
64 வயது மணமகனுக்கும், 68 வயது மணமகளுக்கும் முதியோர் காப்பகத்தில் காதல் திருமணம் நடைபெற்றது.
இந்திய மாநிலமான ஆந்திர பிரதேசம், ராஜமுந்திரியில் சுவர்ணாந்திரா முதியோர் இல்லம் செயல்பட்டு வருகிறது. இங்கு, சுமார் 50-க்கும் மேற்பட்டோர் இருக்கின்றனர்.
இந்த முதியோர் இல்லத்தில் கடந்த 2 ஆண்டுகளாக நாராயணபுரி பகுதியை சேர்ந்த மூர்த்தி (64) என்பவர் தங்கி உள்ளார். இவருக்கு கை மற்றும் ஒரு கால் செயலிழந்துவிட்டது.
அதேபோல, அங்கு கடப்பா மாவட்டம், கம்முலகுண்டா பகுதியை சேர்ந்த ராமலட்சுமி (68) என்பவர் தங்கி உள்ளார். இவர், மூர்த்திக்கு தேவையான உதவிகளை செய்துவந்தார்.
அவருக்கு சாப்பிடவும், நடக்கவும், மருந்து மாத்திரைகளை தவறாமல் கொடுத்துள்ளார். இதனால், மூர்த்தி ஓரளவுக்கு குணமானார்.
இந்நிலையில், இருவரும் தனக்கு துணை அவசியம் என்று கருதி திருமணம் செய்து இணைந்து வாழ முடிவு எடுத்தனர். இதுகுறித்து முதியோர் காப்பக நிர்வாகியான ராம்பாபுவிடம் அவர்கள் கூறியுள்ளனர்.
இதில் இருவருக்கும் உறவினர்கள் யாரும் இல்லாததால் முதியோர் இல்லத்திலேயே திருமணம் செய்து வைக்க முடிவெடுத்தனர்.
அதன்பேரில் கடந்த 17-ம் திகதி அன்று மூர்த்தி, ராமலட்சுமி திருமணம் செய்து கொண்டனர். இதுகுறித்து தம்பதிகள் கூறுகையில், “வயதானவர்களுக்கு கண்டிப்பாக துணை இருக்க வேண்டும் என்பதை நாங்கள் உணர்ந்தோம்.
வயதை நாங்கள் தடையாக நினைக்கவில்லை. எங்களுடைய கடைசி காலங்கள் வரை பிரியாமல் இருப்போம்” என்றனர்.






















