வவுனியாவில் இ.போ.ச ஊழியர்கள் உண்ணாவிரதப் போராட்டம்!!

653

இலங்கை போக்குவரத்து சபை வவுனியா சாலை 21 ஊழியர்களுக்கு கடந்த சில நாட்களுக்கு முன் வழங்கப்பட்ட முறைகேடான பதவி உயர்வினை இரத்து செய்யக்கோரி இ.போ.ச வவுனியா சாலை ஊழியர்கள் சாலைக்கு முன்பாக இன்று (20.02.2019) அதிகாலை 5.30 மணி தொடக்கம் அடையாள உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இ.போ.ச வவுனியா சாலை ஊழியர்கள் கருத்து தெரிவிக்கையில்,

கடந்த சனிக்கிழமையன்று வவுனியா சாலையின் 21ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அப் பதவி உயர்வானது எந்தவித தகுதி தராதம் பாராது அரசியல் ரீதியில் முறைகேடான ரீதியில் வழங்கப்பட்டுள்ளது.

அதில் எமது சாலையினை சேர்ந்த நீண்டகாலமாக 20 , 25 வருடங்களாக பணிபுரியும் எவரும் உள்வாக்கப்படவில்லை. அதேவேளை நாளாந்தம் 750 ரூபா ஊதியம் பெறும் ஊழியர்கள் நிரந்தரம் ஆக்கப்படவில்லை , ஆயிரம் ரூபா ஊதியம் பெறுபவர்கள் நிரந்தரம் ஆக்கப்படவில்லை.

இந்த பதவி உயர்வினை அமைச்சர் ரிசாட் பதியூதின் அவர்களின் சகோதரருடன் ஐக்கிய தேசிய கட்சி தொழிற்சங்கத்தின் ஒரு சிலரினால் வழங்கி வைக்கப்பட்டது.

இதில் ஐக்கிய தேசிய கட்சி தொழிற்சங்கத்தினை சார்ந்தே வழங்கப்பட்டுள்ளதுடன் தற்போது சட்டவிரோதமாக தமது தொழிற்சங்கத்திற்கு தொழிலாளர்களை பதவி உயர்வு தருவதாக இணைத்துக்கொண்டிருக்கின்றனர்.

இதனை எதிர்த்து நாங்கள் 15 ஊழியர்கள் ஒருநாள் அடையாள உண்ணாவிரத்தினை மேற்கொண்டு வருகின்றோம்.

முறைகேடான முறையில் வழங்கப்பட்ட பதவி உயர்வுகள் இரத்து செய்யப்பட்டு முறையான நேர்முக பரீட்சை நடத்தப்பட்டு பதவி உயர்வு வழங்கப்படுமாயின் ஏற்றுக்கொள்வோம். இல்லையேனில் இன்றிலிருந்து 14 நாட்களின் பின் சாகும் வரை உண்ணாவிரத்தில் ஈடுபடவுள்ளோம் என தெரிவித்தனர்.

முறைகேடாக பதவி உயர்வுகளை இரத்து செய் , தகுதி சேவைக்காலம், கல்வித்தகமை பாராது பதவி உயர்வு வழங்க முடியுமா?, தொழில் சங்கமே சாராயம் வாங்கிக் குடித்து சலுகைகளை அள்ளிக் கொடுக்காதே, 750 ரூபா நாளாந்த ஊதியம் பெறும் தொழிலாளர்களை நிரந்தரமாக்கு ,

இ.போ.ச பதவி உயர்வில் அரசியல் நுழைந்தது எப்படி?, 1000 ரூபா ஒப்பந்த சாரதி காப்பாளர்களை நிரந்தரமாக்கு, கௌரவ ஜனாதிபதி அவர்களே முறைகேடாக வழங்கப்பட்ட பதவி உயர்வுகளை இரத்து செய்யுங்கள், பாரிய குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு பதவி உயர்வுகள் வழங்கியது எப்படி? போன்ற பல்வேறு வாசகங்களை தாங்கிய பாதாதைகள் போராட்ட இடத்தில் தொங்க விடப்பட்டுள்ளன.