பாரிய தீ விபத்து

வவுனியா மன்னார் வீதி பட்டாணிச்சூர் பகுதியில் இன்று (30.03.2019) மதியம் 3 மணியளவில் ஏற்பட்ட பாரிய தீ விபத்து சுமார் இரண்டு மணிநேர போராட்டத்தின் பின்னர் நகரசபையின் தீயணைப்பு பிரிவினரினால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

பட்டாணிச்சூர் பகுதியில் அமைந்துள்ள மரத்தளபாட விற்பனை நிலையத்தில் மதியம் 3 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து குறித்த நிலையத்தின் ஊழியர்கள் மற்றும் பொதுமக்களினால் வவுனியா நகரசபை தீயணைப்பு பிரிவினருக்கும் பொலிஸாருக்கும் தகவல் வழங்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் போக்குவரத்தினை சீர்செய்ததுடன் நகரசபையின் தீயணைப்பு பிரிவினர் தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டனர்.

தீ விபத்து ஏற்பட்டு 30 நிமிடங்களில் பகுதியளவில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட சமயத்தில் தீயணைப்பிரிவு வாகனத்தில் தண்ணீர் நிறைவடைந்தது. இதன் போது தீயணைப்பு பிரிவினருக்கும் பொதுமக்களிடையே கருத்து முறன்பாடுகள் ஏற்பட்டிருந்தது.

அதன் பின்னர் சுமார் 10 நிமிடங்களில் பின்னர் வவுனியா பொலிஸார் மற்றும் நகரசபையின் தண்ணீர் பவுசர் வரவழைக்கப்பட்டது. தீயணைப்பு பிரிவினருடன் பொதுமக்களும் இணைந்து சுமார் இரு மணி நேர போராட்டத்தின் பின்னர் தீ விபத்து முற்றாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

எனினும் இவ் தீ விபத்து காரணமாக பல லட்சம் பெறுமதியான மரத்தளபாடங்கள் மற்றும் மரங்கள் முற்றாக எரிந்து நாசமாகியதுடன் வர்த்தக நிலையமும் முற்றாக சேதமடைந்துள்ளது.

இத் தீ விபத்து காரணமாக வவுனியா – மன்னார் வீதியின் போக்குவரத்து இரண்டு மணி நேரமாக தடைப்பட்டதுடன் போக்குவரத்தினை சீர்செய்யும் பணியில் வவுனியா போக்குவரத்து பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

வவுனியாவில் அதிகரித்துள்ள வெப்பத்தினால் மரத்தளபாட நிலையத்தின் தகரத்தில் வெப்பம் ஏற்பட்டு கீழேயிருந்த மரங்களில் தீ பற்றியிருக்கலாம் அல்லது மின்சார ஒழுக்கினால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்ற இரு கோணங்களில் வவுனியா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.






