வவுனியா கோயில்குளம் சிவன் ஆலயத்திற்கு முன்னாள் உள்ள சிறுவர் பூங்கா கைவிடப்பட்டநிலையில் உள்ளது. இதனை பனரமைத்து தருமாறு மக்கள் கோரிக்கை விட்டுள்ளனர்.
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, வவுனியா கோவில்குளம் சிவன் ஆலயத்திற்கு முன்னாள் உள்ள சிறுவர் பூங்கா புனரமைக்கப்படாது பற்றைகளாகவும் முட்புதர்களாகவும் காணப்படுகின்றன.
இப் பகுதியில் ஏராளமான சிறுவர்கள் வசிக்கின்ற போதும் அதனை பயன்படுத்த முடியாத நிலை காணப்படுவதாகவும் அதனை புனரமைத்து தருமாறும் கோயில்குளம், தெற்கிலுப்பைக்குளம், சமனங்குளம், எல்லப்பர்மருதங்குளம் உள்ளிட்ட கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வவுனியா நகரசபை எல்லைக்குள் காணப்படுகின்ற இச் சிறுவர் பூங்கா முன்னைய காலப்பகுதியில் வவுனியா நகரசபையை புளொட் நிர்வகித்த போது சிறப்பாக பராமரிக்கப்பட்டதாகவும் தற்போது வவுனியா நகரசபையால் கைவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, இப் பூங்காவில் நிறுவப்பட்டுள்ள தமிழ் பெரியார் ஒருவரின் சிலையும் கவனிப்பாரற்று காணப்படுவதாகவும் தெரிவிக்கும் மக்கள் எமது கலாசாரமும் அடையாளங்களும் அழிக்கப்படுவதாக குரல் கொடுப்பவர்களுக்கும் பொறுப்பு வாய்ந்த நகரசபைக்கும் இது கண்ணில் படவில்லையா? எனவும் கேள்வியெழுப்பியுள்ளனர்.