வவுனியாவில் கனமழை காரணமாக 63 குடும்பங்களைச் சேர்ந்த 222 பேர் பாதிப்பு : ஒருவர் மரணம்!!

1399

கனமழை..

வவுனியாவில் மழை காரணமாக ஒருவர் மரணமடைந்துள்ளதுடன், 63 குடும்பங்களைச் சேர்ந்த 222 பேர் பாதிப்படைந்துள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

வவுனியாவில் கன மழை காரணமாக இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளதுடன், தாழ் நிலப் பகுதிகளில் உள்ள மக்களும் வெள்ள நீர் காரணமாக பாதிப்படைந்துள்ளனர்.

வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட இராசேந்திரங்குளம் பகுதியில் இடி மின்னல் தாக்கம் காரணமாக ஒருவர் மரணமடைந்துள்ளதுடன், வவுனியா பிரதேச செயலக பிரிவில் 12 குடும்பங்களைச் சேர்ந்த 40 பேர் பாதிப்படைந்துள்ளனர். 4 வீடுகளும் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

வவுனியா வடக்கு பிரதேச செயலக பிரிவில் 31 குடும்பங்களைச் சேர்ந்த 103 பேர் பாதிப்படைந்துள்ளதுடன், 2 வீடுகளும் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

வவுனியா தெற்கு சிங்கள பிரதேச செயலக பிரிவில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 3 பேரும், செட்டிகுளம் பிரதேச செயலக பிரிவில் 19 குடும்பங்களைச் சேர்ந்த 76 பேரும் பாதிப்படைந்துள்ளனர்.

இதன்படி, கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக வவுனியாவில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 6 வீடுகளும் பகுதியளவில் சேதடைந்துள்ளன. 63 குடும்பங்களைச் சேர்ந்த 222 பேரும் பாதிப்பரைடந்துள்ளனர் என மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.