வவுனியா நகரப்பகுதியில் வீதியினை முற்றுகையிட்ட வியாபாரிகள் : தீக்குளிப்போம் எனவும் மிரட்டல்!!

1345

 

வீதியினை முற்றுகையிட்ட வியாபாரிகள்

வவுனியா தினசரி சந்தை வீதியில் இன்று (22.01.2019) காலை 10 மணியளவில் நகரசபையினருக்கும் நடைபாதை வியாபாரிகளுக்கு இடையே ஏற்பட்ட முறுகல் நிலையினால் அவ்விடத்தில் சற்று பதட்ட நிலை காணப்பட்டது.

வவுனியா நகரப் பகுதியில் உள்ள நடைபாதை வியாபாரங்களை அகற்றும் நடவடிக்கைகளை வவுனியா நகரசபை முன்னெடுத்தனர். இதன் ஒரு கட்டமாக சுற்றுவட்ட வீதியில் உள்ள நடைபாதை வியாபார பொருட்களை அகற்ற நகரசபை ஊழியர்கள் வாகனத்தினை எடுத்துச் சென்றனர்.

இதன் போது நகரசபையினருக்கும் நடைபாதை வியாபாரிகளுக்கும் இடையே பல்வேறு கருத்து முரண்பாடுகள் இடம்பெற்றன. இதனையடுத்து நகரசபை வாகனத்தினை நடைபாதை வியாபாரிகள் மறித்து அதற்கு முன்பாக அமர்ந்து எமது பொருட்களை அகற்றினால் தீக்குளிப்போம் என தெரிவித்து எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதன் காரணமாக தினசரி சந்தை வீதிக்கான போக்குவரத்து பாதிப்படைந்தது. அதன் பின்னர் அவ்விடத்தில் போக்குவரத்து பொலிஸார் குவிக்கப்பட்டனர்.

சிறிது நேரத்தின் பின்னர் வவுனியா நகரசபை ஊழியர்களுக்கும் நடைபாதை வியாபாரிகளுக்கும் இடையே இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் நடைபாதை வியாபாரிகளின் ஒத்துழைப்புடன் நடைபாதையில் வியாபாரத்திற்காக வைக்கப்பட்டிருந்த மரக்கறிகள், பொருட்களை நகரசபையினர் ஏற்றிச்சென்றனர்.

இந்த விடயம் குறித்து நகரசபை ஊழியர்களிடம் வினவிய போது, அண்மை காலமாக நடை பாதையில் வியாபாரம் மேற்கொண்டு வருபவர்களை அங்கிருந்து வெளியேறுமாறு முன்னறிவித்தல் வழங்கியிருந்தோம்.

நடைபாதையில் வியாபாரம் மேற்கொள்பவர்களுக்கு நகரசபையினால் ஒதுக்கப்பட்ட இடங்களில் அவர்கள் தமது வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். மாறாக நடைபாதையில் வியாபாரம் மேற்கொள்ளப்படும் போது பொதுமக்கள் பெரிதும் அசௌகரிங்களுக்குள்ளாகி வருகின்றமை எமது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதையடுத்து இந் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தனர்.

நடைபாதை வியாபாரிகள் கருத்து தெரிவிக்கையில், நகர பள்ளிவாசலுக்கு முன்பாக நடைபாதையில் வியாபாரம் மேற்கொள்ளும் வியாபாரிகளை அகற்ற எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. அவர்களுக்கு எவ்விதமான தடைகளும் விதிக்கப்படவில்லை. அவர்கள் மீது சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இவ்வாறு நகரசபையினர் பள்ளிவாசலுக்கு முன்பாக வியாபாரம் மேற்கொள்பவர்களுக்கு ஒரு சட்டமும், இலுப்பையடியில் வியாபாரம் மேற்கொள்ளும் எமக்கு ஒரு சட்டத்ததையும் நடைமுறைப்படுத்தி வருகின்றனர்.

எதிர்காலத்தில் பள்ளிவாசலுக்கு முன்பாக உள்ள நடைபாதையில் வியாபாரம் மேற்கொள்பவர்களை அகற்றும் பட்சத்தில் அல்லது அவ்விடத்தில் நடைபாதையில் வியாபாரம் மேற்கொள்வதற்கு தடை செய்யும் பட்சத்தில் நாங்களும் இலுப்பையடியில் நடைபாதையில் வியாபாரம் மேற்கொள்வதை நிறுத்திக்கொள்வதாக குறிப்பிட்டுள்ளனர்.