சாதாரண தரப்பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் திகதி தொடர்பில் வெளியான அறிவிப்பு!!

2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் தொடர்பான அறிவிப்பொன்றை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ்.இந்திகா குமாரி லியனகே வெளியிட்டுள்ளார்.

அதன்படி க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் ஜூன் மாத நடுப்பகுதியில் வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பரீட்சையின் பெறுபேறுகள் தொடர்பில் சமூக ஊடகங்களில் வெளியான தகவல்கள் குறித்து விளக்கமளிக்கும் போதே பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ்.இந்திகா குமாரி லியனகே இதனை தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பெறுபேறுகள் வெளியாகும் குறிப்பிட்ட திகதி இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என்றும், இருப்பினும், ஜூன் மாத நடுப்பகுதியில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பிப்ரவரி 17 முதல் 26 வரை நடைபெற்ற நிலையில், இதில் 4,51,463 பரீட்சார்த்திகள் தோற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் திருமணமான பெண்களில் 10.6 சதவீதமானோருக்கு குழந்தைகள் இல்லை!!

இலங்கையில் திருமணமான பெண்களில் 10.6 சதவீதமானோருக்குக் குழந்தைகள் இல்லை எனத் தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள மக்கள் தொகை மற்றும் வீடமைப்புத் கணக்கெடுப்பின் இறுதி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையிலுள்ள திருமணமான பெண்களில் பெரும்பான்மையானோர் அதாவது 33.3 சதவீதமானோர் தங்களது வாழ்நாளில் இரு குழந்தைகளை மாத்திரமே பிரசவித்துள்ளதாக இந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

அத்துடன் பொருந்தோட்டங்களில் வாழும் பெண்களைக் கருத்தில் கொள்ளும்போது அவர்களில் அதிக சதவீதமானோர் மூன்று குழந்தைகளைப் பிரசவித்துள்ளனர்.

பெருந்தோட்டப் பகுதிகளில் திருமணமான பெண்களில் 12.4 சதவீதமானோருக்குக் குழந்தைகள் இல்லை என்றும் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

திருமணமான பெண்களில் ஒரேயொரு குழந்தையை மாத்திரம் பிரசவித்துள்ள பெண்களின் அதிகூடிய சதவீதம் நகர்ப்புறங்களிலிருந்தே பதிவாகியுள்ளதுடன் அந்த எண்ணிக்கை 21.3 சதவீதமாகும் என குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டள்ளது.

 

இலங்கையில் தங்கத்தின் விலை சரிவு!!

இலங்கையின் உள்நாட்டுச் சந்தையில் தங்கத்தின் விலையில் இன்று (25) காலை எவ்வித மாற்றமும் இன்றி அதே விலையில் விற்பனை செய்யப்பட்ட நிலையில் பிற்பகலில் 3,000 ரூபாயால் குறைந்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

அதன்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 392,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 360,600 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 49,000 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 45,075 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

வினாத்தாள் கசிவால் நீட் தேர்வு ரத்து : 18 வயது மருத்துவ மாணவி எடுத்த விபரீத முடிவு!!

மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான நீட் நுழைவுத்தேர்வு கடந்த மே 3-ஆம் தேதி நாடு முழுவதும் சுமார் 22.80 லட்சம் மாணவ, மாணவிகளால் எழுதப்பட்டது. எனினும், தேர்வு நடப்பதற்கு முன்பே ராஜஸ்தான் மாநிலத்தில் வினாத்தாள் கசிந்தது போன்ற பல்வேறு முறைகேடுகள் அம்பலமானதால்,

தேசிய தேர்வு முகமை இந்தத் தேர்வை அதிரடியாக ரத்து செய்ததுடன், அடுத்த மாதம் 21-ஆம் தேதி மறுதேர்வு நடைபெறும் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.

இந்தத் திடீர் அறிவிப்பானது நாடு முழுவதும் மருத்துவக் கனவுகளோடு காத்திருந்த பல்லாயிரக்கணக்கான சாமானிய ஏழை எளிய மாணவர்களையும், அவர்தம் பெற்றோர்களையும் பெரும் கவலையிலும் ஆழமான மன உளைச்சலிலும் ஆழ்த்தியது.

அந்த வரிசையில், கர்நாடக மாநிலம் கலபுராகி பகுதியைச் சேர்ந்த பதினெட்டு வயது இளம் மாணவி பாக்யஸ்ரீ என்பவரும் இந்தத் தேர்வை எழுதிவிட்டு,

தான் நல்ல மதிப்பெண்கள் பெற்று நிச்சயம் தேர்ச்சி அடைவேன் என்ற அசுர நம்பிக்கையில் தனது பெற்றோரிடம் கூறி வந்துள்ளார்.

ஆனால், வினாத்தாள் கசிவு காரணமாகத் தேர்வு முழுமையாக ரத்து செய்யப்பட்டு மறுதேர்வு எழுத வேண்டும் என்று வெளியான அரசாங்க அறிவிப்பால், மாணவி பாக்யஸ்ரீ கடுமையான மன விரக்திக்கும் தீராத மன அழுத்தத்திற்கும் ஆளானார்.

இதன் காரணமாகத் தனது வாழ்க்கையே கேள்விக்குறியாகிவிட்டதாகக் கருதிய அவர், இன்று காலை தனது வீட்டின் படுக்கையறை மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்து வந்த உள்ளூர் போலீசார், மாணவியின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததுடன், இந்த விபரீத மரணம் குறித்துத் தற்போதே வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

இரவு உணவுக்கு வீட்டுக்கு வருவதாக உறுதியளித்தவர்: வெளிநாட்டில் இந்தியருக்கு ஏற்பட்ட கொடூரம்!!

நியூசிலாந்தின் பாபாமோவாவில், உபேர் வாகனத்தில் இரவு நேரப் பணியில் ஈடுபட்டிருந்த இந்திய வம்சாவளி நபர் ஒருவர், இரண்டு வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் கொல்லப்பட்டுள்ளார்.

பொலிசார் வெளியிட்டுள்ள தகவலில், பெல் ரோடு மற்றும் பாப்லர் லேன் இடையே உள்ள தே புகே பிரதான சாலையில் நடந்த விபத்தில் 36 வயதான ரமந்தீப் தில்லன் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளார்.

அதேவேளை மற்றொரு வாகனத்தில் இருந்த இருவர் காயங்களுடன் தப்பியுள்ளனர். இந்தியாவின் பஞ்சாப் மாகாணத்தைச் சேர்ந்த தில்லன், 2015-ஆம் ஆண்டில் மாணவர் விசா மூலம் நியூசிலாந்திற்குச் சென்றுள்ளார்.

கடந்த 2024ல் இந்தியா திரும்பிய தில்லன் பின்னர் வீரபால் கவுரைத் திருமணம் செய்து கொண்டு ஒன்றாக நியூசிலாந்துக்குக் குடிபெயர்ந்து பாபாமோவாவில் குடியேறினர், அங்கு இருவரும் கிவிப்பழத் தோட்டங்களில் பணியாற்றினர்.

ஆனால் அந்த தம்பதிக்கு மகள் ஒன்று பிறந்ததும், அவரைக் கவனித்துக்கொள்வதற்குச் சற்று நெகிழ்வுத்தன்மை கிடைப்பதற்காக, தில்லன் உபேர் வாகனம் ஓட்டத் தொடங்கினார்.

புதன்கிழமை மதியத்திற்கு மேல் 7.15 மணியளவில் இந்த விபத்து நடந்துள்ளதாகவே கூறப்படுகிறது. தில்லன் பொதுவாக தனது 18 மாத மகளுடன் நேரம் செலவிட்டதன் பின்னரே வேலைக்கு கிளம்புவாராம்.

அன்று மாலை வேலைக்குக் கிளம்புவதற்கு முன், இரவு உணவிற்காகத் தான் திரும்பி வருவதாக தில்லன் தனது மனைவியிடம் உறுதி அளித்துள்ளார்.

ஆனால், நேரம் கடந்தும் அவர் வீடு திரும்பாத நிலையில், அலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளார் அவரது மனைவி. தொலைபேசியில் தொடர்புகொள்ள முடியாமல் போகவே, பரிதவிப்பில் இருந்த அவருக்கு இடியாக இறங்கிய அந்த தகவல் வந்துள்ளது.

சாலை விபத்தில் தில்லன் மரணமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். தில்லானின் இறுதிச்சடங்கு புதன்கிழமையன்று நடைபெற்றது; இதில் நியூசிலாந்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மக்கள் பெருந்திரளாக கூடி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

இலங்கைக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி : அனைத்து துறையினரும் வீட்டில் இருந்து பணியாற்றும் நடைமுறை?

இலங்கையில் வீட்டில் இருந்து வேலை செய்யும் நடைமுறை மீண்டும் அமுல்படுத்தப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பில் அரசாங்கம் ஆலோசனை நடத்தி வருவதாக பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

எரிபொருள் விலை அதிகரித்து வரும் நிலையில் அரசாங்கம் இது தொடர்பில் ஆராய்ந்து வருவதாக தெரியவந்துள்ளது. அதற்கமைய, வெகுவிரைவில் இந்த நடைமுறை அமுலுக்கு வரும் அரசாங்கம் எதிர்பார்ப்பதாக பத்திரிகை செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எரிபொருளுக்காக மாதத்திற்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர் செலவிட நேரிடுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஏற்கனவே இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட காலப்பகுதி முதல் தற்போது வரையில் பல மில்லியன் டொலர் எரிபொருளுக்காக செலவிடப்பட்டுள்ளது.

உலகளாவிய ரீதியில் இந்த நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதுடன், பல நாடுகளில் வீட்டில் இருந்து பணியாற்றும் செயற்பாடு நடைமுறைக்கு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையர்களை அச்சுறுத்தும் மூளைக்காய்ச்சல் : ஒருவர் பலி : நூற்றுக்கும் அதிகமானோர் பாதிப்பு!!

அம்பாந்தோட்டை, அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் மெனிஞ்சைடிஸ் எனப்படும் மூளைக்காய்ச்சல் நோய் பரவி வருவதாக சந்தேகிக்கப்படுகிறது.

1500க்கு மேற்பட்ட கைதிகள் அந்த சிறையில் உள்ளனர். பாதிக்கப்பட்ட கைதி ஒருவர் இந்த நோய் காரணமாக உயிரிழந்திருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டுள்ள நிலையில் சுகாதார பிரிவினர் விரிவான விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.

சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 17 கைதிகளில் இருவருக்கு மூளைக்காய்ச்சல் இருப்பது பரிசோதனைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது தவிர, காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மேலும் 7 கைதிகள் குணமடைந்து வெளியேறியுள்ளனர்.

தெனியாய பகுதியில் உள்ள நான்கு பாடசாலைகளில் ஆரம்பமான இந்நோய் தற்போது தியத்தலாவை, ரிகில்லகஸ்கட, வெலிமடை போன்ற பகுதிகளுக்கும் பரவியுள்ளது.

அத்துடன், இப்பகுதிகளில் இருந்து மூளைக்காய்ச்சல் என சந்தேகிக்கப்படும் 116 நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தொற்றுநோய் பிரிவு நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையைச் சேர்ந்த சில கைதிகள் காய்ச்சல் காரணமாக அம்பாந்தோட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

அவ்வாறு அனுமதிக்கப்பட்டிருந்த கைதி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளார் தெரிவித்துள்ளார்.

தற்போது அங்கு மேலும் 20 கைதிகள் வரை காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களும் மூளைக்காய்ச்சல் என சந்தேகிக்கப்படும் நோயாளர்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தெனியாய 50 மூளைக்காய்ச்சல் நோயாளர்களும், தியத்தலாவையில் 28 நோயாளர்களும், ரிகில்லகஸ்கட பகுதியில் 25 நோயாளர்களும்,

வெலிமடையில் 13 நோயாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பிரதான தொற்றுநோயியல் நிபுணர் மருத்துவர் பாலித கருணாபேம தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, நாட்டில் இதுவரை மூளைக்காய்ச்சல் என சந்தேகிக்கப்படும் 116 நோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.

இதேவேளை, தெனியாய பகுதியில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு மூளைக்காய்ச்சல் பரவுவதற்கு அங்குள்ள அசுத்தமான நீரூற்றுகளும் உணவுகளுமே காரணம் எனத் தெரியவந்தது.

இதனையடுடுத்து, அப்பகுதியில் உள்ள நீரூற்றுகள் மற்றும் ஏனைய மூலங்களை தூய்மைப்படுத்துவதற்கு சுகாதாரத் துறையினர் நடவடிக்கை எடுத்திருந்தனர்.

எனினும் பாதிக்கப்பட்ட ஒருவரின் மற்றும் ஆரோக்கியமான ஒருவரின் வாய் வழியான உமிழ்நீர் மூலமும் இந்நோய் பரவக்கூடும் என மருத்துவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

மூளைக்காய்ச்சலுக்கான அறிகுறிகள் காணப்பட்டால் உடனடியாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும்.

இது ஒரு தீவிரமான நோய் என்பதால் உடனடியாக சிகிச்சை பெறாவிட்டால் பல்வேறு சிக்கல்கள் காரணமாக மரணம் ஏற்படலாம் என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

பரபரப்பை ஏற்படுத்தியுள்ள பொதியினுள் கண்டெடுக்கப்பட்ட மற்றுமொரு சடலம்!!

மஹியங்கனை நகரில் உள்ள கால்வாயொன்றில் பொதிசெய்யப்பட்ட நிலையில் வீசப்பட்டிருந்த மனித சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (24) மாலை நடைபெற்றுள்ளது.

மஹியங்கனை நகரில் உள்ள கால்வாயொன்றின் அருகில் கைவிடப்பட்ட நிலையில் உள்ள வீடொன்றுக்கு அருகில் சந்தேகத்திற்கிடமான பொதியொன்று வீசப்பட்டிருப்பதாக பிரதேசவாசிகள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இதனையடுத்து மஹியங்கனை பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை மேற்கொண்ட நிலையில் கடுமையான துர்நாற்றம் வீசியுள்ளதுடன்,பொதியினுள் மனித சடலம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இறந்தவரின் அடையாளம் இன்னும் கண்டறியப்படவில்லை என்றும், கண்டெடுக்கப்பட்ட சடலம் மஹியங்கனை மருத்துவமனை பிரேத அறையில் மேலதிக பரிசோதனைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வித்யா கொலை வழக்கின் மரண தண்டனை கைதி சிறையில் உயிர் மாய்ப்பு!!

புதிய இணைப்பு : சிறைச்சாலைக்குள் உயிரை மாய்த்துக் கொண்ட வித்யா கொலை வழக்கின் மரண தண்டனை கைதியின் உடல் யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பூபாலசிங்கம் ஜெயகுமார் என்ற இந்த கைதி, சிறைச்சாலைக்குள்ளேயே இன்று காலை தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டார்.

இதனையடுத்து நீதவான் சென்று உடலைப் பார்வையிட்டதன் பின்னர், தற்போது சடலம் யாழ். போதனா வைத்தியசாலைக்கு வைத்திய பரிசோதனைகளின் பொருட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

முதலாம் இணைப்பு : புங்குடுதீவு – வித்யா படுகொலை வழக்குடன் தொடர்புடைய மரண தண்டனை கைதி ஒருவர் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.

யாழ். சிறைச்சாலையில் இன்று காலை அவர் தூக்கிட்டு தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். பூபாலசிங்கம் ஜெயகுமார் என்ற கைதியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், வித்யா படுகொலை வழக்கில் மரண தண்டனைப் பெற்றவர்கள் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுவின் தீர்ப்பு வாசிப்பிற்காக இன்று யாழ்ப்பாணம் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட இருந்த நிலையிலேயே குறித்த கைதி தனது உயிரை மாய்த்து கொண்டுள்ளதாக தெரியவருகின்றது.

 

தொடர் சரிவில் அமெரிக்க டொலர் : அமைச்சர் வெளியிட்ட நம்பிக்கை!!

எதிர்வரும் நாட்களில் அமெரிக்க டொலரின் பெறுமதி மேலும் சரியக் கூடும் என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். பொது நிகழ்வொன்றில் கலந்து கொண்டு போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க மேற்கண்டவாறு கருத்து வெளியிட்டுள்ளார். தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,

இலங்கை ரூபாவுக்கு எதிராக அமெரிக்க டொலர் மேலும் சரியும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வரவிருக்கும் சர்வதேச நாணய நிதியத்தின் நிதிகளும் அரசாங்கத்தின் பொருளாதாரத் திட்டமும் சந்தையை நிலைப்படுத்த உதவும்.

சமீபத்திய நாணய மாற்று விகித ஏற்ற இறக்கங்கள் குறித்த எதிர்க்கட்சி அரசியல்வாதிகளின் விமர்சனங்களை சந்தர்ப்பவாதம் கொண்டவை.

டொலர் 340 ரூபாவைத் தாண்டியபோது சிலர் கொண்டாடினார்கள். ஆனால் அமெரிக்க டொலர் ஏற்கனவே மீண்டும் சரியத் தொடங்கி, சுமார் 334 ரூபாவாகக் குறைந்துவிட்டது. வரும் வாரங்களில் இந்த விகிதம் மேலும் குறையும் என அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து இலங்கை சுமார் 700 மில்லியன் அமெரிக்க டொலர்களை எதிர்பார்க்கிறது. அது கிடைத்தவுடன் நாட்டின் அந்நியச் செலாவணி நிலையை மேலும் வலுப்படுத்தும்.

நாணய நிலவரம் குறித்து பீதியை உருவாக்க எதிர்க்கட்சி பிரமுகர்கள் முயற்சிக்கிறனர். ஆனால் பொதுமக்கள் மத்தியில் அவர்களின் கருத்துக்கள் எடுபடாது.

அரசாங்கத்தின் பொருளாதாரத் திட்டம் வெற்றிகரமாகத் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. அதனை நாட்டு மக்களும் நன்றாக அறிவார்கள் என குறிப்பிட்டுள்ளார்.

வவுனியா ஓமந்தை மத்திய கல்லூரி மாணவர்கள் அரைமரதன் ஓட்டப் போட்டி சாதனை : தேசிய மட்டத்திற்கும் தெரிவு!!

வடமாகாண பாடசாலைகளுக்கிடையிலான அரைமரதன் ஓட்டப் போட்டியில், வவுனியா ஓமந்தை மத்திய கல்லூரி மாணவர்கள் வெற்றி பெற்று பாடசாலைக்கும் வவுனியா மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர்.

இப்போட்டியில் ஓமந்தை மத்திய கல்லூரியைச் சேர்ந்த மாணவி நா.யதுர்ஷிகா மிகச்சிறந்த திறமையை வெளிப்படுத்தி, மாகாண மட்டத்தில் 10 ஆம் இடத்தை பெற்றுள்ளார் . இதன் மூலம் அவர் அடுத்து நடைபெறவுள்ள தேசிய மட்டப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.

அதேபோல், இதே போட்டியில் பங்குபற்றிய ஓமந்தை மத்திய கல்லூரியின் மற்றுமொரு வீரரான மாணவன் ச.ததுசாந் போட்டிக்கு மத்தியில் மாகாண மட்டத்தில் 12 ஆம் இடத்தை பெற்றுக்கொண்டு தனது திறமையை நிரூபித்துள்ளார்.

மாணவர்களின் இந்த மாகாண மட்ட சாதனைக்கு பின்னால், அவர்களை நெறிப்படுத்தி திறம்பட பயிற்சி அளித்த விளையாட்டு பயிற்றுவிப்பாளர் த.சகிலன் அவர்களின் அயராத உழைப்பும் வழிகாட்டலும் முதன்மைக் காரணியாக அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தேசிய மட்டத்திற்கு தெரிவாகியுள்ள மாணவி நா.யதுர்ஷிகாவிற்கும், மாகாண மட்டத்தில் சிறந்த இடத்தை பிடித்த மாணவன் ச.ததுசாந்திற்கும், இவர்களை வழிநடத்திய விளையாட்டு பயிற்றுவிப்பாளர் த.சகிலன் மற்றும் அதிபர், ஆசிரியர்கள், பொதுமக்கள் என பலரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

வவுனியாவில் போர் வெற்றிநாள் நிகழ்வுகள் : இராணுவ சிலைக்கு மரியாதை!!

வவுனியாவில் சிங்கள மக்களால் போர் வெற்றிநாள் நிகழ்வுகள் நேற்று நினைவு கூரப்பட்டன.

வவுனியா பழைய பேருந்து நிலையப் பகுதியில் அமைந்துள்ள இராணுவ சிலைக்கு இதன் போது சிறப்பு மரியாதை செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் பௌத்த மதகுருமார்கள் மற்றும் சிங்கள மக்கள் கலந்துகொண்டனர்.

போர் வெற்றியைக் குறிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்வில் சிங்கள மக்கள் மற்றும் மதகுருமார்கள் தமது அஞ்சலியை செய்தனர்.

வவுனியா பிரதேச மட்ட துடுப்பாட்டப் போட்டி: 5வது முறையாகவும் வெற்றிக் கிண்ணத்தை கைப்பற்றி சாள்ஸ் அணி வரலாற்றுச் சாதனை!!

வவுனியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் பிரதேச மட்ட விளையாட்டுப் போட்டிகளில், சாள்ஸ் அணி தனது அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்த வருடத்திற்கான முதலாவது வெற்றிக் கிண்ணத்தை சுவீகரித்துள்ளது. இதன் மூலம் வவுனியா பிரதேச மட்ட துடுப்பாட்டப் போட்டிகளில் ஐந்தாவது தடவையாக இந்த வருடமும் (2011, 2015, 2016, 2017, 2026) சாள்ஸ் அணி சாம்பியன் பட்டத்தைத் தக்கவைத்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.

இறுதிப் போட்டியில் சாள்ஸ் அணியின் துடுப்பாட்ட வரிசை எதிரணியினருக்குப் பெரும் சவாலாக அமைந்தது. குறிப்பாக, சுரேசின் அதிரடியான துடுப்பாட்டமும், அவருக்கு மறுமுனையில் சிறந்த முறையில் கைகொடுத்த சசியின் சிறப்பான இணைப்பாட்டமும் அணியின் ஓட்ட எண்ணிக்கையை கணிசமாக உயர்த்தியது. இந்த இணைப்பாட்டமே சாள்ஸ் அணியின் வெற்றிப் பாதைக்கு வலுவான அடித்தளமாக அமைந்தது.

துடுப்பாட்டத்தைத் தொடர்ந்து பந்துவீச்சிலும் சாள்ஸ் அணி வீரர்கள் முழுமையான ஆதிக்கத்தை செலுத்தினர். றஜிஸ், அணித்தலைவர் டெனி, சசி, யோன் மற்றும் தர்மா ஆகியோரின் நேர்த்தியான மற்றும் துல்லியமான பந்துவீச்சு எதிரணியின் விக்கெட்டுகளை அடுத்தடுத்து வீழ்த்தி அவர்களைத் திணறடித்தது.

போட்டியில் சங்கரின் சுறுசுறுப்பான மற்றும் சிறப்பான களத்தடுப்பு அமைந்தது. எதிரணியினரின் ஓட்ட வேகத்தைக் கட்டுப்படுத்துவதில் இவருடைய பங்கு இன்றியமையாததாக இருந்தது. அணித்தலைவர் டெனியின் சாதுரியமான வழிநடத்தலின் கீழ், ஏனைய சாள்ஸ் அணி வீரர்களின் ஒட்டுமொத்த கூட்டுப் பங்களிப்பும் இணைந்து இந்த வருடத்திற்கான வெற்றியைச் சாத்தியமாக்கியுள்ளது.

வவுனியா மண்ணில் தனது ஐந்தாவது வெற்றியைப் பதிவு செய்து, துடுப்பாட்ட அரங்கில் தனக்கென ஒரு தனி முத்திரையைப் பதித்துள்ள சாள்ஸ் அணி வீரர்களுக்கும், அதன் நிர்வாகத்தினருக்கும் விளையாட்டு ரசிகர்களும் வவுனியா பிரதேச மக்களும் தமது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

டுபாயிலிருந்து நாடுகடத்தப்பட்ட 21 பேரில் இருவர் பெண்கள்!!

டுபாய் அரசாங்கத்தினால் நாடுகடத்தப்பட்டு, நேற்று (22.05.2026) அதிகாலை இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட 21 சந்தேகநபர்களில் இரு பெண்களும் உள்ளடங்க்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நாடுகடத்தப்பட்டவர்களில், இலங்கை பொலிஸாரால் சர்வதேச சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டுத் தேடப்பட்டு வந்த முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரர்களான ‘மஹவத்தே சாமர’ மற்றும் ‘வனாத்தே குடு துமிந்த’ ஆகியோரும் அடங்குவர். அத்துடன் இவர்களில் இரண்டு பெண்களும் உள்ளடங்குகின்றனர்.

இவர்கள் இருவரும் டுபாயில் நடைபெற்ற ஆடம்பர விருந்து ஒன்றின் போதே டுபாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள ‘குடு துமிந்த’ என்பவர், கடந்த 2025ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் 8ஆம் திகதி பொரளையில் இருவர் சுட்டுக் கொல்லப்பட்ட மற்றும் மேலும் மூவர் படுகாயமடைந்த பயங்கரவாதப் பாணியிலான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தை வெளிநாட்டிலிருந்தபடி வழிநடத்திய முக்கிய சூத்திரதாரி எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தற்போது இவர் மேலதிக தீவிர விசாரணைகளுக்காகக் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவிடம் (CCD) ஒப்படைக்கப்பட்டுள்ளார். மேலும், நேற்று இலங்கைக்கு நாடுகடத்தப்பட்ட குழுவில் இவரின் நெருங்கிய சகாக்கள் ஐவரும் அடங்கியுள்ளனர்.

அதேநேரம், மற்றுமொரு முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரரான ‘மஹவத்தே சாமர’ மேலதிக விசாரணைகளுக்காக மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

குறித்த இரு முக்கிய பாதாள உலகக் குழு உறுப்பினர்களைத் தவிர, எஞ்சிய சந்தேகநபர்களில் பெரும்பான்மையானோர் டுபாயில் கைது செய்யப்பட்டதற்கான காரணம் விசித்திரமானது எனப் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

ஈரான் நாடு டுபாய் மீது நடத்திய ஏவுகணைத் தாக்குதலை இந்த நபர்கள் தங்களது கைபேசிகளில் காணொளி (Video) பதிவு செய்து, அதனைச் சமூக ஊடகங்களில் பரப்பியுள்ளனர். டுபாயின் பாதுகாப்பு விதிகளை மீறிய காரணத்தினாலேயே இவர்கள் அந்நாட்டுப் பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாதுகாப்பு விதிகளின்படி, கைது செய்யப்பட்ட இந்த சந்தேகநபர்களிடம் இருந்த பணம், தங்க ஆபரணங்கள் உள்ளிட்ட அனைத்துப் பொருட்களையும் டுபாய் பாதுகாப்புப் பிரிவினர் பறிமுதல் செய்துள்ளனர்.

பின்னர், அவர்கள் அணிந்திருந்த ஆடைகளுடன் வெறும் கடவுச்சீட்டை மட்டும் கையில் கொடுத்து விமானம் மூலம் இலங்கைக்குத் திருப்பி அனுப்பியுள்ளனர்.

நாடுகடத்தப்பட்ட இந்த 21 பேரில் உள்ளடங்கும் இரண்டு பெண்கள் மீதான குற்றச்சாட்டுகள் நிலுவையில் உள்ள அந்தந்த பொலிஸ் நிலையங்களில், மேலதிக விசாரணைகளுக்காக இன்று (23) ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

லண்டனில் இடம்பெற்ற கோர விபத்தில் யாழ் இளைஞன் உயிரிழப்பு : இருவர் மருத்துவமனையில்!!

லண்டனில் இடம்பெற்ற கோர விபத்தில் யாழ்ப்பாணத்தை பின்புலமாக கொண்ட 29 வயது இளைஞன் ஒருவர் உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விபத்து நேற்று அதிகாலை மே 22, வெள்ளிக்கிழமை (Eastcote Lane,South Harrow ) சவுத் ஹாரோவில் உள்ள ஈஸ்ட்கோட் லேன் பகுதியில் கார் ஒன்று மரத்தின் மீது மோதி ஏற்பட்டுள்ளது.

சம்பவத்திற்கு முன்னதாக,ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார்,ஈஸ்ட்கோட் லேன் சாலையில் எதிர் திசையில் அதிவேகமாகச் சென்று கொண்டிருந்த ஒரு காரைக் கவனித்தனர். எனினும் அவர்கள் பின் தொடர்ந்த நிலையில் கார் மத்துடன் மீதி விபத்துள்ளானதாக கூறப்படுகின்றது.

சம்பவம் இடம்பெற்றபோது காரில் மூவர் பயணித்த நிலையில் ஒருவர் ஸ்தலத்தில் உயிரிழந்ததுடன் 25 வயது மற்றும் 20 வயதுகளில் உள்ள இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

இந்நிலையில் இளைனனின் மரணம் லண்டன் வாழ் புலம்பெயர் தமிழரிடையே துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நடிகையின் மரணம்!!

மத்திய பிரதேச மாநிலம் போபாலில், 33 வயதான மொடல் மற்றும் நடிகையான ட்விஷா சர்மா, சட்டத்தரணி சமர்த் சிங்குடன் திருமணமாகி வெறும் ஐந்து மாதங்களே ஆன நிலையில் கடந்த மே 12 அன்று அவரது வீட்டில் உயிரிழந்தார். இந்த மரணம் இந்தியாவில் பெரும் ஊடக பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அவரது கணவர் மற்றும் ஓய்வு பெற்ற நீதிபதியான மாமியார் கிரிபாலா சிங் ஆகியோர் வரதட்சணை கேட்டு தங்களை சித்திரவதை செய்ததாகவும், இது திட்டமிட்ட கொலை என்றும் ட்விஷாவின் பெற்றோர் குற்றம் சாட்டுகின்றனர்.

ஆனால், இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள கிரிபாலா சிங், ட்விஷாவிற்கு மனநலப் பிரச்சினைகள் இருந்ததாகவும், அவர் தனது உயிரை மாய்த்துக் கொண்டார் என்றும் கூறி வருகிறார்.

மேலும், ஊடகங்களில் ட்விஷாவின் குணம் குறித்து அவர் அவதூறாகப் பேசியது பொதுமக்களிடையே பெரும் கண்டனத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வழக்கில் ஓய்வு பெற்ற நீதிபதி கிரிபாலா சிங்கிற்கு முன்பிணை கிடைத்துள்ள போதிலும், தலைமறைவாக உள்ள அவரது மகன் சமர்த் சிங்கின் பிணை மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து, அவரை மே 23க்குள் சரணடைய உத்தரவிட்டுள்ளது.

முதற்கட்ட பிரேத பரிசோதனை அறிக்கை தூக்கிட்டதால் மரணம் என்று குறிப்பிட்டாலும், உடம்பில் காயங்கள் இருந்ததாகக் கூறியதால், குடும்பத்தினரின் கோரிக்கையை ஏற்று உயர் நீதிமன்றம் இரண்டாவது பிரேத பரிசோதனைக்கு உத்தரவிட்டுள்ளது.

உள்ளூர் பொலிஸார் ஆரம்பத்தில் இது உயிர்மாய்ப்பு என்று கூறி வழக்கை முடிவுக்குக் கொண்டு வர முயன்றதாகப் முறைப்பாடு எழுந்ததை அடுத்து, மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ் இந்த வழக்கின் விசாரணையை மத்திய புலனாய்வு அமைப்பிற்கு (CBI) மாற்றி உத்தரவிட்டுள்ளார்.