64 வயது மணமகனுக்கும், 68 வயது மணமகளுக்கும் காதல் திருமணம்!!

64 வயது மணமகனுக்கும், 68 வயது மணமகளுக்கும் முதியோர் காப்பகத்தில் காதல் திருமணம் நடைபெற்றது.

இந்திய மாநிலமான ஆந்திர பிரதேசம், ராஜமுந்திரியில் சுவர்ணாந்திரா முதியோர் இல்லம் செயல்பட்டு வருகிறது. இங்கு, சுமார் 50-க்கும் மேற்பட்டோர் இருக்கின்றனர்.

இந்த முதியோர் இல்லத்தில் கடந்த 2 ஆண்டுகளாக நாராயணபுரி பகுதியை சேர்ந்த மூர்த்தி (64) என்பவர் தங்கி உள்ளார். இவருக்கு கை மற்றும் ஒரு கால் செயலிழந்துவிட்டது.

அதேபோல, அங்கு கடப்பா மாவட்டம், கம்முலகுண்டா பகுதியை சேர்ந்த ராமலட்சுமி (68) என்பவர் தங்கி உள்ளார். இவர், மூர்த்திக்கு தேவையான உதவிகளை செய்துவந்தார்.

அவருக்கு சாப்பிடவும், நடக்கவும், மருந்து மாத்திரைகளை தவறாமல் கொடுத்துள்ளார். இதனால், மூர்த்தி ஓரளவுக்கு குணமானார்.

இந்நிலையில், இருவரும் தனக்கு துணை அவசியம் என்று கருதி திருமணம் செய்து இணைந்து வாழ முடிவு எடுத்தனர். இதுகுறித்து முதியோர் காப்பக நிர்வாகியான ராம்பாபுவிடம் அவர்கள் கூறியுள்ளனர்.

இதில் இருவருக்கும் உறவினர்கள் யாரும் இல்லாததால் முதியோர் இல்லத்திலேயே திருமணம் செய்து வைக்க முடிவெடுத்தனர்.

அதன்பேரில் கடந்த 17-ம் திகதி அன்று மூர்த்தி, ராமலட்சுமி திருமணம் செய்து கொண்டனர். இதுகுறித்து தம்பதிகள் கூறுகையில், “வயதானவர்களுக்கு கண்டிப்பாக துணை இருக்க வேண்டும் என்பதை நாங்கள் உணர்ந்தோம்.

வயதை நாங்கள் தடையாக நினைக்கவில்லை. எங்களுடைய கடைசி காலங்கள் வரை பிரியாமல் இருப்போம்” என்றனர்.

கேரளாவில் காதலனுக்கு விஷம் கொடுத்து கொன்ற காதலி… மரண தண்டனை அறிவித்ததும் மௌனம்!!

கேரளாவில் காதலனை விஷம் கொடுத்து கொன்ற கேரள பெண்ணுக்கு மரண தண்டனை விதித்து நெய்யான்றின்கரை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக மாவட்டமான கன்னியாகுமாரியைச் சேர்ந்த இளம்பெண் கரீஸ்மா. அதேபோல, திருவனந்தபுரம் பாரசாலா பகுதியைச் சேர்ந்தவர் ஷரோன் ராஜ். கடந்த 2021-ம் ஆண்டில் முதுநிலை பட்டப்படிப்பு படித்த கரீஸ்மா, இளநிலை 3-ம் ஆண்டு படித்த ஷரோன் ராஜ் என்ற மாணவரை காதலித்து வந்துள்ளார்.

இதையடுத்து, கரீஸ்மாவுக்கு அவரது பெற்றோர் ராணுவ அதிகாரி மாப்பிள்ளையை நிச்சயம் செய்தனர். அதற்கு அவரும் சம்மதித்தார்.

பின்னர், காதலன் ஷரோன் ராஜ் உடனான தொடர்பை துண்டிக்க வேண்டும் என்று நினைத்த கரீஸ்மா, பல மாத்திரைகளை குளிர்பானத்தில் கலந்து கொடுத்து அவரை கொலை செய்ய வேண்டும் என்று நினைத்துள்ளார். ஆனால், அது அவருக்கு பலன் அளிக்கவில்லை.

பின்னர், கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் 14-ம் திகதி ஷரொன் ராஜை வீட்டுக்கு அழைத்த க்ரீஷ்மா, அவருக்கு மூலிகை விஷங்களை கலந்து ஆயூர்வேத பானம் என குடிக்க வைத்தார்.

பின்னர், வீட்டிற்கு சென்றதும் இரவு பலமுறை ஷரொன் ராஜ் வாந்தி எடுத்துள்ளார். இதையடுத்து அவர் திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சில நாட்களிலே உடல் பாகங்கள் செயல் இழந்து அவர் உயிரிழந்தார்.

பின்னர், அவரது குடும்பம் கரீஸ்மா மீது புகார் அளித்தது. அதன்படி நடத்தப்பட்ட விசாரணையில் கரீஷ்மா விஷம் கொடுத்தது உறுதியானது.

இதையடுத்து, இந்த வழக்கில் கரீஸ்மா கொலை குற்றவாளி என கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இன்று கரீஸ்மாவுக்கு மரண தண்டனை விதித்து நெய்யான்றின்கரை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அப்போது, நீதிபதி தீர்ப்பை வாசிக்க தொடங்கியதும் அழ தொடங்கிய க்ரீஷ்மா, மரண தண்டனையை அறிவிக்கவும் அழுகையை நிறுத்தி மௌனமானார்.

யாழ் சாரதிக்கு மயக்க மருந்து கொடுத்து கொள்ளை : வாடகைக்கு வந்தவர்களால் அதிர்ச்சி!!

யாழ்ப்பாணவாகன சாரதிக்கு மயக்க மருந்து கொடுத்து, சாரதியின் 05 பவுண் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

யாழ் . நகர் பகுதியில் கன்ரர் ரக வாகனத்தில் வாடகை சேவையில் ஈடுபட்டு வரும் சாரதி ஒருவரின் நகைகளே நேற்றைய தினம் (19) கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

வாகன வாடகை தரிப்பிடத்திற்கு வந்த இருவர் , கிளிநொச்சி பகுதியில் இருந்து பொருட்களை ஏற்றி வர வேண்டும் என கூறி வாகனத்தை வாடகைக்கு அமர்த்தி கிளிநொச்சி நோக்கி பயணித்துள்ளனர்.

இதன்போது பரந்தன் பகுதியில், வீதியோரமாக வாகனத்தை நிறுத்த கோரி , அப்பகுதியில் உள்ள கடை ஒன்றில் குளிர்பானம் வாங்கி, சாரதிக்கு குடிப்பதற்கு வழங்கியுள்ளனர்.

அதனை குடித்தவர் சிறிது நேரத்தில் மயக்கமடைந்துள்ளார். வீதியோரமாக நீண்ட நேரமாக வாகனத்தில் சாரதி அசைவின்றி காணப்பட்டுள்ளார்.

இதனை வீதியால் சென்றவர்கள் அவதானித்து , சாரதியின் அருகில் சென்று பார்த்த போது , சாரதி மயக்கத்தில் இருப்பதனை அறிந்து உடனடியாக அவரை மீட்டு கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதித்தனர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னரே சாரதி சுயநினைவுக்கு வந்துள்ளார்.

அதன் பின்னரே தனது நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதை அறிந்து , சம்பவம் தொடர்பில், பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளதாக தெரியவருகின்றது.

யாழ்ப்பாணத்தில் திமிங்கலத்தின் வாந்தியை வைத்திருந்தவர் கைது!!

யாழ்ப்பாணத்தில் சுமார் 50 இலட்சம் ரூபா பெறுமதியான ஒரு கிலோ அம்பருடன்( திமிங்கலத்தின் வாந்தி) மீனவர் ஒருவர் பொலிஸாரால் நேற்று (19) கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட் சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவத்தில் யாழ்ப்பாணம் குருநகரைச் சேர்ந்த 58 வயதுடைய மீனவர் ஒருவரே பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் தனது வீட்டில் அம்பர் தொகையை மறைத்து வைத்துள்ள நிலையில், அதனை நீர்கொழும்பு பகுதியில் உள்ள வர்த்தகர் ஒருவருக்கு விற்பனை செய்ய தயாராக இருந்த போது பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகின்றது.

அமெரிக்காவில் மீண்டும் செயற்படத் தொடங்கிய டிக் டொக்!!

அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்கவுள்ள டொனால்ட் ட்ரம்பின் (Donald Trump) அறிவிப்பைத் தொடர்ந்து, டிக் டொக் (TikTok) செயலி அமெரிக்க பயனர்களுக்கு அதன் சேவைகளை மீண்டும் தொடங்கியுள்ளது,

ட்ரம்ப் பதவியேற்ற பின் குறுகிய வீடியோ பகிர்வு பயன்பாட்டுக்காக மீண்டும் ஒன்லைனில் அனுமதிக்கப்படும் என்று அறிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தேசியப் பாதுகாப்பு காரணங்களை மேற்கோள் காட்டி, சீனாவின் பைட்டான்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான டிக்டொக் செயலியை 270 நாட்களுக்குள் விற்பனை செய்யும் சட்டத்தை இயற்றினார்.

அவ்வாறு விற்பனை செய்யத் தவறினால், டிக்டொக் செயலியை அப்பிள் மற்றும் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்க உத்தரவிடப்படும் என்று சட்டத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அமெரிக்காவில் டிக்டொக் செயலிக்குக் கிட்டத்தட்ட 17 கோடி கணக்குகள் உள்ள நிலையில், நேற்று (19) முதல் குறித்த செயலிக்கான தடை நடைமுறைக்கு வந்தது.

இதனையடுத்து, டிக்டொக் நிறுவனம் தற்காலிகமாக அதன் சேவையை நிறுத்துவதாக அறிவித்தது.

இதன்படி அப்பிள் ஐ ஸ்டோர் மற்றும் கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து டிக்டொக் செயலி நீக்கப்பட்டது.இந்தநிலையிலேயே, அமெரிக்காவில் டிக்டொக் மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளது.

இன்று அமெரிக்க ஜனாதிபதியாகப் பதவியேற்கவுள்ள டொனால்ட் ட்ரம்ப், டிக்டொக் செயலிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குவதாக உறுதியளித்ததையடுத்து, சேவையை மீண்டும் தொடங்குவதாக டிக்டொக் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

பதவியேற்றவுடன் அதிரடி மாற்றங்கள் : உத்தரவுகளில் கையெழுத்திடவிருக்கும் டிரம்ப்!!

அமெரிக்காவின் புதிய அதிபராக டொனால்ட் டிரம்ப் (Donald Trump) இன்று (20) பதவியேற்கவுள்ள நிலையில் அதிபராகப் பொறுப்பேற்றவுடன் முதல் நாளிலேயே பல உத்தரவுகளில் டிரம்ப் (Donald Trump) கையெழுத்திட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகின்றது. அந்தவகையில் ,

நாடு கடத்துதல் திட்டம்

அமெரிக்க வரலாற்றிலேயே ஆகப்பெரிய நாடு கடத்துதல் திட்டத்தை அறிமுகம் செய்யவிருப்பதாக டிரம்ப் உறுதி கூறியிருந்தார். அமெரிக்காவில் புகலிடம் தேடுவோர், தெரிவிக்கப்படாத குடியேறிகள் எனச் சுமார் 11 மில்லியன் பேர் உள்ளனர்.

அவர்களில் 500,000 பேர் குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்கள். புகலிடம் தேடுவோரைப் பாதுகாக்கும் சட்ட நடைமுறைகளை டிரம்ப் முடக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எல்லைகளில் அவசர நிலை அறிவிப்பு

வெளிநாட்டைச் சேர்ந்த குடியேறிகள் நாட்டிற்குள் நுழையவோ தங்கவோ தடை விதிக்க அமெரிக்க எல்லைகளில் அவசரநிலையை அறிவிக்க டிரம்ப் திட்டமிட்டுள்ளார்.

அதற்கு Title 42 எனும் சட்டத்தை நடைமுறைபடுத்தலாம். அந்தச் சட்டம் பொதுச் சுகாதார அவசரநிலையைக் குறிக்கும். ஆனால் அதை அதிபரால் அறிவிக்கமுடியாது. நோய்த்தடுப்பு, கட்டுப்பாட்டு நிலையத்தால் மட்டுமே அதைப் பிறப்பிக்க முடியும்.

வட அமெரிக்காவுக்கு வரி விதித்தல்

கனடா, மெக்சிகோ ஆகியவற்றிலிருந்து வரும் இறக்குமதிகளுக்கு 25 விழுக்காடு வரி விதிக்கவிருப்பதாக டிரம்ப் கூறியிருந்தார். போதைப்பொருள் கடத்தலை அவர் காரணமாகச் சுட்டினார். இதனால் வட அமெரிக்காவின் வர்த்தகம் பெரிதும் பாதிக்கப்படலாம்.

குற்றவாளிகளுக்குப் பொது மன்னிப்பு

அதிபரானவுடன் முதல் 9 நிமிடங்களில் வழக்குகளை ஆராய்ந்து பொதுமன்னிப்பு வழங்கவிருப்பதாய் டிரம்ப் தெரிவித்திருந்தார். அமெரிக்க வரலாற்றிலேயே ஆக அதிகமானோருக்கு ஒரே நேரத்தில் பொதுமன்னிப்பு வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எரிசக்தித்துறையில் புரட்சி

உடனடியாக தேசிய எரிசக்தி அவசரநிலை அறிவிக்கப்படும். புதிய திட்டங்களுக்கு உடனடியாக அனுமதி வழங்கப்படும்.

குடியுரிமை வழங்குவதில் மாற்றம்

அமெரிக்கக் குடியுரிமை இல்லாத தம்பதிக்குப் பிறக்கும் குழந்தைக்கு அமெரிக்கக் குடியுரிமை வழங்கும் சட்டத்தை முடிவுக்குக் கொண்டுவரும் உத்தரவில் கையெழுத்திட டிரம்ப் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

பிரிட்டிஷ் பெண்ணொருவரின் அட்டையை திருடி மோசடி!!

பிரிட்டிஷ் பெண்ணொருவரின் வங்கி அட்டையைக் கொள்ளையடித்து. ஹட்டன் நகரிலுள்ள சில வர்த்தக நிலையங்களில் இரண்டரை இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்களை கொள்வனவு செய்துள்ள சந்தேகநபர் ஹட்டன் பொலிஸாரால் செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் புத்தளம் பகுதியைச் சேர்ந்த 22 வயது நபரொருவரே நேற்று (19) கைது இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கண்டியிலிருந்து எல்ல நோக்கி சென்ற ரயிலில் பயணித்த பிரிட்டிஷ் பெண்ணின் வங்கி அட்டையை, ஹட்டன் மற்றும் தலவாக்கலை ரயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் வைத்தே இவர் கொள்ளையடித்துள்ளார்.

கொள்ளையிட்ட வங்கி அட்டை ஊடாக ஹட்டன் நகரில் தங்கை நகை, தொலைபேசி, ஆடை உள்ளிட்டவற்றை கொள்வனவு செய்துள்ளார். அதோடு தங்க நகையை ஹட்டனிலுள்ள தனியார் அடகு பிடிக்கும் நிலையமொன்றில் அடகு வைத்து 78 ஆயிரம் ரூபா பெற்றுள்ளார்.

தனது வங்கி அட்டை களவாடப்பட்டுள்ளமை தொடர்பில் எல்ல சுற்றுலாப் பொலிஸாரிடம் குறித்த பெண் முறையிட்ட நிலையில் அது தொடர்பில் ஹட்டன் பொலிஸாருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து விசாரணை வேட்டையில் இறங்கிய ஹட்டன் பொலிஸார், வாடகை வாகனமொன்றில் எல்ல நோக்கி பயணமாக தயாராகிக்கொண்டிருந்த சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.

களவாடிய வங்கி அட்டையில் இருந்து வாங்கிய பொருட்களையும் மீட்டனர். பிரிட்டிஷ் பெண்ணை ஹட்டன் வரவழைத்து, வங்கி அட்டையை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்ததுடன் , கடைகளில் வாங்கிய பொருட்கள் மீள வழங்கப்பட்டு அதற்குரிய பணமும் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் கைதான சந்தேக நபரை நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதிக சத்தத்துடன் பாடல் ஒலிபரப்பியவரை அடித்துக் கொன்ற அயலவர்!!

அதிக சத்தத்துடன் பாடல் கேட்ட ஒருவரை அடித்துக் கொலை செய்த சம்பவம் ஒன்று இந்தியாவில் பதிவாகியுள்ளது. இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தில் இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இரு வீட்டாருக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதமே இறுதியில் கொலையில் முடிந்துள்ளது. அதிக ஒலியை எழுப்பிய விதமாக பாடல் கேட்ட சம்பவம் தொடர்பில் ஆரம்பத்தில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

பின்னர் காவல்துறையிலும் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது. முறைப்பாட்டைத் தொடர்ந்து மீண்டும் ஏற்பட்ட வாக்குவாத்தின் போதே நபர் ஒருவர் மற்றுமொருவரை தாக்கியதில் இந்த மரணம் நிகழ்ந்துள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

அதிகரிக்கும் மழைவீழ்ச்சி வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிவிப்பு!!

நாட்டின் சில பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இன்று (20) வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் மழையுடன் கூடிய காலநிலை மேலும் தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் சில இடங்களில் 150 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வட மாகாணத்திலும் மாத்தளை, நுவரெலியா, பொலன்னறுவை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏனைய பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும். மின்னல் தாக்கத்தால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க பொதுமக்கள் போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

கிளிநொச்சியில் பாடசாலை மாணவி பரிதாபமாக உயிரிழப்பு!!

கிளிநொச்சி பகுதியில் பாடசாலை மாணவி புற்று நோய் காரணமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

இராமநாதபுரம் மகா வித்தியாலயத்தில் 11 ஆம் தரத்தில் கல்வி கற்று வரும் குறித்த மாணவி புற்று நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார் . நேற்று முன்தினம் (17) சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இராமநாதபுரம் பகுதியில் பிரபல ஆசிரியர் ஒருவரின் புதல்வியான விஜயகுமார் சஞ்சிகா 15 அகவையுடைய மாணவியை இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார். இந்நிலையில் மாணவியின் மரணம் அப்பகுதியில் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

வவுனியாவில் போலி ஆவணம் மூலம் அரச காணியை விற்பனை செய்து மோசடி : அரச உத்தியோகத்தர் ஒருவர் கைது!!

அரச காணி ஒன்றினை போலி ஆவணம் தயாரித்து 22 மில்லியன் ரூபாய்க்கு விற்னை செய்த குற்றச்சாட்டில் வவுனியா மாவட்ட செயலகத்தில் பணியாற்றும் உத்தியோகத்தர் ஒருவர் குற்றப் புலனாய்வுப் பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

வவுனியா, பம்பைமடு பகுதியில் உள்ள அரச காணி ஒன்றினை போலி ஆவணங்கள் மூலம் 22 மில்லியன் ரூபாய்க்கு கடந்த சில வருடங்களுக்கு முன்னர் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த தகவலுக்கமைய விசாரணைகள் இடம்பெற்றிருந்தன.

இந்நிலையில் குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர் என வவுனியா மாவட்ட செயலகத்தில் பணியாற்றும் உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளின் பின் குறித்த உத்தியோகத்தரை நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் பல பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை!!

கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து அரச பாடசாலைகளுக்கும் நாளை(20.01) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.

நிலவும் மோசமான வானிலை காரணமாக இவ்வாறு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்கிடையில், இந்த நாட்களில் கிழக்கு மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் பரீட்சைகள் டைபெறுவதால்,

நாளை (20.01.2025) நடைபெறவிருந்த தேர்வு பாடங்கள் சனிக்கிழமை (ஜனவரி 25) நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா மற்றும் மன்னார் உட்பட பல மாவட்டகளுக்கு சிவப்பு எச்சரிக்கை!!

நாட்டில் உள்ள கிழக்கு, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை, மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் இன்றையதினம் (19.01.2025) பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் ‘சிவப்பு’ எச்சரிக்கை விடுத்துள்ளது.

வடகிழக்கு பருவமழை காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில் தீவில் நிலவும் மழை நிலை மேலும் தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கிழக்கு, ஊவா, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் சில இடங்களில் சுமார் 150 மில்லிமீற்றர் அளவில் அதிக பலத்த மழை பெய்யக்கூடும். மற்ற இடங்களில் சில இடங்களில் சுமார் 75 மி.மீ அளவில் கனமழை பெய்யக்கூடும் என்றும் அது மேலும் கூறியுள்ளது.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் அன்புடன் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

குருணாகல் – கொழும்பு வீதியில் விபத்து ; பலர் காயம்!!

குருணாகல் – கொழும்பு பிரதான வீதி பொல்கஹவளை நகரத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் பலர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து நேற்று (17) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ் ஒன்று வீதியில் பயணித்த தனியார் பஸ் ஒன்றை கடந்து முன்னோக்கிச் செல்ல முயன்ற போது எதிர்த்திசையில் பயணித்த காருடன் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தின் போது இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ்ஸில் பயணித்த பலர் காயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உணவகம் இடிந்து வீழ்ந்து விபத்து : பாடசாலை மாணவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு!!

ஹட்டன், கினிகத்தேன பகுதியிலுள்ள உணவகம் ஒன்று இடிந்து விழுந்ததில், அங்கு சாப்பிட்டுக் கொண்டிருந்த 6 பாடசாலை மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.

இன்று காலை ஏற்பட்ட விபத்தில் காயமடைந்த பாடசாலை மாணவர்கள் கினிகத்தேனை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கினிகத்தேன நகருக்கு ஒரு பயிற்சி வகுப்பில் பங்கேற்க சென்ற மாணவர்கள், உணவு பெறுவதற்காக குறித்த உணவகத்திற்குச் சென்றுள்ளனர்.

மாணவர்கள் அங்கு சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, ​​அவர்கள் நின்ற தளம் இடிந்து சுமார் 15 அடி கீழே விழுந்ததாக தெரிவிக்கப்பட்டது. குறித்த உணவகத்தின் பாதுகாப்பற்ற கட்டுமானமே விபத்துக்குக் காரணம் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து கினிகத்தேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் டிக் டொக் செயலிக்கு தடை!!

டிக் டொக் (Tik Tok) செயலிக்கு தடை விதிப்பதற்கு அமெரிக்காவின் (US) உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. மேலும், இத்தடையை நிறைவேற்ற கூடாது என கோரி உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனுவும் நிராகரிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனிற்கு பிறகு, தற்போது ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப் டிக்டொக் குறித்து எவ்வாறான நடவடிக்கை எடுப்பார் என்பது குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த தடை குறித்து தீர்மானம் எடுக்கும் பொறுப்பினை புதிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிடம் ஒப்படைப்பதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. அமெரிக்காவில், டிக்டாக் செயலிக்கு கிட்டத்தட்ட 17 கோடி கணக்குகள் பாவனையில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.