தமிழரை மோசமாக சித்தரிக்கும் மெட்ராஸ் கபே படத்தை மும்பையிலும் திரையிடக் கூடாது : பாஜக!!

352

bjp

தமிழரை மோசமாக சித்தரிக்கும் மெட்ராஸ் கபே படத்தை மும்பையிலும் திரையிடக் கூடாது என்று பாரதிய ஜனதா கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

விடுதலைப் புலிகளை தீவிரவாதிகளாகவும் தமிழரை மோசமானவர்களாகவும் சித்தரிக்கும் மெட்ராஸ் கபே திரைப்படத்தை வெளியிடக்கூடாது என்று தமிழக கட்சிகளை சேர்ந்த சீமான், வைகோ உள்ளிட்டோர் தடை கோரியுள்ளனர்.

இந்தப் படம் வெளியாகும் அரங்குகளை முற்றுகையிடப் போவதாகவும் அறிவித்துள்ளனர். ஆனால் தமிழக முதல்வர் ஜெயலலிதா இந்த விஷயத்தில் தன் நிலைப்பாட்டை தெரிவிக்கவில்லை. இந்நிலையில் விடுதலைப்புலிகள் இயக்கத்தை தவறாக சித்தரித்து காட்டப்பட்டுள்ள மெட்ராஸ் கபே திரைப்படத்தை மும்பையில் வெளியிட மும்பை பாராதீய ஜனதா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மும்பை பாரதீய ஜனதா தலைவர் அஷிஷ் ஷெலார் கூறுகையில், ஜோன் ஆபிரகாம் கதாநாயகனாக நடித்துள்ள மெட்ராஸ் கபே திரைப்படத்தில், விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனை தீவிரவாதியாக சித்தரித்து காட்டப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொல்லப்பட்டதை இந்த படம் காட்டுகிறது. மேலும் தீவிரவாத செயல்களுக்கு தமிழ் அமைப்புகள் உதவியதாக காட்டப்படுகிறது. இந்த படத்தை இந்தியாவில் வெளியிட தடை கோரி தமிழ் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து இருக்கின்றன.

நாட்டின் வர்த்தக தலைநகரான மும்பையில் ஏராளமான தமிழ் சகோதரர்கள் வாழ்ந்து வருகின்றனர். அவர்களின் நிறைய அமைப்பினர் எங்களிடம் இந்த திரைப்படத்தை வெளியிட எதிர்ப்பு தெரிவித்து விளக்கியுள்ளனர்.

எனவே மெட்ராஸ் கபே திரைப்படம் மும்பையில் திரையிடப்படுமானால் சமுதாயத்தில் முரண்பாட்டை உருவாக்கும் என்று அறியப்படுகிறது. மாநில அரசு இப்படம் திரையிடுவதை தடுக்காவிட்டால் தியேட்டர்களில் பாரதீய ஜனதா கட்சியினர் போராட்டம் நடத்துவார்கள் என்று குற்றிப்பிட்டுள்ளார்.