மலேசிய அரசு சாரா தமிழ் இயக்கங்களின் முடிவின்படி தயாரிக்கப்பட்ட “மெட்ராஸ் கபே” படத்தை மலேசியாவில் தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கைக் கடிதம் இன்று மலேசிய உள்துறை அமைச்சுக்கும், மலேசிய திரைப்படத் தணிக்கை வாரியத்திற்கும் பதிவுத் தபாலில் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
அத்துடன் தொலை நகலிலும் அக்கடிதம் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதன்படி மலேசியா தமிழர்களின் சார்பில் கொடுக்கப்பட்ட இந்த மனுவில்,
மெட்ராஸ் கபே படத்தை அமைதிப் பூங்காவாக இருக்கும் மலேசியாவில் இந்தப் படம் திரையிட அனுமதிக்கக் கூடாது என்றும் ராஜபக்ச உதவியுடன் வெளிவந்த இப்படம் தமிழீழ விடுதலை போராட்டத்தை கொச்சை படுத்தும் விதமாகவும், உடமைகளையும் உரிமைகளையும் இழந்து வாழும் ஈழத் தமிழர்களை களங்கப் படுத்துவதாகவும் அமைந்துள்ளது ஆகவே இப்படத்தை மலேசியாவில் தடை செய்ய வேண்டும் என்று கோருகிறோம் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.
மெட்ராஸ் கஃபே படத்திற்கு எதிராக உலகத் தமிழர்களின் போராட்டம் வலுத்துள்ளது. இப்போது மெட்ராஸ் கபே திரைபடத்தை எதிர்த்து மலேசியா தமிழர்களும் போராட்டத்தில் குதித்து தொடர்ந்து அதே போல் இங்கிலாந்திலும் சினி வேர்ல்ட் நிறுவனத்திடம் மெட்ராஸ் கபே படத்தை திரையிடக் கூடாது என்ற கோரிக்கையை தமிழர்கள் முன்வைத்துள்ளனர்.
இதனால் தினமும் சினி வேர்ல்ட் நிறுவனத்திற்கு பல அழைப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. கனடா நாடு டொரோண்டோவில் தமிழர்கள் இப்படத்தை திரையிடக்கூடாது என கோரிக்கை எழுப்பி உள்ளனர்.