திடீர் தாக்குதலால் ஏற்பட்ட பதற்றம் அவசர அவசரமாக மூடப்படும் வான்பரப்புக்கள்!!

புதிய இணைப்பு

ஈரான் – அமெரிக்க – இஸ்ரேல் போர் பதற்றத்தை தொடர்ந்து, கட்டார், குவைத் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகியவை தங்கள் வான்வெளியை மூடியுள்ளன.

முதலாம் இணைப்பு

மறு அறிவித்தல் வரை ஈரான் வான்வெளியை மூடுவதாக அறிவித்துள்ளது.

மத்திய கிழக்கில் பதற்றம்

ஈரானின் சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பின் செய்தித் தொடர்பாளர் மஜித் அகவன், மெஹர், “மறு அறிவிப்பு வரும் வரை நாட்டின் முழு வான்வெளியும் மூடப்பட்டுள்ளது” என்று அறிவித்துள்ளார்.

அதேநேரம், ஈரான் மீதான தாக்குதல்களைத் தொடர்ந்து ஈராக் வான்வெளியை மூடுவதாக அறிவித்துள்ளது.

ஈரான் மீதான தாக்குதல்களைத் தொடர்ந்து ஈராக் போக்குவரத்து அமைச்சகம் தனது தேசிய வான்வெளியை மூடிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சூடுபிடிக்கும் கள நிலவரம் : முக்கிய இடங்களை இலக்கு வைத்து தாக்குதல் – ஈரான் ஜனாதிபதி தொடர்பில் வெளியான தகவல்!!

ஈரான் ஜனாதிபதி மசூத் பெஷேஷ்கியனுக்கு (Masoud Pezeshkian) எவ்வித உயிராபத்துக்களுமில்லையெனவும், அவர் பாதுகாப்பாகவுள்ளார் எனவும் ஈரானிய ஊடகங்கள் வழியாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து ஈரான் மீது வான்வழி தாக்குதல்களை நடத்தியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் பல்வேறு இடங்களில் சக்திவாய்ந்த வெடிச்சத்தங்கள் கேட்கப்பட்டதாக அங்குள்ள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தெஹ்ரானில் உள்ள முக்கிய இராணுவ தளங்கள் மற்றும் அரசியல் மையங்கள் இலக்காகக் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவற்றில், ஈரான் ஜனாதிபதியின் வாசஸ்தலம், புலனாய்வுத்துறை அமைச்சகம், முக்கிய அரசியல் தலைவர்களின் இருப்பிடங்கள், உச்ச தலைவர் ஆயதுல்லா அலி கமேனி அலுவலகத்திற்கு அருகிலுள்ள பகுதிகள் உள்ளடங்குகின்றன.

இவ்வாறான சூழலிலேயே ஈரான் ஜனாதிபதி பாதுகாப்பாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதேவேளை ஈரானில் இருந்து இஸ்ரேல் நாட்டை நோக்கி ஏவப்பட்ட ஏவுகணைகளை அடையாளம் கண்டுள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் தெரிவித்துள்ளன.

வடக்கு இஸ்ரேலில் வெடிச்சத்தங்கள் கேட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் அச்சுறுத்தல்களைத் தடுத்து நிறுத்தவும், தாக்கவும் செயல்படுவதாக இஸ்ரேலிய விமானப்படை தெரிவித்துள்ளது.

 

அமெரிக்காவின் முக்கிய இராணுவத் தளம் மீது அதிரடி தாக்குதல் : தீவிரமடையும் பதற்றநிலை!!

பஹ்ரைனில் உள்ள அமெரிக்க கடற்படை சேவை மையம் ஏவுகணை தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக பஹ்ரைன் அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அமெரிக்க கடற்படையின் 5ஆவது கடற்படையின் சேவை மையம் ஏவுகணை தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது என்று பஹ்ரைனின் தேசிய தொடர்பு மையம் தெரிவித்துள்ளது.

தாக்குதல் நடத்தியமை தொடர்பில் மேலதிக தகவல்கள் எதுவும் வெளியாகாத நிலையில், விரைவில் தகவல்களை வழங்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தாக்கப்பட்டுள்ள அமெரிக்காவின் 5ஆவது கடற்படையின் தலைமையகத்தின் கீழ் வளைகுடா, செங்கடல், அரேபிய கடல் மற்றும் இந்தியப் பெருங்கடலின் சில பகுதிகள் அடங்கும்.

பஹ்ரைன் மீது ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் இருப்பதாகக் கூறப்படும் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில், அமெரிக்க தூதரகம் முன்னதாக குடிமக்களை இடத்தில் தஞ்சமடையுமாறு எச்சரித்திருந்தாலும், அமெரிக்க இராணுவத்திடமிருந்து உடனடி கருத்து எதுவும் இல்லை என தெரிவிக்கப்படுகின்றது.

மூன்றாம் இணைப்பு

இஸ்ரேலை நோக்கி ஈரான் ஏவுகணைகளை ஏவ ஆரம்பித்துள்ளதாக இஸ்ரேலிய புரட்சிகர காவற்படை தெரிவித்துள்ளது.

ஈரானில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணைகள் இஸ்ரேலை நோக்கிச் செல்வது அடையாளம் காணப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.

இது நாட்டின் பல பகுதிகளில் பாதுகாப்பு ஒலிச்சத்தங்களை எழுப்பியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், வான்வழி பாதுகாப்பு படை தற்போது அச்சுறுத்தல்களைக் கண்டறிந்து இடைமறித்து வருவதாகவும் இஸ்ரேல் தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்ள உரிமை உண்டு எனவும் இஸ்ரேலிய புரட்சிகர காவற்படை சுட்டிக்காட்டியுள்ளது.

இரண்டாம் இணைப்பு

அமெரிக்க மற்றும் ஈரானிய தாக்குதல்களுக்கு ஈரான் மிக மோசமான விதத்தில் பதிலளிக்கும் என்று ஈரானிய அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க – இஸ்ரேலிய தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்க தெஹ்ரான் தயாராகி வருவதாகவும், எதிர் தாக்குதல்கள் கொடூரமான வகையில் இருக்கும் என்றும் ஈரானிய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அதேநேரம், ஈரானிய நாடாளுமன்றத்தின் தேசிய பாதுகாப்புக் குழுவின் தலைவர் இப்ராஹிம் அசிஸி, நீங்கள் தொடங்கிய இந்தத் தாக்குதல்களை முடிவுக்குக் கொண்டுவருவது இனி உங்கள் கைகளில் இல்லை என கடுமையாக எச்சரித்துள்ளார்.

முதலாம் இணைப்பு

அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது சற்று முன்னர் தாக்குதலை ஆரம்பித்துள்ளன.

இஸ்ரேல் அந்நாட்டின் மீது ஏவுகணைத் தாக்குதலை நடத்தியதாக அறிவித்த நிலையில், தெஹ்ரான் முழுவதும் வெடிச்சத்தங்கள் கேட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

பல ஏவுகணைகள் தெஹ்ரானில் உள்ள பல்கலைக்கழக தெரு மற்றும் ஜோம்ஹோரி பகுதியைத் தாக்கியதாக வெளிநாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அலி கமேனியின் அலுவலகம்

அணுசக்தி திட்டம் தொடர்பாக ஈரானை ஒரு ஒப்பந்தத்திற்கு அழுத்தம் கொடுக்க ஏராளமான போர் விமானங்கள் மற்றும் போர்க்கப்பல்களை ஒன்று திரட்டியுள்ள அமெரிக்காவுடன் கூட்டு இராணுவ நடவடிக்கையாக இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

ஈரானின் தலைநகரில் நடந்த தாக்குதல் உயர்மட்ட தலைவர் அயதுல்லா அலி கமேனியின் அலுவலகங்களுக்கு அருகில் நடந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

ஈரானின் அரை-அதிகாரப்பூர்வ தஸ்னிம் செய்தி நிறுவனம், தெஹ்ரானின் வடக்கு செய்யத்கந்தன் பகுதியிலும் வெடிப்புகள் ஏற்பட்டதாக தெரிவித்துள்ளது.

இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ், “இஸ்ரேல் அரசுக்கு அச்சுறுத்தல்களை அகற்றுவதற்காக” இந்த தாக்குதலை “முன்னெச்சரிக்கை நடவடிக்கை” என்று விவரித்தார்.

பாடசாலை மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!!

பாடசாலை மாணவர்களுக்கான பாதணி வவுச்சர்களின் செல்லுபடி காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 28 ஆம் திகதியுடன் நிறைவடையவிருந்த போதிலும், தற்போது அதன் செல்லுபடியாகும் அடுத்த மாதம்15 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

2026 ஆம் ஆண்டிற்காகத் தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்கள், பிரிவெனாக்களில் கல்வி பயிலும் இல்லற மற்றும் துறவற மாணவர்கள் மற்றும் சீலமாதாக்களுக்கு 3,000 ரூபா பெறுமதியான பாதணி வவுச்சர்களை வழங்கும் திட்டத்தின் கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, குறித்த வவுச்சர்களின் செல்லுபடியாகும் காலம் அடுத்த மாதம்15 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

 

நண்பர்களுடன் கடலுக்கு நீராடச் சென்ற இருவருக்கு நேர்ந்த கதி : பொலிஸார் தீவிர விசாரணை!!

காலி – பெந்தோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடற்பரப்பில் நீராடச் சென்ற இரண்டு இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று(26.02.2026) மாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த இருவரும் பேருவளை பகுதியைச் சேர்ந்த 25 மற்றும் 29 வயதுடைய இளைஞர்கள் எனத் தெரியவந்துள்ளது. இதனையடுத்து, மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, 25 வயதுடைய இளைஞரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

மற்றைய இளைஞரான 29 வயதுடையவரின் சடலத்தைத் தேடும் பணிகள் கடற்படையினர் மற்றும் பிரதேசவாசிகளின் உதவியுடன் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பெந்தோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கை கிரிக்கெட் இரசிகர்களுக்கு லசித் மாலிங்க வெளியிட்டுள்ள முக்கிய பதிவு!!

இலங்கை கிரிக்கெட் ரசிகர்களுக்காக இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர வேகப் பந்து வீச்சாளரும் தற்போதைய அணியின் பந்து வீச்சு பயிற்றுவிப்பாளருமான லசித் மாலிங்க விசேட முகநூல் பதிவொன்றை இட்டுள்ளார்.

கிரிக்கெட் ரசிகர்கள் பொறுமையுடன் காத்திருக்க வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த 1996ம் ஆண்டில் இலங்கை அணி முதன்முதலில் உலகக் கிண்ணமொன்றை வென்றதன் முதல் சுற்றில் வெளியேறியதுடன் நான்கு உலகக் கிண்ண போட்டிகளில் இறுதி வரை முன்னேறி தோல்வியைத் தழுவியதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

எனது தாய் நாட்டு அணி மற்றுமொரு உலகக் கிண்ணத்தை வெல்லும் என நினைத்த அனைவரும் நீண்ட காலம் பொறுமையுடன் விளையாட்டையும் வீரர்களையும் நேசித்தனர்.

கவலையுடன் இலங்கை அணியை திட்டித் தீர்த்தேனும் பொறுமையாக இணைந்திருந்ததன் காரணமாக 18 ஆண்டுகளின் பின்னர் 2014ம் ஆண்டில் உலகக் கிண்ணமொன்றை வென்றெடுக்க முடிந்தது என அவர் தெரிவித்துள்ளார்.

எனவே மற்றுமொரு உலகக் கிண்ணத்தை வென்றெடுப்பதற்கான சாத்தியங்கள் முற்றாக முடங்கிப் போகவில்லை என அவர் தெரிவிக்கின்றார்.

இரண்டாவது தடவை உலகக் கிண்ணம் வென்றெடுக்கப்பட்டு 12 ஆண்டுகள் கடந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். இந்த விளையாட்டைப் புரிந்து கொண்டு பலர் பொறுமையாக காத்திருப்பார்கள் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

தம்மைப் போலவே மற்றொரு உலகக் கிண்ணம் வென்றெடுக்கப்படும் வரையில் விளையாட்டை தொடர்ந்தும் நேசிப்பார்கள் எனவும், விளையாட்டை கைவிடுவது அல்லது விலகிச் செல்வது தீா்வாக அமையாது என லசித் மாலிங்க தெரிவித்துள்ளார்.

ஒரே பிரசவத்தில் பிறந்த மூன்று குழந்தைகள்!!

கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் 34 வாரங்கள் பூர்த்தியடையாத நிலையில் ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகள் பிறந்துள்ளது.

இந்த பிரசவம், மகப்பேற்று விசேட வைத்திய நிபுணர் எச். எம். றஸீன் முகம்மட் மற்றும் சிறுபிள்ளை வைத்திய நிபுணர் பீ. எம். அர்சாத் அகமட் ஆகியோரின் தலைமையிலான மருத்துவக் குழுவினரால் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.

பிறந்த மூன்று ஆண் குழந்தைகளும் நலமாக உள்ளதுடன், தாயாரும் நல்ல உடல்நிலையுடன் இருப்பதாக வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

குழந்தைகளின் சுகநலத்தை வேண்டி வைத்தியசாலையில் விசேட பிரார்த்தனை நிகழ்வு இடம்பெற்றது.

இதில் மகப்பேற்று விசேட வைத்திய நிபுணர் எச். எம். றஸீன் முகம்மட், சிறுபிள்ளை வைத்திய நிபுணர் பீ. எம். அர்சாத் அகமட் , திட்டமிடல் வைத்திய அதிகாரி எம். எம். தாஸிம், தர முகாமைத்துவ வைத்திய அதிகாரி கே. எல். எம். றைஸ், வைத்தியர்கள்,தாதிய மேற்பார்வையாளர் , தாதியர்கள், மருத்துவ தாது மற்றும் சுகாதார சேவை உதவியாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

 

ஆசையுடன் டிராக்டரில் ஏறிய சிறுவனுக்கு நேர்ந்த சோகம்!!

குருநாகல் – கல்கமுவ பகுதியில் டிராக்டரில் சிக்கி 15 வயது சிறுவன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று(26.02.2026) இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

சிறுவன் பயணித்துக்கொண்டிருந்த டிராக்டரில் சாரதி இருக்கைக்கு அருகில் ஏற முயற்சித்துள்ளார். இதன்போது, எதிர்பாராதவிதமாகத் தவறி விழுந்த சிறுவன், டிரக்டரின் சக்கரத்தில் சிக்கிப் படுகாயமடைந்துள்ளார்.

உடனடியாக அவர் மீட்கப்பட்டு கல்கமுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர், மஹநான்னேரிய பகுதியைச் சேர்ந்த 15 வயதுடைய சிறுவன் எனப் பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் கல்கமுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

தங்கம் வாங்க காத்திருப்போருக்கான தகவல் : விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்!!

கொழும்பு செட்டியார்தெரு தகவல்களின் படி இன்றைய தினம் (27.02.2026) 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 370,000 ரூபாவாக காணப்படுகிறது. அத்துடன் 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலை நான்கு இலட்சம் ரூபாவாக தொடர்ந்து காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

கடந்த சில நாட்களாக கொழும்பு செட்டியார்தெரு தகவல்களின் படி இலங்கையில் தங்க விலை மாற்றமின்றி தொடர்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

உலக சந்தையில் இன்றைய தினம் (27.02.2026) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையில் அதிகரிப்பு பதிவாகியுள்ளது. அந்த வகையில் இன்றைய தினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது உலக சந்தையில் 5187 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.

இதேவேளை நேற்றைய தினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது உலக சந்தையில் 5158 அமெரிக்க டொலர்களாக காணப்பட்டது. இந்த விலை மாற்றமானது இலங்கையிலும் தாக்கத்தை செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கையில் ஏற்கனவே 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலை நான்கு இலட்சம் ரூபாவிலேயே நிலை கொண்டுள்ளது.

இவ்வாறான சூழலில் நகை வாங்க காத்திருப்போர் தமக்கான சாதகமான சூழலை நோக்கி எதிர்பார்த்திருக்கும் நிலையில் உலக சந்தையில் தங்கத்தின் விலையானது 6 ஆயிரம் அமெரிக்க டொலர்களை இவ்வருடத்தில் தொடும் வாய்ப்பு உள்ளதாக பொருளாதார ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

 

அக்குரேகொட துப்பாக்கித்தாரியின் வாக்குமூலத்தில் சிக்கிய 48 கொலைகள் : குழப்பத்தில் பொலிசார்!!

அக்குரேகொடவில் வழக்கறிஞர் மற்றும் அவரது மனைவி சுட்டுக்கொல்லப்பட்ட இரட்டைக்கொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட இரண்டாவது துப்பாக்கித்தாரி தொடர்பில் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.

சந்தேகநபரிடம் பொலிஸார் நடத்திய விசாரணையில், தென் மாகாணம் உட்பட பல பகுதிகளில் சுமார் 48 பேரை கொலை செய்த துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டவர் தான் என்றும் பொலிஸாரிடம் ஒப்புக்கொண்டுள்ளார்.

இதற்கிடையில், மாலபே பகுதியில் ரூ. 200,000 பணத்தைப் பெற்றுக்கொண்டு துப்பாக்கிச்சூடு நடத்தியவர் அன்றைய தினம் மொனராகலைக்கு தப்பிச்சென்றதும் தெரியவந்துள்ளது.இதன் பின்னர் அவர் அதிவேக நெடுஞ்சாலை வழியாக மத்தளையை அடைந்ததாகவும் கூறியிருந்தார்.

மொனராகலையின் நக்கல பகுதிக்கு சென்ற பிறகு, அழைத்துச்செல்ல அங்கொட லொக்கா என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியின் நண்பரான கெலும் என்ற மற்றொரு சந்தேகநபர் வந்துள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது.

இதன்பின்னர், துபாயிலிருந்து ஒருவர் கெலுமை அழைத்து, “ஒருவர் வருகிறார்… அவரை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்” என்று கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.

கரந்தெனிய சுத்தா என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியின் அறிவுறுத்தலின் பேரில் இந்த கொலைகள் நடத்தப்பட்டதாக தெரியவந்துள்ளது.

“ஐயா… சுத்தா என் கடவுள்.. நான் சுத்தாவுக்காக எதையும் செய்வேன்.. நான் பணத்திற்காக இதைச் செய்யவில்லை..”, என்று சந்தேகநபர் விசாரணை அதிகாரிகளிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

துப்பாக்கிச் சூடு நடத்தியவரிடமிருந்து மேலும் வாக்குமூலங்கள் எடுக்கப்படும் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

 

ஆண்டின் முதல் சந்திர கிரகணம் : இந்த ராசிக்காரர்களுக்கு பெரும் அதிர்ஷ்டம் காத்திருக்கின்றது!!

சந்திர கிரகணம் என்பது ஒரு வானியல் நிகழ்வாகும். ஜோதிட சாஸ்திரத்தின் படி, 2026 ஆம் ஆண்டின் முதல் சந்திர கிரகணம் மார்ச் மாதத்தில் நிகழவுள்ளது மற்றும் இது முக்கியமானதாக கருதப்படுகிறது. அதுவும் இந்த சந்திர கிரகணம் மார்ச் 03 ஆம் திகதி நிகழவுள்ளது.

முக்கியமாக இந்த சந்திர கிரகணமானது சூரிய பகவானின் சிம்ம ராசியில் நிகழவுள்ளது. இதன் காரணமாக இந்த சந்திர கிரகணம் சற்று சிறப்பானதாக கருதப்படுகிறது. இப்படி நிகழும் சந்திர கிரகணத்தின் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும்.

அதில் சிலருக்கு மோசமாக இருந்தாலும், சிலருக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கும். அதுவும் இந்த சந்திர கிரகணம் சிம்ம ராசியில் நிகழ்வதால் மரியாதை, அந்தஸ்து, கௌரவம் போன்றவற்றை அதிகரிப்பதாக கூறப்படுகிறது.

மேஷம்: இந்த மேஷ ராசியின் அதிபதி செவ்வாய். ஜோதிடத்தின் படி செவ்வாயும் சூரியனும் நட்பு கிரகங்களாவர். இதனால் இந்த சந்திர கிரகணத்தால் மேஷ ராசிக்காரர்கள் தொழிலில் நல்ல முன்னேற்றத்திற்கான வாயப்புக்களைப் பெறுவார்கள்.

நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரகமாக நடக்கும். பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. அதிர்ஷ்டத்தை நம்பாமல் கடினமாக உழைத்தால் நல்ல பலனைப் பெறலாம்.

சிம்மம் : ஆண்டின் முதல் சந்திர கிரகணத்தால் சிம்ம ராசிக்காரர்கள் நல்ல அதிர்ஷ்டத்தைப் பெறுவார்கள். உயர் அதிகாரிகளின் முழு ஆதரவு கிடைக்கும். சிலருக்கு புதிய பொறுப்புகள் வழங்கப்படலாம். முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். புதிதாக முதலீடுகளை செய்வதால் இருந்தால் , புத்திசாலித்தனமாக யோசித்து பின் செய்ய அறிவுறுத்தப்படுகிறது.

தனுசு: 2026 ஆம் ஆண்டின் முதல் சந்திர கிரகணத்தால் தனுசு ராசிக்காரர்கள் நல்ல பலன்களைப் பெறுவார்கள். சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். வாழ்க்கையில் ஒரு பெரிய நல்ல மாற்றத்தைக் காண்பீர்கள். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். பணியிடத்தில் கடினமாக உழைக்க நேரிடும். வேலை தொடர்பான பயணங்களை அதிகம் மேற்கொள்ள வேண்டியிருக்கும். சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்புக்கள் கிடைக்கலாம்.

 

வவுனியா – ஓமந்தை பகுதியில் இன்று இடம்பெற்ற கோர விபத்து!!

வவுனியா – ஓமந்தை பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற கோர விபத்தில் இருவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கண்டெய்னர் லொறி மற்றும் மாட்டுசாணம் ஏற்றி வந்த லொறி ஒன்றும் மோதியதில் லொறி கவிழ்ந்து விபத்துக்குளாகியுள்ளது.

இந்த விபத்தால் ஏ9 வீதியின் போக்குவரத்து சுமார் 03 மணிநேரம் தடைப்பட்டதுடன், நீண்ட வரிசையில் வாகனங்கள் தரித்து நின்றதாக கூறப்படுகின்றது.

அதிக பனிமூட்டம் காரணமாக விபத்து இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளதுடன், விபத்து தொடர்பில் மேலதிக விசாரணையினை வவுனியா ஓமந்தை பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

வாகனம் ஒன்று மின் கம்பத்தில் மோதி விபத்து!!

மட்டக்களப்பு – களுவாஞ்சிகுடி தேற்றாத்தீவு பிரதான வீதியில் அமைந்துள்ள கொம்புச்சந்தி பிள்ளையார் ஆலயத்திற்கு முன்னால் இன்று (27) அதிகாலை பாரிய விபத்துச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் வட்டாரக வாகனத்தைச் செலுத்திச் சென்ற சாரதி இதன்போது எதுவித ஆபத்துக்களுமின்றி தெய்வாதீனமாக உயிர் பிழைத்துள்ளார்.

காத்தான்குடி பகுதியிலிருந்து மருதமுனை நோக்கிச் சென்று கொண்டிருந்த வட்டா ரக வாகனமே தேற்றாத்தீவு கொம்புச் சந்திப் பிள்ளையார் ஆலயத்திற்கு முன்னாலிருந்து மின் கம்பத்தில் மோதுண்டு விபத்துள்குள்ளாகியுள்ளது.

வாகனத்திற்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதுடன், மின்கம்பமும் உடைந்து வீழ்ந்துள்ளது. மேலும் விபத்துச் சம்பவம் தொடர்பில் களுவாஞ்சிகுடி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

 

நகைக்கடையில் நூதன முறையில் திருடி பக்கத்து கடையில் அடகு வைத்த நபர்!!

தலவாக்கலை நகரில் உள்ள நகைக்கடை ஒன்றில் நூதன முறையில் தங்க நகையைத் திருடிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

திருடப்பட்ட நகையைச் சந்தேக நபர் அருகில் உள்ள வேறொரு நகைக்கடையில் அடகு வைத்துள்ளமை பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்ப டுகின்றது.

இச்சம்பவம் தலவாக்கலை பகுதியில் நேற்று (26) காலை இடம்பெற்றுள்ளது. சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

தலவாக்கலை நகரில் தலவாக்கலை நுவரெலியா பிரதான வீதியில் பஸ்தரிப்பு நிலையத்திற்கு சமீபமாக உள்ள நகை கடையொன்றில் நகை வாங்குவது போல் பாவனை செய்து தங்க மோதிரம்

ஒன்றினை மிகவும் நூதன முறைய களவாடி கடை உரிமையாளரை திசை திருப்பிவிட்டு பணப்பையினை எடுப்பது போல் பணத்தினை எடுத்து மோதிரத்தினை பணத்துடன் சுருட்டி தனது காட்சட்டை பக்கட்டில் வைக்கும் காட்சி அங்கிருந்த சிசிடிவி கமராவில் பதிவாகியுள்ளது.

தலவாக்கலை – நுவரெலியா பிரதான வீதியில், பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள நகைக்கடை ஒன்றிற்கு நகை வாங்குவது போல் வந்த நபர், உரிமையாளரைத் திசை திருப்பி நூதன முறையில் தங்க மோதிரம் ஒன்றைத் திருடியுள்ளார்.

தனது பணப்பையை எடுப்பது போல் பாசாங்கு செய்து, மோதிரத்தைப் பணத்துடன் சேர்த்துச் சுருட்டித் தனது காற்சட்டைப் பையில் மறைத்து வைத்துள்ளார்.

சிறிது நேரத்தின் பின் மோதிரம் ஒன்று குறைவாக இருப்பதைக் கவனித்த உரிமையாளரின் மனைவி, சிசிடிவி காட்சிகளைச் சோதித்தபோது நகை திருடப்பட்டதை உறுதி செய்தார்.

அதனைத் தொடர்ந்து தேடுதலில் ஈடுபட்டபோது, குறித்த நபர் கடைக்கு எதிரே உள்ள வேறொரு கடையில் இருப்பதைக் கண்டு அவரை மடக்கிப் பிடித்துப் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

பொலிஸார் நடத்திய விசாரணையில், திருடப்பட்ட மோதிரம் அருகிலிருந்த அடகு கடை ஒன்றில் அடகு வைக்கப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டது.

இதேவேளை, கடந்த 25 ஆம் திகதி தலவாக்கலை நகரின் சுற்றுவட்டத்திற்கு அருகில் உள்ள மற்றொரு நகைக்கடையிலும் இதேபோன்று நூதன முறையில் தங்க நகை திருடப்பட்டிருந்தது.

அக்காட்சிகளும் சிசிடிவியில் பதிவாகியுள்ள போதிலும், சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் இதுவரை கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

காதலன் கைவிட்டதால் கசந்த வாழ்க்கை : 21 வயது யுவதியின் விபரீத முடிவு!!

தெலுங்கானாவில் யூடியூபரும் கல்லூரி மாணவியுமான 21 வயது இளம் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

சம்பவம் தொடர்பில் இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளதாவது, தெலங்கானா மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்தவர் பானு கோமாளி (வயது 21). இவரது தாயார் குவைத் நாட்டில் வேலை பார்த்து வருகிறார்.

இவரது தாயார் குவைத் நாட்டில் உள்ள நிலையில் பானு ஹைதராபாத்தில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பிஎஸ்சி படித்து வந்தார்.

பானு ஒரு பகுதி நேர யூடியூபராகவும் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த பிப்ரவரி 23ஆம் தேதி குவைத்தில் உள்ள தனது தாயாரான சத்யா வரலட்சுமியின் தொலைபேசிக்கு அதிகாலை 1.34 மணி அளவில் பானு, மெசேஜ் ஒன்றை அனுப்பி இருந்தார்.

அதில் “நான் உங்களை மிகவும் நேசிக்கிறேன் அம்மா.. கவனமாக இருங்கள்.. என்னுடைய தம்பியை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள் எனக் கூறியிருந்தார். மறுநாள் காலையில் இந்த மெசேஜை பார்த்த அவரது தாய் வரலட்சுமி, தனது மகள் பானுவை தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயன்றார்.

ஆனால் பானுவின் தொலைபேசி ஸ்விட்ச் ஆப் என வந்தது. இதனால் பதற்றம் அடைந்த வரலட்சுமி தனக்கு தெரிந்த நண்பர் ஒருவர் மூலம் ஹைதராபாத்தில் பானு தங்கி இருந்த வீட்டிற்கு உடனடியாக சென்று பார்க்குமாறு கூறியுள்ளார்.

வரலட்சுமியின் நண்பர் பானு கோமாளி தங்கி இருந்த வாடகை வீட்டிற்கு சென்று, வீட்டின் கதவை நீண்ட நேரமாக தட்டிய போதும் கதவு திறக்கப்படவில்லை.

இதனால் சந்தேகம் அடைந்த வரலட்சுமியின் நண்பர், அக்கம்பக்கத்தினரின் உதவியோடு கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, அங்கு ஒரு அறையில் மின்விசிறியில் தூக்கு மாட்டிய நிலையில் பானு கோமாளி தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, பானுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில், பானு கோமாளியும் மென்பொருளாளராகவும் யூடியூபராகவும் இருந்து வரும் 27 வயது அகில் என்ற இளைஞரும் 3 ஆண்டுகளாக காதலித்து வந்தது தெரியவந்தது.

பின்னர் இருவருக்கும் இடையேயான உறவில் முறிவு ஏற்பட்டதால், இருவரும் பிரிந்ததாகவும், இதனால் பானு மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்ததாகவும் தெரிய வந்தது.

அதேசமயம் இதே காரணத்திற்காக 6 மாதங்களுக்கு முன் பானு தற்கொலை செய்ய முயற்சி செய்து பின்னர் அவர் காப்பாற்றப்பட்டது விசாரணையில் தெரியவந்தது.

சம்பவம் தொடர்பில் போலீசார் கதலனிடம் தீவிர விசாரணையை முன்னெடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.

வவுனியாவில் 293 குடும்பங்களின் பூர்வீகக் காணிகளை 2024ல் வர்தமானி மூலம் சுவீகரித்த வன இலாகா!!

செட்டிகுளம் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட வீரமாணிக்கங்குளம் மற்றும் முசல்குத்திக்குளம் ஆகிய பகுதிகளில் பூர்வீகமாக வாழ்ந்து வந்த 300 ற்கும் மேற்ப்பட்ட குடும்பங்களின் காணிகள் 2024 இல் வர்த்தமானி அறிவிப்பு செய்யப்பட்டு வனவளத்திணைக்களம் கையகப்படுத்தியுள்ளதாக வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.

வவுனியா மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டம் ஒருங்கிணைப்புக்குழுவின் தலைவர் உபாலி சமரசிங்க தலைமையில் இன்று இடம்பெற்றது..

இதன்போது கடந்த கூட்டங்களில் முன்வைக்கப்பட்ட வனவளத்திணைக்களத்தின் கீழ் உள்ள குளங்கள் மற்றும் காணிகளின் விடுவிப்பு தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

இதன்போது கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் செட்டிகுளம் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட வீரமாணிக்கங்குளம், முசல்குத்திக்குளம் ஆகிய கிராமங்களில் 1977 ஆம் ஆண்டு மக்கள் குடியமர்த்தப்பட்டனர்.

பல்வேறு காரணங்களால் இடம்பெயர்ந்து சென்ற மக்கள் மீண்டும் திரும்பி வந்து மீளக்குடியமர சென்ற நிலையில் அதற்கு வனவள திணைக்களம் தடை ஏற்ப்படுத்தியுள்ளது. இதற்கான முடிவினை இன்று எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

இதன்போது கருத்து தெரிவித்த செட்டிகுளம் பிரதேச செயலாளர்… குறித்த கிராமத்தில் வாழ்ந்தவர்கள் என 293குடும்பங்கள் அங்கு மீளக்குடியமர்வதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளனர்.

அவர்களில் பலர் காணிக்குரிய ஆவணங்களையும் வைத்துள்ளனர். அந்தவகையில் மொத்தமாக 672 ஏக்கர் காணிகளை விடுவிக்குமாறு நாம் கோரியிருந்தோம். அந்த காணிகளுக்குள் இடிந்த நிலையில் உள்ள கிணறுகள் உள்ளது. பழைய பாடசாலைகள் இருந்தமைக்கான சான்றுகள் உள்ளன.

இடிபாடைந்த கட்டடங்கள் உள்ளது. இந்த காணிகளை விடுவிக்க முடியும் என தெரிவித்திருந்த வனவளத்திணைக்களம் கடந்த 2024 ஆம் ஆண்டு அவற்றை வர்த்தமானி அறிவிப்பு செய்து கையகப்படுத்தியுள்ளது என்று தெரிவித்தார்.

பிரதேச செயலகத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தரும், குடியேற்ற உத்தியோகத்தரின் பங்களிப்புடனேயே இது வர்த்தமானி அறிவிப்பு செய்துள்ளதாக வனவளத்திணைக்கள அதிகாரி தெரிவித்தார்.

எனினும் அவ்வாறு இடம்பெறவில்லை என பிரதேச செயலாளர் மறுத்திருந்ததுடன் எமக்கு எந்த ஒரு விடயமும் தெரியப்படுத்தப்படவில்லை என தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து குறித்த காணி தொடர்பில் செட்டிகுளம் பிரதேச செயலாளர், வனவளத்திணைக்கள அதிகாரிகள் இணைந்து பிறிதொரு நாளில் கலந்துரையாடி முடிவினை எடுக்குமாறு ஒருங்கிணைப்பு குழுவால் தீர்மானிக்கப்பட்டிருந்தது.