தூத்துக்குடி மாவட்டம் எட்டயாபுரத்தில் உள்ள வெம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுக ரெட்டியார். இவருக்கு சிவமுருகன், ராமகிருஷ்ணன் என்று இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் சிவமுருகன் ராஜஸ்தானில் பணியாற்றி வருகிறார். ராமகிருஷ்ணன் திருமணமாகி தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் அமெரிக்காவில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் ராமகிருஷ்ணன் அமெரிக்கா குடியுரிமை பெற விண்ணப்பம் செய்வதற்கு பிறப்பு சான்றிதழ் தேவைப்பட்டுள்ளது. ஆனால் ஆறுமுகரெட்டியார் அவரின் பிறப்பை பதிவு செய்யவில்லை.
இதன் காரணமாக அவர் தன் மகனுக்கு பிறப்புச் சான்றிதழ் கேட்டு கடந்த 9 மாதங்களுக்கு முன்பு கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுலகத்தில் விண்ணப்பம் செய்துள்ளார். இதையடுத்து கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர், எட்டயபுரம் தாசில்தார் என அனைவரும் விசாரணை நடத்தி பிறப்புச்சான்றிதழ் கொடுக்க எவ்வித தடையும் இல்லை என்று கூறி சான்றிதளித்துள்ளனர்.
இருப்பினும் கோவில்பட்டி கோட்டாட்சியர் அனிதா பிறப்பு சான்றிதழ் வழங்காமல் காலம் தாழ்த்து வந்துள்ளார். அவரிடம் அனைத்து சான்றிதழ்களின் நகல் கொடுத்த பின்பும் தொடர்ந்து காலம் தாழ்த்து வருகிறார்.
இந்த கால தாமதத்தால் ராமகிருஷ்ணனுக்கு அமெரிக்காவில் குடியுரிமை கிடைக்காத நிலை உள்ளது. அதுமட்டுமின்றி சமீபத்தில் அமெரிக்கா விசா வழங்கும் விவகாரத்தில் கடும் கெடுபிடி விதித்துள்ளதால், அவருக்கு வேலையும் போகும் அபாயம் உள்ளது.
அப்படி தன் மகனுக்கு வேலை போனால் மகன் மற்றும் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும், எனவே உடனடியாக பிறப்புச் சான்றிதழை வழங்க வேண்டும், அப்படி இல்லையெனில் சான்றதழ் வழங்குவதற்கு தாமத்தப்படுத்திவதற்கான காரணத்தை தெரிவிக்க வேண்டும்.
இப்படி எதுவும் கூறாமல் அலைக்கழிப்பதற்கு எங்களை கருணை கொலை செய்யும் படி வலியுறுத்தி ஆறுமுக ரெட்டியார் மற்றும் அவரது மனைவி சிந்தாமணி ஆகியோர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.






