‘ஸ்டுடியோ க்ரீன்’ நிறுவனம் தயாரிப்பில் கார்த்தி – ஹன்சிகா ஜோடியாக நடித்துள்ள படம் ‘பிரியாணி.
இப்படத்தின் அத்தனை பாடல்களும் இணையத்தில் வெளியாகியமை மிகப்பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.
இது குறித்து விசாரித்ததில், இந்த வேலையைச் செய்தது பாடல் வெளியீட்டு உரிமையைப் பெற்றுள்ள சோனி நிறுவனமே என்பது தெரிய வந்துள்ளது.
ரஜினி நடித்த சிவாஜி படத்திலிருந்துதான் இந்தப் போக்கு ஆரம்பமானது. அந்தப் படத்தின் ஒரு கூடை சன் லைட் பாடலை இப்படித்தான் இணையதளத்தில் வெளியிட்டு பரபரப்பு கிளப்பினர்.
அதன் பின்பு பல பெரிய படங்களின் பாடல்கள் அல்லது வீடியோக்களை தயாரிப்பாளர்கள் அல்லது இசை வெளியீட்டு நிறுவனங்கள் அல்லது இயக்குநர்களே வெளியிடுவதும், பின்னர் போலீசில் புகார் செய்து ஸ்டன்ட் அடிப்பதும் வழக்கமாகிவிட்டது.
இந்த முறை இதற்கெல்லாம் சிகரம் வைத்தது போல, பிரியாணி படத்தின் அத்தனைப் பாடல்களையும் பாடலின் வெளியீட்டு உரிமை பெற்ற சோனி நிறுவனமே வெளியிட்டுவிட்டது.
ஆனால், இது தெரியாமல் அல்லது காட்டிக் கொள்ளாமல் “அப்படியே ஷாக்காகிட்டேன்” என்று கூறியுள்ளார் யுவன்.
ஏன் இப்படி?
எல்லாம் பப்ளிசிட்டிக்காகத்தான். இன்னொரு முக்கிய விடயம், இந்தப் பாடல்களை இணையத்தில் டவுன்லோடு செய்வதன் மூலம் பாடல் வெளியிடும் நிறுவனத்துக்கு வருமானமும் கிடைக்கிறது என்கிறார்கள்.
தங்களுக்கு இதில் எந்த நஷ்டமும் இல்லை என்பதால் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் என்று யாருமே அலட்டிக் கொள்ளாமல் அமைதி காக்கின்றனர்.
ஆனாலும் யுவனுக்காக அவரது பிறந்த நாளன்று பாடல் வெளியீட்டை நடத்தப் போகிறார்களாம்.