வவுனியா சாளம்பைக்குளம் குப்பைமேட்டினால் வெடித்தது போராட்டம் : மூடப்பட்ட A9 வீதி!!

739

 

குப்பைமேட்டினால் வெடித்தது போராட்டம்

வவுனியா பிரதேசத்தின் கழிவுகள் பம்பைமடுவில் கொட்டப்படுகின்றமையால் தமது கிராமம் பல்வேறு பாதிப்புகளை சந்திப்பதாக தெரிவித்து சாளம்பைகுளத்தில் வசிக்கும் மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

இன்று (29.01.2019) காலை 7 மணியளவில் குப்பைமேட்டிற்கு செல்லும் பிரதான வாயிலை மறித்த பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் கருத்து தெரிவிக்கையில்,

நீண்டகாலமாக இப்பகுதியில் கழிவுகள் கொட்டப்படுகின்றது. இதனால் எமது கிராமத்தில் வசிக்க முடியாத நிலை காணப்படுகின்றது. துர்நாற்றம் வீசிவருவதுடன் நுளம்புகளின் தொல்லைகள் அதிகமாக காணப்படுகின்றன. எனவே குறித்த குப்பைமேடு அகற்றப்படாவிடில் போராட்டத்தை நிறுத்தமாட்டோம் என தெரிவித்ததுடன் குப்பைகளை ஏற்றிவந்த வாகனங்களையும் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை.

சம்பவ இடத்திற்கு மாவட்ட மேலதிக அரசஅதிபர் தி.திரேஸ்குமார் விஜயம் செய்திருந்ததுடன் விடயம் தொடர்பாக ஆர்பாட்டக்காரர்களுடன் பேசியிருந்தார். குறித்த குப்பைமேட்டை அகற்றுவது தொடர்பாக இன்று மாலை அனைத்து தரப்புகளையும் உள்ளடக்கிய வகையில் கலந்துரையாடல் ஒன்று நடைபெறவுள்ளது. அதில் சரியான தீர்வு ஒன்று வழங்கப்படும் எனவே போராட்டத்தை கைவிடுமாறு கேரியிருந்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஆர்ப்பாட்டகாரர்கள் கலந்துரையாடலை முடித்துவிட்டு தாங்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் பகுதிக்கு வருகை தந்து முடிவை கூறுமாறும் தாங்கள் எதிர்பார்த்த தீர்வு கிடைத்தால் போராட்டத்தை கைவிடுவதாகவும் தெரிவித்தனர்.

குறித்த போராட்டம் காரணமாக மாவட்டத்தின் கழிவகற்றல் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மாவட்டத்தின் கழிவுகளை அகற்றும் வாகனங்கள் அதனை கொட்டமுடியாமல் திரும்பிச் சென்றதுடன், வவுனியா மாவட்ட செயலகத்திற்கு முன்பாக அனைத்து வாகனங்களையும் நிறுத்திவைத்துள்ளதுடன், நகரசபை தவிசாளர், பிரதேசசபை தலைவர், உறுப்பினர்கள் மற்றும் அரச அதிபருடன் கலந்துரையாடலை முன்னெடுத்து வருகின்றனர்.

நகரசபையின் வாகனங்கள் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக ஏ9 வீதியை மறித்து நிறுத்தப்பட்டுள்ளதால் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதுடன் மாற்றுப்பாதையினூடாக வாகனங்களை செல்லுமாறு போக்குவரத்து பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

குறித்த பகுதியில் கழிவகற்றல் செயற்பாட்டினை பல வருட காலமாக மேற்கொண்டு வருகின்றோம். அப் பகுதியில் தற்போது குடியேறியவர்கள் குப்பை கொட்டும் பகுதியினை மாற்றுமாறு தெரிவிப்பது நியாயமான கோரிக்கையல்ல. குப்பை அகற்றல் தொடர்பான இந்த பிரச்சனைக்கு சரியான தீர்வு கிடைக்கப்பெறும் பட்சத்திலியே நாங்களும் வவுனியா நகரசபையினரும் குப்பைகளை அகற்ற வேண்டிய துப்பாக்கிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

ஆகவே பொதுமக்களிடம் மன்னிப்பு கோருகின்றோம். இந்த பிரச்சனை முடியும் வரை நாங்கள் குப்பைகளை அகற்ற முடியாதுள்ளது. அத்துடன் குறித்த பகுதியில் உள்ள இராணுவ முகாமினை அவ்விடத்திலிருந்து அகற்றித்தரும் பட்சத்தில் அங்கு கழிவகற்றல் செயற்பாடுகளை முன்னெடுக்க முடியுமென வவுனியா தெற்கு பிரதேச சபை தவிசாளர் து.நடராஜசிங்கம் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.