வவுனியாவில் இடம்பெற்ற விபத்து..
வவுனியா யாழ் வீதி, சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் முன்பாகவுள்ள வீதிக் கடவையூடாக கடக்க முற்பட்ட தாயும் மகனையும் வீதியில் சென்ற பட்டரக வாகனம் மோதித்தள்ளியதில் 2 வயது சிறுவன் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன்,
தாய் தலையிலும் கால்களிலும் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ்விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
இன்று பிற்பகல் செட்டிகுளம் மெனிக்பாம் பகுதியில் தாயின் சகோதரனுடன் தங்கியிருந்து கல்வி கற்றுவந்த தனது மகனை தனது சொந்த இடமான நெடுங்கேணி ஊஞ்சல்கட்டிக்கு அழைத்துச் செல்வதற்காக தனது மூன்று பிள்ளைகளுடன் புதிய பேருந்து நிலையத்திற்குச் சென்ற தாய் தனது இருபிள்ளைகளையும் பேருந்து நிலையத்தில் காத்திருக்குமாறு கூறிவிட்டு தனது 2வயது சிறுவனை அழைத்துக்கொண்டு பிற்பகல் 3.15 மணியளவில் வைத்தியசாலைக்குச் சென்றுள்ளார்.
பின்னர் வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு முன்பாக உள்ள வெள்ளைக்கோட்டினைக் கடந்து பாதி தூரம் சென்றபோது அனுராதபுரம் பகுதியிலிருந்து கிளிநொச்சி சென்ற பட்டாரக வாகனம் மோதியுள்ளது.
இதன்போது தாய் சிறுவன் இருவரும் தூக்கி வீசப்பட்டதுடன் பட்டா வாகனம் பிள்ளைக்கு மேலாக சென்று வீதியின் ஓரமாக நின்றுள்ளது.
அப்பகுதியில் நின்றவர்கள் ஓடிச்சென்று தாயையும் குழந்தையையும் வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அனுமதித்துள்ளனர்.
எனினும் றுக்ஸன் என்ற 2வயதுச் சிறுவன் ஆபத்தான நிலையில் காணப்படுவதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறுவனின் தாயான சின்னப்பு புன்சலாமேரி (29 வயது) தலையிலும் கால்களிலும் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருகின்றார்.
இவ்விபத்து தொடர்பாக வெள்ளைக்கோட்டிற்கு அருகிலுள்ள ரயர் கடையிலுள்ள சி.சி.ரி கமராவில் விபத்தை பார்வையிட்ட பொலிசார் பட்டா வாகனத்தின் சாரதியையும், வாகனத்தையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.