மத்தியப்பிரதேசத்தில் பிறந்த பெண் குழந்தை ஒன்றுக்கு மார்புக்கு வெளியே இதயம் இடம் பெற்றுள்ளதால் உயிரை காப்பாற்ற அறுவை சிகிச்சை செய்ய ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.
மத்தியப்பிரதேசத்தில் உள்ள லட்கோன் கிராமத்தை சேர்ந்த பெண்மணி ஒருவருக்கு கடந்த புதன்கிழமையன்று, பசந்த பட்மாகர் என்பவரின் மனைவியான சுஷ்மாவிற்கு பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.
இந்நிலையில் பிறந்த அந்த குழந்தைக்கு இதயம் மார்புக்குள் இல்லாமல், மார்புக்கு வெளியே காணப்படுவதாக மருத்துவர் ஜி.கே சமத் தெரிவித்துள்ளார்.
மேலும், குழந்தையின் இதயம் நன்றாக துடிப்பதாக கூறிய மருத்துவர், ஆனாலும் குழந்தையின் இதயத்தை மார்புக்கு உள்ளே வைத்து அதன் உயிரை காப்பாற்ற அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இதற்காக ஜபல்பூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அக்குழந்தை அனுப்பப்பட்டு தற்போது அறுவை சிகிச்சைக்காக தீவிர ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
பெண் குழந்தையின் தந்தை பட்மாகர் கூறுகையில், கடவுள் குழந்தையுடன் எங்களை ஆசிர்வாதித்துள்ளார். ஆனால் அது ஆசிர்வாதமா அல்லது சாபமா என்பது எனக்கு தெரியவில்லை.
மேலும், நாங்கள் நாளொன்றுக்கு இரு வேளை உணவுகளை மட்டுமே உண்ணும் ஏழைகள். தற்போதைய சூழலில் எங்கள் குழந்தையை காப்பாற்ற உதவியற்றவர்களாக இருப்பதாகவே நாங்கள் கருதுகிறோம் என்று தெரிவித்துள்ளார்.