வவுனியா மாவட்டத்தில் சுகாதார நடைமுறைகளுடன் ஆரம்ப பிரிவு பாடசாலைகள் ஆரம்பம்!

2299

ஆரம்ப பிரிவு பாடசாலைகள்..

நாடு முழுவதுமுள்ள அனைத்து ஆரம்ப பிரிவு பாடசாலைகளை இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் வவுனியா மாவட்டத்திலுள்ள ஆரம்ப பிரிவு பாடசாலைகளும் சுகாதார நடைமுறைகளுடன் ஆரம்பமானது.

200 க்கும் குறைவான மாணவர் எண்ணிக்கையைக் கொண்ட பாடசாலைகள் முதற் கட்டமாக 21 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டன. அதற்கமைய இரண்டாம் கட்டத்தின் கீழ் 200 க்கும் அதிகமான மாணவர் எண்ணிக்கையைக் கொண்ட அனைத்து ஆரம்ப பிரிவு பாடசாலைகளினதும் கல்வி நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அந்த வகையில் வவுனியா சைவப்பிரகாச ஆரம்ப பாடசாலையின் கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பமாகிய சமயத்தில் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பூங்கொத்து வழங்கி வரவேற்றதுடன் அதிபர் ஆசிரியர்களுக்கு பூங்கொத்து வழங்கி வரவேற்றார்.

வவுனியா மாவட்டத்தில் பெரும்பாலான பாடசாலைகளில் அதிபர் , ஆசிரியர்களின் வரவு அதிகரித்து காணப்பட்ட போதிலும் மாணவர்களின் வரவு சற்று குறைவடைந்த நிலையில் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.