகள் வழங்கப்பட்டு, சுற்றுச்சூழல் கழிவுகளுக்கு வழிவகுத்திருந்தது.

‘இந்த டிஜிட்டல் முறையின் மூலம், பிளாஸ்டிக் அட்டைகளின் பரவலான பயன்பாட்டை தடுத்து, சுற்றுச்சூழல் பாதிப்பைக் குறைக்க முடியும்,’ என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

வாகன உரிமையாளர்கள் தங்கள் காப்புறுதி அட்டைகளை மொபைல் செயலிகள், இணைய சுட்டிகள், SMS இணைப்புகள் அல்லது தேவைப்பட்டால் அச்சிடப்பட்ட காப்புறுதி QR குறியீடுகள் மூலமாகவும் அணுகலாம்.

காப்புறுதியின் செல்லுபடியை நிகழ்நேரத்தில் சரிபார்க்க உதவும் வகையில், ஒரு தேசிய மோட்டார் காப்புறுதித் தரவுத்தளம் இப்போது நிறுவப்பட்டுள்ளது என்றும் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

‘1338’ என்ற ஹொட்லைன் தேசிய சரிபார்ப்பு ஹொட்லைனாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. காப்புறுதி சரிபார்ப்பிற்காக அழைப்புகள்> SMS மற்றும் IVR தெரிவுகள் மூலம் சேவைகள் கிடைக்கின்றன.

இந்த டிஜிட்டல் அமைப்பு வீதியோர சோதனைகளின் செயல்திறனை கணிசமாக மேம்படுத்தியுள்ளது என்றும், ஒரு வாகனத்திற்கு செல்லுபடியாகும் காப்புறுதி ஆவணங்கள் உள்ளதா என்பதை பொலிஸார் விரைவாகத் தீர்மானிக்க இது உதவும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

சரிபார்ப்பை மேற்கொள்ளும் மூன்று வழிகள்

  • *1338# என்ற USSD குறியீடு
  • வாகனம் அல்லது காப்புறுதி எண்ணை 1338 என்ற எண்ணுக்கு SMS மூலம் அனுப்புதல்
  • நேரடி உதவிக்கு 1338 என்ற ஹொட்லைனை அழைத்தல்

கோர விபத்தில் சிக்கிய 23 வயது இளைஞன் பரிதாபமாக பலி!!

நாத்தண்டிய – மாதம்பே பிரதான வீதியின் குடாவெவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் உயிரிழந்துள்ளதாக மாரவில பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 24 ஆம் திகதி இரவு 7.00 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் குடாவெவ பகுதியை சேர்ந்த 23 வயதான தரிந்து ஹஷான் என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார்.

நாத்தண்டிய பகுதியில் இருந்து மாதம்பே நோக்கி அரிசி ஏற்றிச் சென்ற லொறியுடன், அதற்கு எதிர்த்திசையில் இளைஞன் செலுத்தி வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் விபத்து நேர்ந்துள்ளது.

அதிக வேகமாக பயணித்த மோட்டார் சைக்கிளை கட்டுப்படுத்த முடியாமல் லொறியின் முன்பகுதியில் மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். விபத்து நடந்த ஸ்தலத்திலேயே மோட்டார் சைக்கிள் ஓட்டுநரான இளைஞர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்தினால் மோட்டார் சைக்கிளுக்கும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். மாரவில பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

டொலரின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம் : உயர்வடைந்துள்ள ரூபாவின் பெறுமதி!!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி இன்றைய தினமும் (26) மேலும் உயர்வடைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய(26) நாணய மாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலரின் கொள்வனவு பெறுமதி 318.32 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இந்த நிலையில், இன்றையதினம்(26) அமெரிக்க டொலரொன்றின் விற்பனை பெறுமதியானது 328.69 ரூபாவாக பதிவாகியுள்ளது. மேலும், ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 427.98 ரூபாவாகவும், விற்பனைப் பெறுமதி444.30 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 369.18 ரூபாவாகவும், விற்பனைப் பெறுமதி 383.63 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 229.55 ரூபாவாகவும், விற்பனை பெறுமதி 238.79 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 226.27 ரூபாவாகவும், விற்பனை பெறுமதி 237.14 ரூபாவாகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சமீப நாட்களாக, அமெரிக்க டொலருக்கு எதிராக ரூபாயின் மதிப்பு சரிவுப் போக்கில் இருந்து வருகிறது.

அதன்படி, கடந்த வெள்ளிக்கிழமை, அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை ரூ. 342.63 ஆகவும், விற்கும் விலை ரூ.354.03 ஆகவும் இருந்ததாக இலங்கை மத்திய வங்கி அறிவித்தது.

இருப்பினும், கடந்த சில நாட்களாக அமெரிக்க டொலருக்கு எதிராக வேகமாக மதிப்பிழந்து வந்த இலங்கை ரூபாய் சிறிதளவு வலுப்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

கொழும்பில் வீடொன்றுக்குள் நடந்த அதிர்ச்சி சம்பவம் : தம்பதிக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

கொழும்பு – மாளிகாவத்தை தொடருந்து வீட்டுத் தொகுதியில் வசிக்கும் ஓய்வு பெற்ற பணியாளர் மற்றும் அவரது மனைவியை மயக்கமடைய செய்து, கொள்ளைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த தம்பதியிடம் 12 இலட்சம் ரூபாவுக்கும் அதிக மதிப்புள்ள தங்க நகைகளை கொள்ளையடித்த கும்பலைத் தேடி, தெமட்டகொட பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

வாடகைக்கு வீட்டினை பெற்றுக்கொள்வது போன்று நடித்த 40 வயதான பெண் உள்ளிட்ட மூவர் அடங்கிய கொள்ளைக் கும்பலே இவ்வாறு திருடிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2 வாரங்களுக்கு முன்பு, இந்த வீட்டுத் தொகுதிக்கு வந்த அந்தப் பெண், தம்பதியரின் வீட்டிற்கு மேல் மாடியிலுள்ள வீட்டை வாடகைக்கு பெறப் போவதாக கூறி, தண்ணீர் குடித்துவிட்டுச் சுமுகமாகப் பேசி பழகியுள்ளார்.

அதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் மீண்டும் அந்த வீட்டிற்கு வந்த சந்தேக நபரான பெண், வீட்டின் உரிமையாளரும் தரகரும் வரும் வரை காத்திருக்க வேண்டும் எனக் கூறி வீட்டிற்குள் நுழைந்துள்ளார்.

சிறிது நேரத்தில் அவரது கணவன் எனக் கூறி ஒருவரும், பின்னர் தரகர் மற்றும் இளைஞனும் வீட்டிற்குள் வந்துள்ளனர்.

திடீரென குறித்த தம்பதியை மயக்கமடையச் செய்த நிலையில், அவர்களிடமிருந்த தங்க நகைகளை பறித்து கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.

கொள்ளையர்கள் சூட்சுமான முறையில் வீட்டின் முன் கதவை வெளிப்பக்கமாக பூட்டிவிட்டுத் தப்பியோடியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காதல் திருமணம் செய்த கல்லூரி மாணவி எடுத்த விபரீத முடிவு!!

காதலிச்சவனையே திருமணம் செய்துக் கொண்ட நிலையிலும், நர்சிங் கல்லூரி மாணவி தற்கொலைச் செய்துக் கொண்ட சம்பவம் பெற்றோரையும், உறவினர்களையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே திருமணமாகி 4 மாதங்களே ஆன நிலையில், உடல் முழுக்க காயங்களுடன், ஜீவலட்சுமி என்கிற நர்சிங் கல்லூரி மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

கூலித் தொழிலாளி மகளான ஜீவலட்சுமியும், திருவண்ணாமலையைச் சேர்ந்த ஜீவானந்தம் என்பவரும் காதலித்து வந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் இரு வீட்டார் சம்மதத்துடன் இவர்களுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது.

இந்நிலையில், கடந்த 23ம் தேதி ஜீவலட்சுமி திடீரென நெஞ்சுவலியால் இறந்து விட்டதாக அவரது மாமியார் தரப்பில் இருந்து பெற்றோருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவலறிந்து பதறியடித்துக் கொண்டு திருவண்ணாமலைக்கு சென்ற பெற்றோரும் உறவினர்களும், ஜீவலட்சுமியின் உடலில் பல இடங்களில் காயங்களும், கழுத்தில் தூக்கில் தொங்கியதற்கான தழும்புகளும் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்து ள்ளனர்.

திருமணமான சில நாட்களிலேயே கூடுதல் வரதட்சணை கேட்டும், பெற்றோர் வீட்டை தனது பெயருக்கு மாற்றி எழுதி வாங்கி வருமாறும் கணவர் குடும்பத்தினர் ஜீவலட்சுமியைத் சித்திரவதை செய்ததாகக் கூறப்படுகிறது.

மேலும் ஜீவலட்சுமியை சாதிப் பெயரைச் சொல்லி அடிக்கடி அவமதித்ததுடன், கணவர் ஜீவானந்தம்,

அவரது தம்பி மற்றும் மாமியார் உட்பட 5 பேர் சேர்ந்து அடித்துக் கொலை செய்துவிட்டு தூக்கில் தொங்கவிட்டுள்ளதாகப் பெண்ணின் தாயார் தூசி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜீவலட்சுமியின் உடலைச் செய்யாறு அரசு மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

இதற்கிடையே, விசாரணைக்காக வந்த செய்யாறு சப்-கலெக்டர் அம்பிகா ஜெயினின் வாகனத்தை முற்றுகையிட்ட உறவினர்கள், குற்றவாளிகள் 5 பேரையும் உடனடியாகக் கைது செய்யக் கோரி மருத்துவமனை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது போலீசாருக்கும் உறவினர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் வரதட்சணை கொடுமை வழக்கில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனப் போலீசார் உறுதியளித்த பிறகே போராட்டம் தற்காலிகமாகக் கைவிடப்பட்டது.

 

இலங்கையில் அனைத்து துறையினரும் மீண்டும் வீட்டிலிருந்து பணியாற்றும் நடைமுறை : அரசாங்க தரப்பிலிருந்து வெளியான தகவல்!!

இலங்கையில் வீட்டில் இருந்து வேலை செய்யும் நடைமுறை மீண்டும் நடைமுறைப்படுத்தப்படலாம் என வெளியாகும் தகவல்கள் குறித்து இதுவரை இறுதி முடிவுகள் எடுக்கப்படவில்லை என தொழில் அமைச்சின் செயலாளர் எஸ்.எம்.பியதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

நாட்டில் நிலவும் எரிபொருள் மற்றும் ஆற்றல் நுகர்வைக் கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் மீண்டும் வீட்டிலிருந்து வேலை செய்யும் முறையை அறிமுகப்படுத்தவுள்ளதாக சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன.

இருப்பினும், தற்போதைய சூழ்நிலையில் வீட்டிலிருந்து வேலை செய்யும் நடைமுறையை மீண்டும் கொண்டு வருவது குறித்து இதுவரை இறுதி முடிவுகள் எதுவும் எடுக்கப்படவில்லை என அமைச்சின் செயலாளர் பியதிஸ்ஸ தெளிவுபடுத்தியுள்ளார்.

இந்த வாரம் (மே 26) முதல் வீட்டிலிருந்து வேலை செய்யும் அறிவிப்பு வெளியாகும் என தகவல்கள் பரவிய பின்னணியிலேயே அமைச்சின் செயலாளர் இவ்வாறு ஆங்கில ஊடகமொன்றிற்கு விளக்கமளித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

தற்போதைய நிலவரப்படி அத்தகைய உத்தியோகபூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியிடப்படவில்லை என தொழில் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இருப்பினும், இலங்கையில் நான்கு நாள் வேலை வார முறைமையை அறிமுகப்படுத்துமாறு பல்வேறு தரப்பினரிடமிருந்தும் கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய தொழில் ஆலோசனை சபைக்குக் கிடைத்துள்ள இந்த கோரிக்கைகள் குறித்து இதுவரை தீர்மானமும் எடுக்கப்படவில்லையென தொழில் அமைச்சின் செயலாளர் எஸ்.எம்.பியதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

எனவே நிறுவனங்களின் தன்மைக்கு ஏற்ப ஆராய்ந்து அடுத்தகட்ட நடவடிக்கைகளைத் தீர்மானிக்குமாறு தொழில் திணைக்களத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாட்டின் பல பகுதிகளில் மழைவீழ்ச்சி அதிகரிக்கக் கூடும் : வெளியான அறிவிப்பு!!

நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் மழைவீழ்ச்சி அதிகரிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இந்தப் பிரதேசங்களில் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக வீசக் கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

கனமழையில் மின்னல் தாக்கி தம்பதியினர் பரிதாபமாக பலி!!

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்றிரவு திடீரென இடி, மின்னலுடன் கூடிய பலத்த கனமழை கொட்டித் தீர்த்தது.

இந்தத் தொடர் மழையின் காரணமாக அப்பகுதியின் முக்கியச் சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை சற்று பாதிக்கப்பட்டது.

இந்நிலையில், அங்கு பெய்த கனமழையின் போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட மின்னல் தாக்கியதில் தம்பதியினர் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த விபரீத சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோபிசெட்டிபாளையம் மூப்பன்சாலைப் பகுதியில் இடி முழக்கத்துடன் மழை பெய்து கொண்டிருந்த போது, அங்குள்ள ஒரு இறைச்சி கடையின் மீது திடீரென மிக பயங்கரமாக மின்னல் தாக்கியுள்ளது.

அந்தச் சமயத்தில் எதிர்பாராத விதமாக அந்த இறைச்சி கடையின் உள்ளே சுரேஷ் மற்றும் அவரது மனைவி மஞ்சுளா ஆகிய இருவரும் இருந்துள்ளனர்.

இடியின் வேகம் மிக அதிகமாக இருந்ததால், கடைக்குள் இருந்த தம்பதியினர் இருவரும் அந்த தாக்கின் வீரியம் தாங்க முடியாமல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கணவன் மற்றும் மனைவி ஆகிய இருவருமே தாக்கி சம்பவ இடத்திலேயே பலியான இக்கோரச் சம்பவம் கோபிசெட்டிபாளையம் பகுதி மக்களிடையே அதிரச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த விபத்து குறித்துத் தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் உயிரிழந்த தம்பதியினரின் உடல்களை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், இரவு நேரத்தில் இடியுடன் மழை பெய்யும் போது பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.

கிளிநொச்சியில் கோர விபத்து : பாடசாலையில் பிள்ளையை ஏற்றச் சென்ற தாய் உயிரிழப்பு!!

கிளிநொச்சி – கரடிபோக்கு, உருத்திரபுரம் வீதியில் இன்று (25) பகல் இடம்பெற்ற கொடூர வீதி விபத்தில் இளம் தாய் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

உருத்திரபுரம் பகுதியிலிருந்து கரடிபோக்கு நோக்கித் தனது மோட்டார் சைக்கிளில் பயணித்த குறித்த தாய், பாடசாலை முடிவடைந்த தனது மகளை வீட்டுக்கு அழைத்துச் செல்வதற்காகவே சென்றுள்ளார்.

இதன்போது, கரடிபோக்கிலிருந்து உருத்திரபுரம் நோக்கி வீதியில் மிக அதிவேகமாக வந்த இளைஞர்களின் மோட்டார் சைக்கிள், இவர்களது மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு நேர் மோதியதிலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளது.

விபத்தை ஏற்படுத்திய இளைஞர்கள், தங்களது பெரிய ரக (Racing) மோட்டார் சைக்கிளில் அந்த வீதியில் தொடர்ந்து மிக அதிவேகமாக ஓடித்திரிந்ததாகச் சம்பவத்தை நேரில் பார்த்த பொதுமக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

கடுமையாக மோதுண்டதன் காரணமாக, மோட்டார் சைக்கிளில் பயணித்த இளம் தாய் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். அதேவேளை, விபத்தை ஏற்படுத்திய மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர்களில் ஒருவனும் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் உடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளதுடன், விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

 

இலங்கை மத்திய வங்கியின் புதிய விதிமுறைகள் : வாகன விலைகளில் ஏற்படவுள்ள மாற்றம்!!

இலங்கை மத்திய வங்கியினால் வாகன கடன் வரம்பு தொடர்பில் விதிக்கப்பட்ட புதிய விதிமுறைகள் வாகன விலைகளில் மாற்றம் ஏற்படாது என்று இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இருப்பினும், நிலவும் பிற சூழ்நிலைகளை பொறுத்து வாகன விலைகள் மாறக்கூடும் என்றும் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதற்கிடையில், இலங்கை மத்திய வங்கியால் வெளியிடப்பட்ட விதிமுறைகளை மீறுவதற்கு சில வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்கள் தந்திரமான உத்திகளைக் கையாளக்கூடும் என்று இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் கூறியுள்ளது. இதுபோன்ற சந்தர்ப்பங்களை தடுப்பதில் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையில், கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல்துறை பேராசிரியர் சுரங்க டி சில்வா, வாகன கடன்கள் மற்றும் குத்தகை வசதிகள் மீது புதிய கட்டுப்பாடுகளை விதிக்கும் இலங்கை மத்திய வங்கியின் முடிவு மிகவும் சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட முடிவு என்று கூறியுள்ளார்.

வாகனக் கடன்கள் மற்றும் குத்தகை வசதிகள் மீது இலங்கை மத்திய வங்கியால் விதிக்கப்பட்ட புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் நடைமுறைக்கு வருகின்றன.

புதிய உத்தரவின்படி, பல்வேறு வாகனங்களுக்கான அதிகபட்ச கடன் வழங்கும் வரம்புகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. இதன்படி, வணிக நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படும் வாகனங்களுக்கான கடன் வரம்பு 60% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.

மோட்டார் கார்கள், எஸ்யூவி (SUV) ரக வாகனங்கள், வேன்கள், முச்சக்கர வண்டிகள் (Three-wheelers) மற்றும் இதர வாகனங்களுக்கான நிதியளிப்பு வரம்பு 40% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய விதிகள் அனைத்தும் இலங்கையில் இதுவரை பதிவு செய்யப்படாத (Unregistered) வாகனங்களுக்கும், முதன்முறை பதிவு செய்யப்பட்டு ஓராண்டுக்கும் குறைவான காலமே ஆன வாகனங்களுக்கும் பொருந்தும் என மத்திய வங்கி அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வங்கியில் இருந்து பல மில்லியன் பணம் மாயம் : பாதிக்கப்பட்ட பெண் அதிர்ச்சி!!

களுத்துறையில் வங்கிக் கணக்கிலுள்ள பணம் கறுப்பு பணம் எனக் கூறி அச்சுறுத்தி 23 லட்ச ரூபாய் பணத்தை மோசடி செய்த இரண்டு நபர்களை களுத்துறை கோட்ட விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

ஹபுத்தளையை சேர்ந்த 29 வயதுடைய ஒருவரும், மொரட்டுவையை சேர்ந்த 42 வயதுடைய ஒருவருமே கைது செய்யப்பட்டுள்ளனர்.

களுத்துறை, கட்டுக்குருந்த பகுதியைச் சேர்ந்த 74 வயதுடைய வயோதிபப் பெண் ஒருவர் பொலிஸாரிடம் செய்த முறைப்பாட்டின் அடிப்படையிான நீண்ட விசாரணையின் பின்னரே இந்தச் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் வயோதிப பெண்ணுக்குத் தொலைபேசி மூலம் அழைப்பு ஏற்படுத்தி, அவரை அச்சுறுத்தி முதலில் அவரது வங்கிக் கணக்கு விபரங்களை பெற்றுள்ளனர்.

பின்னர், அந்த வங்கிக் கணக்கில் உள்ள பணம் கறுப்பு பணம் எனக் கூறியுள்ளனர். அதனைப் பரிசோதிக்க வேண்டும் எனக் கூறி, 23 லட்ச ரூபாய் பணத்தை தங்களது வங்கிக் கணக்கொன்றுக்கு வைப்புச் செய்ய வைத்துள்ளனர்.

இந்தச் சம்பவம் மற்றும் பணப் பரிவர்த்தனை குறித்து யாரிடமும் கூற வேண்டாம் என அந்தப் பெண்ணை சந்தேகநபர்கள் மிரட்டியுள்ளனர்.

பரிசோதனைக்குக்குப் பின்னர் அவை கறுப்பு பணம் இல்லை என்பது உறுதியானால் மீண்டும் அவரது கணக்கிற்கே பணம் திருப்பி அனுப்பப்படும் எனக் கூறி ஏமாற்றியுள்ளனர்.

எனினும் வாக்குறுதி அளித்ததற்கமைய, பணம் மீண்டும் கிடைக்காததால், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த வயோதிப பெண் பொலிஸ் நிலையத்திற்குச் சென்று முறைப்பாடு செய்துள்ளார்.

அதற்கமைய, கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இன்று களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.